Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நண்டும் நரியும் 10

அதிரைநிருபர் பதிப்பகம் | November 17, 2014 | , ,

நீலக்  கடலின்  அலையோசை - எம்
  நெஞ்சக்  கதவைத்  தட்டியபின்
காலைக்  கழுவித்  தூய்மையுடன் - மண்
  கரையில்  வந்து  நின்றோமே.

கரையில்  நின்ற  பாத்திம்மா - தன்
  கண்ணில்  பட்ட  நண்டொன்றை
அருகில்  கண்டு  பதறிப்போய் - ஓடி
  அணைத்துக்  கொண்டாள்  உம்மாவை.

தண்ணீ  ருக்குள்  ஓடாமல் - போய்த்
  தரையில்  கண்ட  பொந்துக்குள்
மண்ணே  தனது  வீடென்று - தான்
  மறைந்த  நண்டைக்  கண்டோமே.

“நண்டின்  கதியை  அறிவீரோ? - ஒரு
  நரியொன்  றுக்கது  விருந்தாகும்
வண்டி கிளம்பிச் சென்றவுடன்–நரி
  வந்து  திரிந்தே  இரைதேடும்.

“அந்தி  வேளை   யானவுடன் - அது
  அமைதி  யாக  வந்தந்தப்
பொந்துக்  குள்ளே  வால்விட்டுத் - தன்
  பொறுமை  காக்கும்  தந்திரமாய்.

“வானைப்  பார்த்த  சிறுநண்டோ – தன்
  வாயால்  கவ்விப்  பிடித்துவிடும்
தேனை  உண்ட  மகிழ்வோடு - நரி
  திடுமென  வாலை  வெளியாக்கும்.

“அச்சம்  ஊட்டிய  நண்டதனை - நரி
  அடித்து  நொறுக்கித்  தின்றுவிடும்
இச்சிறு  வாழ்வின்  நிலையிதுதான்” - என
  எடுத்துச்   சொன்னார்  வாப்பாவும்.

அதிரை அஹ்மது

10 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

குழந்தைக் கவிதை - ஆனாலும் நம்மையும் சுண்டி இழுக்கும் நல்ல மொழி நடை.படிக்கும் போது,நாமும் குழந்தையாகி விட்ட,உணர்வு.

இப்னு அப்துல் ரஜாக் said...

//“அச்சம் ஊட்டிய நண்டதனை - நரி
அடித்து நொறுக்கித் தின்றுவிடும்
இச்சிறு வாழ்வின் நிலையிதுதான்” - என
எடுத்துச் சொன்னார் வாப்பாவும்.//

வாழ்க்கைப் பாடம்

sheikdawoodmohamedfarook said...

வாண்டுகள்விரும்பும்நல்லநண்டுக்கவிதை! கதைநீதி:'வாலாட்டும்இடமறிந்துவாலாட்டினால் வாழலாம்'.என்றசூத்திரம்கற்றநரிக்கு ஒருசபாஷ்! .

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

காக்கா,

நீதிபோதனை கவிதை வடிவில் நன்றாக விளங்குகிறது. சிறு பிள்ளைகளுக்குத் தாராளமாக வாசித்துக் காட்டலாம்.

அருமை, அற்புதம்!

தொடர வாழ்த்துகள்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

sabeer.abushahruk said...

காக்கா,

க்ளாஸ் ஒர்க் சூப்பரா புரிந்தது.

ஹோம் ஒர்க்கைச் சரி பார்க்கவும்.



ஒற்றுமை நீங்கின்!

பச்சைப் பசேல் புல்வெளியில் - பல
பசுக்கள் மேய்ந்திடக் கண்டோமே
புற்கள் உண்ணும் பசுநோக்கி - ஒரு
புலியின் கண்கள் வெறித்ததுவே

பதுங்கிப் பதுங்கி புலியும்தான் - சிறு
புதரின் பின்னே மறைந்திருந்து
பசிக்கும் வயிற்றுப் பசியாற - அப்
பசுவை புசிக்கப் பார்த்ததுவே

ஒளிந்து மறைந்து முன்னேறி - புலி
விறைந்துப் பாய்ந்தது பசுவின்மேல்
குனிந்து மேய்ந்த பசுவெல்லாம் - கூடி
துணிந்து பாய்ந்தன் புலியின்மேல்

மொத்தக் கொம்புகள் கூர்க்கண்டு - புலி
சத்தம் இல்லாமல் மிரண்டதுவே
ரத்தம் குடியாமல் வாய்மூடி - அது
எத்தன் நரியிடம் சென்றதுவே

தந்திர நரியும் சதிசெய்து - ஒரு
பசுவைப் பிரித்துக் கொண்டுவர
ஒற்றைப் பசுவை எளிதாக - புலி
அடித்துக் கொன்று உண்டதுவே

ஒற்றுமை யானக் கூட்டத்தை - யாரும்
ஒன்றும் செய்துவிட முடியாது
ஒற்றுமை நீங்கின் வீழ்வரென்ற - நல்
உண்மையை வாப்பா உரைத்தார்கள்!






m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இத்தகைய கவிதைகளைக் கண்டதும் குழந்தை மனம் கமழ்கிறது...

மாஷா அல்லாஹ்... அரும்புப் பாட்டும், கருத்தில் கரும்புப் பாட்டும்...

ஒட்டும்'மை' தடவியிருப்பது அருமை !

Ebrahim Ansari said...

ஓடுச்சாம் ஓடுச்சாம் சென்னக் கூனி
ஒரு தோடு ஒன்னு போட்டுச்சாம் சென்னக்கூனி
போட்டுக் கழட்டுச்சாம் சென்னக்கூனி
பாட்டுப் படிச்சுச்சாம் சென்னக்கூனி

- என்று ரெண்டாங்கிளாஸ் படிக்கையிலே எங்க ஜெயம் டீச்சர் சொல்லித் தந்தாங்களே!

அந்தக் குழந்தைப் பருவ நினைவு வந்துவிட்டது.

மூத்த இளைய தாத்தாக்களின் இரண்டு கவிதைகளும் அமர்க்களம் என்பது இந்தத் தாத்தாவின் கருத்து.

Ebrahim Ansari said...

//ஒட்டும்'மை' தடவியிருப்பது அருமை !// ஹஹஹஹஹாஹ்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

ஈரசை ஈரசை மூவசை - ஒரு தனிச்சொல்
(மோனை)ஈரசை ஈரசை மூவசை
(எதுகை) ஈரசை ஈரசை மூவசை - ஒரு தனிச்சொல்
(மோனை) ஈரசை ஈரசை மூவசை

இவ்வளவுதான். கவிதை அல்லது பாட்டு இனிக்கும்,இசைப்பதற்கு!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு