Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வியும் கற்போர் கடமையும் ! - குறுந்தொடர் - 1 1

அதிரைநிருபர் | July 21, 2016 | , , ,

தேடல்:


"தேடல்" என்பது மனிதனின் சமுதாய வாழ்கையில் அத்தியாவசிய அம்சங்களில் ஒன்று. ஆனால் எவற்றைத் தேடுவது ? எவ்வாறு தேடுவது? என்பதை உணர்ந்து தக்க பொருளைத் தக்க வழியில் தேடுவதே நல்லவர்கள் நாடும் நண்ணெறியாகும்.


இன்றைய மனிதர்கள் எவற்றையெல்லாமோ தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள் "இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு; அது எங்கிருந்த போது அதை நாடி ஓடு என இசை பாடி இன்பத்தை தேடியலைகிறது ஒரு கூட்டம். "பணமே பிரதானம்; அது இல்லையேல் அவமானம்" என்ற கொள்கை கொண்டு பணத்தை தேடியலைகிறது இன்னொரு கூட்டம் "பதவி வந்திடப் பத்தும் பறந்து வரும்" எனப் புதுமொழி பேசிப் பதவியைத் தேடித் திறிகிறது மற்றொரு கூட்டம்.


அறிவு:


இன்பம், பணம், பதவி போன்றவையெல்லாம் முதலிடம் கொடுத்துத் தேடப்பட வேண்டைய பொருளா ? நிச்சயமாக இல்லை. தேட்டத்தோடு தேடப்பட வேண்டிய பொருள் ஒன்றுண்டு, அதுதான் "அறிவு". அறிவே அகிலத்தின் அணையா ஜோதி" என்கிரார் கிரேக்க நாட்டு தத்துவ ஞானி சாக்ரடீஸ். "அறிவு அற்றம் காக்கும் கருவி" என்கிறார் வண்டமிழ்ப் புலவர் வள்ளவப் பெருந்தகை. "பணம், பதவி, அதிகாரம், செல்வாக்கு,அழகு எதைக் கொண்டும் சத்தியத்தை விளங்கில் கொள்ள முடியாது. அறிவு இருந்தால் மட்டுமே சத்தியத்தை விளங்கிக் கொள்ள முடியும்" என்பது அருமை திருமறைக் குர்ஆன் காட்டும் தெளிவுரை.


அறிவுதான் இன்று உலகை ஆட்சி செய்கிறது, ஆயுதம், பணம், பதவி எல்லாம் கூட அறிவுக்குப் பின்தான் பயன்படுகிறது என்பதை உலகறிந்த உண்மை. இத்தகைய அறிவையே தேடிப் பெறச் சொன்னார்கள் அருமை நபி(ஸல்) அவர்கள். "அறிவு இறை நம்பிக்கையாளர்களின் காணாமல் போன பொருள், அதைத் தேடி அடைய வேண்டிய உரிமை அவருக்குண்டு" என்பது அண்ணலார் அவர்களின் வாக்கு.


கல்வி:


மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்திதான் அறிவு. மண்ணுக்குள் மறைந்திருக்கும் தண்ணிரைப் போல் அறிவு மனிதனுக்குள் மறைந்திருக்கிறது. அதை வெளிக் கொணரும் ஒப்பற்ற கருவியாகக் கருதப்படுவது தான் "கல்வி" ஆகும்.


மண்ணைத் தோண்டத் தோண்ட நீர் ஊற்றெடுத்துப் பெருகுவது போல் கற்க கற்க அறிவும் ஊற்றெடுத்துப் பெருகும். எனவே தான் கல்வி கற்பது மனிதனின் அடிப்படைக் கடமை எனக் கருதப்படுகிறது.


கல்வி கற்றவரே சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார். "கற்றவரும் கல்லாதவரும் சமமாவரா" என்பது இறைவன் தன் திருமறையில் தொடுக்கும் வினா. "கற்பவனாக இரு; அல்லது கற்பிப்பவனாக இரு" என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் போதனை. "கேடு இல் விழுச் செல்வம் கல்வி" என்பது வள்ளுவர் வாக்கு "கற்றவர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு" என்பது அவ்வையின் அமுத மொழி. "செல்வம் பெரிதா ? கல்வி பெரிதா" எனப் பட்டிமன்றங்கள் நடத்தப்படுகின்றன. இதை முடிவு செய்ய பட்டிமன்றங்களே தேவையில்லை கல்விதான் என்பது கண்கூடு. செல்வத்தை நாம் பாதுகாக்க வேண்டும்; கல்வியோ நம்மை பதுகாக்கும். செல்வம் செலவழிக்க செலவழிக்க அதிரகரிக்கும். செல்வம் இன்றிருக்கும் நாளை சென்று விடலாம்; ஆனால் கல்வி உயிருள்ளவரை உடனிருக்கும். எனவே தான் "கல்வி கற்க வேண்டியது ஆண் பெண் எல்லோருடைய கடமை" என இயம்பினார்கள் ஏந்த நபி(ஸல்) அவர்கள்.


எல்லை இல்லை:

'கல்வி கரையில; கற்பவர் நாள் சில' என்ற கூற்றும் 'கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு' என்ற கூற்றும் நாம் கற்க கூடிய கல்விக்கு எல்லை இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. காலத்தின் அருமை கருதிக் கல்விக் கூடங்களில் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் குறிப்பிட்டப் பாடத்திட்டத்தின் படி குறிப்பிட்ட நூல்களை மட்டும் கற்று நமது அறிவை வளர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறுகிய வரம்பிற்குட்பட்ட அக்கல்வியைக் கூட பல மாணவர்கள் முனைப்போடு கற்பதில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். முனைப்போ முயற்சி மேற்கொண்டு கற்றால் மட்டுமே தேவையான அறிவை நாம் தேடிக் கொள்ள இயலும் என்பதை கற்போர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்காக சில நெறிமுறைகளைக் கைக் கொள்ள வேண்டும்.


தன்னம்பிக்கை:

கல்விக்குத் தடையா இருப்பவை நான்கு. 1. மறதி, 2. சோம்பல், 3. அலட்சியம், 4.தூக்கம். கல்விக்குத் துணையாக இருப்பவை நான்கு.1.ஆசையும் ஆர்வமும், 2.முயற்சியும் உழைப்பும், 3.துணிவும் உற்சாகமும், 4.கவலையும் பிரார்த்தனையும். கல்விக்குத் தடையாக இருப்பவற்றைக் கல்விக்குத் துணையாக இருப்பவற்றைக் கொண்டு வீழ்த்தி வெற்றிகாண முயற்சிக்க வேண்டும்.


'சாதிக்க வேண்டும்' என்ற தன்னம்பிக்கையும், 'சாதித்தே தீர்வேன்' என்ற விடா முயற்சியும் கற்போரிடம் கட்டாயம் இருந்தாக வேண்டும். இவற்றோடு சோர்வற்ற உழைப்பும் சேர்ந்து விட்டால் அவர்களின் வெற்றியை தடுத்து நிறுத்தும் சக்தி வேறு எதற்கும் இல்லை.


காலந்தவறாமை:

கல்வியில் சாதிக்க விரும்பும் மாணவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று காலம் தவறாமை. "கடமை கண்போன்றது; காலம் பொன் போன்றது" என்ற மூதுரை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும். குடிக்க நீர் கிடைக்காத பாலைவனத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் ஒருவன் தன்னிடமுள்ள சிறு அளவு நீரைச் சிக்கனமாகச் செலவழிப்பதில் எவ்வளவு கவனமாக இருப்பானோ அந்த அளவு, நேரத்தை செலவிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். படிப்பைப் பாதிக்கும் வேறு எதிலும் நேரத்தை வீண் விரயம் செய்யக் கூடாது.


தேர்வுக்காக மட்டும் படிப்பது என்ற வழக்கம் நல்லதல்ல, நாள் தோறும் படிக்கின்ற வழக்கத்தைக் கொள்ள வேண்டும். வகுப்பில் அன்று நடந்த பாடத்தை அன்றிரவே மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இதைத் திட்டமிட்டுச் செய்தால் அதுவே திகட்டாத பழக்கமாகிவிடும்.

தொடரும்...

-SKM ஹாஜா முகைதீன் M.A. Bsc., BT.

 (முன்னால் தலைமையாசிரியர். கா.மு. மேல்நிலை பள்ளி, அதிரை)


மீள் பதிவு


1 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

'கற்கவேண்டும்'என்ற சிந்தனை அதிராம்பட்டினத்து வாசிகளுக்கு நூறுஆண்டுகளுக்கு முன்பு உதித்திருந்தால் இன்று அதிராம் பட்டினத்திலும் ஒரு அனுவிவிஞ்ஞானி அபுல்கலாம் பிறந்திருப்பார்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு