Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 3 7

அதிரைநிருபர் பதிப்பகம் | July 16, 2011 | , , ,


சிறு வயதில் உமர்தம்பி நோயால் நோவினை அடைந்தார். அவர் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது டெட்டனஸ்’ என்ற வாய்ப்பூட்டு நோய் ஏற்பட்டது. இதில் பிழைப்பவர்கள் சிலரே! சிறுவர்கள் உள்ளங் காலில் புண் ஏற்பட்டால் அதைக் கவனிக்காமல்,மாடுகுதிரை இவற்றின் சாணம் போன்றவற்றை மிதித்து நடந்தால் ஏற்படும் நோய். உடல் விறைத்துவிடும்வாய் திறக்க முடியாதுசிறு ஒலியைக் கேட்டால் கூட தாங்கிக்கொள்ள முடியாது!


இந்த நோயால் பாதிக்கப்பட்டு 16நாட்கள் தஞ்சை மிராசுதார் மருத்துவ மனையில் மருத்துவம் பார்க்கப்பட்டது. விலை உயர்ந்த ஊசி போடப்பட்டது. இதற்குப் பிறகு எங்களின் முழு கவனமும் உமர்மீது திரும்பியது. இந்நோயால் படிப்பு பாதிக்கப்பட்டது. அன்னையார் செல்லம் கொடுக்கத் துவங்கினார்கள்.
உமர் படிக்கும் காலத்திலேயே வேளா வேளைக்குச் சாப்பிட மாட்டார். நண்பர்களோடு ஆராய்ச்சிப் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருப்பார். ஏதாவது கருவிகளோடு போராடிக் கொண்டிருப்பார். அம்மாவின் கூப்பாடும் சாப்பாடும் பெரிதாகத் தெரியாது. நேரத்திற்குச் சாப்பிடாததால் வயிற்றுப் புண் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் காலங்களில் வயிற்றுப் புண்ணால் மிகவும் அவதிப்பட்டார். வயிற்றில் புண்ணையும் கருவிகளில் கண்ணையும் வைத்திருந்ததால் எண்ணும் எழுத்தும் எட்டி நின்றன.
ஒரு முறை துபாயில் அவருக்கு அம்மை நோய் கண்டது. 15 நாட்கள் வேலைக்குச் செல்லாமல் அறையிலேயே தனியாக இருந்தார்ஆள் துணையின்றி மிகவும் துன்பப்பட்டார். பொறுமையாக இருந்தார். பொறுமைக்குப் பரிசும் காத்திருந்தது! இந்த கால கட்டத்தில் அவர் ஒரு இந்தியரிடம் வேலை செய்தார். அவர் ஒரு சிந்தி. கடைந்த மோரில் வெண்ணெய் ஒன்ஸ்மோர்’ கிடைக்குமா என்று பார்ப்பார். கஞ்ச நெஞ்சன். எதையும் சிந்தார்எதையும் சிந்தியார்.
உதிரி பாகம் போடாமலே பழுது நீக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குஉதிரி பாகம் போட்டதாகச் சொல்லி பணம் வாங்கும்படிச் சொல்வார். உமரின் மனதுக்கு இது பெரும் உறுத்தலாக இருந்தது. இந்த இடத்தை விட்டு எப்படியும் வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
இந்த நேரத்தில் உமர் பணியாற்றிக் கொண்டிருந்த சிந்தியின் கடைக்கு ஒமான் நேஷனல் கம்பெனியிலிருந்து நேஷனல் தொலைக் காட்சிப் பெட்டிகள் பழுது நீக்குவதற்காக வந்தன. இதன் பொருட்டு அந்தக் கம்பெனிக்கு போய் வரும் வாய்ப்புக் கிட்டியது. மேலாளரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. மேலாளர் தன் நிறுவனத்திற்கு வந்துவிடும்படி உமரைக் கேட்டுக்கொண்டார்.
அம்மை நோயால் வீட்டில் இருந்த இந்த விடுமுறை நேரம் உமருக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஒமான் நேஷனல் மேலாளருடன் அடிக்கடி தொடர்புகொள்ள முடிந்தது. நேர்முகத் தேர்வு போன்முகத் தேர்வாக அமைந்தது. உமர் நேஷனலுக்குத் தேர்ந்தெடுக்கபட்டார். பணி ஆணை கிடைத்தது. விசாவுக்கும் ஏற்பாடு செய்தனர். துபை ஒமான் நேஷனல் நிறுவனத்தில் விசா பெற்ற உமர்தம்பிக்குநேஷனல் தொலைக் காட்சிப் பெட்டிக்கு சர்வீஸ் செய்பவராக பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. டிவி மட்டுமல்லாமல்நேஷனல்பானாசோனிக் நிறுவனங்களின் தயாரிப்புகள் எல்லாவற்றிலும் உமர் மன்னனாகத் திகழ்ந்தார்!
உமருக்கு குடும்ப விசா கிடைத்தது. புதுப்பிப்பதற்காக அனுப்பட்ட மனைவிமக்கள் பாஸ்போர்ட் அப்போதிருந்த நெருக்கடி நிலை காரணமாக ஓராண்டுக்குப் பிறகுதான் கிடைத்தது. விசாவை பல முறை புதுப்பித்தோம். அதற்கு முன் உமரை அபுதாபிக்கு மாற்றிவிட்டார்கள். பாஸ்போர்ட் முன்னரே கிடைத்திருந்தால் மாற்றலாகி இருக்கமாட்டார். உமர் குடும்பத்தோடு அபுதாபியில் வசித்தார். கொடுக்கப்பட்ட வீடு தமிழர்கள்,மலையாளிகள் அதிகம் இல்லாத பகுதி. அவர் வீடு இருந்த கட்டிடத்தில் அரபி பேசும் மக்கள் மட்டுமே இருந்தார்கள். இது அவரது மனைவிக்கும் மகன்களுக்கும் மிகுத்த தனிமையை ஏற்படுத்தியது. உமர் பணிகளுக் கிடையே வந்து பார்த்துப் போவார். இருப்பினும் மகழ்ச்சி இல்லை. பையன்களை மகிழ்விப்பதற்காக ஒவ்வொரு வியாழனும் அபுதாபி சென்று விடுவேன். சனிக்கிழமை அப்படியே துபை வந்து என் பணிக்குச் சென்றுவிடுவேன்.
உமர் தன்னை துபாய்க்கு மாற்றித் தரும்படி கேட்டிருந்தார். அந்தக்கோரிக்கை ஏற்கப்பட்டது. துபாய்க்கு (தலைமையகம்) உமர் தேவை என்பதால் அவரை துபாய்க்கு மாற்றினார்கள். இப்போது உமர் குடும்பம் காகலகலப்புக்கு மீண்டது. எனக்கும் இரட்டிப்பு ஆதாயமாக ஆனது. உமர் அபுதாபியிலேயே இருந்திருந்தால் மேலாளர் பதவியை உடனே பெற்றிருந்திருப்பார். கூழுக்கும் மீசைக்கும் ஒரே நேரத்தில்ஆசைப்படக்கூடாது அல்லவா?
தொடரும் ...                                                                                                              


-- உமர்தம்பி அண்ணன்

பகுதி -2                                                                                                                     பகுதி-4

7 Responses So Far:

sabeer.abushahruk said...

interesting... very interesting!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்னாரின் சரித்திர உருக்கம் நல்ல அறிவுரையும் படிப்பினையுமாக உள்ளது.
அன்னாரின் துபை இல்லத்தில் நானும் பல வெள்ளிகளில் சந்தித்த உணவருந்திய இனிய நினைவுகளும் உண்டு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சிக்கலில் இருந்த விக்கலை நீக்கினார்கள் - என் தாயார் சொல்லக் கேட்டது..

ஒரு வயதான பெண்மனி ஆடியோ கேசட்டின் பிரித்தெடுத்த ஒலி நாடாவை சுற்றிய பந்தைப் போல் எடுத்து வந்து சின்ன மாமா அவர்களிடம் கொடுத்து சின்ன புள்ளைங்க பிரிச்சு போட்டுடுச்சும என் புள்ள ஆசையா பேசி அனுப்புனதை இன்னும் நான் கேட்கலம்மா இத சரியாக்கிடுமா என்று வந்தார் அதனைப் பார்த்ததும் மாமா அவர்கள் அமைதியாக வாங்கிக் கொண்டு நாளை வாருங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

மிகப் பொறுமையாக சிக்கலை எடுத்து நேர் படுத்தி முறையாக ஆடியோ சக்கரத்தில் சுற்றி கேசட்டினுல் பொருத்தி அடுத்த நாள் வந்த அந்தப் பெண்மனியிடம் கொடுத்திருக்கிறார்கள், அந்தப் பெண்மனியும் வூட்டுக்குக்கு போனா அங்கே புள்ளைவோ கேட்க வுட மாட்டேங்குது இங்கே போட்டு காட்டிடுங்கமான்னு சொன்னதால் மாமா அவர்களும் அதனை play செய்தும் காட்டியிருக்கிறார்கள் ஆடியோவிலிருந்து வெளி பேச்சில் "க்ரீச்" மற்றும் பேச்சு விட்டு விட்டு வந்தததை கேட்டுக் கொண்டிருந்த அந்த வயதான பெண் அவர்கள் "ஏ புள்ளக்கு ஒரே வூட்டு ஞாபகம் அதான் விக்க்கி விக்கி பேசுறாம்மா கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு பேசுனாத்தான் என்னாவம் இந்த புள்ள"

அதன் பின்னர் அந்த விக்கலைப் பற்றி புரியவைக்க சிறிது நேரம் பிடித்திருக்கிறது !

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.

எத்தனையோ மின்னனு பொருள்களுக்கு வைத்தியம் பார்த்த அன்னாருக்கு அவர்களின் நோய்க்கு வைத்தியம் பார்த்த வைத்தியரால் குணமாக்கிட முடியவில்லை. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடந்தே தீரும்.

அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை நீக்குவதற்காக நோய்களையும் சிரமங்களையும் கொடுத்து தன் பக்கம் அழைத்துக்கொண்டுவிட்டான்.

அன்னாரின் கப்ரு வாழ்க்கையும்,ஆஹிரத்துடைய வாழ்க்கையும் வெற்றியானதாக ஆக்கிட என்றும் துஆ செய்தவனாக!

அன்னாரின் குடும்பத்தில் ஒருவன்.
லெ.மு.செ.அபுபக்கர்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் இணைய அறிஞர் அவர்களை பற்றி அறியாத பல தகவல் இந்த பதிவில் தந்தமைக்கு மிக்க நன்றி.

புகைப்படத்தை பார்த்தவுடன் வீட்டில் நடந்த பழைய நிகழ்வுகள் நினைவில், என் மனம் 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஜாஹிர் காக்கா...

‘டெட்டனஸ்’ என்ற வாய்ப்பூட்டு நோய் பற்றி மேலும் விபரங்கள் தெரிந்தால் சொல்லுங்களேன்

Meerashah Rafia said...

இக்கட்டுரை/காவியம், குழந்தை பருவத்தில் ஆரம்பித்து பள்ளிப்பருவத்தை தொட்டு வேலை செய்யும் செயல் வரை வந்துவிட்டதால், எங்கே இந்த தொடர் முடிந்து விடுமோ என்ற 'திக் திக்' எனக்குள்..சீரியல் மாதிரி இழுப்பதற்கு உத்தி கண்டுபிடிச்சு வையுங்க(அ)ப்பா..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு