Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மெளலவி அஹமதுல்லா ஷாவின் தலைக்கு விலை ! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | January 25, 2014 | , ,

தொடர் - 15
மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும்  பொது அறிவிப்பு என்ன வென்றால், இந்த ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சிகளைத் தூண்டிவிடும் “மெளலவி” என்று அழைக்கப்படும் மெளலவி அஹமதுல்லா ஷா வை உயிருடன் பிடித்து அருகில் உள்ள பிரிட்டிஷ் இராணுவ நிலையத்திலோ முகாமிலோ ஒப்படைப்பவர்களுக்கு ரூபாய் 50,000/= பரிசாக வழங்கப்படும். அத்துடன் அவ்விதம் பிடித்துத் தருபவர்கள் இந்த அரசு இம்மாதம் முதல்தேதி வெளியிட்ட  பொது அறிவிப்பு எண் 476 – ல் கண்டுள்ள குற்றங்களை இழைக்காதவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பொது மன்னிப்பும் வழங்கப்படும் “

The Imperial proclamation reads: "It is hereby notified that a reward of Rs.50,000 will be paid to any person who shall deliver alive, at any British Military post or camp, the rebel Moulvee Ahmed  Shah, commonly called "the Moulvee". It is further notified that, in addition to this reward, a free pardon will be given to any mutineer or deserter, or to any rebel, other than those named in the Government Proclamation No. 476 of the lst instant, who may so deliver up the said Moulvee"

என்று ஒரு அறிவிப்பு நாடெங்கும் அறிவிக்கப்பட்டது. இப்படி தலைக்கு விலை வைக்கப்பட்ட மெளலவி யார் ? இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரது தியாக வரலாற்றின் சோகம் சொட்டும் கதை என்ன? இது ஒரு சூடான ரத்தம் சொட்டிய கதை! ஒரு மாவீரனுக்கு ஏற்பட்ட வதை!

மெளலவி அஹமதுல்லா ஷா!

அவருடைய தந்தை உத்தரப்பிரதேசத்தின் பைசாபாத் (பாபர் மசூதி இருக்கும் அயோத்தியின் அருகில் உள்ளது)  நகரில் இருந்து வணிக நிமித்தமாக சென்னையில் குடி இருந்த போது வீரமிக்க இந்த மெளலவி அவர்களை பிறத்தாட்டும்  பெருமையை  அன்றைய மதராஸ் பட்டணம் (சென்னை) பெற்றுக் கொண்டது. இப்படி சென்னையில் பிறந்து உத்தரப் பிரதேசத்தில் வளர்ந்தவர். மேலே காட்டப்பட்டுள்ள பொது அறிவிப்பே,   மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்கள் எந்த அளவுக்கு அந்நிய ஆதிக்க சக்தியை எதிர்த்து அவர்களின் பூனைக் கண்களில் தனது விரலை விட்டு ஆட்டிப் போராடி இருப்பார்   என்பதை நமக்குப் புரியவைக்கும்.  எந்த அளவுக்கென்றால் இந்து மகா சபையின் நிறுவனர் போன்ற பிற  மதத்தவரும் கூட  புகழ்ந்து தள்ளும் வண்ணம் மெளலவி அவர்களின் தியாக வரலாறு நிமிர்ந்து நின்றது.

” His actions and deeds, before and during the revolt, extracted praise even from Vinayak Damodar Savarkar. "The life of this brave Mohammadan shows that a rational faith in the doctrines of Islam is in no way inconsistent with or antagonistic to, a deep and all-powerful love of the Indian soil," wrote Savarkar. இதோ விநாயக் தாமோதர சவர்க்காரே  கூறுகிறார் “ இந்த முஸ்லிமின் வாழ்க்கை  எடுத்துக் கூறுவது என்னவென்றால் ஒரு வீரம் செறிந்த – இந்த மண்ணின் மேல மாறாத அன்பு கொண்டவராக போராட,   இவர் பிறந்து வளர்ந்த கட்டுப்பாடுகள் நிறைந்த  இஸ்லாமிய மதம் என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. “ என்று கூறுகிறார்.

இந்தத் தொடரில் ஏற்கனவே பேகம் ஹஜரத் மஹால் அவர்களைப் பற்றி கண்டு இருக்கிறோம். பேகம் ஹஜரத் மஹால் நேபாளத்துக்கு தப்பிச் சென்ற பின்னர்  அவரது சாம்ராஜ்ஜியமான  அவாத் ஆங்கில ராஜ்ஜியங்களுடன் இணைக்கப்பட்டது. அவ்வாறு இணைக்கப் பட்டவற்றுள், பைசாபாத் அருகில் ஒரு தாலுகாவை ஆண்ட மெளலவி அஹமதுல்லாஹ் ஷாவின் தாலுகாவும் ஒன்று. இப்படி தனது தாய் மண்ணை அந்நியர்கள் ஆக்கிரமிப்பதை எதிர்த்து அன்று தொடங்கிய  மெளலவி அஹமதுல்லாஹ் ஷாவின் போராட்டம், 1858 ஆம் ஆண்டு, ஜூன் மாதம்  5 ஆம் தேதி நம்பவைத்துக் கழுத்தறுக்கப்பட்டு அவரது தலை துண்டிக்கபட்ட தினம் வரைத் தொடர்ந்தது.

மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களைப் போலவே ஆட்சி பறிக்கப்பட்ட பலர்  ஆமாம் சாமி போட்டுக் கொண்டு ஆங்கிலேயர் விரட்டிய ஆட்டுமந்தைகளாக மாறிப்போன நேரத்தில் தன்னை ஆட்சி இழக்கச் செய்த ஆங்கிலேயரைப் பற்றி நாடெங்கும் சுற்றி இரகசியப் பிரச்சாரம் செய்தார். இதுவே அவரது வாழ்வின் குறிக்கோளாகத் திகழ்ந்தது. ஒரு பக்கீர் போல வேஷமிட்டுக்கொண்டு ஆக்ரா, டில்லி, மீரட், பாட்னா, கல்கத்தா  உள்ளிட்ட  பல பெரு நகரங்களுக்குச் சென்று புரட்சிக்காக மறைமுகப் பிரச்சாரம் செய்தார். இதற்காக இவர் கையாண்ட யுக்தி “சப்பாத்தித்  திட்டம்” என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் மக்களை மனத்தளவில் தயாராக்க, ஆர்ப்பாட்டமின்றி  அமைதியாக தனித்தனியே மக்களை சந்திக்கும் திட்டத்துக்கு கை கொடுத்தது சப்பாத்தித் திட்டம்.  ஒரு கையை விட்டு மறுகைக்கு சப்பாத்தி கை மாறும்போது கூடவே புரட்சிக்கான தகவலும் பரிமாறப்படும். புரட்சியின் அவசியத்தை வலியுறுத்திய துண்டுப் பிரசுரங்களும் பரிமாறப்படும்.  வட இந்திய மக்களிடம்  எதிர்பாராத அளவில் எழுச்சியை ஏற்படுத்தியது இத்திட்டம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். "Wherever this political saint went there was seen an extraordinary awakening among the people… He was loved by the masses in Oudh" என்று குறிப்பிடப்படுகிறது.

மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்கள் எந்த அளவு உணர்வுமிக்க வீரராக இருந்தாரோ அந்த அளவு உணர்ச்சிகள கொப்பளித்து கிளம்பும் அளவுக்கு எழுத்தும் திறமையும் பெற்றிருந்தார் என்பது சிறப்பு. அவரது பேனா முனையில் இருந்து தெறித்து விழுந்த தேசவுணர்வினைத் தூண்டும் வார்த்தைகளும் வாதங்களும் அந்நிய சக்திகளுக்கெதிராக மக்களை ஜாதி மத வித்தியாசமின்றி ஒன்றிணைத்தன. மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் இந்த நடவடிக்கை ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளருக்கு தாங்க முடியாத தலைவலியாக மாறியது. கண்ட இடத்தில் கைது செய்யும்படி உத்தரவிடப் பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மேல் ஒரு கண்துடைப்பு வழக்கு  விசாரணை நடத்தப் பட்டு பைசாபாத் சிறையில் அடைத்துப் பின் அவரை தூக்கிலிடவும்  உத்தரவிடப் பட்டது. ஆனால் அரசு அன்று கொல்லும் இறைவன் நின்று கொல்வான் என்பதற்கு ஏற்ப மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் ஆயுள் இன்னும் இந்த உலகில் இருப்பதற்கு விதித்திருந்த இறைவன் சிப்பாய் கலகத்தின் மூலம் அந்த சிறப்பை நல்கினான்.

சிப்பாய் கலகத்தின் ஒரு அங்கமாக சிறைகள் உடைபட்டன. மன்னர் பகதூர்ஷா மற்றும் பேகம் ஹஜரத் மஹால் ஆகியோர் முன்னின்று நடத்திய சிப்பாய் கலகத்தின் சிறை உடைப்புகளுக்கு மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்கள் அடைபட்டு இருந்த பைசாபாத் சிறையும் தப்பவில்லை. சிறையில் இறந்து பறந்து சென்ற சிறைப் பறவை பேகம் ஹஜரத் மஹால் இடம் அடைக்கலமானது. பேகத்தின் படைப் பிரிவுக்கு மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்கள் தலைமை தாங்கி ஆங்கிலப் படைகளை சிதற அடித்தார்.

லக்னோவில் சர் ஜேம்ஸ் அவுட்ராம் உடைய தளங்களின் மீது கடும் தாக்குதல்களைத் தொடுத்தார். ஆலம்பாக்கில் உள்ள பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு கான்பூரில் இருந்து ஆயுதங்கள் கொண்டு செல்வதை மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அறிந்துகொண்டார். அந்த ஆயதங்களை எப்படியும் தடுத்து நிறுத்திக் கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன் 1858 ஆம் ஆண்டு ஜனவரி,  15 ஆம் நாள் கான்பூரை  நோக்கித் தனது படையை நடத்தினார்.  ஆங்கில மேஜரின் படை உத்வேகத்துடன் வந்த மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் படையால் தடுக்கப் பட்டது. இரு தரப்புக்கும் போர் மூண்டது. அந்தப் போரில் மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் கையில் தோட்டா பாய்ந்து காயம் அடைந்தார்.

காயம் அடைந்தாலும் ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப் பட்டவர் என்பதால்  துரோகிகளின் கைகளில் சிக்கிவிடாமல் பாதுகாப்பாக ஒரு வண்டியில் வைத்து அவரது விசுவாசமிக்க வீரர்களால் லக்னோவுக்குக் கொண்டு வரப்பட்டார். கையில் காயம் பட்டாலும் சிங்கத்தால் கூண்டுக்குள் உறங்க இயலவில்லை. பிப்ரவரி 15 அன்று மீண்டும் போர்முனைக்கு வந்துவிட்டார். கான்பூரில் இருந்த மேஜர் அவுட்ராம் உடைய படைகள் இருந்த பகுதிக்கு ஆங்கிலப் படைத்தளபதி கோலின் வர இருப்பதாக ஒரு தகவல் அவருக்குக் கிடைத்தது. கோலின் வந்து சேரும் முன்பு அவுட்ராமை ஒழித்துவிடவேண்டுமென்று ஒற்றைத் திட்டத்துடன் தன் தாக்குதலைத் தொடர்ந்தார். ஆனால் மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களை அங்கு வைத்து கைது  செய்ய ஆங்கிலேயருக்கு  ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அதிலிருந்தும் போக்குக் காட்டிவிட்டு ,  பாரி  என்ற இடத்துக்கு யாருமறியாவண்ணம்  தப்பினார்.

இப்படி கூட்டில்  இருந்த இந்தக் குருவி கொய்யாக்குப் போனது - கொய்யாக்கு வரலே வேற எங்கே போனது என்று ஆங்கிலேயர்கள் தலையை உடைத்துக் கொண்டார்கள்.  அந்தக் குருவி ஆலமரம் போனதா - அல்லது அரசமரம் போனதா என்று குழம்பிக் கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்து, மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் மாறுபட்ட  திட்டங்களும்  அவர் தலைமையில் படைகள் தாக்கும் போர் யுக்திகளும்  ஆங்கிலேயரை அலற வைத்தன. அவர்களது படைத்திட்டத்தில் பல சிக்கல்களையும் எப்படி எதிர்கொண்டு மேற்செல்வது என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியதால் பரங்கியர்கள் தங்களின் தலைகளைப் பிய்த்துக் கொண்டார்கள். இதனால்தான்  ஆங்கில வரலாற்றாசிரியர் ஹோம்ஸ் இவரைப் புகழ்ந்து குறிப்பிடும்போது “மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அளவிடமுடியாத சாமர்த்தியமும் உத்வேகமும் அமையப் பெற்றவராக  இருக்கிறார். ஓர் உயர்ந்த இலட்சியத்துக்காக போராடும் ஆற்றல் படைத்தவர் என்பதை நிருபிக்கும் இவர் ஒரு பெரும் இராணுவத்தையே வழிநடத்தும் வல்லமை பெற்றவர்” என்று குறிப்பிடுகிறார். நாம் இந்தத் தொடரின் தொடக்கத்தில்  குறிப்பிட்ட பொது அறிவிப்பு இந்தக் காலகட்டத்தில்தான் ஆங்கிலேயரால் அறிவிப்புச் செய்யப்பட்டது. எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் இந்த சுதந்திர வேட்கை கொண்ட புலி ஆங்கிலேயரின் எந்தப் பொறியிலும் சிக்காமல் அவர்களுக்கு உறங்காத இரவுகளை பரிசாக அளித்தது.

அயோத்தி பகுதியில் பாவன் என்ற சிற்றரசு இருந்தது, இதை ஆண்டு கொண்டிருந்தவர் ஜகன்னாத சிங்  என்பவராவார். இந்த மன்னர் ஜகன்னாத சிங் மெளலானா அவர்களுக்கு தனது அரண்மனைக்கு விருந்தினராக வரும்படி இரகசிய அழைப்புகள் அனுப்பிக் கொண்டு இருந்தார். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பாவன் அரசரின் ஆதரவு தனக்கு இருந்தால் நல்லது என்ற நல்ல எண்ணத்தோடும் நன்னம்பிக்கையோடும் ஒரு போர் யானையின் மீதேறி மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்கள் அவரை நோக்கிச்  சென்றார்கள். ஆனால் அந்த அழைப்பின் பின்னணியில் சூழ்ச்சிவலை விரிக்கப் பட்டிருந்த விபரத்தை மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அறியவில்லை. மெளலானா பயணம் செய்த யானை பாவண் நாட்டு அரண்மனையின் கோட்டைக்குள் நுழைந்தது.

யானையின் மீது வந்த மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களைப் பார்த்ததும் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. கோட்டைச் சுவர்களின் மீது காவலர்கள் புடை சூழ மன்னர்  ஜகன்னாத சிங் நின்று கொண்டிருந்தார். மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களுக்கு ஏதோ ஒரு சந்தேகப் பொறி தட்டியது. சதிவலையில் அகப்பட்டுக் கொண்டோமோ என்று எண்ணி அதை உணர்ந்து உடனே தப்பிக்க வேண்டுமென்று தனது  யானைப் பாகனை உடனே உஷார்ப்படுத்தி மூடப்பட்ட கோட்டையின் கதவுகளை யானையின் தலையைக் கொண்டு மோதித் திறக்க முயற்சி செய்தார். ஆனால் இறைவனின் கட்டளை வேறுவிதமாக இருந்தது. முயற்சி முழுமை அடையும் முன்பு,   ராஜாவின் தம்பி பலதேவ் சிங் உடைய கரங்களில் இருந்த துப்பாக்கியில் இருந்து பறந்து வந்த குண்டுகள்  மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் வீர உடலை சல்லடையாக்கியது.  குண்டுகளை மார்பில் தாங்கிக் கொண்டே  லாயிலாஹா  இல்லல்லாஹ் என்று முழங்கிய வண்ணம் மண்ணில் வீழ்ந்தார் மெளலவி அஹமதுல்லாஹ் ஷா.

ஆங்கிலேயர் அறிவித்து இருந்த ஐம்பதினாயிரம் ரூபாய்க்காக ஆசைப்பட்ட ஒரு அரக்கக் கூட்டம் அந்நிய ஆக்கிரமிப்பாளருடன் கை கோர்த்து ஒரு வீரமகனை ஆசை காட்டி மோசம்  செய்து சுட்டு வீழ்த்தியது.  அது மட்டுமல்ல, வீழ்ந்து கிடந்த வீரமரணம் அடைந்த மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் தலையை மட்டும் தனியாக வெட்டி தங்களின் கைகளில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து 13  மைல் தூரத்தில் முகாமிட்டு இருந்த ஆங்கிலேய அரக்கர்களிடம் ஓடினர் இந்த ஓநாய்கள்.

தாங்கள் வலைவீசித் தேடிக் கொண்டிருந்தவரின் தலை,  தங்களின் கரங்களில் தரப் பட்டபோது ஆங்கிலேயர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கொடுமையிலும் கொடுமையாக அந்த வீரமகனின் தலையை ஒரு கம்பில் குத்தி, ஒரு காவல் நிலையத்தின் வாசலில் நாலு பேர் கூடி நின்று  பார்க்கும்படி நட்டு வைத்தனர். இதன்மூலம், இத்தனை நாள் தாங்கள் பட்ட அவமானத்துக்கு ஆறுதல் தேடிக் கொண்டனர். இந்தப் பாவிகளின் கொடூரம் இத்துடன் நிற்கவில்லை. மார்க்கம் படித்த  மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் எஞ்சிய உடலை துண்டு  துண்டாக வெட்டி, தீயில் இட்டுப் பொசுக்கினார்கள்.  

தான் பிறந்த நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி தனது தலையை இழந்த ஒரு மார்க்க மேதையின் உடல் அடக்கம் கூட அவர் கடைப் பிடித்த மார்க்கத்தின் நெறிமுறைப் படி  நடத்தக் கூட  முடியாத அளவுக்கு கொடுமை  கோபுரத்தின் உச்சியில் ஏறிக் கொண்டு கோலோச்சியது. அல்லாஹ் அந்தப் பாவிகளுக்கு உரிய தண்டனையை வழங்கப் போதுமானவன். ஆனாலும் எஞ்சி இருந்த தலை மட்டும் அஹமத்பூர் ஜகான் ஆசாத் மஹல்லாவில்  நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைப் போல தலை மட்டுமே அடக்கம் செய்யப் படும் நிலைக்குத் தள்ளப் பட்டவர்கள் வரலாற்றில் வேறு யாரும் உலகின் எந்த மூலையிலும் இருந்தது உண்டா?

ஆங்கிலேயர் அறிவித்தபடியும் தங்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டதையும் பாராட்டி ராஜா ஜகன்னாத சிங் என்கிற காட்டிக் கொடுத்த கருப்பு ஆட்டுக்கு  ஆங்கில அரசு 50,000/= ரூபாய் வெகுமதியை விழா எடுத்துக் கொண்டாடி கொடுத்தது. ஒரு தனி மனிதனுடைய தலைக்கு இதுவரை இவ்வளவு பெரும் தொகை அன்றைய காலகட்டத்தில்,  விலையாகக் கொடுக்கப் படவில்லை என்று வரலாறு வருத்தத்துடன் குறித்து வைத்து இருக்கிறது.

மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் கொடுமையான கொலையை விவரிக்கின்ற அதே ஆங்கிலப் படைத் தளபதிகளுள் ஒருவராகிய மனசாட்சி படைத்த  மலிசன் (George Bruce Malleson (8 May 1825 – 1 March 1898) was an English officer in India and an author) அவர்கள் இதைக் குறிப்பிடும்போது, “ஒரு உறுதியான  நாட்டுப் பற்றுடைய வீரன் தனது நாட்டில் அத்துமீறி புகுந்து அடக்கியாளும் அந்நிய சக்திகளை எதிர்த்து திட்டம் தீட்டி போரிட்ட காரணத்தால் துரோகிகளின் கரங்களால் சதி செய்யபப்ட்டு கொல்லப் படுவானாகில் அப்படிக் கொல்லப் படுபவன்தான் உண்மையான நாட்டுப் பற்றுடையவன். அப்படித்தான் மெளலவி அஹமதுல்லாஹ் ஷா கொல்லப்பட்டார் “ என்று பொருள்பட  விவரித்து வியந்து புகழ்மொழிகளைப் பொழிகிறார்.

"Thus died the Moulvee Ahmed Oolah Shah of Faizabad. If a patriot is a man who plots and fights for the independence, wrongfully destroyed, for his native country, then most certainly, the Moulvee was a true patriot," wrote Malleson.

He had not stained his sword by assassination; he had connived at no murders; he had fought manfully, honourably, and stubbornly in the field against the strangers who had seized his country; and his memory is entitled to the respects of the brave and true hearted of all the nations.

மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் மறுமை வாழ்வை எல்லாம் வல்ல இறைவன் வளப்படுத்தி வழங்குவானாக!
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
------------------------------------------------------------------------------------
எழுத உதவியவை : தியாகத்தின் நிறம் பச்சை- பேராசிரியர் மு. அப்துல் சமது . 
எரிமலை- வி. டி. சவர்க்கர்
History of the Indian Mutiny  -1857- 80.  George Bruce Malleson.
------------------------------------------------------------------------------------
இபுராஹீம் அன்சாரி

17 Responses So Far:

sabeer.abushahruk said...

என்னினம் என்பதால்
தலைக்கு விலை
தறுதலை அடிவருடிகளுக்கோ
நிலையாகச் சிலை

சுதந்திரமாய்ப் போராடியோர்
தலை கொய்யப்பட்டனர்
தந்திரமாய் ஜீவித்தோர்
விலை போய் விட்டனர்

தன்னலம் பாராது
தன்னில விடுதலை வேண்டியோர்
இன்னல்கள் அடைந்தனர்
சுயநலக் கிருமிகளுக்கோ
சுக சீவிதம் தந்தனர் வெள்ளையர்

அடிமைத் தளையில்
அகப்பட்டுக்கொண்டிருந்தோர்
அதையே சுகிக்க
விடுதலை வேட்கையினர் மட்டும்
தம்தலை இழந்தனர்

மதச்சாயம் கொண்டு
மேற்பூச்சுப் பூசி
மறைத்ததோ
முஸ்லிம்களின் இரத்தத்தின்
சிவப்புச் சாயத்தை!

Ebrahim Ansari said...

//மதச்சாயம் கொண்டு
மேற்பூச்சுப் பூசி
மறைத்ததோ
முஸ்லிம்களின் இரத்தத்தின்
சிவப்புச் சாயத்தை!//
================================================================
அன்பின் ஆஸ்தானக் கவி அவர்களே!

துடித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளை
வடித்துத் தந்துள்ள உங்களின் வரிகளின் தாக்கத்தால்
என்றுதான்
வெடித்துக் கிளம்புமோ எம்மவர் உணர்வு?
அரசியல் சட்டப்படி அனைவரும் சமம.
அதிகார மையங்களிலோ அரைவாசி சவம்

ZAKIR HUSSAIN said...

முதலில் இதை "இன்னொரு தொடர்' என்று சாதாரணமாக யாரும் படித்துவிட்டு வழக்கம்போல் கரண்ட்கட், தெருப்புகழ்ச்சி, இயக்கவிஸ்வாசம், எந்த கப்ரில் காரணம் விளங்குகிறது என்று வழக்கமான அட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்தி இந்த வரலாற்றுச்சுவடுகள் ஃபேஸ்புக்கில் 20 வது தடவையாக ஷேர் செய்யப்பட்ட எப்போதோ நடந்த நிகழ்ச்சியை இப்போது போட்டு "லைக்" போடுங்கனு மல்லுக்கு நிற்கும் விசயமாக ஆகிவிடக்கூடாது. [ இல்லாட்டி நீ முஸ்லீம் இல்லே என்ற வசைப்பாடு வேறு ]



உங்களுடைய ஆய்வுகள் அதற்காக எடுத்த எழுத்து முயற்சிகள். மங்கிப்போன முஸ்லீம்களின் ஆவணங்கள் எல்லாம் இந்த இந்திய மண்ணில் மறுபடியும் மற்றவர்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.


முஸ்லீம்கள் இந்திய மண்ணுக்காக சிந்திய ரத்தம் வீணாகிவிடவில்லை என்ற உணர்வை நாம் நிச்சயம் எடுத்துச்சொல்ல முடியும்.

வேலை அவ்வளவு ஒன்றும் எளிதல்ல....இருப்பினும்.

1.இதை புத்தகமாக்க வேண்டும் , ஆங்கிலத்திலும்.

2. எல்லாப்பல்கலைக்கழகங்களின் சரித்திரப்பிரிவின் தலைமை பேராசிரியர் [H.O.D] க்கும் இது அனுப்பப்படவேண்டும்.

3. இஸ்லாமியக்கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் அனுப்பப்பட வேண்டும்.


4. மாணவர்களுக்கு வருடத்தில் 2 பீரியட் ஆவது இதைப்பற்றி பாடம் நடத்தப்பட வேண்டும் ...இந்த புத்தகத்திலிருந்து,............இல்லாவிடில், தொடர்ந்து முஸ்லீம்களின் தியாகம் மண்ணில் புதைக்கப்ட்டதாகவே ஆகிவிடும்.


முஸ்லீம்கள் புதைக்கப்படுவது போல்.....









m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த வாரமும் உணர்ச்சிப் பிழம்பு… இதெல்லாம் பள்ளி நாட்களில் எமக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் ஒரு நாடக பதிவாக்கியிருந்திருப்போம் அப்போது இருந்த நடக வெறிக்கு !

முதல் வாசிப்பிலே கலங்க வைத்து விட்டது… அதோடு மெளலான அவர்களை அறிமுகம் செய்த விதம் அற்புதம் !

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//முதலில் இதை "இன்னொரு தொடர்' என்று சாதாரணமாக யாரும் படித்துவிட்டு வழக்கம்போல் கரண்ட்கட், தெருப்புகழ்ச்சி, இயக்கவிஸ்வாசம், எந்த கப்ரில் காரணம் விளங்குகிறது என்று வழக்கமான அட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்தி இந்த வரலாற்றுச்சுவடுகள் ஃபேஸ்புக்கில் 20 வது தடவையாக ஷேர் செய்யப்பட்ட எப்போதோ நடந்த நிகழ்ச்சியை இப்போது போட்டு "லைக்" போடுங்கனு மல்லுக்கு நிற்கும் விசயமாக ஆகிவிடக்கூடாது. [ இல்லாட்டி நீ முஸ்லீம் இல்லே என்ற வசைப்பாடு வேறு ]//

எந்த இயக்கத்திலேயும் இல்லைன்னு சொல்ற இயக்கமா நீங்க ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//வீரமிக்க இந்த மெளலவி அவர்களை பிறத்தாட்டும் பெருமையை அன்றைய மதராஸ் பட்டணம் (சென்னை) பெற்றுக் கொண்டது. இப்படி சென்னையில் பிறந்து உத்தரப் பிரதேசத்தில் வளர்ந்தவர்.//

அழகிய அறிமுகம் !

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி ஜாகிர்!

நானும் தம்பி அபூ இப்ராஹிமும் இன்று காலை பதினோரு மணியளவில் அதிரை காதிர் முகைதீன் மெல் நிலைப் பள்ளியில் பேசிக் கொண்டது உங்களுக்கு- மலேசியாவில் இருக்கும் உங்களுக்கு காதில் விழுந்துவிட்டதா?

இன்ஷா அல்லாஹ் நமது முயற்சிகளுக்கு அல்லாஹ் துணை நிற்பானாக!

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

//இந்த வாரமும் உணர்ச்சிப் பிழம்பு… இதெல்லாம் பள்ளி நாட்களில் எமக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் ஒரு நாடக பதிவாக்கியிருந்திருப்போம் அப்போது இருந்த நடக வெறிக்கு !//

இப்போதும் செய்யலாம். என்ன ஹாஜா முகைதீன் சாரை தொல்லை பண்ண வேண்டி வரும். பேசுகிறேன். இன்ஷா அல்லாஹ்.

sheikdawoodmohamedfarook said...

நாட்டு விடுதலைக்கு போரிட்டு தன் தலையே இழந்த தியாகியின் நினைவாக ஒரு தபால் தலை கூட இந்திய அரசு வெளிஇடவில்லை. ஆனால் வெள்ளைக்கார George Bruce சின் மனசாட்சி உண்மையான தியாகத்தின் முன்னே மண்டியிட்டு பேசி இருக்கிறது. இந்தியாவின் மனசாட்சி எந்த சுடுகாட்டில் சாம்பலானது? வந்தேமாதரம்!

sheikdawoodmohamedfarook said...

// அப்போதே கிடைத்திருந்தால் நாடக பதிவாகிஇருப்போம்//இப்ராஹிம் அன்ஸாரி சொன்னது/ ''நாடகமா ? ஹராமாச்சே!கூடாது! கூடாது!அதெல்லாம் போடப்படாது!அனாச்சாரம் பெருகும்'' என்பார்களே?

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மெளலவி அவர்களைக் கொலை செய்த விதமும் ஜனாஸாவை வதை செய்த கொடூரமும் குலை நடுங்க வைக்கிறது.

அதைத் தாங்கள் விவரித்த விதமோ கேட்டவுடன் கிளர்ந்தெழ வைக்கிறது. வலிமையான தங்களின் எழுத்து வாழ வளர என் துஆ!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.

(அந்த பல்லே பல்லே நயவஞ்சகனைப்போல தெற்கிலும் எட்டப்பன்கள் ஏராளம் இருந்து காட்டிக்கொடுத்தனர்.

சுதந்திரம் கிடைக்கும் தருவாயில் பச்சோந்திகள் கட்சி மாறி வந்தே மாதரம் என்று ஒத்தூதி தப்பித்தனர். இவர்களில் நம்பூதிரிகள் அதிகம்)

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வீரமிக்க வரலாறு. போராட்டத்தை வேடிக்கை பார்த்த கயவர்களுக்கும், திருடர்களுக்கும் எல்லாம் தியாகி என்ற பெயரும். கூத்தாடிகளுக்கும், சுயலத்திற்காக பேட்டை எடுத்துக்கொண்டு ஒடியவனுக்கெல்லாம் ரத்னா விருதுகளும் கொடுத்து மகிழ்ந்து வரும் காவி கயவர்கள் வாழ்ந்து வரும் இந்தியா நாட்டில் :::: இஸ்லாமிய வீரர்களின் தியாகத்தைமறைத்து வைத்திருக்கிறார்கள்.:::::

வைரத்தின் ஒளியை மறைக்க முடியாது என்பதை அரை டவுசர்கள் உணரும் காலம் விரைவில் வரும்.
********************************************************************************************************
////// முஸ்லீம்கள் இந்திய மண்ணுக்காக சிந்திய ரத்தம் வீணாகிவிடவில்லை என்ற உணர்வை நாம் நிச்சயம் எடுத்துச்சொல்ல முடியும்.

வேலை அவ்வளவு ஒன்றும் எளிதல்ல....இருப்பினும்.

1.இதை புத்தகமாக்க வேண்டும் , ஆங்கிலத்திலும்.

2. எல்லாப்பல்கலைக்கழகங்களின் சரித்திரப்பிரிவின் தலைமை பேராசிரியர் [H.O.D] க்கும் இது அனுப்பப்படவேண்டும்.

3. இஸ்லாமியக்கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் அனுப்பப்பட வேண்டும்.


4. மாணவர்களுக்கு வருடத்தில் 2 பீரியட் ஆவது இதைப்பற்றி பாடம் நடத்தப்பட வேண்டும் ...இந்த புத்தகத்திலிருந்து,............இல்லாவிடில், தொடர்ந்து முஸ்லீம்களின் தியாகம் மண்ணில் புதைக்கப்ட்டதாகவே ஆகிவிடும்.


முஸ்லீம்கள் புதைக்கப்படுவது போல்..... //////
****************************************************************************************************
சகோதரர் ஜாகிர் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்!.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மெளலவி அவர்களைக் கொலை செய்த விதமும் ஜனாஸாவை வதை செய்த கொடூரமும் குலை நடுங்க வைக்கிறது.

அதைத் தாங்கள் விவரித்த விதமோ கேட்டவுடன் கிளர்ந்தெழ வைக்கிறது. வலிமையான தங்களின் எழுத்து வாழ தொடர் வளர என் துஆ!

மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் மறுமை வாழ்வை எல்லாம் வல்ல இறைவன் வளப்படுத்தி வழங்குவானாக!



அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.

Ebrahim Ansari said...

Wa alaikkumussalam.

உணர்வு பூர்வமான தம்பி ஜாகிர் உடைய கருத்துக்களை வழிமொழிந்த அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கும்

என்ன இன்னும் காணோமே என்று காக்க வைத்து - தேடவைத்து கருத்திட்டுள்ள தம்பி ஜஹபர் சாதிக் அவர்களுக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

இந்தத் தொடர் நிறைவு பெறும்போது இன்ஷா அல்லாஹ் தங்கள் அனைவரின் கருத்துப் போல் இதை ஆவணப் படுத்தில் மக்கள் யாவரும் அறியச் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

Yasir said...

காட்டிக்கொடுத்த அந்த இனத்தின் வாரிசுகள் இன்று இராணுவத்தில் உயர்பதவியில்...தன் நாட்டுக்கு உடல் கூறு போடப்பட்டு ஷஹிதான மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் வழிவந்த எங்களைப்போன்ற முஸ்லிம் நடுத்தெருவில்....நாட்டுப்பற்றை மார்க்க கடமைகளில் ஒன்றாக சொன்ன மார்க்கம் இஸ்லாம்....உடல் உள்ளம் நடுங்க வைத்த தொடர் மாமா....அளவிட முடியாத நன்மைகள் உங்களுக்குண்டு..இதனை வெளிக்கொண்டு வருதன் மூலம்

மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் மறுமை வாழ்வை எல்லாம் வல்ல இறைவன் வளப்படுத்தி வழங்குவானாக!

Anonymous said...

மவ்லவீ அவர்கள் பரங்கிப் படையினருக்கு வந்துகொண்டிருந்த உணவுப் பொருட்களைப் பல வாரங்கள் தடுத்துப் பறிமுதல் செய்ததாகவும் பரங்கிப் படையினர் பட்டினியால் சாகக்கிடந்தபோது, அயோத்தின் அயோக்கியப் பூசாரிகள், மவ்லவீ அறியாவண்ணம் பரங்கிப் படையினருக்கு உணவுப் பொருட்களைக் கடத்திக்கொண்டுபோய் கொடுத்ததாகவும் அந்த தேசத்துரோகத்துக்குப் பரிசாகப் பெற்றுக் கொண்டதுதான் அயோத்தியின் பாபர் மஸ்ஜித் வளாகத்திலுள்ள 'ராமர் திண்ணை' என்பதாகவும் பேராசிரியர் அருட்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : சகோ.ஜமீல் M.ஸாலிஹ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு