Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரமழானின் கடைசி பத்து - பழைய நினைவுகளிலிருந்து... 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2011 | , ,


இறையருட்கொடைகளை நம்மீது குறைவின்றி பொழியும் இந்த புனித ரமழான் நம்மை விட்டு மெல்ல,மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதை அறியாமல் இறுதியில் நாம் ஒரு மாதம் செய்த நல்லமல்களுக்கு இறைவன் கொடுக்கும் கூலியாய் வரும் ஈத் பெருநாளை புதிய சட்டை, வேட்டி, தொப்பி, கைக்குட்டை, செருப்பு, நறுமண செண்ட், கைக்கடிகாரத்திற்காக சிறுவயது உள்ளம் பெருமிதம் கொண்டு பேரானந்தம் அடைந்து அந்த நாளை எண்ணி ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஒரு காலத்தில்.

ஊரில் ஒவ்வொரு பள்ளிகளும் ஒரு மாத இரவுத் தொழுகையில் ஓதி வந்த திருக்குர்'ஆனை மெல்ல,மெல்ல முடித்து இறுதியில் 30வது ஜூஸ்வின் சிறிய சூராக்களை ஓத ஆரம்பிக்கும்.

ஊரில் சில பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டு 27ம் இரவு தொழுகைக்காகவும் அதற்குப்பின் இரவுத் தொழுகையில் ஓதி முடிக்கப்படும் திருக்குர்'ஆன் "தம்மாம்" விடப்பட்டு (சவுதி தம்மாம் அல்ல) இதுவரை தொழுகைக்கு கட் அடித்த பெருசு, சிறுசுகள் யாவும் பேணுதலுடன் அனைத்து ரக்காத்துக்களுடன் பிளஸ் மூன்றையும் தொழுது முடிக்கும். நல்ல பிரியாணி நார்சாவாய் பிளாஸ்டிக் பைக்குள் நைந்து கிடக்கும். வீடு செல்லும் வரை காத்திருக்காத சில உள்ளங்கள் மொளனமாய் அதை அங்கேயே பிரித்து மேயும்.

ஒரு பள்ளியில் வாங்கிய நார்சாவுடன் அடுத்த பள்ளிக்கு செல்ல நேரம்/வாய்ப்பு தேடும். கிடைத்தால் அதையும் நன்கு பயன்படுத்திக்கொள்ளும்.

தெரு தையல்கடைக்காரரின் கடையோ நியாயவிலைக்கடை (ரேசன்)போல் கூட்டம் அலைமோதி நிற்கும். சொன்ன தேதியில் அவர் துணிமணிகளை தைத்து கொடுத்து விட்டால் உள்ளம் அவரை கின்னஸ் புத்தகத்தில் வர வேண்டியவர் என வெறும் வாயில் புகழ்ந்து தள்ளும்.

பெரும்பாலும் ஜகாத் கடைசி பத்தில் நம் ஊரில் விநியோகிக்கப்படுவதால் அதை நன்கறிந்த மாற்று மத வெளியூர் கூட்டம் கூட தலையில் தொப்பியுடன், கிழிந்த மேல்துணி அணிந்து பஸ், ரயில் ஏறி எப்படியும் ஊர் வந்து சேரும். தெரிந்த சில இஸ்லாமிய வார்த்தைகளை நாவில் அரைகுறையாய் உச்சரித்து காசு கேட்டு வாங்கிச்செல்லும்.

சென்னையிலிருந்து வந்த தொழிலதிபர்களின் பிள்ளைகளும் உள்ளூர் தொழிலதிபர்களின் பிள்ளைகளுடன் ஒன்று சேரும். உற்சாகம் ஊரில் கலைக்கட்டும் இதனால் சில சிறு சண்டைகளும் அரங்கேறும்.

ஏழை, பணக்காரர் ஏற்ற இறக்கமின்றி எல்லோரிடமும் காசு நிரப்பமாய் வந்து சேரும்.

பெருநாளுக்கு எடுக்கும் வேட்டி 80x80, 60x60, 60x40  என்று பள்ளிக்கூட கணக்கு பாடம் நடத்தும். அந்த குழப்பத்திலும் உள்ளம் குறைந்த காசு எது என்று பார்த்து அதையே வாங்கி உடுத்தி மகிழும்.

பெருநாள் இரவு ஊர் சுற்ற கடைத்தெரு பரீதா, வின்னர் வாடகை சைக்கிள் கடைகளில் முன் பதிவு செய்யும். 
வரும் வழியில் தலைக்கேற்ற தொப்பியை இலியாஸ், அன்சாரி கேப் மார்ட்டில் வாங்கி அணிந்து மகிழும். தொழுகை முடிந்ததும் அதை மடித்து எக்களில் சொறுகி வைக்கும்.

வருடத்தில் செல்லாத சொந்த பந்த வீடுகள் செல்ல உள்ளம் துடிக்கும் வர இருக்கும் (பெருநாள் காசு) வருவாயை எண்ணி பெருமிதம் கொள்ளும்.

பெருநாள் இரவு பிறை பார்ப்பதில் ஏற்பட்ட குழப்பம் இறுதியில் முஹல்லாப்பள்ளியில் (மரைக்காப்பள்ளி) உலமாக்களின் முடிவுக்கு கொண்டுவரப்படும். அவர்களின் நல்ல முடிவுக்கு பொறுமையின்றி காத்திருக்கும். நாளை பெருநாள் இல்லை நோன்பு என்று முடிவானால் சந்தோசப்படவேண்டிய உள்ளமோ கனத்த இதயத்துடன், கவலையுடன் வீடு திரும்பும்.

பெருநாள் பிறையை பார்க்க உள்ளம் பரவசம் அடைந்து அவசரப்படும். அது பார்க்கப்படாவிட்டாலும் ஏன் பார்க்கப்படவில்லை? என்று அறியாமல் உள்ளம் கேள்வி கேட்கும்.

பெருநாள் இரவு இறைச்சிக்கடைகளெல்லாம் பேரிரைச்சல் அடையும். ஆட்டின் உறுப்புகளை தனித்தனியே கூறுபோட்டு ஆடர் செய்யும். இது வரை வேண்டாவெறுப்பாய் இருந்த இறைச்சிக்கடைக்காரனும் வேண்டப்பட்டவனாய் ஆகிப்போவான். உள்ளம் வருடம் முழுவதும் அவனிடம் கறி வாங்குவது போல் பவ்வியமாக பேசி காரியம் சாதிக்க கிட்னி பக்கம் கண் திரும்பும்.


பெருநாளுக்கு எடுத்த வேட்டியில் ஒட்டப்பட்ட லேபிள் அவசரத்தில் கிழிக்கப்பட்டு அவ்விடத்தில் கருங்காக்கை ஒன்று போட்ட வெள்ளை எச்சம் போல் காட்சி தரும்.

கண்ட இடத்தில் உட்கார்ந்து எழ கருப்பு கம்பாயம் போட்ட வேட்டி கை கொடுக்கும். இன்று கம்பனையும் காணவில்லை கம்பாயம் போட்ட வேட்டியணிந்தவர்களையும் காண இயலவில்லை.

புது சட்டை அவசரத்தில் பிரிக்கும் பொழுது எடுத்த குண்டூசி சில சமயம் கையை நன்கு பதம் பார்க்கும். ஆடு அறுக்கும் முன்பே நம் கையில் காவு வாங்கும்.

சல்லடை போன்ற பனியனும் அது வெளியில் தெரிய கண்ணாடி போல் அணிந்த மார்ட்டின் சட்டையும் அதன் பாக்கெட்டில் வைத்த சலவை பத்து, இருபது ரூபாய் நோட்டுக்களும், சப்தம் வர அணிந்த சோலப்புரி செருப்பும் அந்த காலத்தின் சரித்திரக்குறியீடுகள்.

எவ்வித பிரயோஜனமும் இல்லாமல் இரவு நேர ஓவர்டைம் வேலையை பெண்கள் அனல்பறக்கும் அடுப்பங்கரையில் பார்த்து நல்ல ருசிக்கு பொறித்த ரொட்டி சுட்டெடுத்து, வட்லப்பம், கடல்பாசி, இடியப்பம், கறியாணம் என கலைக்கட்டும் அடுப்பங்கரை சளைக்காத வீட்டுப்பெண்கள். (ஜப்பானாக இருந்தால் பை நிறைய பார்த்த ஓ.டி.க்கு பணம் பார்த்திருப்பார்கள் பாவம்)

மல்லிகைப் பூக்காரி கூட இரவு நேரத்தில் நம் தெரு வீதி உலாவருவாள். நல்ல வியாபாரத்தையும் செய்து முடிப்பாள்.

பெருநாள் இரவு முழுவதும் பேய்பிசாசு பயமின்றி நண்பர்களுடன் சுற்றி விட்டு பெருநாள் காலை சுபுஹ் தொழுக்கைக்கு எழும்ப அலும்பு பண்ணும். வீட்டினரின் ஓலத்தில் வேண்டா வெறுப்பாய் எழுந்து கண்சிமிட்டி கூசும். வீட்டுப்பெரியவர்களின் அதட்டலில் கடைசியில் பல் துலக்காமல் பள்ளி வந்து சேரும்.

குளித்து புத்தாடை அணிந்து நறுமணத்தைலம் அங்குமிங்கும் உடலில் தடவி பள்ளிக்கு வந்து தொழுகைக்கு அமரும். பெரியவர்களுடன் சேர்ந்து கலிமாவும் கூறும். தொழுகை முடிந்ததும் பள்ளியின் வெளியே விரிக்கப்பட்ட விரிப்பில் தன் பாக்கெட்டிலிருந்து பள்ளி சாபுக்கு சலவை நோட்டு பத்தோ, இருபதோ அல்லது இயன்றதைப்போட்டு மகிழும்.

காலை மெல்ல, மெல்ல பொறித்த ரொட்டி சுவையுடன் பெருநாளும் நம்மை விட்டு மெல்ல, மெல்ல எட்டப்பார்வை போல் மறையத்துவங்கும். தெருவில் விற்கும் ஜஸ்கிரீம் உண்டு ஆசைத்தாகம் தீரும். பெருநாள் பகல் நல்ல பிரியாணி உண்டு அயர்ந்து போகும். சாய்ங்காலப்பெருநாள் சக நண்பர்களுடன் மல்லிப்பட்டினம் மனோரா காணத்தூண்டும்.

பெருநாள் மாலை தட்டுத்தடுமாறும் உள்ளங்களை ஒண்றிணைத்து மன ஓர்மையுடன் நமதூர் ஜாவியாவில் மாலை நேர திக்ரு மஜ்லிஸ் ஒன்று சேர்க்கும்.

எல்லாம் முடிந்து வீடு திரும்பியதும் சென்ற ரமழானுக்காக வருந்தத்துவங்கும் செய்வதறியாது விழிக்கும். வருடம் முழுவதும் ரமழானாய் இருக்கக்கூடாதா? என உள்ளத்துக்குள் கேள்வி எழுப்பி பதிலின்றி மொளனமாய் உறங்கிப்போகும்.

சென்ற ரமழான்களை எண்ணிப்பெருமிதம் கொள்வதுடன் கையில் இருக்கும் ரமழானை நன்கு அமல்கள் செய்து பயன்படுத்துவோம். இறைவனின் பொருத்தத்தைப்பெருவோம் இன்ஷா அல்லாஹ்...

நம்மை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்த அனைவருக்காகவும் இறைஞ்சுவோம்...

மலரும் நினைவுகளுடன் நிகழ்கால நிகழ்வுகளுடன்..

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

12 Responses So Far:

sabeer.abushahruk said...

மண் மணக்குதய்யா, நெய்னா எம் எஸ் எம்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மண்ணின் மைந்தனின் மயக்கும் வரிகளும்....

புதுவேட்டி(கள்) போடும் கணக்குப் பாடமும் !

இறைச்சிக் கரைக்கார(ன்)ர் - "ன்"னு "ர்"ராக மாறுவதும் !

பிறை தெரிந்திருக்கலே ! ஏன் கண்ணில் படாமல் போனது !?

குண்டுசி போடும் குத்தல்... !

தொழுததும் தலலயிலிருந்த தொப்பு எக்கலுக்கு செல்லும் வாகு !

இன்னும் இன்னும் இருக்கே MSM(n) அகராதியிலிருந்து அள்ளியெடுக்க ஏரரளம் கொட்டிக் கிடக்கிறது !

நினைவுகளை.... நிமிர்ந்து நடைபோட வைக்குமு நேர்த்தி MSM(n)க்கு கை வந்த கலை !

அருமை !

Shameed said...

பெருநாளைக்கு கடா அறுப்பது போல் பெருநாளை பற்றி கடகட வென சொல்லி முடித்துவிட்டார் MSM

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அருமை பழசை உவமையுடன் கிளருவதில் கிங் நெய்னா!

ஆறறிவு கொண்ட அதிரையர்க்கு மத்தியில் அன்றைய அதிரையை அப்படியே அறிவிக்கும் ஏழாம் அறிவு தான் இப்படியெல்லாம் அப்படியே சொல்ல வைக்கிறது.இப்படியெல்லாம் எழுத எங்களால் முடியாது நெய்னா.

தொடரட்டும் ஏழாம் அறிவு மண்ணின் மகிமையை அப்பப்ப எடுத்துரைக்க!
நிலைக்கட்டும் நிகழ்கால நிகழ்வுகள் நாளைய சந்ததிகளுக்கும் எடுத்துரைக்க!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஊரில் பழ(இள)ங்காலத்தில் நடந்த நினைவுகளை நேற்றொ, இன்றோ நடந்தது போல் நினைவுக்கு கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. அதை நம் கண் முன்னே தோன்றும்படி செய்வது நெய்னாவிற்கு கைவந்த கலை.ஊரில் நடப்பதை வர்னிக்கவேண்டியே அதிலேயே ஊரிப்போய் உள்ளது நைனாவின் மூளை.அ(ஆ)திரையைப்பற்றி நெனாவிடம் கேட்டால் அவரின் மூளையின் செயப்பாடு திரை போட்டு விளக்குமோ? அவருக்கு அ"திரை"யை பற்றி! நம் சொல்லுபடி மூளை கேட்டால் காரியம் சிதைந்து போகும். நைனா சொல்படி கேட்கிறதே மூளை.அல்ஹம்துலில்லாஹ்.இவருடையது அதிரைச்சுவடி எனும் பெயரில் தொகுத்து வைத்தால் வருங்கால சந்ததியினருக்கு பயன் படும்.இன்றுமுதல் நைனாவின் அதிரைப்பற்றிய நிகழ்வுகளை அதிரைச்சுவடி என துணைதலைப்பிடலாமே?

ZAKIR HUSSAIN said...

நேற்று எதேச்சையா எம் எஸ் எம் அவர்களின் "அதிராம்பட்டினத்தில் வழக்கொழிந்த' சில விளையாட்டுக்களை ஒரு வலைத்தளத்தில் கமென்ட்ஸ் ஆக பார்த்தேன். அதிராம்பட்டினத்தின் 'ஆர்க்கியாளஜிஸ்ட்" என தாராளமாக இவருக்கு பட்டம் தரளாம். அவ்வளவு ஞாபக சக்தி நம் எம் எஸ் எம் அவர்களுக்கு.

ஊரில் பெருநாள் கொண்டாடும் ஆசை வந்து விட்டது. [ இப்போதைக்கு ஃபிளைட் டிக்கட்தான் அநியாயத்துக்கு நிரம்பி வழியும்]

//சல்லடை போன்ற பனியனும் அது வெளியில் தெரிய கண்ணாடி போல் அணிந்த மார்ட்டின் சட்டையும் அதன் பாக்கெட்டில் வைத்த சலவை பத்து, இருபது ரூபாய் நோட்டுக்களும், சப்தம் வர அணிந்த சோலப்புரி செருப்பும் அந்த காலத்தின் சரித்திரக்குறியீடுகள்.//

இந்த காலத்து 'பெர்சுங்க' க்களுக்கு வலையம் வலையமாய் ஃப்ளாஸ் பேக்' வருவது நிச்சயம். பேக் கிரவுன்டில் எதாவது 80's 70's சினிமா பாடல் குழாய் ஸ்பீக்கரில் சத்தம் கேட்கிறதா??

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


இங்கு நான் எதை (கண்டவாக்குளெ) எழுதிப்போட்டாலும் தவறாது படித்து அதற்கு தன் உற்சாகக்கருத்திட்டு மேலும், மேலும் என்னை எழுதத்தூண்டச்செய்யும் என் காக்காமார்கள் அபுஇபுறாஹீம், கவிக்காக்கா சபீர், விஞ்ஞானியாக்கா சாகுல், மருத்துவராக்கா ஜாஹிர் ஹுசைன், மச்சான் ஜஹபர் சாதிக், கலிஃபோர்னியாவின் காட்டுத்தீயாய் எம் எழுத்துக்களை என்றும் பிரித்து மேயும் கிரவ்ன் தஸ்தகீர் மற்றும் இன்னும் கருத்திட வர இருக்கும் சகோதர அன்பர்கள் அனைவருக்கும் என் அன்பு கலந்த (இதில் மற்றும் கலப்பட செய்ய மார்க்கம் அனுமதிக்கும் என்று நினைக்கிறேன்) சலாமும், நன்றிகளும், வாழ்த்துக்களும், து'ஆவும் சென்றடையட்டுமாக.....ஆமீன்...

எல்லாப்புக‌ழும் இறைவ‌னுக்கே.

மேற்க‌ண்ட‌ காக்காமார்க‌ளின் க‌ட்டுரைக‌ளையும், க‌விதைக‌ளையும் ப‌டித்தும் வேலைப்பளுவால் என் க‌ருத்துக்க‌ள் இடாமைக்கு வ‌ருந்துகிறேன்.

ஒரு நேரத்தில் பிறைகண்ட பின் பெருநாள் இரவும், பெருநாள் காலை ஈத்தொழுகைக்காக‌ ம‌க்க‌ளை அழைக்க‌ ந‌ம்மூர் ஒவ்வொரு ப‌ள்ளிக‌ளிலும் ந‌ஹ‌ரா அடிக்க‌ பெரும் போட்டிக‌ள் வ‌ரும். தனக்கு வாய்ப்பு கிடைத்ததும் ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு வித‌மாக‌ அடித்து ம‌கிழ்வ‌ர். சில‌ர் கொத்துப்புராட்டா போடுவ‌து போல் சில‌ர் கொஞ்ச‌மாக‌ ச‌ப்த‌த்தை கூட்டிக்கொண்டே போவ‌ர். சில‌ர் க‌த‌ற‌க‌த‌ற‌ அடிப்பார்க‌ள் பாவ‌ம் வாயிருந்தால் க‌ம்பும், ந‌ஹ‌ராவும் புகார் கொடுக்க‌ காவ‌ல் துறை சென்றுவிடும். இப்பொழுதெல்லாம் இந்த‌ ப‌ழ‌க்க‌ம் மெல்ல‌, மெல்ல நம்மூரில் ம‌றைந்துவிட்ட‌தாக‌வே க‌ருதுகிறேன்.


இனிக்கும் இனிய‌ ம‌ல‌ரும் நினைவுக‌ளுட‌ன்

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஏழை, பணக்காரர், பெரியவர், சிறியவர், வாலிபர், வயோதிகர் என்று எவ்வித பாகுபாடுமின்றி நம் எல்லோர் வாழ்விலும் ஒரு வசந்தத்தை ஏற்படுத்தும் மாதமாம் புனித ரமழான் மாதம் நிச்சயம் பொக்கிஷங்கள் பொதிந்த ஓர் இறைவனின் அருட்கொடை இம்மானுடத்திற்கு.

அல்லாஹ் வரும் காலங்களில் வர இருக்கும் புனித ரமழான்களை சிறப்பாக்கி எம் வாழ்வை சீராக்கி இறைப்புகழ் பாராட்ட வைத்தருள்வானாக என நாம் து'ஆச்செய்வோம்.


என்ன‌தான் இந்த‌ இறுதிப்ப‌த்தின் க‌டைசி நாட்க‌ளில் சந்தோசப்பெருநாளை எதிர்கொண்டிருந்தாலும் க‌ன‌த்த‌ இத‌ய‌த்துட‌ன் இழ‌க்க‌ இருக்கும் இந்த‌ பொக்கிஷ‌த்தை எண்ணி மனம் வேத‌னைய‌டைகிற‌து. அடுத்த‌ வ‌ருட‌ம் யார், யாருக்கெல்லாம் வாய்ப்புக‌ள் கொடுக்க‌ப்ப‌டுமோ? என்று ஏங்க‌ வைக்கிற‌து.


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கருத்துக்களை தோண்டி எடுக்க எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் தன் மன கிடங்கிலிருந்து பழசுகள் யாவற்றையும் கிளறி எடுத்து என் பார்வைக்கு கொட்டிய (M.S .M )மை நினைத்து பொறாமை கொள்வதோடு.வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

// பெருநாள் இரவு ஊர் சுற்ற கடைத்தெரு பரீதா, வின்னர் வாடகை சைக்கிள் கடைகளில் முன் பதிவு செய்யும். //

அன்று பெருநாள் இரவுகள் ஊரை அதிகமாக உளவு பார்த்தவை பரீதா, வின்னர் வாடகை சைக்கிள்கள்தான் என்று சொன்னால் மிகையல்ல .அந்த உளவாளிகளை நினைத்து இந்த ஊர் சுற்றியின் கவலைத்தானோ இந்த ஆக்கம்.

அலாவுதீன்.S. said...

சகோ. மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நல்லதொரு நினைவலைகள்! வாழ்த்துக்கள்!

அப்துல்மாலிக் said...

பழைய்தை தூண்டி வூரில் பெருநாள் கொண்டாடும் ஆசையை ஏற்படுத்திய நெய்னாவை வண்மையாக கண்டிக்கிறேன், போய் வர டிக்கெட் செலவை அனுப்பிவைக்கும் வரை இந்த கண்டனம் தொடரும்....

அருமை நெய்னா, ஏற்கனவே ஒவ்வொரு பெருநாளும் மனம் பழையதை அசைப்போடும் வேளையில் அதை மேலும் மெருகூட்டி, பட்டுகுஞ்சம் வெச்சி குதிரயிலே ஏத்திவிட்டுட்டே...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் நெய்னா முஹம்மது.

நேரமின்னை காரணமாக உடன் கருத்திட முடிவில்லை.

தங்களின் இது போன்ற பதிவுகளை என்று படித்தாலும் ஊர்க்கு போய் வந்த உணர்வு என்பதை இந்த பதிவிலும் நான் சொல்லியே ஆகவேண்டும்.

மிக அருமை நெய்னா...

Thanks for the virtual adirai Ramadan tour

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு