தந்தையெனும் பாசம் 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 31, 2016 | , , , ,

அன்னையவள் அன்பென்னும் அருமருந்தே அரவணைத்து,
மன்னவனே இவரென்று மக்களையே மனமுருகி,
இன்பமெனும் செல்வமென எந்நாளும் காத்திருந்து,
தன்னலமே தான்மறந்து தரணியிலே வாழ்ந்திருக்கும்!

தாயவளின் உள்ளமது தவறுகின்ற தன்மகனின்...
காயங்கள் மட்டுந்தான் காணுமன்றி வேறெங்கும்
சாயுதலே இன்மையினால் தந்தையின் பாசத்தை
நேயமுடன் நானிங்கு நெகிழ்கவிதை பாடவந்தேன்!

தாயவளே சிலநேரம் தாவென்று தம்மக்கள்
நேயமுடன் கேட்கின்ற நெகிழ்ம பொம்மையதை
வாயுரையால் விலக்கிவிட மாளாத துயரடையும்
சேயதனின் ஆசைதனை தீர்ப்பவரும் தந்தையன்றோ?

முழுமைபெற்ற இலக்கியத்தை, முற்றுமுணர் மாந்தர்களை,
பழுதறவே  தம்மன்பைப் பாங்காக மைந்தர்முன்
வழுவகன்ற வார்த்தைகளில் மலர்ந்தருளுந் தந்தையரை
விழுந்தெங்கும் தேடுகிறேன்; மேதினியில் காணவில்லை!

தந்தையுளம் தரணியிலே தவறிவிழும் தனயனையே
முந்திவந்து காத்திடத்தான் முனைந்தாலும்; வீழ்ந்தெழுகும்
தந்தனையன் தூசுகளைத் தட்டிவிட்டு மீள்முனையச்
சிந்தனையைக் கூராக்கிச் செப்பலிடும் சீர்மையன்றோ!

அன்னையென்ற கட்டிடத்தின் அடித்தளமே தந்தையவர்
தன்னிருப்பால் தடையின்றித் தருகின்ற தைரியமே;
தன்மகனை ஊர்போற்றும் சான்றோனாய் ஆவதற்கே
முன்னிருத்தும் தந்தையவர் முகமூடி கண்டிப்போ?

நாம்கலங்கும் வேளையிலே நம்பிக்கை தான்கொடுத்து,
நாம்சறுக்கும் வேளையிலே நமையேந்தித் தான்பிடித்து,
நாம்பிறழும் வேளையிலே நமைக்கடிந்தே தான்காத்து,
நாம்சிறக்கும் வேளையிலே நமைக்கண்டே தான்சிலிர்த்து

தளிர்க்கின்ற சிறுவிதையும் தானாக எழுவதுபோல் 
வளங்களுடன் தம்மைந்தர் வாழ்ந்திருக்கச் சுயம்புவென
களம்தனிலே கருத்தூன்றிக் கலக்கிடவே விரும்புகின்ற
உளப்பாங்கு கொண்டநல் உன்னதமே தந்தையன்றோ!

அத்தனைப் பெருமைகளை அற்புதமாய் வாழ்த்துகளை
முத்தனைய சிரிப்பொன்றால் முகிழ்க்கின்ற பேரன்பால்
வித்தகமாய்த் தான்பெற்ற வியனுலகின் தாய்மையெனும்
பித்தமிழ்தின் பின்புலத்துப் பேராற்றல் தந்தையன்றோ?

”கவியன்பன்” கலாம்

பிச்சைப் பாத்திரம் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | January 31, 2016 | , , ,


பிச்சைப் பாத்திரம்
பிச்சைக்காரன் என்கிற முத்திரையை
குத்தும் பாத்திரம்

உதவாக்கரைகளுக்கும் உணவளிக்கும்
உன்னதப் பாத்திரம்

இக்கதாபாத்திரத்தில்
சதாஅழுது புலம்பி
கண்கலங்கி நிற்கும் பாத்திரம்

உழைத்து வியர்வை சிந்தாமல்
ஊர்சுற்றி வலம்வந்து
உணவைச் சேகரிக்க
உறுதுணையாயிருக்கும்
ஒப்பற்ற பாத்திரம்

சோம்பேறிகளுக்கு வாழ்வளித்து
சுயநல வாதிகளுக்கு கைகொடுத்து
சாம்ராஜ்யத்தை அழிக்கும் பாத்திரம்

எஞ்சிய உணவையும்
எச்சிலைச் சோற்றையும்
வஞ்சகமில்லாமல் வாங்கி
வயிற்ரை நிரப்பிக் கொள்ள
உதவும் பாத்திரம்

ஒற்றைப் பாத்திரத்தில்
ஒன்பது வகை உணவு
ஓராயிரம் கனவுடன்
ருசித்திடும் நாவு

ஏக்கம் நிறைந்திட்ட
இல்லாதோர்வாழ்வில்
ஏகமாய் மகிழ்விக்கும்
இன்பப் பாத்திரமாம்

யார் வைத்த பெயரோ
அன்றுமுதல் இப்பாத்திரத்துக்கு
பஞ்சமில்லை

இப்பாத்திரம் கையிலிருக்கும் வரை
இவ்விதி என்றும் மாறப்போவதில்லை

பிச்சைப் பாத்திரத்தை தூக்கியெறி
கதாபாத்திரத்தை கையிலெடு
முயற்ச்சிசெய்து முன்னுக்குச் செல்
முன்னேற்றப் பாதையை கவனத்தில் கொள்

ஏற்றமுடன் உழைக்கத் துவங்கு
ஏறெடுத்து பார்க்கும் உலகு

உடல் களைக்கும்வரை உழைத்துப் பழகு
வழி கிடைக்கும்வரை உறங்கமறு

மாற்றமுடன் நீ நடக்க
மதியை கூறாய் தீட்டிக்கொள்
நாட்டமுடன் நடந்தேறும்
நாட்டுமக்கள் திரும்பிப்பார்ப்பர்

போற்றும் உந்தன் திறமையைத்தான்
புகழில் உயர்ந்து நின்றுடுவாய்
தன்னைநம்பு தலை நிமிர்வாய்
தவறாமல்செல் வழிகாண்பாய்

மாற்றத்தை நீநன்கு உணர்ந்திடுவாய்
ஏற்றத்தை நீயென்றும் பெற்றிடுவாய்

தோற்றத்தில் நீ அன்று
பிச்சைக்காரன்
தொய்வின்றி முயற்ச்சித்தால்
வெற்றிக்காரன்

நட்பும் உறவும் வந்து சேர
நாடிய அனைத்தையும்
நீ பெறுவாய்
நலமுடன் என்றும் வாழ்ந்திடுவாய்

அதிரை மெய்சா

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 13 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 30, 2016 | ,


இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிக்கும் பிறமத சகோதரர்கள் மட்டுமல்லாமல் இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள முற்படும் சகோதரர்களும் தவறாமல் எடுத்து வைக்கும் முக்கியமான கேள்வி இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பலதாரமணம் பற்றியதாகும். பெரும்பாலானோர் இது ஆண் பெண் சமவுரிமை என்கிற நோக்கில் அணுகுகிறார்கள். இன்னும் சிலர் இதை பெண்களுக்கு இஸ்லாத்தால் இழைக்கப்படும் கொடுமையாகவும் நினைக்கின்றார்கள். யாராக இருந்தாலும் அந்த நண்பர்களுக்கு விளக்கம் தரவேண்டியது ஒரு அழைப்புப் பணியாளரின் கடமையாகும்.

இஸ்லாம் எந்த சூழ்நிலையில் எந்தெந்தக் காரணங்களுக்காக பலதார மணத்தை அனுமதித்து இருக்கிறது – அப்படி அனுமதிக்கப்ட்டாலும் நடைமுறையில் அவ்வாறு பரவலாக பின்பற்றப்படுகிறதா என்பதைப் பற்றி பின்னர் பேசலாம். அதற்கும் முன்பாக பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருக்கும் பின்னணியில் இருக்கும் நியாயத்தை சற்று அலசலாம். 

இந்த அலசலை, கடந்த வாரம் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இருந்து தொடங்குவது நலமாக இருக்கும் என்று கருதுகிறோம். அரசால் அறிவிக்கப்பட்ட தமிழக வாக்காளர் பட்டியல் இப்படிப் பேசுகிறது. 

ஆண் வாக்காளர்கள் 2,88,17,750
பெண் வாக்காளர்கள் 2,90,93,349
திருநங்கைகள் 4,383. 

இந்தப் புள்ளி விபரம் சொல்லும் உண்மை என்னவென்றால் , ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பதுதான். இதே நிலை எல்லா மாநிலங்களிலும் நிலவுகிறது. பெண்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு புள்ளி விபரம் சொல்வது என்னவென்றால் பெண்களில், கணவனை இழந்த விதவைகள் குறிப்பாக இளம் விதவைகளும் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள் என்பதும் அதிலும் நாட்டிலேயே தமிழகமே முதலிடம் வகிக்கிறது என்பதும்தான். தமிழகம் இந்தத் தலைமை இடம் பெறக் காரணம் அரசே நடத்தும் மதுக்கடைகள் என்பது ஒரு தலையாய காரணம் . 

உலக மக்கள்தொகையை ஆய்ந்தாலும் உலகம் முழுதுமே ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்ற முதல் உண்மையை நாம் இப்போது உணர்த்த வேண்டியதாக இருக்கிறது. சில நாடுகளின் உதாரணங்களை சுட்டிக் காட்டலாம். அமெரிக்காவின் மக்கள் தொகைக் கணக்கில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட 78 லட்சம் அதிகமென்றும் நியூயார்க்கில் மட்டும் 10 லட்சம் அதிகமென்றும் அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒருபாகம், எயிட்ஸ் நோய்க்கு பாதை போட்டுக் கொடுக்கும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் சொல்கிறது. பிரிட்டனில் இந்தப் பாலின வேறுபாடு 40 லட்சம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஜெர்மனும் இந்தப் பந்தயத்தில் முன்னிலை வகிக்கிறது. அந்த நாட்டில் பெண்கள் 50 லட்சம் பேர் அதிகமாக இருக்கிறார்களாம். ரஷ்யா இந்தப் போட்டியில் விட்டுக் கொடுக்குமா? அந்த நாட்டில் 90 லட்சம் பெண்கள் ஆண்களைவிட அதிகம் அதிகம்.

“ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை உள்ளடக்கி அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை “ என்ற கோட்பாட்டை உலக நாடுகள் பின்பற்றினால் ஒரு ஆணுக்கு ஒரு பெண் மனைவியாக வாய்க்கும் அளவுக்கு இருபாலினத்தின் மக்கள்தொகை சமநிலையில் இருக்கிறதா என்ற கேள்வியை இந்தப் புள்ளிவிபரங்களைக் கண்ட பிறகு உலகைநோக்கி நாம் கேட்போம். 

மக்கள்தொகை மாறுபாடுமட்டுமல்ல பெண்களின் ஆயுட்காலம் ஆண்களின் ஆயுட்காலத்தைவிட அதிகம் என்றும் அறிகிறோம். அதனினும் மேலாக, போர் முதலிய உயிருக்கு ஆபத்தான காரியங்களில் ஆண்களே அதிகம் அல்லது முழுக்க முழுக்க ஈடுபடுகிறார்கள். அடுத்தபடியாக பிரயாணங்களில், விபத்துக்களில் உயிரை விடும் நிலைமையும் பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். ஒரு கப்பல் மூழ்கிறது அல்லது ஒரு விமானம் விபத்தில் விழுகிறது என்றால் அத்தகைய விபத்துக்களில் இறப்பவர்களிலும் ஆண்களே அதிகம். குடும்பத்துக்காக பொருள் தேடி வெளியுலகம் செல்லும் ஆண்களும் தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் ஆண்களுமே விபத்துக்களில் கொத்துக் கொத்தாக இறந்து போகிறார்கள். ஆகவே விதவைகளாக வாழவேண்டிய நிலைமை பெண்களுக்கும் அற்ப ஆயுசில் இறந்து போகும் நிலைமை ஆண்களுக்கும்தான் அதிகம் என்பது ஏற்கத்தக்க உண்மை. 

இத்தகைய காரணங்களால் விதவைகளாகப் போகும் பெண்கள், அப்படியே கவனிக்கப்படாமல் விட்டு விடப்பட வேண்டிய வேடிக்கைப் பொருள்கள்தானா? அந்தப் பெண்கள் மானம் கருதி உடல்பசியை அடக்கலாம்; வயிற்றுப்பசி அடக்க வழி என்ன? 

ஆண்களுக்கு அரவணைப்பு மட்டும் போதும். பெண்களானால் அவர்களுக்கு அரவணைப்பும் வேண்டும் அத்துடன் அவர்கள் போர்த்திக் கொள்ள போர்வையும் கொடுக்க வேண்டும். கணவன் என்ற பாதுகாப்பு வேலி பெண்களையும் அவர்களது மானத்தையும் வாழ்வையும் பாதுகாத்து வரும் நேரத்தில் போர், விபத்து போன்ற காரணங்களால் சாய்ந்து விழுந்துவிடுமானால் கண்ட கண்ட வெள்ளாடுகளும் வேலிதாண்டி மானம் எனும் பயிரை மேய்ந்துவிட வாய்ப்புண்டு. ஆகவே விதவையான பெண்களின் மானப் பயிரை சட்டரீதியாக மற்றொரு வேலிபோட்டு காக்கவேண்டிய கடமை உணரப்பட்டதாலேயே இயன்றவர்கள், சக்தி படைத்தவர்கள், வாய்ப்புள்ளவர்கள், நீதி தவறாத வகையில் தனது மனைவிமார்களை நடத்த வல்லமை படைத்தவர்கள் நான்கு பெண்கள் வரை திருமணம் முடித்துக் கொள்ளலாம் என்ற அனுமதி இஸ்லாத்தில் வழங்கப்பட்டது. 

சிறுவயது ஆண்களின் மரணம் சமுதாயத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருந்த நிலையில் அந்த ஆணை மணமுடித்த பெண் விதவையாகின்றாள். இவளுடைய வாழ்க்கை பாதுகாப்பு கேள்வியாகிறது. உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவைகள் அவளது பெற்றோர்களாளோ அல்லது உடன்பிறந்தவர்களாளோ கொடுக்கப்படக் கூடும். உணவு உடை உறைவிடம் போன்றவை எவ்வாறு ஒரு மனிதனுக்கு அவனது வாழ்க்கையில் தவிர்க்கப்பட முடியாத ஒன்றோ, அது போலவே, குடும்ப வாழ்க்கையும் தாம்பத்ய உறவும் உடற்கூறு அறிவியல் ரீதியாக தவிர்க்கப்பட முடியாத ஒன்றே என்பது உண்மையா? பொய்யா?

இது எல்லா மனிதர்களின் உடல் தேவை. உணவு உட்கொள்ள பொருளாதாரத்தை முறையான வழியில் ஈட்ட முடியாத ஒருவன் திருடுவது எப்படி தவிர்க்க முடியாமல் போய்விடுகிறதோ அதே போல, குடும்ப வாழ்வின் உடல் தேவைகள் முறைப்படி வழங்கப்படாதிருந்தால், முறைதவறிய வழியில் பெற வேண்டியதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். விபச்சாரமும் இரவு விடுதிகளும் உலகில் வளர்ந்தோங்க இவைகளே அடிப்படைக் காரணம். முறைதவறி பெறும் உடலின்பம் சமுதாயத்தின் நலனுக்கு உகந்ததல்லவே? எனவே, இத்தகையோருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது பரிகாரமே தவிர பரிகாசத்துக்குரியதல்ல. 

இந்த அனுமதி இறைவனால் எவ்வாறு எந்தக் காலகட்டத்தில் வழங்கப்பட்டது என்பதையும் பார்க்கலாம். திருமறையின் அன்னிஸா அத்தியாயம் பெண்களைப் பற்றியும் பெண்களின் உரிமைகளைப் பற்றியும் தொடக்கத்தில் பேசுகிறது. அந்த அத்தியாயத்தின் 3- வது வசனம், இப்படிக் கூறுகிறது. 

“அனாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் ( அவர்களிடையே) நீதமாக நடந்திடமுடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணைமட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருக்க இதுவே மிகவும் நெருக்கமானதாகும்”. 

அனாதைகள் என்று இங்கு திருமறை குறிப்பிடுவது யாரை? 

இஸ்லாத்தை பெருமானார் ( ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த காலங்களில் நடைபெற்ற உஹுதுப் போரில் - அதிகமான எண்ணிக்கை உடைய முஸ்லிம்கள் இஸ்லாத்தைத் தழுவாத நிலையில் - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சிறு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70 முஸ்லிம்கள் போரில் இறந்து போன காரணத்தால் குடும்பத்தலைவனை இழந்து அனாதைகளான பெண்களையும் அவர்களது குழந்தைகளையும்தான். 

இவ்வாறு திடீரென்று ஒரு கணிசமான எண்ணிக்கையுள்ள அனாதைகள் ஒரு சிறிய சமுதாயத்தில் உண்டாகும்போது அவர்களை அநியாயமான முறையில் இச்சைகளுக்கு இரையாக்கிவிடாமல் அவர்களை இறைவன் காட்டிய வழியில் சக்தி இருந்தால் மணம் புரிந்து அரவணைத்திடுங்கள்; சட்டபூர்வமான அங்கீகாரம் கொடுங்கள் என்று சொல்வது தவறா? 

ஒரு செய்தியை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ளலாம் என்று வெறுமனே அனுமதிப்பதற்காக மேற்கண்ட வசனங்கள் இறைவனால் எடுத்துரைக்கப்படவில்லை. ஏனெனில், இந்த வசனம் இறக்கப்படுவதற்கு முன்பே பலதார மணம் நடைமுறையில் இருந்தது. இந்த வசனம் இறங்கிடக் காரணமே போர்களில் இறைவனுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுடைய அனாதைக் குழந்தைகளின் பிரச்னையை தீர்த்துவைக்க உங்களால் இயலவில்லை என்றால் அக்குழந்தைகளை வைத்திருக்கும் பெண்களை உங்களின் மனைவிகளாக ஏற்றுக் கொண்டு ஆதரியுங்கள் என்ற சமூக நல நோக்கத்துக்காகவே . இந்த மனிதாபிமான ரீதியில் அனுமதிக்கப்பட்ட பலதாரமணம் தவறா? 

மேலும், அந்த வசனத்தை இன்னும் ஆய்ந்து பார்ப்போமானால் கட்டுப்பாடு இல்லாத பலதார மணத்தை திருமறை தடுத்து அதற்கு நான்கு என்ற வரையறை வைத்து இருக்கிறது. அதற்கும் சில கடுமையான நிபந்தனைகளையும் விதித்து இருக்கிறது என்பதை நடுநிலையாக நின்று காணலாம். எல்லா மனைவியரிடமும் நீதியுடன் சமத்துவமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இந்த நிபந்தனையை மீறுபவன் இறைவனின் கட்டளையை மீறியவனாவான். அந்த வகையில் மறுமையில் அவன் தண்டிக்கப்படுவான் . இந்த நிபந்தனை இஸ்லாத்தின் ஷரியத் சட்டம். இதை மீறுபவன் இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி இம்மையிலும் தண்டிக்கப்படுவான் என்பதே உண்மை.

எனவே ஆண்களின் ஜனத்தொகை குறைவு எனும் எதார்த்தமான நிலையில், விதவையான பெண்களுக்கு மணமுடித்துவைப்பது அல்லது அவர்களையும் இறந்த கணவனோடு சேர்த்தே உயிரோடு கொன்றுவிடுவது என்ற இரண்டு தீர்வுகளில் அவளுக்கு மறுமணம் செய்துவைப்பதுதான் மனிதநேயமான தீப்பாக இருக்கமுடியும். 

மறுமணம் என்கிற சலுகையும் வாய்ப்பும் இல்லாததால் பெண்கள், கணவன் இறந்ததும் அவன் உடலை எரித்த நெருப்பின் சிதையிலேயே உயிரோடு எரித்த உடன்கட்டை என்கிற “சதி” எனப்படுகிற பெண்களுக்கு எதிராக நடந்த சமுதாய சதி நூற்றண்டுகளுக்கு முன்பு வரை நமது இந்திய சமுதாயத்தில் இருந்துவந்த கொடுமையையும் நாம் அறிந்து இருக்கிறோம். 

சில அமைப்புகளும் சக்திகளும் தவறான புரிந்துணர்வில் முஸ்லிம்கள் பல பெண்களை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை வகைவகையாக அனுபவிக்கிறார்கள் என்று தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். இஸ்லாம் அனுமதித்துள்ள பலதார மணத்தை சாடுகிறார்கள். தங்களின் தவறான புரிந்துணர்வுக்கு திருமறை வசனத்தையும் சான்றாகத் தந்து விவாதிக்கிறார்கள். யானையைத் தடவிப் பார்த்த குருடர்களின் கதையைப் போலத்தான் இந்நிலை இருக்கிறது. உண்மையில் அவர்களது இந்த விவாதங்கள் மேற்கத்திய அடிமைத்தனத்தின் விளைவே ஆகும். இஸ்லாம் அனுமதித்துள்ள பலதார மணத்தை ஒரு வசதி என்ற நிலையில்தான் பார்க்கவேண்டுமே தவிர சதி என்றோ சமத்துவமின்மை என்றோ என்று பார்க்கக் கூடாது என்பதை சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.காரணம், பலதார மணம் என்பது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சமூக, ஒழுக்க நடைமுறைகளில் தேவையாக இருக்கிறது என்பதை நமது மேற்கண்ட வாதங்கள் எடுத்துரைக்கின்றன. 

அளவற்ற அளவிலான பெண்களை அந்தப்புற நாயகிகளாக அனுபவித்துக் கொண்டு மிருகங்களை விடகேவலமாக நடத்திக் கொண்டிருந்த சமூகத்தில், அநாதைகளையும் நிர்க்கதியானவர்களையும் சட்டப்பூர்வமாக மனைவியாக்கி சாந்தியையும் சமத்துவத்துவத்தையும் பேணச்சொன்ன இஸ்லாம், அதிக பட்சம் நான்கு என்ற வரையறையையும் கட்டளையாக இட்டுள்ளதையும், ஆண்களால் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் நீதமாக நடந்து கொள்ள முடியாது என்று எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தைச் சொல்லி நீதமாக நடக்க முடியாதவர்களுக்கு ஒரு மனைவியே போதும் என்று திட்டவட்டமாகச் சொல்லி இருப்பதை , கண்ணை மூடிக்கொண்டு இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை செயல்திட்டத்தின் அடிப்படையில் ( Single Agenda) சிந்திக்க மறுப்பவர்கள் சிந்திக்கும் வண்ணம் வாதங்களை எடுத்துரைப்பது ஒரு அழைப்பாளனின் கடமையாகும். 

எனவே பலதாரமணம் சமுதாயத்தில் இருக்க வேண்டிய பரிகாரமே.

அதைப் பயன்படுத்துவது தனிநபர்களின் சூழ்நிலைகளைப் பொறுத்தது என்பதே உண்மை. 

பலதாரமணத்தை எதிர்த்து அதற்காக வாதிடும் நண்பர்கள் சார்ந்துள்ள மதங்கள் உண்மையிலேயே பலதாரமண விஷயத்தை எவ்வாறு கையாள்கிறது என்பதையும் உலக மதங்களில், வரலாற்றில் இந்தக் கோட்பாடு எவ்வாறு எடுத்தாளப்பட்டிருகிறது என்பதையும் இன்னும் சற்று விரிவாக விளக்க வேண்டி இருக்கிறது. 

இன்ஷா அல்லாஹ் தொடரும். 

இபுராஹிம் அன்சாரி

அவர்கள் வாழ்வு - ஜைனப் (ரலி) அவர்கள் ! 2

அதிரைநிருபர் | January 29, 2016 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...!

அகிலத்தின் அருட்கொடை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருமை மகளார் ஜைனப்(ரலி) அவர்களின் தியாகம் பற்றி நாம் அறிந்திடாத வரலாற்றுச் செய்திகளையும், அதன் மூலம் நமக்கிருக்கும் படிப்பினைகளையும் பற்றி இந்த மீள்பதிவின் மூலம் அறிந்துக்கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ் !.

உயிரினும் மேலான உத்தம இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களுடைய நான்கு மகள்களில் மூத்த மகள்தான் ஜைனப்(ரலி) அவர்கள். உம்மு குல்தும்(ரலி), ருகைய்யா (ரலி) பாத்திமா(ரலி) ஆகியோர் மற்ற மூன்று பெண்மக்கள். இவர்கள் நால்வரும் அன்னை ஹதீஜா(ரலி) அவர்களுக்கு பிறந்தவர்கள்.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்வதற்கு முன்பே தம் மூத்த மகள் ஜைனப்(ரலி) அவர்களை அபுல் ஆஸ் என்பவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்திருந்தார்கள். அபுல் ஆஸ் அவர்கள் அன்னை ஹதீஜா(ரலி) அவர்களின் சகோதரியின் மகனாவார். ஜைனப்(ரலி) அவர்களின் கணவர் பண்பானவர், நல்லொழுக்கமானவர் என்று வரலாற்றில் அறியப்பட்டவர். இஸ்லாத்தில் ஒருவர் எவ்விதமான துன்பங்களையும் சகித்துக் கொண்டு பொறுமையுடன் வாழ்ந்து அந்த துன்பங்களிலுருந்து மீண்டு, தான் தழுவிய தூய இஸ்லாம் தன்னுடைய சொந்தத்திற்கும், கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம் உள்ளவர்களுக்கு அண்ணலாரின் அருமை மகளார் ஜைனப் (ரலி) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த பின் வரும் உருக்கமான சம்பவங்கள் நல்லதொரு படிப்பினை.

தன் மகள் ஜைனப்(ரலி) அவர்களுக்கும் அபுல் ஆஸுக்கும் திருமணம் முடிந்த சில வருடங்களில் நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் அபுல் ஆஸ் அவர்கள் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். நபி(ஸல்) அவர்கள் தனக்கு அருளப்பட்ட இஸ்லாத்தை எத்தி வைக்கிறார்கள், முதலில் மனைவி ஹதீஜா(ரலி), பின்னர் மகள்கள் ஜைனப்(ரலி), உம்மு குல்தும்(ரலி) ருகைய்யா(ரலி) ஃபாத்திமா(ரலி) ஆகியோர் இஸ்லாத்தை ஏற்கிறார்கள். இதில் இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக உம்மு குல்தும்(ரலி) ருக்கையா(ரலி) ஆகியோரை அவர்களின் கணவன்மார்கள் விவாகரத்து செய்தனர். அது ஒரு மிக உருக்கமான வரலாற்றுச் சம்பவம். இந்த தருணத்தில் நபி(ஸல்) அவர்களின் மூத்த மகள் ஜைனப்(ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தார்.

வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்புகிறார் அபுல் ஆஸ். வீட்டில் தன் மனைவி இஸ்லாத்தை ஏற்ற செய்தியை அறிந்து கொள்கிறார். ஜைனப்(ரலி) அவர்கள் தன் கணவனைப் பார்த்து “என்னுடைய தந்தை இறைத்தூதராகி விட்டார்கள், அல்லாஹ்விடமிருந்து வஹி அருளப்பட்டது, என்னுடைய தந்தையின் மூலம் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன், நீங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அன்பாக ஒரு கோரிக்கையை வைத்தார். அதற்கு அபுல் ஆஸ் “ஒரு பெண்ணுடைய பேச்சைக் கேட்டு நான் இஸ்லாத்தை ஏற்றால் என்னை என் சமூகம் கேவலமாக பேசும் என்பதற்காக நான் அஞ்சுகிறேன், நான் இஸ்லாத்தை ஏற்க மாட்டேன், அதே நேரம் உங்கள் தந்தை உண்மையாளர்” என்று சொன்னார். தன் கணவர் இஸ்லாத்தை ஏற்பார் என்று மிக ஆவலுடன் எதிர்ப்பாத்திருந்த  அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பாசம் நிறைந்த அருமை மூத்த மகள் ஜைனப்(ரலி) அவர்களுக்கு மிகுந்த வேதனையளித்தது. இவர்கள் இருவரின் வாழ்வும் சிறிது காலம் மக்காவில் சென்றது. பின்னர் தான் காஃபிர்களோடு திருமண உறவு இல்லை என்ற சட்டம் மதினாவில் இறங்கியது.

மக்காவில் மார்க்க பிரச்சாரம் செய்ய பல இன்னல்கள் துன்பங்களைச் சகித்துக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்கிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் குடும்பத்தோடு மதீனாவுக்கு செல்லத் தயாராகிறார்கள், நபி(ஸல்) அவர்களின் மூத்த மகள் ஜைனப் (ரலி) அவர்கள் “என் அருமைத் தந்தையே நான் என்ன செய்ய, நானும் உங்களோடு வருகிறேனே” என்று மிகுந்த ஏக்கத்துடன் சொந்தங்களுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் தந்தையோடு செல்வதா? கணவனோடு இருப்பதா? என்ற குழப்ப எண்ணத்துடன் தன் தந்தையிடம் வினவினார். அபுல் ஆஸ் நல்லவர் என்பதாலோ என்னவோ நபி(ஸல்) தன் அருமை மகளிடம் “நீ உன் கணவனோடு இருந்துவிடு மகளே” என்று கட்டளையிட்டார்கள். தன் தந்தையின் கட்டளையைப் பொறுமையோடு ஏற்றுக் கொண்டார்கள் ஜைனப்(ரலி). தாயில்லாத ஜைனப்(ரலி) அவர்களுக்கு தாய்க்கு தாயாக பாசம் காட்டி கொண்டிருந்த தந்தையான இறைத்தூதர், உடன் பிறந்த சகோதரிகள், இன்னும் பிற சொந்தங்கள் தன்னை விட்டுவிட்டு ஹிஜ்ரத் செய்கிறார்களே என்ற பரிதவிப்பு, பிரிவின் துயரம் தியாகத் திருமகள் ஜைனப்(ரலி) அவர்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் இஸ்லாத்தை ஏற்ற ஒரே கரணத்திற்காகவும், தன் தந்தை நபி(ஸல்) அவர்கள் தனக்கு ஒன்று சொன்னால் அது நிச்சயம் தனக்கு நன்மை தருவதாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் மக்காவில் தன் கணவனோடு வாழ்ந்து வந்தார்கள்.

பின்னர் சில காலம் கழித்து பத்ரு யுத்தம் நடைபெறுகிறது. அதில் காஃபிர்களுடைய அணியில் ஜைனப்(ரலி) அவர்களின் கணவர் அபுல் ஆஸ் உள்ளார். பத்ருப் போரின் வெற்றியின் போது அபுல் ஆஸ் கைது செய்யப்படுகிறார். அபுல் ஆஸ் கைது செய்யப்படுள்ளார் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்கும், ஜைனப்(ரலி) அவர்களுக்கும் வந்தடைகிறது. ஒரு இக்கட்டான சூழ்நிலை நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்படுகிறது. தன்னுடைய மகளின் கணவர் தன்னை எதிர்த்து போரிட வந்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று. இது போல் ஜைனப்(ரலி) அவர்களுக்கும் ஓர் தர்ம சங்கடமான நிலை, இறைத்தூதர் தன் தந்தை நபி(ஸல்) அவர்களை எதிர்த்து போரிட தன் கணவர் சென்று கைது செய்யப்பட்டுள்ளார்களே என்ற வேதனை. போரில் கைது செய்யப்பட்டவர்களை நபி(ஸல்) அவர்கள் பரிகாரம் பெற்று விடுதலைச் செய்கிறார்கள் என்ற செய்தி ஜைனப்(ரலி) அவர்களுக்கு வருகிறது. உடனே தன் தாய் அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் தனக்காக விட்டுச் சென்ற அழகிய மணிமாலையை கழுத்தில் இருந்து கழட்டி, அபுல் ஆஸ் அவர்கள் சகோதரர் ஒருவரிடம் கொடுத்து, “இதை பரிகாரமாக என் தந்தை நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்து என் கணவரை மீட்டு வாருங்கள்” என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

அபுல் ஆஸ் அவர்களின் சகோதரர் சகீக் இப்னு ரபிஹ் என்பவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று அந்த மணிமாலையைக் கொடுத்து ஜைனப்(ரலி) இதை கொடுத்து அவரின் கணவர் அபுல் ஆஸை விடுதலை செய்ய கோரினார் என்று சொன்னார். அந்த மணிமாலையைப் பார்த்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள், “இது என் அருமை மகள் ஜைனப்(ரலி) அவர்களுக்கு என் மனைவி ஹதீஜா(ரலி) கொடுத்த மாலை” என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதார்கள். என்ன தான் மிகப்பெரிய தலைவராக இருந்தாலும், நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் மகளின் கணவரை உடனே விடுதலை செய்யவில்லை. 

தன் தோழர்களிடம் அபுல் ஆஸின் விடுதலை தொடர்பாக கேட்கிறார்கள், “நாம் ஒரு சிலரை பரிகாரம் இல்லாமல் விடுதலை செய்கிறோம், இந்த அபுல் ஆஸை அது போல் விடுதலை செய்யலாமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி தோழர்கள் சம்மதித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அபுல் ஆஸை வரவழைத்து “இந்த மாலை ஹதீஜா(ரலி) அவர்களுடையது, என் அருமை மகள் ஜைனப்(ரலி) அவர்களிடம் இருக்க வேண்டியது, எனக்கு என் மகளைத் திருப்பி அனுப்புங்கள்” என்று கூறி அபுல் ஆஸை விடுதலை செய்தார்கள்.

தன் தந்தையின் கட்டளை தன் கணவனை விட்டு விட்டு வர வேண்டும் என்று. மிகுந்த மன பாரத்துடன் மக்காவைவிட்டு தன்னுடைய பெண் குழந்தை உமாமா(ரலி) அவர்களைச் சுமந்து கொண்டு மதீனா வந்தடைந்தார்கள். சில காலம் சென்றதும், நபி(ஸல்) அவர்களிடம் ஜைனப்(ரலி) அவர்களைத் திருமணம் செய்ய ஒரு சில நபித் தோழர்கள் விருப்பம் தெரிவித்தனர், ஆனால் ஜைனப்(ரலி) அவர்கள் விரும்பவில்லை. காஃபிராக உள்ள தன் கணவர் இஸ்லாத்திற்கு வரவேண்டும் என்பதில் முழு நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஒரு நாள் ஒரு காஃபிர் வியாபாரக் கூட்டம் மதினாவை கடந்து செல்கிறது, அவர்கள் இஸ்லாமிய எதிரிகள் என்பதால், அப்போது பொருட்களுடன் அவர்களைச் சிறைப்பிடிக்கிறார்கள் நபித்தோழர்கள், அவர்கள் அனைவரும் கைது செய்து மதீனா அழைத்து வருகிறார்கள். அல்லாஹ்வின் நாட்டம் அவர்களிடமிருந்து தப்பியோடிய அபுல் ஆஸ் அவர்கள் ஜைனப்(ரலி) அவர்களிடம் அடைக்கலம் தேடுகிறார். “மக்காவில் உள்ள நிறைய மக்களுடைய சொத்துக்கள் அதில் உள்ளது, எப்படியாவது என்னுடைய பொருளாதாரத்தை காப்பாற்றித் தந்து விடுங்கள்” என்று அபுல் ஆஸ் அவர்கள் ஜைனப்(ரலி) அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள். 

உடனே தன் பாசம் நிறைந்த தந்தை நபி(ஸல்) அவர்களிடம் “என் கணவரின் சொத்தை நீங்கள் திருப்பி கொடுக்க முடியுமா” என்று தயக்கத்துடன் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ அந்த விவகாரத்தில் முடிவு செய்ய எனக்கு உரிமை இல்லை என்று சொல்லிவிட்டு” நபித் தோழர்களிடம் கேட்கிறார்கள் “ஜைனப்(ரலி) தன் கணவரின் சொத்தைத் திருப்பிக் கேட்கிறார்கள் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் “ ஜைனப்(ரலி) அவர்கள் யாருக்கு பாதுகாப்பு கொடுத்தார்களோ அவர்களுக்கு நாமும் பாதுபாப்புக் கொடுப்போம்” என்று நபித்தோழர்கள் பதில் சொல்ல, அபுல் ஆஸை விடுதலை செய்து சொத்துக்கள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தார்கள் நபி(ஸல்) அவர்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஜைனப்(ரலி) அவர்கள் அபுல் ஆஸை அழைத்து “இன்னும் நீங்கள் இஸ்லாத்திற்கு வர மாட்டீர்களா?” என்று மிகுந்த ஏக்கத்துடன் கேட்டார்கள். “இல்லை” என்ற பதில் மட்டும் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டார் அபுல் ஆஸ். தன் கணவர் இஸ்லாத்தை ஏற்பார் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார் ஜைனப்(ரலி) அவர்களுக்கு பெருத்த ஏமாற்றமும் மன வருத்தமும் ஏற்பட்டது.

மக்காவில் உள்ளவர்களின் பொருட்களையும் சொத்துக்களையும் ஒப்படைத்து விட்டு, சில நாட்களுக்கு பிறகு அபுல் ஆஸ் அவர்கள் மதீனா திரும்பி வந்து, “வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை, நபி முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர் என்று சாட்சி கூறுகிறேன்” என்று கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றார். இதனை வாசிக்கும் நம் கண்கள் கலங்குகிறதே, ஆனால் காஃபிராக இருந்த கணவர் இஸ்லாத்தை ஏற்ற அந்த தருணத்தில், பல வருடங்கள் அந்த சந்தர்பத்திற்காக காத்திருந்த அந்த பொருமைசாலி ஜைனப்(ரலி) அவர்களின் மகிழ்ச்சி நிச்சயம் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருந்திருந்தது. சில மாதங்கள் இருவரும் சந்தோசமாக வாழ்ந்தார்கள், அபுல் ஆஸ்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற ஒரு வருடத்திற்குள் ஜைனப்(ரலி) அவர்கள் இவ்வுலகைவிட்டு பிரிந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால். இறைத்தூதரின் மகளாக இருந்து, இஸ்லாத்தை ஏற்று, பல இன்னல்களை சந்தித்து, தன் தந்தை படும் கஷ்டங்களை சகித்துக் கொண்டு,  இறைத்தூதரான தன் தந்தைக்கு தன் கணவனால் சங்கடங்கள் ஏற்பட்டுள்ள சூழலிலும், தன்னோடு வாழ்ந்து வரும் கணவரும் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமே என்ற ஏக்கத்தோடு, நம்பிக்கையோடு இருந்தார்களே அந்த பொருமைசாலி ஜைனப்(ரலி) அவர்கள். அவர்களிடம் இருந்ததைப் போன்று நம் குடும்பத்தவர், தாய், தந்தை, கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், நண்பர்கள், சொந்தங்கள் ஆகியோர் ‘இணைவைப்பு’, ‘பித்அத்’தான (இஸ்லாத்தில் இல்லாத புதிய) காரியங்களிலிருந்து விடுபட்டு நேர் வழிக்கு வர வேண்டும் என்று என்றைக்காவது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருப்போமா? அதற்கான கவலை ஏக்கம், நம்மிடம் உள்ளதா?

மார்க்க விசயத்தில் சிறிய தவறிழைக்கும் நம் சொந்தங்களிடம் நம்மில் பலர் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற தோனியில், மார்க்க மாமேதைகள் போல் பொருமை இழந்து வார்த்தைகளை விட்டு, பத்வாக்கள் (மார்க்க தீர்ப்பு) கொடுத்து நம் சொந்தங்களிடம் வெருப்புணர்வை அல்லவா தூண்டுகிறோம், நிதானத்தை எப்போது கையாளாக போகிறோம்? சிந்திக்க வேண்டாமா?

தன் கணவர் தொழுகை இன்னும் ஏனைய இபாத்துக்கள் ஏதும் இல்லாதவராக உள்ளாரே என்று கவலைப்படாத மனைவிமார்கள், ஜைனப்(ரலி) அவர்களின் இந்த சம்பவங்களை நிச்சயம் அறிய வேண்டும். தன் கணவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், எனக்கு தேவை பொருளாதாரம், அவர் சம்பாத்தியம் ஹலாலோ ஹராமோ, அது எனக்கு தேவையில்லை, என்றில்லாமல், அப்படிப்பட்டவர்கள் தொழுகை மற்றும் இபாதத்துக்களை பேணுபவராக இருக்க வேண்டும், அவருடைய சம்பாத்தியம் ஹலாலாகமட்டுமே இருக்க வேண்டும் என்று து ஆ செய்யும் மனைவிமார்கள் எத்தனைப் பேர் நம்மிடையா இருக்கின்றனர் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் விளங்கி வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.

M தாஜுதீன்
இது ஒரு மீள்பதிவு

இக்றா ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | January 28, 2016 | , , , , ,

இக்றா !

ஓதுவீராக...!

என்னது ?

இப்படி சொன்னால் என்ன ?

அப்புறம்...?

`அதுதான்`

இக்றா !


நீண்ட நாள் கனவுதான் நம்மவர்களுக்கு உதவிகள் செய்து அரசு வேலைகளில் பணியிடங்களை நிரப்ப வேண்டும் அவர்களுக்கும் சமுதாயத்துக்கும் பலன் அளிக்கும் விதமாக சேவை செய்ய வைக்க வேண்டும் என்பதே...

அதற்கான சுழியொன்று போட்டதோ ஒரு சகோதரி அந்த சுழியைச் சுற்றி வட்டமொன்று போட்டுக் கொண்டோம் அதனுள் திட்டமொன்றையும் உள்ளடக்கினோம், அங்கே சட்ட திட்டம் என மூச்சு முட்ட வைக்காமல், இலகுவான செயல் திட்டம் தாயாரித்தோம்.

பெயர் !?

இஸ்லாமிய பெயராக இருக்க வேண்டும், இலகுவாக இருக்க வேண்டும்...

மற்றுமொரு சகோதரர் ஒருவரும் இணைந்தார் அன்னாந்து பார்த்தால் அவருக்கு தெரிவதெல்லாம் வளர்வதும் தேய்வதும் ஆராய்வதுமே அவரின் ஆய்வு.

என்ன செய்யலாம் ?

இக்றா !

ஓதுவீராக...!

என்னது ?

இப்படி சொன்னால் என்ன ?

அப்புறம்...?

`அதுதான்`

இக்றா !

என்ன செய்யப் போவுது ?

`அரசு உயர் மற்றும் மேலான்மை பணிகளுக்கான பயிற்சிக் களம்`

ஓ... இதுதான் அதுவா !

அல்ஹம்துலில்லாஹ்...

வெற்றிப் படிகள் கட்டியெழுப்ப மாணவமணிகளின் சிந்தனை குவியத் துவங்கி விட்டது...

இனி தொடரும், பல ஊர்களுக்கும் படரும் அது அவரவர்களின் சக்திக்குட்பட்ட பங்களிப்புடன்...

இன்ஷா அல்லாஹ் !

இக்றா
`அரசு உயர் மற்றும் மேலான்மை பணிகளுக்கான பயிற்சிக் களம்`

பகிர்வு பரிந்துரை : அபுஇப்ராஹிம்

சோழ வளநாடு சோறுடைத்து.. [மீள்பதிவுதான் இருந்தாலும் மறுசோறுல...] 1

அதிரைநிருபர் பதிப்பகம் | January 27, 2016 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

"சோறு கண்ட இடமே சொர்க்கம்" என்பது போல் சிலருடைய வாழ்க்கை கழிந்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் செயல்களை உரையாடல் முறையில் சிறிய ஆக்கத்தினை பதிவு செய்ய விரும்பியவனாக.



முதல் நபர்: டே மாப்புளே! இன்னைக்கி ரெண்டுஎடத்துல நடுத்தெருவுலையும்,சி.எம்.பி லைன்லயும் கல்யாணம் இருக்குதுடா வெல்லர்மே வந்துரா கல்யாணத்துக்கு போவலாம்.

இரண்டாம் நபர்: நா வரலடா மாப்புளே எனக்கு அழைப்பு இல்லடா.

முதல் நபர்: டே ரெண்டு கல்யாணக்கார மாப்புளயும் நம்ம எல்லோரையும் கூப்புட்டுட்டு போனான்கடா.

இரண்டாம் நபர்: அப்புடியா சரி நா வர்ரேன் என்னைக்குடா வலிமா ?

முதல் நபர்: ஆமாடா இன்னைக்கு வலிமாவுக்கும்,காலை சாப்பாட்டுக்கும் கூப்புட்டாங்கட.

இரண்டாம் நபர்: காலை சாப்பாட்டுக்கு எங்கடா போவலாம்?

முதல் நபர்: எங்க போனாலும் ஒரே சாப்பாடுதாண்டா வலிமாவுக்குதான் அஞ்சிகறி சோத்துக்கு போவனும்டா.

இரண்டாம் நபர்: எந்த தெருவுலடா அஞ்சிகறி சோறு?

முதல் நபர்: சி.எம்.பி லைன்ல பிரியாணியும், நடுத்தெருவுல அஞ்சிகறி சோறுண்டு நினைக்கிறேண்டா. நம்மோ நடுத்தெருவுக்கே போயிடலாம்.

இரண்டாம் நபர்: டே இவனே 12 அரை மணி ஆச்சுடா.தொழுகைக்கு தக்வா பள்ளிக்கு போய்டலாமா?

முதல் நபர்: வனாண்டா மாப்புளே அங்கே கூட்டம் அதிகமா இருக்கும்டா நம்ம முஹல்லாவிலே தொழுதுட்டு பசங்களா வருவாங்க சேர்ந்து பைக்கிலே போய்லாண்டா.

இரண்டாம் நபர்: சரி வா இகாமத்து சொல்லப்போறாங்க தொழுவ போவலாம்.

முதல் நபர்: உவ்வளவு நேரமாச்சுடா தொழுவ முடிய நம்ம பசங்களையும் காணமடா சரி பரவா இல்லை வா வேகமாக நடக்கலாம்.

விருந்து நடக்கும் வீடு நெருங்கியதும்

இரண்டாம் நபர்: அந்தோல ரெண்டுவேறு வராங்க வா ஒரு சஹனுக்கு உட்காந்திடலாம்.

முதல் நபர்: டே சும்மாயிரா கெளடு கெட்டதுலாம் வானாண்டா.நம்ம பசங்க வராங்களாண்டு பார்ரா? 'அ அந்தோ வர்ராங்கடா'.

இரண்டாம் நபர்: டே மச்சா எல்லோரும் எங்கடா போனிய? உங்களையலாம் அங்கே எதிர்பாத்துக்கிட்டு இருந்தோம்டா.

நண்பர்கள்: ஆமாடா மாப்புளே நாங்க எல்லோரும் மெய்ன்ட் ரோட்லே போய் சர்பத்து குடிச்சிட்டு அப்புடியே தக்வா பள்ளியிலே தொழுதுட்டு வர்றோம்.

முதல் நபர்: சரி வாங்கடா உள்ளே போய் காத்தாடிலே உக்காரலாம்.

சஹன் சோறு பரிமாற்றம் நடைபெறும்போது

முதல் நபர்: காக்கா இங்கே தாங்க என்று அவசரமாய்..சோத்தை சாப்பிட்டு முடித்ததும்

இரண்டாம் நபர்: டே மாப்புளே இன்னொரு சஹன் வாங்கலாமா?

நண்பர்கள்: ஆமாடா அந்தோல போற பையன்கிட்ட கேளுடா.

முதல் நபர்: தம்பி தம்பி இன்னொரு சஹன் சாப்பாடு கொண்டுவாமா.

தம்பி: மறு சோரா காக்கா?

முதல் நபர்: இல்லம்மா மறு சஹமா தம்பி.

தம்பி: சாரி காக்கா கூட்டம் நெறையா இருக்குரதுநாளே சாப்பாடு பத்தல
.
நண்பர்கள்: டே மச்சா இவன்கிட்ட கேக்காதே அந்தோ வர்ரா பாரு நம்ம ஆளு அவகிட்ட கேப்போம்டா. அஸ்ஸலாமு அலைக்கும் என்ன தலைவரே கவனிப்பே இல்லை?

தலைவர்: என்ன வேணும் சொல்லுங்க தலைவரே ?

நண்பர்கள்: நல்ல கறியா பார்த்து ஒரு சஹன் கொண்டு வாங்க தலைவரே!

தலைவர்: இந்தாங்க தலைவரே நல்ல சாப்புடுங்க வேற எதுவும் வேலுமா தலைவரே?

நண்பர்கள்: மொதல்ல இத சாபுட்டுகிறோம் தலைவரே.

முதல் நபர்: டே மச்சா சோத்துக்கு கொஞ்சம் உப்பும் கறியும் கொஞ்சம் வேவலடா யாருடா சமைச்சது?

இரண்டாம் நபர்: கண்டிப்பா நெய்னவா இருக்காதுடா.

முதல் நபர்: சரி அதவுடு ராவைக்கி அந்த கல்யாணக்கார மாப்புள சாப்புட கூப்புட்டான்.போவலாம் மறந்துடாம வந்துரு.

விருந்தோம்பல் மானுட இயல்பு அதனை அழகுற நடத்திக் காட்டுவதும் அங்கே நளினமாக நடந்து கொள்வது அன்பை வெளிகாட்டும் நட்பை கூட்டிடும் !

ஊரில் கலரி சாப்பாடு அல்லது கல்யாண அலம்பல் என்று வந்துவிட்டால் இளைய பட்டாளத்தின் செயல்கள் அச்சூழலில் அவர்களுக்கும் நண்பர்களுக்கும் ரசிக்கும்படி என்றிருந்தாலும் மற்றவர்களின் பார்வையில் அங்கே முகம் சுளிக்கவைக்கும் என்பதை மறந்து விடுகின்றனர்..

சிந்திக்கத்தான் வேண்டும் !

லெ.மு.செ.அபுபக்கர்

கூட்டணிக் கொள்கைகள்! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | January 26, 2016 | , ,


இதோ
கொள்கைவாதிகள்
கடைவிரித்தாயிற்று
வசதி படைத்தோர்
வளைத்து
வாங்கி
கூட்டணி போட்டுக்கொள்ளலாம்

பல அடுக்குப் பேச்சுவார்த்தைகளில்
கொள்ளைச் சதவிகிதங்கள்
தொகுதி பங்கீடுகளைத் தீர்மாணிக்க
கொள்கை சமரசம்
எட்டப்பட்டுவிடும்

தோள் கொடுக்கும் -கட்சித்
தொண்டனையும்
தோளில் இடும் -கரைத்
துண்டினையும்
லாவகமாகக்
கையாண்டு கொள்ளலாம்

கேடிகள் கைகளில்
கோடிகள்
முதலீடு செய்ய
முதலைகள் தயார்
இனி
கூட்டணி போட்டு
தொழில் செய்வர்
தேர்தல் வர்த்தகத்தில்

வாடிக்கையாளர்களான
வாக்காளப் பெருமக்களைச்
சில்லறை கொடுத்துச்
சரி செய்வர்
வென்றபின் வதைக்க
வரி செய்வர்

மதராஸ் வெள்ளத்தை
மறக்கடிக்க
மக்கள் வெள்ளத்தின் முன்
பொதுக்கூட்டங்களில்
பித்தலாட்டம் காட்டுவர்
கைதட்டிக் களித்திருக்கும்
கையாலாகாத கூட்டம்

அநாகரிக ஆபாசப் பேச்சுகளை
எச்சில் ஒழுக ரசித்திருக்கும்
விசிலடிச்சான்கள்
தத்தம் விடியல்களுக்குத்
திரையிடும்
அரசியல்வியாதிகளிடம்
சொக்கிக்கிடப்பர்

அரிதாரம் ஒப்பேற்றிய
அழகுக்கும்
அறிவாளி எழுதித்தந்த
வசனத்திற்கும்
சுயமரியாதையை இழந்துவிட்ட
ரசிகர் கூட்டம்
நிசம் என்றெண்ணி
நிழலிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும்

கடந்த தேர்தலில்
கடுமையாய் விமரிசித்த
எதிர்க் கட்சிக்காரனை
இம்முறை
வாழ்த்தி வரவேற்க
தயாராவதே கூட்டணி தர்மம்

ஆட்சி அமைத்தபின்
குட்டிக் கட்சிகளை
கழட்டிவிடத் தயாராக
தாய்க் கட்சிகள்
வியூகம் அமைப்பதே
அரசியல் சாணக்கியம்

என்ன "பீப்" சனநாயகமோ?
த்தூ...!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

இனிப்புக்கு ரொம்பதான் கொழுப்பு ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | January 25, 2016 | , , ,


நாம் உலகில் வாழும் காலங்களில் ஆரோக்கியத்துடன் இருந்து அதே ஆரோக்கியத்துடன் எவருக்கும் எவ்வித தொந்தரவும் தொல்லைகளும் இல்லாமல் இறுதியில் இறைவனடி சேர ஒவ்வொருவருவரும் தம் வாழ்நாட்களில் ஐங்கால இறைவணக்கத்துடன் அணுதினமும் குறைந்தது அரை மணி நேரமாவது கண்டிப்பாக உடலுக்கும், வயதிற்கும் ஏற்ற உடற்பயிற்சி செய்ய கடமைப்பட்டுள்ளோம். இதற்கு நகரத்தில் தான் வசிக்க வேண்டுமென்றோ அல்லது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும் உடற்பயிற்சி நிலையங்களுக்கு காசு செலவழித்து செல்ல வேண்டுமென்ற அவசியமோ இல்லை. ஊரில் இருந்து கொண்டே, வீட்டில் இருந்து கொண்டே, அறையில் இருந்து கொண்டே எவரும் அறியாத வகையிலும் செய்யலாம். இது ஒன்றும் மார்க்கத்திற்கு புறம்பான செயல் அல்ல. (பிறகென்ன ஒரே யோசனெ? ஆரம்பிச்சிட வேண்டியது தானே?)

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உடற்பயிற்சி செய்வதால் வரும் இன்ன பிற நன்மைகள் பற்றியும் நம்மூர் பாஷையில் கொஞ்சம் இங்கு அலசுவோம் வாங்கஹாக்கா...

1. கை கால் கடுப்பு, இடுப்பு புடிப்பு கொறையும். (இதில் திட்டுமுட்டு செரவடி, கொடப்பெரட்டு, ஓங்காரம், ஒரு மாரியா வர்ரது, மசக்கம், பித்தம் எல்லாம் அடங்கும்)

2. கழுத்து சுலுக்கு வராது.(மொம்மானிவாக்கா கடையிலெ வீசக்கார தைலம் வியாபாரம் கொஞ்சம் கொறைய வாய்ப்புண்டு)

3. தலவாணிக்கு ஒறை போட்ட மாதிரி தொந்தி உழுவாது. (நெறையா பேரு ஊர்லெ நிண்டுக்கிட்டே தன் சொந்த பெரு விரலெ சின்னப்புள்ளையிலெ பாத்தது......)

4. வாய்வுக்கோளாறு கொறையும். (அங்கிட்டு, இங்கிட்டு காத்து கண்ணாப்பின்னாண்டு பிரியாது. அக்கம், பக்கம் திரும்பி பாத்துக்கிட்டு யாருமில்லாத நேரம் டீசண்ட்டா பிரியும்)

5. இனிப்பு நீரு, ரெத்தக்கொதிப்பு வராமல் தள்ளிப்போகும். அப்படியே வந்திருந்தாலும் கட்டுப்பாட்டோடு ஈக்கிம். (பகல்லெ களரிக்கார ஊட்டுக்கு போயிட்டு சாங்காலம் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி ஈக்காது)

6. ஒடம்புலெ தேவையில்லாமல் தொங்கும் ஊளைச்சதை வத்திப்போவும். (அதனாலெ சட்டெ, பேண்டு அளவு எப்பொழுதும் மாறாமல் ஒரேக்கணக்கா ஈக்கிம்)

7. தோலு சுருக்கம் சுருக்கன வராது. (அதுக்காக இன்னொரு கலியாணத்துக்கெல்லாம் ஆசப்படக்கூடாது)

8. ராத்திரி அசந்த நல்ல தூக்கம் வரும். (கள்ளன்வொலுக்கு வசதியாப்போயிடாமெ பாத்துக்கிட வேண்டியது ஆமாம்..)

9. சேர்மாவாடிக்கு போறதுக்கு கூட செத்த பைக்கு கடன்வாங்க அவசியம் ஈக்காது. (கடன் வாங்காம சொந்த கால்லேயே போயிட்டு வந்துர்லாம்)

10. மனசு சீராக பதஸ்ட்டமும், படபடப்பும் இல்லாமல் சாந்தமாக ஈக்கிம். (அதுக்குத்தானே ஒலகத்துலெ இவ்ளோவ் செரமப்படனுமா ஈக்கிது?)

11. ஒடம்புக்காக ஒன்னுமே செய்யாததாலெ வரும் ஏகப்பட்ட ப்ரச்செனைகள் கொறஞ்சி பட்டுக்கோட்டைக்கும், தஞ்சாவூருக்கும் ஆஸ்பத்திரி, ஊடுண்டு அலையிறது கொறஞ்சி போகும். நேரமும், காசும் மிஞ்சும். (அந்த காசெ சேத்தாலே காலப்போக்குலெ மனக்கட்டு வாங்கி போடலாம் எங்கையாச்சும்..)

12. ஒரு மூக்கு ஓட்டையிலெ மூச்செ புடிச்சி கொஞ்சம் நொடி உள்ளக்க வச்சி பொறகு இன்னொரு மூக்கு ஓட்டையிலெ மூச்செ உட்டு ஒவ்வொரு நாளும் இப்புடி பழகுனா நெஞ்சுக்குள்ள அடிக்கடி கறி, கோழி, குருவி சாப்புட்றதுனாலெ கொழுப்பு அடைச்சி மூச்சி பிரச்சினை, ஹார்ட்டு குழாயி அடப்பு பிரச்சினை இதெல்லாம் வராம தடுக்கலாம். (ஊட்டு சர்சராக்குழியிலெ கானு அடச்சி போயிட்டாலெ அதெ சுத்தம் பண்ண வ்ளோவ் காசு கேக்குறானுவோ? ஹார்ட்டுக்குள்ள அடப்பு வந்திரிச்சிண்டா ஊட்டு பத்திரத்தெயிலெ எழுதிக்கேப்பானுவோ டாக்டருமாருவொ?) 

13. உடற்பயிற்சி செய்யிறதுனாலெ ஒடம்புலெ உள்ள கெட்ட நீரு/கிருமிகள் வேர்வை மூலமா வெளியாயிடும். ஒடம்பும், மனசும் ஃப்ரஸ்ஸா ஈக்கிம். ரத்த ஓட்டம் சீராக ஈக்கிம்.

14. மணிக்கணுக்குலெ காலைக்கடனுக்கு காத்துக்கெடக்க வேண்டிய அவசியம் ஈக்காது. அப்புறம் ஒடம்பு ரொம்ப ராஹத்தா ஈக்கிம்.

15. உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் பொழுது ரெண்டு, மூணு நாளெக்கி ஒடம்பு பூராவும் வலிக்கும். காச்சல் கூட வரும். பயந்துட கூடாது. காச்சல் உட்டதும் தொடரனும். அப்புறம் என்னா? சிக்ஸ் பேக்கு, எயிட் பேக்குண்டு வசதிக்கு தகுந்தமாரி வச்சிக்கிட வேண்டியது தானே? இதுக்கு அரசாங்க வரியா போடப்போவுது?

நம்ம ரத்தத்துலெ இனிப்பையும், கொழுப்பையும் கொறச்சிட்டா அல்லது கட்டுப்பாட்டுடன் வச்சிக்கிட்டாலே போதுங்க. ஏகப்பட்ட நோய்நொடிகள் நம்மை தாக்காமல் தடுக்கலாம். பெருவாரியான நோய்நொடிகளை நம்ம ஒடம்புக்குள்ள பந்தல் போட்டு வாசல்லெ பன்னீரு தெளிச்சி, சந்தனத்தெ ஒரு கோப்பையிலெ வச்சிக்கிட்டு வரவேற்கிறதே இந்த ரெண்டும் தாங்க (இனிப்பும், கொழுப்பும்). (சகன்லெயும் அது ரெண்டும் தானே நாட்டாமை பண்ணுது?)

எப்புடி பலமான இறையச்சம் (தக்வா) உள்ளவர்களை பார்த்து சைத்தான் அவர்களை வழிகெடுக்க நெருங்க முடியாமல் எரிச்சலடைந்து சோர்ந்துபோகிறானோ (சோந்துபோவான்) அது மாதிரி தாங்க நம்ம ஒடம்பெ ஆரோக்கியமா எப்போழும் வச்சிக்கிட்டா நோய்நொடிகள் எளிதில் நம்மை தாக்க முடியாமல் எரிச்சலாகி மாச்சப்பட்டு எங்கையாவது ஓடிப்போயிடும். அப்புறமென்ன நோய்நொடிகளும் அதை ஊக்குவிப்பவர்களும் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையம் போல் ஆரோக்கியமான மனிதர்களை எதிர்த்து போராட வேண்டியது தான். அதுக்கு ஒத்து ஊதுறதுக்கும் ஆளுவொ நாட்லெ ஈக்கத்தான் செய்வாங்க. அதெ பத்தி கவலைப்படாதியெ. நமக்கு நம்ம ஆரோக்கியம் தான் முக்கியம்ங்க.......

இன்னொரு விசயங்க, எங்க அப்பா காலத்துலெ எல்லாம் எல்லாப்பள்ளியாசல்லையும் ஒரு நாக்காலியெ கூட பாத்தது இல்லெ. எம்பது, தொன்னூறு வயசானவங்க கூட நின்டுக்கிட்டு இல்லாட்டி தரையிலெ உக்காந்துகிட்டு தான் தொழுவுவாங்க. இப்பொ என்னாண்டாக்கா ஒவ்வொரு பள்ளியாசல்லையும் பத்து நாக்காலிக்கு மேலெ வாங்கி போட்டு வச்சிக்கிறாஹ. சின்ன, சின்ன வயசுகாரவங்க கூட எதாவது ஒடம்பு சரியில்லாம நாக்காலியிலெ உக்காந்துக்கிட்டு தொழுவுறாங்க...காரணம் என்னாண்டாக்கா இப்பொ உள்ள மக்கள்ட்டெ ஆரோக்கியம் கொறஞ்சி போச்சிங்க. 

கொஞ்ச நாள்ச்செண்டு திடீர்ண்டு மனசுலெ வந்ததெ எழுதிப்புட்டெங்க. படிச்சிட்டு உங்க கருத்தெ சொல்லுங்க....

மு.செ.மு. நெய்னா முஹம்மது

காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா..!?!? 4

அதிரைநிருபர் பதிப்பகம் | January 24, 2016 | ,

காசைக் கடவுளுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு காசு பணம் மிக அத்தியாவசியமானதுடன் இன்றைய காலகட்டத்தில் இவ்வுலகில் காசிருந்தால் எதையும் வாங்கிவிடலாம் என்ற எண்ணமும் மேலோங்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் மானத்துடனும் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வறுமை இல்லாமலும் வாழ்வதற்கு காசு பணம் மிக மிக முக்கியமானதாகும். மறுப்பதற்கில்லை. அதே சமயம் நாகரீகமும் 

நவீனங்களும் தலை தூக்கிய பின்பு இன்றைய சூழ்நிலையில் பணத்தேவைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் பன்மடங்கு கூடிவிட்டன. நாணயத்தின் மதிப்பும் நாளுக்கு நாள் நலிந்து கொண்டிருப்பதால் நம்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பெருந்தொகை தேவைப்படுகிறது என்பது என்னவோ உண்மைதான் அதுபோல இந்த சூழலில் காசு பணம் இருந்தால் எதையும் வாங்கி விடலாம் என்கிற எண்ணம் ஒவ்வொருவரிடத்திலும் மேலோங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மையே.! 

காசிருந்தால் எதையும் வாங்கிவிடாலாம் என்று சொல்வதற்கு பொருத்தமாக இன்றைய காலகட்டத்தில் நடக்கும் பல சம்பவங்களை உதாரணங்களாகச் சொல்லலாம்.அதில் முதலாவதாக சொல்லப்போனால் ஒருமனிதனின் குணம், குடும்பம்,கோத்தரம், பழக்கவழக்கம்,நடவடிக்கை,செயல், சமுதாயத்தார் மத்தியில் உள்ள பெயர் புகழ் இதை பார்த்து மதித்த காலம்போய் இப்போதைய காலகட்டத்தில் பணக்கார்களையும், பெரும் செல்வந்தர்களையும் மதிக்கும் காலமாக பணக்காரர்களுடன் பழக்கவழக்கம் வைத்துக் கொள்வதையும் அவர்களை தனது நண்பர்களாக சொல்லிக் கொள்வதையும் கௌரவமாகவும் பெருமையாகவும் நினைக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்வதானால் மனிதர்களை மதிப்பது என்பது அவனது காசுபணத்தை வசதிவாய்ப்பை பொருளாதாரத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

அடுத்து இதில் பெரும்கொடுமையும் வேதனைப்படக்கூடிய விஷயம் என்னவென்று சொன்னால் பணக்காரர்கள் செய்யும் பெரிய தப்புக்கள்,குற்றங்கள் கூட சிலசமயத்தில் நியாயமாக்கப்பட்டு அவர்களுக்கு சாதகமாக பேசப்படுகிறது. அதே தவறை ஒரு சாதாரண நடுத்தர மனிதன் செய்தால் அதை பெரும்குற்றமாக கருதப்படுகிறது.அப்படியானால் அந்த சூழ்நிலையில் காசுபணம் உள்ளவர்களை பொருத்தமட்டில் காசுபணம் இருப்பதால் செல்வந்தர்களாக இருப்பதால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்பதாகத்தானே அர்த்தமாகிறது.? 

அடுத்து பார்ப்போமேயானால் காசுபணம் கைநிறைய வந்தவுடன் சிலர் தனது கடமைகளை செய்ய மறந்துவிடுகிறார்கள். பெற்றோர்களை உடன்பிறந்தோர்களை உறவினர்களை சிறுவயதில் வறுமையில் இருந்தபோது பழகிய நண்பர்களை இப்படி நெருங்கிய கடமைப்பட்டவர்களைக் கூட மறந்து விடுகிறார்கள். எத்தனைதான் காசிருந்தாலும் உண்மையான அன்பு பாசத்தையும் இரத்தபந்த உறவுகளையும் உண்மையான உயிர் நட்புக்களையும் எத்தனைகோடியை அள்ளிக் கொடுத்தாலும் வாங்கிட முடியுமா.? ஆனால் அதை காசைவிட்டு எறிந்தால் எல்லாம் வாங்கிட முடியும் என நினைக்கிறார்கள்.இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாற்றுடன் பல உதாரணங்களை சொல்லிக் கொண்டு போகலாம்.

எனவே இப்படியான குற்றச்சாற்றுகளுக்கு நாம் ஆளாகிவிடாமல் இறைவன் நமக்கு காசுபணத்தை தாராளமாக தரும்போது நமக்குள் தன்னடக்கமும் தாராள குணமும் பிறரையும் சமமாக மதிக்கும் பரந்த மனப்பான்மையும், நல்லெண்ணமும் வளரவேண்டும். ஒன்றைமட்டும் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். இவ்வுலகில் நாம்மட்டுமல்ல இந்த காசுபணமும் யாருக்கும் நிலையானது அல்ல. அது எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு ரீதியில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நம்மைவிட்டு போய்விடலாம். ஆகையபடியால் அது நம்மிடத்தில் இருக்கும்போது இந்தக் காசுபணத்தை எப்படி நல்வழியில் நாம் செலவு செய்யப்போகிறோம் என்கிற பயம்தான் மனதில் வரவேண்டுமேயன்றி திமிர்த்தனம் இம்மியளவும் வந்துவிடக் கூடாது. காசுபணம் இருக்கிறது என்கிற மமதையில் நாம் செய்யும் தவறுகளால் அந்தக் காசுபணம் ஒருநொடியில் காணாமல்போய் விட வாய்ப்பு உள்ளது. எனவே காசுபணம் எவ்வளவுக்கு அவசியமானதாக இருந்தாலும் அதை கடவுளுக்கு நிகராக மதித்து விடக்கூடாது. அதனைக் கொண்டு எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்கிற எண்ணம் துளிகூட மனதில் வளர்ந்து விடக் கூடாது. 

ஆகவே நாம் எத்தனை கோடிக்குச் சொந்தக்காரர்களாக இருந்தாலும் இந்த காசுபணமும் பகட்டான வாழ்க்கையும் நிலையானது அல்ல என்பதை உணர்ந்திட வேண்டும். இதைவிட நிலையானவை நாம் செய்யும் நற்காரியங்களிலும் பிறரை மதித்து நடப்பதிலும் தானதர்மம் செய்வதிலும் பிற நல்ல செயல்பாட்டிலும் தான் இருக்கிறது என்கிற நம்பிக்கையுடன் இறைவனின் பயமும் நம்பிக்கையும் வந்து விட்டால் காசுபணத்தைக் கொண்டு இவ்வுலகில் நாம் நினைத்தது எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது என்கிற எண்ணம் மனதில் துளிர்விட்டு வளர்ந்து தன்னம்பிக்கையுடன் தலைக்கனம் இல்லாத நேர்மையான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

அதிரை மெய்சா

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 12 20

அதிரைநிருபர் பதிப்பகம் | January 23, 2016 | ,


இந்தியாவில் இஸ்லாத்தை  எதிர்ப்போர்கள் எடுத்துவைக்கும் முதல்விவாதம் என்னவென்றால்  இஸ்லாம் ஒரு அந்நிய மதம் – முஸ்லிம்கள் அராபிய அடிமைகள் – இஸ்லாம் கலாச்சாரத்தால் , மொழியால் வேறுபட்டது என்பதாகும். 

அத்தகைய தவறான புரிந்துணர்வை நீக்கும் விதத்தில் பதில் அளிக்கத் தொடங்கலாம்.  

இந்தக் கேள்விகளுக்கு ஒரு மேலோட்டமான,   பதில் சொல்வது  என்றால்  இவைகளைத்தான்  சொல்லத் தோன்றும்.   

இந்தியாவில் பிறந்த ஒருவன் அந்நிய மண்ணுக்கு வேலைதேடிப் போவதும் அங்கிருந்து பொருளீட்டி இந்தியாவுக்கு அனுப்புவதும், 

வெளிநாடுகளில் இருந்து புதிய புதிய பொருட்களையும் சாதனங்களையும்  கொண்டு வந்து பயன்படுத்துவதும் , 

காலையில் குடிக்கும் காபி தொடங்கி  பகட்டாக வாழ  காற்றாடி, குளிர்சாதனம், தொலைக் காட்சிப் பெட்டி, மைக்ரோ ஓவன் , வாஷிங்மிஷின் , அலைபேசி, தொலைபேசி  இரவில் இழுத்துப்  போர்த்திக் கொண்டு உறங்கும் கம்பளிப் போர்வை வரை    பயன்படுத்துவதும்,       

வெளிநாடுகளில் கடைப்பிடித்த அல்லது கற்றுக் கொண்ட பழக்க வழக்கங்களை அன்றாட வாழ்வில் அமுல் படுத்துவதும் ,

தொழில் வளர்ச்சிக்காக வெளிநாடுகளில் தொழில்நுட்பங்கள்  நிறைந்த   இயந்திரங்களை இறக்குமதி செய்வதும்  , 

தீராத வியாதிகளைத் தீர்க்க உயர்ந்தவகை மருத்துவ வசதிகளை வெளிநாடுகளுக்கு சென்றேனும்        பெற்றுக்கொள்வதும் ,

சித்தா , ஆயுர்வேத மருந்துகளை மறந்துவிட்டு அலோபதி, ஹோமியோபதி என்கிற மருத்துவமுறைகளைப் பின்பற்றுவதும், 

காய்கறிகளின் மரபணுக்களை மாற்றி இயற்கைக்கு மாறுபாடான விதைகளையும் இறக்குமதி செய்யப்பட்ட உரங்களையும்  பயன்படுத்துவதும் ,  

பிஜ்ஜா , நூடுல்ஸ், பிரைடு சிக்கன் , பாஸ்ட் புட் போன்ற  உணவுப் பழக்கங்களை அந்நியனிடமிருந்து சுவீகாரம் எடுத்துக் கொள்வதும் , 

கொடுமைப்படுத்தும் கோடையிலும் கோட்டும் சூட்டும் மாட்டி கழுத்தில் டை கட்டி பீடுநடைபோடும் போதும், ஆங்கிலக் கல்வியை முன்னிலைப் படுத்தி குழந்தைகளை கான்வெண்டுகளில் சேர்ப்பதும்,  

அரசியல் கட்சிகள் கம்யூனிசம் என்றும் சோசலிஷம் என்றும் முதலாளித்துவம் என்றும் அந்நிய நாட்டில் வடிவமைக்கப்பட்ட  பொருளாதாரக் கொள்கைகளை வைத்துக் கொள்வதும் ,

அனைத்துக்கும் மேலாக,  அன்னியன் வகுத்த  அடிப்படையிலேயே இந்தியநாட்டின்  பாராளுமன்ற, சட்ட, ஜனநாயக விதிமுறைகளை பயன்படுத்துவதும் , 

அனுமதிக்கத்தக்கவை என்றால், மக்களின் மனம் விரும்பும் ஒரு மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வது மட்டும் எப்படித் தவறாகும்? 

மேலே குறிப்பிடப்பட்டவை உடனே வெளிப்படுத்தும் உணர்வுகளே. ஆனால் விரிவான பதில்களும் நிறைய  இருக்கின்றன.   

இந்தியா,  ஒரு பன்முக சமுதாயங்களின் சங்கமம். பலவகைப்பட்ட மத, இன, வழிபாட்டுமுறைகள் , மொழி, பண்பாடு, கலாச்சாரம், நிறம்,உடலமைப்புகொண்ட மக்கள் என பலவேறுபாடுகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே கருதும் அரசியலமைப்பு சட்டத்தைக் கொண்ட ஒரு சன்மார்க்கநாடு. 

அஸ்ஸாமில் பிறந்தவனும் ஆண்டிப்பட்டியில் பிறந்தவனும் சட்டத்தின் முன் சமம் ஆனவன். இந்த நாட்டில் பிறந்த எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்கிற உரிமை பெற்றவர்கள். அவரவர்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற அனைவருக்கும் சமஉரிமையை அரசியல் சட்டம் வழங்கி இருக்கிறது. இதுவே இந்தியாவின் சிறப்பு. 

இந்த நாட்டின் பெரும்பான்மை சகோதரர்கள் பின்பற்றும் மதமாக இந்து மதம் இருக்கிறது. இந்தப் பெரும்பான்மை பற்றி பல கேள்விகள் பல     திசைகளிலிருந்தும் எழுப்பப்பட்டாலும் நாம் அதைப் பற்றி  பேசவேண்டிய தளமும் களமும்  இது அல்ல என்று கருதுகிறோம். 

அதே நேரம் நாம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம். நமது முதல் கேள்வி – 

பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதமான இந்து மதம் தவிர இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதங்கள்தான் அந்நிய மதங்கள் என்று தவறான புரிந்துணர்வின் அடிப்படையில்  பட்டம் சூட்டப்பட்டிருக்கின்றன. இந்த நாட்டில் பிறந்த மக்களில் பெரும்பகுதியினர் இந்து மதத்தைப் பின்பற்றுவதால் அவர்கள் இந்துக்கள் அதனால் இந்தியர்கள்  என்றால் மற்ற மதங்களைப் பின்பற்றுவோர் மட்டும் எங்கே பிறந்தார்கள்? நாம் அறிந்தவரை  அவர்கள் அண்டார்டிகாவிலோ ஆப்ரிகாவிலோ பிறக்கவில்லையே. அவர்களும் இதே மண்ணில் பிறந்தவர்கள்தானே. பிறந்த நாட்டின் குடியுரிமை, பிறந்தவர்கள் அனைவருக்கும் பொதுச்சொத்துதானே! 

அடுத்த கேள்வி இந்தியாஎன்கிற  பூகோள அமைப்புடைய நாட்டுக்கு எந்த மதம் சொந்த மதம்? இந்தியா என்கிற பெயருடன் ஒரு  நாடு உருவானது எப்போது? இந்தியா என்ற பெயர் இந்த நாட்டுக்கு சூட்டப்பட்டது எப்போது? இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டபோதே இஸ்லாமும் கிருத்தவமும் இந்தியாவில் பல மக்களால் பின்பற்றப்பட்டே வந்தனவே! . அதனால்தானே இந்தியா என்று பெயர்சூட்டப்பட்ட  பூகோளப் பகுதி   மதவாரியாக இரண்டாகப் பிரிக்கப்பட்டது? 

மூன்றாவது முக்கியமான கேள்வி வரலாற்று ரீதியாக ஒட்டுமொத்த இந்தியாவுக்கு என்று தனியாக ஒரு மதம் இருந்ததா? அப்படியானால்  இந்தியாவுக்கு  சொந்தமாக இருந்த மதத்தின் பெயர் என்ன? அந்த மதத்துக்கு இடையூறாக வந்த அந்நிய மதங்கள் யாவை? பெரும்பான்மை மக்கள் பின்பற்றுவதாக இன்று கற்பிக்கப்படும் இந்துமதம்தான்  இந்தியாவின் மதமா என்ற கேள்விக்கு பதிலைத் தேடினால்தான் இஸ்லாம் ஒரு அந்நிய மதம் என்ற தவறான புரிந்துணர்வை நீக்க முயல முடியும். 

உண்மையான  வரலாற்றை ஆதாரங்களோடு  ஆராய்ந்து பார்ப்போமானால், இன்று முஸ்லிம்களை  அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் எங்கிருந்தோ இங்கே வந்து குடியேறியவர்கள்தான் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். 

வடமொழி வேதங்களில் (கி.மு. 1500-கி.மு.500) ‘தஸ்யு’க்கள் என்னும் உள்நாட்டு மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் பாரசீகத்தில் இருந்து படைஎடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரியர்கள் ரிக் வேதக் காலத்தில் கால்நடைகளுக்கு  மேய்ச்சல் காட்டும்  இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களுடன் கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினரை அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கினார்கள். இதற்காகவே  மனுநீதி எனும் வர்க்கபேத சாஸ்திரத்தையும் உண்டாக்கினார்கள். 

நடுநிலையான வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ளவைகளை இங்கு விலாவாரியாக விவரிக்கவேண்டியதில்லை. அவைகள் திறந்த புத்தகங்களாக விரிந்து கிடக்கின்றன. ஆயிரம் எடுத்துக்காட்டுகளில் இரண்டே இரண்டை மட்டும்  இங்கு எடுத்துச்  சொல்லலாம். ((K.K.Hirst) K.K. ஹிர்ஸ்ட்  என்ற புகழ்பெற்ற  ஆய்வாளர் நதிக்கரைகளில் தழைத்த உலக நாகரிகங்களை ஒவ்வொன்றாக  ஆய்ந்த ஆய்வாளர் ஆவார். . அமெரிக்காவின் இல்லினாஸ் பல்கலைக் கழக்கத்தின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் தலைவியுமாவார். இவர் இவ்வாறு கூறுகிறார் 

“ Sometime around 1700 BC, the Aryans invaded the ancient urban civilizations of the Indus Valley, and destroyed that culture. The Indus Valley Civilization were far more civilized than any horse-back nomad, having had a written language, farming capabilities, and led a truly urban existence. Some 1,200 years after the supposed invasion, the descendants of the Aryans, so they say, wrote the classic Indian literature called the Vedic manuscripts.” 

“கி. மு. 1700 ஆம் ஆண்டுவாக்கில்  ஆரியர்கள் இந்தியாவின் சிந்துசமவெளி நாகரிகங்கள் தழைத்து  வளர்ந்த வளமான  சிந்து சமவெளியின் மீது அத்துமீறி படைஎடுத்தார்கள். அவர்கள் படையெடுத்த காலத்தில்,  நாகரிகம் தழைத்து வளர்ந்திருந்த  அந்தப் பகுதி  தங்களுக்கென மொழி மற்றும் வேளாண்மைத் திறமைகளில் உயர்நிலையில் இருந்ததுடன் உயர்ந்த  நகர்ப்புற  வாழ்க்கையிலும் மேம்பட்டு இருந்தார்கள். இவ்வாறு இந்த நாட்டுக்குள் நுழைந்த ஆரியர்கள் அத்தகையப் படையெடுப்புக்குப் பின் கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளுக்குப் பின்தான் வேதங்கள் என்று அழைக்கப்பட்ட  தொன்மை வாய்ந்த இலக்கியங்களை எழுதத் தொடங்கினார்கள்.அவைகளே வேதங்கள் என்று அழைக்கப்பட்டன ”

அடுத்ததாக,   

“ சிரியா நாட்டைச் சேர்ந்த மித்தனி (Mittani) யிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையுமுன் சில காலம் ஈரானை சேர்ந்த ஈஸ்பராயன் (Esfarayen) என்ற மாநிலத்தில் தங்கிவிட்டு வந்தார்கள். அப்போது பாரசீக நூல்களைக் கற்றார்கள் அதன்பின் இந்தியாவிற்குள் வந்தபின் பாரசீக மத நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள். எனவே பாரசீக மொழியில் உள்ள கடவுள் பெயர்களை ஒரு பாரசீக அகராதியில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது. “

இந்த பாரசீக அகராதியின் பெயர் “Muslim and Parsi Names” இதை எழுதியவர்கள் இன்றைய மத்திய அமைச்சர் திருமதி. மேனகாகாந்தி மற்றும் பேராசிரியர் ஓசைர் ஹுசைன்.

ஆகவே முஸ்லிம்களை அந்நியர் என்று கூறுபவர்களும் இந்த நாட்டுக்குள் புகுந்த அந்நியர்களே என்பதே வரலாறு தரும் உண்மை.  

இதுமட்டுமல்ல , இந்தியாவின் அரசியலை ஆட்டிப் படைத்த ரஜபுத்திரர்கள் கூடத் துருக்கியர்கள் குடியேறிய   காலத்தில்  இங்கு     வெளியுலகிலிருந்து   குடியேறியவர்கள்தான்.  சௌகான், பரிகரர், சோலங்கி என்று சொல்லப்படுபவர்கள் எல்லோருமே  வெளியுலகில் இருந்து இந்தியாவுக்குள் வந்தவர்கள்தான். முஸ்லிம்களை மட்டும்  மட்டும் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று பழிதூற்றுவது  நியாயமற்ற விவாதம்ஆகும். 

மண்ணின் மைந்தர்கள்,  ஆரியர்கள் நாடுகடந்து கொண்டுவந்த மதத்தை ஏற்கலாம் என்ற  வாதம் சரியாக இருக்குமானால் அதே மண்ணில் பிறந்த மைந்தர்கள் இஸ்லாத்தையும் ஏற்பதில் தவறென்ன? 

இங்கு நாம் சுருக்கமாக சொல்லவருவது என்னவென்றால்  ஆரியர்கள்  இந்தியாவுக்குள் மத்திய ஆசியாவிலிருந்து வரும்  முன் இந்தியாவுக்குகென, குறிப்பிட்ட மதங்கள் இருந்திருக்கவில்லை. அக்கால இந்திய மக்கள் சிலை வணங்கிகளாகவும், தங்கள் இஷ்ட தெய்வங்களை தாங்களே தேர்வு செய்து வழிபடுபவர்களாகவும் இருந்தனர். இதில் கல்,மரம்,நிலம்,நெருப்பு,சூரியன், மனிதன், ஆகிய அனைத்தும் அடங்கும். ஆரிய நுழைவுக்குப் பின்னர்தான் வேதங்களின் அடிப்படையில் வேத மதம் அல்லது இந்துமதம் கட்டமைக்கப்பட்டது. அந்தக் கட்டமைப்பின் அடிப்படை நான்குவகை வர்ணாசிரமாக இருந்தது.   

மேலும் இந்தியாவில் இன்று கிருத்துவ மற்றும் இஸ்லாத்தைத் தழுவிய மக்கள்   இந்த நாட்டின் மண்ணிலே பிறந்து வளர்ந்து வர்ணாசிரமஅடிப்படையிலான  சமுதாயக் கொடுமைகளை,  சாதி ஒடுக்குமுறைகளை நீக்கிக் கொள்வதற்காக   மதம் மாறியவர்கள்தான். அத்தகைய கொடுமைகளை விலாவாரியாக விவரிக்க ஆரம்பிப்பது இந்தத் தொடரின் நோக்கத்தில் துவேஷ வித்தைத் தூவிவிடும். ஆகவே அவற்றைத் தவிர்க்கிறோம். எனினும் கொடுமைகளின் காரணமாக மனம்விரும்பிய மதங்களில் நிலைபெற்ற முஸ்லிம் மற்றும் கிருத்தவர்களை  அந்நிய மதங்களின் அடிமைகள் என்று வர்ணிப்பது உண்மைகளுக்கு மாறானது.     

உண்மையான வரலாற்றின் பக்கங்களை இன்னொரு கோணத்தில் ஆராயப் போனால் , வணிகத்துக்காகவும்   முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள்.  வணிகம் செய்ய வந்தவர்கள் தங்களின் வணிக வசதிக்காக இங்கேயே தங்க ஆரம்பித்தார்கள். இங்குள்ளவர்கள் முஸ்லிம்களின் நல்ல நாணயமான நடத்தைகளைப் பார்த்து வியந்து அவர்களுடன் வணிகம் செய்ய விரும்பினார்கள்.  அவர்களின் நாணயம்,      நல்லெண்ணம்,  நடத்தை, ஒழுக்கம், ஆகியவற்றால்  ஈர்க்கப்பட்டவர்களின் இதய மாற்றம்,  எண்ணப்புரட்சி பெருகியதால்தான்   இஸ்லாம் இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. பல்வேறு திசைகளிலும் வழிகாட்டும்  அழைப்புப் பணியும்  வெற்றிகரமாக நடந்தது. தங்களின் பிறவியின் களங்கத்தை துடைக்கும் புனித நீராக இஸ்லாத்தைக் கண்ட மக்கள் இஸ்லாத்தைத் தழுவினர்.  

அன்றைய உலக மக்களின்  இயல்பும் தொழிலும் வாழ வகையுள்ள  நாடுகளைத் தேடிச் செல்வதுமாகும்.  அவ்வாறு  நாடுகளைத்  தேடிப் புறப்பட்ட இனங்கள் உலக வரலாற்றில் எத்தனையோ உள்ளன. கொலம்பசில் இருந்து, வாஸ்கோடாகாமா  வரையும், அலெக்ஸான்டரில் இருந்து நெப்போலியன் வரையிலும் கூட இந்த வரலாறு உலக சரித்திரப்பக்கங்களில் நீளும் . 

அதே ரீதியில்தான் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்திலேயே இந்தியாவின்  மேற்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு  அராபிய வணிகர்கள் வருகைதந்தனர். கேரளக் கடற்கரைப் பகுதிகளில்           அந்தக் காலத்திலேயே  கட்டப்பட்ட பள்ளிவாசல்களின் கோபுரங்களில் இத்தகைய சான்றுகள் கொடிகட்டிப் பறக்கின்றன. சேரநாட்டை ஆண்ட மன்னர் சேரமான் பெருமாளின் வரலாற்றிலும்  விரவிக் கிடக்கிறது. அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு ஹஜ்ஜுக்கு சென்று திரும்பும்போது ஓமன் நாட்டின் சலாலாவில் இறைவனடி சேர்ந்த சான்றுகள் காணக்கிடைக்கின்றன.

வணிக நோக்கங்களுக்காகவும் பிழைப்புத் தேடியும்  சிங்கப்பூர், மலேசியா, இலங்கை , பர்மா, சீசெல்ஸ், தென் ஆப்ரிகா, மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று குடியேறிய  இந்தியர்களுக்கும் அந்தந்த நாட்டின் குடியுரிமைகள் வழங்கப் பட்டு இருக்கின்றன. மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் அங்கு எல்லா ஊர்களிலும் கோயில்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. பத்துமலை தைப்பூசத்  திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. அமெரிக்காவின் பல பெரிய நகரங்களில் இந்துக் கோயில்கள் கட்டபட்டிருப்பது கண்கூடு. அண்மையில்,  அபுதாபி நாட்டில் கூட கோயில் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.   அங்கெல்லாம் இந்து மதத்தை அந்நிய மதம் என்று கேலி பேசுவோர் யாருமில்லையே! 

மதங்களை ஒரு மரமாகக் கொண்டால் தழைத்து வளர தான் நின்ற இடத்தில்   சூரிய வெளிச்சம்  கிடைக்காத காரணத்தால் வெளிச்சம்  இருக்கும் பக்கம் நீண்டு வளரும் மரங்களின்  கிளைகளைப் போலதான் இஸ்லாமும் கிருத்துவமும் இந்த மண்ணில் வளர்ந்தன;  தழைத்தன ; பலருக்கு நிழல் தந்தன. கிளைகள் விரவிப் படந்து வளர்ந்தாலும் மரத்தின் ஆணிவேர்  இந்திய மண்ணில்தான் ஊன்றி நின்று நிலைபெற்று நிற்கிறது. வளர்வதற்காக வெளிச்சத்தின்  பக்கம் நீண்டுவிட்டன என்கிற தாவரசலன இயல்புக்காகவே வளர்ந்த  கிளைகளை வெட்ட நினைப்பவர்கள்தான் இஸ்லாத்தை அந்நிய மதம் என்கிறார்கள். 

இந்த வரலாற்று செய்திகளை அழைப்புப் பணியாளர்கள் குறித்துவைத்துக் கொள்ளவேண்டும்.    

இன்னும் பேசவேண்டி இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் தொடரும். 

இபுராஹிம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)