Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வெயில் காலத்தில் நம்ம ஊர்.. 13

அதிரைநிருபர் | April 11, 2011 | ,

காலைக்கதிரவன் கண் விழிக்கும் முன்னே

அதிகாலைத்தொழுகை அமைதியாய் நிறைவேறும்.

உலகக்கல்விக்கு செல்லும் முன்னர் சிறார்கள் இறைக்கல்வி பெற பள்ளிக்குச்செல்வர். நன்கு பாடம் படிப்பர்.

சிலர் குளக்கரைக்கு சென்று உடல் குளியலுடன் உள்ளக்குளியலும் பெறுவர்.

காலைப்பசியாற சிலசமயம் காத்திருக்கும் நல்ல தயிர்க்கஞ்சி.

கடைத்தெருவுக்கு செல்ல கண்கள் கடிகாரத்தை நோக்கும்.

நல்ல கிளக்கன்,கொடுவாவை எண்ணி உள்ளம் விரைந்து ஓடும்.

இடையே வீட்டு சில்லரை வேலைகளை செல்லமாய்த்தரும் உம்மா.

ஆயிரம் சடைவுகளுடன் சில்லரை காசுக்கு உள்ளம் அதை ஏற்றுக்கொள்ளும்.

விளையாட நண்பர்கள் வீட்டு வாயிலில் வந்து நிற்பர்.

வீட்டில் வேண்டாவெறுப்பாய் ஏற்றுக்கொண்ட வேலைக்கு பெரும் வேட்டு வைப்பர்.

காய வைத்த கருப்பு சட்டையின் மேல் கருங்காகம் வெள்ளை எச்சம் போட்டு வேடிக்கை பார்க்கும்.

வீட்டு முற்றத்தில் உலர வைக்கப்பட்ட முறுக்கு வத்தலுக்கு கயிற்றில் கட்டப்பட்ட காகத்தின் இறகே காவல் காக்கும்.

கோடையில் வறண்ட குளங்கள் தன் சேற்றில் கேக் வெட்டி ஜோக்கு கொண்டாடும்.

கொய்யாவும், மாங்கனியும், தேறிய நெல்லிக்காயும், தித்திக்கும் பலாச்சுளையும்.

வெள்ளனமே வந்த வெள்ளரிப்பழமும், திண்ண வேண்டிய யாவும் தெரு ஆச்சியின் கூடையினில் திரண்டு கிடக்கும்.

மிளகாய்ப்பொடிபோட்ட கொத்து மாங்காய் கூடையில் காத்துக்கிடக்கும்.

பனை நொங்கு வண்டி சந்துபொந்தெல்லாம் வந்து போகும்.

அருமையான உணவுகளை அன்புத்தாய் ஆசையுடன் அள்ளித்தந்தாலும்

தெரு ஆச்சியின் திண்பண்டம் என்னவோ தித்திக்கும் எப்பொழுதும்

ஐவர் சேர்ந்து சகன் விருந்துண்டு நல்ல ஆறஅமர உறங்கி எழுந்து

சாய்ங்கால கால்பந்து போட்டி காண சக நண்பர்களுடன் சேர்ந்து சென்று எவனோ அடித்தக்கோலுக்கு கைத்தட்டி வாய்ப்புகழும்.

பொழுது சாந்து போன ராஜாமடபாலம் ஊர்த்திரும்ப உள்ளம் மறுக்கும்.

அங்கு சிறு ஓடையில் துள்ளும் மீன் திமிங்கிலமாய் உள்ளத்தில் தெரியும்.

கொண்டு வந்த கடலையும், சுண்டலும் நண்பர்களை கிண்டல் செய்ய வைக்கும்.

காசில்லாமல் இயற்கை ஏசிக்காற்றைத்தந்து கோடையின் புழுக்கம் தீர்க்த்து நம் உள்ளத்தை மல்லாக்க படுக்க வைக்கும்.

கடலின் உப்புக்காற்று கருவேல மரங்களை ஆட்டிப்படைக்கும்.

காட்டுப்பூனையின் சப்தம் இடையே பயத்திற்கு பாய் விரிக்கும்.

காணாமல் போன கம்பனை எண்ணி ரயில் நிலையம் காத்துக்கிடக்கும்.

அந்திமாலைப்பொழுது அந்த இரவுக்கு வழிவிட்டு நிற்கும்.

மின்வெட்டு வந்து ஊரை இருளில் மூழ்கடிக்கும்.

காத்தாடி நின்று போய் உடலில் வியர்வை ஊற்றெடுக்கும்.
குத்து விளக்கு மூலம் குடும்பமே வெளிச்சம் பெறும்.

குத்து விளக்கு சுடரோ காற்றில் தானே நடனம் ஆடும்.

ஏரிப்புறக்கரையின் ஒலிபெருக்கியில் பாடும் பாட்டு ஊருக்கே கேட்கும்.

இட்டலிக்கார அம்மாவின் வியாபாரம் கொடி(பொடி)கட்டிப்பறக்கும்.

உம்மாவின் வயிறு பிள்ளைகளுக்கு உணவு ஊட்டி நன்கு நிறைந்திருக்கும்.

இடையே கொட்டாவி வந்து உறக்கத்திற்கு இருக்கை அமைக்கும்.

கையில் முடைந்த பாய் நாம் உறங்கு முன் அது படுத்துறங்கும்.

ஆந்தையின் சப்தம் இரவின் உச்சத்தை குறிக்கும்.

நாயின் ஊழை உறக்கத்தில் அச்சத்தை கொடுக்கும்.

உம்மாவின் அரவணைப்பு ஒட்டு மொத்த அச்சத்திற்கும் அரண் அமைத்து நிற்கும்.

இன்று இருப்பதையும், சென்று மறைந்ததையும் சேர்த்தே இங்கு எழுதி இருக்கிறேன். எங்கோ இருக்கும் உங்களுக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கா? அப்படி இருந்தால் உங்கள் பின்னூட்டம் மூலம் தொடருங்களேன்....

இன்ஷா அல்லாஹ் மற்றொரு கட்டுரையில் சந்திப்போம்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது

13 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கிளக்கன் கொடுவாவுடன் ஐஸ்மோரும் ஆவலாயிருக்கும்,
பானையில் கூவி விற்க வரும் பதநீரும் இதமாயிருக்கும்,
பனை விசிறியும் காகித விசிறியும் காற்று தரும் கருவியாயிருக்கும்,
மண் பானைதண்ணி மணமாயிருக்கும்,
கூலர் தேவையில்லை குளிராகவே இருக்கும்,
கூடையில் கலர் கலராய் கெரண்டு குஞ்சுகள் விற்பனைக்கு வரும்,
காக்கையும் கழுகுகளும் வட்டமிடும் குஞ்சுகளைக் கவ்விச்செல்ல,
கோடை உப்புக்காற்று ஆயுளைக் கூட்டும்,
காளைக் கருவாடும் கமகமக்கும்,
சேற்றில் ஒழிந்திருக்கும் தாமரை பருப்பு முந்திரியாய் சுவைக்கும்.
செக்கடிமேடும் செழிப்பாய் மனம் மரம் நிறைந்த மகிழ்ச்சியாயிருக்கும்
இன்றோ புறம் நிறைந்து!

cheena (சீனா) said...

அன்பின் நெய்னா முஹமது,

அஸ்ஸலாமுலைக்கும்

அருமையான இடுகை. மிக மிக இரசித்து, மீண்டும் மீண்டும் படித்த, பிடித்த இடுகை. அதிகாலை முதல் இரவு வரை இயல்பாக நடக்கும் நிகழ்வுகளை, இயல்பான நடையில், இரசிக்கும் வண்ணம் எழுதியது நன்று. உள்ளத்து உணர்வுகளை அள்ளிக் கொட்டி இருக்கிறீர்கள்.
அதிகாலைக் கதிரவன், அதிகாலைத் தொழுகை, இறைக்கல்வி, உள்ளக்குளியல், தயிர்க்கஞ்சி, கடிகாரம், கொடுவா, சில்லறை வேலைகள், காசு, நண்பர்கள், கருங்காகத்தின் வெள்ளை எச்சம், காவல் இறகு, சேற்றில் கேக், கொய்யா, மாங்கனி, நெல்லி, பலாச்சுளை, வெள்ளரிப்பழம், கொத்து மாங்காய், நொங்கு, சேர்ந்துண்ணுதல், கால்பந்து விளையாட்டு, ராஜாமடப் பாலம், துள்ளும் மீன்கள், கடலை, சுண்டல், கிண்டல், ஏசிக்காற்று, உப்புக்காற்று, காட்டுப்பூனை, காணாமல் போன் கம்பன் ( உச்சகட்ட இரசனை இதுதான் மாஸ்டர் பீஸ்), அந்தி மாலை, இரவு மின்வெட்டு, நின்றுவிடும் காற்றாடி, கை கொடுக்கும் குத்து விளக்கு, ஒலிபெருக்கி, இட்லி வியாபாரம், பிள்ளைகள் சாப்பிட்டால் நிறையும் உம்மாவின் வயிறு, கொட்டாவி, முடைந்த பாய், அலறும் ஆந்தை, நாயின் ஊளை, அரணான அரவணைப்பு

தேர்ந்தெடுத்த படங்கள்

அடடா, அனுபவித்து ஆனந்தித்து எழுதிய திறமைக்குப் பாராட்டுகள்.

இன்ஷா அல்லாஹ் மற்றொரு கட்டுரையில் சந்திப்போம்

நல்வாழ்த்துகள் நெய்னா முஹமது

நட்புடன் சீனா

ZAKIR HUSSAIN said...

To Bro.மு.செ.மு. நெய்னா முஹம்மது

நாந்தான் ஏற்கனவே சொல்லிட்டேனுல...ஊர் ஞாபகத்தை அதிகப்படுத்தாதீங்கன்னு சொல்லி...உங்களை எல்லாம் இந்த ஊருக்கு வரவழைச்சி ட்ராபிக் ஜேம்லெ கார் ஒட்டவச்சாதான் சரியா கேப்பீங்க போல...

ஏதொ நம்மநால ஏன்டதுக்கு....

ஈ மொய்த்த பதனி....[ பாக்டீரியா மைனஸ்]
இரவில் டிப்போ பால்
காலையில் செடியன்குளம் / பல்லவ குளம் / ஏரி / வெட்டிக்குளம் குளியல்...அப்படியே பினாங்கிலிருந்து வரும் ஆட்களை பார்க்கும் ஆர்வம்
[ என்னடா மாப்லே...வளந்துட்டியே...[ இதை ஒவ்வொரு முறையும் சொல்வார்கள் ...அந்த தாட்டியான அப்பாக்கள்

ஓப்பன் வே சினிமாவில் 'சீப்பனியான் / முறுக்கு...டீயி..."சவுன்ட் இல்லாத படம்

ரயில்வே ஸ்டேசன் காற்றின் முழுமையான சுகந்தத்தில்
இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தின் தமிழ்சேவை இரண்டில் காற்றில் கலந்து தேன் தமிழ் பரப்பும் BHஅப்துல் ஹமீது/ K.S ராஜா / ராஜேஸ்வரி சண்முகம் /

ஹ்ம்ம்ம்....அட போங்கப்பா....

அப்துல்மாலிக் said...

நெய்னா சொல்ல வார்த்தைகளில்லை, மீண்டும் மீண்டும் உள்ளம் ஊரைநோக்கி திரும்புது, ஆனாலும் உன்னை ஊரு இப்படி கட்டிப்போடக்கூடாது

அப்துல்மாலிக் said...

நன்றி சீனா அய்யா தாங்கள் முதல் பின்னூட்டத்துக்கு, இது முழு முதற்கொண்டு எங்க ஊரின் தினசரி வாழ்க்கை, கொஞ்சம் மாற்றிப்போட்டால் எல்லா ஊருக்கும் பொருந்தும்.

sabeer.abushahruk said...

கோடைகால நிகழ்வுகளின் நினைப்பில் குளிர்காய(?) வைத்துவிட்டார் சகோ. எம் எஸ் எம்!

சூப்பர்!

Yasir said...

///கோடைகால நிகழ்வுகளின் நினைப்பில் குளிர்காய(?) வைத்துவிட்டார் சகோ. எம் எஸ் எம்! //// எப்படி காக்கா நான் டைப்பண்ணி கொண்டு இருந்ததை நீங்கள் பதிந்துவிட்டீர்கள்...வேற பின்னூட்டத்துடன் வருகிறேன்

rasheed3m said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் நெய்னாவின் உள்ளம் ஊர் சென்று காரிருல் மேகத்தை எடுத்து வந்து சவூதியில் கோடைக்கு தகுந்த குளிர் தரும் எழுத்து மழையாய் பொழிந்து குளிர்காய வைத்துல்லது.
சகோதரர்களே தேர்தல் தகவல்கள் இங்கு கலை கட்டி இருப்பதால் இந்த மாத கட்டுரைக்கு எனக்கு நானே விடுப்பு எடுத்து கொண்டேன்.
இன்ஷா அல்லாஹ் விரைவில் எழுத்து மூலம் தொடர்கிறேன்.
யா அல்லாஹ் இங்கு பதிவாளர்களாக இருப்பவர்களையும், படித்து செல்பவர்களையும் எழுத்தும் செயலும் ஒன்றுபட்டவர்களாக இருக்கச் செய்வாயாக!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் சீனா அவர்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

சகோதரர் நெய்னா அவர்களின் முழு ஆக்கத்தையும் ஒரு சில வரிகளில் சுருக்கமாக சொன்னதுக்கு மிக்க நன்றி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் நெய்னா அவர்களின் எந்த ஆக்கம் படித்தாலும் ஊருக்கு இலவசமாக போய்வந்த உணர்வு.

ஏர் டிக்கெட் இல்லாமல் ஊருக்கு போய்வந்த உணர்வை தந்த சகோதரர் நெய்னாவுக்கு மிக்க நன்றி

Ahamed irshad said...

அட!! சீனா ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.. எங்க ஊர் தளத்திற்கு நீங்க வந்தது எனக்கு உவகை ... மகிழ்ச்சி உங்கள் அன்பிற்கு :))

அதிரை நிருபருக்கு சீனா என்றவுடன் வியப்பு வரும், 'சிதம்பரம் காசி விஸ்வநாதன் 'என்ற பெயரின் சுருக்கம்தான் சீனா :) தமிழ் பதிவுலகத்தின் மிக முக்கியமான மூத்த பதிவர்..

நெய்னா காக்கா சிறப்பான ஆக்கம் :))

அநியாயத்துக்கு கிளறிட்டீங்க ஊர் நினைப்புகளை :))

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முதல் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் சீனா ஐயா அவர்களுக்கு நன்றி(கள்) !

எங்கள் (சூழலோடு)ஊர் மண்வாசனைக்கு மகுடம் வைப்பவர்தான் MSM(n)என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் நெய்னா முஹம்மத்.

இவரின் நிறைய பதிவுகள் இங்கே இருக்கிறது பங்களிப்பாளர்கள் வரிசியைல் முதலில் இருக்கும் இவரின் பெயரை அழுத்தினாலே எங்களூர் கருப்பு வெள்ளைப் படங்கள் ஓட ஆரம்பிக்கும் பின்னர் ஈஸ்மெண்ட் கலராக முடித்திருப்பார் ஒவ்வொரு கட்டுரையையும்.

உங்களின் தொடர் வருகையும் ஆர்வமூட்டும் கருத்துக்களும் எங்களுக்கு மகிழ்ச்சையத் தரக் கூடியதே !

Shameed said...

Yasir சொன்னது…

//எப்படி காக்கா நான் டைப்பண்ணி கொண்டு இருந்ததை நீங்கள் பதிந்துவிட்டீர்கள்//


"நாம செய்ய நெனகிரதை யாரோ செய்து முடிகின்றார்கள்"
அது யாருன்னா நம்ம M S M தான்

பழைய நினைவுகளை நொங்கு சுளை எடுப்பது போல் எடுத்து பனை மட்டையில் வைத்து கொடுத்துள்ளார் இஷ்டம் போல் நாம் சுவைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு