Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் ? 16

அதிரைநிருபர் பதிப்பகம் | November 02, 2015 | ,


என் பேஸ்புக் நட்பு வட்டத்தில் இருக்கும் பெரும்பாலான சகோதரர்கள் வளைகுடாவாசிகளாக இருப்பவர்கள். தங்கள் நாட்டு சட்டம் குறித்தோ அங்கிருக்கும் ஏதேனும் நல்ல விஷயங்கள் குறித்தோ பதிவிடுவது வழக்கம். கையில் என்ன சரக்கு இருக்கோ அது தானே பதிவாகவும் வரும். ஆனால் பாவம் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு நெகட்டிவ் கமென்ட்ஸ் பார்க்க முடிகிறது.

" ஏன் பாஸ் நீங்க சவுதியை தலைல வச்சுக்கிட்டு ஆடுறீங்க" ! 

ஒரு சகோதர் இதே போல் சவுதியின் ஒரு செயலை பாராட்ட, உடனே ஒரு சகோதரி ஓடிவந்து கேட்கிறார் , 

"இதெல்லாம் ஒக்கே தான்! வேலைக்கு போன நம்ம ஆளுங்க கையை வெட்டிடுறாங்க!"

எல்லாவற்றிலும் உச்சமாய் அமித் ஷா "பீகார் தேர்தலில் பாஜக தோற்றால் பாகிஸ்தான் பட்டாசு கொண்டாடி மகிழும்" என்று தேவையே இல்லாமல் போட்டியிடும் கட்சியாக பாகிஸ்தானை நினைத்து, அப்பாவிகளின் நெஞ்சினில் நஞ்சினை விதைக்கிறது. 


இவர்களின் கருத்துக்களே பதில்களில் உள்ள அபத்தம் இவர்களுக்கே புரியவில்லை. எந்த ஒரு செயலையும் செய்த நபர்களோடு முடித்து விடாமல் ஒட்டுமொத்தமாக ஓர் அமைப்பின் மீது பழியை சுமத்தும் செயல்களின் தொடர்ச்சி தான் பிம்பங்களாக அவர்களின் மனதில் செயலில் சொல்லில் வெளிப்படுகிறது. தனக்கு வேலை தந்து தன் பொருளாதாரத்தை உயர்த்திய ஓர் மண்ணின் பெருமையை வெளிப்படுத்துவதில் இவர்களுக்கு இருக்கும் சகிப்பற்றதன்மை தான் முதலில் கேள்விக்குறியது. 

வளைகுடா நாடுகளில் ஒன்றில் யாரோ ஒரு அரபியின் தீய செயலை வைத்து "முஸ்லிம்களின் லட்சணம் பாரீர்" என மீடியாக்கள் வைக்கும் ஓலங்களும், பாகிஸ்தானில் குண்டு வெடித்தால் "இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அட்டகாசம்" என பத்திரிக்கைகள் வைக்கும் ஒப்பாரிகளும் யாராலும் தட்டிக் கேட்கப்படுவதில்லை. அப்படியிருக்க அவர்களின் வாதங்களில் இருக்கும் அபத்தங்களை வெளிக்கொணர முயற்சித்தாலே அது சவுதி/பாகிஸ்தான் சப்போர்ட் ஆக பார்க்கும் நுனிப்புல் மேய்ச்சல் பார்வை எவ்வளவு அபாயகரமானது என்பதனை கேள்வி கேட்கும் சகோதர சகோதரிகள் ஏன் நினைப்பதில்லை ? 

நான் மலேசியாவில் பிறந்தவள். குடும்ப நண்பர்களாகிப் போன மலாய்காரர்களின் வீட்டிற்கு செல்வதுண்டு. அப்போது எனக்கு ஏழு வயது. டிவியில் இந்திய கலாச்சார சடங்குகள் குறித்தும் இந்தியாவின் நிலை குறித்தும் ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. அதனை பார்த்த அவர்களெல்லாம் என்னை கேலி செய்தார்கள், பயங்காட்டினார்கள். "இந்தியால இப்படிதான் காட்டுத்தனமான தோற்றத்தில் ஆண்கள் இருப்பாங்க, இந்தியா போனீன்னா சேரி பக்கத்தில் இருக்கும் குடிசை வீட்டில் தான் குடியிருக்கணும். அந்த புள்ளைக்கு ஏதோ செய்றாங்க ( பருவமடைந்த பெண்ணுக்கு செய்யும் சடங்கு) பாரு, அதே மாதிரி தான் உன்னை எல்லார் முன்னாடியும் உக்கார வச்சு தண்ணி ஊத்துவாங்க" என்றார்கள். உண்மையில் அவர்களின் அந்த சொல் என் மனதில் அச்சத்தை விதைக்க நாடு திரும்ப பெற்றோர்கள் எத்தணித்த போது பயத்துடனேயே நானும் என் தம்பியும் இருந்தோம். என் தாத்தாவை முதன் முதலாக ஏர்போர்ட்டில் பார்க்கும் போது என்னை கடத்திக் கொண்டு போவரைப் பார்ப்பது போலவே அச்சமாக பார்த்தேன். ஆனால் இங்குள்ள கலாச்சாரத்துடன் பழக்கப்பட்ட பின்னர் தான் இதன் ஆத்மார்த்தத்தை புரிந்து கொண்டேன். 

இப்படியாகத் தான் அடுத்த நாட்டைப் பற்றி ஊடகங்களில் வெளியாகும் நிகழ்வுகளை வைத்து பிம்பம் உருவாக்குகிறோம். ஒருவரின் செயலை வைத்து ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டின் மீது பழியை சுமத்துகிறோம். உண்மையில் ஒவ்வொரு முறையும் அசம்பாவிதங்கள் நடக்கும் போதெல்லாம் ஊடகங்கள் இஸ்லாத்தை விமர்சிப்பதை எதிர்த்து தான் முஸ்லிம்கள் எதிர்வினையாற்றுகிறார்கள். ஆனால் வழக்கம் போல் அதனை "முஸ்லிமுக்கு முஸ்லிம் சப்போர்ட்" என்ற குறுகிய கண்ணோட்டத்துடனேயே நோக்கப்படுகிறது. 

தன் வாழ்வாதாரத்தை உயர்த்தும் மண்ணிற்கு ஒருவன் நன்றிகடன் செலுத்துவதை மதப்பற்றாகத் தான் பார்க்க வேண்டும் எனில் அமெரிக்காவின் சட்டம் பற்றி ஆஹா ஓஹோ என புகழ் பாடுவதையும், கொட்டும் பனிக்குள்ளும் நின்று போட்டோ போடும் நிலையையும் ஏன் "அமெரிக்க வெறியாக" பார்ப்பதில்லை? ஐரோப்பிய வாழ் இந்தியர்கள் தான் வாழும் நாட்டை பற்றி எழுதும் போதெல்லாம் ஏன் அவை கேள்விக்குள்ளாக்கப்படுவதில்லை? ஆக பிரச்சனை பதிவிடும் நபர்களிடத்திலில்லை, முன்முடிவோடு பார்க்கும் ஒவ்வொருவரின் பார்வையில் தான் அடங்கியுள்ளது என்பது தெளிவு.

எந்த இஸ்லாமியனும் அநியாயத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதில்லை. நன்மையை ஏவவும் தீமையை தடுக்கவுமே தான் கட்டளையிடப்பட்டுள்ளதாக ஒவ்வொரு முஸ்லிம்களின் மனதிலும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை குடிகொண்டுள்ளது. ஒரு விஷயம் கொண்டுவரப்பட்டால் அதனை உடனே நம்பிவிடுவதை பாவச் செயலாக கருதுபவர்கள். அப்படிதான் அவர்களின் கொள்கை மூலம் வார்க்கப்பட்டுள்ளார்கள். இப்படியிருக்க, சென்னையின் மூலையில் இருந்துக்கொண்டு கூவும் ஊடகங்களின் வார்த்தைகளையெல்லாம் ஏற்று நம்பிவிட வேண்டும் என்றும் எதிர்வினையாற்ற வேண்டும் என்றும் எப்படி மற்றவர்களால் எதிர்பார்க்க முடிகிறது. ஒவ்வோர் நாணயத்திற்கும் இருபக்கம் உண்டென்ற நிதானத்தை வளர்த்து, அதனை அலச முயன்றாலும் அது மதவெறியாக பார்க்கப்படுவது யாரின் மீதான தவறு ?

சிந்திக்கும் திறன் கொண்ட நடுநிலை முஸ்லிம் எவரும் பாகிஸ்தானை கொண்டாடுவதில்லை. அங்கு நடக்கும் தீவிரவாதத்தை குறித்து நீங்கள் பாகிஸ்தான் மேல் சேர் அள்ளி தூற்றும் நேரம், அதன் பரிதாப நிலை குறித்து வருத்தங்கொள்வான். தாலிபான்களின் காட்டுமிராண்டிதனத்தை நீங்கள் விமர்சிக்கும் நேரம், அதில் பொதிந்துள்ள அரசியல் சூழ்ச்சிகளை அலசிக் கொண்டிருப்பான், வளைகுடா நாடுகளின் சட்டதிட்டங்களை நீங்கள் கண்டிக்கும் நேரம், அதில் மறைந்துள்ள சொல்லப்படாத / பேசமறுத்த விஷயங்களை புரிய வைக்க முயல்வான். ஒரு முஸ்லிம் செயலை வைத்து ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை விமர்சிக்கும் போது தான் கொண்ட கொள்கை மீதான அவதூறை களைய முயற்சிப்பதும், தன்னை சார்ந்த ஒட்டுமொத்த மக்கள் மீதும் தவறான முத்திரை குத்த முயற்சிகளை மேற்கொள்ளும் போது அதனை தடுக்க முனைவதும், அப்பாவி மனிதர்கள் ஒவ்வொருவரின் மீது வைக்கப்படும் தவறான பிம்பங்கள் குறித்தும் பரிதாபகர நிலை குறித்தும் வருத்தங்கொள்வதும் மதவெறி என்ற நோக்கத்தில் மட்டுமே புறந்தள்ளுவதும் விமர்சிப்பதும் அறிவுடைய செயலாகாது. 

இஸ்லாமியர்களை புரிந்துக் கொள்ள முயற்சியுங்கள்! ஊனக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்... திறந்த மனநிலையுடன் ஒவ்வொரு விஷயங்களையும் அலசுவோம். நம்மிடம் கொடுக்கப்படும் செய்திகளை அப்படியே நம்பி நம்பியே நாம் பழகிவிட்டதால் தான் முதல் பக்க செய்திக்கும் இறுதி பக்க செய்திக்குமுள்ள தொடர்பினை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. மனித ரோபோக்களாகி விட்டோம். எதை நாம் நம்ப வேண்டும் என்பதனை ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசியல்வாதிகள் திட்டமிடுகின்றன. எனில் எப்போது தான் நாம் நாமாக இருக்க போகிறோம்? சுயமாக சிந்திக்கவிருக்கிறோம்? ஆழமாக அலசவிருக்கிறோம் ? 

யோசியுங்கள்! நீங்கள் எப்படி முட்டாளாக்கப்பட்டுள்ளீர்கள் என்பது தெளியும்! 

ஆமினா முஹம்மத்

16 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

பெரும்பாலான மக்களின் எண்ணங்களை சுற்று சூழலும் ஊடகங்களும் உருவாக்கிவிடுவதால்மனிதனின்சுயசிந்தனை -பகுத்தறிவு மழுங்கிபோய் அவன் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையாகிறான். இதுவிதைக்கப்படும்மனோவியாதி. பகுத்தறிவு வறண்டு சுயசிந்தனைபஞ்சம் அரியனைஏறிஆட்சிசெய்கிறது.Free Thinkers Movement ஒன்று தொடங்கி அதில்மனோவியல்ரீதியில்மனிதனின் குறுக்குசிந்தனை புத்தியை போக்கி நேர்வழிசிந்தனா சக்தியைஊட்டலாம் .எப்போதுதான்நாம்நாமாகவேஇருக்காப் போகிறோம்? அப்போதாவ துநாம்நாமாகஇருப்போமா? Banyak thrimak kasih Puan Ameena Mohamed untuk artikel anda yang baik .

sabeer.abushahruk said...

சிந்திக்கத் தூண்டும் சிறப்பான கட்டுரை. மாற்று மதச் சகோதரர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய பதிவு!

நன்றி! வாழ்த்துகள்!

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் பெயரால் வழக்க வழக்கங்களால் கலாச்சாரத்தால் கட்டடக்கலையால் துணி உடுப்பததில் வழிபாடு செய்வதில் ......அனைத்து வகையிலும் அரேபிய பிம்பம்தான் முன் உதாரணம். இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் அரேபியாவில் உள்ள ஒரு போா்வீரன் பெயரையோ ஒரு மன்னா் பெயரையோ தன் குழந்தைக்கு வைப்பாா்களே ஒழிய இந்தியாவில் தோன்றிய உயா்ந்த பண்பாளா்கள் பெயரை -அாிச்சந்திரன் -அா்சுனன் - இராமன் - திலிபன் -இளங்கோ - ராஜேந்திரன் -வைக்க மாட்டாா்கள். குழப்பமே இங்குதான்.முஸலீம்களாக வாழ்வதற்கும் அரேபியனாக வாழ்வதற்கும் எனன வித்தியாசம் ? எனவே அரேபியாவையும் பாக்கிஸ்தானையும் குறை கூறுவது இந்திய முஸ்லீம்களுக்கு சங்கடமான விசயம்தான். கிாிக்கெட்டில் பாக்கிஸ்தான் வீரா் ரன் அடித்தால் இந்திய முஸ்லீம்கள் கூடுதலாகவே கைதட்டுவாா்கள் என்பது உண்மை.

Dr.Anburaj said...

இதற்கான அவர்களை குற்றம் சுமத்தத் தேவையில்லை. இந்திய முஸ்லீம்கள் தங்களுக்கென்று தனித்தன்மை கொண்ட ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றாா்கள்.அரேபிய சாா்பு பயனற்றது என்பதை உணா்ந்துள்ளாா்கள்.

Unknown said...

Assalamu Alaikkum

Good article of important concerns. Hope it makes understanding among people in multicultural and multi-religious society in countries like India.

Islam becomes global, so criticism about Islam also global.

Let constructive or destructive criticism grow Islam beyond the borders, healthy debates are leading to discern the truth.

Islamic faith is universal. !!! The uniqueness and unity is established by directing focus towards a Masjid in Makka while praying from all parts of the world.

God Almighty's final revelation Quran is preserved till date in original language Arabic. Influence of Arabic language from call for prayer, praying and naming will be permanent in Islamic practice.

Local cultures, dresses are regional, sports and social activities are national but not religious. As far as those activities are not interfering against religious faith and practice, its acceptable.

No violence in Islam but defense is OK. Can easily coexist with other religious people. But may look strange due to the factor of universality in practice.

Its easy and straightforward to follow and practice Islam from any part of the world.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

ஆமினா said...

சகோ அன்புராஜ்

//இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் அரேபியாவில் உள்ள ஒரு போா்வீரன் பெயரையோ ஒரு மன்னா் பெயரையோ தன் குழந்தைக்கு வைப்பாா்களே ஒழிய இந்தியாவில் தோன்றிய உயா்ந்த பண்பாளா்கள் பெயரை -அாிச்சந்திரன் -அா்சுனன் - இராமன் - திலிபன் -இளங்கோ - ராஜேந்திரன் -வைக்க மாட்டாா்கள்.///

ஏன் அக்பர், சாஜகான், திப்புசுல்தான், கான்சாகிப், ஹுமாயுன் முதலிய வீரர்களின் பெயரையும் கூட இந்துக்களும் கிருஸ்தவர்களும் வைத்துக்கொள்வதில்லையே. இன்னும் அந்தந்த பகுதிகளில் வாழ்ந்து மறைந்த இஸ்லாமிய போர் வீரர்களின் பெயர்களையும், தன் பகுதிக்காக உழைத்த முஸ்லிம் தலைவர்களின் பெயரையும் வைத்துக்கொள்ள முன்வருவதில்லையே?

தன் மத நம்பிக்கைப்படி தன் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதையும் குறை கண்டால் என்னவென்பது ??


இன்னும் கிரிக்கேட்டையும் நடிகர்களின் வழிபாடுகளையுமே நாட்டுப்பற்றுக்கு அளவுகோலாக கொள்ளும் மடமைத் தனம் நம்மிலிருந்து அகற்றப்படவேண்டிய ஒன்று.

அந்தந்த மதத்தின் வழிபாட்டுத் தலங்கள் அந்தந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் கட்டப்படுவது ஒன்றும் பிரச்சனைக்குரிய விஷயமல்ல. சர்ச்சினை கோயில் வடிவில் கட்டமாட்டார்கள். கோயிலை பள்ளிவாசல் வடிவில் கட்டமாட்டார்கள்.

எந்த முஸ்லிமும் அரேபிய/ முகலாய கட்டடக் கலையில் வீடு கட்டுவதும் இல்லை. இஸ்லாமியர்கள் கட்டும் கைலியும் வேட்டியும் தமிழர்களின் கலாச்சாரத்தில் வந்தவை தான். அரபிக்களை போல் நீள வெள்ளை அங்கிகளை எந்த முஸ்லிமும் இந்தியாவில் உடுத்தியதில்லை. அப்படிபார்த்தால் இப்போது நாம் போட்டுக்கொள்ளும் ஜீன்ஸ், பேன்ட், டீசர்ட் அனைத்தும் மேலைநாட்டிலிருந்து வந்தவை.எனில் நாம் ஆங்கிலேய அடிமைகளா?

எல்லாவற்றையும் குறைக்கண்ணோடே பார்க்கப் பழகிக்கொண்டதால் முஸ்லிம்களின் செயல்கள் அனைத்தும் தனித்து தெரிகிறது. சிறிதும் பெரிதாக பார்க்கத் தோன்றுகிறது.

//தனித்தன்மை கொண்ட ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றாா்கள்.///
நிச்சயமாக இல்லை! மேலைநாட்டு மோகத்தில் நாம் ஊறிவிட்டதால் பழமையான தமிழ்/இந்திய கலாச்சாரத்தினை கடைபிடிக்கும் அவர்கள் நம் கண்ணுக்கு வித்தியாசமாக தெரிகிறார்கள்.

மொட்டைத்தலைகள் கொண்ட தீவில் முடியுடன் வாழ்பவன் கோமாளியாக தெரிவது போல் தான் இதுவும் :)

Yasir said...

மாஷா அல்லாஹ் சிறப்பான / சீரியஸான பதிவு...பிற மத சகோதரர்கள் இஸ்லாமியர்களை புரிந்து கொள்ள உதவும் ஆக்கம்....கையாளகாத இந்த அரசாங்கம் ஓரு சில காட்டுமிரண்டி காவிகளை ஏவி விட்டு..ஒற்றுமையுடன் வாழும் இந்து முஸ்லிம் சமுதாயத்தைப் பிளவுப்படுத்த பார்க்கின்றது....வென்றெடுப்போம்/வேரருப்போம் இந்த சூழ்ச்சியை விரைவில் எம் பிற மத சகோதர்களின் துணையோடு

அதிரை.மெய்சா said...

மததுவேசத்தை ஏற்படுத்துவோர் உணர்வதற்கு அறிந்துகொள்ளவேண்டிய நல்ல பதிவு . நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.

Ebrahim Ansari said...

அறிமுகமாகி இருக்கும் புதுமுக எழுத்தாள சகோதரியை வரவேற்கிறோம்.

முதல் கட்டுரையின் STUFF உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்க வைக்கிறது.

பாராட்டுக்கள். நிறைய எழுதுங்கள் என்ற கோரிக்கையுடன் வாழ்த்துக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//புதுமுக எழுத்தாளர் சகோதரியை வரவேற்கிறோம். //

அன்பு காக்கா,

இவர் புதுமுகம எழுத்தாளர் அல்ல... திறம்பட எழுதும் பழுத்த விமர்சகர் மற்றும் இஸ்லாமியப் பெண்மனி தளத்தின் முக்கிய பங்களிப்பாளரும் ஆவார் !

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

அன்பின் தம்பி !

அப்படியானால் இவரது கட்டுரை ஒன்று ஏற்கனவே பதிவானதாக நினைவு.

தங்களின் தனி மின் அஞ்சலில் உள்ள தகவலை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கருத்திட்டுள்ளேன் என நினைக்கிறேன்.

புதுமுகம் என்ற வார்த்தையை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.

இவரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

Iqbal M. Salih said...

மாஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ்!

மரியாதைக்குரிய சகோதரி அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்!

தங்களின் அறிவார்ந்த, துணிச்சலான எழுத்து, அதிரை நிருபரை இனிமேல் நிறையவே அலங்கரிக்கும் எனும் எதிர்பார்ப்புகளுடன் சகோதரன்
- இக்பால் ஸாலிஹ்

அப்துல்மாலிக் said...

எல்லாவற்றிருக்கும், மத சகிப்புத்தன்மையை புதைப்பது இந்த ஒரு வரி மட்டுமே //ஆக பிரச்சனை பதிவிடும் நபர்களிடத்திலில்லை, முன்முடிவோடு பார்க்கும் ஒவ்வொருவரின் பார்வையில் தான் அடங்கியுள்ளது என்பது தெளிவு.//

crown said...

எதை நாம் நம்ப வேண்டும் என்பதனை ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசியல்வாதிகள் திட்டமிடுகின்றன. எனில் எப்போது தான் நாம் நாமாக இருக்க போகிறோம்? சுயமாக சிந்திக்கவிருக்கிறோம்? ஆழமாக அலசவிருக்கிறோம் ?

யோசியுங்கள்! நீங்கள் எப்படி முட்டாளாக்கப்பட்டுள்ளீர்கள் என்பது தெளியும்!

---------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.மாஷா அல்லாஹ்! தெளிந்த நீரோடையாய் கருத்து.இதில் மூழ்கிஎழும் மாற்று மத சகோதர,சகோதரிகளுக்கு ஒரு தெளிவு பிறக்கும் என நம்புகிறேன். நாம் சொல்லிக்கொண்டே இருப்போம் கயவர்களின் வேர் அறுப்போம். அருமையான காலத்திற்குத்தேவையான ஆக்கம்!சரியான சிந்தனை!

Unknown said...

'சுவனப் பிரியன்' என்ற தளத்தில் இக்கட்டுரை வந்திருந்தால், Dr. அன்புராஜ் போன்றவர்களின் வாசிப்புக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்குமே என்ற எண்ணத்துடன் கட்டுரையை வாசித்துக்கொண்டே வந்தேன்.

வந்துவிட்டாரப்பா Dr...!

டாக்டர் சார்! 'அதிரை நிருபர்' தளமெல்லாம் உங்கள் பார்வைக்கு வருகின்றதா?! ஏன் டாக்டர் இஸ்லாத்தின் மீது இத்துணைக் காழ்ப்புணர்வு? நடுநிலைக் கண்ணும் கருத்தும் கொண்டு சிந்தியுங்கள் என்று உங்களுக்குப் பரிந்துரை செய்கின்றேன்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

என்ற வள்ளுவப் பெருந்தகையின் அறவுரை உங்களுக்கும் தெரியும்தானே?

நல்ல கருத்துகளை நடப் பழகுங்கள். நச்சு விதைகளை விதைக்காதீர்கள். please.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு