Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அகத்தின் அழகு 27

அதிரைநிருபர் பதிப்பகம் | November 24, 2015 | , ,


என் அறிவார்ந்த பதில்களை சொல்லிக்கொண்டிருப்பது
நான் மூடி மறைத்த
நிழலாடும் முட்டாளின் சொற்கள்!

என் தைரியங்களென
நான்  வெளிகாட்டுபவையெல்லாம்
கோழையின் வேஷங்கள்!

என் சிரிப்புக்கு பின்னால் ஒளிந்திருக்கும்
வலிகளை நீங்கள் அறியப் போவதில்லை

என் சோகங்களுக்கு அப்பாலிருக்கும்
புன்னகைகள் உங்களுக்கு தெரியப் போவதில்லை!

முகமூடிகள் நிறைந்த மாய உலகில்
என் நிஜ உலகை அப்பட்டமாய் காட்ட
நானென்ன  முட்டாளா?

என் நிஜஉலகில் பிணைந்திருக்கும்
திருப்பங்களின் சுவாரசியங்களைப்
புரிந்துகொள்ளுமளவிற்குத் தான் நீங்கள் பக்குவப்பட்டவர்களா?

நிலை இப்படியிருக்க!
எதைக்கொண்டு என்னை எடைபோடுகிறீர்கள்!

நானே கொடுத்துக்கொண்டிருக்கும்
தரவுகளின் வழியே

என்னையே கணிக்கும்
உங்களின்  பேராற்றலினை

என் கடைநிலை சிற்றறிவும்
எள்ளிநகையாடுகிறது!

ஆமினா முஹம்மத்

27 Responses So Far:

Unknown said...

புதுக் கவிதையாயிருந்தாலும், புரிஞ்சிக்கிறது, கொஞ்சம் கஷ்ஷ்ஷ்ட்ட்டமா இருக்குதே! அதிகாலையில் வாசித்ததனாலோ?

Ebrahim Ansari said...

அன்புள்ள காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்கள் சொல்வது போல புரிவது கஷ்ஷ்ஷ்டம்தான். ஆனால் மிகவும் சிரமப்பட்டு செக்கடிக் குளத்துக்கு நீர் கொண்டு வந்த நிலையில் அதற்குள் வீட்டின் சாக்கடை நீர் கலக்கிறது என்ற நிலை ஏற்பட்டிருப்பதையும் அதைக் கண்டிக்காமல் பலர் பம்முவதையும் , சிலர் நினைத்தால் ஊரில் எத்தனை வருடங்களுக்கும் தண்ணீர் வரி கட்டாமல் இருக்கலாம் அதைத் தட்டிக் கேட்க முடியாது என்பதையும் - இன்னும் இது போன்ற கண் முன்னாள் காணும் சில சங்கதிகளை

//என் அறிவார்ந்த பதில்களை சொல்லிக்கொண்டிருப்பது
நான் மூடி மறைத்த
நிழலாடும் முட்டாளின் சொற்கள்!

என் தைரியங்களென
நான் வெளிகாட்டுபவையெல்லாம்
கோழையின் வேஷங்கள்!

என் சிரிப்புக்கு பின்னால் ஒளிந்திருக்கும்
வலிகளை நீங்கள் அறியப் போவதில்லை

என் சோகங்களுக்கு அப்பாலிருக்கும்
புன்னகைகள் உங்களுக்கு தெரியப் போவதில்லை!

முகமூடிகள் நிறைந்த மாய உலகில்
என் நிஜ உலகை அப்பட்டமாய் காட்ட
நானென்ன முட்டாளா?//

என்ற வரிகளுடன் பொருத்திப் பார்க்கும் போது எனக்கு ஏதோ புரிகிறது.

நான் சரியாகப் பேசுகிறேனா? அல்லது எனக்கும் புரியவில்லையா?

//நானே கொடுத்துக்கொண்டிருக்கும்
தரவுகளின் வழியே

என்னையே கணிக்கும்
உங்களின் பேராற்றலினை

என் கடைநிலை சிற்றறிவும்
எள்ளிநகையாடுகிறது!//

எனக்கென்னவோ இன்னும் என்னென்னவோ புரிகிறது.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.கவிதையை வாசித்து சிலாகித்து எழுதும் முன் எனக்குத்தோன்றியது! தலைப்பு சரியா? முகமூடி அல்லது முரன் என்றிருக்கலாமோ? என் சிற்றறிவில் பட்டது! மேலும் கவிதாயினிக்கு யார்மேல் கோபம்?வெளிப்படுத்தலைவைத்து தவறாக எடை போட்டவர்களுக்கான பதிலா இந்த கவிதை ஆனாலும் மனோதத்துவ ரீதியான தரமான கவிதை!

crown said...


என் அறிவார்ந்த பதில்களை சொல்லிக்கொண்டிருப்பது
நான் மூடி மறைத்த
நிழலாடும் முட்டாளின் சொற்கள்!
-------------------------------------------------------------------------
அருமை! நான் பேச நினைதவையெல்லாம் என் கருத்தின் பிம்பமன்று! பொதுவில் சில காரணிக்களுக்காக நான் மதிக்காத சிலரின் வார்தைகளும்தான் இதில் அவர்களின் ஆளுமை,அல்லது செல்வாக்கு இன்னும் ,அதிகாரம் அவர்களுக்கு பதிலான நான் அரங்கேற்றி இருக்கிறேன்! ஆனால் என் கருத்து வேறு! காலத்தின் கட்டாயம் இதை வெளிப்படுதவேண்டிய நிர்பந்தம்!

crown said...

என் தைரியங்களென
நான் வெளிகாட்டுபவையெல்லாம்
கோழையின் வேஷங்கள்!
----------------------------------------------------
பலே!பலே! என் தைரியம் இவ்வளவு சின்னதா? அது விருட்சம்!வெளிச்சத்துக்கு வராத சங்கதி! தேவைபடும் காலம் வெளிப்படும் அதுவரை சில போலி வீரர் பெயர்தாங்கிய கோழைகளின் வெளிப்பாடு! தீரமிக்க வீரம் இருந்தால் தாமே வெளிப்படுத்தலாமே? எல்லாவற்றிற்கும் ஒர் பினாமி"அவர்களுக்கு அவசியம்! நம்மை சார்ந்தவரிகளின் சவுகரியத்துக்காக அவர்களின் கோழைத்தனத்தை வீர சட்டை போட்டு நான் போட்டுகொண்டிருக்கிறேன் அவ்வளவே!

crown said...

சிறிது ஜோலிக்குப்பிறகு தொடர ஆசை!அது வரை மாசலாமா?பிறகு பேசலாமா?

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய அஹ்மது காக்கா,

கொங்குதேர் வாழ்க்கைக்கு 'விரிவுரை' இல்லாமல் புரிந்து கொள்வதில் பிரச்னையாகி 'திருவிளையாடலில் ஒன்று' என்று தப்பித்த கதைகள் வாசித்த நினைவு தங்கள் கருத்தைக் கண்டதும் வந்தது.

சகோதரி எழுதியதைப் போன்ற நவீன கவிதைகள் பெரும்பாலும் புரிவதில் சிரமம் உண்டுதான்.

நான் புரிந்து கொண்டது:

நான்
வெளிப்படுத்துபவைகளைக் கொண்டே
யாரும்
என்னைப் பற்றி அனுமானிக்க முடியும்

வேடதாரிகளாலும்
விஷமிகளாலும் நிரப்பப்பட்டுள்ள
இவ்வுலகில்
என்னைப்பற்றிய
சரியான விமரிசனம்
எவருக்குமே சாத்தியப்படாதவாறு
என்
இயல்புகளை மறைத்து
நான் விரும்பியவாறே
என்னை நான் அறியத் தருகிறேன்

ஆகையால்
என்னை அறிந்துகொண்டுவிட்டதான
உங்கள்
அறிவிப்புகள் நகைப்புக்குரியவை!

(க்ரவ்ன், அபு இபுவிடம் கேளுங்கள், 'முரண்' நான் பரிந்துரைத்த தலைப்பு)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அது வரை மாசலாமா?பிறகு பேசலாமா? //

ஜோலியை முடித்துட்டு வாபேசலாம் ! :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//(க்ரவ்ன், அபு இபுவிடம் கேளுங்கள், 'முரண்' நான் பரிந்துரைத்த தலைப்பு)//

கவிக் காக்கா:

நான் கண்டது கண்ணாடியின் பிம்பத்தையல்ல... அதன் முன்னால் நிற்கும் நிஜத்தை... ஆகவே அது அகத்தின் அழகானது !

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய சகோதரி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நன்றி:

அருமையான ஒரு நவீன கவிதை வாசிக்கத் தந்தமைக்கு நன்றி.

பாராட்டு:

உரத்த சிந்தனாவாதிகள்தான் சுயம் விளம்பும் சாக்குப்போக்கில் சமூக அவலங்களைச் சாடுவார்கள். இது ஒரு யுக்தி. பாராட்டத்தக்க யுக்தி.

பரிந்துரை: அவலங்களை எள்ளிநகையாடத் துணிந்தபிறகு தன்னிலை தாழ்த்தி முட்டாளாக என்று முன்மொழிய அவசியம் இல்லை. இன்னும் கொஞ்சம் தைரியத்தோடு எழுதுங்கள்.

வாழ்த்துகள்: வெட்டிவம்பு, குறுஞ்செய்திகள் என முகநூலில் அலைகழிந்துபோய்க் கொண்டிருக்கும் நல்ல எழுத்தாளர்களுக்கு மத்தியில் இத்தளத்தில் இலக்கிய ரசனை மிக்கவர்கள் தனித்து விடப்பட்டிருக்கிறோம்.

வாருங்கள்; நிறைய எழுதுங்கள்!

இத்தளம் சார்பாக வாழ்த்துகள்.

sabeer.abushahruk said...

முன்பு திண்ணை டாட் காமில் நான் விளம்பியது. ஒரு ரெஃபெரென்ஸுக்காக கருத்தாய்ப் பதிகிறேன்:


நீர்நிலையை யொத்த…!

என்னை எடுத்துக்கொண்டு
யாராவது எனக்கொரு
அதிர்வுகளற்ற
ஆன்மாவைத் தாருங்களேன்

நீர்நிலையின் மேற்புறத்தின்
பரப்பு இழு விசையில்
சிறு
பொத்தல்கூட விழாமல் நடமாடும்
நீர்ப்பூச்சியை யொத்த
நேர்த்தியோடே என்னுடன் உறவாடுங்கள்

சர்வமும் சாந்தியான
சீவிதமே என் நாட்டம்

ஒரு
புள்ளியெனக்கூட வேதனை
செய்யாதிருப்பீர்
அது
வட்டமெழுப்பி
சடசடவென விட்டங்கள் கூட்டி
பெரும்
வாட்டமாக விரிந்துபோகிறது

வதனத்தில்
சலனங்களற்றுப் போனால்
சவமாகி விடமாட்டேன்

உள்ளே
உராய்வுகளின் உஷ்னமற்ற
நீச்சலுக்கும்
செவுள்வழி சுவாசித்துப் பிரித்தெடுக்க
பிராண வாயுவும்
ஆழத்தில்
வண்ணவண்ண நீர்த் தாவரங்களுமென
வளமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

கூழாங்கற்களைப் போன்றே
முத்தைச் சுமக்கும்
சிப்பிகளும் சிதறிக்கிடக்கும்
அடி மனத்தில்
ஆர்ப்பரிப்பில்லாத அமைதியை
அனுபவித்துப் பார்க்க வேண்டும் நீங்கள்

என்னோடு சேர்ந்தே
தன்னுயரம் நீட்டும்
தாமரை உயர
தண்ணீர் தரும் தயாளன் நான்

அதிர்வுகளின்றியே
என்னைக் கடந்து செல்லுங்கள்
ஏனெனில்
எனக்குள்ளும் இயக்கமற்றுக் கிடக்கின்றன
எத்தனையோ சுனாமிகள்!

www.thinnai.com

crown said...

என் சிரிப்புக்கு பின்னால் ஒளிந்திருக்கும்
வலிகளை நீங்கள் அறியப் போவதில்லை

என் சோகங்களுக்கு அப்பாலிருக்கும்
புன்னகைகள் உங்களுக்கு தெரியப் போவதில்லை!
-------------------------------------------------------------------------------------------------
சத்தமே இல்லாமல் மிக அழுத்தமாக சாதித்த எத்தனையோ பேருகளின் வலிகள் தெரியாது அவர்கள் ஒப்பனை சிரிப்பு சிரித்து தியாகம் செய்தவர்கள் தாம்!அதுபோல் துன்பத்திலும்,துயரத்திலும் அவர்களின் ஆசாத்திய தைரியத்தின் புன்னகை புரியபடுவதில்லை!அவர்களின் துயரம் கூட ஒருவித கர்வம் தாங்கிய இன்பமாகவே அவர்கள் உணர்வார்கள்!இவர்களேல்லாம் சாமனியர்கள் போல் காட்சித்தரும் சாதனையாளர்கள்!

crown said...

முகமூடிகள் நிறைந்த மாய உலகில்
என் நிஜ உலகை அப்பட்டமாய் காட்ட
நானென்ன முட்டாளா?
---------------------------------------------------------------------
போலி அன்பர்கள் நிறைந்த உலகில் என் இயல்புகளை காட்ட நான் ஒன்றும் சிற்றிவாளன் அல்லன்!ஆனாலும் என்னை மறைத்து மற்றதை வெளிப்படுத்தும் பகட்டும் இல்லை!உண்மை தன்மையை என்றும் என்னுள் ஒழுக்க விட்டவன்!ஆனாலும் எனக்கும் சிறு முகமூடி தேவை அதில் என் நிச முகம் சிதையாமல் இருக்கவே!

crown said...

நானே கொடுத்துக்கொண்டிருக்கும்
தரவுகளின் வழியே

என்னையே கணிக்கும்
உங்களின் பேராற்றலினை

என் கடைநிலை சிற்றறிவும்
எள்ளிநகையாடுகிறது!
------------------------------------------------------
அஃதே!அவ்வளவே! ஆனாலும் சிறுகவிதை வழியே என்னை உடைத்து கருத்து படைத்தேன் இத்தனை அழுதமிக்க கவிதை ,சிறிதாய் சவாலை தந்தது நிஜம்! இப்படி அருமையான கவிதைகளை கவிதாயினி தொடர்ந்து தரனும்.!விளக்கம் புரிந்து கொள்ளபடவில்லையெனின் என் சிற்றறிவு இவ்வளவே என என்னை பெருந்தன்மையாக மன்னித்துவிடவும்!கவியரசுவும்,மேதைகளும் வந்து போகும் தளத்தில் சிறு எறும்ப்பு நான்!

crown said...

நீர்நிலையின் மேற்புறத்தின்
பரப்பு இழு விசையில்
சிறு
பொத்தல்கூட விழாமல் நடமாடும்
நீர்ப்பூச்சியை யொத்த
நேர்த்தியோடே என்னுடன் உறவாடுங்கள்
---------------------------------------------------------------
கவியரசே அருமை! என் மூக்கு வரை உங்களின் சுதந்திரம்!உங்கள் செய்கைகள் என் உரிமையை கிழிக்காமல் இருக்கட்டும்! நீர் பூச்சியின் இயக்கத்தின் மூலம் சுட்டிய கெட்டிக்கரத்தனம்!
-----------------------------------------------------------

crown said...

அதிர்வுகளின்றியே
என்னைக் கடந்து செல்லுங்கள்
ஏனெனில்
எனக்குள்ளும் இயக்கமற்றுக் கிடக்கின்றன
எத்தனையோ சுனாமிகள்!
---------------------------------------------------
ஆஹா! சபாஷ்! தீண்டாதே ,எல்லைதாண்டாதே தீண்டினால் என்ணுள் இருக்கும் சுனாமியில் சில பொங்கிவிடும்!இந்த மனனிலையில்தான் இப்ப இந்தியாவில் நம்மவர்,தாழ்தபட்டவர்களின் நிலை .காவிகள் புரிந்து கொண்டால் காவிகளுக்கு நலம்!

sheikdawoodmohamedfarook said...

//என்சிரிப்புக்குபின்னால்ஒழிந்திருக்கும் வலிகளை நீங்கள் அறியப்போவதில்லை//அற்ப்புதமானதத்துவவரிகள்.

அதிரை.மெய்சா said...

இதயப்புளம்பலை அற்புத வரிஎடுத்து கவிதையாய் வர்ணம் தீட்டியுள்ளீர்கள்.

ஒவ்வொரு வரிகளிலும் ஏக்கப்பெருமூச்சுடன் தைரியமும் வெளிப்படுகிறது. அருமை



ஆமினா said...

அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

மாற்றங்கள் செய்ய அனுமதி தந்தும் எனது படைப்பை அப்படியே வெளியிட்டு, புதியவர்களை ஊக்குவிக்கும் உளவியலை கற்றறிந்த அதிரை நிருபர் நிர்வாகிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் :)

கருத்திட்ட அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைர். தனித்தனியே (reply) கருத்திட்டால் நான் சொல்ல வரும் விஷயங்கள் சிதறும் என்பதால் அனைவருக்கும் இதிலேயே நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் . ( மட்டுமல்லாமல் , பேஸ்புக் மார்க்கின் ரிப்ளே திட்டத்தையே கடுமையாக எதிர்ப்பவர் இத்தளத்தில் நிர்வாகியாக இருப்பதும் ஒரு காரணம் :) )

வளரும் எழுத்தாளர்களுக்கு ஊக்குவிப்பு என்பது மிகப்பெறும் ஊட்டச்சத்து உணவு. பேஸ்புக்கின் அசூர வளர்ச்சியால் இணையதளங்களில் கருத்துரையிடுவோர் எண்ணிக்கையும் சுருங்கிவிட்டிருந்தது. பல வலைதளங்கள் முடங்கி கிடப்பதே நம் எழுத்து யாரிடமும் சென்று சேரவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடு தான். ஆனால் இத்தளத்தில் பல சகோதரர்கள் கருத்திட்டு விவாதிப்பது உண்மையில் வியப்பையும் இன்னும் எழுத வேண்டுமென்ற ஆர்வத்தையும் தருகிறது!

எனக்காக மட்டும் சொல்லவில்லை ... உங்களின் இந்த நடைமுறை , உண்மையில் மறைமுகமாக பலருக்கும் உத்வேகத்தை கொடுக்கும்.

நிற்க,

முகநூலில் பதிவாளர்களால் பதியப்படும் அனைத்தும் முதலில் அன்னாரின் சொந்த வாழ்க்கையோடு பொருத்தி பார்க்கும் நிலையே நீடிக்கிறது. இந்த அசவுகரியத்திற்காகத்தான் புனைப்பெயர் எழுத்தாளர்கள் உருவானார்களோ என்னவோ :)

2 வரி கவிதைகளுக்கு கூட 20 தன்னிலை விளக்க கமென்ட்களும், கருவினை விளக்கும் கமென்ட்களும் போட்ட அனுபவங்களெல்லாம் எச்சரித்துக்கொண்டிருக்க இந்த கவிதையை எழுதி வைத்தும் ஒரு வார காலம் என் முகநூலில் பதிக்காமல் தவிர்த்துக்கொண்டு வந்தேன். அதிரை நிருபர் தளத்திற்கு தந்ததும் வெளியிட்டார்கள். கமென்ட்களையெல்லாம் ஆரம்பம் முதல் கவனித்தே வருகிறேன். தான் சொல்ல வரும் கருத்தினை வேறொருவர் சரியாக புரிந்துக்கொள்ளும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! இன்று அந்த உணர்வை அனைவரும் எனக்கு தந்துள்ளீர்கள். மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


இஸ்லாமிய பெண்கள் என்றாலே ஆண்களால் அடக்கப்பட்டவர்கள், பேசவோ சுதந்திரமாய் கருத்துகள் சொல்லவோ அனுமதியளிக்கப்படாதவர்கள் என்ற அறிவீன கருத்துக்களையெல்லாம் தகர்த்தெறிந்துக்கொண்டிருக்கின்றன ஒரு பெண்ணிற்கான உங்களின் ஊக்குவிப்புகள்

ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோஸ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

-ஆமினா முஹம்மத்


m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கருத்திட்ட அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைர். தனித்தனியே (reply) கருத்திட்டால் நான் சொல்ல வரும் விஷயங்கள் சிதறும் என்பதால் அனைவருக்கும் இதிலேயே நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் . ( மட்டுமல்லாமல் , பேஸ்புக் மார்க்கின் ரிப்ளே திட்டத்தையே கடுமையாக எதிர்ப்பவர் இத்தளத்தில் நிர்வாகியாக இருப்பதும் ஒரு காரணம் :) )//

வலைப்பூக்களில் `like` ஆப்ஷன் தரல...! :) இதனையும் கண்டிக்கனும்...

கச்சிதமாக இன்றைய வலைப்பூக்களின் நிலையை எடுத்துச் சொன்ன விதமும் அதற்கு அளித்த விளக்கமும் அருமை...!

சொல்லித் தெரிவதில்லை பூக்கள் மனக்கும், சர்க்கரை இனிக்கும் என்று இதுபோல் சகோதரியின் எழுத்தும் எந்த கருப் பொருளைக் கொண்டாலும் அதில் நிலைத்திருக்கும் அதன் கருத்துக்கள் அனைத்தும் திளைத்திருக்கும்.

விமர்சனமாகட்டும், ஆக்கபூர்வமான விழிப்புணர்வுகளாகட்டும், பெண்மை போற்றும் விவாதக்களமாகட்டும்... ஏன் கவிதைகளாகட்டும்.. அனைத்திலும் கலந்து கட்டும் திறமை வியக்கவே வைக்கும் வாசிப்போரை...

இன்னும் எழுதனும் எங்கும்...!

தொடர்ந்து எழுதனும் இங்கும்..!

இன்ஷா அல்லாஹ் !

Unknown said...

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரி ஆமினா முஹம்மதின் கவிதையையோ கட்டுரையையோ, எங்கோ வாசித்த நினைவு. புலர்காலையில் புலனில் பட்டவுடன் படிக்கத் தொடங்கினேன்; அதனால் புரியவில்லையோ என்றும் ஒன்னேமுக்கால் வரியில் கருத்திட்டேன்.

அதனைத் தொடர்ந்து இத்தனை அறிஞர்கள் தத்தம் அறிவுத் திறனைப் பயன்படுத்தி, تفسير (விரிவுரை) தந்த பிறகு, இந்தப் 'பாமரனுக்கு'ப் புரிய வருவது இதுதான்:

சகோதரியின் ஒவ்வொரு பத்தியையும் கருவாகக் கொண்டு, ஒரு காவியமே எழுதலாமே!

என் முதற்கருத்தைக் குசும்பாகவோ, குறும்பாகவோ, குறையாகவோ யாரும் எடுத்துக்கொள்ளாதீர்கள், including the poetess.

அடக்கத்துடன்,
அதிரை அஹ்மத்

ZAKIR HUSSAIN said...
This comment has been removed by the author.
ZAKIR HUSSAIN said...

கவிதை பிறப்பது உண்மையுடன் உராசிப்பார்க்கும் தருணத்தில்தான்.

அந்த தருணம் மகிழ்ச்சி,சோகம்,சமுதாயத்தின் மீதான கோபம்...இப்படி பல வகையான உணர்வுகளின்போது ஏற்படலாம்.

இப்போதெல்லாம் ஃபேஸ் புக்கில் யாராவது காவிச்சாயம் அடிக்கவும், வரலாறு தெரியாமல் வாந்தி எடுப்பதும் அதிகமாகி விட்டது. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார்கள் நமது சகோதரர்கள்...இஸ்லாம் என்னவோ இவர்களுக்கு மட்டும் கிடைத்த Franchise License மாதிரி 'மற்றவர்களை" அதிகம் தூற்றுவது அல்லது முடிந்த அளவு மற்றவர்களுக்கு இஸ்லாம் போய் சேராமல் பார்த்துக்கொள்வது.

ஒரு ஒட்டு மொத்த சமுதாயத்தையே கெட்டவர்கள் என்று சொல்லும் இவர்கள் , ஹிந்தாவை மன்னித்த மாபெரும் விசால மனம் கொண்டவர்கள் நமது மாநபி முஹம்மது [ ஸல் ] அவர்கள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

பொதுவாக கவிதையை 'ச்சே...எப்டியா ..இவன் இப்படி எழுதறான்...சும்மா அசத்துரான்யா"னு சொல்ரமாதிரி எழுதப்படுவதை விரும்பி படிப்பேன்.

வழக்கமான கற்பனையில் உதிப்பதை விட [ நிலா முகம் / முத்துப்பற்கள் / சோ வெனப்பெய்யும் மழை...இந்த மாமூல் சமாச்சாரங்களை விட்டு கவிதை எழுதுபவர்கள் புதிதாக எதாவது எழுதினாலே "நீ நல்லாயிருக்கனும்ப்பா" நு சொல்லி சங்கீதாவில் மினி டிஃபன் வாங்கி கொடுக்கனும்னு தோனும்.

கவிதைகள் புதுக்கவிதையாக வந்த பிறகுதான் அதிகம் மக்களால் வாசிக்கப்பட்டது என நான் நினைக்கிறேன்.

சகோதரியின் கவிதையில் கடைசியில் வரும் வார்த்தை 'என் கடை நிலை......"

இனிமேல் பெண்கள் தன்னை உயர்த்திக்கொள்ள ஆண்களின் அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் அவலம் ஒழியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

crown said...

Adirai Ahmad சொன்னது…
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.அதனைத் தொடர்ந்து இத்தனை அறிஞர்கள் தத்தம் அறிவுத் திறனைப் பயன்படுத்தி, تفسير (விரிவுரை) தந்த பிறகு, இந்தப் 'பாமரனுக்கு'ப் புரிய வருவது இதுதான்:
------------------------------------------------------
வலைக்குமுஸ்ஸலாம் சாச்சா! நீங்கள் பாமரனா? என் வாழ்கையில் படித்த மிக பெரிய நகைச்சுவையில் இதுவும் ஒன்று!வயதில் மூத்தவர்கள் என்பதை தான்டி நீங்கள் நம் சமூகத்துக்கு கிடைத்த பெரும் அறிஞருள் ஒருவர் என்ற மாற்று கருத்து உங்களை கொள்கை ரீதியாக ஒத்துவராதவர்கள் கூட கூற மாட்டார்கள்!இத்தனை அறிஞர்கள் என்று நீங்கள் குறிப்பிட்டவர்களில் என்னை நீங்கலாக என்பதை பதிகிறேன்.

Ebrahim Ansari said...

அன்புள்ள காக்கா!

நீங்கள் பாமரனா? என் வாழ்கையில் படித்த மிக பெரிய நகைச்சுவையில் இதுவும் ஒன்று!வயதில் மூத்தவர்கள் என்பதை தான்டி நீங்கள் நம் சமூகத்துக்கு கிடைத்த பெரும் அறிஞருள் ஒருவர் என்ற மாற்று கருத்து உங்களை கொள்கை ரீதியாக ஒத்துவராதவர்கள் கூட கூற மாட்டார்கள்!இத்தனை அறிஞர்கள் என்று நீங்கள் குறிப்பிட்டவர்களில் என்னை நீங்கலாக என்பதை பதிகிறேன்.

பன்னூலாசிரியர் - அறிவுசார் அதிரையின் களத்தின் முன்னோடி- சொல்லபோனால் அறிவிலும் அனுபவத்திலும் அனைவருக்கும் மூத்தவர் . உங்களுடைய தன்னடக்கம் என்றுதான் நான் எடுத்துக் கொள்வேன். என்னோடு அனைவரும் உடன்படுவர் என்ற நம்பிக்கையுடன்.

Yasir said...

சகோதரியின் புதுக்கவிதை மெக்கிண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டம் போல ஆரம்பத்தில் புரியாவிட்டாலும் படிக்க படிக்க புரிந்து , மெய் சிலிர்க்க வைக்கின்றது...வாழ்த்துக்கள்....தொடர்ந்து எழுதுங்கள்

sabeer.abushahruk said...

//இத்தனை அறிஞர்கள் தத்தம் அறிவுத் திறனைப் பயன்படுத்தி, تفسير (விரிவுரை) தந்த பிறகு, இந்தப் 'பாமரனுக்கு'ப் புரிய வருவது இதுதான்//

காக்கா,

குசும்பு, முதற்கருத்தில் இல்லை. மேற்சொன்ன கருத்தில்தான் இருக்கிறது.
(மாட்டிக்கிட்டியலா?)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு