Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று! நாளை! - 5 23

அதிரைநிருபர் பதிப்பகம் | June 17, 2013 | , , , , , ,

நாவலர் நெடுஞ்செழியன் கட்சியில் மூத்தவர். அனுபவம் நிறைந்தவர், கட்சியின் முக்கியப் பொறுப்புகள் பலவற்றில் இருந்தவர். முக்கியமாக, அண்ணாவின் நம்பிக்கையைப் பெற்றவர். அண்ணா இருந்த போதே கட்சியின் பெரிய பதவியான  பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தவர். முதல்வர் பதவிக்குத் தகுதியானவர். இன்னொரு பக்கம், கருணாநிதிக்கும் கட்சிக்குள் நல்ல செல்வாக்கு. தட்ட வேண்டிய இடத்தில் தட்டி வெட்ட வேண்டிய இடத்தில் வெட்டி குட்ட வேண்டிய இடத்தில் குட்டி வளர்ந்த சுறுசுறுப்பான இளைஞர். கடுமையான உழைப்பாளி. கட்சி வளர்ச்சிக்காக நிதி சேகரிப்பதில் வல்லவர். தொண்டர்கள் மத்தியில் மாவட்டமெங்கும் இணைந்து பழகி ஒட்டி உறவாடி   நன்கு அறிமுகமானவர்.


போட்டி ஏற்பட்டுவிட்டது. வாக்கெடுப்பு நடத்தவேண்டிய சூழல். திடீரென நெடுஞ்செழியன் எழுந்தார்.  ‘தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படுவதை நான் விரும்பவில்லை. ஒரு மனதாக என்னைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் மட்டுமே நான் தேர்தலில் நிற்பேன் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்துள்ளேன். எனக்குப் போட்டி ஏற்பட்டுவிட்ட நிலையில், நான் போட்டியிட விரும்பவில்லை. போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறேன்’ சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த அறையில் இருந்தும் வெளியேறிவிட்டார். கூட்டத்தில் லேசான சலசலப்புகள் ஏற்பட்டன. எனினும், முக்கியப் போட்டியாளர் விலகிக் கொண்டதால் திமுக சட்டமன்றக் குழுவின் தலைவராக கருணாநிதி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உண்மையில் அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சு எழுந்தவுடனேயே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலரையும் அழைத்துப் பேசத் தொடங்கி விட்டார் எம்.ஜி.ஆர். பேசப்பேச பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கருணாநிதிக்கு இருப்பது எம்.ஜி.ஆருக்குப் புரிந்துவிட்டது. விளைவு, முடிவெடுக்காமல் இருந்தவர்களையும் கருணாநிதியின் பக்கம் திருப்பத் தொடங்கினார். அதை எம்.ஜி.ஆரே பின்னாளில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் வெளியிட்டார். 

இதுகுறித்து நாவலர் நெடுஞ்செழியன் தனது சுயசரிதையில் ‘கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் திமுக எம்.எல்.ஏக்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து விருந்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆதித்தனாரும் தன் பங்குக்கு நிறைய உதவிகளைப் பொருளாதார ரீதியாகச் செய்து கொடுத்தார்’ என்று எழுதியிருக்கிறார்.

பெரிய அளவில் கருணாநிதிக்கு ஆதரவு உருவாகியிருக்கிறது என்று தெரிந்ததும் நேராக கருணாநிதியிடம் சென்று பேசினார் எம்.ஜி.ஆர்.  பெரும்பாலானோரின் விருப்பத்தைத் தட்டிக்கழிக்கவே கூடாது என்று எம்.ஜி.ஆரும் மற்ற திமுக முன்னணித் தலைவர்களும் முடிவெடுத்தனர்.   பெரியாரின் ஆதரவும் கருணாநிதிக்கே இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் தொடர்ந்து முதலியார் இனத்தவர்கள் முதல்வராக வந்த நிலை மாறி ஒரு பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வரட்டுமே என்றுதான்.  பக்தவத்சலத்தை தொடர்ந்து அண்ணா அதன்பின் நெடுஞ்செழியன் என்றால் தொடர்ந்து மூன்று முதலியார்களே முதல்வராக வந்திருப்பார்கள்.  

ஆக, அடுத்த முதலமைச்சராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. அந்த அமைச்சரவையில் யார், யார் இடம்பெறுவது என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நெடுஞ்செழியன். ‘ நான் திமுக சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றுவேன். கலைஞர் கருணாநிதி அமைக்கப்போகும் அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன். எப்போதும்போல் கழகத் தொண்டினை ஆற்றிக்கொண்டு வருவேன்.’ என்று சொன்னதோடு நிறுத்தாமல் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று தன்னுடைய அறையைக் காலி செய்யும் முயற்சியில் இறங்கினார். அதைப் பார்த்த க. ராசாராம் எம்.பி கருணாநிதிக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாகக் கோட்டைக்கு வந்த கருணாநிதி, நேரே நெடுஞ்செழியனின் அறைக்குச் சென்று அவரிடம் பேசினார். துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். அவை முன்னவராகவும் நீங்களே இருங்கள் என்றார். சட்டமன்றத்தில் உங்களுக்கு அடுத்த இருக்கையில் நான் அமர்கிறேன் என்று சொல்லி நெடுஞ்செழியனின் கைகளைப் பற்றிக் கொண்டார். ஆனால் நெடுஞ்செழியனோ எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. நான் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரமாட்டேன்; ஒரு முடிவுக்கு வந்தால் மாறமாட்டேன் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

அதிருப்தி காரணமாக அப்படியொரு முடிவை எடுத்திருந்தார் நெடுஞ்செழியன். ஆனாலும் கட்சியின் மூத்தவரான அவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள விரும்பினார் கருணாநிதி. உடனடியாக என்.வி. நடராசன், ப.உ. சண்முகம், ஏ. கோவிந்தசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று நெடுஞ்செழியனிடம் பேசினர். பெரியாரும் நெடுஞ்செழியனை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார். இந்த நெருக்கடியான நேரத்தில் நாவலரும் மற்றவர்களும் கண்ணைமூடிக்கொண்டு கலைஞரை ஆதரிக்கவேண்டும் என்றார் பெரியார்.

இதனைத் தொடர்ந்து 10 பிப்ரவரி 1969 அன்று கருணாநிதி தலைமையில் திமுக அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.  

தி மு கவின் வரலாற்றில் நெடுஞ்செழியனின் பங்கு மகத்தானது. நாடெங்கும் சுற்றிப் பேசி நடமாடும் பல்கலைக் கழகம் என்று புகழப் பட்டவர். 1953 ல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் திராவிட இயக்க வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை. அப்போது அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராசன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு ஐவர் வழக்கு என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் அவர்களே திமுகவின் ஐம்பெருந்தலைவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் கருணாநிதி யின் பெயர் இல்லை.  

பொதுச்செயலாளர் பொறுப்பை கட்சியின் மற்ற தலைவர்களுக்கும் கொடுக்க விரும்பியபோது அண்ணா முதலில் தேர்வுசெய்தது நெடுஞ்செழியனின் பெயரைத்தான். அப்போது நடந்த மாநாட்டில், ‘தம்பி வா, தலைமை ஏற்கவா!’ என்று நெடுஞ்செழியனுக்கு அழைப்பு விடுத்தார் அண்ணா. பின்னாளில் அண்ணாவுக்கும் ஈ.வெ.கி. சம்பத்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, திமுக பிளவுபட்டது. 1961 ல் திமுகவில் இருந்து வெளியேறினார் ஈ.வெ.கி. சம்பத். அதன்பிறகுதான் நெடுஞ்செழியனுக்கு முதன்முறையாக இரண்டாம் இடம் கிடைத்தது. ஆம். முதன்முறையாக திமுகவின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார் நெடுஞ்செழியன். சட்டையைக் கிழித்துவிட்டு சம்பத்தை                     தி மு கவிலிருந்து வெளியேற்ற வேலூர் பொதுக் குழுவில் கருவியாக செயல்பட்டவர் கருணாநிதி என்கிற செய்தியும் அன்று பேசப்பட்டது. 

தமிழ் தேசியக் கட்சி என்னும் புதிய கட்சியைத் தொடங்கிய சமயத்தில், திமுக மீது கொள்கை ரீதியாக பல தாக்குதல்களைக் கொடுத்தார் ஈ.வெ.கி. சம்பத். அப்போது அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதினார் நெடுஞ்செழியன். சம்பத் எழுப்பிய  விமரிசனங்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையிலும் கொள்கை தொடர்பாக திமுக தொண்டர்களுக்குப் புரிதலை ஏற்படுத்தும் வகையிலும் அந்தப் புத்தகம் அமைந்தது.  ‘ அன்று திராவிடர் கழகம் பிரிவதற்குத் தந்தை காரணமாக இருந்தார். இன்று திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவதற்குத் தனயன் காரணமாக இருக்கிறார்’ என்பது அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வரிகள். ( சம்பத் பெரியாரின் அண்ணன் மகன்). 

அன்று முதல் திமுகவின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் சமயங்களில் எல்லாம் நெடுஞ்செழியன் முக்கியப்பங்கு ஆற்றினார். பிரிவினைத் தடைச்சட்டம் அமலுக்கு வந்ததன்மூலம் திமுகவுக்கு ஆபத்து ஏற்பட்டபோது திமுகவின் கொள்கை சற்றே திருத்தியமைக்கப்பட்டது. அப்போது அவைத்தலைவராக இருந்தவர் நெடுஞ்செழியன். 1965ல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடங்கும் முடிவை திமுக எடுத்தபோது அவைத்தலைவராக இருந்தவர் நெடுஞ்செழியன். 1962 தேர்தலுக்குப் பிறகு நெடுஞ்செழியன்தான் சட்டமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  

இன்னும் சொல்லப்போனால் 1967ல் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோது முதல்வர் பதவிக்கு அண்ணாவின் பெயரை முன்மொழிந்தவர் நெடுஞ்செழியன். திமுகவின் முதல் அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார் நெடுஞ்செழியன். கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த அவருக்கு, ஆட்சியிலும் அதே இடம் கிடைத்தது.

அண்ணா மறைவுக்குப் பிறகு முதன்முறையாக முதலிடத்தை நெருங்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்காலிக  முதல்வரானார். பதவி நிரந்தரமாகவே அவர் வசம் இருந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் அந்த இடத்தில்தான் அரசியல் காய்நகர்த்தல்கள் அண்ணாவின் சவ அடக்கம் நடக்குமுன்னே தொடங்கின. அண்ணா இருக்கும்வரை எந்தப்பதவிக்கும் போட்டி போடாமல் இருந்த நெடுஞ்செழியன் முதன்முறையாக முதல்வர் பதவிக்காக கலைஞருடன் போட்டியிட வேண்டிய சூழல் உருவானது. அப்போது மேலே குறிப்பிட்டபடி எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலைஞரின் பக்கமே இருந்தனர். விளைவு, கலைஞர் முதல்வரானார்.

கருணாநிதி ஆதரவாக எம்.ஜி.ஆர் செயல்பட்டதில் நெடுஞ்செழியனுக்கு பலத்த அதிருப்தி. கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் எம்.ஜி.ஆர் திமுக எம்.எல்.ஏக்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து விருந்து கொடுத்ததும். ஆதித்தனாரும் தன் பங்குக்கு நிறைய உதவிகளைப் பொருளாதார ரீதியாகச் செய்துகொடுத்ததும் பெரும் மன உளைச்சலைக் கொடுத்தது. 

தொடர்ந்து கட்சியின்  பொதுச்செயலாளர் பதவிக்கும் இருவருக்கும்   போட்டி உண்டாகும் சூழ்நிலை  ஏற்பட்டது. கட்சி நிர்வாகப் பணிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தலைவர் பதவி உருவாக்கப் பட்டு , திமுக தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் வந்தனர். அண்ணா மறைந்த பிறகு அவரது எண்ணங்களுக்கு மாறான முதல் அத்து மீறல் இதுவே.  இப்போதும் கலைஞரின் பக்கமே எம்.ஜி.ஆர் இருந்தார்.

1972ல் கலைஞருக்கு எதிராக எம்.ஜி.ஆர் போர்க்கொடி தூக்கியபோது எம்.ஜி.ஆருக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியவர் நெடுஞ்செழியன்.  அத்துடன் பொதுக் கூட்டங்களில் எம் ஜி யாரை காரசாரமாகத் தாக்கிப் பேசினார். அண்ணா தி மு கவின் தேர்தல் சின்னம் இரட்டை இலை  என்று அறிவிக்கப் பட்டபோது “ இரட்டை இல்லையா? முளைத்து மூன்று இலை  கூட விடவில்லை “ என்று நையாண்டி பேசினார்.  பதிலுக்கு எம் ஜியாரும் சர்க்காரியா கமிஷனில் கொடுத்த ஊழல் பட்டியலில் ஒரு  நிறுவனத்தில் சென்னை ஜெமினி மேம்பாலம் கட்டும் ஒப்பந்தம் பெற்றுத்தர வைர நெக்லசை பரிசாகப்  பெற்றார் என்று நெடுஞ்செழியன் மீது குற்றம் சாட்டி இருந்தார். 

என்றாலும், அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களும் தேர்தல் முடிவுகளும் நெடுஞ்செழியனை எம்.ஜி.ஆரின் பக்கம் கொண்டுசேர்த்துவிட்டன. முதலில் திமுகவில் இருந்து விலகி, மக்கள் திமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சியை நடத்த முடியவில்லை. பிறகு எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார். எம்ஜியாரால்  ப. உ . சண்முகம் உட்பட்ட பல முன்னாள் தி மு கவினர் இவ்விதம் அரவணைக்கப் பட்டனர். கருணாநிதி வசம்  தி மு க  சென்று சேர்ந்துவிட இவைகள் காரணமாயின. பேராசிரியர் அன்பழகனைத்தவிர ஒட்டு மொத்த திமுகவின் முன்னணித் தலைவர்கள் எம்ஜியாரோடு ஐக்கியம் ஆயினர்.  

நாஞ்சில் மனோகரன் அதிமுகவில் இருந்தவரை அவருக்குத்தான் இரண்டாம் இடம். அவர் வெளியேறியபிறகு அதிமுகவின் இரண்டாம் இடம் நெடுஞ்செழியன் வசம் வந்தது. அன்று தொடங்கி எம்.ஜி.ஆர் மறையும் வரை கட்சியிலும் ஆட்சியிலும் நிரந்தர இரண்டாம் இடம் அவருக்குத்தான். நிதியமைச்சர் என்ற முக்கியத்துவம் வாய்ந்த துறை அவர் வசமே இருந்தது. இடையில் எம்.ஜி.ஆர் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது தற்காலிக முதல்வராகச் செயல்பட்டார்.

எம்.ஜி.ஆர் மரணம் அடைந்தபோது மீண்டும் தற்காலிக முதல்வர் பதவி கிடைத்தது. அப்போது அதிமுக இரண்டு கூறுகளாகப் பிரிந்தது. நெடுஞ்செழியன், ஜெயலலிதா உள்ளிட்டோர் ஒரு பிரிவாகவும் ஜானகி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் இன்னொரு பிரிவாகவும் இயங்கினர். பிறகு ஜெயலலிதாவுடனும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா – நெடுஞ்செழியன் இடையே நடந்த கருத்துமோதலின்போது பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் ரசனை குறைவானவை.

இங்கு எழுதப் பட முடியாத வார்த்தைகளால் ஒதுக்கப் பட்ட  அலட்சியப்படுத்தப்பட்ட பின்னரும் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும இரண்டாம் இடம் பெற்றுக்கொண்டவர் சகிப்புத்தன்மைக்குப் பெயர் போன நாவலர்.  ஜெயலலிதாவுடன் மனஸ்தாபமானபோது ஒரு சுவாரசியம். சுயேட்சையாக சட்டசபைக்கு போட்டியிட்டு நெடுஞ்செழியன் மயிலாப்பூர் தொகுதியில்  ஐநூறு ஓட்டுக்கள் மட்டுமே  வாங்கினார். அப்போது அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் திரைப்பட நடிகர் எஸ்.வி சேகர் இவரை விட அதிக ஓட்டு வாங்கினார். நடமாடும் பல்கலைக் கழகம் என்று நாடறிந்த ஒரு அனுபவம் பெற்ற அரசியல்வாதியின் அடையாளம் அலங்கோல அரசியலால் இப்படி வெளிப்பட்டது. தன்னை உணர்ந்தார். தனது பலத்தை யும் அறிந்தார். 

1991ல் ஜெயலலிதா வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபோது நெடுஞ்செழியனுக்கு அமைச்சரவையில் இரண்டாம் இடம் கிடைத்தது. அதன்பிறகு நெடுஞ்செழியனின் அரசியல் வாழ்க்கையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமில்லை. அண்ணா, கருணாநிதி எம்ஜியார், ஜெயலலிதா என்கிற  பல முதலமைச்சர்களின் அவையில் இரண்டாம் இடம் நெடுஞ்செழியனுக்கு நிறந்தரமாகிப் போனது. 12 ஜனவரி 2000 அன்று மரணம் அடைந்தார். 

திராவிட இயக்கத் தலைவர்களில் அதிகம் எழுதியவர்கள் என்று பட்டியல் போட்டால் அதில் நெடுஞ்செழியனுக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக, அவர் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகத்தைச் சொல்லவேண்டும். அதிமுக தொண்டர்களுக்கு வரலாறு புரியவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட புத்தகம் என்று முன்னுரையில் பதிவுசெய்திருப்பார். திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் விரும்புவோர் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.

நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் ஏற்பட்ட மனத்தாங்களில் இவர்கள் பரிமாறிக்கொண்ட நாகரிகமான அரசியல் சொல்லாடல்கள் பலருக்கு உதாரணமாகத் திகழ வேண்டியவை. ஆனாலும் ஒரு முறை நெடுஞ்செழியனைப் பற்றி கருணாநிதி “ அவர் மனைவி பேச்சைக் கேட்பவர் ” என்று சொன்னபோது அதற்கு நெடுஞ்செழியன் சொன்ன பதில் , “ ஆமாம் ! நான் மனைவி பேச்சை கேட்பவன்தான். ஏனென்றால் நான் கேட்பதற்கு மனைவி மட்டுமே எனக்கு உண்டு “ என்று சொன்னார். இந்த வார்த்தைகள்,   பல சொல்ல மறந்த கதைகளை   ‘ கனிந்த மொழியில் ‘ சொல்லாமல் சொல்லும்.   

அரசியல் வாழ்வில் நெடுஞ்செழியன் தொட்ட உயரங்கள் முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், வெற்றிக்கோட்டின்  மூச்சுக்காற்று முகத்தில் படும் அளவுக்கு நெருங்கியபிறகும் கோட்டைக் கடக்கமுடியாத வருத்தம் இறுதிவரை அவருக்கு இருந்திருக்கும். 

பல ஆண்டுகளாக தமிழக அரசியலை உற்று நோக்கும் பலருக்கு ஒரு ஆதங்கம் இருக்கலாம். ஒரு வேளை கருணாநிதியை எம் ஜி யார் ஆதரிக்காமல் நெடுஞ்செழியனை  அன்று முதல்வராக்கி இருந்து இருந்தால் அதன் பிறகு நடைபெற்ற அதிகாரப் போட்டிகளையும்  அறிவியல் ரீதியான ஊழல்களையும்  சட்டமன்ற குடுமிப்பிடி சண்டைகளையும்  நரகல் மொழி நாடகங்களையும்  இன்று வரை அரங்கேறிக் கொண்டு இருக்கும் பகைமை அரசியலையும் தமிழகத்தின் வரலாறு பார்க்காமலேயே இருந்திருக்கக் கூடும். அதே நேரம் திமுகவினர் வர்ணித்தது போல் வெண்டைக்காயாகவும் தான் ஒரு அரசியல் அசடு என்றும்  நிருபித்த நெடுஞ்செழியனின் நிர்வாக திறமையின்மையால் கட்சியும் ஆட்சியையும் இதுவரை காணாமலும் போயிருந்து இருக்கலாம். யார் கண்டது. ?

மீண்டும்   சந்திக்கலாம். இன்ஷா அல்லாஹ்….
முத்துப் பேட்டை  P. பகுருதீன் .B.Sc;

23 Responses So Far:

M.B.A.அஹமது said...

அஸ்ஸலாமு அழைக்கும் பகுருதீன் காக்கா தங்கள் சொன்னது போலவே இரண்டாம் இடம் தி மு காவில் ஈ வீ .கே .சம்பத் பிரிந்த பிறகே நாவலர் நெடுஞ்செழியனுக்கு கிடைத்தது .அப்போது ஈ வீ கே வுடன் பிரிந்தவர்கள் எங்கள் ஊரை சேர்ந்த N . S . இளங்கோ வும் ஒருவர் அவர் அன்று சம்பத்துடன் பிரிந்து வராமல் இருந்து இருந்தால் இன்று அவரும் அன்பழகனை போல் ஆற்காட்டை போல் துரைமுருகனை போல் மந்திரியாகவும் மாவட்ட செயலாரகவும் வளம் வந்திருப்பார் இது அதிரையில் உள்ள பல பேருக்கு தெரியும் .அதிரைக்கும் பெருமை சேர்த்திருக்கும்.இது அதிரை நிருபர் என்பதால் .உங்கள் நேற்று இன்று நாளையுடன் எங்கள் ஊர் தொடர்புடைய செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறேன்

Ebrahim Ansari said...

சகோதரர் M.B.A.அஹமது அவர்கள் நினைவூட்டிய நமது ஊரைச் சேர்ந்த என். எஸ். இளங்கோ அவர்கள் தி மு கவின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். அன்றைய தி மு க வின் தஞ்சை மாவட்ட செயலாளர் ஆகப் பணியாற்றியவர். அப்போது துணைச் செயலாளராக இருந்த மன்னை நாராயண சாமிதான் பின்னர் மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் உருவெடுத்தார். என் எஸ் இளங்கோ அவர்கள் தி மு க வில் இருந்து விலகியதன் மூலம் அவரது வாய்ப்புகளை இழந்தார் என்பது உண்மை.

திரு என் எஸ் இளங்கோ அவர்களின் தங்கை மகன் எனது பால்ய நண்பர் என்பதால் அவர்களின் வீட்டுக்குள் தாராளமாக போய் வருவேன். இன்று அந்த இடத்தில்தான் பெரிய வணிக வளாகம் எழுந்துள்ளது. அவர்கள் வீட்டில் பெரிய நூலகம் இருக்கும். அதில் போய் நிறைய நேரம் அமர்ந்து பல நூல்களைப் படித்து இருக்கிறேன். ஆயிரக்கணக்கான அந்த நூல்கள் இன்று என்ன ஆயிற்றோ எனத் தெரியவில்லை.

ஒரு முறை இளங்கோ அவர்கள் வீட்டுக்கு போயிருந்த போது வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி உள்ளே வந்தவர் அன்றைய தி மு க பொருளாளர் கருணாநிதி. இளங்கோ அவர்களின் தாயார் இறந்து போனதற்காக துக்கம் விசாரிப்பதற்காக வந்ததார் . அப்போது இளங்கோ தி மு க வில் இல்லை. இருந்தாலும் நட்புக் கருதி மட்டுமல்ல கஷ்டப்பட்ட காலங்களில் இளங்கோ பல வகைகளில் கருணாநிதிக்கு உதவி இருக்கிறார். பரம்பரைப் பணக்காராரான இளங்கோ வீட்டில் கருணாநிதி பல நாட்கள் தங்கி இருந்து இருக்கிறார். இளங்கோவின் இயற் பெயர் ஸ்ரீராமுலு. திராவிடக் கழகத்தில் சேர்ந்த பிறகு இளங்கோ என்று மாற்றிக் கொண்டார்.

சம்பத்துடன் தி மு க வை விட்டு இளங்கோ விலகிய பிறகே திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தை சம்பத் நடத்தி வைத்தார். நடிகர் குலதெய்வம் ராஜகோபால் போன்றவர்கள் வந்திருந்தனர். அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கலர் பாட்டில் உடைத்துக் கொடுத்த பையனாக பந்தலில் நானும் நின்றேன் என்பது நினைவில் உள்ளது.

இன்று நினைத்தாலும் இதயம் கனக்கச்செய்யும் இளங்கோ அவர்களின் நினைவும் அவர் வீட்டில் இருந்த நூல் நிலையமும் .

Ebrahim Ansari said...

//நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் ஏற்பட்ட மனத்தாங்களில் இவர்கள் பரிமாறிக்கொண்ட நாகரிகமான அரசியல் சொல்லாடல்கள் பலருக்கு உதாரணமாகத் திகழ வேண்டியவை. ஆனாலும் ஒரு முறை நெடுஞ்செழியனைப் பற்றி கருணாநிதி “ அவர் மனைவி பேச்சைக் கேட்பவர் ” என்று சொன்னபோது அதற்கு நெடுஞ்செழியன் சொன்ன பதில் , “ ஆமாம் ! நான் மனைவி பேச்சை கேட்பவன்தான். ஏனென்றால் நான் கேட்பதற்கு மனைவி மட்டுமே எனக்கு உண்டு “ என்று சொன்னார். இந்த வார்த்தைகள், பல சொல்ல மறந்த கதைகளை ‘ கனிந்த மொழியில் ‘ சொல்லாமல் சொல்லும். //

மாநிலங்கள் அவை தேர்தல் நேரத்தில் நல்ல நக்கல் நண்பரே.

M.B.A.அஹமது said...


பெரியவர் திரு இளங்கோ அவர்கள் வீட்டில் கலைஞர் கருணாநிதி.ராஜாமடத்தில் படிக்கிற காலத்திலிருந்து பிறகு கட்சி பணிக்காக தஞ்சை புதுகை ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வருகின்றபோது மாதகணக்கில் தங்கியிருந்தாக கேள்வி பட்டுள்ளேன் .இது எப்படியும் இப்ராகிம் அன்சாரி காக்காவுக்கு தெரிந்திருக்கும் என்று தான் நினவுபடுதினேன் .நான் செவி வலி கேட்ட செய்தியை அவர்கள் மலரும் நினைவுகளாக அந்த சம்பவங்களில் பங்கு கொண்டவர்களாக .இங்கே பகிர்ததில் மகிழ்ச்சி அதிரையின் பொருளாதார நிபுணரே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ரசனையான அலசலுடன் கூடிய வரலாற்று குறிப்புகள், வளர்த்த கட மார்பில் பாயுதடான்னு நம்மாளு பாடினாரே... அது திமுக'விலிருன்து வெளியேறினால்தான் அந்தப் பட்டமா ?

//தட்ட வேண்டிய இடத்தில் தட்டி வெட்ட வேண்டிய இடத்தில் வெட்டி குட்ட வேண்டிய இடத்தில் குட்டி வளர்ந்த சுறுசுறுப்பான இளைஞர். கடுமையான உழைப்பாளி. கட்சி வளர்ச்சிக்காக நிதி சேகரிப்பதில் வல்லவர். //

காக்கா,

இவர் தள்ளாத வயதிலும் இளமையோடுதானே இருக்கிறார், அதனால் தானே தள்ளு வண்டியிலும் சுட்டித் தாத்தாவாக இருக்கிறாரே !

வீல்-சேர்மேன் ஆகவே இருக்கிறார் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இ.அ.காக்கா அவர்களின் பின்னூட்டம் சாம்ஸங்க் ஃபோனில் நேவிகேட்டரை அழுத்திக் கொண்டு பயணிப்பது போன்று பிரம்மை வரலாற்றின் அனைத்து மூலைமுடுக்கெல்லாம் பயணிக்கிறது...

கட்டுரைக்கு முக்கிய அணிகலன்களில் ஒன்றாக உங்களின் கருத்தாடல் இருப்பது சிறப்பு - ஜஸாக்கல்லாஹ் காக்கா !

sabeer.abushahruk said...

காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அருமை. அழகு. வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்கும் விதம் நெஞ்சை அள்ளுகிறது. திராவிடர்களின் குழுக்களில் உள்ளவர்கூட இவ்வளவு நுணுக்கமாக அவதானித்து எழுதுவரா? சந்தேகமே.

இருப்பினும், எல்லாம் பத்து மதிப்பெண்களுக்கான பதில்களாகவே இருக்கின்றனவே, ஐந்து மதிப்பெண்களுக்கான பதில்களாகிய கீழ்க்கண்டவற்றிற்கும் சிரமத்தைப் பார்க்காமல் சிறு குறிப்பு வரைந்தால் நாங்களும் அறிய ஏதுவாகும்.

01) 1953ல் திமுக நடத்திய மும்முனை போராட்டம் என்றால் என்ன?

02) பிரிவினை தடைச் சட்டம் எதைத் தடுத்தது? பின்னணி யாது?

கட்டுரையின் ஆசிரியர் தங்களுக்கு நேரம் வாய்க்காவிடில், தஙகளின் அன்புத் தோழர் இப்ராகிம் அன்சாரி காக்காஅவர்களோ சகோ எம்பிஏ அஹ்மது அவர்களோக்கூட அறியத் தரலாம்.

நன்றி. அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

ZAKIR HUSSAIN said...

நெடுஞ்செழியன் பட்டுக்கோட்டைக்கு பக்கத்தில் உள்ள ஊரைச்சார்ந்தவர் என படித்ததாக ஞாபகம்>>>இதனால் ஏதாவது உருப்படியாக இந்த பகுதிக்கு செய்திருக்கிறாரா?

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர் ! நெடுஞ்செழியன் பட்டுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர்தான். பட்டுக்கோட்டைக்கு ஏதேனும் உருப்படியாக செய்திருக்கிறாரா என்று பலரிடம் கேட்டுப் பார்த்ததில் அதிக பட்சமாக பட்டுக்கோட்டை காசாங்குளம் வடகரையில் ஏழெட்டுப் பொதுக்கூட்டங்கள் பேசி இருக்கிறாராம். ஒரு முறை பட்டுக் கோட்டை உயர் நிலைப் பள்ளி ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு இருந்தாராம்.அவரது பேச்சு கேட்டு பட்டுக் கொட்டை மக்கள் மகிழ்ந்து கை தட்டினார்களாம். இதை நண்பர் பகுருதீன் சொல்கிறார்.

அப்துல்மாலிக் said...

தமிழ்நாட்டின் அரசியல் மாற்றங்களையும் வரலாற்றையும் ஓரளவேனும் தெரிந்துக்கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பு...

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி சபீர்!

கேள்வியின் நாயகனே! உங்கள் கேள்விக்கு பதில் இதோ ! நான் அறிந்தவரை.

தமிழக அரசியலில் அப்போதுதான் நடை பயிலத் தொடங்கியிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தனது இருப்பைப் பதிவு செய்வதற்கான ஒரு வாய்ப்பாக 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மும்முனைப் போராட்டம் என்பதாக ஒன்றை நடத்த முடிவு செய்தது. அதில் ஒரு முனைதான் கல்லக்குடிப் போராட்டம்.

கல்லக்குடி என்ற ஊரில் சிமின்ட் தொழிற்சாலை ஏற்படுத்தப் பட்டு அதற்கு டால்மியா புரம் என்று இரயில நிலையம் என்று பெயர் சூட்டப் பட்டது. வடநாட்டான் பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் இது.
இது ஒரு முனை.

அடுத்த முனை நேரு தமிழர்களைப் பார்த்து நான்சென்ஸ் என்று கூறிய வார்த்தையை வாபஸ் பெற வேண்டுமென்று ஓடும் இரயிலில் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்தும் போராட்டம். இது ஒரு முனை.

தி.மு.க. தனது மும்முனைப் போராட்டத்தில் சேர்த்துக்கொண்ட மூன்றாவது போர் முதலமைச்சர் வீட்டு வாயிலின்முன் அவரை வெளியே வரவிடாமல் மறியல் செய்வது. ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்துக்குக் ‘குலக் கல்வித் திட்டம்’ எனப் பட்டம் சூட்டி அதைக் கைவிட வற்புறுத்துவதற்கான போர்முறை அது.

இவைகளே திமுகவின் வரலாற்றில் மும்முனைப் போராட்டம் என்று கூறப்பட்டன.

டால்மியா புரம் என்கிற பெயர் கருணாநிதி முதல்வரான பின்புதான் கல்லக்குடி பழங்காநத்தம் என்று மாற்றப் பட்டது என்பது கூடுதல் தகவல்.

இதை வைத்தே கருணாநிதிக்கு கல்லக்குடி கொண்டான் என்ற பட்டமும் வழங்கப் பட்டது.

கல்லக்குடி கொண்ட கருணாநிதி கருணாநிதி வாழ்கவே! என்று நாகூர் ஹனிபா பாடி பாடிவிட்டு இன்று கேட்க நாதியின்றி நாகூரில் ஒரு ஓட்டைக் கட்டிலில் படுத்துக் கிடப்பது இன்னொரு சோகக் கதை.



Ebrahim Ansari said...

தம்பி! மக்ரிபுக்குப் பிறகு பிரிவினை வாத தடைச்சட்டம் பற்றி பேசலாம். இப்போது இங்கு மணி ஐந்தரை. நண்பர் பகுருதீனை பள்ளியில் சந்திப்பேன். கலந்து பேசி பதில் தருகிறேன்.

இந்தத்தொடரைப் படிப்பதில் பலர் காட்டும் ஆர்வம வியக்க வைக்கிறது. இன்னும் உள்ளன. ஏராள செய்திகள்.

M.B.A.அஹமது said...

சபீர் காக்கா அஸ்ஸலாமு அழைக்கும் நீங்கள் என்னைவிட மூத்தவர்கள் நான் முன்பே சொல்லி உள்ளேன் சாகுல் காக்காவின் புகைப்படத்துக்கு முன் சபீர்காகாவின் கவிதைக்கு முன் நான் மை இருட்டென்று எனக்கு வரலாற்றில் விருப்பமிருந்தால் நான் ஆர்ட்ஸ் குரூப் எடுத்திருப்பேன் நான் சயின்ஸ் குரூப் ஆரம்ப காலத்தில் வரலாற்று ஆசிரியர்களான வாவண்ண சாரிடமும் முத்துபேட்டை சாஜஹான் சாரிடமும் நல்ல பேர் எடுத்திருப்பேன் .நீங்கள் கேட்ட கேள்வி 5 மார்க் அல்ல 200க்கு 200 ஆமா நீங்க 1958ல் இந்திய அரசாங்கம் கொண்டுவந்த திரிபூர் நாகலாந்து மேகாலய மிசாரம் மணிப்பூர் மாநிலங்களில் உள்ள டெர்ரரிஸ்ட் ஒடுக்கவதற்காக கொண்டுவந்த AFSPA பிறகு 1989 ல் கஷ்மீரில் கடுமையாக்கப்பட்டுள்ள separatist movement act கேட்குரியலா இல்லை... 1938 ல் ஜஸ்டிஸ் பார்ட்டி தமிழ் பேசும் மக்களுக்கு தனி நாடு என்று முதல் தீர்மானம் நிறைவேற்றி முதல் விதையை விதைத்தார்கள் 1939 ல் தந்தை பெரியார் அவர்கள் திராவிட நாடு திரவிடனுக்கெ ,தமிழ்நாடு தமிழனுக்கே என்ற கோசத்துடன் முதல் மாநாட்டை துவக்கினார் ஆரியர் திராவிடர் ஆத்திகர் நாத்திகர் என்று anti பிராமின் கொள்கை தான் ஹிந்தி எதிர்ப்பு நமது தமிழக முஸ்லிம்களும் சப்போர்ட் பிறகு 1940 ல் காஞ்சிபரம் திருவாரூர் மாநாடு 1947 ஜூலையில் திருச்சி மாநாட்டிற்கு பிறகு மகாத்மா காந்தியே கொதிதேளுந்திவிட்டார் ஜின்னாஹ் முதலில் பெரியாருக்கு சப்போர்ட் செய்தார் மகாத்மா காந்தியின் கோபத்திற்கு பிறகு ஜின்னாஹ் விலகி கொண்டார் 1939 ல் திராவிட நாடு என்ற அஸ்திரத்தை கையில் எடுத்து 1957 ல் சட்டசபையில் வெறும் 15 சீட் தான் தி மு கவுக்கு பிறகு 1962 ல் 50 சீட் 1967 ல் 138 சீட் தனி மெஜாரிட்டி அதோடு குழி தோண்டி புதைத்து விட்டார்கள் எப்போதாவது தேவை பட்டால் அப்பப்ப தோண்டி எடுப்பார்கள் காரியம் முடிந்தவுடன் கப் சிப் ஆகிவிடுவார்கள் 1967 ல் தனி மெஜோரிடியுடன் 138 சீட் ஜெயித்தவுடன் மருமகன் மாறனை விட்டு நான் முதலில் தமிழன் ஆனால் இந்தியனும் கூட என்று சொல்ல சொல்லிவிட்டார் இதெல்லாம் ஒரு ஹிண்ட்ஸ் தான் எங்கள் பொருளாதார மேதை இப்ராகிம் அன்சாரி காக்கா மக்ரிப் தொழுகைக்கு பிறகு வந்து உங்களுக்கு முழு விபரத்தையும் கொடுப்பார்கள்










Ebrahim Ansari said...

அன்புச் சகோதரர் அஹ்மத் அவர்கள் தந்துள்ள குறிப்புகளுக்கு நன்றி.

திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பெயரில் கட்சி ஆரம்பிக்கப் பட்ட போது அதன் உயிர் நாடியான கொள்கையாக திராவிட நாடு திராவிடருக்கே என்கிற கொள்கை அரங்கேற்றப் பட்டது. இதைத்தொடர்ந்து தி மு கவின் பிரச்சாரங்களில் இதுவே முன்னிறுத்தப் பட்டது.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்றெல்லாம் பேசப்பட்டது. முரசொலி மாறன "ஏன் வேண்டும் இன்பத் திராவிடம் ? " என்று ஒரு நூல் எழுதினார். அதாவது இந்தியாவைப் பிரித்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியப் பகுதிகளைக் கொண்ட திராவிட நாடு அமைய வேண்டுமென்பதே இந்தக் கோரிக்கை. கண்ணதாசன் தனது திரைப்படப் பாடல்களில் " எங்கள் திராவிடப் பொன்னாடு " என்றும் , " அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்றெல்லாம் சேர்த்து எழுதினார்.

1949 -ல் ஆரம்பிக்கப்பட்ட தி மு க 1957ல் தான் தேர்தலில் போட்டியிட்டது. கட்சி தொடங்கப் பட்டது முதல் நாடு பிரிக்கப்பட வேண்டுமென்பதே கோரிக்கையாகவும் கொள்கையாகவும் இருந்தது. இருந்தாலும் பண்டித நேரு தலைமையில் உள்ள மத்திய அரசு அப்போது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. முதலில் பங்கு கொண்ட தேர்தலில் தி மு க 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆனால் 1962-ல் நடைபெற்ற தேர்தலில் அண்ணா தோற்றாலும் தி மு க 50 இடங்களில் வெற்றி கண்டது நேருவை உஷார் படுத்திவிட்டது. காங்கிரஸ் தோல்விமுகம் கண்டு வரத் தொடங்கிவிட்டது ஒருபுறம் - நாட்டுப் பிரிவினையை முன் நிறுத்தும் கொள்கை வெற்றி பெறத்தொடங்கி இருப்பதாகவே மத்திய அரசு உணர்ந்தது. எனவே இதை வேரறுக்க கொண்டுவரப் பட்ட சட்டம்தான் பிரிவினை வாத தடை சட்டம்.

இந்த சட்டத்தின் ஷரத்துக்களில் நாட்டுப் பிரிவினையை தூண்டும் அல்லது பிரச்சாரம் செய்யும் கட்சிகள் தடை செய்யப் படும். தேர்தல்களில் போட்டியிட முடியாது ஆகியன அடங்கின. திமுகவை தடை செய்யும் நோக்கிலேயே இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது.

எனவே மத்திய அரசு எங்கள் மீது கத்தியுடன் பாயும்போது நெஞ்சைக் காட்டி குத்து வாங்கி சாகத் தயாரில்லை என்ற உதாரணத்தோடு திராவிட நாடு கோரிக்கையை தி மு க கைவிடுவதாக அண்ணா அறிவித்தார். காரணம் திமுக வுக்கு 'அதையும் தாண்டி புனிதமான' சமூக சேவைகளை செய்ய தி மு க உயிரோடு இருக்க வேண்டுமென்ற எண்ணம் அண்ணாவுக்கு இருந்தது. ஆகவே திராவிட நாட்டுப் பிரிவினை கோரிக்கை கைவிடப்பட்டது.

இதில் பெரிய இராஜதந்திரமும் ஒரு மென்மையான போக்கும் மேலோங்கியது. நாட்டுப் பிரிவினை கோரிய பஞ்சாப் பகுதிகளில் வன்முறை கலாச்சாரங்கள் தலை காட்டின. இன்றும் கூட காலிஸ்தான், உல்பா போன்ற பிரிவினை சக்திகள் வன்முறையை கையிலெடுத்து அமைதி குலைத்து வருகின்றன. ஆனால் பிரிவினை தடை சட்டத்தை எதிர்த்தால் அதை வன்முறையின் மூலமே எதிர்க்க முடியும் என்பதை அறிந்த அண்ணா அந்தக் கொள்கையையே கை விட்டார். இதனால் வீண் பிடிவாதம் பிடிக்காமல் தமிழ்நாடு அமைதிப் பூங்க்காவாகவே இருந்தது.

இலங்கையில் தனி நாடு கேட்டு எழுந்த கோரிக்கை எவ்வளவு பெரிய வன்முறைகளில் கொண்டுபோய் விட்டது என்பது சரித்திரம்.

எனவே பிரிவினை தடைச் சட்டம் வந்துவிட்டது என்றதுமே அதற்கு அடி பணிந்து நாட்டின் இறையாண்மைக்கு பணிந்தது தி மு க. இந்த அரசியல் மூவ் செய்துவிட்டு இந்தி மற்றும் பல பிரச்னைகளை கையில் எடுத்து அடுத்த தேர்தலிலேயே மாநில அரசை கைப்பற்றும் அளவு வளர்ந்தது திமுக.

Ebrahim Ansari said...

பிரிவினை கோரிக்கையை கைவிடும்போது பிரிவினை கோரிக்கையைத் தான் கைவிட்டோம் ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்றும் அண்ணா கூறினார்.

sabeer.abushahruk said...

ஆஹா...அற்புதமான விளக்கங்கள். மிக்க நன்றி.

இப்படிக்கு
சபீர்
லாஸ்ட் பெஞ்ச்.

Unknown said...

இந்தக்கட்டுரை ஒன்றை தெளிவாகச்சொல்கின்றது.

அதாவது, அரசியலில் நுழைந்தது முதல் தான் இறக்கும் வரை நெடுஞ்செழியன் ஒரு அரசியல் அப்பிரானியாகவே வாழ்ந்திருக்கின்றார் . என்னதான் இருந்தாலும், தனக்கு போட்டி என்று ஒன்று வந்துவிட்டது என்று அன்றே மன துணிச்சலுடன் எதிர்கொண்டு தோற்று இருந்தால் கூட பிற்காலத்தில், அதுவே வெற்றிக்குப்படியாக அமைந்து இருந்து இருக்கும்.

நாவன்மை மிக்கவர் என்ற காரணத்தால் "நாவலர்" என்ற பட்டம் பெற்றிருந்தால் கூட, மூளையில் வன்மை குன்றியவராகவே இருந்திருக்கின்றார்.

ஜெயலலிதாவின் அரசியல் வரலாறு என்ன ?
இவரின் அரசியல் வரலாறு என்ன ?

இரண்டையும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, அரசியல் அனுபவத்தில்,
மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அப்படி இருக்கையில், ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும், இரண்டாவது ஆலகத்தானே வளம் வந்தார். அன்று போட்டி என்று வந்து விட்டது, என்று ஆவேசமாக வெளியில் வந்தவர், ,எதை சாதித்தார்,? ஜெயலலிதாவின் அரசவையில், இரண்டாவது ஆளாக இருந்துதானே காலத்தை கழித்தார்.?

இதைவிட அரசியல் இவருக்கு என்ன இறங்குமுகம் வந்திருக்கும், அன்று மட்டும் இவர் வெளியில் வராமல் இருந்திருந்தால் ?


அபு ஆசிப்.

அதிரைக்காரன் said...

தமிழக அரசியலில் திமுக எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதே அளவு அதிராம்பட்டினம் (தற்போதைய பட்டுக்கோட்டை) தொகுதிக்கும் முக்கியத்துவம் உண்டு. திமுகவின் தொடக்ககால தலைவர்கள் பலர் இந்த தொகுதியில் இருந்து பிரபலமானவர்களே.

திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள் நமதூர் கடலில் நண்பர்களோடு குளிக்கவந்ததாகவும் அப்போது நீர்சுழலில் சிக்கியதாகவும் நமதூரைச் சார்ந்தவர்கள் நீந்திச் சென்று காப்பாற்றி கரைசேர்த்ததாகவும் வாய்வழிச் செய்தி கேள்விப் பட்டுள்ளேன். அவ்வாறு காப்பாற்றிய அதிரையர்களில் எங்கள் அப்பா(தாத்தா)வும் ஒருவர் என்றும் தகவல். இதுகுறித்த மேலதிக தகவல் யாரும் அறிந்தால் பகிர்ந்துகொள்ளலாமே.

ஆவணப்படுத்த வேண்டிய பதிவு.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். ஆம் நானும் அதிரைக்காரன் சொல்வதுபோல் வாய்வழிச்செய்தி கேள்விப்பட்டதுண்டு. மேலும் அ"திரை"காரனின் அப்பா, அப்ப காப்பாத்தியிருப்பாங்க காரணம் அ'திரை''காரன் ஆச்சே!(என்னப்ப என்றும் அலை உன் பக்கம் தான் அடிக்குது)!ஜமா(ல்)ய்டா!

அதிரைக்காரன் said...

வ அலைக்கும் ஸலாம் மாப்ளே. அப்பா'டா சாட்சிக்கு ஒரு ஆளு கிடைச்சிடுச்சு. (இதைக் காரணமாக வைத்து ராஜ்ஜியசபா சீட்டு கிடைக்க வழியுன்டா? :)

crown said...

அதிரைக்காரன் சொன்னது…

வ அலைக்கும் ஸலாம் மாப்ளே. அப்பா'டா சாட்சிக்கு ஒரு ஆளு கிடைச்சிடுச்சு. (இதைக் காரணமாக வைத்து ராஜ்ஜியசபா சீட்டு கிடைக்க வழியுன்டா? :)
-----------------------------------------------
காலம் "கனிந்து வந்தால் அப்பா!வழிகாட்டியில்....

Anonymous said...

தொடரை படிக்கும் சமகாலத்தை சார்ந்தவர்களை [contemporary] மீண்டும் அதே காலத்துக்கே கொண்டு செல்லும் 'மேஜிக்' வரிகளில் நான் எங்கே இருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் இருப்பது ரூபா அணா பைசா காலமா? என்ற சந்தேகம் வருகிறது. நிகழ்வு நடந்த காலம் என் வயது பதின்னேழிலிருக்கும் இளவயது பையன். எல்லாம் நன்றாக நினைவில். அந்த காலத்து அரசியல் ஒரு இலக்கியம் கண்ணியம் மிக்கவர்களால் நடத்தப்பட்டது.

சினிமா உள்ளே புகுந்ததும் சாக்கடையானது அரசியல். திமுக வேலூர் நிகழ்வு இதையே பேசுகிறது. சட்டமன்றதுக்கு மக்கள் பிரதிநிதியாக போக கட்டுகட்டா பணமும் ஜப்பான் கொரியா போய் கராத்தே-சுஜ்சுட்சு படித்து Blackbelt வாங்கி இடுப்பில் கட்டிகொண்டு வந்தால்தான் SaintGeorge கோட்டைகுள் புகமுடியும் என்ற நிலை உண்டாகிவிட்டது.

ஆதாரம் முன்னால் முதல்வராக இருந்தவர்கள் தேர்தலில் வென்று கட்சிக்கு பெருபான்மை இல்லை என்றால் கோட்டையை மறந்து விட்டு வீட்டில் குறட்டை விட்டு கொண்டிருக்கிறார்களே! ஏன்?

இடுப்பு வாறுலே அடிச்சா வரலாறு, வேஷ்டியே தூக்கி கட்டிக்கிட்டு ''ஒண்டிக்கு ஒண்டி வாரியா போட்டு பாத்துக்கலாம்' கதை எழுதுவியலா? படிக்க ஆசையா இருக்கு' ஒருத்தர் சொன்னார் மதுரை பல்கலைக் கழக பேராசிரியர் ஞானசம்பந்தனார் ஷேக்ஸ்பியர் பாடம் நடத்தினால் ஷேக்ஸ்பியரே எழுந்து வந்து பாடம் கேட்பாராம்.. நீங்கள் எழுதும் தொடரை அண்ணா காமராசர் M.G.R. வந்து பாடம் கேட்பார்கள்.

S.முஹம்மது பாரூக், அதிராம்பட்டினம்.

Anonymous said...

தன் கட்சி பெருபான்மை பெறாத நிலையில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர்கள் சட்டமன்றம் செல்வதில்லை. தனக்கு வாக்களித்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்று வதில்லை.

''போனால் முதல்வராகவே போவேன் இல்லை என்றால் போகமாட்டேன்'' என்று தன் கடமை மறந்து ஆணவப் போக்கில் நடக்கிறார்கள்..

தன்னை ஒரு 'முதல்வராக' மக்கள் தேர்ந்து எடுக்கவில்லை என்ற உண்மையே 'முன் நாள்'கள் முதலில் உணர வேண்டும இல்லை என்றால் M.L.A. பதவியை ராஜினாமா செய்து விடுவது கண்ணியம்.

அப்படி செய்யாதவருக்கு அடுத்த தேர்தலில் மக்கள் புத்திபு கட்டும் விழிப்பு உணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

காலங்காலமாக தலையே ஆட்டும் தஞ்சாவூர் பொம்ம போல அல்லது கோயில் மாடு போல மக்கள் இருக்க கூடாது.

மக்கள் ஒரு கருவியே அல்லது ஏணி மரமோ அல்ல என்பதை சம்பந்தபட்டவர்களை உணரச் செய்ய வேண்டிய கடமையே மக்கள் உணர்வது நாட்டுக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது.

குட்டக் குட்ட குனியக் கூடாது; குனியக் குனியக் குட்டக் கூடாது.

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு