Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மலரே அழுந்தாதே! 51

அதிரைநிருபர் பதிப்பகம் | November 10, 2014 | , , , , ,


அன்பார்ந்த அன்னையரே
அதிமதியுடைய மகளிரே
மன அழுத்தம் தினம் அழுத்த
அவதியுறும் யுவதிகளே

ஊரெல்லாம் ஓய்ந்துவிட
உறவெல்லாம் உறங்கிவிட
இரவெல்லாம் விழித்திருந்து
எதைத்தான் சிந்திப்பீரோ

இவ்விருள்தான் நீங்கிடுமா
இரவும்தான் விடிந்திடுமா
என்றெல்லாம் எண்ணியெண்ணி
எதைத்தான் சாதித்தீரோ

மறைந்துவிட்டக் கதிரவனுக்கு
உதித்தெழத் தெரியாதா
திரண்டுவிட்ட இருளையும்தான்
விரட்டிவிட முடியாதா

அஸ்த்தமன திசை குறித்து
அலட்டிக் கொள்ளாமல்
அடுத்தநாள் உதய ஒளியால்
நிரப்புங்கள் இதயத்தை

எதிர்மறை எண்ணங்களை
அதிகமாய் உருப்போட்டு
புதிர்களை உருவாக்கி
அதிலன்றோ அமிழ்கின்றீர்

அடைய விரும்புவனக்
கிடைக்குமென நம்புங்கள்
இறையை நம்பி நீங்கள்
முறையாய் முயன்றிடுங்கள்

வீட்டறையில் முடங்காமல்
வெளிக்காற்றை சுவாசியுங்கள்
காற்றலையில் கலந்துவரும்
கிளிமொழிகள் நேசியுங்கள்

தொலைக்காட்சி நெடுந்தொடரின்
வலைகளுக்குள் சிக்க வேண்டாம்
அபிமான நாயகியின்
அவலங்கண்டு அழவும் வேண்டாம்

எதிர்பார்ப்புகளைக் கூட்டி
ஏமாறுவதைத் தவிருங்கள்
எல்லா கனவுகளும்
பலிக்குமென்ற இச்சை வீண்

கணவனின் பார்வையில்
கண்டிப்பாய் காதலுண்டு
கைபிடித்த நாள்முதலாய்
கனியுமன்பு என்றுமுண்டு

பிள்ளைச் செல்வங்களுடன்
பேசுவதே பேரின்பம்
பாடம் ஓதிக் கொடுப்பதிலே
பாதிபாரம் இறங்கிவிடும்

நிறைவான குடும்பத்தில்
முறையான வாழ்க்கையிலே
குறைவில்லா மகிழ்ச்சி
இறைதந்த வரமன்றோ

அதை
பாரமென்று கருதி
சாபமாக மாற்றுதல்
தீர்வில்லா சுமைகொண்டு
அழுத்தாதோ மனத்தை

மாத்திரை மருந்தைவிட
மன அழுத்தம் போக்குதற்கு
மார்க்கத்தில் மறையுண்டு
மருந்திடவே இறையுமுண்டு

மன அழுத்த நிழல் படிந்து
மலர் வனங்கள் வாடிடாமல்
தினம் குளித்த பூக்களென
முகம் மலர்ந்து வாழியவே!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

51 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்!பூவையருக்கு ஒரு தீர்வை சொல்லும் கவிதை!காலத்தின் தலையில் சொருகிய பூ'' இந்த அறிவுரைகள்!சந்தோச மணம் வீசட்டும்!சுபிட்சமாய் சகோதரிகள் வாழட்டும்!

crown said...

மறைந்துவிட்டக் கதிரவனுக்கு
உதித்தெழத் தெரியாதா
திரண்டுவிட்ட இருளையும்தான்
விரட்டிவிட முடியாதா
-----------------------------------------------
கேள்வியிலேயே பதிலும் உள்ளபடி சொல்லபட்ட நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சும் வரிகள்!

crown said...

அஸ்த்தமன திசை குறித்து
அலட்டிக் கொள்ளாமல்
அடுத்தநாள் உதய ஒளியால்
நிரப்புங்கள் இதயத்தை
---------------------------------------------------
மன வாட்டத்துக்கு உற்சாகம் தரும் ஊட்டம் இந்த அற்புத வரிகள்!

crown said...

எதிர்மறை எண்ணங்களை
அதிகமாய் உருப்போட்டு
புதிர்களை உருவாக்கி
அதிலன்றோ அமிழ்கின்றீர்

அடைய விரும்புவனக்
கிடைக்குமென நம்புங்கள்
இறையை நம்பி நீங்கள்
முறையாய் முயன்றிடுங்கள்
---------------------------------------------------------------

நெகட்டிவ் எனும் எதிர்மறையை,பாஸிடிவ் என்னும் நேர்மறையை அடைய நேர் மறை(அல் குர் ஆன்)சொல்லும் வழியாம் (இறையை) வல்ல அல்லாஹ்வை வணங்கி செயல் பட சொன்ன நீதி போதனை! கவிஞரின் இறை சிந்தனைக்கு நற்கூலி நிச்சயம் உண்டாகும் ஆமீன்!

crown said...

வீட்டறையில் முடங்காமல்
வெளிக்காற்றை சுவாசியுங்கள்
காற்றலையில் கலந்துவரும்
கிளிமொழிகள் நேசியுங்கள்
----------------------------------------------------------
சுந்திரம் இஸ்லாம் தந்த உரிமை! அதை வீட்டினுல் முடக்காமல் அக்கம் பக்கம் பழகு! சுற்றம் நேசி! உங்கள் சுதந்திரக்காற்றை நாசிமுழுதும் நல்லா இழுத்து சுவாசி! நல்லதைபேசி நல்ல சகவாசம் வளர்!இஸ்லாம் பெண்களை அடக்கி ஆளுவதில்லை அல்லாஹுக்கு அனைவரும் அடங்கி வாழச்சொல்கிறது!
------------------------------------------------------------

crown said...

தொலைக்காட்சி நெடுந்தொடரின்
வலைகளுக்குள் சிக்க வேண்டாம்
அபிமான நாயகியின்
அவலங்கண்டு அழவும் வேண்டாம்
----------------------------------------------------------------
தொலைக்காட்சி வலைக்குள் விழும் மீனாய் ஆகாதே!பின் செத்து கருவாடாய் போகாதே!என அக்கறையை சக்கரை வார்தையில் சொல்லியுள்ளார் கவிஞர்!

crown said...

மாத்திரை மருந்தைவிட
மன அழுத்தம் போக்குதற்கு
மார்க்கத்தில் மறையுண்டு
மருந்திடவே இறையுமுண்டு
------------------------------------------------
இந்த வரிகளை சீர்தூக்கி பார்த்து சகோ,கவிஞர் நமக்கு நல்ல "சீர்" செய்துள்ளார் என மகிழ்வு கொள் சகோதரி! பின் வாழ்க்கை எல்லாம் வசந்தம் வீசும் நந்தவனமாய் உன் நிலைஆகிவிடும்!ஆமின்!!!!!
--------------------------------------------

crown said...

வழிமொழிகிறேன்!
கவிஞரே! இந்த பூமாலையை கோர்த்து சகோதரிகளின் கழுத்துக்கு நல்லதொரு அணிசெய்து நல்ல அண்ணனாய் நிமிர்ந்து நிற்கிறீர்கள்! நானும் உங்களுடன் கை கோர்க்கிறேன்!!!

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் க்ரவ்ன்,

//பூவையருக்கு ஒரு
தீர்வை சொல்லும் கவிதை!//

வாழ்வை ஒரு
தீவைப் போலப் பார்க்கும்
பாவை கவனத்திற்கு!


//அக்கம் பக்கம் பழகு!
சுற்றம் நேசி!
சுதந்திரக்காற்றை
நாசிமுழுதும்
நல்லா இழுத்து சுவாசி!
நல்லதைபேசி
நல்ல சகவாசம் வளர்!//

இன்னும் எளிமையாக எத்தி வைத்தமைக்கு மிக்க நன்றி.

sheikdawoodmohamedfarook said...

இந்தமலர்வாசிக்கஇனிக்கிறது;சுவாசிக்கமணக்கிறது.

ZAKIR HUSSAIN said...

எப்டி பாஸ்?...இப்படி கலக்குறீங்க ...நானும் இதே தீமில் "திரையில் சிறை" என்று எழுத நிறைய விசயங்களை மனதில் சுமந்து சரியான மூட் செட் ஆகாமல் அப்படியே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். ஆர்டிக்கில் எழுதத்தான் ....கவிதைதான் வராதே..

ZAKIR HUSSAIN said...

தடுக்கிவிழும் தருணங்களில் தூக்கிவிட கை தரவேண்டியதில்லை....உன்னால் எழுந்து ஓடவும் முடியும் என்று வார்த்தைகளால் ஊன்றுகோல் தரும் மனைவி நண்பனைப்போல் அமைந்து விட்டால் ...அதுவே அதிர்ஸ்டம். [

[ பாஸ்...அந்த மாதிரி மாடலில் இப்போது பெண்கள் பிறப்பதில்லை என்று நவீன இளைஞர்கள் சொல்கிறார்கள்..உண்மையா? ]

sabeer.abushahruk said...

ஜாயிரு,

மூட் செட்டாகலேனு ஏதோ "ரம்மி செட்டாக மாட்டேங்குது" ன்றமாதிரி சொல்றே?

நீ ஃபோனில் பேசிவதையெல்லாம் எழுத்தா மாத்தினாலே ஆர்ட்டிகில்ஸ் கிடைச்சிடும். ஆக, மூடல்ல மேட்டரு. எழுத சோம்பேறித்தனம்.

"எருமையே எழுதுடா" ன்னு டைட்டில் ரெடி பண்ணிட்டேன். அடுத்த கவித ஒனக்குத்தாண்டா.

sheikdawoodmohamedfarook said...

//பாஸ்அந்தமாதிரிமாடலில்இப்போபெண்கள்பிறப்பதில்லை//ஜாகிர்சொன்னது./ அப்படியேஒருமாமியாக்காரிதப்பிதவறிஒருபெண்சிஸுவைகருஉற்றாலும் கண்டுபிடித்துகருச்சிதைவுசெய்துவிடுகிறார்கள்.

ZAKIR HUSSAIN said...

//எருமையே எழுதுடா" ன்னு டைட்டில் ரெடி பண்ணிட்டேன்//

எருமை கோவிச்சுக்கும் பாஸ்.... [ அது "வெறுமை' தான்னு கிரவுன் எழுதிடப்போராப்லெ ]

.................................

//பெண்சிஸுவைகருஉற்றாலும் //

இதுக்கெல்லாம் ஸ்கேன் வந்துடுச்சா??

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

//இதுக்கெல்லாம்இஸ்க்கேன்வதுடுச்சா//விக்கும்ன்னுதெரிஞ்சாகண்டுபுடிச்சுடுவாங்க!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// ZAKIR HUSSAIN சொன்னது…

நானும் இதே தீமில் "திரையில் சிறை" என்று எழுத நிறைய விசயங்களை....//

'தீம்' ன்னா 'கரு'தானே ?

இங்கேயும் தீம் திருட்டா ?

Unknown said...

Assalalmu Alaikkum

Dear brother Mr. Abu Shahruk,

Beautiful poem to safeguard the health and wealth of women. Following your advice would fetch a peaceful life.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய ஃபாருக் மாமா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இப்படியொரு நிலை
இதற்குமுன் இல்லை

தின மழுத்தும்
மன அழுத்தம்
இந்த அளவு
வந்த தில்லை
அந்த கால மகளிருக்கு

உற்று நோக்கினால்
சற்று நீக்கலாம்

உணவுண்டு உண்ண
உடையுண்டு உடுக்க
உறங்க உரையூழுண்டு
உறவுகளும் உடனுண்டு

பிறகென்ன குறைச்சல்
பிடறிக்குள் குடைச்சல்?

சொல்வதைக் கேட்க
சுற்றுமுற்றும் யாருமில்லை
சொன்னவுடன் நடக்காத
சோகம் மாறவில்லை

பொறுமையோடு இருக்கச்சொல்லி
பயிற்சி நாம் கொடுக்க வேண்டும்
பொறுத்தார் பூமி ஆள்வரென
புரிய வைக்க வேண்டும்

நன்றி.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///
இப்படியொரு நிலை
இதற்குமுன் இல்லை

தின மழுத்தும்
மன அழுத்தம்
இந்த அளவு
வந்த தில்லை
அந்த கால மகளிருக்கு

உற்று நோக்கினால்
சற்று நீக்கலாம்

உணவுண்டு உண்ண
உடையுண்டு உடுக்க
உறங்க உரையூழுண்டு
உறவுகளும் உடனுண்டு

பிறகென்ன குறைச்சல்
பிடறிக்குள் குடைச்சல்?

சொல்வதைக் கேட்க
சுற்றுமுற்றும் யாருமில்லை
சொன்னவுடன் நடக்காத
சோகம் மாறவில்லை

பொறுமையோடு இருக்கச்சொல்லி
பயிற்சி நாம் கொடுக்க வேண்டும்
பொறுத்தார் பூமி ஆள்வரென
புரிய வைக்க வேண்டும்////

இலவச இணைப்பு அற்புதம்...!

கவிதை மருத்துவம்

sabeer.abushahruk said...

எருமையே எழுதேன்டா!

பத்து நிமிடம்
ஃபோனில் பேசினாலே
பல நூறு அர்த்தம்

பேசி முடிக்கும்போது
ரெஃப்ரெஷ் பட்டனை
அழுத்தியதுபோல்
கவலைக் குக்கீஸை துடைத்தெறியும்
நாவண்மை

நாள் முழுதும்
நினைத்துச் சிரிக்கவும்
டெலிட் செய்த பின்னும்
நாட்கள் கடந்து
ரிஸைக்கில் பின்னிலிருந்து
ரிஸ்டோர் செய்து சிந்திக்கவும்
சத்தான செய்திகள்

முப்பது நாட்களாகவா
மூட் செட்டாகல
இக்காலகட்டத்திற்குள்
மைன் செட்டிங்கே செய்து
வெடிக்க வைத்து விடலாமே

தள்ளிக்கொண்டே போக
நீயொன்றும் விஜய் படமல்ல

அடுத்தமுறை
கக்கூஸ் போகும்போதுகூட
ஸ்மார்ட் ஃபோனை எடுத்துப்போ
எது வருதோ இல்லியோ
மூட் வரும்டா

எழுதித் தொலை
இதற்குமேல் காக்க வைத்தால்
பாவம் வந்து சேரும் உனக்கு!

(பி.கு.: ஏண்டா, அந்த மாடல் பெண்கள் இப்போ பிறப்பதில்லை என்றால் நவீன இளைஞர்களை ஆண்ட்டிகளை மணக்கச் சொல்கிறாயா?)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அடுத்தமுறை
கக்கூஸ் போகும்போதுகூட
ஸ்மார்ட் ஃபோனை எடுத்துப்போ
எது வருதோ இல்லியோ
மூட் வரும்டா//

அடிக்குறிப்பு : மோடியும் வருவார் சுத்தம் செய்ய

sabeer.abushahruk said...

//அடிக்குறிப்பு : மோடியும் வருவார் சுத்தம் செய்ய//

உண்மையான சேதி. நேத்து கங்கையை சுத்தம் செய்ய மண்வெட்டியோடு நடிச்ச படம் காட்னாய்ங்க.

நல்லவேளை, பின்குறிப்புன்னு போடாம இருந்தியலே.

sabeer.abushahruk said...

//காளையர் நாம் மட்டும்
கவலைகஷ்டமில்லாமல்
இருக்கிறோமா என்ன ?//

மெய்சா, உன் பாராட்டிற்கு நன்றி.

இந்தப் பதிவை எழுதத் தூண்டிய ஒரு சகோதரியிடம் "ஏன் பெண்கள் மட்டும் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டும்?" என்ற கேள்விக்கு அவர்கள் தந்த பதில், "ஆண்கள் எந்த ஒரு பிரச்னையையும் அதன் அடித்தளம் வரை யோசிப்பதில்லை. ஏனோதானோவென்று மட்டுமே அனுகுகிறீர்கள். அதனால் மன அழுத்தமின்றி கொட்டமடிக்கிறீர்கள். ஆனால், பெண்கள் ஒரு சின்ன விஷயமானாலும் அதைப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்ப்பதால் மன அழுத்தத்தில் சிக்கிகொள்கிறோம்" என்றார்கல்.

அவர்களுக்கும் உனக்கும் ஒரே பதில்:

கவலை கஷ்டம் வேதனை வலி எல்லாவற்றையும் ஆண்கள் "கடமை" என்னும் தலைப்பின்கீழ் பார்த்துவிடுவதால் "நோ ட்டென்ஷன் பி ஹேப்ப்பி"

crown said...

பூவையரின் பூப்போன்ற உள்ளத்திற்கு
பூசிய அருமருந்து
உன் அழகிய கவி வரிகள்
வாழ்த்துக்கள் நண்பா

காளையர் நாம் மட்டும்
கவலைகஷ்டமில்லாமல்
இருக்கிறோமா என்ன ?
ஆகவே காமுகருக்கும்
ஒரு கவிபாடேன் !!!!


------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் இதில் ஆண்களை காமுகன் என அழைத்தபதம் தவறு என நினைக்கிறேன்!கவிஞரே சரியா நான் சொல்றது உங்க நண்பருக்கு சொல்லுங்கள்!

crown said...

//அடுத்தமுறை
கக்கூஸ் போகும்போதுகூட
ஸ்மார்ட் ஃபோனை எடுத்துப்போ
எது வருதோ இல்லியோ
மூட் வரும்டா//

அடிக்குறிப்பு : மோடியும் வருவார் சுத்தம் செய்ய
-------------------------------------------------------------------------------
கவிஞரே! கவனிச்சியலா?அபு.இபு காக்கா "சொல்றது "அடி"க்
குறிப்பு"" ஹாஹாஹா சரியாதான் சொல்லி இருக்கார்!

sabeer.abushahruk said...

dear thambi B. Ahamed Ameen,

wa alaikkumussalam varah...

Thanks for your continuous support and encouraging comments on my writings.

i've observed, it is not only that you comment possitively for my writings but also that you resemble my point of view on social and phsychological elements.

i reiterate you should come up with frequent articles expressing your views on various aspects which i am sure will help the society.

please take good care of yoursel, family and friends.

sabeer.abushahruk said...

டேய் மெய்சா,

ஆண்களை காமுகன் என்று அழைத்ததை வாபஸ் வாங்கு.

இல்லே, இங்கே எல்லா ஆண்களும் ஒன்னுகூடி தர்ணா பண்ணுவோம்.

நாங்கள்ளாம் எவ்ளோவ் நல்லவைங்க...! என்ன க்ரவ்ன்?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தா தா தா தூ தூ... விவாதக் களமா இது ?

"டா" "டேய்" !

ஜொளிக்குதே... ;)

Ebrahim Ansari said...

இந்த கவின் மிகு கவிதை வகுப்புக்கு நான் மிகவும் தாமதமாக வந்துள்ளேன். எனக்கும் ஒரு பிரசன்ட் போடுங்க சார்.

இணைய இணைப்பு என்னைக் கட்டிப் போட்டு இருக்கிறது. இந்தக் கவிதையும் என்னை கட்டிப் போட்டுவிட்டது.

Ebrahim Ansari said...

கவிதையும் தனது வனப்பால் வார்த்தைகளால் கட்டிப் போட்டு விட்டது என்று சொல்ல வந்தேன்.

Ebrahim Ansari said...

//கவிஞரே! கவனிச்சியலா?அபு.இபு காக்கா "சொல்றது "அடி"க்
குறிப்பு"" ஹாஹாஹா சரியாதான் சொல்லி இருக்கார்!//

இப்படியெல்லாம் எழுதினால் அடே மட்டும் கிடைக்காது அடியும் - அன்பு அடியும் கிடைக்கும்

Ebrahim Ansari said...

கவிதை லட்டு கருத்துக்கள் ஷொட்டு

ஆனாலும் ஒரு குட்டு . கிரவுன் கவிதைகளுக்குத்தான் கருத்துத் தருவாரா?

Ebrahim Ansari said...

நெறியாளரே!

இந்தப் பதிவை இளைஞர்களுக்கான பதிவு என்று அறிவியுங்கள். உங்கள் பார்வையில் தம்பி சபீர் இன்னும் அவ்வாறு தோன்றும் பட்சத்தில் .

அப்படி அவரை அக்காமடேட் செய்தால் மனம் நரைக்காமல் இருக்கும் நம்மையும் கொஞ்சம் கவனியுங்கள்.

Ebrahim Ansari said...

எண்ணற்ற கருத்துக்கள். காலதாமதத்துக்காக நான் கட்டும் அபராதம்

sabeer.abushahruk said...

//எனக்கும் ஒரு பிரசன்ட் போடுங்க சார். //

காக்கா,

பள்ளிக்கூட இன்ஸ்பெக்ஷன் நாட்களில் பசங்க வாத்தி எல்லாம் முதலிலேயே வந்துவிடுவோம் ஆனால், இன்ஸ்பெக்ட்டர் காக்க வைத்துத்தான் வருவார்கள். கொஞ்ச நேரம்தான் இருப்பார்கள். இருப்பினும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்ப்பது இன்ஸ்பெக்ட்டர்தான்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…
கவிதை லட்டு கருத்துக்கள் ஷொட்டு

//ஆனாலும் ஒரு குட்டு . கிரவுன் கவிதைகளுக்குத்தான் கருத்துத் தருவாரா?//



நல்ல கேள்வி பதில் சொல்லப்போவது யார் ? கவிதைகாரரா அல்லது பின்னுட்டக்காரரா

Ahamed irshad said...

கவிதை ஒவ்வொரு வரியும் அமேசிங் .. அல்டிமேட் சபீர் காக்கா டச்..

..........

>>மூட் செட் ஆகாமல்<<

ஜாஹிர் காக்கா சீக்கிரமே உங்களுக்கு மூட் செட் ஆகி ஆர்ட்டிகிள் வரனும்... :)

பைதிவே எனக்கு இதே பிரச்சனை இருக்கு :)

sabeer.abushahruk said...

ஹமீது,

எனக்குத் தெரிந்து க்ரவுன் தொழிலிலும் சொந்த வேலையிலும் சோலியாக இருப்பதால் எல்லா பதிவுகளையும் வாசிக்க நேரமில்லாமல் இருக்கிறார்.

மேலும் என்னைப்போன்றவர்கள் கவிதை வாசிப்பதில் காட்டும் ஆர்வம் கட்டுரை வாசிப்பில் காட்டுவதில்லை(ஈனா ஆனா காக்கா, ஜாகிர் போன்ற சிலர் எழுதும் கட்டுரைகள் விதிவிலக்கு). இது தனி மனித ரசனை சம்பந்தப்பட்டது. நாம் குறைகூற முடியாது.

கிரவுனைப் பொருத்தவரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் கருத்திடாமல் இருந்ததில்லை.

அதுசரி, உங்களையும் காணோமே, வேன் ரூஹ்?

அதிரை.மெய்சா said...

சரிடா நண்பா காமுகனுக்கு சரியான தமிழ் பொருளறிந்த நீயே தவறென சொல்லிவிட்டதால் அந்தக் கருத்தை நீக்கி விட்டேனடா [வாதிட்டு நமக்குள் எதுக்கு வீண்வம்பு ]

அதிரை.மெய்சா said...

பூவையரின் பூப்போன்ற உள்ளத்திற்கு
பூசிய அருமருந்து
உன் அழகிய கவி வரிகள்
வாழ்த்துக்கள் நண்பா

காளையர் நாம் மட்டும்
கவலைகஷ்டமில்லாமல்
இருக்கிறோமா என்ன ?
ஆகவே காளையருக்கும்
ஒரு கவிபாடேன் !!!!

sabeer.abushahruk said...

தம்பி இர்ஷாத்,

வாசித்து விரும்பியமைக்கு நன்றி.

இந்த மூட் செட் என்கிற ஒன்றை வைத்துக்கொண்டு நீங்களும் அவனும் ரொம்பத்தான் இழுக்குறீங்க.

மூட் செட் செய்வதற்கு நாங்கள் ஏதேனும் உதவ வேண்டுமா சொல்லுங்களேன்.

sabeer.abushahruk said...

மெய்சா,

புரிதலுக்கு நன்றி.

//ஆகவே காளையருக்கும்
ஒரு கவிபாடேன் !!!!//

இன்ஷா அல்லாஹ், ட்ரை பண்றேன்.

Ahamed irshad said...

சீக்கிரம் வந்துரும்னு நினைக்கிறேன் சபீர் காக்கா :)

Ebrahim Ansari said...

ராமன் எபக்ட் போல் கிரவுன் எபெக்டுடன் எழுதப்படும் கட்டுரைகளுக்கு கிரவுனின் கருத்தும் வந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆதங்கமே. கட்டாயமில்லை. காலம் இருந்தால் மட்டுமே.

Ebrahim Ansari said...

ஒரு உரிமையான் கேள்வி உன்னதமான பதில் ஜசாக் அல்லாஹ்

ZAKIR HUSSAIN said...

சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன். அதற்காக காசு நேந்து கட்டிடாதீங்க பாஸ்..

பெரியோர்களே தாய்மார்களே..'இந்த காசு / நேந்து ..இதுவெல்லாம் ஒரு ஃப்லோவில் எழுதியது. இதற்கெல்லாம் விவாதம் வைத்து விடாதீர்கள். ஏற்கனவே ஊர் ரொம்ப சூடா இருக்கு.

Unknown said...

Assalamu Alaikkum

Dear Brother Mr. AbuSharuk,

Thanks for valuing and expecting my writings. Its again beautiful strategy to put poetic flower carpet to encourage and invite the creative writers to contribute here in Adirai Nirubar. Insha Allah soon I would post my writings.

Jazakallaah khair

B. Ahamed Ameen from Dubai.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு