Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழகு மொழி - 16 தொடர்கிறது... 11

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2013 | ,

(2) 3.2 வினைப்பத வகைகள்

செயல்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களை வினைச் சொற்கள் என்போம். வினைச் சொற்களின் வகைகளை,


01 - ஏவல் வினை
02 - தெரிநிலை வினை
03 - குறிப்பு வினை
04 - தன் வினை
05 - பிற வினை
06 - செய் வினை
07 - செயப்பாட்டு வினை
08 - உடன்பாட்டு (இயல்மறை) வினை
09 - எதிர்மறை வினை
10 - (செயப்படு பொருள்) குன்றிய வினை
11 - (செயப்படு பொருள்) குன்றா வினை
12 - முற்று வினை (வினைமுற்று)
13 - எச்ச வினை (வினையெச்சம்)
14 - வியங்கோள் வினை
15 - துணை வினை
எனப் பிரிக்கலாம்.

(2) 3.2.1 வினைப் பகாப் பதம்

வினைச் சொல் வேற்றுமை ஏற்காது; தெளிவாகவோ குறிப்பாகவோ காலம் காட்டும்:

வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையும் காலை காலமொடு தோன்றும்.
காலம்தாமே மூன்று என மொழிப.
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
மெய்ந் நிலை உடைய தோன்றலாறே
 - தொல்காப்பியம், வினையியல் 1-3.

எல்லா வகை வினைச் சொற்களும் மூன்று காலங்களான இறந்தகாலம், நிகழ்காலம் வருங்காலம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு காலத்தைத் தெளிவாகவோ குறிப்பாகவோ உணர்த்தும். அதனாற்றான், வினைச் சொற்களுக்குக் 'காலக்கிளவி' என்று இன்னொரு பெயரும் உண்டு.

காலத்தைத் தெளிவாகக் காட்டுபவை 'தெரிநிலை வினை' என்றும் குறிப்பாக உணர்த்துபவை 'குறிப்பு வினை' என்றும் இருவகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

ஒரு சொற்றொடரின் பிரிக்க முடியாத பகுதியாக வினைச் சொல் அமைந்திருந்தால் அது 'தெரிநிலை வினை' ஆகும்; பகுதியானது பெயர்ச் சொல்லாக இருப்பின் அது, 'குறிப்பு வினை' எனப்படும்.

காட்டுகள்:
'சென்றான்' எனும் சொல் கடந்த காலத்தைத் தெளிவாகக் காட்டும் தெரிநிலை வினை(முற்று). இதன் பகுதியான, 'செல்' என்பது ஏவற் சொல்லாகும் (செல்+ஆன்= சென்றான்).

'அவன் அழகன்' எனும் இரு சொற்களில் இறுதிச் சொல்லானது, 'அழகு' எனும் பண்புப் பெயரைப் பகுதியாகக் கொண்டுள்ளது. ஆனால் காலத்தை(த் தெளிவாக)க் காட்டவில்லை. எனினும்,

அவன் அழகன் ஆக இருந்தான்; அவன் அழகன் ஆக இருக்கிறான்; அவன் அழகன் ஆக இருப்பான் என்று காலங்களைக் குறிப்பாக உணர்த்துவதால் 'குறிப்பு வினை' என்றானது.

"வினைக் குறிப்புக் காலமொடு தோன்றுங்கால், பண்டுகரியன், இதுபொழுது கரியன், என இறந்த காலமும் நிகழ் காலமும் முறையானே பற்றி வருதலும் நாளைக்கரியனாம் என எதிர் காலத்து ஆக்கமொடு வருதலும் அறிக!" - தொல்காப்பிய வினையியல் உரையில் சேனாவரையர்.

ஆதலின், நாம் பாடம் (2) 3.1 (பெயர்ப் பகுபதங்கள்)இல் படித்த அறுவகைப் பெயர்ப் பகுபதங்களும் குறிப்பு வினையாக வரும்.

தலைப்பு (2) 3.1இல் குறிப்பிட்டுள்ள 15 வகை வினைகளுள் முதலாவதாக இடம்பெற்றுள்ள ஏவலில் முடியும் முற்றுவினைச் சொற்களைப் பற்றி, பாடம் (2) 2.1.2இல் படித்திருக்கிறோம். ஏவல் (முற்று)வினைச் சொற்கள், பகுக்க முடியாத பகாப் பதங்களாகவே அமைந்திருக்கும்:

நட,      வா,    மடி,     சீ,           விடு, கூ,            வே,     வை,
நொ,   போ,  வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின்,
தேய்,  பார்,  செல், வவ்,      வாழ், கேள்,       அஃகு என்று

எய்திய இருபான் மூன்றாம் ஈற்றவும்
செய் என் ஏவல் வினைப் பகாப்பதமே
 - நன்னூல் 147.


மேற்காணும் 23 சொற்களும் 'சொல்வதைச் செய்' என ஏவுவதாக இருப்பதால் இதனை, 'செய் வாய்பாடு' என அழைக்கின்றனர். 'செய்' வாய்பாட்டில் வரும் ஏவல்கள் அனைத்தும் வினைப் பகாப் பதங்களாகும்...
இன்ஷா அல்லாஹ் தொடரும்
ஜமீல் M.ஸாலிஹ்

11 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ரொம்ப நாளைக்கு பிறகு நம்ம முழுமையாய் பழக வேண்டிய மொழி வந்துடுச்சு!

தொடர்ந்து காக்கா தரனும் ஏதோதாவது!

sabeer.abushahruk said...

ஆஹா,

தொடர்கிறதா தமிழ் வகுப்பு! இந்த வார கேள்வியைக் காணோமே?

Ahamed irshad said...

இப்போதுதான் உங்களின் பழகு மொழி ஒவ்வொன்றாய் படிக்கிறேன்... தேறிடுவேன்னு நம்புறேன் சாலிஹ் காக்கா...

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//ஆஹா,

தொடர்கிறதா தமிழ் வகுப்பு! இந்த வார கேள்வியைக் காணோமே?//



நீங்களே கேள்வியை கேட்டு அப்படியோ பரிசையும் அறிவிசுடுங்கோ !!!

Ahamed irshad said...

சாகுல் ஹமீது காக்கா... என்ன பரிசு? சொன்னியண்டா நானும் கலந்துக்க ட்ரை பன்றேன்... :)

Shameed said...

Ahamed irshad சொன்னது…
//சாகுல் ஹமீது காக்கா... என்ன பரிசு? சொன்னியண்டா நானும் கலந்துக்க ட்ரை பன்றேன்... :)//



பரிசு எப்போதும் போல் பச்சை பெல்டும் கிளி சாப்பு தைலமும் தான்

சரியான பதில் சொல்பவருக்கு மேற்கண்ட பரிசு கோலாலம்பூரில் இருந்து வரும்

Yasir said...

தமிழை அழகாக எழத வைக்க தூண்டும் தொடர்....தொடர்ந்து கற்ப்போம் தொடருங்கள் காக்கா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Ahamed irshad சொன்னது…
இப்போதுதான் உங்களின் பழகு மொழி ஒவ்வொன்றாய் படிக்கிறேன்... //

காலையில தினத்தந்தி வாங்க போன புள்ள இப்போதான் வர்ரியா !?...

தேடிப் புடிச்சு இழுத்துகிட்டு வரனுமாவுல இருக்கு !

சீக்கிரம் ஃபேனைப் போட்டு பாடத்தை படி கரண்டு போவப்போவதுப்பா தம்பி இர்ஷாத் ! :)

Ahamed irshad said...

இந்தா படிக்க ஆரம்பிச்சிட்டேன் :) கரண்டு போயிரும்ல காக்கா..

தேடிப் புடிச்சு இழுத்துகிட்டு வரனுமாவுல இருக்கு ! //

எப்பவேனா வருவோம்.... சீட்டு போட்டு வெச்சிருக்கோம்.. :)

Unknown said...

அழகிய தமிழ் வகுப்பு
தொடரட்டும் தமிழ் சேவை

அபு ஆசிப்

Unknown said...

கட்டுரையாளர் அவர்களுக்கு மிக்க நன்றி.

நம் மொழி பார்த்து கமென்டு போட்டு சந்தேகம் கேட்க ஆட்களை காணோம்.

நம் மொழியின் 100% அறிவதன் அவசியத்தை நீங்களும் எடுத்து வையுங்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு