Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சரித்திரப் பார்வையில் ஏப்ரல் 1 - ஏமாறாதே ஏமாற்றாதே.. 13

அதிரைநிருபர் | April 01, 2011 | ,

இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களும், அறிவுப்பூர்வமான எந்த வித கொள்கைளும் இல்லாமல் தம்முடைய மனோஇச்சைகளையே தங்களின் கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும், கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி அவைகளுக்கு முக்கியத்துவம் தந்து அந்த நாட்களை கொண்டாடுவது ஆகும்.

இவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் அவற்றுக்காக ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் கூறுவர். இந்த சிறிய கட்டுரையில் இவர்கள் மூடர் தினம் (ஏப்ரல் ஃபூல்) என கொண்டாடும் தினத்தைப் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டத்தைப் பார்க்கலாம்.

மூடர் தினத்தின் தோற்றம் குறித்த கருத்துக்கள்: -

மூடர் தினத்தின் தோற்றம் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது. இருப்பினும் இதன் தோற்றம் குறித்த உறுதியான கருத்து என்று எதுவும் கூறுவதற்கில்லை.

இதன் தோற்றம் குறித்த கருத்துக்களில் மிகவும் பிரபலமாகக் கருதப்படும் சிலவற்றைக் காண்போம்: -

1) பண்டைய அறியாமைக் கால பழக்கம்: -

சிலரது கூற்றுப்படி, பண்டைய காலத்தில் வாழ்ந்த அறியாமைக் கால மக்கள் ஏப்ரல் 1 அல்லது மார்ச் 21 ஆம் தேதியை மையமாக வைத்து வரக்கூடிய ‘சம இரவு தினம்’ (vernal equinox) என்றழைக்கடும் (பூமியின் வடக்கு அரைக்கோளத்தில்) வசந்த காலத்தின் துவக்க தினத்தை திருவிழா தினமாக கொண்டாடி வந்தனர். இந்த தினத்தில் கேலியும் கிண்டல்களும் அடங்கிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தனர்.

2) புதிய வருடப்பிறப்பு அறிமுகமாதல்:-

கி.பி. 1582 ஆம் ஆண்டு கிறிஸ்தவ போப் கிரிகோரி XIII என்பவர் புதிய காலன்டரை அறிமுகப்படுத்தி ஜனவரி 1 ஆம் தேதியை புதிய ஆண்டின் துவக்க நாளாக மாற்றியபோது அதுவரை ஜூலியன் காலன்டர் முறைப்படி ஏப்ரல் ஒன்றாம் தேதியை தங்களின் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்தவர்கள் இந்த புதிய காலன்டரை ஏற்க மறுத்தனர். அவர்களை கேலி செய்யும் விதமாக இந்த புதிய காலன்டரை தினித்தவர்கள் ஜனவரி முதல் தேதியை வருடப்பிறப்பாக ஏற்க மறுத்தவர்களை கேலியும், கிண்டலும் செய்யும் விதத்தில் அவர்களை மூடர்களாக்குகின்ற விதத்தில் பொய்களையும் போலியான பரிசுப் பொருட்களையும் அனுப்பி வைத்து மகிழ்ந்தனர். இந்த அறிவீனமான செயல் பின்னர் படிப்படியாக ஐரோப்பியா முழுவதும் பரவலாயிற்று.

3) முஸ்லிம்களிடமிருந்து ஸபெயினைக் கைப்பற்றுதல்: -

ஸபெயினை முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது அவர்களின் படை மிகவும் வலிமை மிக்கதாகவும் எதிரிகள் கண்டு அஞ்சக் கூடியதாகவும் அமைந்திருந்தது. அதைக் கண்டு பொறுக்காத இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை அழித்துவிட துடித்தனர். இருப்பினும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அதற்கான காரணத்தை அவர்கள் ஆராயும் போது முஸ்லிம் படையினர் சிறந்த ஈமான் தாரிகளாகவும் இறையச்சமுடையவர்களாகவும் இருப்பதைக் கண்டனர்.

முஸ்லிம்களை வெல்ல வேண்டுமானால் அவர்களின் நம்பிக்கையைக் சிதைப்பதை விட வேறு வழியில்லை என்பதை உணர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானத்தையும் சுருட்டுகளையும் இலவசமாக அனுப்பி வைத்தனர். அதைப் பயன்படுத்த துவங்கிய முஸ்லிம்கள் நாளடைவில் தங்களது ஈமானில் உறுதியழந்து பின்னர் படிப்பபடியாக தங்களின் வலிமையிலும் வலுவிழந்தனர்.

இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிறிது சிறிதாக முஸ்லிம்கள் வசம் இருந்த ஸ்பெயினின் பகுதிகளைக் கைப்பற்றலாயினர். இறுதியில் முஸ்லிம்களின் கோட்டையாக விளங்கிய கிரினாடாவில் உள்ள பகுதியை ஏப்ரல் முதல் தினத்தன்று கைப்பற்றினர். அந்த நாள் முதல் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் தேதியை மூடர்களின் தினமாக அவர்கள் கொண்டாடி வருகின்றனர். (3)

இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் தினம்!: -

இந்த வகை மூடர் தினத்தின் தோற்றம் குறித்து கூறப்படும் கருத்துக்களில் உண்மையானது எதுவாக இருந்தாலும் முஸ்லிம்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதோ அல்லது அந்த தினத்தில் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதோ இஸ்லாத்தில் அனுமதிக்கபடாதவைகளாகும்.

மூடர் தினத்தை முஸ்லிம்கள் ஏன் கொண்டாடக் கூடாது?

1) ஜாஹிலிய்யாக் (அறியாமைக்) காலத்தின் அனைத்து மூடப்பழக்க வழக்கங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக வந்தவர்கள் தான் நமது நபி (ஸல்) அவர்கள். நாம் அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டுமேயல்லாது அறியாமைக்கால மக்களின் பழக்கங்களாகிய பிறரைக் கேலி, கிண்டல் செய்து அவர்களை ஏமாற்றி அதன் மூலம் சந்தோசமடைவதைப் பின்பற்றக் கூடாது.

2) கிறிஸ்தவ பாதிரியாரான போப் கிரிகோரி என்பவர் துவக்கிய புதிய காலன்டரைப் பின்பற்றாதவர்களை கேலி செய்வதற்காக உருவாக்கியதாகக் கருதப்படும் இந்த தினத்தைக் கொண்டாடுபவர்கள் அவர்களின் இத்தீய செயல்களுக்குத் துணைபோவதோடு அல்லாமல் நபி (ஸல்) அவர்களின் ‘யார் அந்நிய சமூகத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே!’ என்ற எச்சரிக்கையை மீறி செயல்பட்டவரைப் போலாவார்.

3) போதைப் பொருட்களுக்கு முஸ்லிம்களை அடிமையாக்கி அதன் மூலம் அவர்களை மூடர்களாக்கி அவர்களின் மனவலிமையை இழக்கச் செய்து அதன் மூலம் தந்திரமாக ஸ்பெயின் நாட்டை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றி அதைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து ஒரு முஸ்லிமும் கொண்டாடுவாரானால் அவரை விட வேறு ஒரு மூடர் இருக்க முடியுமா? ஏனென்றால் இது தம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் மூடர்களாக்கப்பட்டதை தாமே கொண்டாடுவது போலாகாதா?

4) இந்த மூடர் தினத்தித்தின் தோற்றம் குறித்த மேலே குறிப்பிடப்பட்ட காரணங்கள் எதுவாக இருந்தாலும் அல்லது இவைகளல்லாத வேறு எந்தக் காரணமாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே முஸ்லிம்களால் தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் இஸ்லாத்தின் எதிரிகளால் தோற்றுவிக்கப்பட்டது. எனவே தம்மை முஸ்லிம் எனக் கூறிக்கொள்ளும் எவரும் இத்தகைய தீய செயல்களிலிருந்து விலகியிருப்பதோடல்லாமல் மற்றவர்களுக்கு இதன் தீமைகளை எடுத்துக் கூற முன்வரவேண்டும்

5) இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தினங்களைக் கொண்டாடுபவர்கள் செய்யும் காரியங்களாவன: -

a. பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது

b. பிறரை ஏமாற்றி அவர் ஏமாந்து துன்பப்படும் போது அதைப் பார்த்து ரசிப்பது

c. போலியான பரிசுப்பொருட்களை பிறருக்கு அனுப்பி அவரை கேலி செய்வது

d. ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் (தாய், தந்தை அல்லது மனைவி போன்றவர்கள்) இறந்து விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டு அவரை வேதனைப் படுத்தி அதை ரசிப்பது

e. ஒரு நாட்டின் தலைவர் இறந்து விட்டதாக அல்லது மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டு விட்தாக வதந்நியைக் கிளப்புவது

f. இது போன்ற ஏராளமான பொய்யான தகவல்களையும் கேவலத்திற்குரிய செயல்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவைகள் அனைத்துமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் மடடுமின்றி இதைச் செய்பவர்களுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றது.

பொய் பேசுவதன் தீமைகள்: -

1) பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்: -

அல்லாஹ் கூறுகிறான் : நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)

2) முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்குர்ஆன் 9:77)

3) பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஆதாரம்: புகாரி

4) பரிகசிப்பது மற்றும் கேலி செய்வது அறிவீனர்களின் செயல்: -

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், ‘நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்’ என்று சொன்னபோது, அவர்கள் ‘(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?’ என்று கூறினர்; (அப்பொழுது) அவர், ‘(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறினார். (அல்குர்ஆன் 2:67)

5) பொய் பேசுபவனுக்குரிய தண்டனைகள்: -

சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’ என்றனர். நான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம். தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும். அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

6) விளையாட்டுக்காகக் கூட பொய் பேசக் கூடாது: -

முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி

இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய் பேசுவது கூட தடுக்கப்பட்டுள்ளது. அது போல பிறரை சந்தோசப்படுத்துவதற்காகவும் பொய் பேசக் கூடாது.

எனவே சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரை துன்புறுத்தி சந்தோசம் அடைதல், ஏமாற்றுதல் ஆகியவைகளையே முழு மூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக் கூறி இதனை நமது சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மனவலிமையையும் தந்தருள்வானாகவும்.

13 Responses So Far:

Yasir said...

மாஷா அல்லாஹ்...சரியான நாளில் சரமாரியாக பதியபட்ட ஆக்கம்....அருமையான நாம் அறிந்திராத ஏப்ரல் 1 பற்றிய விளக்கங்கள்...தவறு என்றவுடன் தவிர்த்து கொள்வது சாலச்சிறந்தது...அல்லாஹ் காப்பற்றுவான்

sabeer.abushahruk said...

மெய்யாலுமே சொல்றேன்பா முட்டாளுக்குக் கூட விளங்குற மாதிரி எழுதப்பட்டிருக்கிறது இந்த கட்டுரை. நன்றியும் வாழ்த்துகளும்.

இருந்தாலும், அறியாமைக் காலத்தில் பசங்களா இருந்தபோது ஏப்ரல் ஃபூல் நினைவுகள் சுவாரஸ்யமானவை.

போகிற வருகிற ஆட்கள் சட்டையில் இங்க்க் தெளிப்பது, உருளைக்கிழங்க பாதியாக வெட்டி அதில் "AF" என்று செதுக்கி சட்டைகளில் 'பச்சக்'குவது, ஹாஸ்டல் வார்டனின் அலுவலகத்தில் மட்டும் ஃபோன் இருந்த காலங்களில் ஜாகிர் போன்ற நண்பர்களை நள்ளிரவில் (காலை 8 மணி)ஃபோன் வந்திருப்பதாக சொல்லி வார்டன் அறைக்கு கீழே அனுப்பி ஏமாற வைப்பது என...வலியில் கூட சந்தோஷம் மட்டுமே துய்த்த காலங்கள் அவை....

(one down batsman to continue pls)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பேட்டிங் ஆர்டர் மாற்றியமைந்ததற்கு காரணம், கோபப்படாம அமைதியா ஒரு வேலையை வலைப் பயிற்சியில் செய்து கொண்டிருப்பதால் ஒரே கேள்வியும் பதில்கள் இரண்டுமாக வந்திடுறேன், ஆதலால் அடித்து ஆடும் ஆட்டக் காரர்களும் அசத்தும் நயகர்களும் தொடர்ந்திடுங்கள்.

அவசரமாக அவசியமாகவும் அதிரையிலிருந்து ஒருநாள் கட்டமாக....

அதிருக்கட்டும் ஏப்ரல் முதல் நாள் - என்னுடைய சிறுவயதில் நிகழ்ந்த நிகழ்வு, எனது மச்சான் காலையில் வந்து என்னை எழுப்பி எனது வாப்பா காரைகுடியிலிருந்து வருவதாக சொல்லி (எத்தனை மணிக்கு அந்த இரயில் வருமென்று கூடத் தெரியாது) என்னை அழகான ரம்மியமான அதிரைப்பட்டினத்து இரயிலடிக்கு அழைத்துச் சென்றான், நேரமும் கடந்தது இரயிலும் வந்தது ஆனால் எதிர்பார்த்தது நிகழவில்லை அப்போது அவன் என்னிடம் இன்று ஏப்ரல் ஃபூல் கத்திச் சொன்னான் எனக்கு வந்ததே யாசிரின் ஆக்க்கம் சொன்னது... அதே வேகத்தில் திரும்பும்போது நான் உன்னோட வரமாட்டேன்னு சொல்லிட்டு என்னோட சைக்கிளை திசை மாற்றி ஓட்டினேன் கடற்கரைத் தெருவுக்குள் அன்றுதான் முதல் முறையாக நுழைந்தேன் (தொகுதி எம்.எல்.ஏ மாதிரியல்ல இயக்கத்திலேயிருந்து பிரிந்த மற்றொரு இயக்கம் மாதிரி) வழி தெரியவில்லை வெளியில் மெயின் ரோட்டுக்கும் வரும் வழி தெரியாமல் தட்டுத் தடுமாறி வீடு வந்த நேரத்தில் ஒரே கலோபரம் என்னைக் காணவில்லைன்னு தேடிகிட்டு.

என்னோட அப்பா விபரம் கேட்டதும் என்ன நடந்ததுன்னு சொன்னேன் உடணே எனது மச்சானைக் கூப்பிட்டு விட்டார்கள் ஒரு அரை கண்ணத்தில் இன்னைக்கு வரைக்கும் என் கண்களில் அப்படியே ஸ்டீல்ஸ் ஆக ஃப்ரேம் போட்டு வச்சிருக்கேன் :) ஏப்ரல் ஒன்னாம் தேதி எடுத்த டிஜிட்டல் ஃபோட்டோவாக.

ZAKIR HUSSAIN said...

ஏதோ கடற்கரைத்தெருவிலிருந்து மெயின் ரோடு போவதற்க்கு வழி தெரியவில்லை என்பதை 4th Avenue to Linden Blvd [New york] அல்லது Shooters Hill Road to Dover Road [ London] போகிறமாதிரி வர்ணித்திருப்பது உங்களுக்கே ஞாயாமா தோணுதா?

புளிய மரம் தாண்டினா ஒறே ரோடுதாணே...ஏதுவும் நீங்க சின்ன பையனா இருக்கும் போது ஹைவே போட்டிருந்தானுகளா?...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// புளிய மரம் தாண்டினா ஒறே ரோடுதாணே...ஏதுவும் நீங்க சின்ன பையனா இருக்கும் போது ஹைவே போட்டிருந்தானுகளா?... //

அசத்தல் காக்கா : நான் தான் சொன்னேனே "என்னோட சைக்கிளை திசை மாற்றி ஓட்டினேன் கடற்கரைத் தெருவுக்குள் அன்றுதான் முதல் முறையாக நுழைந்தேன் (தொகுதி எம்.எல்.ஏ மாதிரியல்ல இயக்கத்திலேயிருந்து பிரிந்த மற்றொரு இயக்கம் மாதிரி) வழி தெரியவில்லை வெளியில் மெயின் ரோட்டுக்கும்?

தேர்தல் ஜுரமாக இருப்பதனால் தெரியாத இடங்கள்தான் கண்ணு முன்னால வருது காக்கா !!

Yasir said...

கடற்கரை தெருவிற்க்கு விஜயம் செய்த எங்கள் அன்பு அண்ணன் அபு இபுராஹிம் அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை வாரி வழங்குங்கள்...ரூட்டை மறந்ததாலும் எங்கள் மனதில் கோட்டைகட்டி வாழ்கிறீர்கள்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கடற்கரை தெருவிற்க்கு விஜயம் செய்த எங்கள் அன்பு அண்ணன் அபு இபுராஹிம் அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை வாரி வழங்குங்கள்...ரூட்டை மறந்ததாலும் எங்கள் மனதில் கோட்டைகட்டி வாழ்கிறீர்கள்... //

கழகக் கண்மனி தம்பி யாசிரே : இருக்கும் இயக்கங்கள் இணையட்டும் இரட்டை மெழுவர்த்தி சுடர்விட்டெரியட்டும் அப்புறம் நாம ஓட்டுக் கேட்டுப் போவோமா !!

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

ஏப்ரல் பற்றி அழகிய விளக்கங்கள்
அறியாத காலங்களில் நிறைய தவறு செய்து விட்டோம் என்பது புரிகின்றது

இனி யாரும் ஏப்ரலில் ஏமாற்றினால் அபு இப்ராஹீம் அப்பா கொடுத்த டிஜிட்டல் அடிதான்!

sabeer.abushahruk said...

அப்பாவா? இது எப்ப? சொல்லவே இல்லே. ஆனா சும்மா சில்லுனுள்ள மனசு குளிர்ந்து போச்சு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா வ்வ்வ்வ்வ்வ் : அபுஇபுறாஹீம்(முடைய) அப்பா(ன்னு) சொல்லியிருந்திருக்கனும் Sஹாமீத் காக்கா... இபுறாஹிமுடைய அப்பாவின் வாப்பா... (கண்ணெல்லாம் கட்டுதா அது சாப்பிட்ட மயக்கமா இருக்கும் காக்கா)

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

அப்பப்பா அப்பா மேட்டர் இப்படி விஸ்வருபம் எடுக்கும் என்று தெரிந்து இருந்தால் இபுறாஹிமுடைய அப்பா என்று போட்டு இருப்பேன்

அப்பா டி இப்பவே கண்ணே கட்டுது

அப்துல்மாலிக் said...

குறும்பையிலே வண்டி மை தடவி அடுத்தவன் முதுகிலே குத்திய/வாங்கிய, அதுக்காக அறுத பழைய சட்டைபோட்டும், ஹீரோ பேனாவுலே அன்று இரவு வழியும் அளவுக்கு நிறப்பிய பிரில் இங்க்ம் தான் ஞாபகம் டிஜிட்டல் கேமராவுலே படமெடுத்தது போல் தெளிவா வருது ஒவ்வொரு ஏப்ரல் 1ம்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
ஏப்ரல் முதல் நாள் : இஸ்லாத்தின் பார்வையில் மிக விளக்கமாக வந்த நல்லதொரு பதிவு.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு