Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

காலத்தின் கைப்பிடியில்.. 43

அதிரைநிருபர் | November 02, 2010 | , , ,


காலமிது காலமிது கலிகாலமாச்சுங்க

காலத்தின் கோலமெல்லாம் கண்ணுமுன்னே நடக்குங்க!



கண்டதையும் பேசிக்கிட்டுக் காலத்தைக் கழிக்கிறான்
கண்றாவி கோலத்துல கலச்சிக்கிட்டுத் திறிகிறான்
அவஞ்செய்யும் செயலெல்லாம் அசிங்கமில்லையென்கிறான்
அடுத்தவனோ செய்துப்புட்டா அநியாயம் என்கிறான்

காலமிது காலமிது கலிகாலமாச்சுங்க
காலத்தின் கோலமெல்லாம் கண்ணுமுன்னே நடக்குங்க!

ஊருக்கு உபதேசம் வாய்கிழியப் பேசுறான்
ஊதாரிச் செயலெல்லாம் ஒன்னுவிடாமச் செய்யுறான்
ஊருக்குள்ள நியாயவாதி அவன்தானு முழங்குவான்
ஊருப்பட்ட அநியாயம் அவன்தானே செய்யுவான்

காலமிது காலமிது கலிகாலமாச்சுங்க
காலத்தின் கோலமெல்லாம் கண்ணுமுன்னே நடக்குங்க!

சாதிமதம் இல்லையின்னு சமுக்காளம் விரிக்கிறான்
சன்னலோரம் நின்னுகிட்டு சாடமாட பேசுறான்
பொண்ணுமானம் காக்கணுமாம் மேடபோட்டுக் கத்துறான்
போட்டுவச்ச வேலிதாண்டிப் பெண்பூக்கள ஏன்பறிக்கிறான்

காலமிது காலமிது கலிகாலமாச்சுங்க
காலத்தின் கோலமெல்லாம் கண்ணுமுன்னே நடக்குங்க!

வரதட்சனை வாங்காதேன்னு வக்கனையா பேசுறான்
வாங்குவது தெரியாம வகைவகையா வாங்குறான்
வதந்தியப் பரப்பாதேயென வாஞ்சையோடு சொல்லுறான்
வாய்கூசா விசயமெல்லாம் விதவிதமா பரப்புறான்

காலமிது காலமிது கலிகாலமாச்சுங்க
காலத்தின் கோலமெல்லாம் கண்ணுமுன்னே நடக்குங்க!

பதவி பதவியின்னு புகழுக்கு அலையுவான்
பண்பாட்டப் பேணாமா பச்சோந்தியா மாறுவான்
பரம ஏழையிகளுக்குன்னா பாராபட்ச்சம் காட்டுவான்
பணத்தில் மிதப்பவர்க்குப் பாராட்டுப் பாடுவான்

காலமிது காலமிது கலிகாலமாச்சுங்க
காலத்தின் கோலமெல்லாம் கண்ணுமுன்னே நடக்குங்க!

அக்கிரம வட்டிவாங்கி அவன்வயித்த நிரப்புறான்
அடுத்தவனின் வயிற்றுலதான் நெருப்ப அள்ளிக்கொட்டுறான்
அன்பளிப்பு பேரச்சொல்லி அசிங்கமாக நெளியிறான்
அந்தலஞ்சம் வாங்கி அவன் வங்கியத்தான் நெறக்கிறான்

காலமிது காலமிது கலிகாலமாச்சுங்க
காலத்தின் கோலமெல்லாம் கண்ணுமுன்னே நடக்குங்க!

பூமியிலே இருப்பதெல்லாம் நிரந்தரமுன்னு எண்ணுறான்
பூகம்பமே வந்தாலும் பொசுக்குன்னு மறக்குறான்
படைத்தவனே இல்லையென்று பரிகாசம் பேசுறான்
படைத்தவனை மறந்துவிட்டுப் பாவங்களை குவிக்கிறான்

காலமிது காலமிது நம்கையிலயிலும் இருக்குங்க
கடக்கும் காலமெல்லாம் நம்மோட பொறுப்புங்க!
காலத்தின் அவசியத்தைக் கருத்திலேயே கொள்ளுங்க
கலங்காம கண்ணியமா காலத்தைச் சிறப்பாக்குங்க

காலமிது காலமிது விரைவிலேயே கடக்குங்க!

காலத்தின் கோலமெல்லாம் கடகடன்னு அழியுமுங்க!

உண்மையை உணர்ந்துகொண்டு ஒழுக்கத்துடன் வாழுங்க
உலகில் உள்ளவரையும் உள்ளச்சத்தைப் பேணுங்க
ஒருவருக்கும் தீங்கெண்ணாம ஒற்றுமையா வாழுங்க
ஒருவனுக்கே அடிபணிந்து இறையவனை தினம் போற்றுங்க...


-- அன்புடன் மலிக்கா

43 Responses So Far:

அதிரைநிருபர் said...

அதிரைநிருபருக்காக இந்த நல்ல கவிதை ஆக்கத்தை நமக்கு அனுப்பி வைத்த சகோதரி அன்புடன் மலிக்கா அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

நேரம் கிடைக்கும்போது நம் அதிரைநிருபரில் தொடர்ந்து எழுதுங்கள்.

crown said...

பெண்மானம் காக்கச்சொல்லி காதுநோக கத்துறான்
போட்டவச்ச வேலியேறி பெண்பூக்களத்தான் பறிக்கிறான்.
--------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.எல்லா வரிகளும் இதயத்தை தொடும் வரிகள்.வாழ்துக்கள். வரவேற்கிறேன்.சில இடங்களில் எழுத்துப்பிழை காரணம் அறிவேன்.( இங்கே மட்டும் என்ன வாழுதாம்னு அபுஇபுறாகிம் காக்கா கேட்கிறது காதில் விழுகிறது.காக்கா இப்ப காது நல்ல கேட்கிறது.)மேற்கண்ட வரிகள் மனதைப்பறித்த வரிகள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
மெய் பொருள் காண்பது அறிவு!
-------------------------------
பூமி,சுழன்றிடும் காற்று,சுடர்விடும் விளக்கு,சுட்டெரிக்கும் சூரியன் எல்லாம் அதன்,அதன் வேலையில்!
புறம் பேசி,கதைகள் இட்டுகட்டி
ஏமாற்றும் போலி சாமியார்காள்!
உம்மால் தடுக்க முடியுமா இயற்கையின் சீற்றத்தை?
உந்தன் ஜபம்(ஜம்பம்) எல்லாம்-
கானாப்போயிடும்இறைவன் கோபத்தின் முன்!
முற்றும் துறந்தவானா நீ? உம்மால் மரணத்தை துறக்கமுடியுமா?
இறக்காமல் இருக்க முடியுமா?
நீ நம்பும் உன் சக்தியை கொண்டு-
முக்தி அடையாமல்( மெய் அல்ல)பொய் பொருள்)
இருக்க முடியுமா?
--------------------------------------
மேற்கண்ட கவிதை முன்னொருகாலம் நான் எழுதியது.சபையோரின் பார்வைக்கு.சகோதரின் கவிதையைப்படித்ததும் நினைவு வந்ததால் பதிகிறேன்.

ZAKIR HUSSAIN said...

மிகவும் எளிமையான எல்லோருக்கும் புரியும் இந்த கவிதையை தந்த சகோதரிக்கு வாழ்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரியே : முதலில் நல்வரவு !

கவி ஆக்கத்தை இங்கே பிரித்து பின்னூட்டமா போட எங்களுக்குன்னு தம்பி (கிரவ்ன்) இருக்கான் அந்த வேலைய அவன் செவ்வனே செய்யட்டும் அதோடில்லாமல் நாங்களும் சும்மாவா இருந்திடுவோம் பின்னூட்டம்தான் படைப்பாளின் ஆக்கத்தை மேல் நிறுத்தி வைக்கும் அதனையும் நிச்சயம் செய்வோம்... தொடர்ந்து எழுந்துங்கள் !

வாழ்த்துக்கள்.. !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்று..
அவளுக்கென்று ஒரு
அழகிய கவிதையெழுதினேன்
அவசரக்காரி ஏனோ
அதனை வாசிக்கவேயில்லை !

நேற்று..
அதே அவசரக்காரி
அலமாரியை துடைத்தெடுத்தாள்
அங்கே கண்டெடுத்தாள்
அன்றைய கவிதையை !

இன்று..
ஆட்டிப் படைக்கிறாள்
யார் இவளென்று
எத்தனை நாட்களாக
இப்படியெல்லாம் நடக்கிறது ?!

இதுவரை..
அவசரத்தில் எதனையுமே
ஆழந்து பார்க்காவதவள்
எப்படி இப்படி மாறினாள்..

மறுகனமே..
தொ(ல்)லைக் காட்சியில்
ஆழ்ந்திருந்தவள் வெடித்தாள்
எனக்கும் தெரியாதா ?
எத்தனை சீரியல் பார்த்திருப்பேன்
எந்தப் புத்தில் எந்தப் பாம்புன்னு.... !!!!!!

சிந்திக்க.. சில நேரமே !
அன்பானவனை அயோக்கியனாக பார்க்க வைத்தது சீரழிக்கும் சீரியல்கள்.. நடகமே என்றில்லாமல் நமது வீட்டில் நடந்தால் எப்படி என்று மனதில் மற்றொரு சீரியல் ஓட்டிக் கொண்டிருபதானேலேயே...

முக்கிய குறிப்பு : கவிதையாகவே இருக்கும் எனது சில நண்பர்கள் சொன்ன யோசனை (நான் மூன்று வருடத்திற்கு முன்னால் அவள் விகடனுக்கு எழுதியதை), இப்போ அதிரைநிருபருக்கு எழுதி அனுப்பினா கியூவுல நிற்கனும் அதனால கவிதையா வரும் பின்னூட்டத்தின் பின்னால் இதனைப் எழுதிப் போடுன்னு சொல்லி மின் மடலில் எழுதியனுப்பியவனை... முன்னுக்கு (பின்னூட்டப் பக்கம்) வாடான்னு சொன்னேன்... செருப்பு போடாம நிறைய இடத்தில் கால் வைத்து பின்னூட்டமிட்டேன் pinகுத்தல் அதிகமாயிடுச்சுன்னு சொல்லி சமாளிக்கிறான்...

இன்றைய சூழலில் பின்னூட்ங்களின் பின்னலாட்டங்கும் அதன் பங்கும் பற்றி ஒன்னு எழுதனும்னு யோசனையும் வருதே என்ன செய்யலாம்... ?

sabeer.abushahruk said...

ஓர் இனிய ரம்மியமான ரிதம் தாங்கிச் செல்லும் இந்த பாடல், வகைப் படுத்தப்பட்ட எந்த கவிதை எனும் விலங்குக்குள்ளும் கட்டுராமல் வாசிக்க சுகமாக இருக்கிறது.  

முடிந்துவிடக் கூடாது என்று ஏங்கவைக்கும் யுக்தி லாவகமாக கையாளப்பட்டிருப்பது கவிஞரின் திறனை காட்டுகிறது.

க்ரவுன், அபு இபுறாகீம், இனியும் வாசிப்போரையும் எழுதத் தூண்டும் பாணி அற்புதம்.

//புத்திமதி சொன்னோமுன்னா தலையாட்டி வைக்கிறான்
கத்திமுனைக் கூராட்டம் கூர்மையாத்தான் கேட்கிறான்
அன்றிரவு இருள்கொண்டு அத்தனையும் துடைக்கிறான்
அழுக்கான சாக்கடையில் மறுபடியும் மிதக்கிறான்.//

சொல்லவந்ததை தெளிவாகவும் தீர்க்கமாகவும் சொல்லி பவ்யமாக அமர்ந்திருக்கும் கவிஞருக்கு அ.நி. வாசக வட்டம் சார்பாக ஒரு தொடர் கைதட்டல்.  

இங்கும் தொடர்ந்து எழுதுங்கள்.

(அ.நி.: "தானாகத் தராவிட்டாலும் கேட்டு வாங்கிப் போடுமளவுக்கு தரம் இருப்பதை 'நீரோடை'யில் கண்டேன். கவனத்தில் கொள்க.)

crown said...

/புத்திமதி சொன்னோமுன்னா தலையாட்டி வைக்கிறான்
கத்திமுனைக் கூராட்டம் கூர்மையாத்தான் கேட்கிறான்
அன்றிரவு இருள்கொண்டு அத்தனையும் துடைக்கிறான்
அழுக்கான சாக்கடையில் மறுபடியும் மிதக்கிறான்.//
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.
அழுக்குகாளே சோப்புகளாகி ஆரோக்கியம் பற்றி பேசுகின்றன.-
வைர முத்து சொன்னது.அயோக்கியர்கள் நல்லவன் போல் நடிப்பதும்,பின் மாறுதலாய் நடப்பதும் நம் நாட்டின் சாபம் தானே?(இது நான் கேட்பது).

Yasir said...

//உண்மையை உணர்ந்துகொண்டு ஒழுக்கத்துடன் வாழுங்க
உலகில் உள்ளவரை உள்ளச்சத்தையும் பேணுங்க// பஞ்ச் வரிகள் --அருமையான கவிதை..பொன்னான வரிகள்...வாழ்த்துக்கள் கவியரசியாரே

Ahamed irshad said...

ம‌லிக்கா அருமையான‌ ஆக்க‌ம்..வாழ்த்துக்க‌ள்..

அன்புடன் மலிக்கா said...

அதிரைநிருபருக்காக இந்த நல்ல கவிதை ஆக்கத்தை நமக்கு அனுப்பி வைத்த சகோதரி அன்புடன் மலிக்கா அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

நேரம் கிடைக்கும்போது நம் அதிரைநிருபரில் தொடர்ந்து எழுதுங்கள்.//

மிகுந்த மகிழ்ச்சி. என்னுடைய ஆக்கத்தை அதிரை நிருபரில் வெளியிட்டமைக்காக மிக்க நன்றி..

இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடிபொழுதெல்லாம் நிச்சயம் என்னாலான கருத்துக்களை ஆக்கங்களாக பதிவேன்..

மீண்டும் மனமார்ந்த நன்றி..

அன்புடன் மலிக்கா said...

crown சொன்னது…
பெண்மானம் காக்கச்சொல்லி காதுநோக கத்துறான்
போட்டவச்ச வேலியேறி பெண்பூக்களத்தான் பறிக்கிறான்.
--------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.எல்லா வரிகளும் இதயத்தை தொடும் வரிகள்.வாழ்துக்கள். வரவேற்கிறேன்.சில இடங்களில் எழுத்துப்பிழை காரணம் அறிவேன்.( இங்கே மட்டும் என்ன வாழுதாம்னு அபுஇபுறாகிம் காக்கா கேட்கிறது காதில் விழுகிறது.காக்கா இப்ப காது நல்ல கேட்கிறது.)மேற்கண்ட வரிகள் மனதைப்பறித்த வரிகள்.//

அலைகுமுஸ்ஸலாம்.

தாங்களின் அன்பான கருத்துக்களுக்கும். சுட்டிகாட்டுதலுக்கும். வாழ்த்துக்களுக்கும். மிக்க நன்றி சகோதரர் அவர்களே..

பேச்சுவழக்கைபோல் எழுதுவதால் சிலஇடங்களில் பிழையாகிவிட்டதோ, இனி பிழைகள் வராதவாறு கவனமாக பார்த்துக்கொள்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

இதிலிருக்கும் பிழைகளை நீக்கிவிடுங்கள்.சகோதரர் அவர்களே.

திரிகிறான்// திறிகிறான்

கெடக்கும் காலமெல்லாம் // கடக்கும் காலமெல்லாம்

வாங்கியதான் நெறக்கிறான்// வங்கியத்தான் நெறக்கிறான்.

அன்புடன் மலிக்கா

அன்புடன் மலிக்கா said...

பூமி
சுழன்றிடும் காற்று,
சுடர்விடும் விளக்கு,
சுட்டெரிக்கும் சூரியன்,
எல்லாம் அதன்,அதன் வேலையில்!

புறம் பேசி,கதைகள் இட்டுகட்டி
ஏமாற்றும் போலி சாமியார்கள்!
உம்மால் தடுக்க முடியுமா
இயற்கையின் சீற்றத்தை?

உந்தன் ஜபம்(ஜம்பம்) எல்லாம்-
காணாப்போயிடும் இறைவன்
கோபத்தின் முன்!
முற்றும் துறந்தவானா நீ? -உம்மால்
மரணத்தை துறக்கமுடியுமா?
இறக்காமல் இருக்க முடியுமா?

நீ நம்பும்
உன் சக்தியை கொண்டு-
முக்தி அடையாமல் ( மெய் அல்ல)பொய் பொருள்)
இருக்க முடியுமா?

நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள்.

தாங்களின் கவிதையில் சிறு எழுத்துப் பிழைகள்மாற்றி
பிரித்து எழுதுயுள்ளேன்.
தவறிருப்பின் பொருந்திக்கொள்ளவும்...

அன்புடன் மலிக்கா said...

ZAKIR HUSSAIN சொன்னது…
மிகவும் எளிமையான எல்லோருக்கும் புரியும் இந்த கவிதையை தந்த சகோதரிக்கு வாழ்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.//

வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி, மிக்க நன்றி. சகோதரர் அவர்களே...

Shameed said...

எந்த வரியை காபி பேஸ்ட் செய்து இந்த வரி பிடித்துள்ளது என்று சொல்ல புரியவில்லை காரணம் அணைத்து வரிகளும் சுப்பர்

அதிரைநிருபர் said...

//இதிலிருக்கும் பிழைகளை நீக்கிவிடுங்கள்.சகோதரர் அவர்களே.//

நீங்கள் குறிப்பிட்ட எழுத்துப்பிழைகளை சரி செய்துவிட்டோம்.

தங்களின் பதில் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி,

அன்புடன் மலிக்கா said...

//நீங்கள் குறிப்பிட்ட எழுத்துப்பிழைகளை சரி செய்துவிட்டோம்//

மிக்க நன்றி..

இறுதிக்கடமையும் குர்பானியும்..

என்ற தலைப்பில் என் வலைதளமான ”இனிய பாதையில்” எழுதியுள்ளேன்.
http://fmalikka.blogspot.com/2010/11/blog-post.html

இஸ்லாத்தில் வணக்கங்களை பொருத்த வரையில் சக்தி இருந்தால் மட்டுமே கடமைகளை செய்ய வேண்டும். சக்தி இல்லாத போது அந்த கடமைகளை செய்ய வேண்டிய அவசியமில்லை. இறைவன் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி சோதிக்கவும்மாட்டான். அவர்களின்மீது சுமைகளை சுமத்தவும் மாட்டான்

அன்புடன் மலிக்கா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவியரசியே : எங்களோட கிரவ்ன்கிட்டேயிருந்து அருவியா கொட்டும் அத அளந்து அள்ளித்தர தாங்கள் இருக்கீங்களே... ஜமாய்ங்க !

நாங்களெல்லாம் சொட்டுநீர்தான் அருவிகளும், தெளிவான நதிகளும், ஆர்ப்பரிக்கும் அலைகளும் இங்கே கவிதையாக சங்கமிக்கிறது !!

அலாவுதீன்.S. said...

சகோதரிக்கு வாழ்த்துக்கள்! நல்லதொரு கவிதையை வரைந்ததற்கு.

ஜெய்லானி said...

இது கவிதையா , பாட்டான்னுன்னு இன்னும் யோசித்துகிட்டே இருக்கேன் . இரெண்டுக்குமே நல்லா பொருந்தி வருது.!! ஒவ்வொரு வரியுமே அருமையா சிந்திக்க தூண்டுது..!! இன்னும் இதுப்போல நிறைய கவி இயற்ற வாழ்த்துக்கள்..!! ஜஸாகல்லா க்கைர் :-)

Ahamed irshad said...

ஜெய்லானி வெல்க‌ம் டூ அதிரைநிருப‌ர்..

அதிரை தாருத் தவ்ஹீத் said...

சகோதரிக்கு வார்த்தைகளை வசப்படுத்தும் கலை தெரிந்திருக்கிறது, வாழ்த்துகள்!

அஹ்மது காக்கவிடம் இதைக் கொடுத்தால் அப்படியே ஒரு அறுசீருக்கோ வெண்பாவுக்கோ கன்வெர்ட் செய்துவிடுவார்கள்.

பொதுவாக, புனைவுப் படைப்பாளிகள் (கவுஜ பார்ட்டிங்க) தங்கள் படைப்புகளில் யாரும் கைவைப்பதை விரும்பமாட்டார்கள் (பெரும்பாலானவர்கள் "நான் எழுதிய தமிழ்ப்பாட்டில் குற்றமா?" ரகம்தான்).

சகோதரி விதிவிலக்கானவர் என அறிவதில் மகிழ்ச்சி!

இதுல திருத்தம் செஞ்சா எப்படி இருக்கும்னு தோணிச்சு. திருத்தி, (அதிரைநிருபருக்கான) தனிமடலில் அனுப்பி இருக்கிறேன். சகோதரி ஒப்பினால் திருத்திப் பதிக்கலாம்.

நன்றி!

crown said...

அன்புடன் மலிக்கா சொன்னது…
நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள்.

தாங்களின் கவிதையில் சிறு எழுத்துப் பிழைகள்மாற்றி
பிரித்து எழுதுயுள்ளேன்.
தவறிருப்பின் பொருந்திக்கொள்ளவும்.
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த கவிதை ஒரு புகைப்படதைப்பார்த்து ,வார்த்தது.மேலும் திருத்தி எழுதுவதற்கு நன்றி.
அர்தம் புரிந்தவர் திருத்தம் செய்தால் தானே பொருத்தமாய் அமையும்?இதில் வருத்தம் கொள்ள வேண்டியது ஏன் எனக்கு மிக்க சந்தோசமே! காரணம் நான் எழுதில் சிறியன் ஆனால் ஆசிரியன் அல்லன். நீங்களோ ஆசிரிய இனம்(கவிதைப்படைப்பதில்)அதனால்தான் ஆசிரியப்பாவிலும்,வென்பாவிலும் எழுத முடிகிறது.அப்படி எழுத தெரிந்தவர்கள் நன்ப(பி)னாய்,சொன்னா அன்பாய் ஏற்றுகொளவதுதானே சிறப்பு சகோதரி நன்றியும் ,வாழ்துக்களும்.

அன்புடன் மலிக்கா said...

அபுஇபுறாஹிம் சொன்னது…
சகோதரியே : முதலில் நல்வரவு !

கவி ஆக்கத்தை இங்கே பிரித்து பின்னூட்டமா போட எங்களுக்குன்னு தம்பி (கிரவ்ன்) இருக்கான் அந்த வேலைய அவன் செவ்வனே செய்யட்டும் அதோடில்லாமல் நாங்களும் சும்மாவா இருந்திடுவோம் பின்னூட்டம்தான் படைப்பாளின் ஆக்கத்தை மேல் நிறுத்தி வைக்கும் அதனையும் நிச்சயம் செய்வோம்... தொடர்ந்து எழுந்துங்கள் !

வாழ்த்துக்கள்.. !.//

தாங்களின் அன்பான வரவேற்பிற்கும், ஊக்கமான கருத்துக்களுகும். மிக்க நன்றி சகோதரர் அவர்களே.

crown said...

அபுஇபுறாஹிம் சொன்னது…

கவியரசியே : எங்களோட கிரவ்ன்கிட்டேயிருந்து அருவியா கொட்டும் அத அளந்து அள்ளித்தர தாங்கள் இருக்கீங்களே... ஜமாய்ங்க !

நாங்களெல்லாம் சொட்டுநீர்தான் அருவிகளும், தெளிவான நதிகளும், ஆர்ப்பரிக்கும் அலைகளும் இங்கே கவிதையாக சங்கமிக்கிறது !!
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.எல்லாப்புகழும் அல்லாஹுக்கே.
சகோ.அபுஇபுறாகிம் காக்கா ஏற்கணவே தலையில் உள்ள கிரீடம் கனம் தாங்க முடியல. இதுல அருவி,குருவின்னு தலையில கவிதை பனங்காய சுமக்க எனக்கு எந்த தகுதியும் இல்லை.அன்பின் வெளிப்பாடு நீங்கள் சொன்னது.ஒரு தாய் தன் பிள்ளையை ராசா,மகாராசன்னு கொஞ்சிமகிழ்வாள் ஆனால் அவனால ராச ஆக முடியாவிட்டாலும் தனக்கு ராசாதான்னு சொல்லி கொஞ்சி மகிழ்வாள் அந்த மகிழ்சி போலதான் இதுஎன்பது எனக்குத்தெரியும்.

Adirai khalid said...

இதில் (கவிதை / பாட்டு) சமூககத்தில் நிலவும் குமுறலை மையப்படுத்தி இருக்கின்றீர்கள்.

திருட்டுத்தனமா எதையும் செய்து கொள். வெளிப்படையில் நல்லவனா இரு. இதுதான் நம் சமூகமாக இருக்கு. எல்லோரும் போலிகளாக அலையுறோம்.

இதில் யாரும் விதிவிலக்கல்ல என்னையும் சேர்த்துதான் நீங்கள் எப்படியோ? அவரவர் (இறை) நம்பிக்கையை பொருத்தது. எல்லோருக்கும் ஏற்படும் மனப்போராட்டம். அறிவுரை என்பது மற்றவர்களுக்கு தானே நமக்கா அதுவும் இதனால் என்ன நஷ்டம் வந்துவிடபோகிறது என்று எல்லோரும் புரப்பட்டு வந்து விட்டோம் என்பதினை உணர்த்தியுள்ளீர்கள் .

வாழ்த்துக்கள் தொடருங்கள் எதிர்பார்கின்றோம்

நெய்னாதம்பி (அபு இப்றஹிம்) சொன்னது.

அன்று..

நேற்று..

இன்று..

இதுவரை..

மறுகனமே..

எதார்தமான வரிகள் ரொம்ப பிடித்தது ஒழிந்துகிடக்கும் எண்ணங்களை ஒலி, ஒளிக்கச் செய்ய வேண்டியதுதானே நன்பா!!! சகோதரா!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உன்னைப்போல் ஒருவன் சொன்னது...

இதில் யாரும் விதிவிலக்கல்ல என்னையும் சேர்த்துதான் நீங்கள் எப்படியோ? அவரவர் (இறை) நம்பிக்கையை பொருத்தது. எல்லோருக்கும் ஏற்படும் மனப்போராட்டம். ///

உன்னிடமிருந்து வரும் திறந்த விமர்சனம் வெளிநாட்டிலிருந்து வீட்டுக்கு சொந்தங்கள் வந்தால் கிடைக்கும் சந்தோஷமும் / விம்மல்களும் / குமுறல்களும் இணைவதுபோல்தான் இருக்கிறது...

"என்னையும் சேர்த்துதான்னு" சொன்னது Nஐம் தான்னு என் நட்பு சொல்லியிருபாய் என்றும் மனதில் நிறுத்திக் கொண்டேன்..

வெளி வேஷம் எங்குதானில்லை ? உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் ஒருவனே அறிவான் !

அதிரைநிருபரில் "அமைதியின் ஆளுமை" யூடே "அதிரையின் அகத்தில் அழகு அதிரைநிருபரில் முகப்பில் தெரியும்" slogan போடச் சொல்லலாமான்னு யோசனை என்னுள் எழுந்தது அப்புறம் மாற்றிக் கொண்டேன் ஏன்னா இன்னும் நம் அதிரைப்பட்டினத்தின் அகத்தில் என்னனமோ உள்ளது நல்லதும் உள்ளது கெட்டதும் உள்ளது எல்லாமே இங்கே வந்திடுமே அதனால "நல்லதை மட்டுமே" ஒட்டிக்குவோம் கெட்டதை கிள்ளியெறிவோம்னு "அமைதின் ஆளுமையாக்கிட்டோம்"

நன் எண்ணங்களை இடம் பொருள் ஏவல் அறிந்து வெளிக் கொணர்ந்தால்தானே அதன் வீச்சு எடுபடும், எதனையும் எழுதலாம்னு எழுதிட்டா நீ சொன்ன மாதிரி "அறிவுரை என்பது மற்றவர்களுக்கு தானே நமக்கா அதுவும் இதனால் என்ன நஷ்டம் வந்துவிடபோகிறது என்று எல்லோரும் புரப்பட்டு வந்து விட்டோம் என்பதினை உணர்த்தியுள்ளீர்கள்" இருந்திடுமே !

நம் சிறுவயதை சற்று நினைவில் ஓட்டினேன் "நானோ நீயோ வீட்டிற்கு தாமதமாக வந்தால் உன் தாயும் சரி என் தாயும் சரி இருவரும் ஒன்றாகச் சென்றிருக்கிறோம் என்று அறிந்தால் அமைதியாக இருப்பார்கள் ஏனென்றால் அவ்வளவு நம்பிக்கை நம்மீது வைத்திருந்தார்கள்" என்றாவது அந்த நம்பிக்கையை நாம் வீணடித்திருக்கிறோமா ? இதேபோல் நம் பிள்ளைகளையும் நம்புவோம் அல்லாஹ் அவர்களையும் நம்மையும் நேர் வழியிலே நிலை நிறுத்தி பாதுகாப்பானாக ! இன்ஷா அல்லாஹ்...

Unknown said...

மீராசா

சகோதிரியின் கவிதை அருமை.....மீண்டும்...மீண்டும் தொடரட்டும்.

அன்புடன் மலிக்கா said...

sabeer சொன்னது…
ஓர் இனிய ரம்மியமான ரிதம் தாங்கிச் செல்லும் இந்த பாடல், வகைப் படுத்தப்பட்ட எந்த கவிதை எனும் விலங்குக்குள்ளும் கட்டுராமல் வாசிக்க சுகமாக இருக்கிறது.

முடிந்துவிடக் கூடாது என்று ஏங்கவைக்கும் யுக்தி லாவகமாக கையாளப்பட்டிருப்பது கவிஞரின் திறனை காட்டுகிறது.

க்ரவுன், அபு இபுறாகீம், இனியும் வாசிப்போரையும் எழுதத் தூண்டும் பாணி அற்புதம்.

//புத்திமதி சொன்னோமுன்னா தலையாட்டி வைக்கிறான்
கத்திமுனைக் கூராட்டம் கூர்மையாத்தான் கேட்கிறான்
அன்றிரவு இருள்கொண்டு அத்தனையும் துடைக்கிறான்
அழுக்கான சாக்கடையில் மறுபடியும் மிதக்கிறான்.//

சொல்லவந்ததை தெளிவாகவும் தீர்க்கமாகவும் சொல்லி பவ்யமாக அமர்ந்திருக்கும் கவிஞருக்கு அ.நி. வாசக வட்டம் சார்பாக ஒரு தொடர் கைதட்டல்.

இங்கும் தொடர்ந்து எழுதுங்கள்.//

அழகான விளக்கமான கருத்துக்களையும் கைதட்டல்களையும் வழங்கிய சகோதரர் சபீர் அவர்களுக்கு மகிழ்ச்சிகலந்த நன்றி..

//(அ.நி.: "தானாகத் தராவிட்டாலும் கேட்டு வாங்கிப் போடுமளவுக்கு தரம் இருப்பதை 'நீரோடை'யில் கண்டேன். கவனத்தில் கொள்க.)//

இதன் அர்த்தம் விளங்கவில்லை சகோ அவர்களே..

நீரோடையில் வந்தும் என் ஆக்கங்களுக்கு கருத்துக்கள் வழங்கும் தாங்களுக்கு மிக நன்றி..

அன்புடன் மலிக்கா said...

என் ஆக்கத்திற்கு ஊக்கம்தரும் கருத்துக்களை தந்த

மிக்க நன்றி சகோதரர் இர்ஷாத். அவர்களே..

மிக்க நன்றி சகோதரர் ஷாகுல்ஹமீத்.அவர்களே..

மிக்க நன்றி சகோதரர் அலாவுதீன்.அவர்களே..

மிக்க நன்றி சகோதரர் மீராசா.அவர்களே..

மிக்க நன்றி சகோதரர் அபுஇபுறாஹிம் அவர்களே...

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி சொன்னது…
இது கவிதையா , பாட்டான்னுன்னு இன்னும் யோசித்துகிட்டே இருக்கேன் . இரெண்டுக்குமே நல்லா பொருந்தி வருது.!! ஒவ்வொரு வரியுமே அருமையா சிந்திக்க தூண்டுது..!! இன்னும் இதுப்போல நிறைய கவி இயற்ற வாழ்த்துக்கள்..!! ஜஸாகல்லா க்கைர் :-)..//

வாங்க அண்ணா தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி..

எழுதும்போது பாட்டைபோல்தான் மனதுக்குள் எழுந்தது வரிகள்.
அது படிக்கும் மனதைப்பொருத்தது அண்ணா. தாங்களுக்கு அப்படி தோன்றியத்தில் மகிழ்ச்சி..

இன்ஷா அல்லஹ் இறைவன் நாடினால் தொடர்ந்து எழுவேன் அண்ணா..

crown said...

/(அ.நி.: "தானாகத் தராவிட்டாலும் கேட்டு வாங்கிப் போடுமளவுக்கு தரம் இருப்பதை 'நீரோடை'யில் கண்டேன். கவனத்தில் கொள்க.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரி மலிக்கா ,சகோ.சபீர் சொல்வது யாதெனில் தாங்களாக( நீங்கள்) படைப்புகளை அனுப்பாவிட்டாலும்,அதிரை நிருபர் வலிய வந்து உங்கள் கவிதைகளை வாங்கி பிரசுரிக்கவும். அவ்வளவு விசயம் உள்ளது. என்று அதிரை நிருபருக்கு சொல்லியுள்ளார்கள்.

அன்புடன் மலிக்கா said...

ஜமீல் சொன்னது…
சகோதரிக்கு வார்த்தைகளை வசப்படுத்தும் கலை தெரிந்திருக்கிறது, வாழ்த்துகள்!//

வாழ்த்துக்களுக்கு சந்தோஷம்.

//அஹ்மது காக்கவிடம் இதைக் கொடுத்தால் அப்படியே ஒரு அறுசீருக்கோ வெண்பாவுக்கோ கன்வெர்ட் செய்துவிடுவார்கள்.//

வெண்பாக்களோ மரபுகளோ அறியா மனது
வெளிச்சமிடும் உள்வெளிக்குளிருந்து
வெளிவரும் எண்ணங்களை
அடுக்கடுக்காய் அள்ளித்தருகிறது என் எழுத்து
அவ்வளவுதான்..
[இன்ஷாஅல்லாஹ் இறைவன் நாடினால் அதையும் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்]

//பொதுவாக, புனைவுப் படைப்பாளிகள் (கவுஜ பார்ட்டிங்க) தங்கள் படைப்புகளில் யாரும் கைவைப்பதை விரும்பமாட்டார்கள் (பெரும்பாலானவர்கள் "நான் எழுதிய தமிழ்ப்பாட்டில் குற்றமா?" ரகம்தான்).//

என்னைபொருத்தவரையில் நான் எழுதியவற்றில் தவறுகளிருப்பின்.
இல்லை என் வரிகளில் சந்தங்கள் தோன்றாதிருப்பின்
அதை திருத்த நினைத்தால் தவறில்லை.

நமக்கு அறியா பலவிசயங்கள் பிறர்கள் அறிந்திருப்பார்கள். அதற்க்கும் நாம் மதிப்புகொடுக்கவேண்மல்லவா! நமக்கு அதில் உடன்பாடில்லையெனும் பட்சத்தில் வெளிபடையாக சொல்லிவிடுவத்திலும் தவறில்லை..

//சகோதரி விதிவிலக்கானவர் என அறிவதில் மகிழ்ச்சி!

இதுல திருத்தம் செஞ்சா எப்படி இருக்கும்னு தோணிச்சு. திருத்தி, (அதிரைநிருபருக்கான) தனிமடலில் அனுப்பி இருக்கிறேன். சகோதரி ஒப்பினால் திருத்திப் பதிக்கலாம்.

நன்றி! //

தாங்களின் திருத்தள்களோடு, என்திருத்தல்களும் சேர்ந்தது மீண்டும் அதேகவிதை புதிதாயானது. சந்தோஷம் சகோதரர் அவர்களே! தாங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல..

sabeer.abushahruk said...

//இதன் அர்த்தம் விளங்கவில்லை சகோ அவர்களே..//

கவிதை வாசிப்பதில் ஆர்வம் மிக்கவன் என்ற தகுதியில், நண்பன் ஜாகிரின் பரிந்துரையில் "நீரோடை"யில் நிறைய தரமான கவிதைகள் வாசித்ததால், நீங்கள் அ.நி.க்கு எழுத நேரமில்லை என்றாலும் உங்களிடம் கேட்டாவது வாங்கி உங்கள் கவிதைகளை பதியசொல்லத்தான்... விளங்கியிருக்கனுமே சகோ?

ஜாகிர் ஹீசைன் said...

நல்லதொரு கவிதை(பாட்டு ) வாழ்த்துக்கள்

//'இறுதிக்கடமையும் குர்பானியும்'..
என்ற தலைப்பில் என் வலைதளமான 'இனிய பாதையில்' எழுதியுள்ளேன்.
http://fmalikka.blogspot.com/2010/11/blog-post.html"//

//'அதோடு குர்பானி கொடுப்பதின் நோக்கமும். அதன் விளக்கமும்.
நான் படித்தவைகள் அனைவரும் அறிய பதிந்திருக்கிறேன்..//'

உஙகள் வலைப்பதிவில் எழுதிய இறுதிக்கடமையும் குர்பானியும் என்ற ஆக்கத்தில் தாங்கள் எழுதிய குர்பானிக்கும் ஹஜ்ஜில் கொடுக்கும் குர்பானிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இன்னும் தாங்கள் '"அதோடு குர்பானி கொடுப்பதின் நோக்கமும்'" என்று அதோடு என்று தொடறாக எழுதி ஹஜ்ஜில் கொடுக்கும் குர்பானிக்கும் தாங்கள் எழுதிய குர்பானிக்கும் சம்பந்தம் இருப்பதுபோல் எழுதியுள்ளீர்கள் , ஹஜ்ஜையும் குர்பானியையும் தனித்தனியாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்னிடத்தில் ஒரு சகோதரர் கேட்டார் ஹஜ்ஜில் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு கொடுத்தால் போதுமாமே (ஹதீஸ்கள் இருக்கிறதாமே)சில சகோதரர்கள் இப்படியும்
விலங்கிக்கொள்கிறார்கள் அதோடு குர்பானி கொடுப்பதின் நோக்கமும்' என்பதில் அதோடு என்பதை நீக்கிவிட்டால் நலம் காரணம் இந்தகுர்பானிக்கும் ஹஜ்ஜில் கொடுக்கும் குர்பானிக்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விடும் ஹஜ்ஜில் குர்பானி என்பது யார் எல்லாம் ஹஜ் செய்கிறார்களோ அவர்கள் அனைவரும் கொடுக்கவேண்டும் தாங்கள் எழுதிய குர்பானி ஊரில் இருப்பவர்கள் கொடுக்கும் குர்பானி

அன்புடன் மலிக்கா said...

குர்பானியின் விளக்கம் எனக்கு மெயிலில் வந்ததை அங்கு பகிர்ந்துள்ளேன். அதோடு . சிறுகுறிப்பாக ஹஜ்ஜின் சிறப்பை சொல்லியுள்ளேன் அதற்க்கும் இதற்கும் சம்பந்தமில்லை சகோதரர் அவர்களே.

அப்படியா சரி அதை நீக்கிவிடுகிறேன்..
நன்றி...

அன்புடன் மலிக்கா said...

//இதன் அர்த்தம் விளங்கவில்லை சகோ அவர்களே..//

கவிதை வாசிப்பதில் ஆர்வம் மிக்கவன் என்ற தகுதியில், நண்பன் ஜாகிரின் பரிந்துரையில் "நீரோடை"யில் நிறைய தரமான கவிதைகள் வாசித்ததால், நீங்கள் அ.நி.க்கு எழுத நேரமில்லை என்றாலும் உங்களிடம் கேட்டாவது வாங்கி உங்கள் கவிதைகளை பதியசொல்லத்தான்... விளங்கியிருக்கனுமே சகோ.//

விளங்கிருச்சி சகோ...
மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி தாங்களின் நீரோடை வருகைக்கும். அன்பான கருத்துக்கள் தருவதற்கும் மிக்க நன்றி

அன்புடன் மலிக்கா said...

Yasir சொன்னது…
//உண்மையை உணர்ந்துகொண்டு ஒழுக்கத்துடன் வாழுங்க
உலகில் உள்ளவரை உள்ளச்சத்தையும் பேணுங்க// பஞ்ச் வரிகள் --அருமையான கவிதை..பொன்னான வரிகள்...வாழ்த்துக்கள் கவியரசியாரே


தாங்களின் அன்பான கருதுக்களுக்கு மிக்க மகிழ்ச்சி யாசிர் காக்கா..

அன்புடன் மலிக்கா said...

அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த கவிதை ஒரு புகைப்படதைப்பார்த்து ,வார்த்தது.மேலும் திருத்தி எழுதுவதற்கு நன்றி.
அர்தம் புரிந்தவர் திருத்தம் செய்தால் தானே பொருத்தமாய் அமையும்?இதில் வருத்தம் கொள்ள வேண்டியது ஏன் எனக்கு மிக்க சந்தோசமே! காரணம் நான் எழுதில் சிறியன் ஆனால் ஆசிரியன் அல்லன். நீங்களோ ஆசிரிய இனம்(கவிதைப்படைப்பதில்)அதனால்தான் ஆசிரியப்பாவிலும்,வென்பாவிலும் எழுத முடிகிறது.அப்படி எழுத தெரிந்தவர்கள் நன்ப(பி)னாய்,சொன்னா அன்பாய் ஏற்றுகொளவதுதானே சிறப்பு சகோதரி நன்றியும் ,வாழ்துக்களும்.//

நான் கத்துகுட்டியே இன்னும் கற்கவேண்டிய பாடங்கள் எவ்வளவோஓஓஓஓஒ இருக்கு.

கவிதைகளைப்பொருத்தவரையில் நீண்ட வரிகளை சற்று மடக்கி
சந்தம் வெளிவர சொற்கள் தனித்து. பிரித்து.ஒடித்து
தெரிந்தால் ஒலியோடு சந்தமும் கிடைகுமென திரு. காவியத்திலகம் ஜின்னாஹ் ஷரீபுதீன் அவர்கள். எனக்கு கற்றுக்கொடுத்தபாடம். அதன்போல் செய்துபார்த்தேன்.கவிக்குள் இன்னும் இன்னும் கற்றுக்கொள்ளவேண்டியவைகள் கணக்கிலடங்கா இருக்கு என்பதையும் புரிந்துகொண்டேன் அதனால்தான் தாங்களின் கவிதையை பிரிதெழுதிப்பார்த்தேன்.
தாங்களின் ஒப்புதலுக்கு மிக்க மகிழ்ச்சி..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரரி அன்புடன் மலிக்கா,

நேரமின்மை காரணமாக என் கருத்தை பதிய முடியவில்லை. உங்கள் பதிவில் அனைத்து வரிகளும் அருமை.

//வரதட்சனை வாங்காதேன்னு வக்கனையா பேசுறான்
வாங்குவது தெரியாம வகைவகையா வாங்குறான்//

இந்த வரியில் பல அர்த்தங்கள் உள்ளது. இன்னும் மறைமுகமான, வகைவகையான வரதட்சனைகள் நிறைய ஒட்டிக்கொண்டிருப்பதை அன்றாடம் நாம் காணமுடிகிறது.

பின்னூட்டங்களுக்கு நீங்கள் தரும் பதில்களும் அருமை.

வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.. நிறைய எதிர்ப்பாக்கிறோம்.

அன்புடன் மலிக்கா said...

உன்னைப்போல் ஒருவன் சொன்னது…
இதில் (கவிதை / பாட்டு) சமூககத்தில் நிலவும் குமுறலை மையப்படுத்தி இருக்கின்றீர்கள்.

திருட்டுத்தனமா எதையும் செய்து கொள். வெளிப்படையில் நல்லவனா இரு. இதுதான் நம் சமூகமாக இருக்கு. எல்லோரும் போலிகளாக அலையுறோம்.

இதில் யாரும் விதிவிலக்கல்ல என்னையும் சேர்த்துதான் நீங்கள் எப்படியோ? அவரவர் (இறை) நம்பிக்கையை பொருத்தது. எல்லோருக்கும் ஏற்படும் மனப்போராட்டம். அறிவுரை என்பது மற்றவர்களுக்கு தானே நமக்கா அதுவும் இதனால் என்ன நஷ்டம் வந்துவிடபோகிறது என்று எல்லோரும் புரப்பட்டு வந்து விட்டோம் என்பதினை உணர்த்தியுள்ளீர்கள் .

வாழ்த்துக்கள் தொடருங்கள் எதிர்பார்கின்றோம்.//

நிச்சயமாக இதில் யாரும் விதிவிலக்கில்லை.
ஏதோ ஒருவகையில் ஏதோ ஒன்றாக நாமும், நம்மை மாற்றி, மறைத்து, வாழ்கிறோம் இதில் பொய்யில்லை.
இவ்வரிகளின்மூலம் எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் அறிவுறையாகவும் இதை கருதுகிறேன்.

நம்மை நாம் உணரும்போது தவறுகள் பிடிபடும்.தவறுகள் பிடிபடும்போது
நம்மைநாம் சரியாக ஆக்கிக்கொள்ள சந்தர்ப்பம் அமையும்.அச்சந்தர்ப்பத்தை
நமக்கு நாமே ஏற்படுதல்தான் அன்றாடம் செய்யவேண்டும்..

மிக்க நன்றி சகோதரர் அவர்களே!
தாங்களின் உணர்தலான கருத்துக்களுக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும்,மிக்க மகிழ்ச்சி...

அன்புடன் மலிக்கா said...

தாஜுதீன் சொன்னது…
சகோதரரி அன்புடன் மலிக்கா,

நேரமின்மை காரணமாக என் கருத்தை பதிய முடியவில்லை. உங்கள் பதிவில் அனைத்து வரிகளும் அருமை.//

//வரதட்சனை வாங்காதேன்னு வக்கனையா பேசுறான்
வாங்குவது தெரியாம வகைவகையா வாங்குறான்//

இந்த வரியில் பல அர்த்தங்கள் உள்ளது. இன்னும் மறைமுகமான, வகைவகையான வரதட்சனைகள் நிறைய ஒட்டிக்கொண்டிருப்பதை அன்றாடம் நாம் காணமுடிகிறது.

பின்னூட்டங்களுக்கு நீங்கள் தரும் பதில்களும் அருமை.

வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.. நிறைய எதிர்ப்பாக்கிறோம்.//

வேளைப்பளுக்களுக்கிடையில் பதிவுகளைப்பார்த்து கருத்திடுவதென்பது சற்று சிரமமே. தாங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிகுந்த சந்தோஷம்.
இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுத முயசிக்கிறேன்..மிக்க நன்றி..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு