Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆஸ்பத்திரியில் பிறந்தோம்; ஆஸ்பத்திரியால் ஒழிந்தோம். 15

தாஜுதீன் (THAJUDEEN ) | July 20, 2010 | , , ,

ஒரு காலத்தில் மழைக்காலங்களில் வரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் தாக்கப்பட்டு வரும் காய்ச்சல்,                                           சளித்தொல்லைகளால் வருடத்தில் ஒரு முறையோ அல்லது இரு முறையோ மருத்துவமனை சென்று வந்தோம். ஆனால் இன்றோ நாளுக்கொரு புதிய வைரஸ் கிருமியால் தாக்கப்பட்ட நோயும், வாரத்திற்கொரு புதிய மருந்து கண்டுபிடிப்பும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

செல்போன் டவர்களால் சிட்டுக்குருவி இனம் அழிக்கப்பட்டு வருவது போல் ஊரில் நடமாடும் வயதான பெரியவர்களை கண்களால் பார்ப்பதே அரிதாகப்போய் விட்டது இக்காலத்தில்.

பெரும்பாலும் மருத்துவமனைகளெல்லாம் நிறுவப்படும் தொடக்க காலத்தில் ஒரு உயரிய நோக்கத்திற்காகவே அதாவது அப்பகுதி மக்களின் உடல் ஆரோக்கியத்திற்காகவும், உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக வெகுதூரம் மக்கள் செல்வதை தடுப்பதற்காகவும் போன்ற‌ பொது நலநோக்கில் தான் ஆரம்பிக்கப்படுகின்றன. நாளாக, நாளாக அதன் நோக்கம் படிப்படியாக திசை மாற்றப்பட்டு பணம் சம்பாதிக்கும் நோக்கமே தலையாய கடமை என்ற வியாபார நோக்கிற்கு தள்ளப்படுகின்றன.

இதில் போலி மருத்துவர்களின் பிரவேசம் வேறு. மக்களின் அறியாமையையே தன் வியாபார முதலாய் எண்ணி களத்தில் குதித்து கோடிகள் பார்க்கின்றனர். கடைசியில் சிலர் கம்பியும் எண்ணுகின்றனர்.

சென்னைப்போன்ற பெரு நகரங்களில் செல்வ,செழிப்புள்ள அரக்கட்டளைகளால் நிறுவப்படும் மருத்துவமனைகள் கூட தன்னிடம் சிகிச்சைக்காக வரும் பொது மக்களிடம் பணம் பறிப்பதில் கொஞ்சமும் கருணையும், இரக்கமும் காட்டுவதில்லை. என்ன தான் குடும்ப கஷ்டத்தில் தன் உறவினர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கு ஒரு நம்பிக்கையுடன் வரும் நடுத்தர மற்று ஏழை மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் ஒரேக்கட்டணம் தான்.

பல மருத்துவமனைகளில் உயிருக்காக போராடும் நோயாளியின் சிகிச்சைக்காக மருத்துவர்களால் நோயாளியின் குடும்பத்துடன் இரக்கமின்றி பணப்பேரம் பேசப்படுவதாக நாம் கேள்விப்படுகிறோம். அப்படியே சிகிச்சைக்கு முன் நோயாளியின் உயிர் பிரிந்து விடுமாயின் அவர் சிகிச்சைக்காக அதுவரை ஆன செலவுகள் முற்றிலும் செலுத்தப்படாதவரை அவரின் பிரேதம் என்ன தான் குடும்பத்தினர் கதறினாலும், கூக்குரலிட்டாலும் மருத்துவமனையிலிருந்து வெளியே எடுத்துச்செல்ல அனுமதிப்பதில்லை மருத்துவமனை நிர்வாகம்.

கலைஞர் காப்பீட்டுத்திட்ட அட்டையை அடைவதற்கு நாம் பல உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, நாட்கள் பல காத்திருந்து தான் நாம் அதை பெற முடியும். முறையான ஆவணங்கள் இல்லாமல் அல்லோலப்படும் எத்தனையோ ஏழை, பாமர மக்களுக்கு மருத்துவமனைகளில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில் இது போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்துபவர்கள் அதற்கென அரசால் அமைக்கப்பட்ட அமைப்புகள் தொலைபேசி அழைப்பு மூலமாகவோ அல்லது தானே முன் வந்து அல்லல்படும் மக்களுக்கு உதவிடுமாயின் அது மக்களால் மட்டுமல்ல அரசின் சரித்திரம் போற்றும் ஒரு திட்டமாகத்தான் பேசப்படும். அதனால் அரசிற்கும் நல்ல பெயர் கிடைப்பதுடன் மக்களின் ஆதரவும் (ஓட்டும்) நிச்சயம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒரு காலத்தில் நம் வீட்டுப்பெரியவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்படும் சுகக்குறைவிற்கு அவர்கள் கைப்பக்குவத்தில் நாட்டு மருந்து கொண்டு (அரிசி துப்பிலி, அக்கரகரம், கண்டதுப்பிலி, புள்ளெபெத்த மருந்து, செந்தூரம்) அம்மியில் நன்கு பொடி செய்து அரைத்து பிறகு சூடாக்கி தரும் குடிநி (குடி நீ) தந்த உடனடி நிவாரணத்தை லட்சங்கள் பல செலவாகும் இக்கால அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை கூட தருவதில்லை.

இன்றைய உலகில் பிரபல்யமான ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொள்பவர்களும், முற்றும் துறந்த முனிவர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களும் தனக்கென பக்தகோடி வட்டங்களை உள்ளூரில் மட்டுமல்லாது உலகளாவிய அளவில் உண்டாக்கி கொண்டு அவர்கள் மூலம் கணிசமான காணிக்கை தொகையை வசூல் செய்த பின் அவர்கள் அற‌க்கட்டளை என்ற பெயரில் உலக மக்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறி முதலில் நிறுவுவது இன்று பணம் காய்க்கும் மரங்களாய்த்திகழும் பெரும் மருத்துவமனைகளையும், மருத்துவக்கல்லூரிகளையுமே. அவர்கள் நடத்தும் மருத்துவமனைகளிலும், மருத்துவக்கல்லூரிகளிலும் அவர்களின் பக்தகோடிகள் வந்து படிப்பதற்கோ அல்லது சிகிச்சை எடுத்துக்கொண்டாலே போதும் கணிசமான காசு பார்த்து விடலாம் என்ற நோக்கில் தான் பெரும்பான்மையான அறக்கட்டளைச்சார்ந்த மருத்துவமனைகளும், மருத்துவக்கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

நாளுக்கு நாள் பெருகி பரவிவரும் புதிய, புதிய நோய்களால் மக்கள் தான் கவலையுற்றிருக்க வேண்டுமே ஒழிய மருத்துவ மனைகளல்ல. வியாபார நோக்கில் இயங்கும் பெரும்பான்மையான மருத்துவமனைகளை பொருத்தவரை மக்கள் நோய்வாய்ப்பட்டு உடனே மரணிக்கவும் கூடாது. அதே சமயம் ஆரோக்கியமாக இருந்து கொண்டு வெளியில் சுற்றித்திரியவும் கூடாது. நீண்ட ஆயுளுடன் நிரப்பமான நோய்,நொடிகளைப்பெற்று அடிக்கடி தன்னிடம் வந்து சிகிச்சைகள் மூலம் பணங்காசுகளைத்தாரை வார்த்துச்செல்ல வேண்டும் (உங்கள் வரவு நல்வரவாகட்டும்..நன்றி மீண்டும் வருக..) என்பதைத்தான் விரும்புகிறது.

ஒரு காலத்தில் வரும் கடும் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வாந்தி பேதி, மூக்கடைப்பு, இருமல் மற்றும் சளித்தொல்லைகளெல்லாம் ஒரு முறை மருத்துவரிடம் சென்று ஒரு ஊசிப்போட்டுக்கொண்டால் சரியாகி விடும். ஆனால் இன்று ஊசிப்போட்ட தழும்பை போக்க இன்னொரு ஊசி போட வேண்டியுள்ளது.

பெரிய மருத்துவமனைக்கு கொசுக்கடிகளால் மேனியில் தடிப்புகள் உண்டாகி குழந்தைகளை சிகிச்சைக்காக எடுத்துச்சென்றால் கூட முதலில் அங்கு குழந்தையின் பெயரில் என்னமோ பெரும் சொத்து,பத்து வாங்க வந்தது போல் ஒரு ஃபைல் ஓப்பன் செய்து அக்குழந்தையை காலமெல்லாம் நீங்கள் சிகிச்சைக்காக இங்கு அழைத்து வாருங்கள் என்று சொல்லாமல் சொல்லி வருகின்றனர். இதில் வேடிக்கை என்னவெனில் அக்குழந்தையின் தகப்பனாரின் மாத வருமானம் எவ்வளவு? என்ற கச்சிதமான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அண்மைக்காலங்களில் தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் காலாவதியான மருந்துகளைக்கொள்முதல் செய்து அதை மறுவிற்பனை செய்வதற்கென்றே தனிப்பட்ட முகவர்களுடன் கைகோர்த்து நாட்டின் முதுகெலும்பாகத்திகழும் பெரும் வணிக நிறுவனங்களும் பொது ஜனங்கள் மேல் எவ்வித ஈவு, இரக்கமின்றி தன் பணப்பரிவர்த்தனைக்காக மக்கள் மற்றும் அரசு விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததை நாடறியும்.

ஒரு காலத்தில் மருத்துவமனைகளெல்லாம் எப்பொழுதாவது வரும் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மட்டுமே என்றிருந்தது. ஆனால் இன்றோ மளிகைக்கடை வியாபாரம் போல் அன்றாடம் மக்கள் கூட்டம் மருத்துவமனை தோறும் அலை மோதுகின்றன. மருந்துக்கடைக்காரர்களின் வாயெல்லாம் பல்லாகத்தான் தெரிகிறது. காலப்போக்கில் திரையரங்குகளில் வைக்கப்படுவது போல் இன்று ஹவுஸ் ஃபுல் என்று போர்ட் எழுதி மருத்துவமனைகளிலும், மருந்துக்கடைகளிலும் மாட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நாம் நம் ஆரோக்கியம் பேணுவதில் மிகுந்த கவனம் வேண்டும். ஆரோக்கியம் சம்மந்தமாக ஆலோசனை பெற மருத்துவரிடம் சென்றால் அதற்கும் ஒரு தொகை ஆலோசனைக்கட்டணம் என்ற பெயரில் அங்கு கொடுத்தாக வேண்டும். அதற்கும் அங்கு ஒரு ஃபைல் ஒப்பன் செய்யப்படும்.

ஒரு சமயம் சகோ. ஜாகிர் ஹுசைன் எழுதிய கட்டுரை தான் இங்கு ஞாபகத்துக்கு வருது "ஆட்டு மூளை வறுவலும், ஆஸ்பத்திரி டோக்கனும்". ஏன் ஆட்டு மூளையை சாப்பிடனும், ஆஸ்பத்திரி டோக்கன் எடுக்கனும்? ஏதோ பழைய பழமொழியை (ஏன் நாயெ அடிப்பெனெ, ......சுமப்பெனெ?) இங்கு சிறிது மாற்றம் செய்து எழுதியுள்ளேன்.

எனவே நாம் மற்றும் நம் குடும்பத்தினர்கள் அன்றாடம் ஆரோக்கியம் பேணி வருவோமேயானால் அனாவசியமாக ஆஸ்பத்திரி செல்வதை தடுத்து விட முடியும். அதற்காக என்ன மருத்துவ உலகம் போர்க்கொடியா தூக்கப்போகிறது?

தினம், தினம் நமக்கு அன்றாடம் கிடைக்கும் காய்கறி, கீரை, பழ உணவுகளை உண்டும், தேவையற்ற கொழுப்பு, இனிப்பு, டின் மற்றும் ரீஃபில் பேக்கில் அடைக்கப்பட்ட‌ எண்ணெய்ப்பதார்த்தங்களை உண்பதை விட்டு தவிர்த்தும், குறைந்தது தினந்தோறும் அரைமணி நேரமாவது நம் உடலுக்குத்தகுந்த உடற்பயிற்சியை செய்து வருவோமேயானால் குறைவற்ற செல்வம் இருப்பினும் ஆரோக்கியமாக வாழலாம் நம் கடைசி மூச்சு வரை இன்ஷா அல்லாஹ் என்று கூறி என் கட்டுரையை இங்கு நிறைவு செய்கின்றேன்.

இக்கட்டுரைப்பற்றிய உங்க‌ள் மேலான‌ க‌ருத்துக்களையும், மருத்துவம் சம்மந்தமாக உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் இங்கு பின்னூட்டமாக தர அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

வ‌ஸ்ஸ‌லாம்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.
20.07.2010

15 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சில நாட்களுக்கு முன்பு நம் அதிரை ஷிஃபா மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாம் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த கட்டுரை நம் அனைவருக்கு நல்ல சிந்தனையை தூண்டும் என்று நம்பலாம்.

இந்த அருமையான கட்டுரையை எழுதிய சகோதரர் நெய்னா முகம்மது அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும், துஆக்களும்.

Shameed said...

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து ஆக்கம் எபோதும் பொது நலனை முன்னிறுத்தியோ இருக்கும் ,அருமையான ஆக்கம்

நமது ஊரில் ஆஸ்பிடல் உள்ள அளவுக்கு உடற்பற்சி கூடங்கள் கிடையாது. ஆஸ்பிடல் கட்டும் செலவில் ஒரு சிறு தொகைக்கு உடற்பற்சி கூடங்கள் அமைத்தால் மக்கள் நோய் நொடி (அதுஎன்ன நொடி)இல்லாமல் உடல் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

/// ஒரு காலத்தில் வரும் கடும் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வாந்தி பேதி, மூக்கடைப்பு, இருமல் மற்றும் சளித்தொல்லைகளெல்லாம் ஒரு முறை மருத்துவரிடம் சென்று ஒரு ஊசிப்போட்டுக்கொண்டால் சரியாகி விடும். ஆனால் இன்று ஊசிப்போட்ட தழும்பை போக்க இன்னொரு ஊசி போட வேண்டியுள்ளது. ///

சரியான ஊசி(தான்) போடப் பட்டிருக்கிறது - நமக்கு நாமே மருத்துவம்(செய்வோம்) - msmநெய்னா Well Done !

Zakir Hussain said...

It is simply a superb Article by our brother மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

he touches so many things in a single article.But the truth is business oriented hospitals are more than service oriented hospital. He explained very well.

some of my comments as follows;

//கலைஞர் காப்பீட்டுத்திட்ட அட்டையை அடைவதற்கு நாம் பல உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, நாட்கள் பல காத்திருந்து தான் நாம் அதை பெற முடியும்//

Will somebody help to do this wonderful things in our streets..without asking money from people other than transport/clerical charges?..then we talk about social work. If not we are not going to be different other than the hospital.

//இன்றைய உலகில் பிரபல்யமான ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொள்பவர்களும், முற்றும் துறந்த முனிவர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களும்...//

I wonder how come all these kind of priest / Gurus all having Ladies devotees a lot rather than a men devotees....Hope you all understand from that what they are up to..And no priest is Poor.

Bro:Naina...you are simply superb by highlighting these to society.

Zakir hussain

Adirai khalid said...

நெய்னா உன் ஆதங்கம் நியாயமானது

காட்சி 1

ஒருமுறை நம்மூர் மருத்துவர் ஒருவரிடம் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவ பரிசோதனை செய்ய சென்றேன்

அவர் என்ன செய்கிறது என்று கேட்டார் தன் பேனாவை மருந்து சீட்டில் வைத்தவாரே.
தலைவலிக்குது என்றேன்.

சீட்டில் ஏதோ எழுதினார்

அப்புரம்? என்று கேட்டார்
கண்ணெல்லாம் அரிக்கிது என்றேன்

சீட்டில் ஏதோ எழுதினார்

அப்புரம்? என்று கேட்டார்

மூக்கு அடப்பா இருக்குது டாக்கர் என்று சென்னேன்
சீட்டில் ஏதோ எழுதினார்

அப்புரம்?
வாயில ஒரே புன்னா ஈக்கிது டாக்டர்
சீட்டில் ஏதோ எழுதினார்


அப்புரம்?
தொன்ட வலியா இருக்குது டாக்டர் என்று சொன்னேன்
சீட்டில் ஏதோ எழுதினார்

ஆறு ஏழு வரிகளில் ஏதோ "கிரேக்க மொழியில்" கிறுக்கிய மருந்து சீட்டை தந்துவிட்டு பக்கத்து ரூமை காட்டி அங்கே கம்பொவுன்டர் இருப்பார் அவரிடம் இத காட்டி மருந்து வாங்கிவிட்டு என்னிடம் காட்டு(டாக்டர் பீஸ் கொண்டுவா) என்றார்

காட்சி 2

மருந்து வாங்க நின்றுக் கொண்டிருந்தேன் அப்பொழுது என்னைப் போன்ற சக நோயாளியும் மருந்து வாங்கினார் எவ்வளவு என்று கேட்டார் 90 ரூபா என்றார் மருந்து(ரூம்) கடைகாரர் .பணத்தை கொடுத்தார்

நானும் அந்த சீட்டை காட்டி மருந்து வாங்கினேன் பொட்டலம் பொட்டலமாக மருந்து வந்தது. பணம் எவ்ளவு சார் என்றேன் ஒரு ரவுண்ட் பிகறா சொன்னார் ஆச்சிரியமாக இருந்த்தது எல்லாமருந்து கடைகளிலும் 82.45 அல்லது 87.65 தானே இருக்கும் இவர் மட்டும் ஏன் இப்படி என்று கேட்கஅப்பொழுது வயசும் உடல்நிலையும் போதவில்லை

கலர் கலராய் இருந்த அந்த பொட்டலத்தை தூக்க முடியாமல் தூக்கிகொண்டு டாக்டரிடம் போனேன் காலை 4, மாலை 6, இரவு 8, மொத்தம் ஒருவாரம் தொடர்ந்து சாப்பிடவேண்டும் என்று வாய்பாடு போல் சொல்லி மருந்து சீட்டை கசக்கி பக்கத்திலுல்ல குப்பை கூடைக்குல் போட்டு விட்டு மற‌க்காமல் அவருக்குண்டான காசையும் வாங்கிவிட்டுதான் அனுப்பினார்

நல்லது நேயர்களே மீண்டும்
காட்சிப் பிழையா அல்லது அவரிடம் காட்டியது பிழையா என்பதை அடுத்த தொடரில் நீங்கள் விரும்பாவிட்டாலும் இங்கு காட்டப்படும்(கிறுக்கப்படும்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பின் ஹாலித்: அந்த மருந்துச் சீட்டின் மறுபக்கத்தை திருப்பிப் பார்த்திருக்கிறாயா ? அப்படியே மளிகைக் கடை சிட்டுபோல் இருந்திருக்குமே !

crown said...

ஒரு காலத்தில் மருத்துவமனைகளெல்லாம் எப்பொழுதாவது வரும் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மட்டுமே என்றிருந்தது. ஆனால் இன்றோ மளிகைக்கடை வியாபாரம் போல் அன்றாடம் மக்கள் கூட்டம் மருத்துவமனை தோறும் அலை மோதுகின்றன. மருந்துக்கடைக்காரர்களின் வாயெல்லாம் பல்லாகத்தான் தெரிகிறது. காலப்போக்கில் திரையரங்குகளில் வைக்கப்படுவது போல் இன்று ஹவுஸ் ஃபுல் என்று போர்ட் எழுதி மருத்துவமனைகளிலும், மருந்துக்கடைகளிலும் மாட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-----------------------------------------
அஸ்ஸலாமு அலைகும். நல்ல தொரு எச்சரிக்கை விளக்க கட்டுரை வழக்கம் போல் நைனா அவர் பங்கை அருமையா செஞ்சிருக்கிறார்.மேற்கண்ட வரி மிகவும் மிகைப்படுதாமல் எதார்தத்தை பிரதிபலிக்கிறது.எனக்குத்தெரிந்து நம் நாட்டின் ஜனாதிபதி(ரப்பர்ஸ்டாம்பு)யைவிட ஆஸ்பத்திரியில் டோக்கன் கொடுக்கும் நர்ஸ் அல்லது வார்ட் (பாய்)பெண் அதிக அதிகாரம் படைச்சவங்களா இருக்காங்க!

crown said...

அஸ்ஸலாமு அலைகும். சகோ.ஹாலிதுவின் ஓரங்க நாடக(ம்)விளக்கம் மிக மிக உன்மையை போட்டுடைத்துவிட்டது. நல்ல வேளை அந்த விபத்தில்(டாக்டர்ட்ரீட்மென்ட்)உயிர் பிழைச்சத எண்ணி மிக்க சந்தோசம்.அல்லாஹ் உங்களின் ஆயுளை அதிகமாக்கி நோய், நொடி( ( நொந்து) உடல் சோர்ந்து போகுதல்- சகோ.சாகுல் ஹமீதுவின் சந்தேகம் இப்ப தீர்ந்திருக்கலாம்???)இல்லாமல் ஆரோக்கியமாகக்கி வைப்பானாக ஆமின்.

Adirai khalid said...

1. naina thambi said..,

///அன்பின் ஹாலித்: அந்த மருந்துச் சீட்டின் மறுபக்கத்தை திருப்பிப் பார்த்திருக்கிறாயா ? அப்படியே மளிகைக் கடை சிட்டுபோல் இருந்திருக்குமே !////


அடகொய்யல... என்னமா நெய்னா(தம்பி) அப்பாலிக்க என்னோட வந்தது நீ தானே
கரெக்கிட்ட கண்டுபுடுச்சிடியே ஆ...
அது சேவு மளிய கட சீட்டு மாதிரி (நுவன்ன கடய்ன நம்பிளிக்கு அத்துபிடி கரகிட்ட புரியும்)

2 . crown said....,

////அஸ்ஸலாமு அலைகும். சகோ.ஹாலிதுவின் ஓரங்க நாடக(ம்)விளக்கம் மிக மிக உன்மையை போட்டுடைத்துவிட்டது. நல்ல வேளை அந்த விபத்தில்(டாக்டர்ட்ரீட்மென்ட்)உயிர் பிழைச்சத எண்ணி மிக்க சந்தோசம்.அல்லாஹ் உங்களின் ஆயுளை அதிகமாக்கி நோய், நொடி( ( நொந்து) உடல் சோர்ந்து போகுதல்- சகோ.சாகுல் ஹமீதுவின் சந்தேகம் இப்ப தீர்ந்திருக்கலாம்???)இல்லாமல் ஆரோக்கியமாகக்கி வைப்பானாக ஆமின்.///
https://mail.google.com/mail/?shva=1#drafts/129f2b1ff0c6a084
உங்கள் துவாவிற்கு அனைவரின் சார்பாக நன்றி !!
நேரம் கிடைக்கும் பொழுது ஓரங்க நாடகம் (காட்சிப் பிழையா அல்லது அவரிடம் காட்டியது பிழையா என்பதை அடுத்த தொடரில்) பார்ட் 2 இன்ஷா அல்லாஹ் தொடரும்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு காலத்துலெ நாட்டு மருந்து கடைக்கி பத்து ரூவா எடுத்துக்கிட்டு போயி இந்தாங்கெ பல மருந்து தாங்கண்டு கேட்டா பட்டையிலெ போட்டு வச்செ மருந்துகளெ தருவாங்கெ. அதெ வாங்கிகிட்டு ஊட்டுக்கு வந்து பெரியம்மாட்டெ கொடுத்தா அதை சுத்தம் செஞ்சி அம்மியிலெ அரைச்சி பொறவு அடுப்புலெ வேகவச்சி குடிநி போட்டு குடி நீ என்று தருவார்கள். அதைக்குடிக்கும் பொழுதே நாக்கெல்லாம் விர்ரென்று இஞ்சி மரப்பா சாப்புட்டெ மாதிரி இருக்கும். நாளுச்சென்ட சளியெல்லாம் கண்மாசியாக்காணாமல் போயிடும். ஆனால் இன்றோ மருந்து வாங்க கிரெடிட் கார்ட்டுடன் வீட்டில் இன்னும் விற்காமல் (கைவசம்) இருக்கும் நிலப்பத்திரத்தையும் கூடுதல் செலவுக்கு எடுத்துக்கிட்டு போனால் தேவலாம்/நல்லது என்ற சூழ்நிலையில் தான் இன்றைய மருத்துவமும் அத‌ன் செல‌வ‌ழிவுக‌ளும் இருக்கின்ற‌ன‌ என்று சொல்ல‌ வர்ரேன்......வ‌ர‌ட்டா....பொற‌வு பார்ப்போம்....



வ‌ஸ்ஸ‌லாம்.

Unknown said...

" காலப்போக்கில் திரையரங்குகளில் வைக்கப்படுவது போல் இன்று ஹவுஸ் ஃபுல் என்று போர்ட் எழுதி மருத்துவமனைகளிலும், மருந்துக்கடைகளிலும் மாட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை."

realistic words.....great naina

Unknown said...

நைனா உனக்கு நினைவில் உள்ளதா.....நாம் சிறுவயதில் தேர்தல் நேரத்தில் மன்றம் அமைத்து பிரசாரம் செய்தது ....மேலும், அபிதலி (உன் மச்சான் )...நமக்கு வேலகட்டிமரதடிகீழ(உன்ன மாதிரி எழுத try . ஹி ஹி ) நின்று சொல்லி தந்த வாசஹம் ..... அஞ்சிகாசு வருக்கி ....எம்ஜியாரு பொறுக்கி....
அந்த வசந்த காலங்களை பற்றி எழுது .....
..

Yasir said...

நன்கு சிந்தித்து பொது நல நோக்கோடு எழுதப்பட்ட ஆக்கம்....வாழ்த்துக்கள் சகோ.நெய்னா முகம்மது....ஷார்ஜா மின் தடைகளால் அவதிப்பட்டு கொண்டு இருப்பாதால் அதிகம் எழுத முடிய வில்லை

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாங்க அனைத்து சகோதரகளே. உங்கள் அனைவரின் வருகைக்கு மிக்க நன்றி.

சகோதரர் யாசிர், அடிக்கடி ஏற்படும் மின் தடையால் குடும்பதுடன் சார்ஜாவில் இருப்பவர்களுக்கு இந்த கோடையில் ரொம்ப கஷ்டமா இருக்கும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Assalaamu Alaikum. Thanks for all of my dear brothers here to appreciate and encourage my writings. Insha-allah, we will try our level best through our writings. We are facing lot of problems & unlawful things in our daily life. We have to bring them through our writings in order to see and think our all of people living around the world. All praises and credits go to the almighty Allah. Let's try something new articles soon.

Wassalaam.

M.S.M. Naina Mohamed.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு