Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குழப்பம் - ஆலோசனை - தீர்வு 1

அதிரைநிருபர் பதிப்பகம் | November 07, 2014 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .
  
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)  நமது  வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறோம். பல காரியங்களில் நமக்கு குழப்பம் ஏற்படுகிறது செய்யலாமா? செய்யக்கூடாதா? ஒவ்வொரு காரியங்களையும் பிறரிடம் கலந்து ஆலோசனை செய்கிறோம். மனிதர்கள் தங்கள் அறிவில் பட்டதை கூறுவார்கள். என்னதான் அருமையான யோசனை தந்தாலும் நமக்கு நிம்மதி இருக்காது அந்த காரியம் நடந்து முடியும் வரை.

நாம் ஆரம்பித்த காரியம் நல்லபடியாக நடந்து விட்டால் நிம்மதி  என்ற மகிழ்வைத்தரும். நஷ்டத்தில், மனக்குழப்பத்தில், வேதனையில் விட்டுவிட்டால் இதை நினைத்து வாழ்நாள் முழுவதும் வேதனை அடைவோம். வாருங்கள் என்ன பிரச்சனைகளை நமது வாழ்வில் சந்திக்கிறோம் என்பதை பார்ப்போம்.

மாணவ, மாணவியர்களுக்கு:

10 ஆம் வகுப்பு முடித்தவுடன் +1ல் என்ன குரூப் எடுப்பது என்பதில் குழப்பம். +2 முடித்தவுடன் எந்த துறையை தேர்ந்தெடுப்பது? எந்த காலேஜை தேர்ந்தெடுப்பது? என்பதில் குழப்பம் என்ன செய்வது இதற்கு?

தாய், தந்தைக்கு:

பாசத்தோடு வளர்த்த மகளுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளையை பார்ப்பது அவன் நல்லவனா? கெட்டவனா? நல்ல குடும்பமா? பலபேரிடம் விசாரிக்கிறோம். வெளியில் பிறர் சொல்வதை நம்பி திருமணம் செய்து கொடுக்கிறோம். பிறகுதான் தெரிகிறது அவர்களின் சரியான குணம். என்ன செய்வது இதற்கு?

மகனுக்கு பெண் தேடுகிறோம். நல்ல பெண்ணா?  நல்ல குடும்பமா? மருமகள், மகனை நம்மோடு விட்டு வைக்குமா? அல்லது தனிக்குடித்தனம் என்று இழுத்துக் கொண்டு சென்றுவிடுமா? என்பதில் குழப்பம்? என்ன செய்வது இதற்கு?

வளைகுடா வாசிகளுக்கு:

குடும்பத்தை தொடர்ந்து நம்மோடு வைத்திருப்பதா? ஊரில் கொண்டு போய் நிரந்தரமாக தங்க வைத்து விடுவதா? என்பதில் குழப்பம்? என்ன செய்வது இதற்கு?

பிள்ளைகளுக்கு எந்த துறையை தேர்ந்தெடுப்பது, எந்த கல்லூரியில் சேர்ப்பது? என்பதில் குழப்பம்? என்ன செய்வது இதற்கு?

கம்பெனியில் சம்பளம் குறைவாக இருக்கிறது. இதே கம்பெனியில் தொடர்வதா? இல்லை வேறு கம்பெனிக்கு செல்வதா? சம்பளம் குறைவாக இருந்தாலும் தொல்லைகள் அதிகம் இல்லை. புது கம்பெனியில் சம்பளம் அதிகம் கிடைத்து தொல்லைகள் அதிகமாக இருந்துவிட்டால். . . என்பதில் குழப்பம்? என்ன செய்வது இதற்கு?

வளைகுடாவில் இருக்கும் திருமணமான பேச்சுலர்களுக்கு:

மனைவி மக்களை பிரிந்து எத்தனை காலம் தனிமையில் இருப்பது? ஊர் சென்று விடலாமா? தொழில் எதுவும் தொடங்கலாமா? என்ன தொழில் செய்வது? குழப்பம்? என்ன செய்வது இதற்கு?

தொழில் தொடங்குவோருக்கு:

நல்ல இடத்தை தேர்வு செய்து, தனியாகவோ, கூட்டாகவோ தொழில் தொடங்க இருக்கிறோம். ஆரம்பித்த தொழில் நல்லபடியாக நடக்குமா? என்பதில் குழப்பம்? என்ன செய்வது இதற்கு?

உலகநடைமுறையில் தங்களுக்கு தெரிந்த பல கருத்துக்களை பதிந்தீர்கள். மார்க்கத்தின் அடிப்படையில் நமது குழப்பத்திற்கு எவ்வாறு ஆலோசனை பெற்று தீர்வை பெற்றுக்கொள்ளலாம்  என்பதை பார்ப்போம்.

ஒவ்வொருவரும் தமது சிறிய தேவைகள் முதல் பெரிய தேவைகள் வரை அனைத்தையும் நிறைவேற்றித்தரும்படி வல்ல அல்லாஹ்விடத்தில் மட்டுமே கேட்க வேண்டும் என்பதை காட்டுவதற்காக நபி(ஸல்) அவர்கள்:
செருப்பின் வார் அறுந்து போனால் அதையும் அல்லாஹ்விடமே கேட்பாயாகஎன நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். (திர்மிதி)

இஸ்திகாரா தொழுகை:

நம் மார்க்கம் எல்லாவற்றுக்கும் வழி சொல்கிறது. இந்த உலகில் நாம் செய்ய நினைக்கும் காரியங்களை வல்ல அல்லாஹ்விடம் ஒப்படைத்து வெற்றி பெறும் வழியை நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்துள்ளதை கீழ்க்கண்ட ஹதீஸ் விளக்குகிறது:

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள்.

(அந்த முறையாவது): நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்காஅத்கள் தொழுது கொள்ளுங்கள்.

பிறகு அல்லாஹ்விடம்,

اَللّهُمَّ   إِنِّى أَسْتَخِيرُكَ بِعِلْمِك  وَأَسْتَقْدِرُكَ
بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ اَللّهُمَّ إِنْ     كُنْتَ تَعْلَمُ أَنَّ هذَا اْلاَمْرَ

(தனது தேவையை இங்கு குறிப்பிடவும்)

  خَيْرٌ  لِّـي      فِـي   دِيـنِـي
 وَمَعَاشِى وَعَاقِبَةِ أَمْرِى فَاقْدُرْهُ لى وَيَسِّرْهُ لى ثُمَّ بَارِكْ لى فيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هذَا اْلأَمْرَ شَرٌّ لى فِى دينى وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرى فَاصْرِفْهُ عَنِّى وَاصْرِفْنى عَنْهُ وَاقْدُرْ لِى الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنى   بِهِ

‘‘அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பிஇல்மிக்க வஅஸ்தக்திருக்க பி குத்ரதிக்க வஅஸ்அலுக மின் ஃபழ்லிகல் அழீம். ஃபஇன்னக தக்திரு வலா அக்திரு. வதஃலமு வலா அஃலமு வஅன்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன்குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர  (தனது தேவையை இங்கு குறிப்பிடவும்)

கைருன்லீ ஃபீ தீனி வமஆஷீ  ஆகிபதி அம்ரீ ஃபக்துர்ஹுலீ. வயஸ்ஸிர்ஹுலீ ஸும்ம பாரிக்லீ ஃபீஹி வஇன்குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர  ஷர்ருன்லீ ஃபீதீனீ வமஆஷீ ஆகிபதி அம்ரீ    ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ வஸ்ரிஃப்னீ அன்ஹு வக்துர்லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ழினீ  பிஹி’’.

(அல்லாஹ்வே! உனது அறிவைக் கொண்டு உன்னிடம்  நன்மையை வேண்டுகிறேன். உன் ஆற்றலைக் கொண்டு உன்னிடம் ஆற்றலை வேண்டுகிறேன். உன் மகத்தான  அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்துக்கும் ஆற்றல் பெற்றவன். நான் ஆற்றல் இல்லாதவன். நீ அனைத்தையும் அறிந்தவன். நான் அறியாதவன். மறைவானவை அனைத்தையும் நீ நன்கு அறிந்தவன். அல்லாஹ்வே! இந்தக் காரியம் (தனது தேவையை இங்கு குறிப்பிடவும்)

எனது மார்க்கத்திற்கும் எனது வாழ்க்கைக்கும் எனது மறுமைக்கும் சிறந்தது என நீ கருதினால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு எளிதாக்கு! பின்னர் அதில் பரக்கத் செய்! இந்த காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும் கெட்டது என நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தை விட்டு என்னையும் திருப்பி விடு! நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.) (அறிவிப்பவர்:ஜாபிர்(ரலி) அவர்கள், புகாரி : 6382,7390 ).

யார் ஒருவர் அல்லாஹ்விடம் நன்மையை நாடி பிரார்த்திக்கிறாரோ. பிறகு நல்ல நம்பிக்கையாளர்களிடம் ஆலோசனை செய்து தனது காரியத்தில் உறுதியுடன் இருந்தாரோ. அவர் ஒருபோதும் நஷ்டமடையமாட்டார்.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! திருமண காரியங்கள், வேலையில் சேருவது, வேறு இடத்திற்கு வேலை மாற்றி செல்வது, தொழில் தொடங்குவது, பிள்ளைகளுக்கு எந்த காலேஜ் தேர்ந்தெடுப்பது, என்ன படிப்பது, மனை வாங்குவது, மனையை விற்பது, வீடு வாங்குவது, கட்டுவது, விற்பது போன்ற பெரிய காரியங்கள் முதல் நாம் சாதாரணமாக நினைக்கும் சிறிய காரியங்கள் வரையும். (நாம் செய்து முடித்து விடுவோம் என்று நினைக்கும் காரியங்கள்) மேலும் வாழ்வில் நமக்கு ஏற்படும் குழப்பமான காரியங்கள்  எதுவாக இருந்தாலும் நாம் முதலில் செய்ய வேண்டியது  (நஃபிலான) இரண்டு ரக்காஅத்கள் தொழ வேண்டும். தொழுத பிறகு மேற்கண்ட துஆவை கேட்க வேண்டும்.பிறகு நம் காரியங்களில் முயற்சிகள் செய்ய வேண்டும்.

நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைத்து காரியங்களிலும்,  ஈடுபடுவதற்கு முன் இஸ்திகாரா தொழுகையை கடைபிடித்து வல்ல அல்லாஹ்வின் அருளால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடைய முயற்சி செய்வோம். இன்ஷா அல்லாஹ்!.

வல்ல அல்லாஹ் பொறுப்பேற்க போதுமானவன்:

வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்விடமே காரியங்கள் கொண்டு செல்லப்படும். (அல்குர்ஆன்: 3:109) 

வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். (அல்குர்ஆன்: 4:132)


அலாவுதீன் S.

1 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு