Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முள்மகுடம் - புதுசுரபி‏ 8

அதிரைநிருபர் | July 30, 2011 | , , , ,

அன்று திங்கள் மாலை.....

அண்ணாசாலையில் உள்ள நூலகத்தின் அரங்கில், வட்டியின் கொடுமையினை விளக்கி அதற்கான தீர்வையும் விளக்கும் குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது.

சிறப்பான ஏற்பாடுகளுடன் சீரிய கருத்துக்களைக் கூற பிரமுகர்கள் மேடையில் வீற்றிருக்க விழா தொடங்கியது.

ஒவ்வொருவராகப் பேசும் போது, இக்குறும்படத்தைப் பார்க்க அவகாசம் கிடைக்கவில்லை எனவும், ஓரளவு பார்த்ததாக சிலரும், கடைசி நேர அழைப்பினால் பார்க்க இயலவில்லை என வேறு சிலரும் தப்பித்தாலும் -தலைப்பை ஒட்டி மிகச் சிறப்பாகவே உரையாற்றினார்கள்.

அடுத்ததாக அழைக்கப்பட்ட பிரமுகர், பிரபல பெண் கவிஞர் -அவரும் இக்குறும்படத்தைப் பார்க்க இயலவில்லை எனக் கூறியதோடு, “எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியையே மூட்டை கட்டி வைத்துவிட்டோம், அதனால் பார்க்க முடியவில்லை” என்று சொன்ன மாத்திரத்தில் என்னுள் பல கேள்விகள் மின்னல் வேகத்தில். ‘ஒரு பிரபலத்தின் வீட்டில் அதுவும் அரசின் முக்கிய  பதவியில் உள்ளவரின் வீட்டில் தொலைக்காட்சி இல்லையா?’ என வினாக்கள் விரிந்துகொண்டே போனதற்கு தடை போட்டன அவரின் அடுத்த வார்த்தைகள். “என் பிள்ளைகள் பள்ளி இறுதி ஆண்டுத்தேர்வை எதிர்நோக்கியுள்ளதால், தொலைக்காட்சிக்கு மூடுவிழா” என்று சொல்லி உரையினைத் தொடர்ந்தார் அந்தப் பொறுபுள்ள தாய்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதி ஆண்டுத்தேர்வு முடிவு வரும் நாட்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் பேட்டி செய்தித்தாள்களில் வெளிவருவது வழக்கம். அப்பொழுது சொல்லிவைத்ததுபோல எல்லா மாணவர்களும் அல்லது அவர்களின் பெற்றோர்களும் தொலைக்காட்சியின் தொல்லையினை உணர்ந்து முற்றிலும் தவிர்த்ததாகத் தவறாது கூறுவார்கள்.

இவர்களெல்லாம்,

இளைதாக முள்மரம் கொல்க; களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து.

எனும் குறள் புரிந்து இருப்பார்களோ?! அதன் விஷ(ய)மறிந்து.

சில ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் உள்ள ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியின் வர்த்தகப் பிரிவு தலைவராக இருந்தவர் ஒரு பெண் அதிகாரி. அவர் ஒருமுறை கூறினார், “நான் ஒரு தாயாகவும் அதே வேளையில் ஊடகத்திலும் பணிபுரிகிறேன். ஒரு தாயாக நான் சிறந்த நிகழ்ச்சிகளை அதாவது வன்முறைகள் இல்லாத, குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டக்கூடிய வகையிலான, தகவல்கள் நிறைந்தவற்றை மட்டுமே விரும்புகிறேன். ஆனால் ஒரு வர்த்தக அதிகாரியாக, அவற்றையெல்லாம் விட தொலைக்காட்சியின் அதாவது நிறுவனத்தின் வருமானத்தை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது” என்றார் வெறுப்புடன் பொறுப்பாக (!?)

’விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்’ என்பதுபோல நிச்சயமாக இவர்களைப் போன்று சமூகத்தில் உயர்ந்தவர்கள், பொறுப்புகளில் உள்ளவர்கள், தம் குழந்தைகளின் மீதும் அவர்களின் கல்வியின் மீதும் அக்கறை கொண்டவர்களாக, நிகழ்ச்சிகளைத் தரம் பிரித்துத் தங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டுபவர்களாக, தேவைப்படின் முற்றிலும் தவிர்க்கும் அளவிற்கு மனதளவிலும் தயார்படுத்தியும் விடுகிறார்கள்.

வாய்ப்புக் கேடாக, இன்று ஊடகங்களில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பெண்களையும், குழந்தைகளையும், நடுத்தரவயதுடையோரையும் குறிவைத்து குறிப்பாக நடுத்தர, அதற்கு கீழே உள்ள குடும்ப மக்களை பலி கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.

அதிகமான நேரத்தினை அதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் குழந்தைகள் நிஜவாழ்விற்கும் திரைவாழ்விற்கும் இடையிலான வேறுபாட்டினை பகுத்து, பிரித்து வித்தியாசம் அறிய இயலாத மனநிலையைப் பெறுகின்றனர் என்கின்றனர் குழந்தை உளவியலாளர்கள். அதே மனநிலையில் வளரும் குழந்தைகள் வளர்ந்த பின்பு கூட பெரிதாய் ஏதும் புரிந்து கொள்வதில்லை.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில் அண்மையில் செய்தித்தாள்களில் வெளிவந்த செய்தியொன்றைப் படித்திருப்போம். ‘சாப்பாட்டிற்கே வழியில்லாத ஏழை வீட்டுச் சிறுவன் (இலவச தொலைக்காட்சியில்) சாகச நிகழ்ச்சியைப் பார்த்து அது போல செய்ய முயன்று தீக்கிரையானான்” என்றும் “கணவன் தொலக்காட்சித் தொடரைப் பார்க்க விடாததால் மனைவி விவாகரத்து கோரினார்”, “நகைச்சுவை நடிகரின் வசனம் தூண்டியதால் பாட்டியை கொலை செய்த வாலிபர்” எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இத்தகையக் கொடுமையான, தீமை வழிந்தோடும் நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகிப் போன நாம் அவற்றிலிருந்து வெளிவந்து நம்மை நாமே மீட்டெடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்.

“மானக்கேடான, வெறுக்கத்தக்க அக்கிரமான செயல்களை விட்டும் விலகி இருக்குமாறு இறைவன் தன்மறையிலே கட்டளையிடுகிறான் ( திருக்குர்ஆன் 16:90)

இறைவன் எவற்றிலிருந்தெல்லாம் விலகி இருக்கச் சொல்கிறானோ, அத்தகைய செயல்களை எல்லாம் முழுமையாக கொண்டதாகவே இருக்கிறது இன்று நம் வீட்டின் நடுவே அமர்ந்து விருந்து படைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.

பரிகாசமும், பண்பற்ற பேச்சும், விரசமும் ஏன் கொலை போன்ற கொடும்பாவச் செயல்களைச் செய்யத்தூண்டும் காட்சிகளை அமைத்து நகைச்சுவை(!) எனப் பெயரிட்டு அவற்றை விருதுகளாலும், பாராட்டுகளாலும் அரசே ஊக்குவிக்கும் அவலத்தைப் பார்க்கிறோம்.

இறைவன் திருமறையில், “இறைநம்பிக்கையாளர்களே, எந்த ஆண்களும், பெண்களும் மற்றெந்த ஆண்களையும் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப்பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட வழியாகும். எவர்கள் இந்தப் பழக்கத்தினை கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள்” (திருக்குர்ஆன் 49:11) என்று எச்சரிக்கும் அதேவேளையில் இறைத்தூதர், “மக்களைச் சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்பவனுக்கு கெடுதான், அவனுக்கு கேடுதான், அவனுக்கு கேடுதான்” என்றும் எச்சரிக்கின்றார்கள்.

மேலும் இறைத்தூதர் அவர்கள், ஓர் இறைநம்பிக்கையாளன் எத்தகைய குணங்களை பெற்றிருக்க கூடாது எனபதை மிகத் துல்லியமாக விவரித்திருக்கின்றார்கள்.


இறைநம்பிக்கையாளன், குத்திப் பேசுபவனாகவும், அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பதில்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், தீய வார்த்தைகளைப் பேசுபவனாகவும் இருப்பதில்லை.” - திர்மிதி

இவை அனைத்தும் இன்று பாவமில்லாத செயல்போல பிஞ்சுகளின் மனதிலும் பழக்கமாகிவிட்டது.

தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தும், வழிபிறழ்ந்து போகலாமோ? பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் திகழவேண்டிய நாமே அவர்களின் தலையில் முள் மகுடம் சூட்டலாமோ??

முற்றிலும் கீழ்படிந்தவர்களாய் மாறி, நம் இளைய செல்வங்களுக்கு முன்மாதிரியாய் இருந்து, அவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை உயர்த்தி - நமக்காக பிரார்த்திக்கக் கூடியவர்களாய் உருவாக்குவோம்!!!!!



-- ரஃபீக்


8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///முற்றிலும் கீழ்படிந்தவர்களாய் மாறி, நம் இளைய செல்வங்களுக்கு முன்மாதிரியாய் இருந்து, அவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை உயர்த்தி - நமக்காக பிரார்த்திக்கக் கூடியவர்களாய் உருவாக்குவோம்!!!!! ///

ஆரம்பித்த நடை இலக்கிய விழாவில் அம்ர்ந்து உணர்வு, நடுவில் எச்சரிக்கையூட்டும் நிகழ்வுகள், நிறைவில் எம்மக்களை எமக்காக பிரார்த்திக்கும் நன்மக்களாக இருத்திட அறிவுரை !

வெல்டன் சகோதரர் ரஃபீக்... உங்களின் புதுசுரபி ஓர் கல்வி விழிப்புணர்வு அமுத சுரபி தொடரட்டும் உங்களின் எழுத்துப் பணி இன்ஷா அல்லாஹ்...

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கு.

சகோ: ரபீக் நல்ல ஒரு அருமையான அறிவுரை.

// தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தும், வழிபிறழ்ந்து போகலாமோ? பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் திகழவேண்டிய நாமே அவர்களின் தலையில் முள் மகுடம் சூட்டலாமோ??//

சீரியல் பார்க்கும் சீதேவியான பெற்றோர்கள் சீரியஸாக சிந்தித்து.பாவம் அறியா பாலர்களின் கல்வித் தரத்தை உயர்த்தட்டும்.

வாழ்த்துக்கள்.

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum Brother Rafeek!
What an excellent posting!!! Alhamdhulillah, you have echoed the feeling of millions of modest citizens particularly Muslims. People compromise their ideology for the sake of money and entertainment which is strictly forbidden in Islam
It is the responsibility of every brothers and sisters to infuse the Islamic way of life to all the members of their family.
Please continue your postings which will enlighten us.
Wassalam
N.A.Shahul Hameed

sabeer.abushahruk said...

அன்புச் சகோதரர் ரஃபீக்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
 
உங்கள் அருமையான எழுத்து நடைக்கு நாங்கள் பாராட்டுகள் என்ற கூலி தந்தாலும், உங்கள் பொது நல, தூய எண்ணங்களுக்கும் வழி காட்டுதல்களுக்கும் அல்லாஹ் நிச்சயம் கூலி தருவான்.
 
வாழ்க!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல ஆக்கப்பூர்வமான கட்டுரை.இப்படிப்பட்ட துறையில் நீங்கள் இருக்கும்வரை தொலைக்காட்சி வரலாற்றில் நல்ல மாற்றங்கள் வரும் என (நற்பெயருக்கு அப்துல் கலாம் அவர்கள், தேர்தல் சீர்திருத்தங்களுக்களுக்கு T.N சேசன் போல) நம்பலாம்.

அப்துல்மாலிக் said...

எதுவுமே (தொலைக்காட்சி, சினிமா) பொழுது போக்கு மட்டுமே மற்றும் நிஜ வாழ்விற்கு ஒத்துவராது என்று நாம் உறுதியாகவும், அதையே குழந்தைகளுக்கும் தெளிவுபடுத்தினால் ஊடகங்கள் அனைத்தும் செய்திகளை அறிந்துக்கொள்ளமட்டுமே என்ற மனநிலை உருவாகிடும்.

பகிர்வுக்கு நன்றி சகோ...

Yasir said...

அன்புச் சகோதரர் ரஃபீக்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

உங்கள் அருமையான எழுத்து நடைக்கும்,தாங்கள் சொல்லி இருக்கும் அவசியமான விசயங்களுக்கும் நாங்கள் பாராட்டுகள் என்ற கூலி தந்தாலும், உங்கள் பொது நல, தூய எண்ணங்களுக்கும் வழி காட்டுதல்களுக்கும் அல்லாஹ் நிச்சயம் கூலி தருவான்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் ரபீக்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தும், வழிபிறழ்ந்து போகலாமோ? பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் திகழவேண்டிய நாமே அவர்களின் தலையில் முள் மகுடம் சூட்டலாமோ??//

ஒவ்வொரு வீட்டு டீவி ரூமில் ஒட்டப்பட வேண்டிய வாசகங்கள்.

தொலைக்காட்சியே இன்று நிறைய பெண்களுக்கு எல்லாவற்றிற்கும் வழிகாட்டியாகவே உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

நல்ல அருமையான பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு