Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உண்டாயிருக்கேன்... 29

அதிரைநிருபர் பதிப்பகம் | December 10, 2011 | , , ,

தலையணை மந்திரம்
தனையனை எந்திர மாக்கிட
தாம்பத்யம் தந்திர மானது

தந்தையும் தாயும்
தொந்தர வாயினர்

முந்தின இரவிலோ
மூர்க்கம் கூட்டி
மந்திரித்த பின்
தாயிடம் வந்தனன் மகன்
பேயிடம் கற்றதைச் சொல்லிட…

அவர்களைப் போலவே
அநேக ருள்ளதால்
பேசவும் பழகவும்
வாகாகிப் போகுமாம்

உண்ணவும் உடுக்கவும்
உதவிக்கு ஆளுண்டாம்
உறக்கம் மட்டுமே
தனிமையின் சவாலாம்

மாலையில் நடக்க
மயக்கும் சோலையாம்
புட்கள் விரித்த
பூமியே பாதையாம்

வார மொருமுறை
வந்து பார்ப்பானாம்
வேறு விடுமுறை
வந்தாலும் வருவானாம்

சுமந்து ஈன்றவள்
சுமையாகி நின்றிட -அவன்
தந்தை சொல்வது
விந்தையாய் தோன்றிட

ஆயா வேண்டாமென்று
அலுவலகம் துறந்தவள்
அவனை வளர்த்தெடுக்க
அல்லல் பல பட்டவள்

மகனின் மகிழ்ச்சியே
மனதார வேண்டுபவள்
மறுத்தா பேசுவாள்
மடி கொடுத்த மாதரசி

தந்தை முறையிட்டும்
தானதைக் கேட்டாளா
தம்மகன் சொன்னதுபோல்
தயாரானாள் தாயவள்

மந்திரம் பொய்த்ததோ
மாங்காய் புளித்ததோ
மறுநாள் மகனிடம்
மருமகள் சொன்னாளாம்

அத்தையை காப்பகத்திற்கு
அனுப்பிடல் வேண்டாமென
அன்பைப் பொழிந்தாளாம்
அரிதாய் மருமகளும்

சேனியன் குடுமி
சும்மா ஆடாதே
மருமகளின் பாசப்
பின்னனிப் புரியவில்லை

கடின வேலை யேதும்
கண்டிப்பாய் கூடாதாம்
காலையும் மாலையும்
கட்டாய ஓய்வாம்

வீட்டு வேலை செய்யவும்
கூட்டிப் பெருக்கவும்
வேலைக்காரி வைத்து
கூலி தர இயலாதாம்

என்ன ஏதென்று
பதறிய மகனுக்கு
மருத்துவச்சி சொன்னதாக
மருமகள் சொன்னாள்:
“உண்டாயிருக்கேன்”

- சபீர்

29 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிதை அருமை என்று சொன்னால்தான் அருமையாகுமா ? உங்கள் கவிதைகளை வாசிப்பதே பெருமை எங்களுக்கு

//தந்தையும் தாயும்
தொந்தர வாயினர் //

இப்படியாகிட "மண் / பெண் / பொன்" எங்கேயிருக்கிறது வாசனை ?

//சுமந்து ஈன்றவள்
சுமையாகி நின்றிட -அவன்
தந்தை சொல்வது
விந்தையாய் தோன்றிட//

இதுவே !
கவிதையின் சாரம்
பேதையிட்ட உரம்
வித்திட்டதோ காரம்
பேசினான் பேரம் - அங்கே
பெற்றோரின் கரம் - நழுவுகிறது...

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

//அத்தையை காப்பகத்திற்கு
அனுப்பிடல் வேண்டாமென
அன்பைப் பொழிந்தாளாம்
அரிதாய் மருமகளும் //

வைடூரிய வார்த்தைகளை கேட்டு வாயடைத்து போனான ?
அல்லது வலிந்து போய் போனானா அந்த மகன் ?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஊருக்கு வீராவேசம் பேசித்திரியும் ஆடவன்
இல்லாளிடம் மண்டியிட்டு மண்ணாங்கட்டியாய்ப்போவது ஏனோ?

நீ நல்ல மைந்தனாய் இருந்தாலும் மண்ணாங்கட்டியாய் ஆனாலும்
ஈன்றெடுத்த தாய், தந்தையரை என்றுமே இழிவு படுத்திடல் வேண்டாம்.

மார்க்கம் பெற்றோருக்காக இல்லாளை ஏறிபோட்டு மிதிக்கவும் சொல்லவில்லை; இல்லாளுக்காக பெற்றோரை இருந்தாலென்ன, செத்தாலென்ன? என்று எதிர்பார்த்திருக்கவும் சொல்லவில்லை.

சமமாய் நடந்து சந்தோசத்தை சமத்தாய் பகிர்ந்து கொள்ளவே சொல்கிறது.

இத்தனை வலிகள் தாங்கி பத்து மாத சுமைகளுக்குப்பின்னால் ஈன்றெடுத்தப்பின் நீ இத்தனை வலி கொடுப்பாய் என்று அன்றே அவள் (தாய்) அறிந்திருந்தால் உன்னை வயிற்றில் வைத்தே கிள்ளி எறிந்திருக்க‌ முடியும் அல்ல‌வா? வெடி வைத்து உனை உயிரற்ற பிண்டமாய் வெளியேற்றி இருக்க‌லாமல்லவா?

தாலாட்டிய‌ தாயை தார‌ம் சொல் கேட்டு இப்ப‌டி இறுதியில் த‌டுமாற‌ வைக்க‌லாமா? த‌ர‌ம் கெட்டுப்போக‌லாமா?

க‌விக்காக்காவின் ஆக்க‌ம் பிள்ளைக‌ளால் கைவிட‌ப்ப‌ட்டு ப‌ரித‌விக்கும் பெற்றோர்க‌ளின் மொள‌ன‌ மொழிபெய‌ர்ப்பு.

ந‌ம‌க்கு முன் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ உள்ள‌ங்க‌ள் உம்மை நிச்சயம் வாழ்த்தும்....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

தலைத்தனையன் said...

இசைபட வாழும் இளையவர்கெல்லாம்
இயைந்திங்கு கூறும் சபீர் சொல் கேளீர்
வந்தவள் கூறுவாள் உன்னைத் தந்தவள்
விம்முவாள்

நீதமுடன் நடந்திடு, நேசருடன் சேர்ந்திடு
நீதி சொல்லும் மார்க்கத்தில் நீக்கம்
ஒன்றும் இல்லையே. பிழையே நான்
செய்தாலும் அந்த பிழை பொறுப்பான்
ரஹ்மானே.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆழ்ந்த சிந்தனைக்கவியாக்கம்!

என்னை பெற்றோரையும் நான் பெற இருப்பவளையும் மனம் இன்புறும்படி பார்த்துக்கொள்வேன் என்ற உறுதிமொழியையும் 'நிக்காஹி'ன் போது சொல்லிக்கொடுக்கவேண்டும்.

நீதமுடன் நீயும் பெற்றோரும் தன் அங்கமே என மன பக்குவத்திற்கு வந்துவிட்டால் பாகுபாடுக்கு வேலையில்லை. இவைகள் நீங்கிட மார்க்கத்தோடு இணைந்த கல்வி மிக அவசியம்.

Yasir said...

கவிக்காக்காவின் கவி வரிகளை படிக்கும்போது ஒரு ஆனந்தமும்,அதனுள் புதைந்து இருக்கும் ஆழ்ந்த அழகான அர்த்தங்களை உணர்ந்து நுகரவும் முடியும்..நல்ல கவிதை காக்கா...

Shameed said...

நல்ல கவிதை .இதை புரட்டி போட்டு மாமியார் கொடுமை பற்றியும் ஒரு கவிதை போட்டால் நல்லாருக்கும்

Anonymous said...

// அத்தையை காப்பகத்திற்கு
அனுப்பிடல் வேண்டாமென
அன்பைப் பொழிந்தாளாம்
அரிதாய் மருமகளும். //

இப்ப எல்லாம் தாய், தந்தையரை முதியோர் இல்லத்திற்கு அனுப்புகின்றனர் ஏன் என்றால் மகன்,மகள் இவர்களுக்கு எந்த விதமான தொந்தருவுகளும் பிரச்சினைகளும் ஏற்படக்கூடாது என்று.பெற்றோர்களை அனுப்பிவிட்டு இவர்கள் ஜாலியாகவும்,சந்தோசமாகவும் வீட்டில் இருக்கிறார்கள்.கிழடு கட்டைகள் போய்விட்டது இனி நமக்கு நிம்மதிதான்.எந்த விதமான தொந்தரவுகளும் கிடையாது தாய்,தந்தையாருடைய அருமைகள் தெரிவதில்லை
பெற்றோர்களுடைய அருமைகள் தெரிந்தால் முதியோர் இல்லத்திற்கு அனுப்பமாட்டார்கள்.மகன்களும்,மகள்களும் தன் பெற்றோர்களை மதிப்பத்தில்லை அப்படி பெற்றோர்களை மதிக்க தெரியாதவன் அவன் மனிதன் அல்ல.

மு.செ.மு.அபூபக்கர்

Haja Mohideen said...

சகோ. சபீர் அவர்களின் வரிகளை கேட்கும்பொழுது, பார்க்கும்பொழுது வள்ளுவர் எழுதிய வரிகள் உண்மைதான்
செவிக்கு உணவில்லா த பொழுது சிறிது வயிற்றிற்கு ஈயப்படும் என்ற குறளின்அர்த்தம் புரிகிறது. இவர் சிந்தித்து எழுதிய சில வரிகள் நம் வாழ்க்கையை சிந்திக்க வைக்கிறது....

வாழ்த்துக்களுடன்...
சேனாமுனா

sabeer.abushahruk said...

"என்ன இட்லி இன்னைக்கு கல்லு மாதிரி இருக்கு?"

"பேய் சுட்ட இட்லி பொசு பொசுன்னா இருக்கும்?"

"நான் உன்னயச் சொல்லலப்பா. மாமியாவை வீட்டைவிட்டு விரட்டுறவங்களத்தான் சொல்றேன்"

"ஹமீது காக்கா கேட்கிறமாதிரி மாமியா செய்ற கொடுமைலாம் உங்க கவிதையில வராதாக்கும்?"
"வரூ...ம் ஆனா வராது"

ZAKIR HUSSAIN said...

நவீன உலகத்தில் தாத்தாக்கள் கேட்கீப்பராகவும் , பாட்டிகள் பிள்ளைகளை பார்த்துக்கொள்ளும் ஆயாக்களாகவும் ஆகிப்போனதின் தாக்கம் தெரிகிறது.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------

பெற்றோரின் அருமையை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் காக்கா.

*******
தாயிடம் வந்தனன் மகன்
பேயிடம் கற்றதைச் சொல்லிட…
*******

இது..
அதிரை மகனுக்கு பொருந்துமா ?

- UmmHasim

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,
//அங்கே
பெற்றோரின் கரம் - நழுவுகிறது//

நழுவலாமா? நியாயமா?

எல் எம் எஸ்,
வைடூரிய வார்த்தைகளை கேட்டு வாயடைத்து போனான ?
அல்லது வலிந்து போய் போனானா அந்த மகன் ?

விக்கித்துப்போனான். விழிபிதுங்கலானான்

எம் எஸ் எம்,
//தாலாட்டிய‌ தாயை தார‌ம் சொல் கேட்டு இப்ப‌டி இறுதியில் த‌டுமாற‌ வைக்க‌லாமா? த‌ர‌ம் கெட்டுப்போக‌லாமா//

ஆகாது, அகாது.

sabeer.abushahruk said...

தலைத்தனையன்,
//நீதி சொல்லும் மார்க்கத்தில் நீக்கம்
ஒன்றும் இல்லையே//

நெஞ்சு நெகிழ்கிறது நிதர்சனம் உணர்ந்து.

எம் ஹெச் ஜே,
//நீதமுடன் நீயும் பெற்றோரும் தன் அங்கமே என மன பக்குவத்திற்கு வந்துவிட்டால் பாகுபாடுக்கு வேலையில்லை//

புத்தியில் ஏற்றினால் நிச்சயம் சாந்தி.

யாசிர்,
//ஆழ்ந்த அழகான அர்த்தங்களை உணர்ந்து நுகரவும் //
நன்றி யாசிர்.

sabeer.abushahruk said...

ஹமீது,
//மாமியார் கொடுமை பற்றியும் ஒரு கவிதை //
மருமகளை காப்பகங்களுக்கு அனுப்பிய மாமியார் உண்டெனில் சொல்லுங்கள் எழுதிவிடுவோம்.

sabeer.abushahruk said...

முஹம்மது,
//பெற்றோர்களை மதிக்க தெரியாதவன் அவன் மனிதன் அல்ல//
தீர்ப்புக்கு நன்றி

சேனாமுனா,
//சிந்தித்து எழுதிய சில வரிகள் நம் வாழ்க்கையை சிந்திக்க வைக்கிறது...//
அல்ஹம்துலில்லாஹ்.

sabeer.abushahruk said...

ஜாகிர்,
//பாட்டிகள் பிள்ளைகளை பார்த்துக்கொள்ளும் ஆயாக்களாகவும்//

மாமனார் மருமகன் கொடுமைகள் பெரும்பாலும் நிகழ்வதில்லையே ஏன்?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,

என்னதான் தாயின் பாசம் பற்றி பேசினாலும், தாயின் துஆ கிடைப்பது போல் ஒரு ஒரு பரிசு இவ்வுலகில் வேறு எதுவுமில்லை என்பதை தாயை மதித்து உணர்ந்தவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.

பாசம் நேசம் அன்பு நிறைந்த இவ்வுலகின் முதன் நட்பை அடிக்கடி சிந்தனை தூண்டும் கவிவரிகளில் ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. ஜஸக்கல்லாஹ்.

sabeer.abushahruk said...

உம்முஹாசிம்,
//இது..
அதிரை மகனுக்கு பொருந்துமா//

அனைத்து மகன்களுக்கும் பொருந்தும்மா.

நான் பேயெனச் சொல்வது மனைவியை அல்ல, மருமகளையும் அல்ல. வயோதிகத் தாயை வீட்டைவிட்டு விரட்டும் யாரையும் எவரையும்.

சற்றே சிந்தித்தால் வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சி விதி பிடிபடும். இன்றைய மருமகள் நாளைய மாமியார். நாம் செய்வதே நாளக்கு நமக்கும் நிகழும் எனும் எளிய கணக்கீடு புரிந்தால் அன்பு பெருகும்.

மாமியார் கொடுமை மருமகள் கொடுமை என்பன உளவியல் மேன்பாட்டால் மட்டுமே நிவர்த்தி செய்யப்படும். ஆனால், வெளியேற்றுவது உச்சகட்டக் கொடுமையல்லவா?

அடிச்சாலும் புடிச்சாலும் அப்புறமா ஒன்னா சேர்ந்துப்பாங்க. அறுத்துப்போட்டுட்டா?

இயலாமையில் முதியோரை அவர்தம் பாசத்துக்குரியோரிடமிருந்து பிரிக்கும் யாரும் எவரும் பேயே பிசாசே.

sabeer.abushahruk said...

தாஜுதீன்,
//முதன் நட்பை//
தாயை இப்படி அழைத்து தாய்மைக்கு நீங்கள் புது எழில் சேர்த்துவிட்டீர்கள்.

(கவனித்தீர்களா, பொன்டாட்டிக்குப் பயந்து நம்மாட்கள் கருத்து சொல்லக்கூட வரவில்லை? :))

KALAM SHAICK ABDUL KADER said...

அடித்தாலும் பிடித்தாலும் அன்பானது குடும்பம்
நடித்தாலும் நகைத்தாலும் நட்பானது குடும்பம்
துடித்தாலும் துரத்தினாலும் தொடர்வது குடும்பம்
மடித்தாலும் மடங்காத மரமானது குடும்பம்

வெட்டினாலும் தட்டினாலும் விருட்சமாகும் குடும்பம்
திட்டினாலும் புகழ்ந்தாலும் தித்திக்கும் குடும்பம்
நட்டமோ இலாபமோ நன்மையாம் குடும்பம்
பட்டறிவுப் பட்டம் பெற்றுதரும் குடும்பம்

தானாடா விட்டாலும் தசையாடும் குடும்பம்
வானோடு நிலவுபோல் வாழ்வோடு குடும்பம்
தேனோடு பால்போல் தெவிட்டாத இன்பம்
மானோடு மானம்போல் மாண்பு காக்கும்

வாசமலராய் என்றும் வாழ்கை மணக்கும்
வீசும் தென்றலாய் விலகாது நிற்கும்
பேசிப் பழகினால் பாசம் புரியும்
நேசித்து வாழ்ந்தால் நெருக்கம் தெரியும்

crown said...

தலையணை மந்திரம்
தனையனை எந்திர மாக்கிட
தாம்பத்யம் தந்திர மானது


தந்தையும் தாயும்
தொந்தர வாயினர்

முந்தின இரவிலோ
மூர்க்கம் கூட்டி
மந்திரித்த பின்
தாயிடம் வந்தனன் மகன்
பேயிடம் கற்றதைச் சொல்லிட…
-----------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.உணர்வுபூர்வமான கவியாக்கம்.
கோழி மந்தரித்து ஏவல் சொன்னதை சேவல் கேட்டு தாயை பிறான்டும் காட்டுமிராண்டித்தனம் ஆங்காங்கே நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது.

crown said...

சுமந்து ஈன்றவள்
சுமையாகி நின்றிட -அவன்
தந்தை சொல்வது
விந்தையாய் தோன்றிட
------------------------------------------------------------------------
பெற்றோற் உதிரத்தை உயிராக்கி வந்த அதன் மூலம் வந்த பிரதி
இல்லாளை ரதியென தலைமேல் தூக்கி
மதிகெட்டு போனான் தாயை சுமையென கருதினான்.தந்தை சொல்ல அது வம்பென கொண்டான் .இது இக்காலத்தில் இயல்பாக நடக்கும் சாபமாகிபோனது அதனால் தான் திருமறை குரானின் அல்லாஹ் பெற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ளனும் என்பதை வலியுரித்தியுள்ளான்.

crown said...

மந்திரம் பொய்த்ததோ
மாங்காய் புளித்ததோ
மறுநாள் மகனிடம்
மருமகள் சொன்னாளாம்

அத்தையை காப்பகத்திற்கு
அனுப்பிடல் வேண்டாமென
அன்பைப் பொழிந்தாளாம்
அரிதாய் மருமகளும்

சேனியன் குடுமி
சும்மா ஆடாதே
மருமகளின் பாசப்
பின்னனிப் புரியவில்லை
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சேனியன்( பூசாரி) அய்யன் குடுமி ஆதாரமில்லாமல் ஆடாது! சுப்ரமணிசாமி போல, ராஜகோபாலச்சாரிபோல இப்படி எத்தனையோ ஆசாமிகளும். போலி சாமிகளும் ஆடும் கபட நாடகம் நாட்டில் கலவரம் உண்டாக்கி மக்களை நாளாக பிரிந்து சிதறவிட்டு தன் இனம் மட்டும் தழைத்தோங்கச்செய்யும் இனம். அதுபோல ம(மா)ருமகள் எனும் சில மாறு செய்யும் மருமகள் மதி செய்யும் சூழ்சியின் சதியில்(சதி= மனைவி)மாமியார் எனும் தாயாரை நீயார் என கேட்கும் நிலைக்குத்தள்ளி நிலை குலைய வைப்பர்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சுருங்கக்கூறின் "பெற்றோரை மதிக்காதோர் தன் பிள்ளைகளால் மிதிக்கப்படுவர்".

அவரையை தூவி துவரையை எதிர்பார்க்கலாமோ?

கருணைக்கொலைகளும், தற்கொலைகளும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாததால் உயிருடன் வைத்து இப்படி அவர்களை வதை செய்வது நியாயமாகுமோ?

நீ மலம்,ஜலம் கழித்து அவர்கள் மடியில் விளையாடும் தருவாய் அது அவர்களுக்கு நறுமணம் கமழ்ந்தது. ஆனால் வயோதிகத்தால் இன்று அவர்களின் மலம்,ஜலமோ பெரும் அசிங்கமாய், அறுவறுப்பாய் காட்சி தருகிறது.

உன்னை கண்ணான வாப்பா, கண்ணான உம்மா என்று ஊட்டி வளர்த்து ஆளாக்கிய தேகம் இன்று வீட்டின் மூலையில் மரணத்தை எதிர்பார்த்து மடிந்து கிடக்கிறது.

உன் ஆத‌ர‌வை நாடிய‌ அத்தேக‌த்திற்கு இன்று ஈக்க‌ளும், எறும்புக‌ளும் உறுதுணையாக‌ இருக்கின்ற‌ன‌. நீ கொடுத்த‌ வ‌லிக‌ளை விட‌ அத‌ன் க‌டிக‌ளில் வேதனையும் இல்லை. உனக்கு வ‌ருத்த‌ம் தெரிய‌வில்லை.

வ‌யோதிக‌மான‌ பெரிய‌வ‌ர்க‌ளின் நிலைமை பெரும்பாலும் எல்லா வீடுக‌ளிலும் இப்ப‌டித்தான் நம்மூரில் இருந்து வருவது ஒரு நித‌ர்ச‌ன‌மான‌ உண்மை.

யா அல்லாஹ்! க‌டைசிவ‌ரை எங்க‌ளை ந‌ல்ல‌ முறையில் க‌வ‌னித்து ப‌ராம‌ரிக்க‌க்கூடிய‌ ந‌ல்ல‌ பிள்ளைக‌ளை த‌ந்து விடு!!! அப்ப‌டி இருக்காத‌ ப‌ட்ச‌த்தில் ஆரோக்கிய‌த்துட‌ன் அழைத்துக்கொண்டு விடு!!!


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

தலைத்தனையன் said...

அபுல் கலாம்,
மாஷா அல்லாஹ். பேஷ் மாப்ளே!

KALAM SHAICK ABDUL KADER said...

ஜஸாக்கல்லாஹ் கைரன் யா ஹபீபி

sabeer.abushahruk said...

கிரவுன்,
இம்மாதம் உங்களை இப்பக்கம் எதிர்பார்ப்பது தவறு என்றுதான அழைக்கவில்லை.

ஆயினும் வந்தமைக்கு நன்றி. பெஸ்ட் ஆஃப் லக் வித் யுவர் பிஸினஸ்

கவியன்பன்,

கொட்டும் அருவியென குளிர் மழையென உங்கள் கவி மழையில் நனைவதே சுகம். அதிலும் கருத்துச்சத்து கூட்டி கலக்கியிருக்கிறீர்கள். சபாஷ் (மாப்ளேனுலாம் சொல்லிடமாட்டேன் பயம் வேண்டாம்.)

sabeer.abushahruk said...

சமூக அக்கறை என்று வந்துவிட்டால் எம் எஸ் எம்மின் உணர்வுகள் எழுத்து வடிவில் ஏனையோரையும் உசுப்பிவிடுகிறது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு