Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குழந்தைகள் - தொழுகையில் தொந்தரவா??? 1

அதிரைநிருபர் பதிப்பகம் | July 12, 2015 | , , ,

"பள்ளிவாசலுக்கு சென்று தொழுவதை விட பெண்கள் தங்கள் வீட்டில் தொழுவது சிறந்தது" என்பது நபிமொழி. ஆனாலும், பள்ளிவாசலுக்கு சென்று தொழ விரும்பினால் அவர்களை தடுக்க வேண்டாமெனவும் கூறப்பட்டு உள்ளது. பள்ளிவாயில்களுக்கு பெண்கள் தொழ வருவது எளிதான விஷயம் இல்லை என்பது நாம் அறிந்ததே. பல வேலைகளுக்கு (வேலை, குழந்தைகள், சமையல், வீட்டுபராமரிப்பு) இடையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வர வேண்டி இருக்கும். இதில் பல அசௌகரியங்கள் உண்டு.

அதையும் மீறி பெண்கள் வருவது, கூட்டு தொழுகையில் பங்குபெற்று, அதிக ஆர்வத்துடன் தொழுவதற்கே. தனியாகத் தொழுவதை விட பலருக்கு ஜமாத்தாக தொழும்போது நீண்டநேரம் தொய்வு இல்லாமல் தொழ ஏதுவாக இருக்கும். ஒரு பாசிடிவ் வைப்ஸ் இருக்கும்(தனியாக செய்வதை விட கூட்டாக ஒரு வேலையை செய்யும் போது மலைப்பு தெரியாது)

தனியாக விட்டுவர முடியாமலும், கவனிக்க வேறு ஆட்கள் இன்றியும் குழந்தைகளை கூடவே பெண்கள் அழைத்து வர வேண்டி உள்ளது. அப்பொழுது குழந்தைகள் அவ்வளவு பெரிய கூட்டத்தை, மற்றும் பிற குழந்தைகளை பார்க்கவும் தன் சேட்டைகளை துவங்கிவிடுவார்கள். சிறு குழந்தைகளோ சில நேரம் தூக்க கலக்கம், பசி போன்றவற்றால் அழ தொடங்கிவிடுகின்றனர்.

இது போன்ற குழந்தைகளை தொந்தரவாக நினைக்கும் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்களை விட தொழுகையில் ஈடுபாடு இன்றி அரட்டை அடிப்பதற்காகவே ஜமாத்தை நாடுபவர்கள், வீண் வெட்டி பேச்சு, ஊர் கதை, கேலி, கிண்டல்களில் உள்ள ஆர்வத்தில் இமாம் பேசுவதை கேட்க விடாமல் செய்யும் ஆடவர்கள்/பெண்கள் தான் தொழ வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டியவர்கள். எல்லாம் தெரிந்தும் மற்றவர்களின் தொழுகையை தொந்தரவு செய்யும் அவர்களுக்கு தான் முதலில் கற்று தர வேண்டி உள்ளது.

அதே போல யார் தொழுகைக்கு தொந்தரவாக இருந்தால் நமக்கென்ன என்பது போல குழந்தைகளை கண்காணிக்காமல், எவ்வித பழக்கங்களையும் கற்று தராமல், நானும் தொழ வந்தேன் என்று பெயருக்காக தொழ வருவதில் அர்த்தம் இல்லை. தாய்மார்களுக்கு தன் குழந்தைகளை பற்றி நன்கு தெரியும். சிறு குழந்தைகள் என்றால் முடிந்தவரை நன்றாக பகலில் உறங்க வைத்து, பசியமர்த்தி அழைத்து வருவது அவசியம். ஆனால் ஓயாமல் அழும் குழந்தை அல்லது துளியும் சொல் பேச்சு கேட்காமல் சேட்டை செய்யும் சிறுவர்/சிறுமியர் உள்ள அம்மாக்கள் என்றால் ஜமாத்தாக தொழ மஸ்ஜிதிற்கு அழைத்து வருவதை தவிர்க்க முயற்சிக்கலாம். 

சில மஸ்ஜிதுகளில் கையாளப்படும் வழிகள் :
  • சில நாடுகளில் குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்காகவே தனி அறை ஒதுக்கப்படுகிறது.
  • சில இடங்களில் விபரமறிந்த சற்று பெரிய சிறுமிகள் அல்லது தொழுகை இல்லாத பெண்கள் எல்லா குழந்தைகளை கவனித்து கொள்கின்றனர்.
  • சில இடங்களில் மஸ்ஜிதிற்கு உள்ளே ஒரு தனி அறையில் கட்டணம் ஏதும் இன்றி, நன்மையை நாடி பேபி சிட்டிங் வகுப்புகள் (பிள்ளைகளுக்கு பிடித்த ஏதாவது விளையாட்டுகள், கதை சொல்வது போன்ற விஷயங்கள்) நடத்தப்படுகின்றன.
  • சில நாடுகளில் உள்ள மஸ்ஜிதுகளில் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய பள்ளிகூடங்கள் உண்டு. எனவே அங்கு விளையாட்டுக் கூடங்களும் இருக்கும். ஃபர்ல், வித்ர், ஜும்மா போன்ற சில தொழுகைகளை முடித்தபின் விளையாட அனுப்புகிறேன் என பொற்றோர் ஊக்குவித்து அழைத்து வருவார்கள். பிள்ளைகள் நம் சொல் கேட்டு தொழுதது போலவும் இருக்கும், அவர்கள் ஆசைக்கு விளையாடியது போலவும் இருக்கும்.
  • சிறு குழந்தையுடன் வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்காக எதாவது திண்பண்டங்களை எடுத்து வந்து, மற்ற சின்ன குழந்தைகளுடன் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை விதைக்கின்றனர் (தொழுகை முடிந்து போகும் போது, பண்டங்கள் எதாவது சிந்தி இருந்தால், அந்த தாய்மார்கள் தாமாக அதனை எடுத்து இடத்தை சுத்தம் செய்துவிடுகின்றனர்). இதனால் அவர்கள் ஓரளவு அமைதியாக இருப்பார்கள்.
  • சில இடங்களில் இப்படி எதுவும் ஒதுக்க இயலாமல், எல்லா பெண்களும் தொழும் இடத்தில் ஒன்றாக தொழ வேண்டி இருக்கும். நம் ஊர் மஸ்ஜிதுகள் பெரும்பாலும் இந்த நிலையில் தான் உள்ளது.

இருந்தாலும் சிரமம் பார்க்காமல் ஜமாத்தாக குழந்தையுடன் தொழ வரும் பெண்களை, மற்ற பெண்கள் இன் முகத்துடன் வரவேற்று உதவி செய்கின்றனர். சிலரோ, குழந்தையின் சத்தம், விளையாட்டு, அழுகை, பேச்சு முதலியன தொழுகைக்கு தொந்தரவாக இருப்பதாக எண்ணி சிடுசிடுப்பார்கள். அதே போல ஆண்கள் தொழும் பகுதியிலும் இதே நிலை தான். அங்கும் குழந்தைகள் வரவை இடைஞ்சலாக தான் சிலர் பார்க்கின்றனர்.

சிலர் நேரடியாகவே சொல்லி விடுவார்கள், "குழந்தையை அழைத்துக் கொண்டு ஏன் தொழ வருகின்றீர்கள்?" என்று. மஸ்ஜிதிற்கு வந்து தொழுவது கட்டாயமில்லை தான், அது குழந்தைகளின் தாய்மார்களுகாக மட்டும் சொல்லப்பவில்லை. அனைத்து பெண்களுக்கும் தான் சொல்லப்பட்டது. குழந்தையை காரணமாக வைத்து அவர்களுக்கு மட்டும் இந்த அறிவுரை கூறுவது முறையல்ல.

தொழுகையின் இடையே சிறு குழந்தைகள் அழ நேர்ந்தால், குழந்தையின் தாய் தொழுகையை பாதியில் விட்டுவிட்டு குழந்தையை சமாதானம செய்வதை காணலாம். பிறருடைய தொழுகைக்கு தன்னாலான வகையில் இடைஞ்சல்கள் தராமல் பார்த்துக் கொள்கின்றனர். அதையும் மீறி நிறுத்தாமல் அழும்போது, சூழ்நிலையை புரிந்து அவர்களே வீட்டுக்கு கிளம்பிவிடுவார்கள்.

எல்லாவற்றை விட குழந்தைகள் தொந்தரவு செய்யும் முன்பே, குழந்தையுடன் வருபவர்களை எரிச்சலாக சிலர் பார்ப்பதை காணமுடிகிறது. வீட்டில் தொழும்போது கூட குழந்தைகளின் அழுகை, சத்தம், பேச்சு, விளையாட்டு இல்லாமல் ஒரு அறையில் பூட்டி வைத்த பின் நாம் தொழுவது இல்லையே.  சித்தி, பெரியம்மா, அத்தை, மாமி, பாட்டி போன்றவர்களுக்கும் அந்த சத்தம் தொந்தரவாக தெரிவது இல்லை.

இஸ்லாம் என்பது சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மார்க்கம். மஸ்ஜிதிற்கு வரும் குழந்தைகளை தன் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மகன், மகளின் குழந்தைகளாக பார்த்தால் அவர்களின் சத்தம் சங்கடமாகத் தெரியாது. 

நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை தொழவைத்த போது, சிறு குழந்தையாக இருந்த ஹசன்(ரலி) நபி அவர்கள் சஜ்தா செய்யும்போது மேல் அமர்ந்து கொள்ள, அவர் ஆசை தீர கீழ் இறங்கும் வரை நபி(ஸல்) அவர்களும், அவரை பின் பற்றி தொழுத சஹாபாக்களும் சஜ்தாவிலேயே இருந்தார்கள். ( நஸயீ)

சிறு வயது முதல் குழந்தைகளுக்கு நம் மார்க்கத்தையும், தொழுகையின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் பழக்க வேண்டியது அவசியம். தினமும் தொழும் வழக்கம் உள்ள பெற்றோர் எனில், இரண்டு வயது குழந்தைக்கு கூட தொடர்ந்து அழுது தொல்லை தராமல் அமைதியை கையாள வேண்டுமென்பது பழக்கத்தில் தெரிந்து இருக்கும்.

சில தாய்மார்களுக்கு தொழுகையின் போது குழந்தை அழுதால் சமாதானம் செய்ய முடியாமல் குழந்தைகளின் அழுகையையும் மீறி  தொழுவார்கள். அழும் குழந்தையை தூக்கிக்கொண்டு தொழலாம் என்ற விஷயத்தை அறியாததே இதன் காரணம்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் ஸைனப் அவர்களின் குழந்தை 'உமாமா'வைத் (தோளில்) சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இறக்கி விடுவார்கள். நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள். (புஹாரி 516)

சில குழந்தைகள் கவனத்தை ஈர்ப்பதற்காக அழும், ஆனால் அம்மா தொழ ஆரம்பித்துவிட்டால்  ஸ்விட்ச் போட்டது போல சமர்த்து பிள்ளையாக அழுகையை நிறுத்திவிடும். வீட்டிலேயே பழக்கப்படுத்தினால் மட்டுமே இது போல சாத்தியம்.

குழந்தைகளை ஒதுக்கிவிட்டு தொழுவது நபி வழி இல்லை. பிற்காலத்தில் கட்டாயப்படுத்தி தொழ வைக்க வேண்டி வராமல் இருக்க வேண்டுமென்றால், பிள்ளைகளுக்கு சிறுவராய் இருக்கும் போதே பழக்கப்படுத்த ஆரம்பிக்க வேண்டும். ஒதுக்கியே வைத்தால், திடீரென ஒரு நாள் ஞானோதயம் பிறந்தது போல தொழுகையில் ஈடுபாடு வந்து விடாது.

உண்மையாக தொழவேண்டும் என்ற ஈடுபாட்டோடு குழந்தைகளுடன் வருபவர்களை எரிச்சலாக பார்ப்பது நபி வழி கிடையாது.

நபி(ஸல்), "நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்'. - புஹாரி 707

நபி(ஸல்) அவர்கள், "தொழுகைக்கு இடையூறு விளைவிக்கிறாய், உன்னால் மற்றவர்களும் தொழுகையில் கவனம் செலுத்த முடியவில்லை" என அந்த தாயை கண்டிக்கவில்லை. மாறாக தொழுகையைத்தான் சுறுக்கமாக முடித்துக் கொண்டார்கள்.நாம் தொழும்போது, பிள்ளைகளை அங்கு விடாமல் தள்ளி வைத்தோமானால், அவர்களும் தொழுகையை தள்ளிவைத்து விடுவார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் தான் சஹாபாக்களோடு முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார்கள். புதிதாக வரும் வஹி செய்திகளையும் அறிவிப்பார்கள், தொழுகை நடத்துவார்கள். அதை பார்த்து தான் சஹாபாக்களும் தொழுகையை, வஹி செய்தியை, குர்ஆனை கற்றுக்கொண்டார்கள். அவ்வளவு முக்கிய நிகழ்வுகளுக்கு இடையிலும் குழந்தைகளை ஒதுக்கி வைக்கவில்லை. மாறாக கூடவே வைத்திருந்தார்கள். அவர்களின் வரவை ரசித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தும் போது அவர்களது பேரர் ஹஸன்-ஹுஸைன்(ரழி) ஆகிய இருவரும் சிவப்பு நிற ஆடை அணிந்து தத்தித் தத்தி வந்தனர். உடனே நபி(ஸல்) அவர்கள் மிம்பரை விட்டும் இறங்கி இரு சிறுவர்களையும் சுமந்து மிம்பரில் அமரவைத்தார்கள். ... ... ... பின்னர் ‘நான் இந்த எனது பிள்ளைகளைப் பார்த்தேன். அவர்கள் தத்தித் தத்தி வந்தனர். என்னால் அவர்களைச் சுமந்து இங்கே அமர்த்தும் வரை பேச்சைத் துண்டிக்காது பொறுமையாக இருக்க முடியவில்லை’ எனக் கூறினார்கள். (திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்)

குத்பா உரையை கூட நிறுத்திவிட்டு, பேரக் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தந்து,  தூக்கி வந்து பின்னர் உரையை தொடர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் (மேடை) மீது (உரையாற்றியபடி) இருக்க ஹஸன்(ரலி), நபி(ஸல்) அவர்களின் பக்க வாட்டில் அமர்ந்திருந்தார்கள். (புஹாரி - 3746) 

இப்படி தொழுகை, சொற்பொழிவு போன்ற எல்லா முக்கிய நேரங் களிலும் நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளை ஒதுக்காமல்    நேசிக்கும்போது, நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்??? 

நாம் தொழும்போது, பிள்ளைகளை அங்கு வர விடாமல் தள்ளி வைப்பதால், பின்னாளில் அவர்களும் தொழுகையை தள்ளிவைத்தால், அது யாருடைய குற்றம்?? பெண்களுக்கு கிடைக்கும் ஒரு சில வாய்ப்பையும் குழந்தையை காரணம் சொல்லி தட்டி கழிப்பது அவர்களின் உரிமையை பறிப்பதாகும். அதே போல குழந்தையை கண்டுகொள்ளாமல் விடுவதும் தவறு.

நாம் இதனை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.  அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிக்காட்டுவானாக. ஆமீன்...

உங்கள் சகோதரி,
தாஹிரா பானு
டீக்கடை ஃபேஸ்புக் குழுமம்

1 Responses So Far:

ஆமினா said...

அருமை தாஹிரா!
அழகா சொல்லியிருக்கீங்க....

குழந்தைகள் இருப்பதால் தான் நான் தொழுகைக்கு கூடிட்டு போறதில்லை. எடுத்ததும் வரும் முதல் கேள்வி "ஏன்? உங்கம்மாட்டையே விட்டுட்டு வந்திருக்கலாமே" என்பது தான். கொஞ்சம் லைட்டா சிணுங்க ஆரம்பித்தாலும் உடனே நம்மை நோக்கி எல்லார் பார்வையும் வருகிறதென பயந்து நான் போறதையே நிறுத்திட்டேன்.

அருமையான ஆக்கம். எல்லார் மனதிலும் மாற்றம் வர வேண்டும். பெற்றோர்களும் அடுத்தவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தாத வகையில் நடந்துக்கொள்ள வேண்டும்.

அருமையாக சொன்னீங்க.. சூப்பர்ப்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு