Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 6 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 07, 2011 | , ,



எகிப்து ஓர் ஆப்பிரிக்கநாடு. நைல் நதியின் நன்கொடை என்று அழைக்கப்படும் நாடு. மெசபடோமியா, சிந்துவெளி நாகரீகங்களுக்கு இணையான நாகரீகத்தைக் கொண்ட நாடு. காகிதத்தை உலகிற்குத் தந்த நாடு. உயர்வகைப் பருத்திக்குப் பெயர் பெற்ற நாடு. மிகப் பெரிய சூயெஸ் கால்வாயை தன்னகத்தே கொண்ட நாடு. பிரமிக்க வைக்கும் பிரமிடுகளைக் கொண்ட நாடு.


இப்படிப்பட்ட பல சிறப்புகளைக் கொண்ட எகிப்து நாட்டில், மத்திய கிழக்கு நாடுகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை பானாசோனிக் தொலைபேசி நிறுவனம் நடத்தியது. அந்த நாடுகளில் தன் நிறுவனத்தின் தொலை பேசிக் கருவிகள் செயல்படுவதை மேலும் மேம்படுத்துவதற்காக பானாசோனிக் தொலைபேசி நிறுவனம், முயற்சியை மேற்கொண்டது. ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக உமரை எகிப்துக்கு ஒமான் நேஷனல் அனுப்பி வைத்தது. உமர் போலவே தென்கிழக்காசிய நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். ஜப்பானிலிருந்தும் நிபுணர்கள் வந்திருந்தனர். நான்கு நாட்கள் கலந்தாய்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டார் உமர். வல்லுநர்கள் தங்கள் அனுபவங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

எகிப்துக்கு அங்கே உள்ள புராதனச் சின்னங்களைப் பார்ப்பதற்காகவே வெளிநாட்டினர் வருகின்றனர். சூயெஸ் கால்வாய்க்கு அடுத்தபடியாக வருமானம் சுற்றுலாத் துறையிலிருந்துதான் கிடைக்கிறது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள புராதனச் சின்னங்களை கண்டு வரலாற்று உண்மைகளை உணரலாம். இப்படிப்பட்ட இடங்களைக் கண்டு களிக்கும் வாய்ப்பு உமருக்குக் கிடைத்தது.


எகிப்தில், நைல் நதிக் கரையில் அமைந்துள்ள ‘ஷெரட்டன்’ ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார்.. சிறப்பு மிக்க நைல் நதியின் அழகைக் கண்டு ரசித்தார் உமர். வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைச் சுற்றிப் பார்க்கும் வாய்பைப் பயன் படுத்திக்கொண்டார். மேலும் சரித்திரச் சிறப்புடைய மற்றும் உலக அதிசயமான பிரமிட்கள், அதிலுள்ள மம்மிகள் ஆகியன பற்றியும் கேட்டறிந்து தன் அறிவுப் பெட்டகத்தில் வைத்துக் கொண்டார் உமர்!

துபாயில் நாங்கள் எகிப்தியர்களோடு பழகி வந்ததால், அங்கு உள்ள வாழ்க்கை முறையைப் பற்றிக் கேட்டேன். மக்கள் வருவாய்க்காக ஆளாய்ப் பறக்கிறார்கள் என்றார். சுற்றுலாப் பயணிகளுக்கு வழி காட்டுவதுதான் அவர்களின் வருமான மூலதனம். ஒரு வாடகை வண்டி ஓட்டுனர் உமரிடம் அவருடைய தொலைபேசி எண்ணைத் தந்து, “நீ அடுத்த முறை வரும்போது தவறாமல் எனக்கு போன் செய்” என்றாராம்! தொலை (பேசி) நோக்குத் திட்டம்!

அல்ஃபுத்தைம் குழுமத்தில் உமர் பணியில் சேருவதற்கு முன்னால்துபை கல்வி அமைச்சகத்தில், ஒலி, ஒளிக் காட்சி கல்வித் துறையில் வேலை பெறும் நோக்குடன் உமர், நேர்முகத் தேர்வுக்குச் சென்றார். இதற்கு ஏற்பாடு செய்தவர் அவர் நண்பர் அன்சாரி. ஒலி, ஒளிக் காட்சி கல்வித் துறைத் தலைவர் அவருக்கு சோதனை நடத்தினார். ஒரு தொலைக் காட்சிப் பெட்டியைக் காட்டி, “இதை இயங்க வைக்கவேண்டும்” என்றார். உமர் தொலைக் காட்சிப் பெட்டியின் பின் பக்கம் சென்றார். இரண்டு ஒயர்களைத் தொட்டார். ஒரு நிமிடம்தான்; தொலைக் காட்சிப் பெட்டி வேலை செய்யத் துவங்கிவிட்டது! அந்த ஒலி, ஒளிக் காட்சி கல்வித் துறைத் தலைவர் உமரைப் பாராட்டினார்: “ஹிந்தி, ஷைத்தான்!”. ஒயரைத் துண்டித்து வைத்திருந்தார் அந்த மேதாவி. நாம் அதற்கு மேல் தாவ மாட்டோமா? உமரை வேலைக்கு எடுக்கவேண்டும் என்பதில் அந்த அரபிக்கு சுயநல நோக்கம் இருந்ததால் அந்த வேலையில் உமர் சேர விரும்பவில்லை.


எகிப்திலிருந்து துபை திரும்பி வந்த உமர்தம்பிக்கு வேறொரு மாற்றம் காத்திருந்தது. உமர், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார். கம்ப்யூட்டர் நெட்வொர்க் பற்றி கற்றுக்கொண்டார். தான் பணிபுரியும் நிறுவனமான ஒமான் நேஷனல் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியது. அப்பொழுது மற்றவர்களுக்கு அதைப்பற்றி விளக்க வகுப்பும் நடத்தியுள்ளார். ஒமான் நேஷனல் நிறுவனத்தில் இவருக்குப் பதவி உயர்வு தொடர்ந்து கொண்டே இருந்தது!

துபாயில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் சில நாட்களிலேயே கணினி நுட்பவல்லுனரானார். Network and System Administrator, Kiosk Programmer எனக் கணினித் துறையில் திறம்படப் பணியாற்றியிருக்கிறார். ஒரு குழுவை நடத்துவது வரையில் அவரது பதவி உயர்வு நிகழ்ந்திருக்கிறது.


அல்ஃபுத்தைம் குழுமத்தில் பலதரப்பட்ட வாணிப (Diversified Business) நிறுவனங்கள் இருந்தன. அவற்றின் செயல்பாடுகளை மிகத் துல்லியமாக அறிவதற்காக அல்புத்தைம் குழுமம் E.R.P. (Enterprise Resource Planning) முறையை அனைத்து நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்த முடிவு செய்தது. அதற்காக உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் நாட்டு மென்பொருளான SAP (Systems Applications and Products also called Structural Analysis Program ) ஐத் தேந்தெடுத்தது. SAP மிகப்பெரிய நிறுவனங்களில் மட்டுமே செயல் படுத்தப்படும் மென் பொருளாகும். குழுமத்தின் தலைவர் முதல் கீழ் மட்டத்தில் உள்ள ஊழியர் வரை அவரவர் தகுதிக்கேற்ப நிறுவனத்தின் நிலையை தான் இருந்த இடத்திலிருந்தே புரிந்துகொள்ள முடியும். இது வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழி வகுக்கும்.


இதன் அடிப்படையில் குழும நிர்வாகத்தின் மேலாளர் தகுதியில் உள்ள ஒரு சிலர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தொழில் நுட்பத்துறையில் சேவைப் பிரிவில் உள்ளவர்களில், உமர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்களுக்கு குழுமம் SAP மென் பொருளில்பயிற்சி கொடுத்தது. இவர்களைக் கொண்டு I.M.D. என்ற புதிய நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. இதில் உமர் SAP மென் பொருளை நடைமுறைப்படுத்தும் ஒரு குழுவின் தலைவராக (SAP Implementation Team Leader for Divisions with Service Related Business) பணியாற்றினார். இதில் வந்து இணைந்த மேலாளர்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்பிப் போகவே இல்லை. எல்லாருக்கும் பணியையும் சம்பளத்தையும் மாற்றி அமைத்திருந்தார்கள். மேலாளர்கள் முன்பு பணியில் இருந்த இடங்கள் நிரப்பப்பட்டன. உமர்தம்பியின் இடமும் நிரப்பப்பட்டது. டிவி பழுது நீக்குநராக துபைக்குள் நுழைந்தவர், இப்போது System Engineer ஆக பதவி உயர்ந்திருந்தார்! பட்டப்படிப்பு மட்டுமே படித்தவர், பொறியியல் படிப்பு படித்தவருக்கு நிகராகப்பதவி உயர்வு பெற்றார் .

கணினி அறிவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இப்போதுதான் அவருக்கு நிறையக் கிடைத்தது. பணியிலிருந்து திரும்பிவந்ததும் கணினியில்தான் அமர்வார். இணைய தளத்தின் வருகை நெட்வொர்க் பணியை எளிமைப்படுத்தியது. இணைய தளம் அறிமுகமான உடனேயே உமர் இ மெயில் முகவரியைப் பெற்றுக்கொண்டர். இணைய தளம் என்ற விசாலமான உலகில் பவணி வந்தார். தன்னுடைய அறிவுத் தாகத்தையும் தீர்த்துக் கொண்டார். அவருடைய அறிவுத் தேடலுக்கு இணைய தளம் வடிகாலாக அமைந்தது. இணையத்தின் இணையில்லாப் பயனை உணர்ந்து இணையத்திலேயே இணைந்திருந்தார்.

உமரின் அளப்பரிய ஆர்வமும் இடைவிடாத முயற்சியும்தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அவரை இட்டுச் சென்றது. கன்னித் தமிழுக்கு கணினியில் இடம் வாங்கித் தந்தார். இன்று தமிழ் மக்கள் தட்டித் தட்டிக் கொடுத்து தமிழை வளர்க்கிறார்கள்!

தொடரும்...
- உமர்தம்பி அண்ணன்

4 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// “நீ அடுத்த முறை வரும்போது தவறாமல் எனக்கு போன் செய்” என்றாராம்! தொலை (பேசி) நோக்குத் திட்டம்!//

ரசித்தது !

//“ஹிந்தி, ஷைத்தான்!”. ஒயரைத் துண்டித்து வைத்திருந்தார் அந்த மேதாவி. நாம் அதற்கு மேல் தாவ மாட்டோமா?//

இதேபோல் அதுமாதிரியான மேதாவி(யான)களிடம் மாட்டிக் கொண்ட அனுபவம் எனக்குமுண்டு !

//உமரின் அளப்பரிய ஆர்வமும் இடைவிடாத முயற்சியும்தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அவரை இட்டுச் சென்றது. கன்னித் தமிழுக்கு கணினியில் இடம் வாங்கித் தந்தார். இன்று தமிழ் மக்கள் தட்டித் தட்டிக் கொடுத்து தமிழை வளர்க்கிறார்கள்!//

இதில் எவ்வித ஐயமுமில்லை ! தட்டி தட்டி கொடுப்பது மட்டுமா அப்படிச் செய்ததை வெட்டி வெட்டி.. ஒட்டியும் பார்த்து ரசிக்கின்றனரே...

சின்ன மாமா அவர்கள் ஒரு முறை எனக்கு voice reconization எப்படி நிகழ்கிறது அவைகள் எப்படி எழுத்துருக்கலாக மாறுகிறது என்று செய்முறையில் செய்து விளக்கி காட்டி அசத்தினார்கள்...

என்ன ஒரு வித்தியாசம் தமிழில் பேசினால் ஆங்கிலத்தில் தட்டிக் கேட்ட எழுத்தாக கொடுத்தது, அதுவே பின்னால் தங்க்ளீஸாக எழுத்துருக்களுக்கு ஒருங்குறி கொடுத்து ஆங்கிலத்தில் அடி தமிழில் படி என்று மாற்றி தமிழுலகையே அசத்திக் காட்டினார்கள்.

sabeer.abushahruk said...

அடிப்படை ஞானம்
படிப்படியான முன்னேற்றம்
என வாழ்ந்த காக்காவின் சரிதையொரு
படிப்பினை!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
எடுக்க எடுக்க குறையாமல் வரும் அமுத சுரபி போல். வாவன்னா பெரியப்பாவினால் கணினி பட்டனை அமுக்க அமுக்க உமர் சாச்சாவின்.வாழ்க்கை சரித்திரங்கள் வந்து கொண்டே இருப்பதை கண்டு வியக்கிறேன்.

அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகில் பதவிகளை உயர்த்தி கொடுத்தது போல். ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் என்னும் சொர்க்கத்திலும்.உயந்த பதவிகளையும் கொடுப்பானாக. ஆமீன்

அப்துல்மாலிக் said...

நமக்கெல்லாம் நம்பிக்கையூட்டும் ஒரு தொடர் அதுவும் நம்மூர்/நம் இனத்தவரின் வாழ்க்கை சரித்திரம்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு