Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அசை போடுதே ஆசை ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | February 10, 2015 | , , ,


உலகில் அறிஞர் முதல் அரை கிறுக்கன் வரை இளமைப் பருவத்தை தாண்டிதான் வந்திருக்க முடியும். இளமையில் மனதில் தோன்றும் ஆசைகளில் பெரும்பாலும் வித்தியாசமானவைகளே ! அவைகளில் சில நிறைவேறலாம் அல்லது நிறைவேற்றப்படாமலே போயிருக்கலாம். சில ஆசைகள் அறிவுப்பூர்வமானதாக இருக்கலாம். மேலும் சிலதோ அறிவுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். ஆனாலும் விரும்பும் ஆசைகள் நம்மை மீறி மனத்திரையில் பளிச்சிடும் தன்மை வாய்ந்தவை. 

இதோ ஒரு கிராமத்து நாகரீகத்தில் "வெள்ளந்தியாக" ஒரு கன்னிப்பெண் பாடுவதாக கவிஞர் வைரமுத்து இடும் ஆசைகளின் பட்டியல் மிகவும் புகழ்பெற்றதாக ஒரு காலத்தில் பட்டி தொட்டிகளில் ஒலித்த ஆசைகளாகும். 

"சேத்து வயலாடி நாத்து நட ஆசை 
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை 
வானவில்லை கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை
வெண்ணிலவைத்தொட்டு முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை "

என்றெல்லாம் குழந்தைத்தனமான ஆசைகள் .

இதே போல ஆசைகள் எல்லாக் கவிஞர்களுக்கும் உள்ளன. அப்படிப்பட்ட ஆசைகளில் குழந்தைத்தனம், சமூக அக்கறை, எதிர்கால நலநாட்டங்கள், நிறைவேறாத ஆசைகளின் ஏக்கங்கள், தோல்விகள் ஆகியன பிரதிபலிக்கும்.

இந்த ஆசைகள் தான் வளரும் சூழ்நிலைகளை அடிப்படியாக வைத்து பலருக்கும் ஏற்படும் இப்படி ஒரு பட்டியலை ஒவ்வொரு தனிமனிதரிடமும் கேட்டுப்பாருங்கள். ஒவ்வொருவரிடமும் தனியாக பட்டியலே இருக்கும். (அந்த பட்டியலை பின்னுட்டமாக இங்கு எதிர் பார்த்தவனாக காத்திருக்கின்றேன்) - (MSM நெய்னாவிடம் கூடுதலா இருக்கும்) இளமைக்காலத்திலும் - வளரும் பருவத்திலும்தான் வித்தியாசமான ஆசைகள் தோன்றும்.

இளமை தடைகளை தாண்டி வளர்ந்து விட்ட பிறகு கூடியவரை ஆசைகள் அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரே விதமாகவே இருக்கும். மகளுக்கு வீடு கட்ட ஆசை(!!), மகனுக்கு தோப்பு வங்க ஆசை(??), மகனை பொறி(யி)யல் (!!) கல்லூரியில் படிக்க வைத்து அமெரிக்காவுக்கு / ஐரோப்பாவுக்கோ வேலைக்கு அனுப்பி சூப்பர்மார்கெட்டில் வண்டி தள்ளினாலும் பரவாயில்லை ரகங்களாக அனுப்ப வேண்டும். மகளுக்கு என்பது பவுனில் நகை தேடி கொடுக்க வேண்டும். 

மாமனாரை அப்பலோவில் (!!) வைத்து வைத்தியம் பார்க்கவேண்டும், பெற்ற அப்பாவுக்கு ராஜு டாக்டரிடம் ஊசி போடவேண்டும், ஷிபா ஆஸ்பத்திரிக்கு அருகில் மனைக்கட்டு வாங்கிப் போடவேண்டும் என்பதுபோல் பலரின் ஆசைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும். 

ஆனால், இளமையில் தோன்றும் ஆசைகள் அப்படியல்ல. அவைகள் கவித்துவம் நிறைந்த ஆசைகள் கவிமிகு(!!) ஆசைகள். சின்ன சின்ன ஆசைகள் பெரிய பெரிய சிறகடிக்கும் ஆசைகள். மனதை சிதறடிக்கும் ஆசைகள் !!

என்ன(டா!) இவ்வளவு பீடிகை போடுகிறாயே! உன் பட்டியல் என்ன என்பதை சட்டுபுட்டுன்னு சொல்லு என்று  நீங்கள் அனைவரும் கேட்பதுபோல் எனக்கு ஒரு பிரமையாக தெரிகிறது. 

இதோ என் இளமைக்கால ஆசைகளின் பட்டியலை இங்கே பதிந்து இருக்கிறேன். நான் வளர்ந்த விதம், சூழ்நிலை, ஆகியவைகளின் அடிப்படியில் எனது இளமைக்கால ஆசைகளை உங்களனைவரின் ரசனைக்கு வாசனையாக இருக்கும் என்று "நம்பி" அதற்கு தகுந்தார்போல் எனது மூன்றாம் கண்ணால் சிமிட்டிய புகைப்படங்களை இடையிடையே சொருகி வைத்திருக்கிறேன்...

1 கோடைக்காலத்தில் வெட்டிக்குளத்தின் காய்ந்து சேற்றின் உள்ளே ஈரம்    இருக்கும் மேலே காய்ந்து இருக்கும் அதன் மீது நடக்கும் போது ஒரு மெதுமெது இருக்கும் அது பிடிக்கும் 

2 ராஜாமடம் ஏரியில் நீர் வழிந்தோடிய இடத்தில் பாசி பிடித்த தரையில் வழுக்கிக்கொண்டு குளிக்கப்பிடிக்கும்

3 கோடை மழை பொழியும் போது வரும் மண்வாசனை பிடிக்கும் 


4 நடு-இரவில் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம் பட்டினம்பைக்கில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் வரும்போது அடிக்கின்ற குளிர் காற்றும் அதன் கூட வரும் வாசனையும் பிடிக்கும்...

5 பசியாக இருக்கும் போது எங்கிருந்தோ வரும் தாளிப்பு வாசனை வருமே அது பிடிக்கும் 

6 ஆற்று நீரில் எதிர் நீச்சல் போட்டு கூட்டமாக குளிக்க பிடிக்கும் 

7 நண்பர்கள் கூட்டமாக ராஜமடம் பாலத்தில் இரவில் கோழி சுட (!!) போவது பிடிக்கும் 


8 குருவி கொத்திய கொய்யாபழமும் காக்கை கொத்திய பப்பாளி பழமும் பிடிக்கும் 

9 காய்ச்சல் குருவியின் கலர் பிடிக்கும் உள்ளான் குருவியின் சுவை பிடிக்கும் 

10 உப்பளத்தின் சேற்றில் வழுக்கி விழாமல் இருக்க கால் பெருவிரலை ஊண்டி நடக்க பிடிக்கும் 

11 அப்பாவின் கைபிடி கம்பில் இருக்கும் அந்த வளவு பிடிக்கும் 

12 கிழக்கே மழை பெய்தால் மேற்கே குடை பிடிக்கும் அந்த வானவில்லை பிடிக்கும் 


13 குளத்தில் குளிக்கும்போது மீன்கள் கால்களை கொத்தும் சுகம் பிடிக்கும் 

14 மொட்டை மாடியில் இருந்து இரவு நேர விண்மீன்களை பார்ப்பது பிடிக்கும் 

15 கடற்கரை மணலில் கால் பதிய நடப்பது பிடிக்கும் 

16 இரவில் மெழுகுவர்த்தியின் ஒளி பிடிக்கும்


17 நிலவு நேரத்தில் படகு பயணம் பிடிக்கும் 

18 அதிர்ந்து சிரிக்கும்போது வரும் கண்ணீர் துளியை பிடிக்கும் 

19 ரயில் பயணத்தில் சடக் சடக் தடக் தடக் சத்தம் பிடிக்கும் 

20 இரவு நேரங்களில் வெட்டிக்குள படித்துறையில் உட்க்கார்ந்து அண்ணன் N.A.ஷாகுல் ஹமீது கூட அறிவியல் தர்க்கம் செய்வது பிடிக்கும்.


21 இவை அனைத்தையும் எமக்கு அளித்த இறைவனை மிக மிக பிடிக்கும் 

Sஹமீது

5 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அசை போடுவதற்க்கு நல்ல தீனி தந்து அசை போடுபவர்களை ரசிப்பதற்க்கு எதிர் பார்த்து கொண்டிருக்கும்.ஹமீது காக்கா அவர்களுக்கு

வேட்டியில் முட்டை இட்டு குளத்தில் நீச்சல் அடிப்பது பிடிக்கும்.

மணல் நிறைந்த தெருக்களில் மிதிவண்டி மிதிப்பது பிடிக்கும்.

கருவாடு சுட்டு நீச்ச கஞ்சி குடிப்பது பிடிக்கும்.

குளத்தில் மீனை பிடித்து பள்ளிவாசல் ஹவுதில் விட்டு ரசிப்பது பிடிக்கும்.

மழைக்காலங்களில் காகிதத்தில் கப்பல் செய்து மண் தெரியும் நீரோடையில் விட்டுப்பார்ப்பது பிடிக்கும்.

சுய நலமோ,விள்ம்பரமோ தேடாத சமூக சேவை செய்யும் மக்களை பிடிக்கும்.

பித் அத்தை கலக்காமல் ஹக்கை மட்டும் சொல்லும் உலமாக்களை பிடிக்கும்.

தினமும் முதல் வரிசையில் நின்று
இறைவனை உல்லச்சத்தோடு நின்று வணங்க பிடிக்கும்.

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இப்படி பழையதை பட்டியலிட்டு அதை படித்து மகிழ என்றும் பிடிக்கும். ஹமீத் காக்கா

பட்டம் விடும் பொழுது போய்ச்சேரும் தந்தி பிடிக்கும்.

மனைவி எழுதிய கடிதத்தை திரும்ப திரும்ப படிக்க பிடிக்கும்.



sabeer.abushahruk said...

பதிவிலும் கருத்துகளிலும் உள்ள அனைத்தும் எனக்கும் பிடிக்கும்.

ஹிஸுபு ஓத பிடிக்கும்; ஓதி முடித்தபின் நார்சா பிடிக்கும்.

விடாத மழையிலும் ஃபுட்பால் ஆட பிடிக்கும்.

அல்லாதே....

பொண்டாட்டியிடம் மலையாளம் ஹிந்தி என்று பேசி கலாய்க்க பிடிக்கும்

Iqbal M. Salih said...

சின்னவன் இகாமத் சொல்ல, மூத்தமகன் இமாமத் செய்ய, என் பிள்ளைகளுடன் சேர்ந்து தொழுவது எனக்கு முற்றிலும் பிடிக்கும்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு