Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தலைவரின் தகுதிகள் ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | December 10, 2014 | , ,

:::: தொடர் - 1 ::::
நுழைவாயில்…

தலைமைத்துவம் எனும்போது, பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றிப் பிரெஞ்சுப் பேரறிஞர் லாமார்ட்டின் அவர்களின் கூற்று என் நினைவில் நிழலாடுகின்றது.

“குறைந்த வாய்ப்புகளைக் கொண்டு, உயர்வான குறிக்கோளை அடைந்து சாதனை படைப்பதுவே மேதைத் தன்மையின் இலக்கணம் என்று உலக வரலாற்றில் எடுத்துக்காட்டு வைக்க வேண்டுமாயின், முஹம்மது நபியின் வாழ்வைத் தவிர வேறு எவருடைய வாழ்வைக் காட்ட முடியும்?”

அது 2008 ஆம் ஆண்டின் ஹஜ்ஜுக் கடமையை நாங்கள் முடித்த மூன்றாம் நாள். மக்காவில் நான் அப்போதைய அனைத்துலக ஹாஜிகள் கருத்தாய்வு மாநாட்டில் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டிருந்தேன்.

அப்பொறுப்பை நிறைவேற்றிவிட்டு, நானும் என் மனைவியும் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கிப் பயணமானோம். அவ்வூரைப் பற்றிச் சிந்தித்தபோது, புண்ணிய நினைவுகள் பல எங்கள் மனங்களில் பூத்துக் குலுங்கின. ‘யத்ரிப்’ எனும் பழம் பெயரில் இருந்த அவ்வூர், நபியவர்கள் நிலையாக வாழ முடிவெடுத்த பின்னர், ‘மதீனத்துன் நபி’ (நபியின் பட்டணம்) என்றும், ‘மதீனத்துல் முனவ்வரா (ஒளிர்ப் பட்டணம்) என்றும் வழங்கலாயிற்று.

இதில் கால் பதித்த உடனேயே, இதை விட்டு அகல மனம் வராத அற்புதப் பட்டணம் இது! இப்போது இந்த நிலை என்றால், வள்ளல் நபியவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும்! சிந்தித்து பார்த்த என் இதயம் சிலிர்த்தது! இன்றும்கூட, அன்னார் மீளா துயிலில் ஆழ்ந்துள்ள வேளையிலும், அக்கால அமைதியின் நிழல் படிந்து, மக்களின் மனங்களில் அன்பும் அமைதியும் ஆட்கொண்டிருப்பதை என் போன்றவர்களால் உணர முடிந்தது.

மதீனாவுக்கு வருவதென்றால், முஸ்லிம்களுக்குத் தம் தாயகம் திரும்புதல் போன்றது என்று கூறுவது மிகையாகாது. ஒருவருக்குத் தன் பிறந்தகத்தைவிடத் தாய்நாடு என்பது சிறந்ததல்லவா? அதில்தான் இறந்து புதைக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார் அல்லவா? முஸ்லிம் ஒருவருக்கு மதீனா என்பது சவுதி அரேபியாவின் ஓரூர் அன்று; மாறாக, அது அவருக்குச் சொந்தமான ஊர் போன்றது! அது இஸ்லாம்! அவரின் இதயம்! காலமெல்லாம் ஏங்கி எதிர்பார்த்துக் கொண்டிருந்த இனிய ஊர்! இறுதி இறைத் தூதரின் இருப்பிடம்!

இந்த ஊரைத் தாயகமாகக் கருதி, இங்கு வாழ்பவர்கள் மனங்களில் பெருமிதம்! உலகின் பிற இடங்களில் வாழ்ந்து பல மடங்கு சம்பாதிப்பதைவிட, குறைந்த வருமானத்தில் நிறைவான மனத்துடன் இங்கு வாழ்பவர்கள் பல்லாயிரக் கணக்கில் இருக்கின்றனர்! காரணம், அன்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஏற்றி வைத்த ஒளிவிளக்கு, இன்றும் வெளிச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறது. அகிலம் அனைத்தும் அந்த வெளிச்சத்தால் இலங்கிக் கொண்டிருக்கிறது. அந்த அணையா ஒளிவிளக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, வழிவழியாக வழிகாட்டிக் கொண்டு வருகிறது. யாரெல்லாம் தம் இதயங்களைத் திறந்து, இறைத்தூதரின் வாழ்வியலைக் காண விழைகின்றார்களோ, அவர்களுக்கெல்லாம் இந்த புனிதப்பதி வழி காட்டக் காத்திருக்கின்றது!

அந்த வளமான வாழ்வியலை, வழி காட்டும் ஐந்து பிரிவுகளில் உள்ளடக்கம் செய்யலம். அவற்றின் அடியொட்டி வாழ்ந்தே பல்லாயிரக் கணக்கான புனித உள்ளங்கள் பண்பட்டன. அந்த உத்தமர்களைப் போன்று வேறு எவரையும் உலக வரலாறு இதுவரை கண்டதேயில்லை. அவர்களின் முந்தைய வாழ்க்கை எப்படியிருந்தது? அற்பக் காரணங்களுக்காக ஆயிரம் சண்டையிட்டு மடிந்து மங்கிப்போயிருந்த அரபுச் சமுதாயம் அது. அப்படியிருந்த சமுதாயம், பிறகு எப்படி மாறிற்று? மாயமும் இல்லை; மந்திரமும் இல்லை; மாநபி வகுத்தளித்த மனிதம் அது.

மூலாசிரியர் : மிர்ஸா யாவர் பெய்க்

தலைவரின் தகுதிகள் ! 

முதலாவதாக, தலைமையின் தனித்துவம் என்பது யாது என விளங்க வேண்டும். நான் விளக்க இருக்கும் இதரப் பிரிவுகளுக்கு அதுவே கருப்பொருளாகும். தொடக்கத்தில் நான் குறிப்பிட்ட பிரெஞ்சு அறிஞர் அவர்களின் மேற்கோளை அடுத்துள்ள இன்னும் சில வரிகள்:

"முஹம்மது என்ற ஒருவரிடத்தில், இறைத்தூதர், தத்துவ வித்தகர், சட்டம் இயற்றுபவர், போர் வீரர், கருத்தை ஆள்பவர், அறிவார்ந்த நம்பிக்கைகளை மீட்டெடுப்பவர், பிம்பங்களற்ற மத நம்பிக்கையின் செயலாக்கம் தருபவர், உலக ஆட்சியையும் உள்ளங்களின் ஆட்சியையும் நிறுவியவர் எனும் பன்முகத் திறமைகள் இருந்தன. இதனால்தான், முழுமையான மனிதத்துவம் என்பதன் அளவீடு எனும்போது, முஹம்மதைவிட உயர்வானவர் வேறு எவர் இருப்பவர் என்று பெருமையாகக் கேட்க முடிகின்றது!" - [Historie de le Turquie, Paris 1854, Vol. 11. Pages 276&77].

அறிவார்ந்தது, நியாயமானது, தர்க்க ரீதியிலானது என்று பிறர் கணிப்பதைக் காட்டிலும் கூடுதலாகச் சாதனை புரிந்ததுதான் அப்பெருமகனாரின் வெற்றிக்கான திறவுகோலாகும். தனித்துவம் என்பதுவே அசாதாரணத்தின் அடையாளம்தான். பிறர் கேட்டு வியக்கும் அளவுக்கு அப்பெருமகனாரின் நல்லுரைகள் அமைதிருந்ததுவும் ஒரு சிறப்பம்சமாகும். அவ்வாறு வியந்த அவர்களால், அந்தத் தூதரின் அடியொட்டி நடப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை! இந்த மான்மியமானது, மனிதப் புனிதருக்குத்தான் பொருத்தமானதாகும்.

உலகில் உயிர் வாழ்க்கை என்பது மூச்சு விடுவதால் மட்டும் நிலைபெறுமா என்ன ? எவரேனும் ஓர் அரிய முன்மாதிரியாக வாழ்கின்றார் என்றால், அது சுவாசித்து உயிர் வாழ்வதைவிட மேலானதாகும். ஒருவர் அரிய, அழகிய முன்மாதிரியாக வாழ்கின்றார் என்றால், அவரின் முன்மாதிரி பிறரால் பின்பற்றத் தக்கதாகவும் இருக்க வேண்டும். வழிகாட்டி எனப்படுபவரின் நடிப்பு வாழ்க்கையால் நல்ல விளைவு ஒன்றும் ஏற்பட்டுவிடாது. தலைவர் என்பவர் தன் குறைபாடுகளின் மீது தானே காரி உமிழ்ந்து கொண்டு, தன்னைத் திருத்திக் கொள்வதில்தான் உயர்வின் உச்ச நிலைக்குச் செல்கின்றார். இதற்குத் தடையாக நிற்பது மனித மனம்தான். அதைத் தடுப்புகளால் கட்டுப்படுத்தியவர்தான் உண்மையான தலைவராக முடியும்.

உண்மையான தலைவர் என்பவர், உள்ளங்களுக்கும் உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட எல்லைகளைக் கடந்த நிலைகளை அடைவதற்காகவும் பாடுபடுவார். எப்போதும் மிகச் சரியானது எது என்பதைக் தேடிக் கொண்டே இருப்பார். பரம்பரை பரம்பரையாக உண்மைகள் என்று நம்பப்பட்டு வந்த மூட நம்பிக்கைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டார். அந்த தலைவர் என்ன விலை கொடுத்தாவது, உண்மைக்கு உடந்தையாகவே இருப்பார்.

அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஒன்றும் இயலாதவர்களுக்கும், உரிமையை இழந்தவர்களுக்கும், ஆதரவாக அவர் இருக்க வேண்டும்; அவர்களை நசுக்க நினைப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும். இவை அனைத்தும், தகைமை மிக்க தலைவரின் மீது மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் அடிப்படைக் காரணிகளாகும்.

தனிப்பட்ட முறையில், தலைவர் என்பவர் நம்பத் தகுந்தவராக இருக்க வேண்டும். மக்களும், அவரைப் பின்பற்றினால் நமக்கு நன்மை உண்டு என்று கருத வேண்டும். தலைமைத்துவம் என்பதன் இலக்கணமே, அனைத்திலும் முன்னிலை வகிப்பதுதான். எனவே, தலைமை ஏற்பது என்பது, இறைவனையன்றி எதற்கும் அஞ்சாதிருப்பதாகும். பொது மக்களின் எழுச்சி என்பது சிறிய எதிர்பார்ப்புகளுக்காக அல்லாமல், பெரிய எதிர்பார்ப்பே அவர்களைப் பொங்கியெழச் செய்யும். மேல் நோக்கிப் பார்க்கப்படுபவரே தலைமைக்குத் தகுதியானவர்; கீழாகப் பார்க்கப்படுவர் அல்லர்.

அதே வேளை, தலைவர் என்பவர் தொலை நோக்குப் பார்வையும், அதில் தெளிவும் உடையவராக இருக்க வேண்டும். பெரும்பெரும் குறிக்கோள்களை அடைவதற்கான வழி தெரியாவிட்டால், அவை பற்றிக் கனவு காண்பது வீண் வேலை. தான் கண்ட கனவின் பக்கம் தன் ஆளுகையின் கீழ் இருப்பவர்களை முறையாக வழி நடத்திச் செல்லும் திறமை படைத்தவராகத் தலைவர் இருக்க வேண்டும். பலமைல்கற்களைக் கடந்து, தான் கண்ட கனவை நனவாக்குவதில் அந்தத் தலைவர் முனைப்பாய் இருக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, தனது இலட்சியத்தை அடையும் பலமுனைச் செயல்பாடுகளை இயற்றுவதற்குத் தகுதி படைத்த செயலாளர்கள் பலரை உருவாக்குவதும் அவருடைய பணியே ஆகும். ஏனெனில், எல்லாப் பணிகளையும் தான் ஒருவரே செய்யத் தலைவரால் இயலாது. மிகத் தகுதி வாய்ந்த, தான் கண்ட கனவை நனவாக்க திறமையுள்ள செயல் வீரர்களை உருவாக்குவது தலைவருக்கான பொறுப்புகளுள் தலையாயதாகும். தன்னிகரற்ற தலைவரானவர், தன்னால் தேர்ந்தெடுக்கப்ப்பட்ட செயல் வீரர்கள் தான் வழங்கிய பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுகின்றார்களா என்பதை அவர்களுக்கு அருகில் இருந்தே கண்காணித்து வரவேண்டும்.

இறுதியாக, தான் மென்னெடுத்துச் சென்ற நற்பனிகள் தான் மறைந்த பின்னரும் வழிவழியாகத் தன் சமுதாயத்தால் அவர்களின் வாழ்க்கை நெறியாகப் பின்பற்றப்படுவதை ஆதரவு வைத்தவராகத் தலைவர் இருக்க வேண்டும்; அதற்கான உபதேசங்களைச் செய்து வரவும் வேண்டும். ஏனெனில், தலைவர் ஒருவருக்குப் பின்னால் அவருடைய போதனைகள் செயலுருப் பெறாமல் செத்து மடிந்து விடுமானால், அது அவருக்கும் அவர் உருவாக்கிய சமூகத்துக்கும் இழுக்கே ஆகும். எந்தச் சித்தாந்தமும் வெற்றிப் படிகளில் ஏறிச் செல்ல வேண்டுமாயின், அது மக்களால் செயல்படுத்துவதற்கு இலகுவாக இருக்க வேண்டும். எந்த ஒரு சித்தாந்தமும் அல்லது வாழ்க்கை நெறியும் வெற்றியடைய வேண்டுமாயின், அதன் தலைவரின் நடைமுறை முன்மாதிரியாக இருக்க வேண்டும். அது போதனையாக மட்டும் அமைந்துவிடக் கூடாது. அத்தகைய முன்மாதிரி மட்டும் அமையாவிட்டால், அவரின் சித்தாந்தம் அந்தத் தலைவரின் தலைமுறையைத் தாண்டிப் பயணப்படும் வாய்ப்பை இழந்து, மறைந்தும் போய்விடும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தகைமை மிக்க தலைமை எப்படி அமைந்தது தெரியுமா? அன்னாரின் கொடிய எதிரியும்கூட அவரைப் பற்றிய உண்மையை மறைக்க முடியாமல், அதற்குச் சான்று பகரக் கூடியவராக வரலாறு பதிந்து வைத்துள்ளது! பைசாந்தியத்தின் ரோமப் பேரரசர் ஹிராக்லியாஸ் (Heraclius the Roman Emperor of Byzantium) அண்ணலாரின் அழைப்பு மடல் வந்தவுடன், அவனது அவையில் அப்போது அங்கு வந்திருந்த அரபுத் தலைவர் அபூசுஃப்யானிடம் விசாரிக்க, அவர் அன்னாட்களில் நபியை எதிர்ப்பவராக இருந்தும், நபியின் உண்மைக்குச் சான்று பகர்ந்தது, ஓர் அரிய முன்மாதிரியன்றோ?

அசாதாரணத் தன்மை என்பது தலைவரின் தேர்ந்தெடுப்பு ஆகாது. எனினும், தலைமைக்குத் தன்னை ஆயத்தப் படுத்தும், ஒவ்வொருவருக்கும் தானாகவே அமைய வேண்டிய, தவிர்க்க முடியாத ஒன்றாகும். அச்சமற்ற நிலையில் உள்ளவரால்தான் பிறரை ஆர்வப் படுத்தி அழைத்துச் செல்ல முடியும். இவ்வகையில், வையகத்து வரலாற்றில் இதற்கு ஒரே ஊர் எடுத்துக்காட்டு, அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை மட்டும்தான் என்றால், அது மிகையாகாது. இந்த ஒப்பற்ற ஆளுமையின் காரணமாகத்தான், அன்னாரின் தோழர்களான சீடர்கள் நபிக்குக் கட்டுப் படுவதில் ஓர் உயர்ந்த முன்மாதிரியைக் காட்டிச் சென்றுள்ளார்கள். அவரை அவர்கள் நேசித்தார்கள்; அவர் அவர்களை நேசித்தார்.
-தொடரும்
அதிரை அஹ்மது [தமிழாக்கம்]
மூலாசிரியர் : மிர்ஸா யாவர் பெய்க்
அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் புத்தகத்திலிருந்து....

15 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். பெருமானாரின் தலைமைத்துவத்தகுதிகள் பற்றி ஏன் இன்னும் நாம் அதிரை நிருபரில் எழுதவில்லை என்ற ஆதங்கத்தையும் நான் என் முந்தைய ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

சகோதரர் அதிரை அஹ்மது எனது Frequencyயை சரியாக Receive செய்ததற்கு நன்றி.

ZAKIR HUSSAIN said...

பெருமானாரின் தனித்தன்மைகளில் சிறந்த ஒரு விசயம் அவர் ஆட்சி செய்த அரசில் கஜானா நிரம்பி வழிந்தது செல்வத்தால் , ஆனால் சொந்த வாழ்க்கையில் கடும் கஷ்டமும் வறுமையும்...ஆனால் இப்போதைய தலைவர்களின் வாழ்க்கையில் கஜானா காலி...சொந்த வாழ்க்கையில் 100 தலைமுறைக்கு சொத்தும் வசதியும்.

[ listened in one of the lecture by Bro P.J ]

ZAKIR HUSSAIN said...

பெருமானாரின் வாழ்க்கையில் தவறு செய்தவர்களை மன்னித்தல் என்பது லீடர்ஷிப் க்வாலிட்டியில் உயர்ந்து நின்றது.

ஆனால் பெருமானாரை தலைவராக கொண்டு வாழும் நாம் கருத்து வேறுபட்டாலே திட்டி தீர்க்கிறோம்.

உண்மையிலேயே நாம் பெருமானாரை உதாரணமாக கொண்டும் வழிகாட்டியாகவும் கொண்டு வாழ்கிறோமா?....இல்லை அப்படி வாழ்வதுபோல் நடிக்கிறோமா?

ZAKIR HUSSAIN said...

Exploration is something the best quality prophet Muhammad [Sal] had in his life. When there is no proper equipment was not in reach, he managed to travel thousands of mile to Europe using camel is something a brave man can do.

And he believed others also can do that, thats why he sends his sahabas to all over the world.

Unknown said...

பெருமானாரின் தலைமைத்துவத்தின் உச்ச பண்புகளில் ஒன்று
சக்தி இருந்தும் தவறு செய்தவர்களை மன்னிப்பது.

இப்பண்பு மனித இயல்புகளில் மிகவும் அரிதாக காணப்படும் ஒன்று.

sabeer.abushahruk said...

தற்காலத்தில் தலைவராய் உருவெடுக்க முக்கிய தகுதிகள் பேச்சாற்றால், நடிப்பு, கவர்ச்சி போன்றவையே.

சேவை ஒன்றே தாரக மந்திரம் என்கிற தலைவர்கள் வழக்கொழிந்து போனார்கள்.

ஆனால், அக்காலத்திலேயே தலைமைத்துவத்தின் எல்லா அம்சங்களோடும் வாழ்ந்து காட்டிய ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறைகளை இக்காலத் தலைவர்களிடம் எத்தி வைக்கட்டும் இத்தொடர்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Unknown said...

Assalamu Alaikkum

I got the opportunity to go through the English version of this title. Alhamdulillah. All of the characters of prophet Muhammad Sallalahu Alaihi wasallam are truly inspiring.

If we notice every individual needs leadership qualities in order to lead his/her family first. The basic behaviour out of natural characters of an individual (from the family upbringing) is extended in societal set up(company, organizations, groups etc). If the base is weak by immoralities, not respecting elders, unharmonious dealings, cheating etc., where are the ways to be shined as leaders? If we choose the immoral fellows as leaders they can not keep their original bad characters hidden for long time.

May Allah enrich us with knowledge and inspire us with His Prophet Muhammed Sallallahu Alaihiwasallam.

B. Ahamed Ameen from Dubai.

Muhammad abubacker ( LMS ) said...

//ஆனால், அக்காலத்திலேயே தலைமைத்துவத்தின் எல்லா அம்சங்களோடும் வாழ்ந்து காட்டிய ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறைகளை இக்காலத் தலைவர்களிடம் எத்தி வைக்கட்டும் இத்தொடர்.//

Sallallahu alaa muhammadh sallallahu alaihivassallam.

Unknown said...

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லியவ வண்ணம் செயல்.

என்ற திருக்குறளை பொய்ப்பித்துக்காட்டி, சொல்லியபடி செயலிலும்
வாழ்ந்து காட்டி, மனித குலத்துக்கு ஒரு முன்மாதிரியாய்
தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டவர்களே
அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

அபு ஆசிப்.

sheikdawoodmohamedfarook said...

//இப்போதையதலைவர்களின்வாழ்க்கையில்கஜானாகாலி.ஆனால் சொந்தவாழ்க்கையில்100தலைமுறைக்குசொத்தும்வசதியும்// மருமகன்ஜாஹிர்சொன்னது/ அந்தகஜானாவைகாலிசெய்தால்தான்இந்தகஜானாவைநிறப்பமுடியும்! அதில்கைவைக்காமல்இதையும்நிறப்பதலைவர்கையில்என்ன அலாவுதீனுடையஅற்புதவிளக்காஇருக்கிறது?

sheikdawoodmohamedfarook said...

//இறுதியாகதான்முன்னேடுத்துசென்றநற்ப்பணிகள்...........................................அந்ததலைவரின்தலைமுறைதாண்டிபயணப்படும் வாய்ப்பைஇந்துவிடும்.// பொன்னெழுத்தில்பதிக்கப்படவேண்டியஅற்ப்புதவரிகள். நான்அறிந்தவறைமலேசியாவில்தஞ்சைமுஸ்லிம்களின் பிர்மாண்டவர்த்தகநிறுவனங்கள்நிறுவனர்கள்மண்டையை போட்டதும்பின்புவந்தஅவர்களின் சந்ததிகளின் நிர்வாக குறைபாடு மற்றும் வெளியே சொல்ல முடியாதபல குறைபாடுகளாலும் மண்ணோடு மண்ணாகமடிந்துபோனது!காரணம் ஸ்தாபாகர் சரியான அடித்தளத்தை அமைக்கவில்லை!

sheikdawoodmohamedfarook said...

//உண்மையிலேயேநாம்பெருமானாரைஉதாரணமாய்கொண்டும் வழிகாட்டியாககொண்டும் வாழ்கிறோமா? இல்லை வாழ்வது போல்நடிக்கிறோமா?// மருமகன்ஜாஹிர்கேட்டவினா/ இது ஒருமில்லியன்டாலர்கொஸ்டின்.ஆயிரம்தலைவாங்கிய அபூர்வசிந்தாமணிகூடஇந்தகேள்வியைகேட்டதில்லை!

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.தலைவர் என்றால் பெருமானார் (ஸல்) அவர்கள் மட்டுமே!

Unknown said...

'தலைமைத்துவம்' பற்றிய இந்த நூல், விற்பனைக்காக வெளிவந்துவிட்டது. வில 140/-. சென்னை (மண்ணடி) 'இலக்கியச் சோலை' புத்தக நிலையத்தில் கிடைக்கும்.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு