Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழகு மொழி - 01 35

அதிரைநிருபர் பதிப்பகம் | March 11, 2012 | , ,

தொடர் - 1
(1) எழுத்தியல்

நம் தாய்மொழியாம் தமிழின் பெருமைகள் குறித்து எழுதப் புகுந்தால் ஏராளம் எழுதலாம். அவற்றுள் தாய்த்தமிழைப் புகழ்ந்தேற்றி நம்மவர்கள் பாடிவைத்தவை மட்டுமின்றி, தமிழைக் காதலித்து வாழ்ந்து மறைந்த வெளிநாட்டுக் காரர்களும் அடங்குவர்.

தமிழில் தேம்பாவணி எனும் பெருங்காப்பியம் பாடிய வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தவர். தமிழில் பல நூல்களையும் இலக்கண விளக்கங்களையும் வழங்கியவர். இப்போது நாம் பயன் படுத்தும் ஏ,ஓ ஆகிய இரு தமிழ் எழுத்துகளும் கி.பி. 1720வரை எ,ஒ ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு அமைக்கப் பட்டிருந்தன. அவற்றை ஏ,ஓ என்று மாற்றியமைத்தப் பெருமை வீரமாமுனிவருக்குண்டு. தமிழ்மொழி வேற்றுநாட்டவரையும் எவ்வாறு ஈர்த்தது என்பதற்கு, "இங்குத் தமிழ் மாணவன் ஒருவன் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் குறிக்குமாறு கேட்டுக் கொண்டு உயிர் விட்ட டாக்டர் ஜி.யூ.போப் பாதிரியாரின் முறிச் சான்று ஒன்றே போதும்.

உலகின் வாழும் செம்மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியின் பேச்சுத் தொடக்கம் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் அது வரிவடிவம் பெற்றது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் கூறுவர்.

சிறந்த ஒரு மொழியின் அடிப்படை அதன் சொல்வளமாகும். சொல்லுக்கு அடிப்படை எழுத்துகளும் எழுத்துக்கு அடிப்படை ஒலியுமாகும். எழுத்துகளை அவற்றின் ஒலிகளுக்கேற்ப மூன்று இனங்களாகப் பிரித்துத் தன்னகத்தே கொண்டிலங்குவதை ஆராய்ந்து பார்த்தால் தமிழ்மொழியின் அறிவியல் புரியும்.

(1):1 எழுத்து வகைகள்

தமிழெழுத்து நான்கு வகைப்படும்:

(1):1:1 உயிரெழுத்து (அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ) = 12

(1):1:2 மெய்யெழுத்து (க்,ச்,ட்,த்,ப்,ற்,ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) = 18

(1):1:3 உயிர் மெய்யெழுத்து (க்+அ=க, தொடங்கி ள்+ஔ=ளௌ வரை 12x18) = 216

(1):1:4 ஆய்த எழுத்து (ஃ) = 1

மொத்தம் 247 எழுத்துகள்.

"அட..... ஆனா ஆவன்னாக்குத்தான் இம்பூட்டு அலப்பறயா.....?" என்று தயை கூர்ந்து யாரும் கேட்டு விடாதீர்கள்.

தமிழ் வட்டெழுத்துகள் (வரிவடிவங்கள்) பற்றி நிறைய வேறுபட்ட கருத்துகள் உள்ளன. தமிழில் மொத்த உயிரெழுத்தே (அ,இ,உ,எ,ஒ) ஐந்துதான் எனும் வெடிக்கருத்தும் அதிலொன்று. எப்படி எனில், அ+அ=ஆ, இ+இ=ஈ, உ+உ=ஊ, எ+எ=ஏ, ஒ+ஒ=ஓ ஆக ஓரேயெழுத்து இரண்டு தடவை வந்தால் நெடிலாகி விடும் எனும் யுனிகோடு கணக்கோடு, அ+ய்=ஐ, அ+வ்=ஔ என்று வளைத்துக் கொண்டு வருவோரும் உண்டு. ஐ,ஔ ஆகிய இரண்டு எழுத்துகள் பண்டைய தமிழில் இல்லாமலிருந்து பின்னர் வந்து இணைந்தவை எனும் கருத்தும் உண்டு. ஏனெனில், கி.பி 3-6 நூற்றாண்டுகளைச் சேர்ந்த எந்தக் கல்வெட்டிலும் நடுகல்லிலும் ஐ,ஔ ஆகிய இரண்டு எழுத்துகளும் காணப் படவில்லை. மீக்கூறியவாறு ஏ,ஓ ஆகிய இரு எழுத்துகளும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டவை. அதுமட்டுமின்றி 'ஈ' என்பது எழுத்தன்று; அஃது ஓர் ஓவியம் எனும் கருத்தும் உண்டு. காரணம், ஒரு நெடிலின் வரிவடிவம் அதன் குறிலை ஒத்திருக்க வேண்டும். காட்டாக, 'ஆ' எனும் நெடிலின் வரிவடிவம் 'அ' எனும் குறிலை ஒத்திருக்கிறது. 'ஈ' எனும் நெடிலில் 'இ' எனும் குறிலை ஒத்த வடிவமே இல்லாமல் முற்றிலும் வேறாக உள்ளது.

இருப்பினும் தொல்காப்பியரின் கூற்றுப்படி,
அ இ உ
எ ஒ என்னும் அப் பால் ஐந்தும் ...
...
ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப் பால் ஏழும் ...
சேர்த்து 12உம் உயிரெழுத்துகள் என்றே நாம் கொள்வோம்.

எழுத்துகளோடு அவ்வப்போது கொஞ்சம் இலக்கணமும் பார்த்துக் கொள்ளலாம்:

"தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்" எனும் சொற்றொடரில் உள்ள பிழைகளை, தெரிந்தவர்கள் இங்குச் சுட்டிக் காட்டுங்கள்.

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
-ஜமீல் M.சாலிஹ்

35 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

//தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்" எனும் சொற்றொடரில் உள்ள பிழைகளை, தெரிந்தவர்கள் இங்குச் சுட்டிக் காட்டுங்கள்.//

சும்மா லைட்டா ட்ரைப்ப‌ண்ணி பாக்குறேன்.

//த‌ஞ்சாவூரை த‌லைந‌க‌ராக‌க்கொண்டு அருண்மொழி என்ற‌ழைக்க‌ப்ப‌ட்ட‌ இராஜ‌ராஜ‌ சோழ‌ ம‌ன்ன‌ன் ஆட்சி புரிந்து வந்தான்// என்ப‌து ச‌ரியா?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜமீல் காக்கா நானும் ட்ரைப்ப‌ண்ணி பாக்குறேன்.

// //தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்" எனும் சொற்றொடரில் உள்ள பிழைகளை, தெரிந்தவர்கள் இங்குச் சுட்டிக் காட்டுங்கள்.//

தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைமை நகரமாகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்"

Unknown said...

"தஞ்சாவூர்' எனும் ' ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி ' என்ற ' இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்"

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். தஞ்சாவூரைத் தலை நகரமாகக்கொண்டு அருண்மொழியெனும் இராச இராச சோழன் மன்னராக இருந்து ஆட்சி புரிந்தான்???????????

Anonymous said...

"தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்"

-சபீர்

Anonymous said...

நினைவூட்டல் !

ஆஹா !

சிலேட்டில் பின்னர் அவை கடந்து, அடுத்து குறிப்பேடுகளில் எழுதி தொடர்ந்து தட்டச்சு என்றாகிவிட்டது இன்றைய கணினி வளர்ச்சியும் ஒருங்குறி காட்டித் தந்த ஒற்றுமை தமிழ் எழுத மட்டுமல்ல வாசிக்கும் பழக்கத்தையும அதிகரித்தது இணைய பயண்பாட்டின் எழுச்சி.

பழகு மொழி - தலைப்புக்கு ஏற்ற மொழிதான் நம் தமிழ் மொழியும், அதனை இலக்கண, எழுத்து பிழைகளை தவிர்த்து எழுத மூத்தவர்கள் முன்னிருக்க நாமும் அவர்களின் வகுப்பறையில் அமர்ந்து திருத்திக் கொள்ள காத்திருக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ் !

மணியடித்தால் வகுப்பு மணியடித்தால் வீடு என்றில்லாமல், மனத்தை வெல்லும் வகுப்பு, மனத்தோடு ஒட்டிடும் பாடமாக இருத்திட அதிரைநிருபர் வலைத்தளமும் இந்த தொடரை முன்னெடுத்து செல்ல இருக்கிறோம் - இன்ஷா அல்லாஹ் !

அன்பான வாசகர்களே ஒரே ஒரு வேண்டுகோள்(தானுங்க)!

இந்த தொடரின் ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் பதியும் கருத்துக்கள் எழுத்துப் பிழைகள் இன்றி தொடர்ந்தால் அதன் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு மெகா பரிசு காத்திருக்கிறது அது என்னவென்று இந்த தொடரின் நிறைவில் அதிரைநிருபர் குழு அறிவிக்கும் இன்ஷா அல்லாஹ் !

சரி, பரிசு என்றும் அறிவித்தாகிவிட்டது அதற்கான நெறிகள் இருக்கனும் அல்லவா !

இதோ :-

* ஒவ்வொரு பதிவுக்கும் நான்கு வரிகளுக்குமேல் கருத்துக்கள் இருக்க வேண்டும்.

* மடித்து மடித்து எழுதி (கவிதை எழுதிட்டேன்னு) சீக்கிரம் பேப்பரை மடிக்க கூடாது, வரிகள் முழுமையா எல்லைக் கோட்டை தொட வேண்டும்.

* பதிவோடு தொடர்புடையதாக இருத்தல் முன்னுரிமை, இருப்பினும் தமிழ் கற்க எழும் சந்தேகங்களையும் எழுப்பலாம்

* ஆங்கிலம் கலந்திடலாகாது

* தூய தமிழ் என்ற கட்டாயமில்லை, வழக்கு தமிழாக இருக்கலாம்.

* பதிவு ஆசிரியரின் திருத்தம், அதில் சுட்டப்படும் கருத்துக்கள் கற்பதற்கே என்ற மனநிலையுடன் இருத்தல் அவசியம், அவசியமற்ற விவாதம் தொடர்ந்தால் நெறியாளரின் தலையீடு இருக்கும்.

வாருங்கள் தட்டச்சுவோம் பிழையின்றி...

-அதிரைநிருபர் குழு

குறிப்பு : எழுத்துப் பிழைகள் திருத்தம் இந்த தொடருக்கு மட்டுமே பொருந்தும்.

- நெறியாளர்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

//தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்" எனும் சொற்றொடரில் உள்ள பிழைகளை, தெரிந்தவர்கள் இங்குச் சுட்டிக் காட்டுங்கள்//.

எப்புடி எழுதிப்போட்டாலும் சரியான பதிலே வரமாட்டிக்கிது.
அப்பொ கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் வச்சி எழுதியுற்ற வேண்டியது தான்.....

"நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடிய‌ தஞ்சை மாநகரை தலைநகராகக்கொண்டு கடாரம் கொண்டான் மற்றும் அருண்மொழி என்றெல்லாம் மக்களால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட இராஜராஜ சோழன் மன்னனாக ஆட்சி புரிந்து வந்தான்" (இது ரொம்ப ஓவரா தெரியலெ???)

Yasir said...

அழகு மொழி தமிழ் பழகு மொழி என்று அழகிய காக்காவால் தலைப்பிடப்பட்டு அதிரை நிருபரில் வலம் வருவோர்க்கெல்லாம் வகுப்பு எடுத்துக்கொண்டு இருக்கின்றது.தொடரட்டும் உங்கள் சீரிய இப்பணி,தாய்மொழியை விழிபோல மதித்து அதனை ரசித்து,ருசித்து பிழையின்றி பேசுவது,எழுதுவது நாம் அனைவரின் கடமை,இஞ்சி போட்ட இலைவடிநீர் (தேத்தண்ணி) நாவிற்க்கு சுவைதருவதுபோன்று,பிழையின்றி பேசப்படும் மொழியும் பேசும்போது இனிமையைத்தரும்

ஜாகிர் ஹீசைன் said...

தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக்கொண்டு அருண்மொழி என்னும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சிப்புரிந்தான்"

Yasir said...

தஞ்சாவூரைத் தலைநகராகக்கொண்டு அருண்மொழி என்ற அடைபெயர் கொண்ட இராஜராஜ சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சோழ மன்னனின் Regionல் வரும் நம்ம ஊரை எப்படி அதிவீர ராம பாண்டியன் என்னும் ஒரு பாண்டி நாட்டு மன்னன் ஆட்சி செய்தான்? சோழ மன்னனிடம் சம்மந்தம் ஏதேனும் கலந்திருப்பானோ? யாராச்சும் சொல்லுங்களேன்....

ஜாகிர் ஹீசைன் said...

//அட..... ஆனா ஆவன்னாக்குத்தான் இம்பூட்டு அலப்பறயா.....?" என்று தயை கூர்ந்து யாரும் கேட்டு விடாதீர்கள்.//
இம்பூட்டு அலப்பறயா என்பது தமிழ் மொழியா?

Shameed said...

//அவற்றை ஏ,ஓ என்று மாற்றியமைத்தப் பெருமை வீரமாமுனிவருக்குண்டு.//

"அவற்றை ஏ,ஓ என்று மாற்றியமைத்தப் பெருமை வீரமாமுனிவருக்கு உண்டு"

இதில் எது சரி கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன். சேர்த்து எழுதும்போது வீரமாமுனிவருக்"குண்டு" என்று வாருமா ?

அப்துல்மாலிக் said...

சோழ வம்சத்தை சேர்ந்த இராஜராஜ சோழன் தஞ்சையை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்துவந்தான்..!

அப்துல்மாலிக் said...

//இம்பூட்டு அலப்பறயா.....?"//

இவ்வளவு ஆடம்பரமா?

சரியா பேசுறேனா காக்கா

Abu Easa said...

//வீரமாமுனிவருக்"குண்டு" என்று வாருமா//

தமிழில் புணர்ச்சி விதி என்று சேர்த்து எழுதுவதற்கான விதி உண்டு. அதில் "உயிர் வரின் உட்குறள் மெய்விட்டு ஓடும்" என்பது ஒரு விதி. அதன் படி

"முனிவருக்கு உண்டு" என்பதை சேர்க்கும்போது "முனிவருக்க் உண்டு" என்றாகி நிற்கும்.
பின் "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுதல் இயல்பே" என்கிற மற்றொரு விதிப்படி "க்+உ" சேர்ந்து "முனிவருக்குண்டு என்றாகிவிடும்.

Abu Easa said...

//"தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்"//

இராஜராஜ சோழ மன்னன் எனும் அருண்மொழி தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தான்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Thanjavur was the capital city of the king Arunmozhi alias Rajaraja Cholan when he was ruling the region.

When the king Arunmozhi alias Rajaraja Cholan was ruling, Thanjavur was the capital city of the region.

ZAKIR HUSSAIN said...

பஞ்சாயத்துலெ சலசலப்பு அதிகமா இருக்கிறதாலெ ஜமீல் நானா சீக்கிரமா தீர்ப்பை சொல்லிப்புட்டா நல்லது...

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//பஞ்சாயத்துலெ சலசலப்பு அதிகமா இருக்கிறதாலெ ஜமீல் நானா சீக்கிரமா தீர்ப்பை சொல்லிப்புட்டா நல்லது... //


பஞ்சாயத்து என்றாலே சலசலப்பும் (இரட்டை கிளவி) சால்சாப்புமா(இது கிளவியா கிளவானான்னு யாரச்சும் சொல்லுங்கோ ) தானே இருக்கும்

Shameed said...

//"தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்"//


தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழன் ஆட்சி செய்தான்.

KALAM SHAICK ABDUL KADER said...

தஞ்சாவூரைத் தலைநகராய் அமைத்து அருண்மொழி எனும் இயற்பெயருடைய இராசராச சோழன் ஆண்டான்.

sabeer.abushahruk said...

காக்கா,

வந்து விடைத்தாட்களைத் திருத்தித் தருக! (அப்பாடா முழுசா ஒரு வாக்கியம் தமிழுவதற்குள் மூச்சு வாங்கிவிடுகிறதே!)

sabeer.abushahruk said...

காக்கா,

வந்து விடைத்தாட்களைத் திருத்தித் தருக! (அப்பாடா முழுசா ஒரு வாக்கியம் தமிழுவதற்குள் மூச்சு வாங்கிவிடுகிறதே!)

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பான அனைவர்க்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும்.

என்ற, என்கின்ற, எனும் ஆகிய சொற்களுள் 'என்ற' என்பது கடந்த காலத்தைக் குறித்து நிற்கும் (என்றார்). 'என்கின்ற' எனும் சொல் நிகழ் காலத்தைப் பேசும் (என்கின்றார்). 'எனும்' என்பதும் நிகழ் காலமாக/பொதுவானதாக வரும்.

"தஞ்சாவூர் என்ற ஊரை" என எழுதினால்/கூறினால் அந்த ஊர் இப்போது இல்லை; அல்லது அவ்வூருக்கு வேறு பெயர் வழங்கப்படுகிறது எனப் பொருள் வரும். எனவே,

"தஞ்சாவூர் எனும் ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி என்ற இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்"

என்பது சரியான விடையாகும்.

கருத்தளித்த அனைவர்க்கும் நன்றி

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தலையாய தாய்த்தமிழ் பாடம்!
ஆசிரியர் அவர்களே!
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரிவடிவம் பெற்ற தமிழில் எழுத்துக்கள் ஆரம்பத்திலிருந்தே 247 என்ற எண்ணிக்கையில் உள்ளதா அல்லது இடையில் சில சேர்க்கப்பட்டனவா?
மிகவும் பாரம்பரியமிக்க தமிழ்ச் செம்மொழியில் ஜஹஷஸ போன்ற வடமொழி எழுத்துக்கள் மிகவும் அவசியமாக இருப்பதை 247 எண்ணிக்கையுடன் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லையா?
வயதில் மூத்த உங்களிடம் நான் எழுப்பிய ஐயம் மரியாதையான வார்த்தைகளா?
//அன்பான அனைவர்க்கும்,//
நீங்கள் எழுதி இருப்பது சரியா காக்கா?
இராஜராஜ, இராசராச இதில் எது சரி?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இறைவனின் முதல் மனித படைப்பான ஆதம் (அலைஹி..) அவர்கள் பேசியது நம் தாய்மொழியாம் தமிழ் மொழி என எங்கோ, யாரோ சொல்லக்கேட்டதுண்டு. அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அவர்கள் உலகில் முதன்முதலில் இறக்கப்பட்டது நமது அண்டை நாடான இலங்கையில் உள்ள ஆதம் மலை என்றும் சொல்கின்றனரே? இது பற்றி நமது திருமறையில் என்ன‌ சொல்லப்பட்டுள்ளது? திருக்குர்'ஆனை மேற்கோள் காட்டி யாருக்கேனும் தெளிவுரை இங்கு வழங்க இயலுமா? தெரிந்து கொள்ள விருப்பம்.

'ஜ‌,ஹ‌,ஷ‌' போன்ற‌வைக‌ள் வ‌ட‌மொழி எழுத்துக்க‌ளாச்சே? த‌மிழ் மொழிக்கு இவை எப்பொழுது இட‌ம் பெய‌ர்ந்த‌ன‌?

க‌ல் தோன்றி ம‌ண் தோன்றாக்கால‌த்தே முன்தோன்றிய‌ மூத்த‌ குடி என்று த‌மிழ் மொழியின் ப‌ழ‌மையை பெருமையுட‌ன் புக‌ழும் இவ்வேளையில் அதில் நிச்ச‌ய‌ம் ஓரிறை ப‌ற்றியும் அத‌ன் தூத‌ர்க‌ள் ப‌ற்றியும் நிச்ச‌ய‌ம் சொல்லாம‌லா விட‌ப்ப‌ட்டிருக்கும்? அப்ப‌டி தெளிவுர‌ சொல்லி இருந்தும் ஓரிறை நிராக‌ரிப்போர்க‌ளால் இருட்ட‌டிப்பு செய்ய‌ப்ப‌ட்டுவிட்ட‌ன‌வா? உண்மைக‌ளை வெளிக்கொண்டு வ‌ருவ‌து எப்ப‌டி?

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

//மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
இறைவனின் முதல் மனித படைப்பான ஆதம் (அலைஹி..) அவர்கள் பேசியது நம் தாய்மொழியாம் தமிழ் மொழி என எங்கோ, யாரோ சொல்லக்கேட்டதுண்டு. அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அவர்கள் உலகில் முதன்முதலில் இறக்கப்பட்டது நமது அண்டை நாடான இலங்கையில் உள்ள ஆதம் மலை என்றும் சொல்கின்றனரே? இது பற்றி நமது திருமறையில் என்ன‌ சொல்லப்பட்டுள்ளது? திருக்குர்'ஆனை மேற்கோள் காட்டி யாருக்கேனும் தெளிவுரை இங்கு வழங்க இயலுமா? தெரிந்து கொள்ள விருப்பம்.//

அதிரைநிருபர் அனுமதி அளித்தால் நான் இதுபற்றி எழுதுகிறேன், இன்ஷா
அல்லாஹ்...

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பின் சகோதரர் அஹ்மத் ஆரிஃப் அவர்களுக்கு:

//அதிரைநிருபர் அனுமதி அளித்தால் நான் இதுபற்றி எழுதுகிறேன், இன்ஷா
அல்லாஹ்...//

இன்ஷா அல்லாஹ் ! அவசியம் தொடருங்கள் ! அதிரைநிருபர் தளம் உங்களுக்கும் ஒரு நல்ல களம்.

வாருங்கள் வாருங்கள் வாருங்கள் இன்ஷா அல்லாஹ் !

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பான தம்பி M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

சிறு குழந்தைகள் எழுதத் தொடங்கும்போது சில எழுத்துகளைத் திருப்பியோ தலைகீழோ எழுதுவர். எனது வலைப்பூவின் இலச்சினை 'அ'கரத்தைத் திருப்பிப்போட்டது போலிருக்கும் : http://photos1.blogger.com/blogger/2086/1889/1600/azahu.gif

கற்றுக் கொள்வதற்குச் சிறந்த வழிகளுள் கற்றுக் கொடுப்பது ஒன்று என்பது எனது நம்பிக்கை.

"அன்பான அனைவர்க்கும்" என்பதில் பிழையேதுமிருப்பின் அறியத் தாருங்கள்; திருத்திக் கொள்வேன், இன்ஷா அல்லாஹ்.

***
தமிழுக்குள் வடமொழி எழுத்துகளும் சொற்களும் பிற்றைக் காலத்தில் வந்து சேர்ந்து கொண்டவை என்பது மொழியியலாளர் அனைவரின் துணிபு. சங்க காலத்தில் தமிழ் மொழி பெரிதும் வளர்ந்தது எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 'சங்கம்' எனும் சொல்லே தமிழ்ச் சொல்லன்று.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//"அன்பான அனைவர்க்கும்" என்பதில் பிழையேதுமிருப்பின் //

அலைக்குமுஸ்ஸலாம் அன்பான காக்கா! மற்ற பதில்களுக்கு நன்றி.

அனைவருக்கும் என்பதில் 'ர்' வருமா அல்லது 'ரு' வருமா என்பதில் தான் சந்தேகம்!

அதிரை தாருத் தவ்ஹீத் said...

'யாருக்கும்' சரியென்றால்
'யார்க்கும்' மிகச் சரி.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் - குறள்-664.

அனைவருக்கும் = சரியென்றால்
அனைவர்க்கும் = மிகச் சரி.

M.I.Mohamed Saakir said...

தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராசராச சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்

புதுவை வெ. செந்தில் said...

தமிழ் மொழியில் ஏற்படும் ஐயங்களை தெளிவுபடுத்தும் இணையதளம் ஏதேனும் உள்ளதா...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு