Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தக்வாப் பள்ளிக்குப் புதிய நிர்வாகம்! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | March 31, 2013 | , , ,


நான் இந்நாட்டின் பிரதமரானால்...’ என்ற தலைப்பைக் கொடுத்துப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களைக் கட்டுரை எழுதச் செய்வதுண்டு.  அது போன்று அன்று, இக்கட்டுரையின் பின்னணி.

நமதூர் ‘தக்வாப் பள்ளி’க்குப் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாகத் தமிழ்நாடு அரசு வக்பு வாரியம் ‘முயற்சி’ செய்துவந்தது.  அதற்காக விண்ணப்பம் செய்தவர்களுள் 29 பேரை வக்பு வாரியம் தெரிவு செய்து, (அப்பட்டியலில் இருந்து ஏழு பேரை மட்டும் நிர்வாகிகளாக அறிவிப்பதற்காக) அப்பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டிருந்தது.  

“நீங்களும் விண்ணப்பம் செய்யவேண்டும்” என்று சிலர் வற்புறுத்தியதால் நானும் விண்ணப்பித்திருந்தேன்.  அதனால் அந்த 29 பேரில் நானும் ஒருவன்.  கடந்த 06 / 03 / 2013 அன்று எங்கள் அனைவரையும் நேர்முக விசாரணை க்காகச் சென்னைக்கு அழைத்திருந்தார்கள்; சென்றோம்.  தனித்தனியாக நேர்முக விசாரணை நடைபெற்றது.  யார் யாரிடம் என்ன கேட்டார்கள் என்பது எனக்குத் தெரியாது.  அதனால் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளை மட்டும் நான் கூறமுடியும்.  என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளைப் பொருத்தவரை, இதைக் கேட்கவா இவ்வளவு தூரத்திற்கு வரச் செய்தார்கள் என்று எண்ணத் தோன்றியது.  கூடியிருந்த 25 அல்லது 30 அரசு ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களுள் 4 பேர் மட்டும் என்னிடம் நான்கு கேள்விகள் கேட்டார்கள். 

கேள்வி ஒன்று :  நீங்கள் அதிராம்பட்டினவாசியா?

கேள்வி இரண்டு :  உங்கள் பெயர் என்ன?

கேள்வி மூன்று :  நீங்கள் ஏன் விண்ணப்பம் செய்துள்ளீர்கள்?
(இதற்கு நானளித்த பதில்: “வக்புச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்;  துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடாது என்பதால்.”)

கேள்வி நான்கு :  நீங்கள் எப்போது உம்ரா செய்து திரும்பி வந்தீர்கள்?

(அதற்கு முந்திய உள்ளூர் விசாரணையில் நான் கலந்துகொள்ள முடியாததால், ‘உம்ரா’ பயணம் செல்வது பற்றி அவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்திருந்தேன்.  அதனால் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார்கள் போல் தெரிகிறது.)

நேர்முக விசாரணைக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு, யாரோ என் காதில், “ஆளும் கட்சிக்குத்தான் சான்ஸ்” என்று அப்போது கிசுகிசுத்தது, இப்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் பட்டியல் மூலம் ‘உண்மைதான்’ என்று நினைக்க வைக்கிறது. சரி, யார் வந்தால் என்ன?  நாம் தேர்ந்தெடுக்கப்பட்டு, செய்ய நினைத்திருந்த சீர்திருத்தங்களை, அவர்களும் செய்யட்டும் என்று அவர்களின் காதிலும் கவனத்திலும் போட்டுவைக்கலாமே என்ற எண்ணத்தில் கீழ்க்காணும் செய்திகளைப் பட்டியல் போடுகின்றேன்:
  • தக்வாப் பள்ளியானது, ‘துளுக்கா பள்ளி’ என்று அழைக்கப்பட்டுவந்த காலத்தில், அப்பள்ளிக்குரிய சொத்துக்களாக, கடைத்தெரு முழுதும் சுட்டிக்காட்டப்பட்டது!  ஆனால், அன்றைக்கு அதிரையை ஆட்சி செலுத்திவந்த குறிப்பிட்ட ஒரு குடும்பம், தன் இஷ்ட்டப்படி, தன் சொத்துகளாகக் கருதி, கடை வைத்திருப்போருக்கு விற்றதும் விட்டுக் கொடுத்ததும் ஏராளம்!  அவற்றில் வியாபாரிகள் கடைகளும் கட்டிடங்களும் கட்டிக்கொண்டு இன்றும் சுகித்து வருவது கண்கூடு.  தரை வாடகையாவது கொடுக்கிறார்களா என்பது சந்தேகம்.
  • கடைத்தெரு வெளிப்புறத்தில் இத்தகைய கொள்ளை நடப்பதை அறிந்தோ என்னவோ, மார்க்கெட்டின் உள்ளே மீன், காய்கறி, இறைச்சிக் கடைகள் வைத்திருப்போர், பள்ளியின் சார்பில் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் வசூலுக்குப் போகும் பள்ளி ஊழியரை ஏலனப்படுத்தி விரட்டிவிடும் சந்தர்ப்பங்களும் அடிக்கடி நடப்பது வழக்கமாம்.
  • இது போன்ற ஊழல்களைப் புதிய நிர்வாகம் களைந்து, இறையில்லத்தைத் திறம்பட நடத்திச் செல்லவேண்டும்.  அதற்கான பரிந்துரைகளாகக் கீழ்க்காணும் திட்டங்களைக் கூறி வைக்கிறோம்:

1. தற்போது புதிய கட்டிடங்களாக இருப்பவற்றைப் பட்டியல் போட்டு, அவ்விடங்களில் வியாபாரம் செய்துவருபவர்களுக்கு ‘நோட்டீஸ்’ கொடுத்து, உடனடியாக, ஒரு தொகையை தரை வாடகையாக வசூல் செய்யவேண்டும்.

2. மோசமான நிலையில் உள்ள கடைகளையும் கட்டிடங்களையும் இடித்துவிட்டு, பள்ளிவாசல் செலவில் புதிதாகக் கட்டி வாடகைக்கு விடவேண்டும்.

3. மார்க்கெட்டின் உள்புறம் முழுவதும் காலி செய்து, தற்காலிக இடத்தில் மார்க்கெட்டை அமைத்துக்கொடுத்துவிட்டு, நவீன வசதிகளுடன் தனித்தனிக் கடைகளைக் கட்டிக் கொடுத்து வாடகை வசூல் செய்யவேண்டும்.

4. மேற்காணும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னால், காவல்துறை மற்றும் வக்பு போர்டு ஆகிய அரசுத் துறைகளின் உதவியைக் கேட்டுப் பெறவேண்டும்.

இவையெல்லாம், நாம் நிர்வாகப் பொறுப்புக்கு வந்தால் செய்ய நினைத்தவை.  புதிய நிர்வாகம் இது போன்ற திட்டங்களைச் சவாலாக ஏற்றெடுத்து, தனது ‘சேவை மனப்பான்மை’யை நிரூபிக்குமா?

அதிரை அஹ்மது

24 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நாட்டை ஆள குடிமகன் தேவை, மாநிலத்தை ஆள அம்மாநிலத்தவராக இருப்பது நல்லது, அதிரையை ஆள அதிரைநகர்வாசியாக இருப்பதே நலம், வார்டை முன்னேற்றம் பெற அந்த வார்டை சார்ந்தவர் மெம்பராவது நல்லது. அது போல பள்ளிவாசலை நிர்வகிக்க அப்பள்ளியில் 5 வேளை அல்லது பெரும்பாலும் தொழும் முஹல்லா வாசியாக இருப்பது நல்லது. ஆனால் இங்கே புதிய ட்ரஸ்டிகள் அப்படி தெரிய வில்லையே!

Aboobakkar, Can. said...

தக்வா என்ற பெயர் முழுமையாக பாது காக்கபட வேண்டும்.........ஆமின்................அது நிர்வாகிகளுக்கும் பொருந்தும்............

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா.

இங்கே கருத்திட்டால் நீ முஹல்லாவாசியல்ல என்று சிலர் எண்ண/சொல்லக் கூடும்.

மரியாதைக்குரிய அஹமது காக்கா அவர்கள் போன்ற ஒரு நாடறிந்த நல்லறிஞர்களின் வழிகாட்டுதல்களில் ஊரில் பொதுப் பணிகள் நடைபெறுமானால் அது சமுதாயத்துக்கு நன்மையே பயக்கும். நீங்கள் பட்டதாரி என்பதோ - மார்க்கம் அறிந்தவர் என்பதோ - பல நூல்களை எழுதியவர் என்பதோ - முக்கியமாக அனுபவசாலி என்பதோ - சுத்தமான கரங்களுக்கு சொந்தக்காரர் என்பதோ - ஒரு கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து சமுதாயப் பணியை தொடர்ந்து செய்து வருகிறீர்கள் என்பதோ - தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நியாயமாக நீங்கள் நினைத்து இருக்கலாம். எதற்கும் இன்டர்வியூ வுக்குப் போகும் முன்பு இன்று பலரின் கைகளில் அல்லது வெளியே தெரியும் அளவுக்கு உஜாலா நீலம் போட்ட வெள்ளை மார்டின் சட்டை போட்டு பாக்கெட்டுகளில் ஒரு "முத்திரை மோதிரத்தை" வைத்துக் கொள்ளாமல் போனது உங்கள் தவறுதான் காக்கா என்று பணிவுடன் தெரிவிக்கிறேன்.

தேர்வாகிய நண்பர்களுக்கு எப்படியானாலும் வாழ்த்துச்சொல்வோம். அவர்கள் நற்பணியாற்ற து ஆச் செய்வோம். கோரினால் உங்களின் அனுபவ ஆலோசனைகளை வழங்கி ஒத்துழைக்கலாம்.


Abdul Razik said...

தகவா பள்ளியை பற்றி எழுதுவதாக இருந்தால் நிறைய எழுதலாம். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்ககார பள்ளிகளில் தக்வா பள்ளியும் ஒன்று என்று சொல்கிறார்கள். உண்மையான நிர்வாகமும் அந்த பள்ளிக்கு வக்பு செய்யப்பட்ட இடத்தில் கடைகள் வைத்து இருக்கும் அனைத்து வியாபரிகளும் அல்லாஹுவுக்கு அஞ்சி சரியான வாடகை கொடுத்து வந்தால், இந்த பள்ளியின் வருமானத்தில் ஊரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உதவி செய்வதோடு, ஊரில் உள்ள இஸ்லாமிய ஏழை குடும்பங்களுக்கும் உதவி செய்யலாம். மேற்ச்சொன்ன கருத்துக்களின் அடிப்படையில் 12 வருடங்களுக்கு முன்பு சில இளஞர்களால் முயற்ச்சி செய்து துணைக்கமிட்டி ஒன்று ஏற்படுத்தி பள்ளிக்காக சந்தா வசூல் செய்து உள் பள்ளியை சுற்றி மேற்கூறை (Asbestos) இட்டு, கொசுக்களை அகற்ற நடவடிக்கைகள் எடுத்து,சுற்றுபுறங்களை சுத்தம் செய்து அல்லாஹ்வுக்காக மட்டுமே அனைத்து பணிகளும் செய்தொம், அன்று செய்த பணிகள் முறையாக செய்த காரணத்தால் அவைகள் இன்றும் பள்ளிக்கு உதவியாக இருந்து வருகிறந்து. முஹல்லாவில் உள்ள அனைத்து மக்களின் விருப்பமும், ஜனாப் அஹமது காக்கா சொன்னது போல, ஆண்டாண்டு காலமாக கடைத்தெருவில் உள்ள வியாபரிகளால் ஏமாற்றப்பட்டு வரும் முறையற்ற வாடகை முறைகளை சரி செய்து மேர்குறிப்பிட்ட பணிகளயும் சேவைகளையும் அல்லாஹ்வுக்கஹ செய்யும்படி புதிய நிர்வாகிகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Abdul Razik
Dubai

sabeer.abushahruk said...

விண்ணப்பித்ததில் சமூகப் பணியாற்றும் அக்கறை, நேர்முகத் தேர்வின் சம்பிரதாய, மிகச் சாதாரணக் கேள்விகளுக்கும் பொறுமையாய் பதிலளித்ததில் முனைப்பு, தெரிவு செய்யப்படாததில் பெருந்தன்மையான சகிப்பு, தெரிந்தெடுக்கப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், புதிய நிர்வாகிகளிடம் சமூகத்தின் எதிபார்ப்புகளை விண்ணப்பிக்கும் பொறுப்புணர்ச்சி...

அஹ்மது காக்கா அஹ்மது காக்காதான்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சாச்சாவின் கோரிக்கைகள் முழுவதும் நியாயமானது நிறைவேற்றப்படுமா?

Yasir said...

தேர்ந்தெடுக்கப் படாவிட்டால் கச்சல் கட்டிக்கொண்டு தீங்கு செய்ய நினைக்கும் பல பேர் வாழும் இக்காலத்தில் அஹ்மது காக்கா அவர்களின் ,அறிவுரையும்,அணுகுமுறையும் அவர்களின் மெச்சத்தக்க,மேன்மையான முதிர்ச்சியைக் காட்டுகின்றது.....அல்லாஹ் இதற்க்கான கூலியை உங்களுக்கு தருவான்....புதிய நிர்வாகத்திற்க்கு வாழ்த்துக்கள்....உங்கள் கீரிடங்கள் ஜொலிக்க இந்த மாதிரியான பட்டைத் தீட்டப்பட்ட வைரங்களையும் அருகில் வைத்துகொண்டும் புதிய நடை போடுங்கள்

ZAKIR HUSSAIN said...

சகோதரர் அதிரை அஹ்மது அவர்கள் கமிட்டியில் இருந்தால் கமிட்டிக்குத்தான் சிறப்பு. தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் கமிட்டிக்குத்தான் நஷ்டம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

புதிய நிர்வாகம் மேற்சுட்டிக் காட்டியவைகளை எவ்வித பாகுபாடின்றி நல்லெண்ணத்தில் சொன்னதை நடைமுறைப் படுத்தினால் தக்வா பள்ளி நிர்வாகம் நிமிர்ந்து நிற்கும்....

கடந்த காலங்களில் நடந்த நாட்டாமை போக்கும், தடியெடுத்தவன் (மைக்கைப் பிடித்தவன்) எல்லாம் நிர்வாகத்தில் தலையிடாமல் செயல்பட முயற்சிக்கனும்.

عبد الرحيم بن جميل said...

அஸ்ஸலாமு அலைக்கும் அஹமது பெரியவாப்பா!

புதிய நிர்வாகிகள் அல்லாஹ்வுக்கு பயந்து சரியாக நடப்பார்களா என்பது அல்லாஹ்வுக்குத் தான் தெரியும்,அல்லாஹ் தான் நாடியோர்க்கு ஆட்சி அதிகாரத்தை கொடுக்கிறான்! சில வருத்தமும் இருக்கிறது,நாம் அறிந்த வகையில் நல்ல நிர்வாகத் திறன் உடைய உங்களை தெரிவு செய்யாதது எங்களுக்கு வருத்தம்தான்!

Abu Easa said...

புதிய நிர்வாகிகளை அறிந்தோர் பட்டியலிடுங்களேன்

Abu Easa said...

நிர்வாகிகளாக தேர்தெடுக்கப்பட்டிருப்பவர்கள் தக்வா பள்ளி முகல்லாவோடு தொடர்பில்லதவர்கள் போல் தெறிகிறது.

யாராக இருந்தாலும் சரி, நாளை மறுமையில் நிச்சயமாக பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவோம் எனபதை உணர்ந்து அல்லாஹ்வுக்கு அஞ்சி அவன் பொருந்திக்கொள்கிற காரியங்களில் ஈடுபட்டு ஈருலக வெற்றியையும் பெற்றுக்கொள்ள அல்லாஹ அருளட்டும்!

மறுமைக்கான சேமிப்புக்கு அருமையான களம். உணர்ந்து செயல்பட்டால் அனைவருக்கும் நலம்.

abufahadhnaan said...

1) ஜனாப் எம்.பி முஹம்மது அபூபக்கர்,

2) ஹாஜி ஜனாப் மு. அப்துல் மஜீது

3) ஜனாப் தமீமுல் அன்சாரி

4) ஜனாப். அல்ஹாஜ் ஏ. அப்துல் சுக்கூர்

5) ஜனாப் ஜே. ஹாஜா பகுருதீன்

6) ஜனாப் கே.எஸ்.அப்துல் சுக்கூர்

7) ஜனாப்.எஸ்.முஹம்மது ஜெமீல்

( முஹம்மது சாஹிப் லெப்பை குடும்ப உறுப்பினர்)

Abu Easa said...

Jazakallahu Khairan Brother abufahadhnaan

Adirai pasanga😎 said...

பொறுப்பாளர்கள் குறித்து அல்லாஹ் மறுமையில் கேள்வி கேட்பான். அவர்கள் எது விசயமாக இவ்வுலகத்தில் பொறுப்புக் கொடுக்கப்பட்டார்களோ அதனைப்பற்றி. அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.

அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாகவும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

மறுமைக்கான சேமிப்புக்கு அருமையான களம். உணர்ந்து செயல்பட்டால் அனைவருக்கும் நலம்.

Saleem said...

அஹமது காக்கா சொல்வது போல் முறைபடுத்தி மார்க்கட்டில் உள்ள கடைகளில் முறையாக வசூல் செய்து அதன் மேல் வருமானத்தை வருமானம் குறைவாக வரும் பள்ளிவாசல்களுக்கு கூட உதவலாமே!!

KALAM SHAICK ABDUL KADER said...

ஆசான் அவர்களின் பொறுமையையும், கண்ணியத்தையும் எண்ணி நெகிழ்ச்சி அடைகிறேன். அரசியல் கலந்து விட்டப் பின்னர்த் தூய்மையான நிர்வாகம் என்பது எதிர்பார்க்க முடியாது, ஆனால், பள்ளியின் பெயரில் “தக்வா” இருப்பதால் எந்நேரமும் நிர்வாகிகளின் எண்ணத்திலும் தக்வா, தக்வா என்ற இறையச்சம் இருந்தால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா விடயங்களையும் ஆசான் அவர்கள் நிர்வாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் நடைமுறைப்படுத்துவார்கள்; தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் ஊரின் நலன் நாடி உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் எழுதியிருப்பதே அவர்களின் பெருந்தன்மைக்குச் சாலச் சிறந்த சான்றாகும்.

Unknown said...

புதிய நிர்வாகம் பள்ளிவாசல் சொத்தை மீட்டெடுக்குமா? அல்லது அரபி பாட்டுக்கு (மெளலிது)முக்கியத்துவம் கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

புதிய நிர்வாகிகளுக்கு நிர்வாக பொறுப்புகளையும் ஒரு சில குறைபாடுகளையும் சுட்டி காட்டி அதை செம்மைப்படுத்த பட்டியலிட்டு நம் அனைவரின் கவனத்தை ஈர்த்த இக்கோரிக்கைகள் முழுவதும் நியாயமானது நிறைவேற்றப்படுமா?

சும்மா பெயருக்காக பதவியல்ல அதை திறம்பட செய்து காட்டி நற்பெயரை பெற்று நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் நின்று பதில் சொல்லக்கூடிய நல்லோர்களாக நம்மையும், புதிய நிர்வாகிகளையும் இருக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

ஜசக்கல்லாஹ் ஹைர்

نتائج الاعداية بسوريا said...

இன்ஷா அல்லாஹ் புதிய நிர்வாகிகள் புத்துணர்வோடும் , ஆக்கபூர்வமாகவும் செயல்பட ஆர்வத்தோடு எதிர்ப்பார்க்கின்றோம். கடந்துபோன அனைத்து விஷயங்களையும் நடந்ததுவரை அல்லாஹ்வின் தக்தீரில் உள்ளது என்று நினைத்து இனி நடப்பவை அனைத்தும் நல்லவையாகவும், இருக்கட்டும். என்று எண்ணி பொறுப்பை துவங்குங்கள். நிர்வாகப் பொறுப்புக்கு வந்தபிறகு அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் அஞ்சமாட்டோம் என்று நெஞ்சுரிதியோடு பள்ளியின் பணிகளை துவங்குங்கள் .

"அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே" என்று
துணிவோடு செயல்படுவதோடு , அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் எந்த அங்கீகாரமும் இல்லாத நூதனமான மார்க்கம் என்ற பெயரில் நடக்கும் பிது
அத்துகளை துணிவோடு பள்ளியை விட்டு அகற்ற முடிவெடுங்கள். அது எத்தனை காலங்கள் கடந்து நடந்து வந்தாலும் சரியே.

நிர்வாகப்பொறுப்பு என்பது அதுவும் அல்லாஹ்வின் இல்லத்திற்கு வந்த பிறகு மேற்ச்சொன்ன அனைத்தும் நடந்தாக வேண்டியது பொறுப்புக்கு வந்தபிறகு கடமையாகும்.

ஆதலால் உங்கள் அனைவரின் பணி சிறக்க, அதில் புத்துணர்ச்சி பிறக்க, இவை அனைத்தும் நடைபெற அல்லாஹ் உங்களுக்கு துணிவைத்தர துஆ செய்தவனாக
தட்டச்சை என் கருத்தாக பதிவு செய்கிறேன்.

ஆமீன், யாரப்பல் ஆலமீன்.

தக்வா பள்ளி நலன் நாடும்,
முஹல்லாவாசி

அப்துல் காதர் (மரியம்மா),
ரியாத், சவுதி அரேபியா.

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

தக்வா பள்ளியின் பொறுப்பு என்னமோ அமெரிக்கா வொய்ட் ஹவுசின் பொறுப்பாக நினைக்கின்றார்கள் போலும் அங்கே யாருடைய ஆட்சி மாறினாலும் கொள்கை மாறாது அது போன்றுதான் இருக்கின்றது தக்வா பள்ளியின் நிலமையும்
அறிவு ஜீவியாக தம்மை காட்டும் யார் பொறுப்பேற்றாலும் கொண்ட கொள்கையில் (பித் அத் கொள்கை) உறுதியாக இருக்கின்றார்கள் தக்வா பள்ளியின் பதிவியேற்பே ரொம்ப விமர்சையாக பித் அத்தான மொவ்லீதுடன் அரங்கேறி இருக்கின்றது.
இது அறியாதன்மையா, இஸ்லாத்தின் அலட்சியபோக்கா? அல்லது வீராப்பா?
மிகவும் மிக மிகவும் வருந்ததக்க செயல்
என்று திருந்துமோ இந்த ஜென்மங்கள்
என்று ஓரிரைக்கொள்கையை சார்ந்தவர்களிடம் ஒட்டு மொத்த நிர்வாகமும் வருகிறதோ
அன்றுதான் உண்மையான் தக்வாவுடன் விளங்கும் தக்வா பள்ளிவாசல்
அதிரைமன்சூர்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு