Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன ஒதுக்கீடும் இட ஒதுக்கீடும் - உரசும் உண்மைகள் ! - 1 27

அதிரைநிருபர் பதிப்பகம் | March 12, 2012 | , , , , ,

குறுந்தொடர் - 1

கடந்த சில வருடங்களாக இட ஒதுக்கீடு என்ற சொற்றொடரை நிறையவே கேட்டு வருகிறோம். பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. (பாஸ்போர்ட் இருக்கும்போது ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?) ஆனாலும் ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் அரசு வேலை வாய்ப்புகளிலும், மேற்கல்வி பட்டறைகளிலும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென்று போராடிவருகின்றன. 

அரசும் ஓரளவு ஒதுக்கிக்கொடுத்தாலும் அது போதாது என்று உண்மையிலும் பெயரளவிலும் கூட இயக்கங்கள் போராடி வருகின்றன. அதேபோல் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களும் அவர்களுக்கான இயக்கங்களும் கூடவே போராடி வருகின்றன. இதைப்பற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே இந்த ஆக்கத்தின் நோக்கம். 

முதலாவதாக இட ஒதுக்கீடு என்பது என்ன? அது ஏன் அவசியம்? 

இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை சமுதாயத்தின் அடித்தட்டு மக்களிடமிருந்து எழுந்து எழுச்சி பெறக்காரணமே இந்திய சமூக வாழ்வில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலவி வந்த ஒருவகை இன ஒதுக்கீடுதான். அதாவது, இட ஒதுக்கீட்டுக்காக குரல் எழுப்பி, போராடுவதற்கு காரணம் இன ஒதுக்கீடாகும்.  

இந்தியாவில் ஆதிக்க சக்திகளாகத் திகழ்ந்த ஆரியர்களின் மனுதர்மங்களும், வர்ணாசிரமகொள்கைகளும் மனிதனின் பிறப்பிலேயே அவனது தரத்தை  ஒதுக்கீடு செய்தன. செய்யவேண்டிய தொழில்களை இவைகள் இனவாரியாக ஒதுக்கீடு செய்தன. தலையில் தோன்றியவன், வயிற்றில் தோன்றியவன், காலில் தோன்றியவன் என்று பிறப்பில் இன ஒதுக்கீடு செய்தன. 

தலையில் பிறந்தவன் என்று கற்பிக்கப்பட்டவன் தரணி ஆளவும், காலில் தோன்றியவன் என்று கற்பிக்கப்பட்டவன் கக்கூஸ் அள்ளவும்தான் என்று கடவுளின் பெயராலேயே தொழில்களை இனங்களுக்கிடையில் ஒதுக்கீடு செய்தன. 

ஒரே இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களுக்குள் ஆண்டான் அடிமை வர்க்க பேதம் கற்பிக்கப்பட்டு அதை மக்களும் ஏற்றுக்கொண்டு கைபொத்தி, மெய்பொத்தி, தலை ஆட்டி வாழ்ந்து வந்த காரணத்தால் இனி இது பொறுப்பதற்கில்லை என்ற உணர்வு பெற்றவர்கள் சமூக நீதி வேண்டும் என்று போராடியதன் காரணமாக ஆங்கில ஆட்சியிலேதான் இந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர்களை கைதூக்கிவிட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் வழங்கப்பட தொடங்கப்பட்டது. 

ஆகவே ஆட்டிப்படைத்த ஆரிய மனுநீதி என்ற நஞ்சானது, மனிதனின் பிறப்பிலேயே கற்பித்த பேதம் என்கிற இன ஒதுக்கீடுதான் பேதங்களை மாற்றி சமூக நீதி வழங்குவதற்கும் ஓர் இட ஒதுக்கீடு தேவை என்று குரல் எழ காரணமானது.

மிக சுருக்கமாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆண்டாண்டு காலமாக அடக்கப்பட்ட- உரிமைகள் ஒடுக்கப்பட்ட மக்களையும், இதுவரை எல்லா உரிமைகளையும் கால்மேல் கால்போட்டு அனுபவித்து வந்த மக்களையும் ஒரே நிகராக கருத முடியாது – இதுவரை மேடாக இருந்ததை சமமாக்க வேண்டுமானால் மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டாகவேண்டும் என்ற அடிப்படைதான் இட ஒதுக்கீடு.

கூனிக்குறுகி நின்றவனை கை கொடுத்து தூக்கிவிட்டு ஏணியில் ஏற்றி விடுவதுதான் இட ஒதுக்கீடு. ஆனாலும் சமூக நீதிக்கு தீர்வான இட ஒதுக்கீட்டை, தங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக நினைக்கும் ஒரு சில சமூக விரோத மக்களைக் குறி வைத்துத்தான் இந்தக் கட்டுரையே எழுதப்படுகிறது!

அரபு நாடுகளின் பொருளாதார செழுமைக்குக் காரணம் எண்ணை வளம்; தென் ஆபிரிக்காவின் செழுமைக்குக் காரணம் தங்க வளம்; மலேசியாவின் செழுமைக்குக் காரணம் மண்ணின் வளம்; ஜப்பானின் செழுமைக்குக் காரணம் மனித மூளை வளம். ஐரோப்பிய நாடுகளின் செழுமைக்குக் காரணம் உலகைச் சுரண்டிய வளம்; ஆனால் இந்தியா, சீன நாட்டில் இருப்பதோ மனித வளம் மட்டுமே. இருக்கும் மனித வளத்தை பயன்பட வைத்து சீனா இன்று பொருளாதாரத்தில் கொடி கட்டி பறக்கிறது. 

சீனாவுக்கு அடுத்த மனிதவளத்தை பெற்றிருக்கும் இந்தியா ஏன் பின்தங்கி இருக்கிறது? ஒலிம்பிக் போட்டிகளில் சீனா தங்கங்களை வாங்கி குவிக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் தொகையில் இருக்கும் இந்தியாவின் பெயரை ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் கண்ணில் விளக்கெண்ணெ ஊற்றித் தேடவேண்டி இருக்கிறது. காரணம் சீனா தனது மனிதவளத்தின் 89%  சதவீதத்தை உற்பத்திக்கு (PRODUCTIVITY) பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மனிதவளம் வெறும் 22% தான். காரணம் எண்ணிக்கையில்தான் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். ஆனால், மனிதவளத்தின் தரத்தில் எட்டாத தூரத்தில்  இருக்கிறோம். QUANTITY மட்டும்தான் இருக்கிறது QUALITY இல்லை.  

இப்படி தரமற்ற மனிதவளம் உருவாகிடக் காரணம் ஆரியர்கள்தான். அவர்களின் வர்ணாசிரமக் கொள்கைகள்தான். குறைந்த அளவு உள்ள ஒரு சமுதாயம் இருக்கும் வளங்களை எல்லாம் சுரண்டிக்கொண்டு அதிக அளவு இருந்த சமூகங்களை மேலே எழவிடாமல் தலையில் தட்டி அடக்கிவைத்ததுதான் காரணம். 

கல்வியை ஒரு குறிப்பிட்ட சமூகம்தான் கற்கவேண்டுமென்று கடவுளின் பெயரால் போதித்தார்கள். அரசராகவும், அமைச்சராகவும், ஆளும் வர்க்கமாகவும் ஆரியர்கள்தான் வரவேண்டுமென்று ஆண்டவன் கூறியிருப்பதாகப் புராணங்களை அவிழ்த்துவிட்டார்கள். அரியணைகளில் ஏறும் தகுதி அவர்களுக்கு மட்டுமே என்று ஆர்ப்பரித்தார்கள். ஆளும் பிரதிநிதிகளாகவும், ஆளுனர்களாகவும் அங்கவஸ்திரம் தரித்த துபாஷ்களாகவும், திவான்களாகவும் அவர்களுக்குள் அமர்த்திக்கொண்டார்கள். பல்லக்கில் அமரும் பவிசு தங்களுக்கே என்று பறித்துக்கொண்டார்கள்.

அரண்மனை சேவகர்கள், வீட்டு வேலைக்காரர்கள், துண்டு துணி துவைப்பவர்கள், கூட்டுபவர்கள், பெருக்குபவர்கள், மலம் அள்ளுபவர்கள், போர்வீரர்கள்,  விவசாயிகள் , பல்லக்கு தூக்கிகள் என்ற வேலைகளுக்கு பரமன் பாதத்திலே பிறந்த வர்க்கம் என்ற சூத்திரனை உருவாக்கி அடக்கி அறிவை பெருக்கவிடாமல் வைத்து இருந்ததால் மனிதவளத்தில் தரமற்ற  நிலை ஆயிரம் ஆண்டுகளாக இந்நாட்டில் நிகழக்காரணமாயிற்று. அந்த விளைவுகளின் தொடர்ச்சிதான் இன்றுவரை இந்திய மனிதவளம் சீனாவோடு ஒப்பிடுகையில் தரமற்று இருப்பதற்கு காரணம். 

ஆனால் இன்றும் கூட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதிக்க சக்திகளிடமிருந்து எதிப்புக்குரல் எழுகிறது. ஒரு செய்தியை குறிப்பிட விரும்புகிறேன். இன்றைய இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது, நாம் கேட்பது, அரசால் தர முடிவது 12%  தொழில், பதவிகளிலிருந்து மட்டுமே. காரணம் ஏற்கனவே 88% தொழில்கள், பதவிகள் தனியார்களுக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டது. அரசிடம் இட ஒதுக்கீட்டுக்காக தர முடிவது இந்த வெறும் 12 சதவீதத்திலிருந்துதான்.  எல்லோரையும் திருப்தி படுத்தியாக வேண்டும். 

இந்த குறைந்த சதவீதத்தைக்கூட தரவிடாமல் ஆதிக்க சக்திகள் இட ஒதுக்கீடுக்கு எதிராக திரளுகின்றன. ஆகவேதான் தனியார் துறைகளிலும் அரசின் அளவுகோள்படி இட ஒதுக்கீடு தரவேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. 
உரசல் தொடரும்...
-இபுராஹீம் அன்சாரி

27 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆரம்பமே பொறிகிறது ! அடுத்த பதிவுகளின் காரம் எவ்வாறு இருக்க போகிறதோ என்ற ஆவல்...

இது கிள்ளி விடவல்ல, கிள்ளியெறிப்பட்டிருக்க வேண்டியதை பட்டியலிடுகிறது இந்த பதிவு....

இனியும் காலம் தாழ்த்தாமல்...

sabeer.abushahruk said...

காலத்தின் கட்டாயம் இட ஒதுக்கீடு. இதைக் கருவாகக் கொண்டு காக்கா துவங்கி இருக்கும் இந்தப் பதிவு நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தட்டும்.

நன்றி காக்கா!

இப்னு அப்துல் ரஜாக் said...

சிந்தனைக்குரிய கேள்விகள்.இட ஒதுக்கீடு வேண்டும் என போராடும் நாம் அதை உண்மையில் பெற வேண்டிய -செய்ய தேவையானவைகள் என்ன?

பெருகிவிட்ட முஸ்லிம் இயங்கள் ஒன்று சேர்ந்து எப்படி இதற்கு கூட்டு முயற்சி செய்வது?

அரசிடமிருந்து எல்லா சாதிகளும் கறந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில்,எல்லா வற்றிலும் இழந்து,நிர்கதியாய் நிற்கும் முஸ்லிம் சமுதாயத்தின் அவலம்.ஒரு நோன்புக் கஞ்சி அரிசிக்கே ஆளாய்ப் பறக்கும் நம் சமுதாயம்,இப்படி அலைய வைத்து அழகு பார்க்கும் அரசாங்கம்.நம் வோட்டுக்காக மட்டுமே குறி வைத்து அரசியல் வாதிகள்,ஒரு பக்கம் ஷா நவாஸ் ஹுசைன்,மறுபக்கம் சல்மான் குர்ஷீத்.நம் சமுதாய தலைவர்கள் தான் அடித்துக் கொள்கிறார்கள் என்றால் மறுபக்கம் நம் சாமான்ய முஸ்லிம் மக்களும்.கருத்து வேறுபாடுகளை பேசி - எழுதி தீர்க்கலாம்.ஆனால் வஞ்சனையாக அடித்துக் கொள்வதும்,தாக்கி கொள்வதும்,காட்டிக் கொடுப்பதும்,இன்ஷா அல்லாஹ்,இனியும் வேண்டாம் இந்த இழி நிலை,நம் சமுதாய நிலை சரியில்லை.இப்ராஹீம் அன்சாரி காக்கா போன்றவர்கள்,தங்கள் எழுத்துகள் மூலம் - ஆராய்ந்து மார்க்க அடிப்படையில் தீர்வு சொல்ல வேண்டும் என்ற ஆவலில் உங்கள் இத் தொடருக்கு வாழ்த்து சொல்லி விழைகிறேன்,

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஈவுப்படி நமக்கு சேர வேண்டியதை அபகரிக்கும் தீய ஆதிக்க சக்திகளை அம்பலமாக்கியும், நாம் எழுச்சி பெறவும் நல்லாக்கம்.

sabeer.abushahruk said...

//தரமற்ற மனிதவளம்//

இது ஏறத்தாழ மாக்களுக்குச் சமம் என்கிறீர்கள்?

சேக்கனா M. நிஜாம் said...

விடாமல் துரத்திக்கடிக்கும் “அபிலாஷ”க் கொசுவை, ஒரு வாய்ப்பு கிடைத்து போட்டுத்தள்ளும் போது இருக்கும் சுகமே அலாதிதான்.

சேக்கனா M. நிஜாம் said...

// மிக சுருக்கமாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆண்டாண்டு காலமாக அடக்கப்பட்ட- உரிமைகள் ஒடுக்கப்பட்ட மக்களையும், இதுவரை எல்லா உரிமைகளையும் கால்மேல் கால்போட்டு அனுபவித்து வந்த மக்களையும் ஒரே நிகராக கருத முடியாது – இதுவரை மேடாக இருந்ததை சமமாக்க வேண்டுமானால் மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டாகவேண்டும் என்ற அடிப்படைதான் இட ஒதுக்கீடு.//

சிந்திக்ககூடிய பதிவு !

வாழ்த்துகள் சகோ. இப்ராகிம் அன்சாரி !

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

தேவை இல்லாத ஒதுக்கீட்டை ஒதுக்குவதற்கு தேவையான ஆக்கம்.முதலில் இவற்றை பெற்றுக்கொள்வோம். நன்றி இபுறாஹீம் அன்சாரி காக்கா.

Abdul Razik said...

அரபு நாடுகளில் எண்ணை வளம் மேற்க்கத்திய நாடுகளால் சுரண்டப்பட்டு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது, ஜப்பானில் இயற்கயின் தாக்கம் மனித மூளையின் வளர்ச்சியை கெடுக்கிறது, இந்தியாவில் அரசியல் காழ்ப்புணர்ச்சி தாழ்த்தப்பட்டோரை வளராமல் தடுக்கிறது. மேற்கூறியவைகளைப் பார்த்தால், இந்தியாவில்தான் சுமூக முடிவு கான முடியும். 20 கோடி பேர், 5ல் 1 பங்கு, எளிதாக இலக்கை அட்யலாம். இன்ஷா அல்லாஹ் முயல்வோம் வெல்வோம். மிக அருமையான பதிவு, தொடரட்டும்

Abdul Razik
Dubai

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இபுறாகிம் அன்சாரி காக்கா, நல்ல சிந்தனையை தூண்டும் பதிவு. கருத்துவேறுபாடுகளை களைந்து ஒத்து உற‌வாட உரியவர்கள் தயாராக வேண்டும்.

"நெற்றியில், வயிற்றில், காலில் பிறந்தோர் என பாகுபாட்டுடன் படைத்து உங்களை கூறுபோட்டு கொல்லும் அந்த கடவுள் தேவை தானா?" என தாழ்த்தப்பட்ட, சூத்திரப்பெருங்குடி மக்கள் தன் சிந்தனையை தட்டி எழுப்பி சீர்தூக்கி பார்த்து வேண்டாத தீய சக்திகளை வேரறுக்க வீருகொண்டு எழ வேண்டும்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜசக்கல்லாஹ் ! ஆரம்பமே களை கட்டத்தான் செய்கிறது . பலர் படித்து கருத்து சொல்லி வருகிறீர்கள்.

ஜனாப். அர அல.!

//இட ஒதுக்கீடு வேண்டும் என போராடும் நாம் அதை உண்மையில் பெற வேண்டிய -செய்ய தேவையானவைகள் என்ன?//

//பெருகிவிட்ட முஸ்லிம் இயங்கள் ஒன்று சேர்ந்து எப்படி இதற்கு கூட்டு முயற்சி செய்வது?//

இன்ஷா அல்லாஹ் இந்த குறுந்தொடர் முழுமை பெறும்போது உங்களின் கேள்விகளுக்கும் பதில் இருக்கும்.

தம்பி சபீர்!

//தரமற்ற மனிதவளம்// தரமற்ற மனித வளம் என்பதைவிட தரம் வெளிப்படுவது தடை செய்யப்பட்ட மனித வளம் என்றே நினைக்கிறேன்.

இபுராஹீம் அன்சாரி

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். காலத்தின் கட்டாயம் இந்த இடஒதுக்கீடு பற்றிய இந்த ஆய்வு அலசலும், தீர்வும். மனித இனத்தை கூறு போட்டகூறு கெட்ட மனு நீதியை பற்றிய எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கும் இந்த கட்டுரை அருமை. தொடருங்கள். காக்கா இபுறாகிம் அன்சாரி என்ற இந்த அறிவின் ஊற்றில் சில இன்று அள்ளி குடித்தேன்(முகனூலில் வழியாக) . அவர்களுடன் உரையாடல் இன்ப அனுபவம். அல்ஹம்துலில்லாஹ்.

Noor Mohamed said...

இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் ஒவ்வொரு ஆக்கங்களும், புதியதோர் உலகம் செய்வோம் என்ற புத்துணர்வையே தருகின்றன.

//ஆட்டிப்படைத்த ஆரிய மனுநீதி என்ற நஞ்சானது, மனிதனின் பிறப்பிலேயே கற்பித்த பேதம் என்கிற இன ஒதுக்கீடுதான் பேதங்களை மாற்றி சமூக நீதி வழங்குவதற்கும் ஓர் இட ஒதுக்கீடு தேவை என்று குரல் எழ காரணமானது//

சிந்து சமவெளி நாகரீகம் என்பதெல்லாம் தமிழர் (திராவிடர்) நாகரிகமே. ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு, கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களின் ஆக்கிரமிப்பால், இந்தியாவின் தென்மேற்கு பகுதியாம் சிந்து சமவெளியில் வாழ்ந்த திராவிடர்கள், இந்தியாவின் தென்கோடி எல்லை வரை ஆரியர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். அவர்கள்தான் ஆதி திராவிடர்கள், தமிழர்கள்.

ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு இந்தியாவில் நுழைந்த ஆரியர்களை, ஆரியர்களின் வருகை என்றும், வாணிகம் செய்ய இந்தியாவிற்கு வந்த இஸ்லாமியர்களை, அரேபியர்களின் படையெடுப்பு என்றும், இந்திய வரலாற்றின் அடிப்படையிலேயே சித்தரித்து சிதறடித்து வைத்துவிட்டனர்.

அப்துல்மாலிக் said...

//இஸ்லாமியர்கள் இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. (பாஸ்போர்ட் இருக்கும்போது ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?) //

முதல் வரிலேயே பலத்த அடி நமக்கு

Worth to Read this article

தொன்று தொட்டு காலம் காலமாக ஆதிக்க சக்தியின் அடி இன்னும் இருந்துக்கொண்டுதான் இருக்கு என்பது வேதனையே

ஒலிம்பிம்/உலக கால்பந்து விளையாட்டு நடக்கும்போது மட்டும் இது பற்றி காரசாரமாக விவாதித்துவிட்டு களைந்து செல்லும் கூட்டமாகவே நம் மக்கள் இருக்காங்க என்பது வேதனைக்குரியது :((((((((9

Shameed said...

சைபர் போலன் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த இவர்கள் ரொம்பத்தான் ஆட்டம் போட்டுவிட்டார்கள்,

மாமாவின் தொடர் பல அறிய விசயங்களை அள்ளித்தரும் என நினைக்கின்றேன்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

//// ஆனால் இன்றும் கூட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதிக்க சக்திகளிடமிருந்து எதிப்புக்குரல் எழுகிறது. ஒரு செய்தியை குறிப்பிட விரும்புகிறேன். இன்றைய இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது, நாம் கேட்பது, அரசால் தர முடிவது 12% தொழில், பதவிகளிலிருந்து மட்டுமே. காரணம் ஏற்கனவே 88% தொழில்கள், பதவிகள் தனியார்களுக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டது. அரசிடம் இட ஒதுக்கீட்டுக்காக தர முடிவது இந்த வெறும் 12 சதவீதத்திலிருந்துதான். எல்லோரையும் திருப்தி படுத்தியாக வேண்டும்.
இந்த குறைந்த சதவீதத்தைக்கூட தரவிடாமல் ஆதிக்க சக்திகள் இட ஒதுக்கீடுக்கு எதிராக திரளுகின்றன. ////

உண்மைதான்: ஆரியக்கூட்டங்களில் படிப்பறிவு இல்லாத ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.

ஆரியர்கள் தங்களை மட்டும் மனிதர்களாகவும் மற்றவர்களை கால்நடைகளாகவும் அன்று முதல் இன்று வரை வாழ்ந்து இந்தியாவின் ஒட்டு மொத்த வளங்களையும் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் கொள்ளையடித்தது போதாது என்று அந்நிய முதலீடு என்ற பெயரில் பன்னாட்டுக் கொள்ளைக்கூட்டங்களையும் சிகப்புக்கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

மற்ற சமுதாயத்தில் உள்ளவர்கள் இடஒதுக்கீடு மூலமாகவும் உதவி செய்பவர்கள் மூலமாகவும் படியேறி வந்து விடுகிறார்கள்.

முஸ்லிம் சமுதாயம் மட்டும்தான் தள்ளாடிக் கொண்டு இருக்கிறதுது.

முஸ்லிம் சமுதாயத்தின் ஆணுக்கும், பெண்ணுக்கும் கல்வி என்பது
அவசியம்.

இந்தக் கல்வி மார்க்கக் கல்வியோடு சேர்ந்த உலக கல்வியாக இருக்க வேண்டும்.

நல்லதொரு அவசியமான தொடர்: சகோதரரே! வாழ்த்துக்கள்!

Yasir said...

மனிதவளத்தை பயன்படுத்த தெரியாத நம்நாடு..ஒரு வர்க்கம் மட்டும் சமுதாயத்தில் எல்லா பயன்களையும் அனுபவித்து கொண்டு மற்ற மனிதர்களின் உரிமைகளை பறித்துக்கொண்டு அடிமையாக ஆட்டிவைத்த அலங்கள்...அழகாகவும் ஆழமாகவும் சொல்லி இருக்கின்றீர்கள் மாமா..தொடருங்கள் உங்கள் உரசல்களை அதனால் உண்டாகும் விழிப்புணர்வு என்ற தீப்பொறி பரவி...சமுதாயம் விழித்தெழட்டும்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இது முஸ்லிம்களின் மேம்பாட்டிற்காக மட்டும் பதியப்பட்ட பதிவாக தெரியவில்லை. இதன் உள்நோக்கம் எங்கெல்லாம் இனவெறி, சாதிவெறி தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் அதன் கொட்டத்தை அடக்க ஒரே குடையின் கீழ் அல்லலுறும் மக்களை அரவணைப்போடு ஒன்று கூட்டி அதர்மத்திற்கு எதிராக போராட தட்டி எழுப்பும் பதிவாக தெரிகிறது.

இங்கு மனிதநேயமே பேசிகிறது மதநேயமல்ல........

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நண்பர் எம். எஸ். எம். என்.

//இங்கு மனிதநேயமே பேசிகிறது மதநேயமல்ல.......// நோக்கம் உண்மையில் மனித நேயமே.

மருமகன் யாசிர்

//விழிப்புணர்வு என்ற தீப்பொறி பரவி...சமுதாயம் விழித்தெழட்டும்// இறைஞ்சுவோமாக.

அன்பர் எஸ். அலாவுதீன்

//முஸ்லிம் சமுதாயம் மட்டும்தான் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது// தள்ளாட தேவை இல்லாமல் தள்ளாடுகிறது. தள்ளவேண்டியதை தள்ளிவிட்டால் தள்ளாடாது. தள்ள வேண்டியதில் சமுதாயத்துகுள் நிலவும் பகைமை தலையாயது. நாம் தலை நிமிர தேவையானது.

வஸ்ஸலாம்.
இபுராஹீம் அன்சாரி

Unknown said...

மதிப்பு மிக்க பதிப்பு !!!!!!
இது பாதிக்கப்பட்ட எல்லோருக்குமானது !!!!!

ZAKIR HUSSAIN said...

பொதுவாக இட ஒதுக்கீடு கேட்க காரணமே முன்பு இருந்த சமுதாயம் தூங்கியதின் "பக்க விளைவு" தான்.

இப்போது இருக்கும் சமுதாயம் விழித்துக்கொண்டால் வருங்கால சமுதாயம் சிறப்பாக வாழும்.

sabeer.abushahruk said...

//தரமற்ற மனிதவளம்// "தரமற்ற மனித வளம் என்பதைவிட தரம் வெளிப்படுவது தடை செய்யப்பட்ட மனித வளம் என்றே நினைக்கிறேன்."

very well said, Kaakkaa.

அதிரை முஜீப் said...

சிறந்த பதிவு...! சகோதரருக்கு வாழ்த்துக்கள். இந்த பதிவை நன்றியுடன் என் இணையத்திலும் பதிவு செய்துள்ளேன். இதன் அடுத்த தொடரை விரைவில் வெளியிட வேண்டுகின்றேன். சமுதாய நலனை முன்னிறுத்தி வெளிவரும் இது போன்ற பதிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும்படி அதிரை நிருபர் இனையதினை வேண்டுகின்றேன்.

Anonymous said...

அன்புத்தோழர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

தலைப்பிட்ட பதிவின் முதல் பகுதியை படித்துவிட்டு பாராட்டிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். ஜசக்கல்லாஹ் ஹைர்.

அன்பின் தம்பிகள் அபூ இப்ராஹீம், ஷேக்கனா நிஜாம, CROWN, MHJ, LMS அபுபக்கர், அர அல, அப்துல் ராஜிக், ஜாகிர், அப்துல் மாலிக், HARMYS, கலைக்களஞ்சியம் நூர்முகமது ஆகிய அனைவரின் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.

கவிஞர் சபீர், சா.ஹமீது, யாசிர், M.S.M.N, S. அலாவுதீன், மற்றும் நெறியாளர் தரும் ஒத்துழைப்புக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

தொலைபேசி மூலம் அழைத்து கருத்துரைத்த அதிரை, முத்துப்பேட்டை, குமரி நண்பர்கள் தரும் ஊக்கமும் இன்னும் அடுத்த பகுதிகளை சிறப்புடன் எழுத இறைவனின் துணையோடு ஆக்கம் தருமாக.

கவியன்பனின் பின்னூட்டம் இல்லாமல் சற்று உப்பு குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது.

அடுத்த பகுதியும் இதேபோல் தொடரின் அடுத்த பரிமாணத்தை அலசும் விதமாக அமையும் என்று நம்புகிறேன்.

இன்ஷா அல்லாஹ். சந்திக்கலாம்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி

Anonymous said...

அன்புள்ள சகோதரர் அதிரை முஜீப் அவர்களுக்கு,

முகமன் கூறியவனாக,

ஜசக்கல்லாஹ்.

அயல் நாடுகளில் இருந்து பணியாற்றிகொண்டே எழுதும் நான் உட்பட்ட, மற்றும் ஜாகிர், கவிஞர் சபீர், கவியன்பன் கலாம், ஜெமீல் காக்கா, அபூ இபுராகிம், MSM நெய்னா, ராஜிக், அப்துல் ரகுமான் இன்னும் பலர் தங்களின் அளவிடமுடியாத பணிகளுக்கிடையே சமுதாயத்துக்காக நேரங்களை ஒதுக்கி , ஒய்வு நேரங்களை தியாகம் செய்து தகவல்களை திரட்டி, படித்து, சிந்தித்து எழுதுகிறோம். இதன் நோக்கம் அந்த எழுத்துக்களும் எண்ணங்களும் எல்லோரையும் சென்று சேரவேண்டுமென்றுதான்.

ஒருவர் எழுதி பத்துபேர் மட்டும் படித்து பாராட்டிவிட்டால் மட்டும் இதன் நோக்கம் நிறைவேறிவிடாது. அந்த வகையில் பதிவுகள் பலரின் எண்ணங்களில் இடம் பிடிக்கும் வகையில் அவைகளை பலருக்கும் பரப்பவும் வேண்டும் என நினைக்கிறேன். அல்லாஹ் அவைகளை நிறைவேற்றித் தந்திட போதுமானவன்.

இபுராஹீம் அன்சாரி

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன ஒதுக்கீடும் இட ஒதுக்கீடும் - உரசும் உண்மைகள் ! - அண்ணன் இப்ராஹிம் பாய் எழுத்துக்கை தொடர்ந்து படித்துவருகிரேன். முகபுத்தகத்தில் அவரகள் தொடர்ந்து எழுதிவந்தநாட்களில் இருந்து அவருடைய எழுத்துககள் நம் சமுதாய நலனுக்காகவும் இன்னும் தமிழ்நாட்டு அரசியலில் நடந்துவரும் அவலங்களையும் தைரியமாக எடுத்துக்கூறும் விதம் ரொம்பவும் அருமை.

உங்களுக்காக..
பூந்தை ஹாஜா..

Indian said...

அஸ்ஸலாமு அழைக்கும் காக்கா,
சிந்தனை கட்டுரை..

"ஆளும் பிரதிநிதிகளாகவும், ஆளுனர்களாகவும் அங்கவஸ்திரம் தரித்த துபாஷ்களாகவும், திவான்களாகவும் அவர்களுக்குள் அமர்த்திக்கொண்டார்கள். பல்லக்கில் அமரும் பவிசு தங்களுக்கே என்று பறித்துக்கொண்டார்கள்"

அதை இன்று வரை அவர்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியலா??
நாட்டில் இரண்டு சதவிகிதம் உள்ளவர்கள் அதுவும் எந்த ஒதிக்கீடும் இல்லாதவர்கள் அதிகார மையங்களாக எப்படி தொடர முடியுது? அப்போ இடஒதிக்கீடு தேவையா?

இன்று அரபு நாடுகளிலும் பல இடங்களில் அதிகார மையங்களாக எப்படி தொடர முடியுது?
( ஹராமான காரியங்கள் ஒரு காரணமா இருக்கு)
மற்றவை அவர்களின் சமூக ஒற்றுமை...பிற சமூகத்தை சக மனிதனாக ஏற்று கொள்ளத்தது..இவை மற்ற சமூகத்திடம் இல்லாதது..


BABU SATHIK

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு