Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சுதந்திர தினம் யாருக்கு ? 0

அதிரைநிருபர் பதிப்பகம் | August 16, 2016 | , , ,


குழந்தைகளே..!

சுதந்திர தினம்  வருடாவருடம் வரும் நாளெல்லாம் நம் பள்ளிகள் திருவிழாக்கோலம் போல் காட்சியளித்தாலும்  நம் வீடுகளில் பண்டிகை பரபரப்பு எதுவுமற்று இருக்கும்.  குறைந்தபட்சம் இனிப்பாவது நம் பெற்றோர்கள் இந்நாளில் செய்து தந்ததுண்டா?   எனில் சுதந்திர தினம் யாருக்கானது ?  

நெஞ்சில் தேசிய கொடி காகிதத்தை கொஞ்சம் நேரம் குத்தி, வானை நோக்கி ஏற்றப்படும் கொடிக்கு சல்யூட் செலுத்தி, காலம்காலமாய் கொடுக்கும் மிட்டாயை வாயில் போட்டு வீடு திரும்புவது தான் சுதந்திர தின கொண்டாட்டமா?  அல்லது வீடு  திரும்பியதும் சேனல்க்கு சேனல் டிவிக்களில் காட்டப்படும்  சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பது வரை நீள்வது தான்  சுதந்திர தினத்தின் நோக்கமா? 

இல்லை, அதையும் தாண்டி நம் ஒவ்வொருவருக்கும்  கடந்து போன தியாகங்களை நினைவூட்டவும் , எதிர்கொள்ளவிருக்கும் சாதனைகளுக்கும் நம்மை தயார்படுத்தவும்  'சுதந்திர தாகம்'  கொண்டு செயலாற்ற நம்மை நினைவுபடுத்துவதற்குமான நாள் அது. ஆனால் நம்மில் பலருக்கு சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதியா, ஜனவரி 26ம் தேதியா என்பதிலேயே ஏகப்பட்ட குழப்பம் உண்டு. காரணம் என்ன?  வெறும் சம்பிரதாய சடங்காய் நாம் அந்த தினத்தை அனுசரிக்க பழகிவிட்டோம். "ஏதோ ஒரு காலத்தில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்தோம், அதற்காய் சிலர்  சுதந்திரம் வாங்கி தந்தார்கள்"     என்ற அளவுக்கு நம் நாட்டின்  உன்னதமான தினத்தையே சர்வசாதாரணமாய் கடந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.   

இன்றைய நாளில் பலரிடத்திலும் சுதந்திரம்  உணர்வுகள் அற்று போனதால் தான்     பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் சமூக விரோதிகள் பெருகி வருகின்றனர்.  எப்படி அடிமைப்பட்டு கிடந்தோம், எப்படி மீண்டோம் என தெரியாதன் காரணமாய் தான் நம் நாட்டின் வளர்ச்சி குறித்து எவ்வித கவலை இல்லாமல் இருக்கிறோம்.எத்தனை லிட்டர் குருதிகளை இந்த மண்ணில் கலந்ததென்றும்  தெரியாததன் காரணமாய் தான் சுற்றுச் சூழலை பாழ்படுத்தி அசுத்தப்படுத்தி வருகிறோம்.  தியாகத்திலான  வரலாறுகள் குறித்து நமக்கு அக்கறையில்லாததால் தான்   ஊழலிலும் , லஞ்சத்திலும் ஊறித்திளைத்த  ஆட்சியாளர்களை உருவாக்கியிருக்கிறோம்.  இப்படியான அசாதாரண சூழலை சாதாரணமாக்கி கொள்வதன் விளைவு மீண்டும் நாம் யாருக்கேனும் அடிமைப்படும் சூழல் நிலவுவது நிச்சயம். 

அப்படி நாம் விடலாமா? 

மாற்றத்தின் விதைகளாகிய எம் இளம்பிறை குழந்தைச் செல்வங்கள் மற்ற எல்லோரை விடவும் மிகவும் நற்பண்புகள் கொண்ட தனித்த சிறந்த ஆளுமைகளல்லவா? அவர்களின் சுதந்திர தினங்கள் இப்படியா பத்தோடு பதினொன்றாய் இருக்கும் ? நிச்சயம் இல்லவே இல்லை. அப்படியாயின் நம் சுதந்திர தினத்தில் என்ன செய்வது ? 

எத்தனையோ சுற்றுலாக்கள் சென்றிருப்போம். அவற்றில் வெளிநாட்டு பயணங்களும் இருக்கும். ஆனால் உள்நாட்டிலேயே , அருகிலேயே இருக்கும் சுதந்திர தின நினைவு சின்னங்களை நாம் கண்டுகொள்வதேயில்லை. வரலாறுகளை கல்வெட்டுகளோடு சிதிலமடையச் செய்ய நாமே காரணமாகி விடாதிருக்க, இன்ஷா அல்லாஹ் சுதந்திர போராட்டத்தை நினைவுபடுத்தும் இடங்களுக்கு சென்று வருதலை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். 

உங்கள் ஊர்களிலேயே போராட்ட வீரர்கள் இருக்கக்கூடும். அவர்களை நேரில் சந்தித்து வரலாம்.  வயதின் காரணமாக அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்திருந்தாலும் கூட  அவர்களின் வீடுகளுக்கு சென்று வரலாம். நேரடியாக அவர்கள் மூலமோ அவர்களின் உறவினர்கள் மூலமா வரலாறுகளை கேட்டு அறிந்துக்கொள்ளலாம். இதன் மூலம்  அறியப்படாத போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தியதுடன் கௌரவப்படுத்தலாம். 

நாட்டுக்காக உழைத்ததால் தனக்கென எதுவும் சேர்த்து வைக்காத நிலையில் அரசு தரும் சொற்ப ஓய்வூதியத்தில் வாழ்க்கை அமைத்திருக்கும் தியாகிகளும், வறுமையில் வாடும் அவர்களின் குடும்பங்களும் இருக்கக் கூடும். சுதந்திர தினங்களில் நிதி சேகரித்து அத்தகைய குடும்பங்களுக்கு கொடுப்பதன் மூலம், நாட்டுக்கு நன்மை செய்தால் நாடு நமக்கும் நன்மை செய்யும் என்ற  கொள்கையை குட்டீஸ்கள் உருவாக்கி புரட்சி காணலாம். 

தபால் தலை, நாணயம் போல் ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டு சேகரிப்பது போல் நினைவில் நின்ற தலைவர்களை பற்றியும் ,  கால ஓட்டத்தில் மறந்த நம் போராட்ட வீரர்களை பற்றியும் தகவல்கள் சேகரித்து வைக்கும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சுதந்திர தினங்களில் அதனை பள்ளிகளிலோ வீடுகளிலோ காட்சி படுத்த ஏற்பாடு செய்யலாம். 

சுதந்திர உரைகள் கேட்பது , செங்கோட்டையில் நடக்கும் அணிவகுப்புகள் பார்ப்பது சளிப்பை ஏற்படுத்தினாலும் கூட பெற்றோர்களை துணைக்கு அழைத்து அதன் விவரங்களை கேட்டு அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் அரசியலமைப்பு சட்டம், அரசு இயந்திரம் குறித்த புரிதல்கள் உங்களுக்கு கிடைக்கும். கால போக்கில் நீங்களே உங்க பெற்றோர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க முடியும். 

இது பெரியவர்களுக்கானது : 

பல பள்ளிகளில் சுதந்திரதின நிகழ்ச்சி என்பது சம்பிரதாயமாய்
மாறிவிட்டிருக்கிறது. அன்றைய நாளிலும் கூட சினிமாபாடல்கள் கொண்ட மாணவ மாணவிகளின் நடனம் அரங்கேற்றப்படுவது மிகவும் வேதனை. அப்படியாக அல்லாமல் குழந்தைகளுக்கு நாட்டுப்பற்று மேலோங்கும்வி தமான நிகழ்ச்சிகளை அரங்கேற்றலாம். 

சுதந்திரதின உரைகள் அனைத்தும் உணர்ச்சி பெருக்கில் இருக்கிறதே அன்றி குழந்தைகளுக்கு புரியும் எளிய நடையில் அமையாதிருப்பது மிகப்பெரிய மைனஸ். பேச்சாளர்கள் அதனை கவனத்தில் கொள்ளலாம். 

  சுதந்திர தினங்களில்  அது சம்மந்தமான நினைவு பரிசுகள் வழங்கி அது பற்றிய தகவல்களை குழந்தைகளுக்குச் சொல்லலாம். எத்தனையோ தியாகிகளின் சுயசரிதைகளும், புத்தகங்களும் கேட்பாரற்று விலைபோகாமல் கரையானுக்கு இரையாகின்றன. அப்படியல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு 'சுதந்திரதின பரிசு பெட்டகம்' பொக்கிஷ புத்தகங்களாக வழங்கலாம். 

வழக்கமாய் அன்றைய தினங்கள் 'உனக்கு பிடித்த தேசியதலைவர்' எனும் தலைப்பில் காந்தி, நேருவைப் பற்றி மட்டுமே பேச வைக்கும், எழுத வைக்கும் கலாச்சாரத்திலிருந்து சற்று மாறி அறியாதவர்கள் பற்றி அறியச் செய்திடும் முயற்சிகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளலாம்.  

ஒவ்வோர் பள்ளியிலும் அன்றைய நாளில் கண்காட்சிகள் வைத்து, பல தலைவர்களை அறிமுகம் செய்யலாம். மாணவ மாணவிகளை கொண்டே தியாகிகளின் புகைப்படங்கள், நினைவு சின்ன மாதிரிகள், அரிதான புகைப்படங்கள் , தலைவர்கள் படம் பொருத்திய அஞ்சல்தலை காட்சிகள், ஓவியங்கள் காட்சிபடுத்தலாம். வகுப்பு வாரியாக போட்டிபோல் நடத்தி சிறு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தலாம். 

கவர்ச்சிகர பேச்சாளர்கள், ஊரின் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் அமரும் நிகழ்ச்சி மேடையில் தியாகிகளையோ அவர்களின் குடும்பத்திலுள்ளோர்களையோ ஏற்றி கௌரவப்படுத்தலாம். அவர்களையும் பேச வைத்து குழந்தைகளிடத்தில் விடுதலைப்போராட்டங்கள் பற்றிய நேரடி அனுபவங்களை அறியச் செய்யலாம். 

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆகஸ்ட் 15 அன்று விடுமுறையில் இருக்கும் பெற்றோர்களையும் கட்டாயம் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள செய்யலாம். இன்றைய நாளில் பள்ளி பயிலும் குழந்தைகளுக்கு தெரிந்த அளவில் கூட பெற்றோர்களுக்கு சுதந்திரம் பற்றிய அக்கறை இருப்பதில்லை. மாற்றம் அனைத்து தரப்பிலிருந்தும் வந்தால் மட்டுமே புரட்சிகர பாதையில் நாம் பயணம்கொள்ள முடியும். 

நடந்ததெல்லாம் போகட்டும்.. அக்கறையின்றி பல சுதந்திர தினத்தை நாம் அநியாயமாய் இழந்துவிட்டோம். இனியேனும் அப்பொக்கிஷ நாளை சிறப்பாக்கி வைத்து அதன் மூலம் விடுதலையின் நினைவுகளையும், தியாகங்களின் மாண்புகளையும் , அகிம்சையின் சக்திதனையும் உரக்க ஒலித்து மனதில் நிலைநிறுத்த தேவையான முயற்சிகளை முன்னெடுப்போம் இன்ஷா அல்லாஹ்... 

ஆமினா முஹம்மத்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு