Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 80 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 01, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகியஅல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

துஆவின் சட்டங்கள்:

''ஓர் அடியான், தன் இறைவனிடம் மிக நெருக்கமாக இருப்பது அவன் ஸஜ்தா செய்த நிலையில் உள்ள போதுதான். எனவே  (அது சமயத்தில்) துஆவை அதிகமாக கேளுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1498)

''என் இறைவனிடம் துஆ செய்தேன். எனக்கு அவன் ஏற்கவில்லை'' என்று அவசரப்படாதவரை உங்களில் ஒருவரின் பிரார்த்தனை ஏற்கப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

முஸ்லிமின் அறிவிப்பில் கீழ்கண்டவாறு உள்ளது:

பாவம் செய்யவோ, அல்லது உறவை முறிக்கவோ வேண்டி துஆ செய்யாத வரையிலும், அவசரப்படாத வரையிலும் ஒரு அடியானின் துஆ ஏற்கப்பட்டே தீரும் என்று நபி(ஸல்) கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! அவசரப்படுதல் என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டது. ''நான் துஆ செய்தேன். நான் துஆ செய்தேன்'' என்று அவன் கூறி, அது ஏற்கப்படவே இல்லை என்று கருதி, அவன் இதற்காக கவலை கொண்டு, துஆ செய்வதையே விட்டு விடுவதுதான் (அவசரப்படுவது)'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1499 )

''ஒப்புக் கொள்ளப்படத்தக்க துஆ எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''இரவின் நடுப்பகுதியிலும் கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் (உள்ள நேரத்தில் தான்)'' என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா  (ரலி) அவர்கள் (திர்மிதீ)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1500 )

''அல்லாஹ்விடம் துஆ செய்யும் பூமியில் வசிக்கின்ற எந்த முஸ்லிமும், குற்றமிழைப்பதை, அல்லது உறவை பிரிந்திருப்பதை கேட்காமல், வேறு எந்த துஆ செய்தாலும் அவருக்கு அதை அல்லாஹ் வழங்காமலோ, அல்லது அவரை விட்டும் அதற்கு பகரமாக தீமையை நீக்காமலோ இருப்பதில்லை என, நபி(ஸல்) கூறினார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ''இனி நாங்கள் அதிகமாக (துஆ) செய்வோம்'' என்று கூறினார். ''அல்லாஹ்வும் (கேட்பதை வழங்குவதில்) மிக அதிகமானவன்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.   (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாமித் (ரலி)  அவர்கள் (திர்மிதீ)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1501 )

புறம் பேசுதல் கூடாது. நாவைப் பேணுதல்!

''அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், நல்லதை பேசட்டும்! அல்லது மவுனமாக இருக்கட்டும்! என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1511 )

''நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! முஸ்லிம்களில் மிகச் சிறந்தவர் யார்?'' என்று நான் கேட்டேன். ''முஸ்லிம்கள், எவரது நாவு, எவரது கை (ஆகியவற்றின் தீமை)களிலிருந்து பாதுகாப்பு பெற்றுள்ளார்களோ அவர்தான்' என்று நபி (ஸல்) பதில் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1512 )

''தன் இரண்டு தாடைகளுக்கிடையேயும், தன் இரு கால்களுக்கிடையேயும் உள்ள, (நாவு, மறைவுறுப்பு ஆகிய)வற்றை (பாவம் செய்வதிலிருந்து) எவர் பொறுப்பேற்கிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பு ஏற்கிறேன்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஹ்து (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1513 )

''ஓர் அடியான் (நல்லதா? கெட்டதா?) என சிந்திக்காமல் பேசுகிறான். அதன் மூலம் அவன் கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையே உள்ள மிக தூரமான அளவுக்கு நரகில் வீழ்வான்'' என நபி(ஸல்) கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1514 )

''ஓர் அடியான் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத்தரும் வார்த்தையை அதன் முக்கியத்துவம் பற்றி தெரியாமல் பேசுகிறான். இதற்காக அல்லாஹ் அவனின் தகுதிகளை உயர்த்துவான். ஒரு அடியான் அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத் தரும் வார்த்தையை – அதன் முக்கியத்துவம் பற்றி உணராமலேயே பேசுகிறான். இதற்காக அவன் நரகில் வீழ்கிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1515 )

''நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே!  நான் உறுதியாக செயல்படுத்தும் ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்'' என்றேன். ''என் இறைவன் அல்லாஹ் தான் என்று கூறுவீராக! (அதில்) உறுதியாக இருப்பீராக'' என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! என்னிடம் நீங்கள் அதிகம் பயப்படுவது எது?'' என்று கேட்டேன். உடனே அவர்கள் தன் நாவைப் பிடித்து, ''இது தான்'' என்கிறார்கள். (அறிவிப்பவர்: சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்  (திர்மிதீ)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1517 )

''அல்லாஹ்வை நினைவு கூரும் பேச்சைத் தவிர்த்து (மற்ற பேச்சை) அதிகம் பேசாதீர்கள். அல்லாஹ்வை நினைவு கூரும் பேச்சைத் தவிர்த்து (மற்றப் பேச்சை) அதிகம் பேசுவது, இதயத்தை இறுக வைத்து விடும். அல்லாஹ்வை விட்டு மிக தூரமாக விலகி நிற்பவர், இறுகிப் போன இதயத்தவர்தான்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1518)

''புறம் என்றால் என்ன? என்பதை அறிவீர்களா? என நபி(ஸல்) கேட்டார்கள். ''அல்லாஹ்வும், அவனது தூதருமே மிக அறிந்தவர்கள்'' என நபித்தோழர்கள் கூறினர். ''உம் சகோதரனை அவர் வெறுக்கும் விஷயத்தை நீர் பேசுவதாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். ''நான் கூறியது என் சகோதரரிடம் இருந்தால் என்ன கருதகிறீர்கள்?'' என்று கேட்கப்பட்டது. ''நீர் பேசியது அவரிடம் இருந்தால், அவரைப் புறம் பேசியவர். நீர் பேசியது அவரிடம் இல்லையென்றால், அவரைப் பற்றி நீ இட்டுக் கட்டியவராவீர்!' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1523)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு
வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்..
அலாவுதீன் S.

1 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்...

அவ்வப்போது வாரம் தோறும் சிறிய தொகுப்பாக வழங்கி வரும் அலாவுதீன் காக்கா அவர்களின் அனைத்து அமல்கள்களை அல்லாஹ் அங்கீகரிப்பானாக !

வெள்ளியன்று வாசித்ததை அந்த வாரம் முழுவதும் அசைபோட்டு மனதில் இறுத்திக் கொள்ள நல்லதொரு வாய்ப்பை இந்த தொடர் எனக்கு தனிப்பட்ட முறையில் வழங்கியிருக்கிறது...

யாம் பெற்ற பலன் இவ்வகையமும் பெற கடவுக ! என்ற அவா மேலிடுகிறது.

இது புகழுரை அல்ல, புத்துயிரூட்டும் தகவல்களை வாரத்தில் ஒரு தினமேனும் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்ற உந்துதலை வழங்கு வரும் தொகுப்புத் தொடர்...

மீண்டும் ஜஸாக்கல்லாஹ் ஹைரன்...

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (அல்ஹம்துலில்லாஹ்)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு