Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பொறுமையும் நன்றியுடைமையும்... 1

அதிரைநிருபர் பதிப்பகம் | January 02, 2015 | ,

:::: தொடர் - 4 ::::

தலைமைத்துவத்தின் இரண்டாவது தடம் (இலக்கு), அல்லாஹ் அளித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதாகும். இதில்தான் அடியானின் ஆறுதலும் உள அமைதியும் அடங்கியுள்ளன. இதைத்தான் அல்லாஹ்.

“நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் உங்களுக்கு (என் அருட்கொடைகளை) அதிகப்படுத்துவேன்” (அல்குர்ஆன் 14:7) எனக் கூறுகின்றான்.

அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணி எண்ணி, அவன் மீது அன்பு கொள்ளும் போதுதான், அந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் அருட்பேறு அடியானுக்கு வாய்க்கின்றது. சுவனத்திற்கும் அகிலத்திற்கும் சொந்தக்காரனான அல்லாஹ் தன் மீது அன்பைச் செலுத்துகின்றான் எனும் உணர்வு, அடியானின் உள்ளத்தில் அப்போதுதான் முகிழ்க்கின்றது. மாறாக, மனிதரிடம் இறையருளுக்கான நன்றியுடைமை அற்றுப் போகும்போது, அவன் தானே வருவித்துக் கொண்ட நோவினைக்கு ஆளாகின்றான்!

ஆண்டவனுக்கு அடியான் நன்றி செலுத்தும்போது, அந்த நன்றியுடன் அவனிடத்தில் பொறுமையும் தானாகவே வந்துவிடுகின்றது. ஆகவே, பொறுமையும் நன்றியுடைமையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை எனலாம். இஸ்லாத்தில் ‘பொறுமை’ என்பதற்கு விரிவான பொருளுண்டு. பொதுவாகக் கருதப்படுவது போன்று, துன்பங்களைச் சகித்துக் கொள்வது மட்டும் பொறுமையாகாது. மாறாக, பொறுமை என்பது, தன் வலிமையாலும் பொருளினாலும், அல்லாஹ்வின் பாதையில் பணியாற்றிவிட்டு, அதன் தீர்ப்பை அல்லாஹ்விடத்தில் விட்டுவிடுவதே உண்மையான பொறுமையாகும்.

அல்லாஹ் தனது அருள்மறையில், ‘முஹாஜிர்’ எனும் இறைநெறிச் சோதனை மேற்கொண்டோரைப் பற்றிக் குறிப்பிடும் பல இடங்களில் , அவர்களை ‘ஸாபிரூன்’ (பொறுமையாளர்கள்) அல்லது ‘முஜாஹிதூன்’ (பாடுபட்டோர்) என்றே குறிப்பிடுகின்றான். அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து வெறுமனே உட்கார்ந்திருப்பவன், ‘முஜாஹித்’ (இறை நெறிப் போராளி) ஆகமட்டான். உண்மையில் அவன் அல்லாஹ்வின் பாதையில் தன் உடல், பொருள், ஆவி ஆகியவற்றைக் கொண்டு பாடுபட்டுவிட்டு, அவனிடம் பணிவுடன் உதவியைக் கோரி இறைஞ்சிக் கொண்டிருப்பான். காரணம், அந்த இறையுதவி இன்றேல், அவன் எப்பாடு பட்டாலும், அவனால் வெற்றிக் கனிகளைக் கொய்ய முடியாது.

பொறுமை என்பது செயலற்ற தன்மையாகக் காணப்பட்டாலும், அதுவும் ஒரு செயலென்றே கூற முடியும். ஏனெனில், பொறுமை 'செய்து', அதன் பின்னர் இறைவனிடம் இறைஞ்சுகின்றான் அடியான். இதற்கோர் அரிய எடுத்துக்காட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையில் நடந்த 'பத்ர்' போர் நிகழ்வாகும். தம்மிடம் இருந்த குறைந்த அளவிலான வசதிகள் அனைத்தையும் முற்றாகப் பயன்படுத்திய பின்னர், தம் இரு கை களையும் ஏந்தி, நபியவர்கள் இறைவனிடம் உதவி கோரினார்கள் அல்லவா ? நபி வரலாற்று ஏடுகளில் பதிவு பெற்ற அந்த இறை இறைஞ்சல் இதோ:

"அல்லாஹ்வே! இறுமாப்பும் மமதையும் கொண்ட மக்கத்துக் குறைஷிகள் உனக்கு எதிராகவும் உன் தூதரைப் பொய்ப்படுத்தியும் இதோ, அருகில் தம் படை வலிமையுடன் வந்து நிற்கின்றார்கள்! இறைவா! நீ' எனக்கு வாக்களித்த வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். எதிரிகளைத் தோற்றோடச் செய்வாயாக! யாஅல்லாஹ்! இதோ, இந்தச் சிறு கூட்டமாகிய முஸ்லிம்கள் தோற்கடிக்கப் படுவார்களாயின், இனி இந்த உலகில் உன்னை வணங்குவற்கு யாருமே இருக்கமாட்டார்கள், அல்லாஹ்!"

இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் இரட்சகனிடம் இரு கைகளையும் ஏந்தி இறைஞ்சிக் கொண்டே இருந்தார்கள். அந்த ஏக்கம், திடுக்கம், வேட்கை, எதிர்பார்ப்பு, எல்லாம் இணைந்த இறைஞ்சலால், அவர்களின் மேலங்கியும் நழுவி விழும் அளவுக்கு ஆகிவிட்டது! அவ்வேளை, அருமைத் தோழர் அபூபக்ர்(ரலி) அவர்கள் விரைந்து நெருங்கி வந்து, விழுந்த மேலாடையை மீண்டும் அண்ணலாரின் புயங்களில் எடுத்துப் போர்த்தி விட்டுச் சொன்னார்கள்:

“அண்ணலே! அல்லாஹ்வின் தூதரே! போதும்! உங்கள் இரட்சகனிடம் அழுது முறையிட்டது போதும்! அவன் உங்களுக்கு வாக்களித்ததை நிறைவேற்றியே தீருவான்.”

இந்தத் தேறுதலை அடுத்த நொடியில், அல்லாஹ் தன் அமரர்களை உதவிப் படைகளாக உலகிற்கனுப்பினான். இதன் தொடர்பாகக் கீழ்கண்ட மறைவாக்கு இறங்கிற்று:

“(நபியே!) உம் இரட்சகன் வானவர்களை நோக்கி, ‘திண்ணமாக நான் உங்களுடன் இருக்கின்றேன். ஆகவே, நீங்க்கள் நம்பிக்கையாளார்களை உறுதிப் படுத்துங்கள். இறைமறுப்பளர்களின் இதயங்களில் விரைவில் நான் பேரச்சத்தை உண்டாக்குவேன். நீங்கள் எதிரிகளின் பிடரிகளின் மீது வெட்டுங்கள்! அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டுங்கள்!’ என்று மறைமொழி அறிவித்ததை நினைவு கூர்வீராக!” (அல்குர்ஆன் 8:12)

அல்லாஹ்வின் தூதரவர்கள் மண்டியிட்டு மன்றாடிய நிலையில் சிறிது நேரம் இருந்தார்கள். பின்னர், சற்றே மயக்கமுற்றார்கள். அதன்பின், மகிழ்ச்சிப் பெருக்கால் இவ்வாறு கூறினார்கள்: “அபூபக்ரே! உமக்குச் சுப சோபனம் உண்டாகட்டும்! அல்லாஹ்வின் வெற்றி நம் அருகில் வந்துவிட்டது! அல்லாஹ்வின் மீது ஆணையாக, வானவர் தலைவர் ஜிப்ரீல் வெள்ளைக் குதிரையில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வருவதை இதோ, நான் பார்க்கிறேன்.” இவ்வாறி கூறிக்கொண்டு தம் கூடாரத்தை விட்டு வெளியில் வந்து,

வெகு விரைவில் இந்தக் கூட்டத்தினர் சிதறிக்கப்பட்டு புறங்காட்டி ஓடிவிடுவர்!” (அல்குர்ஆன் 54:45) எனும் இறை வசனத்தை ஓதிக் காட்டினார்கள். அடுத்து, அமரர் தலைவர் ஜிப்ரீலின் ஆணைக்கிணங்க, ஒரு கைப்பிடி மணல் அல்லது கூழாங்கற்களை அள்ளி, எதிரிகளின் அணியை நோக்கி வீசினார்கள். சற்று நேரத்தில், மாபெரும் புழுதிப் புயலொன்று கிளம்பி, காட்டுத் தீ போல் வளர்ந்து, எதிரிகளின் கண்களை மறைத்தது!

இறைவனிடம் தம்மை முழுமையாக ஒப்படைத்த தலைவரின் நாட்டமும் தேட்டமும், தனக்கு மட்டுமின்றித் தன்னைப் பின்பற்றிய தோழர்களுக்கும் இருக்க வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையில் இருந்ததால், இறையுதவி விரைந்து வந்தது, அற்புதமாக! அவர் எறிந்த கூழாங்கல்லும் மண்ணும் அல்லாஹ்வால் எறியப்பட்ட அற்புதச் சாதனமாகிவிட்டது! இதை வல்ல இறைவன் தன் வாக்கால் உறுதிப் படுத்தியும் விட்டான், அருள்மறையில் (அல்குர்ஆன் 8:17)

தன்னலம் கருதாத் தானைத் தலைவரின் முறையீடு எப்படி அற்புதத்தைக் காட்டிற்று என்பதற்குக் கீழ்காணும் அறிவிப்பு தக்க சான்றாகும்:

பத்ருப் போர்க்களத்தில் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்களுக்குப் பக்கத் துணையாக அமரர்களும் போரிட்டார்கள் என்ற செய்திக்கு அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பெற்ற நபிமொழிச் சான்று ஒன்றுண்டு. “பத்ருடைய நாளில் முஸ்லிம் போராளி ஒருவர் இறைமறுப்பாளன் ஒருவனைத் துரத்திக் கொண்டு போனார். அப்போது, ‘வெட்டி வீழ்த்து ஹைஸூம்!’ என்ற குரல் ஆவேசமாகக் கேட்டது. அவ்வளவுதான். மின்னல் வேகத்தில் வீசப்பட்ட வாள் ஒன்று தலையைச் சீவித் துண்டாக்கிற்று! இந்த அற்பு நிகழ்வைப் பற்றி அண்ணலாரிடம் மதீனாவாசி ஒருவர் விவரித்தார். அதற்கு பெருமனார்(ஸல்) அவர்கள், “நீர் கூறுவது உண்மைதான். அது மூன்றாம் வானத்திலிருந்து வந்த இறையுதவியாகும்” என்று கூறினார்கள்.

துன்பத்தின்போது பொறுமையை மேற்கொண்டு தொழுகையின் மூலம் இறையுதவியைப் பெற முடியும் என்பதைப் பெருமானார்(ஸல்) அவர்கள் பத்ரில் மெய்பித்துக் காட்டினார்கள். தம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டுப் பின்னர் இறையுதவியைக் கேட்டுப் பெற்றார்கள். தகை மிக்க தலைவரின் மிகையில்லா முன்மாதிரிகளுள் இதுவும் ஒன்றாகும்.
தொடரும்…
அதிரை அஹ்மது

1 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஆம்

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதிலும் உதவியவர்களுக்கு நன்றி சொல்லியோ செலுத்தியோவிடுவதிலும் ஓர் ஆத்ம திருப்தி மனத்திற்கு வாய்க்கிறது என்பது உன்மைதான்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு