Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (1) 10

அதிரைநிருபர் பதிப்பகம் | January 10, 2015 | , , , , , ,


மாட்டுக்கறி என்ற பெயர் கேட்டதும் சும்மா அதிருதா? அதிர வேண்டாம் ; பதற வேண்டாம்; இந்த ஆக்கத்துக்கு அதிரை வேண்டாம். போபாலில் ஆரம்பித்து, அகில இந்தியாவில் மாட்டுக்கறி என்கிற பிரச்சனையைத்தான் அலசப் போகிறோம்.  இந்த அலசல்  அதிரை என்கிற குண்டு சட்டியில் குதிரை ஓட்ட அல்ல. பன்னெடுங்காலமாகவே மாட்டை அறுப்பதும், மாட்டுக்கறி வியாபாரம் செய்வதும் சாப்பிடுவதும் மாபாதகம் என்றும்,ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே இவை தொடர்பான தொழில்களில், நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதும்,அவர்களை தீண்டத்தகாதவர்களாகவும், ஜீவகாருண்யம் அற்றவர்களாகவும், இரக்கமற்ற பாவிகளாகவும் சித்தரித்து தீட்டப்பட்டுள்ள கபட சித்திரங்கள் யாவற்றையும் அழிக்கும்  நோக்கில்தான். நாம் முதலில் போபாலுக்குப் போகப்போகிறோம். பிறகு புதுடில்லிக்கும் போவோம்.

பி ஜெ பி அரசாளும் மத்தியப் பிரதேச அரசு பசுவதை தடுப்புக்காகச் சட்டத்தைத் திருத்த முடிவு செய்திருக்கிறது. இம்முடிவின் மீது  நடுநிலை மற்றும் நன்னெறி பரப்பும் அறிஞர்களால் எதிர்ப்புக்கனை தொடுக்கப்பட்டுள்ளது. இது தனி நபர சுதந்திரத்தில் அரசின் அப்பட்டமான தலையீடு என்றும், ஏழைகளுக்கு எதிரான ஏற்றுக் கொள்ளப்பட முடியாத கொடுமை என்றும் சித்தரிக்கப்படுகிறது. இந்நிலையில்  'பசுவின் புனிதத்தன்மை' பற்றிய புராண இதிகாச சாஸ்திர சம்பிரதாய மற்றும் வரலாற்று குறிப்புகள்  பற்றியும் அந்த குரிப்புகளை வைத்து சானா பானாக்கள் நாட்டைத் துண்டாட எப்படி பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றியும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேலும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தோர் மேலும்   உயர்சாதியினர் இந்த பசுவதை, மாட்டுக்கறி ஆகிய அஸ்திரங்களை எப்படி உபயோகிக்கின்றனர் என்பதைப் பற்றியும் சற்று ஆதாரங்களோடு அலசலாம்.           (இவர்களின் ஊளா  பாலாக்களை அலசி அலசியே நமக்கு  தண்ணீர் பில் எகிறிவிட்டது).

முதல் ஓவரை வீசும்  முன்பு,  ஒரு சிறு கவனக் குறிப்புத் தந்து விட எண்ணுகிறேன். இந்த ஆக்கத்தில் சில இராமாயண,  மஹாபாரத காட்சிகளை, ஆதாரங்களை குறிப்பிட்டு இருப்பேன்.இந்த ஆதாரங்கள் கம்ப இராமயணத்தில் இல்லையே, இராஜாஜி எழுதிய வியாசர் விருந்திலும், பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்திலும் இல்லையே என்று தமிழ் புலமை படைத்த / படித்த யாரும் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடாதீர்கள்.  இந்த இதிகாசங்களில் இருந்து என்னால் காட்டப்படும் ஆதாரங்கள் ஒரிஜினல் இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. கம்பர் எழுதியதும், இராஜாஜி, பாரதியார் எழுதியதும் தழுவல்கள் மட்டுமல்ல அவைகள் வழுவல்கள்; வளவலாக்கள்.; கொழகொழாக்கள்; பசப்பல்கள்; ரீல்கள்; புருடாக்கள்; காதில் சுற்றும் பூக்கள். தமிழ்ப் பண்பாடு கருதி மறைக்கப்பட்ட உண்மைகள். உதாரணமாக இராவணன் சீதையை எங்கே கை வைத்து தொட்டு தூக்கிச்சென்றான் என்பதை வால்மீகி ராமாயணம்  குறிப்பிடும் விதமும் இடமும் வேறு; அந்த இடம் வித்தியாசமானதல்ல ஆனால்  விபரீதமானது. இருந்தாலும், ஒரு பெரும் எடையுள்ள பெண்ணை  கடல் கடந்து ஆகாயத்தில்  தூக்கிச்செல்ல வசதியானது. இந்த சம்பவத்தை கம்பராமாயணம் குறிப்பிடும் விதம்  தமிழ்பண்பாட்டை ஒட்டியது. தொடாமல் தூக்கினானாம்; ஆகாயத்தில்  பறந்தானாம். நம்பமுடியுமா? ஆகவே இந்த ஆக்கத்தில் ஒரிஜினல் இதிகாசங்கள் குறிப்பிடும் ஆதாரங்களையே கையாண்டு இருக்கிறேன்.     

முதலாவதாக, இந்திய துணைக் கண்டத்தில் மாடுகளை உணவுக்காக அறுக்கும் வழக்கத்தை முஸ்லிம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள் என்று சானா பானாவினர் கூறுகிறார்கள். ஆனால் வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வரத்தொடங்கும் முன் காலத்திலிருந்தே மாடுகளை உணவுக்காகவும் வேண்டுதல்களுக்காகவும், யாகங்களுக்காகவும் அறுத்து பலியிட்டு புசிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கு இதிகாச,  பிராமண, சமண, புத்த இலக்கியம் மற்றும் வரலாறுகளில் இருந்து சான்றுகள் இருக்கின்றன. 

விலங்குகளைப் பலியிடுதல் என்பது வேத காலத்தில் சாதாரணமான ஒன்றாக இருந்திருக்கிறது. பொதுப் பலியிடுதலுக்கு முன் செய்யப்படும் முன்னேற்பாட்டுச் சடங்காகிய 'அக்கினித் தேயம்' என்னும் சடங்கில் பசுதான் கொல்லப்பட்டது. 

பலியிடுதலில் முதன்மையான ஒன்றாகிய 'அசுவமேத யாகத்'தில் அறுநூறு விலங்குகளும் பறவைகளும் கொல்லப்படும் அப்படிக் கொல்லப்பட்ட பின் பலியிடுதலின் நிறைவைக் குறிப்பிடும் வகையில் இருபத்தோரு பசுக்கள் கொல்லப்படும். இந்த இருபத்தியொரு பசுக்கள் கொல்லப்படாவிட்டால் அந்த யாகம் பொய்த்துவிட்டதாக அர்த்தம். அத்துடன் இராஜசூய யாகம், வாஜ்பேய யாகம் ஆகியவற்றிலும் விலங்குகள் பலியிடப்படும். இதேபோல் மற்றொரு முதன்மையான யாகமாக கருதப்படும் கொசவ யாகத்தில் பசுக்கள் மற்றும் கன்றுகள்  பயமுறுத்தும் தேவதைகளுக்காக பலியிடப்பட்டன. ஆகவே எல்லாவகையான யாகங்களிலும் பசுக்கள் கொல்லப்பட்டன. அவை புசிக்கப்பட்டன.   

'வேதக் கருத்துகளிலும் தர்மசாத்திரங்களிலும் உணவுக்காக பசுக்கள் கொல்லப்பட்டதும் மாட்டிறைச்சி தின்னப்பட்டதும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. 'பசு விருப்பமான உணவு' என வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யக்ஞ வல்கீய முனிவர் கூற்றின்படி , பசு இறைச்சியைத் தின்பதை வலியுறுத்துவது வேதங்களில் உள்ளது. விருந்தினர்களை வரவேற்கும் போது பசுக்களைக் கொன்று உணவாகப் படைப்பது பெருமைக்குரிய ஒன்று என வேதங்களும் அவற்றிற்குப் பிந்தைய கருத்துகளும் சொல்கின்றன. இறுதிச் சடங்குகளின் போது பிராமணர்கள் பசுக்களைக் கொன்று தின்றதற்கான பல்வேறு எழுத்துச் சான்றுகள் இருக்கின்றன. 

பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போ என்று தகப்பன் தசரதன் ஆணையிட்டான்  என்று இராமனுக்கு சொல்லப்பட்டபோது இராமனுடைய உடனடி பதிலாக இருந்ததாக வால்மீகி இராமாயணம் குறிப்பிடுவது “ நான் நாட்டையும், மணிமுடியையும் , அரண்மனை வாசத்தையும் இழப்பதுடன் சுவைதரும் மாமிச உணவுகளையும் துறந்து காட்டுக்குப் போய் பதினான்கு வருடங்கள் காய்களையும் பழங்களையும் புசிக்க வேண்டுமா?” என்பதுதான்.               
(AYODHYA KANDAM  CHAPTERS 20, 26, 94).

அது மட்டுமா? வால்மீகி கூறுவதையும், நாம்  எடுத்துக்காட்டுவதையும் ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் நிச்சயம் இருப்பார்கள். ஆனால்  ஒருவர் இருக்கிறார் அவர் கூறுவதை நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அவர்தான் வீரத்துறவி என்று பெயர் பெற்ற சுவாமி விவேகானந்தர். இதோ அவரே கூறுகிறார். 

"You will be astonished if I tell you that, according to the old ceremonials, he is not a good Hindu who does not eat beef. On certain occasions he must sacrifice a bull and eat it."  “ வேதக் கருத்துக்களின் அடிப்படையில் மாட்டுக்கறியை உணவாகக் கொள்ளாத ஒருவர் நல்ல ஹிந்துவாக இருக்க முடியாது என்று நான் கூறினால் நீங்கள் திகைப்படைவீர்கள். சில சமய சடங்குகளில் ஒரு ஹிந்து ஒரு காளை மாட்டை அறுத்து பலியிடுவதோடு உட்கொள்ளவும் வேண்டும் ” என்று விவேகானந்தர் கூறுகிறார். 

"There was a time in this very India when, without eating beef, no Brahmin could remain a Brahmin;"  இந்திய பழக்கங்களில் மாட்டுக்கறி உண்ணாத பிராமணர் ஒரு சிறந்த பிராமணராகவே இருக்க முடியாது.   இதையும் கூறியவர் கறிக்கடை காதர் பாட்சா அல்ல. சாட்சாத் விவேகாகனந்தரே.
[The complete works of Swami Vivekananda, Volume 3, Pg 536]

மேலும் கீழ்க்கண்ட விளக்க நூல் எப்படி மாட்டை அறுப்பது என்று பிராமணர்களுக்கு வழிகாட்டுகிறது. 
[Aitareya Brahman, Book 2, para 6 and 7]

அடுத்து,  Purv Mimansa Sutra Adhyaya 3, Pada 6, Sutra 18, the Shabarbhasya says,
संति च पशुधर्माः- उपाकरणं, उपानयं, अक्ष्णया बंधः, यूपे नियोजनम्, संज्ञपनं, विशसनमित्येवमादयः 

There are also certain details to be performed in connection with the animals, such as (a) Upaakaranam [Touching the animal with the two mantras], (b) Upaanayanam [Bringing forward], (c) Akshanyaa-bandhah [Tying with a rope], (d) Yoope niyojanam [Fettering to the Sacrificial Post], (e) Sanjnapanam [Suffocating to death], (f) Vishasanam [Dissecting], and so forth.

அதாவது அறுக்கப்படப்போகும் மாட்டை எங்கே தொடுவது, எப்படிக் கொண்டுவருவது, கழுத்திலும் அறுக்கப்படும் கம்பிலும் கயிற்றால் எப்படிக் கட்டுவது, எப்படி அறுப்பது என்கிற வழிமுறைகளை இந்த ஸ்லோகம சொல்லித்தருகிறது.   
[Shabhar bhashya on Mimamsa Sutra 3/6/18; translated by Ganganath Jha]

இந்த ஆதாரங்களை நான் சுருக்கமாக குறிப்பிடுகிறேன்.மிகவும்  விரிவாகப்போனால் இந்த ஆக்கம் வீங்கிவிடும்.பல முகமூடிகள் கிழிந்துவிடும். யாராவது எதிர்த்து விளக்கம்  கேட்டால் விபரம் சொல்வேன்.

வேதகாலத்தை அடுத்து, இடைக்கால வரலாற்றுக் குறிப்புகளிலும் நமது வாதத்துக்கு வலு சேர்க்க  ஏராளமான சான்றுகள்  இருக்கின்றன.  ஆச்சாரம் மிகுந்த பிராமணர்கள் பசியைப் போக்குவதற்காக காளை இறைச்சியையும் நாய் இறைச்சியையும் தின்றதை மனுசாத்திரம்  கூறுகிறது. 

படித்த பார்ப்பனரைப் பெரிய காளையைப் படைத்தோ ஆட்டைப் படையலாக்கியோ வரவேற்க வேண்டும் என்று யக்ஞவல்கீய ஸ்மிருதி (கி.மு. 100-300) சொல்கிறது. மகாபாரதத்தில் வரும் கதா பாத்திரத்தில்  முக்கால்வாசிப் பேர் அசைவ உணவு தின்பவர்கள்தான்.  இரந்திதேவ அரசரின் அடுக்களையில் மட்டும் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் பசுக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உணவாக்கப்பட்டன. மற்ற தானியங்களுடன் இந்த இறைச்சியும் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன. கொழுத்த கன்றை அடித்து உணவாக்கி இராமனுக்குப் பரத்வாஜ முனிவர் படையலாக்கினார் என்று தெரிகிறது.  

மதம் சார்ந்த இலக்கியங்களில் மட்டுமல்ல. மதச்சார்பற்ற இலக்கியங்களிலும் இப்படிச் சான்றுகள் காட்ட முடியும். இந்திய மருத்துவ முறைகளில் மாட்டிறைச்சி மருந்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், ஸ்ரீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன.
(ஆதாரம் : THE MYTH OF THE HOLY COW BY DR. D.N. JHA).

இப்படியெல்லாம் தங்களால் சப்புக்கொட்டி சுவைக்கப்பட்ட மாட்டுக்கறி , அந்த கறி தரும் மாடு எப்படி மதவாதிகளால் புனிதத்தின் அடையாளமாக்கப்பட்டது?

தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

10 Responses So Far:

Ebrahim Ansari said...

அன்பானவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

உடல்நலக் குறைவின் காரணமாக தற்பொழுது எழுதிவரும் பாலஸ்தீனம் தொடரை எழுதி அனுப்ப இயலவில்லை.

ஆகவே முன்பு வெளியான இந்தக் குறுந்தொடரை வெளியிடும்படி நெறியாளர் அவர்களை கேட்டுக் கொண்டேன்.

கடந்த வாரம் பிஜேபியின் பாராளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகாராஜ் என்கிற பெயருடைய ஒரு சாமியார் ( பெயரிலேயே உள்ள மகராஜ் என்கிற பெயரைக் கூட துறக்காத சாமியார் ) பசுவதை செய்பவர்களை தூக்கிலிட வேண்டுமென்று சட்டம் இயற்ற வேண்டுமென்று பேசி இருக்கிறார்.

அவரது தடம்புரண்ட வார்த்தைகளுக்கு இந்தப் பதிவு பதிலாக அமையும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் முதல் பாலஸ்தீனம் தொடர் தொடரும் என்றாலும் இந்தக் குறுந்தொடரின் மற்ற பகுதிகளும் தொடர்ந்த நாட்களில் வெளியிடப் பட வேண்டுமென்று நெறியாளர் அவர்களைக் கோருகிறேன்.

வஸ்ஸலாம்.

sheikdawoodmohamedfarook said...

ஏற்க்கனவேவெளியிட்டதொடராகஇருந்தால்என்ன! இன்னும்சலிச்சுப்போகாமல்திங்கருசியாஇருக்கு. ஆனாமாட்டுகறிக்குஓட்டுபோடக்கூடாது. கொஞ்சம்இஞ்சிபூண்டைகூடப்போட்டா திங்கிறதுக்குருசியாஇருக்கும்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

சரியான நேரத்தில் பதிகிறீர்கள். நல்லா சப்புக்கொட்டித் தின்றுவிட்டு சந்ததிகளை "சாப்பிடாதீங்க" என்று சொல்வது அயோக்கியத்தனம்.

இன்னும் தோலுறித்துக்காட்டுவோம், மாட்டுக்கல்ல; இவர்களின் பித்தலாட்டங்களை.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா. காக்கா!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். காக்கா காவி பயலுவ இப்படி கொம்பு சீவி விட்டு பொது இந்துக்களையும் ஏவி விட பாக்குறானுவ! ஆனால் இவங்க மாட்ற மாட்ல கால் நடையாபோறவனுவ வாலை சுருட்டிக்கிட்டு ஓடப்போறானுவ! மாட்டுக்கறியை வயிரு"முட்ட"குமட்ட.குமட்ட தின்னுப்புட்டு புலி பசிச்சாலும் புல்ல தீங்காதுன்னு ஒரு நாடகம்!
சீறிப்பாயும் காளையா உங்க எழுத்து களம் கலை கட்டட்டும் கட்டவிழ்ந்த ஜல்லிக்கட்டாய்,துள்ளிக்கிட்டு வார்தையில் புகுந்து விளையாடுங்க!

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பிகள் சபீர் ! மற்றும்
கலிபோர்னியா கவிச்சித்தர் தம்பி கிரவுன் !

வ அலைக்குமுஸ் சலாம்.

கேரளத்து நம்பர்கள் "போத்து" என்று பெயரிட்டு மாட்டுக் கறியை ஒரு சாத்து சாத்துகிறார்கள்.
கல்கத்தா நகர வீதிகளில் மாட்டுக் கறியின் தொடை சந்துகள் தேக்குமரக் கதவுகள் போல தொங்குகின்றன.
தலைநகர் டில்லியில் சாந்தினி சவுக்கிளிருந்து நிஜாமுதீன் வரை மாலை வேளைகளில் இந்தக் கறியின் " கபாப்" பிரசித்தி பெற்றவை.
லக்னோவில் இந்தக் கறி கிடைக்காவிட்டால் "நோ லக்" தான்.
மடங்களும் துறவுச்சாலைகளும் நிறைந்த பெங்களூரிலும் இதன் சுவை தனிச்சுவை.
சென்னை நகர கையேந்தி பவன்களில் மாலை வேளைகளில் ஏழைகளின் உணவும் இந்தக் கறியே.

மாட்டை அறுப்போருக்கு மரண தண்டனை என்ற ஒரு சாமியாரின் கூற்றை நாம் ஒப்புக் கொள்வதாக இருந்தால் நடிகைகளை படுக்கையறைக்கு வரவழைக்கும் சாமியார்களுக்கு என்ன தண்டனை? என்று கேட்க மாட்டோமா?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

காக்கா இவங்களுக்கு பாய்மார்கள் சமைத்த மாட்டுக்க்றியை ஒரு தேக்கரண்டி துண்ன கொடுங்க.

பசுவதை தடைச்சட்டத்தை. மாற்றி பசியார பசு ஒலிப்பு சட்டத்தை உடனே அமலுக்கு கொண்டு வர ஒப்பாரி வைப்பாங்க. கொள்கை இல்லாதவங்க.

Ebrahim Ansari said...

தம்பி L M S அபூபக்கர்!

வ அலைக்குமுஸ் சலாம்.

சூப்பர்.

Ebrahim Ansari said...

மரியாதைக்குரிய மச்சான் அவர்களுக்கு,

உங்களுக்கு விருந்து வைக்க ஆசை. அனால் தற்சமயம் கையில் மாட்டுக் கறிதான் இருந்தது. வைத்துவிட்டேன். மாப்பிள்ளை பிகு பண்ணாமல் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

ZAKIR HUSSAIN said...

To Bro Ebrahim Ansari,

இதில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்கள் அனைத்தும் மொழி பெயர்த்து ஹிந்தி பேசும் ஆட்சியாளர்களுக்கு தெரியப்படுத்த பட வேண்டிய விசயம்.

உங்களின் அறிவின் விசாலம் கண்டு உங்களை சமீபத்தில் அதிகம் விமர்சித்தவர்கள் கூட உங்களை அனுகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

பொதுவாகவே அதிரை நிருபரில் எழுதியவர்களை பாராட்டி கமென்ட்ஸ் எழுதினால் ' அவர்களுக்குள்ளாகவே பாராட்டிக்கொள்கிறார்கள்' என்ற விமர்சனம் இருந்ததாக கேள்விப்பட்டேன்....அது சரி , நல்லபடியாக எழுதினால் பாராட்டத்தானே முடியும் ...அதற்காக அல்லது கமென்ட்ஸ் போடனும் என்பதற்காக 70 வருடத்திற்கும் அதிகமான குடும்ப நட்புடன் இருக்கும் நாம் சண்டை போட்டுக்கொள்ளவா முடியும்.

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர்!

உனது வார்த்தைகளில் குடும்ப நட்பு குறிப்பிட்டது நினைவுகளைக் கிளறி கண்கள் பனிக்க வைத்தன.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு