Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குளிருதுங்கோ...! 27

அதிரைநிருபர் | January 17, 2011 | , , ,

ஊரில் பனிக்காலம்
உடலுதறும் குளிர்காலம்...
உல்லங் கையுரச
உதிரத்தில் உஷ்ணமேறும்!

குழல் விளக்கின் வெளிச்சம்கூட
குளிர் அணுக்கள் சுமக்க...
ஒன்பது மணிக்கெல்லாம்
ஊர் அடங்கிப்போகும்!

கம்பளிப் போர்வைக்குள்
கால் மடக்கி உறங்க...
சுவர்க்கோழி சப்தம்கூட
சுரத்தின்றி கேட்கும்!

ஜட்டி யணியா பசங்களுக்கு
வேட்டி தானே போர்வை...
தலைக்குமேலே இழுத்துப் போர்த்த
தகிடுதத்தோம் குளிர்!

கரன்ட் போன காலத்திலே
கதவிடுக்கில் குளிர்...
திரியை சற்று தூண்டி வைக்க
திக்கித் திணறும் குளிர்!

குத்துவிளக்கு வெளிச்சத்திலே
பத்து விளக்காய் அவள்...
மண்ணெண்ணெய் புகையினிலும்
மல்லிகைப்பூ மணம்!

வீட்டார் அனைவரும்
விடிந்தும்கூட உறங்க...
ஹீட்டர் போட்டு குளிப்பர்
புத்தம்புது மாப்பிள்ளைகள்!

அரைவேக்காட்டு முட்டையும்
அப்பதான் போட்ட டீயும்...
அரைக்குள் கொணர்வதற்குள்
'ஆறி அலர்ந்து' போகும்!

விரட்டவந்த கதிரவனை
மிரட்டிப் பார்க்கும் குளிர்...
விடியற்காலையிலே
வீதியெலாம் ஜிலீர்!
குளத்துமேட்டு டீக்கடையில்
கூரைமேலே புகை...
'ஆத்தாத' டீயிலேயும்
தாத்தாவின் வாயிலேயும்
ஆவி வரவழைக்கும்
அதிகாலை குளிர்!

தேங்காய் எண்ணெய்க்குள்
உறைந்திருக்கும் குளிர்!
தீண்டும் விரல்களிலும்
மறைந்திருக்கும் குளிர்!

முருக்கு வத்தல் பொறியல்
மொறுமொறென்ற பப்படம்...
துணைக்கறியாய் இல்லையெனில்
சவசவக்கும் சாப்பாடு!

பஸ் ஸ்டான்ட் கதகதப்பில்
அசைபோடும் பசு...
பால் வண்டி மணி...
தலையை சுற்றிய ம்ஃப்ளருக்குள்
சவரம் துறந்த முகம்...
கைகட்டி வாய் நடுங்கும்
குளிருக்கு மரியாதை!

அமெரிக்கப் பனியும்
அரபு நாட்டுக் குளிரும்
உடல் வதைக்கும் உபாதை!
அதிரைப்பட்டினத்து
அளவான குளிரோ...
அனுபவிக்க உடல் ஏங்கும்
அசைபோட மனம் இனிக்கும்!

- சபீர் (நன்றி: ஜாகிர்)

27 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரைநிருபரின் ஆஸ்தான கவி எங்கள் கவிக் காக்காவின் "கணவு மெய்ப்பட வேண்டும்" கவிதையை கல்வி மாநாட்டில் மாநாட்டு குழு தலைவர் அவர்கள் வசித்துக் காட்டி எழுச்சியையும் உணர்வுகளையும் எங்களின் சார்பாக கவிபாடியதை நினைத்து சந்தோஷப் படுகிறோம்... அதுவும் கவிக் காக்கா சொன்னதுபோல் பிறந்த குழந்தையை தந்தையிடம் கொடுத்து பெயர் வைக்கச் சொல்லியதுபோல் இருந்தது (புதுக் கவிதையை மரபுக் கவிதையே வாசித்தது) என்றார்கள்.

உண்மையிலேயே குளிருதுங்கோ !!!

//முருக்கு வத்தல் பொறியல்
மொறுமொறென்ற பப்படம்...
துணைக்கறியாய் இல்லையெனில்
சவசவக்கும் சாப்பாடு!//

இதைத்தான் இன்று மன்ம தேடுகிறது !

Yasir said...

கவிக்காக்கா உங்கள் குளிர் கவிதை எங்கள் மனதையெல்லாம் நினைவுகளால் குளிர வைத்துவிட்டது....காலேஜ் ரோட்டில் இருந்து ராஜாமடம் பாலம் வரை அதிக காலையில் அனுபவித்து நடந்து சென்ற உணர்வு...

நான் ரசித்த வரிகள்

//விரட்டவந்த கதிரவனை
மிரட்டிப் பார்க்கும் குளிர்...
விடியற்காலையிலே
வீதியெலாம் ஜிலீர்!

குளத்துமேட்டு டீக்கடையில்
கூரைமேலே புகை...
'ஆத்தாத' டீயிலேயும்
தாத்தாவின் வாயிலேயும்
ஆவி வரவழைக்கும்
அதிகாலை குளிர்///

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//குழல் விளக்கின் வெளிச்சம்கூட
குளிர் அணுக்கள் சுமக்க...
ஒன்பது மணிக்கெல்லாம்
ஊர் அடங்கிப்போகும்!//

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு கவிகாக்கா, மிக அருமை காக்கா...


இது போன்ற பொன்னான காலங்கள் இனி கிடைக்குமா என்ற ஏக்கம் மனதில்.

நம்மையும் நம் இளையோரையும் கேடு கெட்ட தொலைக்காட்சி சீரியல்கள் அன்றாடம் எல்லோரின் நேரங்களை வீணடிக்கிறது. நேரத்தோடு உறங்கும் பழக்கத்தையும் தூக்கி எறிந்துவிட்டதே...

Unknown said...

அமெரிக்கப் பனியும்
அரபு நாட்டுக் குளிரும்
உடல் வதைக்கும் உபாதை!
அதிரைப்பட்டினத்து
அளவான குளிரோ...
அனுபவிக்க உடல் ஏங்கும்
அசைபோட மனம் இனிக்கும். உண்மையில் அனுபவம் (ஊரிலிருந்து நான் மீரா )

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
குளிர்கால கவிதை
சூப்பரா இருந்தது .

எங்கே அந்த அதிகாலை
கம்பன் ரயில் சத்தம்
பற்றி எழுதவில்லையோ?
என்று கேட்க நினைத்தேன்

ஆனால் குளிர்கால ரயில்வே ஸ்டேஷன்
போட்டோவை போட்டு வாயடைத்து விட்டார்கள் ,
( யாருப்பா அது கரைட்டா போட்டோ போட்டது )

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹோலோ,சொவ்கியமா ஈக்கியலா? இருக்கேன்பா!
என்னா அமெரிக்காவுல குளிரா? ஆமா ஊசியாட்டம் குத்துது. வெளில பாத்து போ! சரி,சரி. நீங்க உடம்ப பாத்துகுங்க. அங்கே விட்டு,விட்டு மழ பேய்தாம்புல குளுவுமே! போர்வ போத்திகிங்க ராத்திரியில! கோட்டு அனுப்பவா வெளில போறப்ப போட்டுக்க.ஹம் கொட்டு கீட்டெல்லாம் வேன இங்க எல்லாம் பலகிடுச்சி.சரி அப்ப நான் நாலைக்கு பேசுறேன் புள்ளயல ஸ்கூலுக்கு டிராப் பன்னனும் அப்ப சரி போன வச்சிட்டு இஸ்கூலுக்கு கிளம்பு.
இப்படி வட்டார மொழி பேசு வந்தவங்க நாம.இறைவன் வார்தையை எல்லாருக்கும் பொதுவாய் படைக்கும் ஆற்றலை மனிதனுக்கு தந்துள்ளான் ஆனால் உங்களை போல்(கவிஞர் சபீர்காக்கா) சிலரே அதை வகை,தொகையாய் ,அழகாய் பொருத்தவோ,அடுக்கவோ செய்கிறீர்கள். அழகாய் சமைத்து நாங்கள் சுவை(ருசி)க்க பறிமாறுகிறீர்கள் . எல்லாப்புகழும் அல்லாஹுக்கே உங்களைப்போல் அறிஞர்களே வார்தையின் ஓசையை அழகுபடுத்தும் மொழி வல்லுனர்கள்.அல்ஹம்துலிலாஹ்.

crown said...

குழல் விளக்கின் வெளிச்சம்கூட
குளிர் அணுக்கள் சுமக்க...
ஒன்பது மணிக்கெல்லாம்
ஊர் அடங்கிப்போகும்!
-----------------------------------------------------------------------
இங்கு வெளிச்சம் கூட குளிர் அணுக்கள் சுமக்க"- என்ன வொரு வர்ணனை!!!உடம்பில் நரம்புகலுடன் புடைத்துக்கொண்டு ஏதோ ஓட இரும்பாலான சிறு உருண்டையா?(பால்ரஸ்)அல்லது காற்று குமிழா? இப்படி தமிழை உச்சரித்ததால் இனம் புரியாத ஏதோ சுகமாய் உடலை குடைய.ஊற தினரிப்போகிறது இலக்கியம் தெரிந்த சின்ன அறிவு.புல்லரிக்கிறதுன்னும் சொல்வாங்க. ஆனால் இனம் புரியாத ,அந்த உருண்டை இன்னும் உருண்டு கொன்டிருக்கிறது.

crown said...

முருக்கு வத்தல் பொறியல்
மொறுமொறென்ற பப்படம்...
துணைக்கறியாய் இல்லையெனில்
சவசவக்கும் சாப்பாடு!
-----------------------------------------------------------------------
சவக்குழிக்குள் சாப்பாடு நாக்கு செத்துபோகும்.

crown said...

பஸ் ஸ்டான்ட் கதகதப்பில்
அசைபோடும் பசு...
பால் வண்டி மணி...
தலையை சுற்றிய ம்ஃப்ளருக்குள்
சவரம் துறந்த முகம்...
கைகட்டி வாய் நடுங்கும்
குளிருக்கு மரியாதை!
-----------------------------------------------------------------
ஏழுவரிக்குள் ஒரு பக்க(பக்கா)குளிர்காதை!
இக்காதை காதை அடைக்காத காதை.
கைக்குள் அடங்கிய கைக்குழந்தை!
தவழ்ந்தாலும் சுகம்,தாவி அனைத்தாலும் சுகம்.
மொத்தத்தில் மிதக்குளிராய், இதமாய் இருந்த
கவி வரிகள். அத்தனையும் இயல்பின் மொழிப்பெயர்பு, சிறப்பு.

crown said...

அமெரிக்கப் பனியும்
அரபு நாட்டுக் குளிரும்
உடல் வதைக்கும் உபாதை!
அதிரைப்பட்டினத்து
அளவான குளிரோ...
அனுபவிக்க உடல் ஏங்கும்
அசைபோட மனம் இனிக்கும்.
-------------------------------------------------------------------
மண்ணின் மைந்தனின் வாக்கு மூலம்.
தன் பூமிக்கு பூ சூட்டும் பரவசம்.
சுமையை கூட சுகமாய் பாவிக்கும் தாய் உள்ளம்.
எல்லாம் தன் இனம் சார்ந்த கரிசனம்.

ZAKIR HUSSAIN said...

//மண்ணின் மைந்தனின் வாக்கு மூலம்.
தன் பூமிக்கு பூ சூட்டும் பரவசம்.
சுமையை கூட சுகமாய் பாவிக்கும் தாய் உள்ளம்.
எல்லாம் தன் இனம் சார்ந்த கரிசனம். //

To Bro.Crown

இதுவே சூப்பர் கவிதையாக இருக்கே

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…
To Bro.Crown

இதுவே சூப்பர் கவிதையாக இருக்கே.
----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். தல தோசமும்,பழக்க தோசமும் மற்றவரை தொத்திகொள்ளும்.சபிர்காக்காவிடம் பழக கிடைத்ததின் பயன் இது. மற்றபடி நமக்கும் கவிதைக்கும் மலைக்கும்,மடுவுக்கும் உள்ள தூரம்.முலங்காலுக்கும், மொட்டைத்தலைக்கும் போட முயலும் முடிச்சி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அடக் கிரவ்ன்(னு): என்னா பம்முறே ? அதென்னா மலைக்கும் மடுவுக்கும் உள்ள் தூரமா ? எல்லாத்தையும் கவனிச்சுகிட்டு இருக்கேன்...

அசத்தல் காக்கா சொன்னாங்கன்னா அவங்களையே அசத்தியிருக்கு ! அப்புறம் எதுக்கும் இந்த முடிச்சு போடுறே ! :))

crown said...

அபுஇபுறாஹிம் சொன்னது…

அடக் கிரவ்ன்(னு): என்னா பம்முறே ? அதென்னா மலைக்கும் மடுவுக்கும் உள்ள் தூரமா ? எல்லாத்தையும் கவனிச்சுகிட்டு இருக்கேன்...

அசத்தல் காக்கா சொன்னாங்கன்னா அவங்களையே அசத்தியிருக்கு ! அப்புறம் எதுக்கும் இந்த முடிச்சு போடுறே ! :))
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சுகமா? எங்கே ஆளையே கானோம்? கலைப்பா?இன்னும் நீங்காத பிரமிப்பா? சாதிக்க தொடங்கிய நெகிழ்சியா? கொஞ்சமாவது சாதித்தோம் என்கிற மகிழ்சியா? இன்னும் உறக்கமா? இல்லை சும்மா ஓரமாய் நிற்று கவனிப்பா?இங்கே யாரும் பம்மல,உன்மைய சொன்னா நம்மல நம்பல.சரி,சரி எப்ப களத்துக்குள் ( அ. நி)முழு காலை மறுபடியும் வைப்பீங்க?

Unknown said...

மண் வாசனை வீசும் கவிதை ..........

விரட்டவந்த கதிரவனை
மிரட்டிப் பார்க்கும் குளிர்...
விடியற்காலையிலே
வீதியெலாம் ஜிலீர்!

ஊரில் சுபுஹு க்குப்பின் நடக்ரமாதிரி இருக்கு
---------------------------------------------------------------
மண்ணின் மைந்தனின் வாக்கு மூலம்.
தன் பூமிக்கு பூ சூட்டும் பரவசம .

தஸ்தகீரின் அட்டகாசமான வரியை
நானும் வழிமொழிகிறேன்

sabeer.abushahruk said...

தம்பி க்ரவுன்,
நான் எழுதினேனா அல்லது உமது உணர்வுக் கானகத்தை உழுப்பி விட்டேனா? இத்தனை அழகழாய்ச் சிதறிக்கிடக்கிறதே தரையெல்லாம் உமது வண்ண வண்ண பூக்கள்!

இவற்றிலிருந்து சிலவற்றை திருடும் யோசனைகூட தலை தூக்குகிறது.

நம் கம்பன் ரயில் பதிவு பதிந்த அதே நேரம் எனது ஏக்கமும் www.thinnai.com ல் 'அகலப்பாதை' என்று கவிதைகள் பகுதியில் பதிவாகியிருக்கிறது. ஒருமுறை வாசித்துவிடுங்கள் (மண்மணம் உத்தொரவாதம்)

அப்துல்மாலிக் said...

ஊரு குளீரு அப்படியே கண்முன்னே, போன வாரம்தான் இதை அனுபவித்தேன்.. அருமை

Yasir said...

சகோ.தஸ்தகீர்...கவிக்காக்கா குளிரை பற்றி எழுதி இருக்கிறார்கள் என்றால் நீங்கள் அந்த குளிருக்கு சுவட்டர் / மங்கி கேப் எல்லாம் போட்டு அழகு பார்த்து இருக்கீறிர்கள்....எப்படி இப்படி தமிழை தன் இஷ்டத்துக்கு அழகாக வளைத்துபோட்டு எழுதுகிறீர்கள்...தலைப்பு கொடுத்த இரண்டு நிமிடங்களில் எழுதும் உங்கள் திறமை கண்டு வியந்து போய் இருக்கிறேன்....

///மண்ணின் மைந்தனின் வாக்கு மூலம்.
தன் பூமிக்கு பூ சூட்டும் பரவசம்.
சுமையை கூட சுகமாய் பாவிக்கும் தாய் உள்ளம்.
எல்லாம் தன் இனம் சார்ந்த கரிசனம்// எப்படி இப்படியெல்லாம்

crown said...



அகலப் பாதை!
------------------

நல்ல பிள்ளையென

நீண்டு

பூமி துளைத்து

சிலதும்

சவலைப்பிள்ளையென

சோனியாய்த் தொங்கிக்கொண்டு

சிலதும்

விழுதுகள்....

ஆலமர நிழலில்

ஆளமர முடியாமல்

சிமென்ட் பெஞ்சில்

பறவை எச்சங்கள்...

நினைவில் மிச்சங்கள்!

மேல்திசையின் ஒளிப்பொட்டும்

மெல்லிய இறைச்சலும்

கொஞ்சம் கொஞ்சமாக

விட்டம் வளர்த்தும்

சப்தம் கூட்டியும்

நிலையம் வந்து...

பெட்டி படுக்கையோடு

வாப்பாவை ஏற்றிகொண்டு

கீழ்திசை நோக்கி

கருப்புச் சதுரம்

கடுகென குறைந்து

மறைந்த பொழுதுகள்...

மறையாது நினைவுகள்!

அதே

கீழ்திசையிலிருந்து

அடைமழை காலத்து

பிறை நிலவென

மெல்லத் தோன்றி

கருப்பு தேவதை

மூச்சிறைக்க

நிலையம் வந்து

வெளிநாட்டுப் பொருட்களோடு

வாப்பாவை இறக்கிச் சென்ற

அதிகாலை...

ஆனந்தத்தில்

அழுத பொழுதுகள்!

தனக்கான உணவு

தானிழுக்கும்

வண்டிக்கடியில்

வைத்திருப்பதறியாது

வாயசைத்துக் கொண்டிருந்த குதிரை.

மின் கம்பத்தின்

கட்டுப்பாட்டில்

உணவை அசைபோட

மனதோ நினைவுகளை...!

க்ளைடாஸ்கோப்பும்

கித்தாச் செருப்பும்

செஸ் போர்டும்

சாக்லேட்டும் அடங்கிய

பெட்டியை சுமந்த

கூலியும்

தர்காமுன் ஃபாத்திஹாவும்

பகிர்ந்தளித்த இனாமும்

நினைவுச்சின்னங்களின்

சுவர் கிறுக்கல்களாக

நினைவில் மிஞ்ச

அத்தனை இருப்புப் பாதைகளும்

தொடர்பறுந்து போய்விட

அடுத்த பட்ஜட்டின்

அகலப் பாதை

திட்டத்திற்கான

நிதி ஒதுக்கீட்டுக்காக

கைம்பெண்ணாய் காத்திருக்கிறது

எங்கள் ஊர்

ரயில் நிலையம்!

-sabeer

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.நல்ல பிள்ளையென நீண்டு பூமி துளைத்த சிலதும்
சவலைப்பிள்ளையென சோனியா தொங்கிக்கொண்டு சிலதும் விழுதுகள்...
இப்படி விழுதுப்பற்றிய வித்தியாச கோணத்தில் எழுந்து நிற்கசெய்த வரிகள்.

crown said...

ஆலமர நிழலில்
ஆளமர முடியாமல்
சிமென்ட் பெஞ்சில்
பறவை எச்சங்கள்...
நினைவில் மிச்சங்கள்!
-------------------------------------------------------------
சிலேடை!!!!(ஆலமர நிழலில்,ஆள(அ)மர முடியாமல்).எஞ்சிய அந்த அசூசையும்
வந்து நினைவில் அசைந்தாடும் நினைவுகளாய்...வெள்ளி குத்துவிளக்கு
பொளர்ணமி வெளிச்சத்தில் பார்ப்பது போல பளீச்,பளீச் வரிகள் அமர்களம்.

crown said...

என் கணினியில் கோளாறு மிச்சம் ,சொச்சம் பிறகு ....

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இங்கு நம் சகோதரர்களின் அறிவுத்திறனை பார்க்கும் போது வரப்போகும் கோடைக்காலமும் நம் முன்னே குளிர் காலமாக மாறும் போல தெரிகிறது. சபீர் காக்கா, தஸ்தகீர் காக்கா வாழ்த்துக்கள்..

என்ன குளிருதுங்கோ பதிவு வெளியானதும்,இங்கு துபாயில் மழை, முருக்கும், கடலை மிட்டாயும் திங்கனும் போல இருக்குது.

Unknown said...

தனக்கான உணவு

தானிழுக்கும்

வண்டிக்கடியில்

வைத்திருப்பதறியாது

வாயசைத்துக் கொண்டிருந்த குதிரை.

------------------------------------------------------------------------------------------
குதிரை வண்டியில் போகும்போது புல்லின்
வாசம் வீசுமே ....நினை வு இருக்கிறதா ?
கிட்டத்தட்ட மறந்தே விட்டோம் ...
தட்டி நினைவுப்படுத்தும் வரிகள் ...

ZAKIR HUSSAIN said...

To Sabeer

வர வர அநியாயத்துக்கு நல்லா எழுதுரே
I mean அகலப் பாதை & குளிருதுங்கோ...! இரண்டு கவிதையும்

sabeer.abushahruk said...

எற்புரை சபை நாகரிகம் என்பதால்...

என்னுடன் சேர்ந்து குளிர் காய்ந்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி. 

பின்னூட்டங்களில் "அட!!!" என வியக்க வைத்தவை:

yasir: //காலேஜ் ரோட்டில் இருந்து ராஜாமடம் பாலம் வரை அதிக காலையில் அனுபவித்து நடந்து சென்ற உணர்வு...//

shameed: //அதிகாலை
கம்பன் ரயில் சத்தம்//

crown: //தினரிப்போகிறது இலக்கியம்// 

crown://சவக்குழிக்குள் சாப்பாடு நாக்கு செத்துபோகும்.//

crown://
கைக்குள் அடங்கிய கைக்குழந்தை!
தவழ்ந்தாலும் சுகம்,தாவி அனைத்தாலும் சுகம்.//

crown://தன் பூமிக்கு பூ சூட்டும் பரவசம்.
சுமையை கூட சுகமாய் பாவிக்கும் தாய் உள்ளம்.
எல்லாம் தன் இனம் சார்ந்த கரிசனம்.

Harmys://ஊரில் சுபுஹு க்குப்பின் நடக்ரமாதிரி இருக்கு//

Yasir://நீங்கள் அந்த குளிருக்கு சுவட்டர் / மங்கி கேப் எல்லாம் போட்டு அழகு பார்த்து இருக்கீறிர்கள்//

Crown://வெள்ளி குத்துவிளக்கு
பொளர்ணமி வெளிச்சத்தில் பார்ப்பது போல பளீச்,பளீச்//

harmys://குதிரை வண்டியில் போகும்போது புல்லின் 
வாசம்//

Zakir://வர வர அநியாயத்துக்கு நல்லா எழுதுரே//

கோர்த்தவற்றில் பல நீ கொடுத்த உதிரிப்பூக்கள் என்பது நினைவிருக்கட்டும். 

நீ அப்படி ரசனையோடு ஃபோனில் விளக்கியிருக்காவிட்டால் இந்த வரிகள் எப்படி வரும்:

"குத்துவிளக்கு வெளிச்சத்திலே
பத்து விளக்காய் அவள்..."

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா என்னா ஊரோட எங்களையும் மறந்தாச்சா ?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு