Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தேர்தல் கருத்துக் கணிப்புகள்- ஒரு பார்வை.. 9

அதிரைநிருபர் பதிப்பகம் | May 14, 2014 | , ,

“பறவைகள் பலவிதம் ! ஒவ்வொன்றும் ஒரு விதம் “  என்று ஒரு பழைய பாடல் நமது காதுகளில் ஒலித்த காலங்கள் உண்டு. இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் கருத்துக் கணிப்புகளின் வகை வகையான - தினுசு தினுசான-  மாறுபட்ட கருத்துக்களைக் காணும்போது அந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

கடந்த 12/ 05/ 2014  ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்பு இதுவரை கருத்துக் கணிப்புகளுக்குத தடை விதித்திருந்த தேர்தல் ஆணையம்,  தனது தடையை விலக்கிக் கொண்டது.  இதை முன்னிட்டு Flood Gate  opened  என்று சொல்லப்படுவதுபோல்,  இந்தியாவின் ஒவ்வொரு ஊடகங்களும் ‘காய்ந்த மாடு கம்பில் விழுவது போல்’  கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டன.

ஒவ்வொரு ஊடகங்களும் அவைகளைப்  பற்றி தங்களது வாதப் பிரதிவாதங்களை வெளியிட்டன; ஒளிபரப்பின ; இன்னும் பரப்பிக் கொண்டு இருக்கின்றன. பொதுவாக சொல்லப்போனால் தேர்தலின் உண்மை முடிவுகள் வருவதற்கு இன்னும் அதிக நாட்கள் இல்லை என்கிற நிலையிலும் மக்களின் உண்மையான தீர்ப்பு என்ன என்று தெரியவரப் போகிறது என்கிற நிலைமையிலும் இந்த ஊடகங்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் போடும் வாய்ச்சண்டைகள் நமது காதுகளைக் கிழிக்கின்றன.

உதாரணமாக  கீழே காணப்படும் பல்வேறு வகையான கருத்துக் கணிப்புகளின் பட்டியல் நமக்கு ஒரு விஷயத்தை ஒட்டு மொத்தமாக உணர்த்துகிறது. அனைத்து கணிப்புகளும் பாரதீய ஜனதா ஆட்சியமைக்கும் என்கிற அடையாளத்தைச் சொல்கின்றன. அல்லது சொல்லத் துடிக்கின்றன.

Survey
NDA
UPA
AAP
OTHERS
TIMES NOW- ORG INDIA
249
148
O
146
AB NEWS
281
97
4
161
CNN
270- 282
92- 102
0
120
CHANAKYA
340
70
0
133
INDIA TV- CVOTER
289
101
5
148
INDIA TO-DAY CICERO
261- 283
110- 120
0
150- 162

ஆக மொத்தத்தில் ஒரே பார்வையாகப் பார்க்கும் போது இந்தக் கருத்துக் கணிப்புகள் மோடிக்கு முடி சூட்டிப் பார்க்க ஆசைப்படுவதாகத் தெரிகிறது என்பது உண்மைதான்.

ஆனால் கடந்த காலத்தில் இப்படி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் வரலாற்றைப் பார்க்கும் போது மிக அதிகமாக இத்தகைய கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து  பொய்த்துப் போனதைத்தான் நமக்குச் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. இதே போல்தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் இந்தியா ஒளிர்கிறது என்கிற கோஷத்தை முன்வைத்து பிஜேபி பெரும் ஊடகப் பிரச்சாரங்களை செய்தது. நாடெங்கும் இரத யாத்திரைகள் நடத்தப்பட்டன. அத்வானிதான் அடுத்த பிரதமர் என்று நாடே நம்பத்தொடங்கியது. ஆனால் நடந்ததோ அத்வானிக்கு பட்டை நாமம். காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதவுடன் மீண்டும் அரியணை ஏறியது.

கடந்த 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கும் என அனைத்து கருத்துக் கணிப்பு தகவல்களும் தெரிவித்தன. ஆனால் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

அதேபோல் 2009ஆம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என கருத்துக் கணிப்பு தகவல்களில் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அந்த தேர்தலில், முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை விட 2 மடங்கு அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதுபோல்தான் இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறாது என கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக இத்தகைய கருத்துக் கணிப்புகள் அறிவியல் ரீதியாக நடத்தப்படுகிறதா என்பது மிகப்பெரும் சந்தேகத்துக்குரியது. இப்படிப்பட்ட கருத்துக் கணிப்புகளுக்கென்று சில அறிவியல் ரீதியான முறைகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் அத்தகைய முறைகளை இந்த ஊடகங்கள் பயன்படுத்தி இத்தகைய முடிவுகளைத் தருகின்றனவா என்பது கேள்விக்குரியது. இந்தக் கேள்வியை நாம் எழுப்பக் காரணம்  கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே ஊடகங்கள் இதுபற்றிய கருத்துத் திணிப்புகளை சிறுக சிறுக செலுத்தத் தொடங்கிவிட்டன. இதற்கு முக்கியக் காரணம் ஊடகங்கள் பலவும் கார்ப்பரேட் கம்பெனிகள் பலவற்றின் பங்குத்தொகைகளால் நடத்தபபடுகின்றன. தங்களின் எண்ணங்களை மக்கள் மீது திணித்து இலாபத்தை அறுவடை செய்ய நினைப்பது கார்பரேட் கம்பெனிகளின் வர்த்தக இயல்பு ; நடைமுறை.

இரண்டாவதாக, இத்தகைய கணிப்புகள் இந்திய சூழலை அடிப்படையாக வைத்து நடத்தப்படுகின்றனவா என்பதும் கேள்விக்குறி. அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் வடிவமைத்துக் கொடுக்கிற மாதிரிகளில் ( Samples) இவர்கள் நடத்தும்  கருத்துக் கணிப்புகள்
  • இந்தியாவின் பரவலான படிப்பறிவற்ற , கிராமங்களில் வசிக்கும் , யார் எதை சொன்னாலும் நம்பும் மனப்பான்மையுடைய,
  • கடவுளின் பெயரால் சத்தியம் செய்துகொடுத்தால் அறிவு சொன்னால் கூட கேட்கக் கூடாது என்று எண்ணும் மக்களைக் கொண்ட,
  • நடு இரவில் பணம் கொடுத்தால்   மனம் மாறி வாக்களிக்கிற மக்களைக் கொண்ட ,
  • அண்ணன் சொன்னால் கேட்கவேண்டும் – அடுத்தவீட்டுக்காரன் சொன்னால் கேட்க வேண்டும் என்று சுய புத்தி இல்லாமல் வாழும் மக்கள் உடைய நாட்டில் ,

அவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்து இந்தக் கருத்துக் கணிப்புகள் நடத்தபப்ட்டு இருக்குமா என்பதும சந்தேகத்துக்குரியது.

மூன்றாவதாக, கடந்த இரு தேர்தல்களிலும் கருத்துக் கணிப்பை ஊரெங்கும் தம்பட்டம் அடித்து வெளியிட்ட ஊடகங்கள், அத்தைகைய தங்களின் கணிப்புகள் பொய்த்துப் போனதும், தங்களின் கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போனதற்கான காரணங்களை  வெளியிட்டுத் தங்களின் பத்தினித் தன்மையை கடந்தகாலங்களில் எப்போதாவது நிருபித்தனவா? இன்று வெளியிடப்பட்டு இருக்கும் இவ்வளவு கருத்துக் கணிப்புகளும் ஒருவேளை, மக்களால் தூள்தூளாக நொறுக்கப்பட்டால் தவறான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டதற்காக இந்த ஊடகங்கள் மக்கள் முன்பு மன்னிப்புக் கோரும் குறைந்த பட்ட நாகரிகம் படைத்தவையாக இருக்குமா?

கருத்துக் கணிப்பு மூலம் ஒரு விஷயத்தை மக்கலின் மனதில் புராஜக்ட் பண்ண முடியுமென்று அண்மைக்கால ஊடக நடப்புகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு உற்பத்தி செய்யப்பட்ட பொருளை விற்பனை செய்வதற்காக விளம்பரக் கம்பெனிகள் எவ்வாறான யுக்திகளை எல்லாம் கையாளுமோ அத்தகைய முயற்சிகள் அனைத்தும் பல கோடிக்கணக்கான ரூபாய் செலவில் – ஆர் எஸ் எஸ்  ஆதரவில் – கார்பரேட் கம்பெனிகளின் நிதி ஆதாரங்களுடன் நடத்தப்பட்டு மோடியை முன்னிறுத்தவும் மக்களின் மனதில் இடம்பெற வைக்கவும்  மேற்கொள்ளப்பட்டன. கோல்கேட் பற்பசையின் ஜெர்ம் அழிப்பைவிட    பெப்சொடேன்ட் பற்பசையின் ஜெர்ம் அழிக்கும் சக்தி அதிகம் என்று நிறுவ முயற்சிக்கும் விளம்பர யுக்திக்கும் மோடி முன்னிலைப் படுத்த பட்டதற்கான முயற்சிக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. ஆகவே கருத்துக் கணிப்புகள் விளம்பர யுக்திகளின் ஒரு வகையே என்பதாய் நாம் குறிப்பிட விரும்புகிறோம்.

ஆனால் அதையும் தாண்டி கடந்த பத்து ஆண்டுகளால காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விட்டதால் , ஆட்சியில் இருந்த கட்சியின் மீது மக்களுக்கு இயல்பாகவே ஒருவித வெறுப்பு வருவது இயல்பு என்கிற உணமையையும் நாம் மறுக்க இயலாது. இதனால் மட்டுமல்லாமல்  இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்தகட்சி தோல்வியைத் தழுவி மாற்று அரசு ஏற்பட்டு இருக்கிறது என்கிற கடந்தகால  நிகழ்வுகளையும் நாம் ஒதுக்கிட இயலாது. மாற்றங்கள்  வேண்டும் மாற்றித்தான் பார்ப்போமே என்று மக்கள் மனம் மாறுவதும் தவிர்க்க இயலாத தன்மை என்பது மட்டுமல்ல- ஜனநாயகத்தின் முக்கிய அம்சமும் அதுவேதான். ஆகவே மாற்றம் ஏற்பாடவே ஏற்படாது என்று தள்ளவும் இயலாது.

தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக 26 இடங்களைக் கைப்பற்றும் என்று சி- ஓட்டர் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு காட்டுகிறது. திமுகவுக்கு 6 இடங்களே கிடைக்குமென்று அது மேலும் தெரிவிக்கிறது. பரிதாபத்துக்குரிய கூட்டணி என்று பொதுவாகப் பார்க்கப்பட்ட பாரதீய ஜனதா கூட்டணி  5 இடங்களில் வெற்றி பெற்று அவற்றில் பாஜக 2 தேமுதிக 1 பாமக 1 மதிமுக 1 ஆகியவை வெற்றி பெறும் என்றும மூக்கில் விரலை வைக்கும்படி காங்கிரஸ் கட்சியும் ஒரு இடத்தில் வெற்றி பெறுமென்று இந்தக் கணிப்பு கூறுகிறது.

சி என் என்- ஐ பி என் டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 22 – 28இடங்களும் திமுகவுக்கு  7-11 இடங்களும் பிஜேபிக்கு  4- 6  இடங்களும் கிடைக்குமென்று கூறுகிறது.

ஹெட்லைன்ஸ் டுடே டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 20 – 24 இடங்களும் திமுகவுக்கு  10 -14 இடங்களும் பிஜேபிக்கு  5 இடங்களும் காங்கிரசுக்கு  1 இடமும் கிடைக்குமென்று கூறுகிறது.

டைம்ஸ்- நவ் டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 31 இடங்களும் திமுகவுக்கு 7 இடங்களும்  காங்கிரசுக்கு 1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது இந்திய அளவில் மோடியும் தமிழக அளவில் மோடியின் சகோதரியும் பெரும் வெற்றி பெறுவார்கள் என்பதுதான் இந்த கருத்துக் கணிப்புகளின் பரவலான பொதுவான அம்சம்.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை),  நாட்டில் என்ன நடந்திருக்கிறது என்று தெரிந்துவிடும். அதற்கு முன் இரண்டு மூன்று நாட்களாக இந்தக் கருத்துக் கணிப்புகளால் என்ன நன்மை என்றால் கனவுகள் ! கனவுகள்!  கனவுகள்! தான்.

ஒருவேளை இந்த கணிப்புகள் உண்மையாக மாறும் விதத்தில் மக்களின் தீர்ப்பு இருக்குமானால் இந்திய அளவில் முஸ்லிம் உட்பட்ட சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட மக்களிடையே ஒரு வித பதட்டமும் அச்சமும் ஏற்படும் என்பது உண்மை. ஏற்கனவே  சமுதாயத்தில் இந்தப் பிரிவு மக்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இவர்களை இன்னும் ஒடுக்க வேண்டுமென்ற மனநிலை படைத்தவர்கள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில்  இந்தக் கணிப்புகள் ஒருவேளை உண்மையாகி விட்டால் எதிர்கால சந்ததிகளின் வாழ்வும் நாட்டின் அமைதியும் என்ன ஆகுமோ என்று அச்சபடுவோர் அநேகர்.

ஆனால் இந்தியாவின் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்கள் உட்பட்ட அனைவரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரம்புகளால் பாதுகாக்கபப்ட்டவர்களே. அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றும் அளவுக்கு யாருக்கும் துணிவும் வராது; அது இயலவும் செய்யாது என்று நம்புவோம்.

இதற்கு முன் பிஜே பி ஆட்சி செய்தபோது கூட அடிப்படையான சில பழமை வாதங்கள் பேசப்பட்டனவே தவிர, நடைமுறைபடுத்த ஆட்சி செய்தோருக்கு துணிவு வரவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு கலாச்சார மொழிவாரி உணர்வுகளைப் புரிந்து நடத்தப்படும் ஆட்சியால் மட்டுமே நாட்டில் அமைதியான நிலையை ஏற்படுத்த முடியும். அமைதி குலையும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமையுமானால் நாடு , பொருளாதாரச் சீரழிவு உட்பட்ட பல சீரழிவுகளை சந்திக்க நேரிடும். இதை அரசியல் களங்கள் உணர்த்தா விட்டாலும் ஆட்சிக் கட்டில் உணர்த்தவே செய்யும். பொறுப்பற்றுப் பேசிக் கொண்டு பொடுபோக்காகத் திரிந்து கொண்டிருக்கும் ஒருவனிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டால் அவன் திருந்தி வாழ்ந்த வாழ்வின் உண்மைகளும் உள்ளன.

ஆகவே நாம் நினைப்பது நல்லதையே நினைப்போம்; நம்புவோம்.  அதைவிட முக்கியமாக , நாட்டில் நல்லாட்சி ஏற்படவும் அமைதியான சூழ்நிலையில் அனைத்து மக்களும் வாழவும் வகை ஏற்படுத்தும் படி எல்லாம் வல்ல இறைவனிடம் இரு கரம் ஏந்தி துஆச் செய்வோம்.

அதிரைநிருபர் பதிப்பகம்

9 Responses So Far:

Ebrahim Ansari said...

'எக்ஸிட் போல்' என்ற பெயரில், பாஜக தான் ஆட்சிக்கு வரும் என மீடியாக்கள் உரக்க சொன்னாலும், 'ஆர்.எஸ்.எஸ்' அதை நம்பத்தயாரில்லை.

RSS அவர்களே , நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜக ஆட்சிக்கு வரமுடியாது எனத் தெரியவந்துள்ளது.
அதன் விபரம். :

தமிழகத்தில் 1
மேற்குவங்கத்தில் 1
கர்நாடகத்தில் 10
பீகாரில் 14
ராஜஸ்தானில் 20
குஜராத்தில் 21
ம.பி.யில் 22
உ.பி.யில் 45
டெல்லியில் 5
அஸ்ஸாமில் 5
சட்டீஸ்கட்'டில் 8
ஹரியானாவில் 7
ஜார்கண்டில் 8
கோவாவில் 1
வடக்கிழக்கு மாநிலங்களில் 3

எனத்,தெளிவாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டணி கட்சிகளை சேர்த்தாலும், மிக அதிகபட்சமாக 218 இடங்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பே இல்லை எனக் கூறுகிறது ஆர்.எஸ்.எஸ். வட்டாரம்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

தகவல் : மறுப்பு பக்கம்

இதுதான் நடக்குமென்று தோன்றுகிறது. பார்க்கலாம்.

sheikdawoodmohamedfarook said...

கருத்துக்கணிப்பு/ மீடியாக்காரர்களும் குருவி ஜோசியக்காரன் தலையில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்களே!

adiraimansoor said...

அட்ரா சக்கை

முல்லுக்காக அலையும் நாய்கள் முல்லுப்போடுபவர்களைக் கண்டால் வாலை ஆட்டிக் கொண்டிருக்கும்

அந்த இனத்தைச் சார்ந்தவர்கள்தான் இந்த ஊடக வியாபாரிகள்
சும்மா சல்யூட் அடித்துவைப்பமே என்ன குறைந்துவிடப் போகின்றது என்ற என்னத்தில் செய்யப்படும் இப்படி பட்ட கருத்து கணிப்புகள்
சரியாகிவிட்டால் அதைக்கொண்டு வரப்போகும் அரசிடம் எதையும் நாம் பிறகு சாதித்துக்கொள்ளாலாம் என்ற என்னம் ஒரு பக்கம்

இன்னொரு பக்கம் பசை எங்கு ஜாஸ்தி இருக்கோ அவங்களை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதினால்தானே காசுபார்க்கமுடியும் என்ற என்னமும்தான் ஊடகத்துறை விபச்சாரத்துறையாக மாற காரணம்

இவர்கள் சொல்லும் கருத்து கனிப்புகள் தொடர்ந்து பொய்பித்துவந்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள் என்பது மூன்றாவது காரணம்

ஊடகத்துறை விபச்சாரத்துறையாக மாறி பல மாமங்கம் முடிந்த பின்னும் இந்த ஊடகத்துறையை நம்புவது முட்டால் தனம்
நாம் என்ன எழுதினாலும் கேட்பதற்கு நாதி இல்லை என்பதாலும் தர்மம் செத்துப்போயி அதர்மத்திற்கு பச்சை கொடி காட்டும் நம் மக்கள் மாக்கலாக இருக்கும்போது
பத்திருக்கை துறை இப்படித்தான் இருக்கும்

இப்னு அப்துல் ரஜாக் said...

கருத்து கணிப்பு எனும் பெயரில் சம்பாதிக்கிறானும்க அப்பு.வெட்க கேடு.

Ebrahim Ansari said...

இப்படி பிஜேபிக்கு ஆதரவான கருத்துக் கணிப்பு வெளியிடபப்ட்டதும் பங்கு மார்கெட்டில் வர்த்தகம் பிச்சிக்கிட்டுப் போனதாம். ஒருவேளை இதுவே மக்களை உசுப்பிவிட நோக்கம் கொண்டதாக இருக்கலாம்.

நாளை வெள்ளிக் கிழமை நாம் தொழப் போகும் ஜும் ஆ ஒரு வகையில் இறைவனிடம் பாதுகாப்புத்தேடும் தொழுகையாகவும் மறு வகையில் இறைவனுக்கு இன்னும் நன்றி செலுத்தும் தொழுகையாகவும் இருக்கும்.

Ebrahim Ansari said...

முகநூலில் தம்பி ஜமாலுதீன் அவர்களின் பதிவு. நன்றியுடன்

https://www.facebook.com/photo.php?fbid=627593520668600&set=a.362937603800861.87533.100002538728850&type=1&relevant_count=1

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

இந்தக் கருத்து கணிப்பின் வழி ஊடகங்கள் நமக்கு[இஸ்லாமியர்களுக்கு] மறைமுகமாக ஒரு செய்தியே கூறுகிறது.
அது ''உங்கள் குரலை உலக காதுகளுக்கும் கவனத்திற்கும் எடுத்துச்செல்ல உங்களிடம் வலுவான ஊடகம் இல்லையே!'' என்பதே!.
இனியும் நாலு சுவர்களுக்குள் நாம் 'காலில் சலங்கை
கொஞ்ச காலோடு கால் பின்ன ஆடிக்கொண்டிருந்தால்
ஆட்டம் அம்பலம் ஏறாது!
ஆட்டம் அம்பலத்துக்கு வரவேண்டுமானால்-நமது குரல் உலக செவிகளுக்குள் ஊடுருவ வேண்டுமானால் நமக்கென சக்திமிக்க பல ஊடகங்களை உருவாக்க வேண்டும்.'' செய்வீர்களா?!''

sabeer.abushahruk said...

கருத்துக் கணிப்பு என்கிற பெயரில் கருத்துத் திணிப்பு!

ஊடகங்களில் கருத்துக் கணிப்பை விவாதிக்க வந்து அமரும் பெரும்புள்ளிகளின் விவாதம் குழாயடிச் சண்டையைவிட படு கேவலமாக இருக்கிறது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு