Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இந்தியா உலகின் குப்பைத்தொட்டி ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 12, 2012 | , , ,

இந்தியாவின் வலிமையினை உலகுக்கு பறைசாற்றும் தொழிநுட்ப புரட்சியின் வித்தாய் திகழ்வது மின்னணுவியல். தகவல்-தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, மருத்துவம் என இதன் எல்லையில்லா பங்களிப்பு தொடர்வது கொண்டிருக்கும் வேளையில் நம்நாடு மட்டுமன்றி மேலைநாடுகளில் பயன்படுத்தப்பட்டு உபயோகமற்ற எலக்ட்ரானிக் கழிவுகளுக்கு புதைகுழியாய் நம்நாட்டின் நகரங்கள் மாறிவருகிறது. 

மின்னல் வேகத்தில் வளரும் இந்திய பொருளாதரத்தில், ஒவ்வொரு ஆண்டும் 5 ,00 ,000 டன் எடை கொண்ட மின்னணு குப்பைகளும் சேர்ந்தே வளர்கின்றது. இது 2012 ல் ஒரு மில்லியன் டன் அளவுக்கு வளரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நம்நாட்டில் பயன்படுத்தப்பட்டு இன்று உபயோகமற்ற நிலையில் இருக்கும் கம்ப்யூடர் பாகங்களும், செல்போன்களும், மருத்துவ உபகரணங்களும் என ஒரு புறம் இருந்தாலும், 1992 ம் ஆண்டு உலக  வல்லரசுகளை சமாதானம் செய்வதற்காக தற்கொலைக்கு சமமான 'காட்' ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அதன் உட்கூறாய் நம் மீது திணிக்கப்பட்ட 'ஓபன் ஜெனரல் ரைட்ஸ்' எனும் விதிதியின் கீழ், மேலை நாடுகளில் சேரும் கழிவுகள் 'கொடை' என்ற பெயரிலும், மறுசுழற்சி என்ற போர்வையிலும் நம் மீது திணிக்கப்படுகிறது. 

நம்நாட்டைப் பொறுத்தவரை இருபது ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூடர் என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அந்த சமயத்தில் கம்ப்யூட்டரும் அதன் உதிரி பாகங்களும் மற்ற எலக்ட்ரானிக் பொருட்களும் அந்த முறையில் நம்நாட்டிற்கு தருவிக்கப்பட்டது. ஆனால் அந்த சட்டம் இன்று வளர்ந்த  நாடுகளின் குப்பைகளை கொண்டு வந்து இந்தியாவில் கொட்டும் அரசாங்க ஆணையாக செயல்படுகிறது.

கடந்த 2006  ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் மேலைநாடுகளிலிருந்து தானமாக(!) வழங்கப்பட்ட கழிவுப் பொருட்கள் 190 மடங்கு அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் அலறுகிறது.

இந்தியாவிற்கான ஒட்டுமொத்த இறக்குமதியில் 48 % மேலை நாடுகளின் குப்பை கழிவுகள்.

பேரழிவுகளைத் தரக்கூடிய கழிவுகளை இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதற்கு ஆட்சேபம் தேவிக்கும் சட்டம், உரிமை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்தாலும் மேற்சொன்ன 'ஓபன் ஜெனெரல் ரைட்ஸ்' என்ற விதி எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லாக் கழிவுகளையுமே இந்தியாவில் இறக்குமதி செய்ய நங்க்கூரமிடுத்கிறது.

ஆபத்தின் ஆழமறியா நம்மூர் அப்பாவி குடிசைவாசிகள் அதுபோன்ற குப்பைகளை தரம் பிரித்து காசு பார்க்க அலைமோதுகின்றனர், குடிசைத் தொழிலதிபர் ஆவதற்காக.

மேற்கு தில்லியின் மாயாபுரி பகுதியில் தீபக் ஜெயின் என்ற பழைய இரும்புக்கழிவு வியாபாரி உட்பட ஆறு தொழிலாளர்கள் மயங்கி சரிந்து விழுந்து உயிருக்கு போராடத் துவங்கியவுடன் அள்ளிக் கொண்டுபோய் அப்போல்லா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் இருவருக்கு கை, கால் மற்றும் உடல்பகுதியில்  உள்ள முடிகள் உதிரத் தொடங்கி, மெழுகுபோல் அவர்கள் கை, கால்கள் உருகத்தொடங்கியதைக் கண்ட மருத்துவக்குழு செய்வதறியாது திகைத்து நின்றது. நோயாளிகளின் பின்புலங்களை ஆராய்ந்தபோது, அவர்களுடைய  இருப்பிடம்,குடோன் ஆகியவற்றை பரிசோதிக்குமாறு அகில இந்திய மருத்துவக்கழகம் பணித்தது. மாநகராட்சி, மாநகர காவல்துறை, அணுசக்தி ஒழுங்குமுறைக்கழகம் என பலரும் களத்தில் இறங்கினர். 

ஆய்வின் முடிவில் "முறுக்கேற்றப்பட்ட இரும்புக்கம்பி பின்னல்கள்" என்ற பெயரில் எட்டு மூட்டைகளை பாதிக்கப்பட்ட ஜெயின் குடோனிலிருந்து கைப்பற்றியது அணுசக்தி ஒழுங்குமுறைக்கழகம்.பரிசோதனைக்கு  பிறகு பகீர் தகவலையும் வெளியிட்டது. காமாக் கதிர்களை வெளியிடும் கோபால்ட் - 60 என்ற உயிர்க்கொல்லும் கதிரியக்கப் பொருள்தான் இந்த மோசமான விளைவுக்குக் காரணம் என்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்திவிட்டு தன் கையைக் கழுவிக்கொன்டது அணுசக்தி ஒழுங்குமுறைக் கழகம். ஆனால் "இது பாதுகாப்பனதோ அல்லது பாதுகாப்பற்றதோ என்பதைப் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை" என்கிறார்கள் கம்ப்யூடர் கேபிள்களை உருக்கி அதிலிருந்து தாமிரக் கம்பியினைப்  பெறும் வேலையினைச் செய்யும் பெண் தொழிலாளர்கள். 

தாமிரம் பெறுவதற்காக நச்சுப்புகையில் கருகும் இவர்களை கேன்சர் நோய் மட்டுமல்லாது குழந்தைப் பேறின்மை, சிறுநீரகங்கள் செயலிழப்பு, நரம்புகளின் செயலிழப்பு போன்ற பெருநோய்களும் தாக்கலாம். தாமிரம் எடுத்துக்கொண்டபின் எஞ்சியுள்ள பாதரசக் கலவை மற்றும் ஈயம் போன்றவற்றினை ஆறுகளிலும், விளைநிலங்களிலும் வீசி விடுகின்றனர் உணவு தானியங்கள் மூலம் மற்றவர்களுக்கும் அப்பெரும் வியாதிகள் பரவும் என்பதினை அறியா அப்பாவிகள்.

கிராமப்புறத்தில் வாழ்பவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெறும் சவாலாய் நிற்கும் இப்பிரச்சனைக்கு சட்ட வல்லுனர்கள் முன்னின்று இந்தியப் பெருநாட்டின் மக்களின் வாழ்வில் நஞ்சைக் கலக்கும் இந்த அதிநவீன தொழில்நுட்ப குப்பைகளை முறையாக, சுற்றுச்சூழலுக்கும், மனித மற்றும் மற்ற உயிரினங்களுக்கும், விவசாயப் பெருந்தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அழித்திட வகைசெய்யும் ஆலைகளை அமைத்தல் வேண்டும். மேலை நாடுகளிலிருந்து 'கொடை' அல்லது 'மறுஉபயோகம்' எனும் பெயரில் நம் மீது குப்பை கொட்டுவதை தடைசெய்யப்பட வேண்டும். கோபால்ட்-60  விவகாரம் மக்களவையில் விவாதிக்கப்பட்டு விவாதப்பொருளாகவே அறியப்பட்டது போலில்லாமல், மக்களின் வாழ்க்கையையும், உயிர் உடைமைகளையும், உலக வெப்பமயமாதல் என்ற நெருங்கிவரும் அச்சுறுத்தலையும் கவனத்தில் கொண்டு புதிய சட்டங்கள் வகுப்பதன் மூலமே இப்பேராபத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளமுடியும். 

புதுசுரபி

7 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

//தற்கொலைக்கு சமமான 'காட்' ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அதன் உட்கூறாய் நம் மீது திணிக்கப்பட்ட 'ஓபன் ஜெனரல் ரைட்ஸ்' எனும் விதிதியின் கீழ், மேலை நாடுகளில் சேரும் கழிவுகள் 'கொடை' என்ற பெயரிலும், மறுசுழற்சி என்ற போர்வையிலும் நம் மீது திணிக்கப்படுகிறது. //

//மக்களின் வாழ்க்கையையும், உயிர் உடைமைகளையும், உலக வெப்பமயமாதல் என்ற நெருங்கிவரும் அச்சுறுத்தலையும் கவனத்தில் கொண்டு புதிய சட்டங்கள் வகுப்பதன் மூலமே இப்பேராபத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளமுடியும். //

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்“புதுசுரபி”ரஃபீக், ரமழான் கறீம்
நீண்ட நாட்கட்குப் பின்னர் இத்தளத்தில் கண்டாலும் மிக மிக அவசியமான- அவசரமான விடயத்தை ஆழமாகவும் ஆதாரங்களுடனும் அலசியிருக்கின்றீர்கள்; ஜஸாக்கல்லாஹ் கைரன்.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்“புதுசுரபி”ரஃபீக், ரமழான் கறீம்
நீண்ட நாட்கட்குப் பின்னர் இத்தளத்தில் கண்டாலும் மிக மிக அவசியமான- அவசரமான விடயத்தை ஆழமாகவும் ஆதாரங்களுடனும் அலசியிருக்கின்றீர்கள்; ஜஸாக்கல்லாஹ் கைரன்.

Ebrahim Ansari said...

இன்று இந்தியா எதிர் நோக்கியுள்ள ஒரு அடிப்படையான பிரச்னையை அலசி இருக்கிறார் கட்டுரையாளர்.

பிரச்னை வரும்வரை நாம் அதை பிரச்னையாக கருதாதுதான் நமது பிரச்னை.

சுற்று சூழல் பாதுகாப்பு என்பது சிறிதும் பேணப்படாமல் இருப்பதற்கு நாம் பெரும் விலை - பல உயிர்கள் மூலம் கொடுத்தே ஆகவேண்டும்.

இதே போல் ஒரு கருத்தினை கடந்த பிப்ரவரி மாதம் இதே தளத்தில் பொருளாதார வளர்ச்சி! சுற்று சூழல் தளர்ச்சி! என்ற தலைப்பில் எனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

கடந்த 1976 ஆம் ஆண்டு அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு ஒரு பெருமகனாருடன் சிகிச்சைக்காக சென்று இருக்கிறேன். அவர் மறைந்துவிட்டார்.அப்போது ஒரு பத்து பதினைந்து பேர் அங்கு சிகிச்சைக்காக வந்து இருந்தார்கள்.

தற்போது கடந்த ஏப்ரலில் மீண்டு ஒருமுறை அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு உறவினரை காண சென்று இருந்தபோது ஆச்சரியம் - அந்த மருத்துவமனை மிக பிரம்மாண்டமாக வளர்ந்து பல பிளாக்குகள் - பிரிவுகள்- வார்டுகள்- எங்கு பார்த்தாலும் நோயாளிகள்- விதவிதமான புற்று நோய்கள என்று வகைப்படுத்தப்பட்டு இருந்தன. இது ஒரு வளர்ச்சியாக எனக்குத் தெரியவில்லை. சுகாதார சீர்கேடு- சுற்றுப்புற சூழல் பேணாமை காரணமாக வளர்ந்துவரும் வகை வகையான வியாதிகளின் வளர்ச்சியாகவே தெரிந்தது.

அதிரையில் கூட கையில் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பைகளுக்குத்தான் தடை. ஏற்கனவே தரையில் கிடக்கும் பழைய பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படவில்லை. உதாரணம் : இ சி ஆர் ரோடு முனையில் இருந்து ஜாவியா ரோட்டின் இருபுறமும் ஹாஸ்டலை ஒட்டியும் கண்கொண்டு பாருங்கள். அவை அகற்றப்பட வேண்டாமா?

புதிய கழிவுகளை உண்டாக்க தடை- வரவேற்கிறேன்.
பழைய கழிவுகளை அப்படியே விட்டுவிட வேண்டுமா? பலகோடி ரூபாய்களை மருத்துவத்துறை யின் வளர்ச்சிக்கு ஒதுக்குவதை விட சில கோடிகளை ஊரை சுத்தமாக வைப்பதற்கு ஒதுக்கினாலே நிறைய மருத்துவ செலவுகள் குறைந்துவிடும்.

என்றோ ஒழிக்கப்பட்ட காலரா இப்போது பரவத்தொடங்கி இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இப்போது விழிக்காவிட்டால் நிரந்தரத் தூக்கம் தான்.

புது சுரபி அவர்கள் அடித்துள்ள எச்சரிக்க மணி அவசியமானதும் அவசரமானதுமாகும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நாம் எல்லாம் வெளினாட்டில் உழைப்பிற்காய் குப்பைகொட்டிகொண்டிருக்க அவய்ங்க பலிவாங்கதான் நம் நாட்டில் குப்பை கொட்டுராய்ங்களான்னு தெரியல! அதிகாரிங்க அரசியல் வியாதிங்கல கேட்டா சப்பைகட்டுவாய்ங்க!வெளினாட்டு காரனின் பணத்துக்கு சப்புகொட்டுவாய்ங்க! எல்லாம் தலைவிதி! குப்பைக்கு குட்பை சொல்றதுல நாம் விழிப்பாஇருக்கனும்.அவசியமான எச்சரிக்கை.

அப்துல்மாலிக் said...

முற்றிலும் புதிய தகவல்கள், விழிப்புணர்வுக்கு நன்றி சகோ...

Yasir said...

சமீபத்தில் நான் நைஜிரியாவில் இருந்தபோத..என் கஸ்டமரிடம் விவாதித்து கொண்டிருந்த டாப்பிக் இது....ஆப்பிரிக்கா,ஆசியா கண்டங்களை மே(கொ)லை நாடுகள் அவர்களின் எலக்ரானிக் கழிவுகளின் டம்பிங் கிரவுண்டாகதான் பார்க்கின்றன....சகோதரர் அதனை விலாவாரிக எடுத்துரைத்து இருக்கின்றார்கள்....மக்களின் மனநிலையும் மாறவேண்டும் எதற்க்கு எடுத்தாலும் விலைமலிவான பொருள்வேண்டும் என்றால் இப்படித்தான் செய்யமுடியும்

sabeer.abushahruk said...

சிறப்பான பதிவு. நன்றி புதுசுரபி அவர்களே.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு