மெரினா பீச் 4

அதிரைநிருபர் பதிப்பகம் | November 02, 2014 | , , , ,


மாமா வந்தே எங்களிடம்
              “மதராஸ் போவோம்” என்றார்கள்
ஆமா வென்று பஸ்ஏறி
              அடுத்த நாளே வந்தோமே.

மாலைப் போதில் நாங்களெலாம்
              மரினா பீச்சில் நின்றோமே
சாலை முழுதும் பெருங்கூட்டம்
              சந்தோ சத்தின் அடையாளம்.

முதல்வர் கவர்னர் வந்தார்கள்
              முண்டி யடித்துச் சென்றோம்நாம்
இதமாய் இருந்து கண்டார்கள்
              ஏறிப் பறந்த ஊர்திகளை.

கூடிப் பறந்த விமானங்கள்
              குட்டிக் கரனம் போட்டவுடன்
ஆடிப் போனோம் அச்சத்தால்
              அதிசய மாகப் பறந்தனவே.

மஞ்சள், சிவப்பு, வெண்பச்சை,
              மங்கிய கறுப்புப் புகைகக்கி
நெஞ்சை அள்ளும் காட்சியுடன்
              நேராய்க் கூடிப் பறந்தனவே.

சாகச மெல்லாம் செய்தவுடன்
              சாலை கடந்து விமானதளம்
காகம் போல்மேல் பறந்துமிகக்
              கணக்காய் இறங்கி நின்றனவே!

அதிரை அஹ்மது

4 Responses So Far:

sabeer.abushahruk said...

கடற்கரையைக் கண்டதைவிட கண்டதைக் கவிதையாய்ச் சொன்னது கற்கண்டின் சுவை!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

Ebrahim Ansari said...

காக்கா அவர்களின் இந்தக் கவிதையைப் படிக்கும் போது வேறு சில பாடல்கள் / கவிதைகள் நினைவுக்கு வருகின்றன.

அடடா அடடா! அண்ணாமலை
அண்ணாந்து பாத்தா ஒண்ணுமில்லே
போகப்போக ஜவுளிக்கடை
போயிப் பாத்தா இட்லிக்கடை
இட்லிக்கும் சட்னிக்கும் சண்டை வந்துச்சாம்
பத்துகாசு டீ வந்து விலக்கிவிட்டுச்சாம்.

( டீ பத்து காசுக்கு விற்கும்போது எழுதப்பட்ட பாடல் )

=======================================
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்
சோளத்தட்டை பல்லாக்கிலே ஊர்வலமாம்
========================================

கூட்டாஞ்சோறு ஆக்கிக்கிட்டு
கும்மாளந்தான் போட்டுக்கிட்டு
குழவிக் கல்லுப் பிள்ளையை ஒன்னு
குஷியாக பெத்துக்கிட்டு

==============================

காக்கா காக்கா மை கொண்டா!
காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழங்கொண்டா
===========================

தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசிமாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
தின்னத் தின்ன ஆசை
இன்னும் கேட்டா பூசை

================

ஆஹா! கவிதையும் இலக்கியமும் எந்த வடிவிலும் இனிக்கிறதே!

காக்காவின் கைபட்டு இனிப்புடன் மணக்கிறதே!

sabeer.abushahruk said...

ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகா வீடு கட்டி
தோட்ட மிட்டு
செடி வளர்த்து
ஜோராக குடியிருப்போம்

Ebrahim Ansari said...

மியாவ் மியாவ் பூனைக் குட்டி
வீட்டை சுத்தும் பூனைக் குட்டி
அத்தான் மனசு வெல்லக்கட்டி - அவர்
அழகை சொல்லடி செல்லக்குட்டி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு