Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பரீட்சையை கண்டுபிடித்த புண்ணியாவனே ! - படிக்காதவங்களுக்காக** இது ஒரு ரிவைண்ட் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | April 23, 2013 | , , , ,

1980 - 90களில்... நினைவலைகள் ! - இது ஒரு ரிவைண்ட் !

பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. - அவர் தலை மேல.! ஆவல் தீர குட்டனும்னு கோபம் கோபமா வருதே !

பின்ன என்ன தலைவா.. பரீட்சைன்னு ஒண்ணு வெச்சா, ரிசல்ட்ன்னு ஒண்ணு வந்து தொலைக்குது.. எந்த பயத்தையும் விட இந்த ரிசல்ட் பயம் தான் பெரிய பயமா இருக்கு..!

பத்தாங்கிளாஸ்.. அதாங்க, எஸ்.எஸ்.எல்.சி-க்கு போனவுடனே, ஆளாளுக்கு 'பப்ளிக் எக்ஸாம்' 'பப்ளிக் எக்ஸாம்'னு நமக்கு பிரஷரை ஏத்துவாங்க.. வீட்ல நிம்மதியா கதை புக் படிக்க முடியாது, ரேடியோ கேட்க முடியாது.. அட, ஒரு கல்யாணம், விசேஷம்னு யாராச்சும் கூப்பிட வந்தா, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசக் கூட விடமாட்டாங்க. படி படின்னு ஒரே ரோதணை. நாம படிச்சே தீரணும்னு ஒரு கூட்டமே நமக்கு எதிரா திரண்டிருக்கும்.

பரீட்சை நேரத்துல ஏற்கனவே பயந்து இருக்க நமக்கு, அட்வைஸ் பண்றேங்கற பேர்ல ஆளாளுக்கு ஆடியோ பேதி மருந்து குடுப்பாங்க.. இந்த பாட புஸ்தகம் இருக்கே.. ஹப்பா.. எனக்கு அதை தொறந்த அஞ்சாவது நிமிஷம் கொட்டாவி வரும், ஆறாவது நிமிஷம் தூக்கம் வரும். எட்டாவது நிமிஷம் டீ வரும்.

உம்மா டீ குடுக்கும் போது அவங்களை பாத்தா பாவமா இருக்கும். நம்மளை என்னவோ 'உலகம் சுற்றும் வாலிபன்' லெவலுக்கு மதிச்சு, மாத்தி மாத்தி டீ போட்டு குடுத்துகிட்டே இருப்பாங்க.. அது என்னமோ, என்ன மாயமோ தெரியலை.. அந்த டீயை குடிச்சா இன்னும் நல்லா Fresh-ஆ தூக்கம் வரும்.

பரிட்சை நேரத்துல என்னைத் தவிர எல்லாரும் என் படிப்பு மேலயே அக்கறையா இருப்பாங்க.. பத்தாக்குறைக்கு ரேடியோவில வர்ற விளம்பரம், பத்திரிகைகள்ல வர கட்டுரை எல்லாமே படிப்பு.. படிப்பு.. படிப்பு பத்தி தான்.

எனக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி பரிட்சை நேரத்துல மட்டும் இந்த பாழாப்போன ஜுரம் வந்து தொலைக்க மாட்டேங்குது.?

இதெல்லாத்தையும் விட இப்போது பரீட்சைப் பேப்பரு ரயில்வே டிராக்கில் போட்டுவிட்டு சென்ற புண்ணியவான் மாதிரியெல்லாம் அப்போ எவனும் இல்லே... அப்படியிருந்துச்சுன்னா எவ்வ்வ்ளோ குஷியா இருந்திருக்கும் !

ஒரு வழியா கடைசி பரிட்சைய எழுதி முடிச்சதும் மனசுக்குள்ள வந்த சந்தோஷம் இருக்கே.. ஹைய்யோ.. அடுத்த ஒரு மாசம் கிரிக்கெட், ஃபுட்பால், ஃபிரண்ட்ஸ்னு கலக்கலா போச்சு..

காலைல எழுந்து பசங்களோட ஜாகிங்.. வீட்டுக்கு வந்து காலை சாப்பாடு, மைதானத்துக்கு போய் கிரிக்கெட், மறுபடியும் வீடு. குளியல். சோறு. கிளம்பி தெருவில் இருக்கும் முச்சந்தியில் நிற்பது இல்லாட்டி ஏதாவது குளக்கரையோரம் அரட்டை, ரேடியோ, பிரவுசிங் சென்டர், நொறுக்கு தீனி, மறுபடியும் கிரிக்கெட். 6.30 மணிக்கு மேல Flood Light மேட்ச் நடக்கற இடத்துக்கு போய் அலப்பறை. ஆஹா.. நிம்மதியா போய்கிட்டிருந்தது.

"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் ஜூன் மாதம்.. " உம்மாடியோவ்.. அதுக்குள்ள ரிசல்ட்டா..?! என்ன அவசரம்.. நல்லா பொறுமையா டயம் எடுத்து இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு ரிசல்ட்டை வெளியிடலாமே.."

நல்லா படிக்கற பசங்களுக்கு கவலை இல்லை.. கண்டிப்பா புட்டுக்கும்னு தெரிஞ்ச பசங்களுக்கும் கவலை இல்லை.. என்னை மாதிரி மதில் மேல் மியாவ் தான் இதுல அவஸ்தைபடறோம்.

இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மனசு பக் பக்குனு அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. "பாஸ் பண்ணிடுவ இல்லை..?"னு மாமா கேக்கும்போது "கண்டிப்பா.."ன்னு பலவீனமா சொன்னேன். மாமா என் கண்ணையே ஒரு 3 செகண்ட் பாத்துகிட்டு இருந்தார்.. ஒருவேளை மாமாவுக்கு நாம கணக்கு பரிட்சை சரியா எழுதலைன்னு தெரிஞ்சிருக்குமோ..?

மாமா நகர்ந்ததும் உம்மா வந்து, " நல்லா தானே எழுதியிருக்க.. பாஸ் பண்ணிடுவ இல்லை..? யாரும் என்னை மதிக்க மாட்டா.. நீ பெயில் ஆயிட்டா  ரொம்ப இளக்காரமா போயிடும்டா.." அதாவது, நான் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் போறது கூட முக்கியமில்லை.. உறவுக்காரங்க மத்தில தலைக்குனிவு வந்திடக் கூடாது..! என்ன உலகம்டா இது..!

மறுநாள் பேப்பர் படிச்சிட்டிருந்த மாமா, கண்ணாடியை கழட்டி வெச்சுட்டு, பாத்ரூமுக்கு போயிருந்தார் போல.. நான் கண்ணாடியை பாக்காம, பேப்பரை அப்டியே எடுக்க, கண்ணாடி 'க்ளிங்' ஆயிடுச்சு..!

மாமா வந்து உடைஞ்சிருந்த கண்ணாடியை பாத்தார்.. கண்ணாடி போடாத மாமாவோட முகத்தைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. என்னை முறைச்சது கூட பரவால்ல.. திட்டியிருந்தா கூட திருப்தியா இருந்திருக்கும்.. ஒண்ணும் சொல்லலை.. உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!

இறைவா.. நான் எப்படியாவது பாஸ் ஆகிடணும்.. இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு...!

எங்க செட்ல யாரெல்லாம் பெயில் ஆவான்னு யோசிச்சு பாத்தேன்.. ம்ஹூம்.. சொல்ல முடியாது.. எல்லாருமே பாஸ் ஆனாலும் ஆயிடுவானுங்க.. நான் மட்டும் பெயில் ஆகி, மத்தவன் எல்லாம் பாஸ் ஆகிட்டா.. உம்மாடியோவ்.. அதுமட்டும் நடக்கக் கூடாது.. குறைந்தபட்சம், பக்கத்து வீட்டு நண்பன் மட்டுமாவது பெயில் ஆயிடணும்.. அவன் பிட் அடிச்சிருப்பானோ.. இறைவா.. என்னை பாஸ் பண்ண வெக்க முடியாட்டி, அட்லீஸ்ட் எனக்கு கம்பெனி குடுக்க ஒரு நண்பனையும் பெயில் ஆக்கிடு.. டீலிங்..!

அதுக்கப்பறம் எந்த எதிர்மறையான வார்த்தைகள் காதுல விழுந்தாலும், அது என் ரிசல்ட்டை பத்தி ஞாபகப்படுத்திகிட்டே இருந்தது. 'போச்சு' 'வராது' 'இல்லை'ன்னு எல்லா வார்த்தைகளையும் மாத்தி மாத்தி யாராவது சொல்லிகிட்டே இருந்தாங்க.

பஸ்ல போயிட்டிருக்கும்போது, என் கணக்கு பேப்பரை திருத்தும்போது, திருத்தரவருக்கு பைத்தியம் பிடிச்சு, நூத்துக்கு 80 மார்க் போடற மாதிரி பகல் கனவெல்லாம் கண்டேன்.. திட்டமிட்டு காணும் கனவு எல்லாம் பலிக்குமான்னு தெரியலை.

ரிசல்ட் வந்த அன்னிக்கு பசிக்கவே இல்லை.. உம்மா என்னை விடாம "சீக்கிரம் சாப்பிட்டுடு.."ன்னு வம்படியா சாப்பிட வெச்சாங்க.. அன்னிக்கு வீட்ல எல்லாரும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்தாங்க.. மாமா ஆபிஸுக்கு போவாரா மாட்டாரான்னு சந்தேகமா இருந்தது.. இறைவா.. அவர் கிளம்பி ஆபிஸ் போயிடணும்.. வம்படியாக பிரார்த்தனை முணுமுணுத்தது...

இப்ப மாதிரி ரிசல்ட்டை பிரவுசிங் சென்டர்ல எல்லாம் போய் பாக்க முடியாது.. பேப்பர் தான்.

ரிசல்ட் பேப்பர் இப்ப வரும்.. அப்ப வரும்னு அலைகழிய வெச்சிட்டாங்க.. பக்கத்து தெரு, அடுத்த தெருன்னு நாயா பேயா அலைஞ்சு, பேப்பரை வாங்கினா கை காலெல்லாம் நடுங்குது.

பேப்பர்ல நம்பரை தேட முடியலை.. கண்ல பூச்சி பறக்குது.. வயத்துல பட்டாம்பூச்சி பறக்குது.. பேப்பர்ல டுடோரியல் காலேஜ் விளம்பரம் எல்லாம் போட்டிருக்காங்க.. ஒரே அபசகுனமா இருக்குது..

என் நம்பர் சுத்தமா மறந்து போச்சு.. பேப்பரை தரைல விரிச்சு, அது மேலயே மண்டி போட்டு உக்காந்து, நம்பரை ஞாபகப்படுத்தி, கஷ்டப்பட்டு தேடிப் பாத்ததுல.. நம்பர் இல்லை.. இன்னொரு தடவை ஒழுங்கா பாக்கறேன்.. ம்ஹூம்.. இல்லை.. என்னமோ தெரியலை.. எல்லா டென்ஷனும் போய், நிம்மதியா இருந்தது..

நாம ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் மார்க் எதிர்பார்த்து அது வரலைனா வருத்தப்படலாம்.. பேப்பர்ல போட்டோ வர வேண்டாம் பாஸ்.. வெறும நம்பர் மட்டும் வந்தா போதும்னு பொன் செய்யும் மருந்தா மனசை வெச்சிருக்கோம்.. அதுக்கு கூட வழியில்லாம போயிடுச்சு..

திடீர்னு பக்கத்து வீட்லேந்து பயங்கரமா சத்தம் கேட்டது.. நண்பனை திட்டிகிட்டிருந்தாங்க.. ஆஹா.. அவனுக்கும் புட்டுகிச்சா..?! நன்றி நண்பா..!

மேட்டரை கன்ஃபர்ம் பண்ணிக்க பக்கத்து வீட்டுகிட்ட போனேன். பக்கத்து வீட்டு பையனும் உங்கூட தானே படிக்கறான்.. அவன் பாஸ் பண்ணிட்டான்.. நீயும் இருக்கியே தண்டம்.. தண்டம்.. "

என்ன சொல்றாங்க.. நான் பாஸா.. ? எப்படி?

அட, ஆமா.. பதட்டத்துல என் நம்பருக்கு பதிலா நண்பர்களின் நம்பரை மட்டுமே பேப்பர்ல தேடியிருக்கேன்.

பேப்பரை எடுத்து பார்த்ததுல, என் நம்பர் என்னைப் பார்த்து கண் அடிச்சுது.

மாமா வீட்டுக்குள்ளேயிருந்து பயங்கர சந்தோஷத்துடன் வெளியே வந்து, முதுகைத் தட்டி விட்டு ஆபிஸுக்கு போனார். கண்ணாடி போடாத மாமாவின் முகம் இப்ப அழகா இருந்தது.

மறுபடியும் மறுபடியும் பேப்பரை தரைல பரப்பி, என் நம்பரை பாத்துகிட்டே இருந்தேன்.

நல்லவேளை டாஸ்மாக் கடைகளின் களியாட்டம் அப்போது இல்லை, அப்படி ஒன்று நிகழ்ந்து அதனால பாஸ் பன்னவன்னு ஒரு பழிச்சொல் சுமக்காமல் போனோமே ! அப்பாடா !

இப்ப நினைச்சு பாத்தா அந்த ரிசல்ட் டென்ஷன் இருக்கே, அதுவும் ஒருமாதிரி நல்லா தான் இருக்கு, இல்லை.!
குறிப்பு : சென்றவருடம் ஒரு பிரபல வரப்பத்திரிகையில் வெளியான கட்டுரையைத் தழுவி வட்டார பேச்சு மொழி இணைத்து சின்ன சின்ன நெறியாடல் செய்து வித்தியாசமான ரசனையாக அந்த மீடியம் கிளாஸ் மாணவனின் ஏக்கத்தில்தான் இந்தப் மீள்பதிவு...

இப்படிக்கு இவ்வாறன அவஸ்தைகளில் சில வற்றை அனுபவித்த...  [**தலைப்பில் இந்தப் பதிவை அன்று படிக்காதவர்களுக்காக என்று இப்போ வாசிச்சுடுங்க ப்ளீஸ்]


அன்றைய மாணவன்


அபூஇப்ராஹீம்

16 Responses So Far:

Abdul Razik said...

1985 ஜுன் 15ம் தேதி , காலை 7 மணி, முதல் பஸ் பிடித்து பட்டுக்கோட்டைக்கு நன்பருடன் சென்றேன், அங்குள்ள கடைகாரர் இன்னும் 15 நிமிடம் பொருங்கள் என்றார். அந்த 15 நிமிடம் வாழ்வில் மறக்க முடியாதது. தினத்தந்தி பேப்பருக்குறிய பணத்தை இரண்டு மடங்கு கையில் வைத்து இருந்தோம், காரணம் ரிசல்ட். பேப்பர் வந்துவிட்டது, Pressure கூடியது. கடை திறக்கும் முன்பே சென்றதால் முதல் பேப்பர் எங்களுக்கு கிடைத்தது. இரண்டாம் பக்கத்தின் மூலையில் காதிர் முகைதீன் பள்ளி Result தெரிந்தது. என்ன சந்தோஷம், ஊருக்கு சென்றால் அங்கு இன்னும் paper வரவில்லை, அனைவரும் ப்ஸ் ஸ்டாப்பில் காத்திருக்க, காசு வாங்காமல் அவர்களிடம் கொடுத்ததும் அவர்களுக்கும் எங்களுக்கும் ஏற்பட்ட சந்தோஷம் மறக்க முடியாத அனுபவம்.

Abdul Razik
Dubai

ZAKIR HUSSAIN said...

அதே பதட்டத்துடன் எழுதியதால் ஒரு முக்கியமான விசயத்தை மறந்துட்டீங்க. பசங்களுக்கு ரிசல்ட் வருவதற்க்கு ஒரு வாரத்துக்குமுன் தொப்பி , பள்ளிவாசல் என்று நெத்தியில் வடு தெரியும் அளவுக்கு தேய்த்து தொழுவதுதான் அது. ரிசல்ட் வந்தவுடன் ஜூட்.

என்னுடைய ரிசல்ட் வருவதை பார்க்க பெரும்பாலும் நான் ஊரில் இருந்தது இல்லை. ரிசல்ட்டை பார்த்து எனக்கு தந்தியடிக்க சபீர் "பெருவாதி' பணம் செலவளித்து இருக்காப்லெ.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அப்போவெல்லாம் 10வது, +2 வில் பாஸாகி விட்டால் நண்பர்களுக்கு எக்லரிஸ் சாக்லேட் வாங்கி கொடுப்பதும், கொஞ்சம் பண வசதி படைத்த மாணவர்கள் 7அப்,தம்ஸ‍அப், காளிமார்க் குளிர்பானங்கள் வாங்கி சந்தோசத்தில் பிறருக்கு கொடுப்பதும் தான் பெரும் பார்டியாக கருதப்பட்டது. அன்று 35 காசு இன்லேண்ட் லட்டரும், 15 காசு அஞ்சல் அட்டையுமே பெரும் தகவல் தொடர்பு சாதனமாக நம்மில் திகழ்ந்தது.

ஜாஹிர் காக்கா சொல்வது போல் ரிசல்ட் வரும் நாள் அன்று வெள்ளனமே எழுந்து சுபுஹுத்தொழுகைக்கு போவதும் அப்படியே மெயிண் ரோடு போய் படபடப்புடன் பேப்பருக்காக காத்திருப்பதும் நாம் இன்று உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அதை நினைக்கயில் ஆனந்தக்கண்ணீரை வரவழைக்கும்.

அந்த இடைப்பட்ட காலங்களில் நாம் வாழ்வில் எத்தனை சோதனைகளையும், வேதனைகளையும், மகிழ்வான‌ நிக‌ழ்வுக‌ளையும், சோக‌மான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் ச‌ந்தித்திருப்போம் என‌ எண்ணிப்பார்க்க‌ வைக்கும்.

அந்த‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் எல்லா தேர்வு தாள்களையும் தமிழிலேயே எழுதி இருந்தாலும் 10வ‌து, +2 பாஸாகி விட்டாலே தெருவில், ஊரில் அது ஒரு பெரும் சாத‌னையாக‌வே க‌ருத‌ப்ப‌டும்.

ப‌ல‌ருக்கு ரிச‌ல்ட் வ‌ந்த‌ கையோடு (பென்சிலில் கூடுதல் கருமைக்காக வரையப்பட்ட மீசையுடன்) பாஸ்போர்ட்டும் த‌யாராகும். வெளிநாடு வ‌ந்து அன்று பள்ளத்தில் விழுந்த‌ ப‌ல‌ர் அதிலிருந்து வெளியேற‌ த‌ன்னிட‌மே ப‌ல‌ வ‌ழிக‌ளும், வாய்ப்புக‌ளும், போதிய பொருளாதார வசதிகளும் இருந்த‌ போதிலும் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் ப‌ள்ள‌த்திற்குள் இருந்து ப‌ழ‌கி விட்ட‌தால் வெளியே வெளிச்ச‌த்திற்கு வ‌ர‌ உள்ள‌ம் ப‌ல‌ கார‌ண‌ம் சொல்லி வெளியேற‌ ம‌றுக்கிற‌து. சில‌ரின் வாழ்வு அந்த‌ ப‌ள்ள‌த்திற்குள்ளேயே முடிந்து, ம‌டிந்து விடுகிற‌து.

வெளிநாடு வாழ் வாழ்க்கையால் ஊரில், குடும்பம் ப‌ல‌ மேம்பாடுக‌ள் அடைந்தாலும் எம்பாட்டில் மேம்பாடு என்று ஒன்றும் இல்லை என‌ ப‌ல‌ரின் வாழ்க்கை ந‌க‌ர்ந்து கொண்டும், முடிந்து கொண்டும் இருக்கிற‌து.

அல்லாஹ் ந‌ம் அனைவ‌ருக்கும் ஆத்திக்குல் ஆஃபியா......

sabeer.abushahruk said...

செம காமெடியா இருக்கு நீங்க பட்ட அவஸ்த்தை.

(நல்ல வேளை, நான் பட்ட அவஸ்த்தையைக் கேட்கல)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இப்போ இருக்கிற கெயில், ஹஸ்ஸி, தோனி, இப்புடி தடா புடான்னு அடிக்கிறவங்களெல்லாம் அப்போ இல்லைங்க...

இதை ஏன் இப்போ சொல்றேன்னா.. ரிஸல்ட் கவலை மறந்து இருக்கிற இப்பவுள்ள புள்ளையளுவ மாதிரி வந்ததும் ஸ்கோர் பார்க்கிற மாதிரி பார்த்திருக்கலாமே...

Unknown said...

நான் + 2 பரீட்சை எழுதி ரிசல்ட் வருவதற்கு முன்பு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் ஒரு ஆப்பரேசனுக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தேன்.

நாங்கள் படித்த வருடம் தான் அதாவது 1979-80 கால கட்டங்கள் தான் தமிழ்நாட்டில் முதன முதலாக + 2 தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

நான் மருத்துவ மனையிளிரிந்து வீடு திரும்பி (சென்னையில்தான்) , வீட்டில் காலடி எடுத்து வைப்பதற்குள், நான் தேர்வான செய்தி என் நண்பன் என்னிடம் சொன்னபொழுது, இரட்டிப்பு மகிழ்ச்சி யாக இருந்தது,

ஒன்று ஆபரேஷன் சக்செஸ் ஆனா சேதி.
மற்றொன்று பரீட்சையில் தேர்வான சேதி.

அந்த மலரும் நினைவுகள் இன்று நினைத்தாலும் சந்தோசமே.

அபு ஆசிப்.

Meerashah Rafia said...

எந்த வருடம் நான் நல்லபடியா தேர்ச்சிபெரனும்னு நம்ம ஊரு தர்ஹா உண்டியல்ல 1 1/2 ரூபாய் போட்டேனோ அந்த வருடம்தான் எனக்கு ஆப்பு பலம்மா விழுந்தது..

நாங்கல்லாம் அப்பவே தர்ஹா ஒரு பொய்,பித்தலாட்டம்னு அனுபவப்பூர்வமா தெரிஞ்சிக்கிட்டோம்ல!!
(ச்ச..எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நாங்கல்லாம் அப்பவே தர்ஹா ஒரு பொய்,பித்தலாட்டம்னு அனுபவப்பூர்வமா தெரிஞ்சிக்கிட்டோம்ல!!
(ச்ச..எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)//

ஒருவேளை அடங்கியிருந்தவங்களுக்கும் ஆன்சர் தெரியாம இருந்திடுச்சோ என்னமோ ! :)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மலரும் நினைவுகள் இன்றும் மனக்குது!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சவுதியின் கனவால் பத்தாவது தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டைப் பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லை அன்று.

Yasir said...

எனக்கெல்லாம் பாஸ் செய்துடுவோமா என்ற கவலை இருந்ததில்லை :) ....முதல் மார்க்க நானா ? இல்லை இன்னொருந்தரா என்பதில்தான் கவலையும் ஒரு சின்ன படபட்ப்பு இருந்ததுண்டு

Meerashah Rafia said...

Bro.Yasir சொன்னது…
//எனக்கெல்லாம் பாஸ் செய்துடுவோமா என்ற கவலை இருந்ததில்லை :) ....முதல் மார்க்க நானா ? இல்லை இன்னொருந்தரா என்பதில்தான் கவலையும் ஒரு சின்ன படபட்ப்பு இருந்ததுண்டு//

**படிக்காதவங்களுக்காக** இது ஒரு ரிவைண்ட் என்று சொல்லிபுட்டு, தேர்ச்சி பெருவத பத்தி கவலையே இல்லாத இந்த மாதிரி ஞானிகளை எல்லாம் யாருப்பா பின்னூட்டம் எழுத உள்ளே விட்டது..

Yasir said...

//தேர்ச்சி பெருவத பத்தி கவலையே இல்லாத// இதையெல்லாம் சொல்லி காட்ட வாய்ப்பு எப்பவாதுதானே வரும் தம்பி மீராசா..அதான் சொல்லிப்புட்டேன்....உண்மையை சொல்லப்போன **படிக்காதவங்களுக்காக* இந்த வார்த்தையைக் கவனிக்க நான் தவறிவிட்டேன் :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//யாசிர் & MSM(r)//

இப்போ தெரியுது,

அப்போ 'சரியா' படிக்காவதங்க இப்போ எல்லாத்தையும் படிக்கிறாங்க,

அப்போ படிச்சவங்க இப்போ 'சரியா' படிக்கலைன்னும்..

என்ன நான் சொல்றது சரியா ?

Yasir said...

//என்ன நான் சொல்றது சரியா ?// படிச்சு படிச்சு அலுத்துபோச்சில ஸ்கூல் டையத்துல அதான் இப்ப கவனமா படிக்க செரவடியா வருது

Ahamed irshad said...

நல்லா சொல்லியிருக்கீங்க காக்கா... ஹா ஹா... என் இனம் நீங்க :)


யாசிர் நல்லா படிப்பாப்லன்னு முன் மண்டைய பார்த்தாலே தெரியுது.. :)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு