Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

திரும்பிப் பார்க்கிறேன் ! 16

அதிரைநிருபர் | April 04, 2011 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்...

குறிகிய கால விடுமுறையில் ஊர் சென்று வந்த பின் உள்ளத்தில் உதித்த சில மலரும் நினைவுகளை இங்கு ஒரு சிறு கட்டுரையாக உங்களின் பார்வைக்கு விருந்தாக வழங்கிட விரும்புகிறேன்.

வல்ல இறைவன் நாட்டத்தில் சுழலும் வாழ்க்கைச்சக்கர சுழலில் சுழற்றப்பட்டு நாம் இன்று எங்கோ சிகரத்தின் உச்சிக்கோ அல்லது பள்ளத்தாக்கின் பாதாளத்திற்கோ வீசப்பட்டிருந்தாலும் நாம் கடந்து வந்த அப்பாதையை சற்று திரும்பிப்பார்க்க (சிந்திக்க)கடமைப்பட்டுள்ளோம். அது கரடுமுரடான முட்கள் நிறைந்த பாதையாக இருந்தாலும் சரி அல்லது மிருதுவான வெண்கம்பளம் விரிக்கப்பட்டு சாமரம் வீச அதன் மேல் நடந்து வந்த பாதையாக இருந்தாலும் சரியே.

நமதூர்க்குளங்கள் தண்ணீர் ததும்பி இருந்தும் குளித்து கும்மாளமிட ஆட்கள் இன்றி ஆதரவின்றி ஏங்கி நிற்கும் இக்காலத்தில் கடும் கோடைகாலங்களில் நீர் வற்றிக்குறைந்திருந்தும் அதில் குளித்து கும்மாளமிட்டு குதூகளித்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

கொள்கைக்கொரு தலைவனாய், கூட்டமாய் பல கட்சிகளுக்கு கொடி பிடிக்கும் நம் சமுதாயத்தின் இன்றைய அவல நிலையில் ஓரிரு கட்சிக்கு மட்டுமே கொடிபிடித்து நாரேத்தக்பீர் முழங்கி வந்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.
அரவணைக்க கம்பன் ரயிலின்றி அன்றாடம் அதன் ஓலமின்றி அமைதியாய் விதவையாகிப்போன இன்றைய நமதூர் ரயில் நிலையம் அன்று குதூகலமாய் ஓடி வந்த அந்தக்கம்பன் எக்ஸ்பிரஸும் அதன் முன் வரும் ஓசையையும் நம்மை வழியனுப்ப வந்த உறவினர்களையும் நினைவால் திரும்பி பார்க்கிறேன்.

அன்று ஊரின் எங்கோ ஒரு மூலையில் ஆக்கிரமிப்பு செய்து வந்தாவரத்தானாய் குடிவந்த சர்க்கரை நோயும், புற்று நோயும் இன்று பரவலாக எல்லாத்தெருக்களிலும் அழையா விருந்தாளியாய் ஊடுருவி அப்பாவிக்குடும்பங்களுக்கு வேட்டு வைத்து வேடிக்கைப்பார்ப்பதை எண்ணி வருந்தி ஆரோக்கியமாய் நம்மக்கள் வாழ்ந்து வந்த அந்த காலத்தை ஆசையுடன் திரும்பி பார்க்கிறேன்.

இன்று மாடிவீடுகளில் பல கோடிப்பிரச்சினையில் சிக்கி மனவேதனையுடன் வாழ்ந்து வரும் நம்மக்கள் ஓட்டு வீட்டில் வாழ்ந்து வந்து ஒய்யாரமாய் சந்தோசத்துடன் காலம் கழித்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

பல கோடிகளைக்காண தென்னந்தோப்புகளெல்லாம் மனைகளாகி தெருக்களாகிப்போன இக்காலத்தில் தென்னந்தோப்பின் தென்றல் காற்றும் அதன் மோட்டார் பம்புசெட் சப்தமும் தென்னந்தோகையில் வந்தமர்ந்த சாய்ங்கால கொக்கு, மடையானையும், சிறகடித்து சந்தோசமாய் பறந்து செல்லும் வண்ணத்துப்பூச்சியையும், திரைமறைவில் தானே பாடி மகிழும் குயிலின் அக்கால பாட்டின் இனிமையையும் திரும்பி பார்க்கிறேன்.

இன்று நம் வாழ்வாதாரத்தேவைக்காக தொலைதூரப்பயணங்கள் பரந்து விரிந்து உள்ளங்கள் ஏனோ சுருங்கிச்சுண்ணாம்பாகியதாய் உணர்கிறேன்.

ஊர், குடும்பப்பெரியவர்களின்றி வெறிச்சோடிக்கிடக்கும் இன்றைய நம் வீடுகளும், தெருக்களும் ஒரு காலத்தில் அவர்களின் ஆட்சியும், அதிகாரமும், அறிவுரையும் நம்மேல் செங்கோலாற்றி நம்மை செம்மைப்படுத்திய அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்.

மாலை நேர விளையாட்டுக்களை தான் விரும்பிய திடலில் நண்பர்களுடன் விளையாடி மகிழ திடல்களெல்லாம் வீட்டு மனைகளாகிப்போய் ஏங்கித்தவிக்கும் இளைஞர்கள் அதிகம் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஒரு காலம் நினைத்த இடத்தில் விளையாடி மகிழ திடல்கள் ஆங்காங்கே நம்மூரில் பரந்து கிடந்து அதை பயன்படுத்திய அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்.

கடைத்தெருவுக்கு ஐந்நூறு ரூபாய் கொண்டு சென்றாலும் விரும்பியதை வாங்கி வர முடியாத இக்கால சூழ்நிலையில் வெறும் ஐம்பது ரூபாயில் பை நிறைய வேண்டியதை வாங்கி கையில் மிச்சக்காசுடன் வீடு வந்து சேர்ந்த அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்.

புதிய, புதிய நோய்நொடிகளும் அதைக்கண்டு பிடிக்க பல மருத்துவமனைகளும் அதன் தொழில்நுட்ப உபகரணங்களும் நாள் தோறும் ஆங்காங்கே உருவாகி வரும் இக்கால சூழ்நிலையில் வெறும் காய்ச்சல், தலைவலி, பல்வலி, வயிற்றுவலி மட்டுமே நம் பெரும் வியாதிகளாக இருந்து வந்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

பொருளாதார தேவைக்காக பெயர் தெரியாத மேற்கத்திய நாடுகள் நம் மக்கள் சென்று வரும் இக்கால சூழ்நிலையில் சவுதி, துபாய் மட்டுமே நம் தொலைதூர நாடாக இருந்து வந்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

நம் சமுதாயத்தின் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் பல அரசியல் கட்சிகளில் சேர்ந்து அந்தந்த தலைவர்களை சந்தோசப்படுத்த (வென்றதும் பிறகு அவர்கள் நமக்கு ஆப்படித்து அல்வா கொடுப்பது வேறு விசயம்) என்னென்னெமோ செய்து வரும் சொல்லி வரும் இக்காலத்தில் ஓரளவு பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு நம் சமுதாயத்திற்கு ஆதரவளித்த அந்த கட்சிக்கொடியை வண்ணப்பட்டங்களாய் செய்து வானில் உயர பறக்க விட்டு உள்ளத்திற்குள் யாருக்கும் தெரியாமல் மகிழ்ந்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

கடைத்தெரு மீன் விலைகளெல்லாம் விண்ணைத்தொடும் இக்காலத்தில் கொட்டும் மழை நீரால் குளம் உடைந்து தெருக்களில் வீதி உலாவரும் சிறு மீன்களை பிடித்து மகிழ்ந்த அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்.

நமதூரில் ஏசிகள் பொருத்தப்படாத வீடுகளே இல்லை அது இல்லாமல் வெயில் காலத்தை கடத்த இயலாது என்று சொல்லி அது ஒரு அத்தியாவசிய சாதனமாக ஆகிப்போன இக்காலத்தில் தன் வீட்டு கொல்லை மரங்களே இயற்கை ஏசியாய் அன்றாடம் குளிர்காற்றை இலவசமாய் மின் தேவையின்றி, துண்டிப்பின்றி நமக்கு அள்ளித்தந்த அந்த நாட்களையும், புகை போடப்பட்ட மண் பானையில் இயற்கையின் குளிரூட்டப்பட்ட தாகம் தீர்க்கும் தண்ணீரின் இனிமையையும் இன்று திரும்பி பார்க்கிறேன்.

சின்ன, சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் இரு மனம் இணைந்த அத்திருமண வாழ்வை விவாகரத்து மூலம் நிறந்தரமாய் பிரித்து முடிவுக்கு கொண்டு வருவது பரவலாக அதிகரித்து இருக்கும் இன்றைய சூழ்நிலையில் எத்தனையோ குடும்பங்களில் பல பெரும் பிரச்சினைகள் பூதாகரமாக வந்து சபை முன் நின்றாலும் அதையும் பெரியவர்கள் தன் சமயோசித முடிவால் இரு குடும்பங்களுக்கும் சுமூக உறவை ஏற்படுத்தி இல்லற வாழ்வை இனிதே தொடர அவர்கள் வழிவகுத்த அந்த நாட்களையும் முடிவுக்கு வந்த தலாக் என்ற செய்தி எங்கோ, எப்பொழுதோ கேட்டதாக இருந்த அந்த நாட்களையும் திரும்பி பார்க்கிறேன்.

எதிர்பாராமல் வரும் பெரிய நோய்நொடிகளுக்கு நம் மக்கள் எங்கெங்கோ சென்று உயர் சிகிச்சையும், பண செலவும், நேர விரயமும் செய்து வரும் இக்காலத்தில் எந்த நோய் வந்தாலும் தன் வீட்டு பெரியவர்களின் கைப்பக்குவத்திலும், செந்தூரம் கொண்டு சிகிச்சையளித்து இறைவன் நாட்டத்தில் சுகமடைந்து வாழ்ந்து வந்த அந்த காலத்தை திரும்பி பார்க்கிறேன்.

வண்ண,வண்ண கார்களும், வகை,வகையான இரு சக்கர வாகனங்களும் நம் தெருக்களில் பவனி வரும் இன்றைய சூழ்நிலையில் மாட்டு வண்டியும், குதிரை வண்டியும் தன் சலங்கை ஒலி எழுப்பி சந்தோசமாய் தெருவில் ஓடி திரிந்த அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன்.

கோடைகால கடும் வெயிலின் வெப்பத்தில் உள்ளத்தாகம் தீர்க்கும் அந்தக்கார்கால மழையின் இதமான சில்லென்ற அந்தச்சாரல் காற்றை தர்பூசணியின் சிகப்பு நிறத்தில் கம்பளம் செய்து அந்த நினைவுகளை வரவேற்று திரும்பி பார்க்கிறேன்.

மனிதர்கள் மரணித்திருக்கலாம் ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தின் நல்ல பல நினைவுகள் இன்னும் மரணிக்கவில்லை.

இன்னும் நம் வாழ்வில் திரும்பி பார்க்கப்படவேண்டிய, சிந்தித்து செயல் பட வேண்டிய எத்தனையோ காரியங்கள் நடந்தேறி இருக்கலாம். ஊர் சென்று வந்ததால் என்னால் ஞாபகத்துக்கு வந்ததை இங்கு வழங்கி இருக்கின்றேன். இதுபோல் உங்கள் வாழ்விலும் பல திரும்பி பார்க்கப்படவேண்டியவைகள் இருக்கலாம். அதை நீங்கள் உங்களின் பின்னூட்டம் மூலம் தொடரலாமே.... (வாப்ச்சாவிடம் பெருநாள் காசு வாங்கிய அந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன் என்று யாராலும் ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம்..)

இன்ஷா அல்லாஹ் மற்றொரு கட்டுரையில் சந்திப்போம்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது

புகைப்படங்கள்: சகோதரர் ஜாஹிர் ஹுசைன் மற்றும் அதிரைநிருபர் குழு

16 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n) : முதலில் நல்வரவு !

உங்களின் ஒவ்வொரு ஆக்கத்திலிருந்து எடுத்து வந்த முத்துக்களாய் மிளிர்கிறது திரும்பிப் பார்க்கிறேன் !

அருமை !

இனி மேலும் பசுமை பொங்கும் ஆக்கங்கள் தொடரட்டும்...

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
(அதிரை) மனம் திரும்பத் திரும்பத் படிக்க சொல்கின்றது உங்களின் திரும்பிப் பார்க்கிறேன் கட்டுரையை!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சென்னைக்கு அல்ல!ஊருக்குக்கு போனது முக்கிய சம்பிரதாய கடமைக்கு மரியாதை நிமித்தமாய் என்றாலும், ஆனால் போனது இதுக்குதான் முக்கியமாகவென்று தெரிகிறது இப்போது!

கண்ணால் படமெடுத்து 'கல்பி'லிருந்து வெளிவருகிறது காவியமாய் "திரும்பிப் பார்க்கிறேன்" மிக அருமை, பழசை நெனச்சு உருகுது உள்ளம்.

அன்று தேர்தலில் உங்க வீட்டுக்குள்ளே மினி மன்றமே அமைத்து தேர்தல் கள பணியாற்றியாதும், உறவினர்களில் சிலரை உனக்கும் எனக்கும் பொதுவாக பெரியோய்,சிறியோய் என்றழைத்ததும் இன்னும் பல நெனப்புக்கு வருது நெய்னா!"திரும்பிப்பார்ப்போம்"

'சாரி'மற்றவர்களே!(சகோதரர்களே)

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
நண்பர் நைனா திரும்பிப்பார்ததை நான் மனதில் மருபடியும் காட்சியை ஓடவிட்டு விரும்பிபார்கிறேன்.
மனதில் அரும்பி வரும் ஆசையை அப்படியே அள்ளி பருகிபார்கிறேன்.
தும்பி பிடித்து விளையாடியதும் ,கம்பி மத்தாப்பு கொளுத்தியதும் நினைத்துப்பார்கிறேன். இமைகள் நனைந்து போகிறேன்.
மழை காலத்தில் ஆங்காங்கே தோன்றும் மழைக்காலானைஉடைத்துப்போட்டதும்,அதன் பின்னே நத்தை மெத்தையற்று தூங்குவதை அசைபோட்டுபார்கிறேன்.
முன்னே பிடித்த கருப்பு,வெள்ளை புகைப்படத்தை
ஆசையுடன் தொட்டு பார்க்கிறேன்.
விட்டு போன நினைவுகளை வலிய வரவழைத்து குமைந்து போகிறேன். இப்படி கடந்த காலங்களை அப்படியே
வார்தையில் கோர்த்து நமக்கு மாலையாக தந்த நைனாவுடன் நடந்த,கழித்த பொழுதுகளையும்
இன்னும் தொண்டைக்குழிக்குள் உள்ளதை எச்சில்விட்டு நனைத்து பார்க்கிறேன் . இப்படி திரும்பி பார்தால்-
மீதி உள்ள வாழ்கையை கடப்பதற்கு நேரம் இல்லாமல் போய்விடுமோ என அஞ்சி திரும்பிபார்பதைவிட்டு என் மனதை நடைமுறைக்கு திருப்பிவிட்டுவிட்டு மொவுனாமாய் அழுகிறேன்.
நண்பர்களே, சொந்தங்களே,உறவுகளே நான் மனதுக்குள் அழுவதும் என் மனதின் விசும்பலும் உங்களுக்கு கேட்க்கும் என நம்புகிறேன்.என் கடைப்பிள்ளையை அணைத்தவனாக.

Unknown said...

crown சொன்னது…
அஸ்ஸலாமுஅலைக்கும்.
நண்பர் நைனா திரும்பிப்பார்ததை நான் மனதில் மருபடியும் காட்சியை ஓடவிட்டு விரும்பிபார்கிறேன்.
மனதில் அரும்பி வரும் ஆசையை அப்படியே அள்ளி பருகிபார்கிறேன்.
தும்பி பிடித்து விளையாடியதும் ,கம்பி மத்தாப்பு கொளுத்தியதும் நினைத்துப்பார்கிறேன். இமைகள் நனைந்து போகிறேன்.
மழை காலத்தில் ஆங்காங்கே தோன்றும் மழைக்காலானைஉடைத்துப்போட்டதும்,அதன் பின்னே நத்தை மெத்தையற்று தூங்குவதை அசைபோட்டுபார்கிறேன்.
முன்னே பிடித்த கருப்பு,வெள்ளை புகைப்படத்தை
ஆசையுடன் தொட்டு பார்க்கிறேன்.
விட்டு போன நினைவுகளை வலிய வரவழைத்து குமைந்து போகிறேன். இப்படி கடந்த காலங்களை அப்படியே
வார்தையில் கோர்த்து நமக்கு மாலையாக தந்த நைனாவுடன் நடந்த,கழித்த பொழுதுகளையும்
இன்னும் தொண்டைக்குழிக்குள் உள்ளதை எச்சில்விட்டு நனைத்து பார்க்கிறேன் . இப்படி திரும்பி பார்தால்-
மீதி உள்ள வாழ்கையை கடப்பதற்கு நேரம் இல்லாமல் போய்விடுமோ என அஞ்சி திரும்பிபார்பதைவிட்டு என் மனதை நடைமுறைக்கு திருப்பிவிட்டுவிட்டு மொவுனாமாய் அழுகிறேன்.
நண்பர்களே, சொந்தங்களே,உறவுகளே நான் மனதுக்குள் அழுவதும் என் மனதின் விசும்பலும் உங்களுக்கு கேட்க்கும் என நம்புகிறேன்.என் கடைப்பிள்ளையை அணைத்தவனாக.


--------------------------------------------------
இந்த வேதனை எல்லோருக்குமானது ......

அப்துல்மாலிக் said...

ஊருக்கு போனால் கூட காலப்போக்கில் எல்லாமே சில வினாடிகளில் திரும்பிப்பார்த்தாலும் மறந்துவிடுகிறது, நெய்னாவுடைய இந்த கட்டுரையை படிப்பதன்மூலம் முற்றிலும் அந்த நினைவுகளில் மூழ்கிவிடுகிறது.

சில வேலைப்பழு காரணமாக கேட்ட சில புகைப்படங்களை என்னா தரமுடியவில்லை, இப்போ நெய்னாவே ஊருக்குப்போய் தகவல் திரட்டி கட்டுரை கொடுத்தவிதம் அருமை, திரும்பிப்பார்த்த என் நினைவு இயல்புநிலைக்கு வர மறுக்கிறது

தொடரட்டும்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் நெய்னா முகம்மது,

தங்களின் ஆக்கத்தை ஒவ்வொரு முறையும் படித்தாலே ஊர்க்கு போய்வந்த உணர்வு. மீண்டும் புத்துணர்வுடன் வந்து புதிய ஆக்கத்தை தந்தமைக்கு மிக்க நன்றி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

எல்லாவற்றையும் நீங்களே சொல்லிவிட்டீர்களே, யோசித்துவிட்டு வருகிறேன்.

Meerashah Rafia said...

திரும்பிப்பார்கின்றேன். இதை விரும்பிப்பார்கின்றேன்.

தலை நிமிர்ந்து பார்கின்றேன்,
தவறாமல் வாசிக்க..
தலை குனிந்து நிற்கின்றேன்.
தவறிவிட்டோமே வசிக்க..

இன்று,
100 அடி மேல் என் அலுவலகம்,
அன்று
செக்கடி மேடே என் தலைமை இடம்.


msm(mr)
meerashah rafi ahamed

Yasir said...

ஆஹா சகோ.நெய்னா வந்துட்டீங்களா மறுபடியும்....அருமை அருமை மிகப்படுத்தி சொல்லவில்லை ஆபிஸில் இந்த ஆ(ஏ)க்கத்தைமெய்மறந்து படித்து கொண்டு இருந்தேன் ஜிஎம் அழைத்தது கூட காதில் கேட்காமல்...அலுவலக நண்பர் இரண்டுமுறை என் பெயரை கூப்பிட்டவுடன்தான் நாம் இருப்பது துபாய் என்பதே நினைவுக்கு வந்தது..அந்த அளவிற்கு எழுத்தின் தாக்கம் என்னை தாய்மண்ணுக்கே கொண்டு சென்றுவிட்டது....அடிக்கடி எழுதுங்கள் சகோ....எவ்வளவு ரெஃப்ரஸ்மன்ட் பானம் குடித்தாலும் மனதிலும் உடம்பிலும் இதை படிக்கும் போது ஏற்படும் உற்சாகத்தை தந்துவிட முடியாது

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும் நெய்னா,
கடல் கடந்து வாழும் நம் அனைவருக்கும் ஊரின் வாசத்தை நுகரச்செய்துவிட்டது உங்கள் ஆக்கம்.
There is a saying in English. The earth is under destruction only because of the human greed not because of their need.
We recollect our good old days in our home town and the pleasant memories. But at the same time I feel that we are enjoying the so called luxuries in this world at the expense of our future generation. We never bother about the pollution and the hazards we are creating to this earth through our misuse of nature. We cut the trees, emit smoke and do all sort of hazards which are ultimately going to adversely affect our future generation. We never feel contended with the simple homely and harmonious life we lived during our childhood.
All we enjoyed are going to be told as tales to our kids who cannot even imagine nor even believe that we lived in such a profound world.
It is our responsibility to make the current generation to realize the real happiness in this life and to prepare them for the permanent happiness in the life after this.
Let us all educate our loved ones to love nature and lead by example.
Wassalam
N.A.Shahul Hameed

Yasir said...

சார் இவ்வளவு சின்ன கருத்தில் எவ்வளவு பெரிய விசயத்தை சொல்லி இருக்கிறீர்கள்....ஒரு ஆக்கமாக இதை விரிவு படுத்தி தாருங்கள் சார்

//There is a saying in English. The earth is under destruction only because of the human greed not because of their need.// well said

sabeer.abushahruk said...

எம் எஸ் எம் திரும்பிப் பார்த்த அதிரையைத்தான் நானும் விரும்பிப் பார்க்கிறேன். மீசை அரும்பிப்பார்த்த வயதோடு ஊரின் தொடர்பு நொருங்கிப்போய் துண்டு துண்டாக வாய்ப்பதால் இதுபோல் ஆக்கங்கள் குளிர்காய உதவும் தொண்டாகவே பார்க்கிறேன்.

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum Yasir,
Inshya Allah we will share more and more views in future.
Wassalam
N.A.Shahul Hameed

ZAKIR HUSSAIN said...

இனிமேல் பெரும்பாவங்களில் "ஊருக்கு போகும் ஆசை" யை அதிகரிக்கச்செய்யும் வார்த்தைகளும் அடங்கும் என ஒரு என்டார்ஸ்மென்ட் போட்டுவிடுவது நல்லது..

சகோதரர் மு.செ.மு. நெய்னா முஹம்மது...
நானே ஊருக்கு போக ஆசை அதிகம் இருந்தும் போக முடியாமல் வேலை அதிகமாகிப்போய் இப்போ போயிடலாம் அல்லது இன்னும் 2 மாத்தில் போகலாம் என 2 வருடமாக ஓடிக்கொண்டிருக்கிறேன். இப்டியெல்லாம் எழுதி "ஹ்ம்ம்ம்' சொல்ல வைத்து விட்டீர்கள்.

ZAKIR HUSSAIN said...

To Bro, N.A.S

இயற்கையோடு ஒன்றி வாழ்வது எனக்கு பிடித்தவைகளில் ஒன்று. [சான்று: நாம் எல்லாம் அம்பாசமுத்திரம் / ஆழ்வார்குறிச்சி தாண்டி தேயிலை தோட்டங்களின் குளிரில் / கொட்டும் மழையில் நான் எடுத்த அந்த பசுமையான வீடியோ...மற்றும் சபீரின் கைவண்னத்தில் வந்த ' பாலருவி" யின் கலர் போட்டோக்கள்.]

மற்றும் நீங்கள் மலேசியா வந்த போது அழைந்து சென்று ஒரு பாறையில் ஏறி அமர்ந்து குளித்த அந்த டெம்ப்ளர் பார்க் அருவியின் குளியல் தினங்கள்'


இயற்க்கையை பற்றி தொட்டு எழுத எல்லா தகுதியும் உள்ள ஆள் நீங்கள். இப்படி எப்படி ஒரு மின்னல் வரி மட்டும் எழுதுவது. எழுதுங்கள்...மனித ஆசையில் அழிந்து போன இறைவன் படைப்புகளை...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு