Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரியல் எஸ்டேட் - சிந்திப்போம்! [தொடர் - 4] - நிறைவு 37

அதிரைநிருபர் பதிப்பகம் | July 19, 2011 | ,

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்...


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


உலகெங்கும் நிலம் மற்றும் கட்டிடம் ஆகியவற்றின் மதிப்பு குறைந்திருந்தாலும் நமதூரான அதிரைப்பட்டினத்தில் மட்டும் இதன் மதிப்பு ஏறிக்கொண்டே இருப்பதற்கான காரணங்களையும், நம்முடைய தவறுகளை ரியல் எஸ்டேட் என்ற தலைப்பில் பார்த்துகொண்டு வருகிறோம். அதன் முக்கிய காரணங்களில் ஒன்றான பெண் பிள்ளைகளுக்கு வீடு கொடுப்பதையும் அதனால் அரங்கேற்றப்படுகிற அவலங்களையும் முந்தைய தொடரில் பார்த்தோம். அதனைத் தொடர்ந்து மனைவி வீட்டிற்கு கணவன் செல்லும் முறையையும் அதன் சாதக பாதகங்களையும் ஆய்வதற்கே இப்பதிவு.

முகவுரை:

நம் நாட்டில் மக்கள் என்னதான் தங்களுடைய மொழி, பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கம், உணவு முறை என்று வேறுபட்டிருந்தாலும் ஒரு விசயத்தில் அநேகருக்கு மத்தியில் ஒரே வகையான நிலைபாடு இருப்பதைக் காணலாம்! அது என்னவென்று கேட்கிறீர்களா? அதுதாங்க திருமணத்திற்குப் பிறகு பெண் தன்னுடைய கனவன் வீட்டிற்குச் சென்று வாழ்வது! இந்தியர்கள் நிறத்தால் மொழியால் வேறுபட்டிருந்தாலும் இவ்விசயத்தில் அனைவரும் ஒரே விதியைப் பின்பற்றுவது உண்மையில் வியப்பிற்குறியதே. இதில் விதிவிலக்காக, அதிரைப்பட்டினம், காயல் பட்டினம், கீழக்கரை இன்னும் கேரளாவில சில பகுதிகளிலும் மாப்பிள்ளை திருமனத்திற்குப் பிறகு மனைவி வீட்டிற்குச் செல்லும் பழக்கம் உள்ளது.

ஒரு பாடலில் "தவளைக்கும், பெண்புள்ளைக்கும் இரண்டும் இடம் தாண்டி" என்ற வரி தவளை எவ்வாறு நீரிலும் நிலத்திலும் வாழ்கிறதோ அது போல பெண்கள் பிறந்த வீடு மற்றும் புகுந்த வீடு என்று இரண்டு வீடுகளில் வாழவேண்டி இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படும். ஆனால் நம் ஊரான அதிரைப்பட்டினத்தைப் பொறுத்தமட்டில் ஆண்களுக்கே இரண்டு இடம்! இவ்வாறு நமதூரின் கலாச்சாரம் பெரும்பான்மைக்கு மாற்றமாக இருப்பதால் சில சமயங்களில் பிற ஊர் சகோதரர்களின் வசை பாட்டிற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை நமதூர் சகோதரர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. ஏன் இப்படி ஒரு சில ஊர்களில் மட்டும் பெரும்பான்மைக்கு மாற்றமான பழக்க வழக்கம்? இதற்கு காரனம் தான் என்ன?

அதிரைப்பட்டினத்தில் ஏன் இவ்வாறான நடைமுறை பின்றப்படுகிறது என்பதை யான் அறியேன் [உங்களில் யாருக்காவது தெறிஞ்சா சொல்லுங்களேன், ஒருவேளை நம்ம அகமது காக்கா? தெரிந்ததை விளக்கினால் நன்றாக இருக்கும்]. ஆனால் காயல் பட்டினத்தில் ஏன் இது போன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பதை சன் TV யின் நிஜம் நிகழ்சியின் போது சகோதரர் மர்ஹூம் சாகு(அப்து)ல் ஹமீது என்பார் கூறும்போது "முன்பெல்லாம் குடிப்பதற்காக ஊற்று நீர் எடுத்து வர வெகுதூரம் நடக்க வேண்டியிருக்கும். அப்போது ஒரு முறை நிறை மாத கர்ப்பினி தண்ணீர் சுமந்து வரும் வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது. இந்நிலையை ஆய்வு செய்த ஊர் பெரியவர்கள், பிறருடை மகள் என்பதால் தானே இது போன்று செய்தார்கள், அதுவே தன் மகளாக இருந்தால் இப்படி நிறை மாத கர்ப்பினியாக இருக்கும் போது தண்ணீர் எடுக்க அனுப்பி இருப்பார்களா? எனவே இனிமேல் திருமணமான பெண்கள் தன் தாய் வீட்டிலேயே இருப்பது என்றும், கணவன்மார்கள் பெண் வீட்டிற்கு சென்றுவற வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள்" அன்று முதல் இப்பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

என்ன காரணமாக இருந்தாலும், அதில் நியாயங்கள் நிறைந்திருப்பதாக நமக்குத் தோன்றினாலும் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் நாம் பார்க்க வேண்டியது, இவ்விசயத்தில் இஸ்லாம் என்ன சொல்கிறது? அதன் நிலைபாடு என்ன? என்பதையே.

அப்படி என்றால் இதைப்பற்றி இஸ்லாம் என்னதான் சொல்கிறது என்று பார்த்தால் நான் [என்னைப் பற்றி தெறிந்துகொள்ள பார்க்க தொடர் - 1] அறிந்தமட்டில் திருமணத்திற்குப் பிறகு மனைவி கணவன் வீட்டிற்குச் சென்று வாழ வேண்டும் என்றோ அல்லது கனவன் மனைவி வீட்டிற்குச் சென்று வாழ வேண்டும் என்றோ எந்த ஒரு நிபந்தனையையும் இஸ்லாம் முன் வைக்கவில்லை.

பொதுவாகவே இஸ்லாம் எதை செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறதோ அதை செய்வதும், எதை தடுத்திருக்கிறதோ அதை விட்டு விலகி இருப்பதும் ஒவ்வொரு முஃமினான ஆண், பெண் மீதும் கடைமையாகும். அதைத் தவிர்த்து ஏனைய விசயங்களில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. அவ்வாறான விசயங்களில் எது இஸ்லாமிய வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்குமோ, எது நமக்கும் நாம் வாழும் சமூகத்திற்கும் நன்மை பயக்குமோ அதை நம் பகுத்தறிவு கொண்டு ஆய்ந்து செயல்படுவதே சிறந்தது. அதுவே அனைவருக்கும் நலம் பயக்கும்.

உதாரணத்திற்கு அசைவ உணவு தான் உண்ண வேண்டும் என்றோ சைவ உணவு உண்ணக் கூடாது என்றோ இஸ்லாத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை. எனவே, ஒரு முஸ்லிம் சைவ மற்றும் அசைவ உணவுகளை தாராளமாக உண்ணலாம். அதே சமயம் பிரயானத்தில் இருக்கும் ஒருவர் உண்பதற்காக உணவு விடுதிக்குச் செல்கிறார். அங்கே அவர் சைவ உணவை உண்பதே சிறந்தது. காரனம் அசைவ உணவில் ஹராம் / ஹலால் பிரச்சனை உள்ளது. ஆனால் சைவ உணவவில் அப்படி ஹராம் / ஹலால் என்ற பிரச்சனை இல்லை. இல்லை, எனக்கு கவுச்சி இல்லாமல் உணவு செல்லாது! என்போர் முட்டையை அல்லது கடல் வாழ் உயிரினக்களை சேர்த்துக்கொள்ளலாம். இதுவே ஒரு இறை நம்பிக்கையாளருக்கு உகந்ததாக இருக்கும். சமூக நிலைகளப் பொறுத்து சிறந்ததைத் தெரிவு செய்வது நமது கடமையாகும். இல்லையெனில், காக்கையும், கழுதையும், தானாய் செத்ததும், அல்லாஹ்வுடைய பெயர் சொல்லி அறுக்கப்படாததும் நமக்கு உணவாக்கப்பட்டுவிடும்! அல்லாஹ் பாதுகாப்பானாக! நர மாமிசம் விற்ற உணவகங்களும் இருக்கத்தானே செய்கிறது.

மேற்சொன்ன உதாரணத்தின் அடிப்படையில் கணவன் மனைவி வீட்டிற்குச் செல்வதாயினும், மனைவி கணவன் வீட்டிற்குச் செல்வதாயினும் இரண்டும் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது இரண்டில் எது சிறந்தது என்பதை நாம் தான் முடிவுசெய்ய வேண்டும். அதற்கு இரண்டின் சாதக பாதகங்களும் ஆய்வு செய்யப்பட் வேண்டும்.
************************************************************************************
இதன் சாதக பாதகங்களை ஆய்வு செய்வதற்கு முன் நம் அதிரைப்பட்டினத்தின் கணவன் மனைவி வீட்டிற்கு செல்லும் முறையை சற்று விளக்கிவிடுகிறேன். [மற்ற ஊர் சகோதர சகோதரிகளும் இவ்வளைப்புவை தொடர்ந்து படிப்பதனால்]

பொதுவாகவே, கணவன் மனைவி வீட்டிற்குச் செல்வது என்றால் மனைவி கணவன் வீட்டிற்குச் செல்லும்போது எவ்வாறு அதுநாள் வரை தான் வாழ்ந்த வீட்டை விட்டு, தன் தாய் தந்தை, உடன் பிறந்தவர்கள், தாத்தா, பாட்டி சுற்றம், நட்பு என்று எல்லோரையும் விட்டுச் செல்வாளே அது போல நினைத்து விடுகிறார்கள். மேலும் பொழுதை சீரழிக்கும் திரைப்படங்களிலே காட்டுவதுண்டு; பெண் பெரும் வசதி படைத்தவளாக இருப்பாள், ஆணோ தினக்கூலியாய் இருப்பான். உடனே ஆணிடம் பெண்ணின் தந்தை சொல்லுவார் "என் மகள் விரும்பி விட்டதால் இந்த திருமணத்திற்கு நான் சம்மதிக்கிறேன்; ஆனால் வீட்டோடு மாப்பிள்ளையாக நீ வந்துவிட வேண்டும்". உடன் அதை பெரும் இழிவாக எண்ணி தன் விரும்பிய பெண்ணை உதரித் தள்ளிவிட்டு வந்துவிடுவார். இது போன்ற சம்பவங்கள் மனதை பாதித்து விட்டதாலும் அதிரைப்பட்டினம் போன்ற ஊர்களில் கணவன் மனவி வீட்டிற்குச் செல்வதை ஏதோ பெரிய இழிசெயலை செய்தாற் போல் நினைதுக் கொள்கின்றனர். பிற ஊர்வாசிகள் தான் அவ்வாறு நினைத்துக் கொள்கிறார்களென்றால் நமதூர்வாசிகள் பலரும் ஏதோ பெரும் தவறிழைப்பதாய் எண்ணி குற்ற உணர்வோடு வாழ்ந்து கொன்டிருப்பதை பல சந்தர்பங்களில் நம்மால் உணர முடிகிறது. அல்லாஹ் நாடினால் இங்கே நம்முடைய ஐயங்களுக்கு விடை கிடைக்கலாம். சரி! விசயத்துக்கு வருவோம்.

அதிரைப்பட்டினத்தில் திருமணத்திற்குப் பிறகும் கணவனும், மனைவியும் அவரவர் வீட்டிலேயே தான் இருப்பார்கள். ஆனால் கணவன் மனை வீட்டிற்குச் செல்வார்! உண்பார்! உறவாடுவார்! தினமும் தன் தாய் வீட்டிற்கும், மனைவி வீட்டிற்குமென போய் வர இரு வீட்டோடும் தொடர்போடு இருப்பார். இதுதான் அதிரைப்பட்டினத்தில் கனவன் மனைவி வீட்டிற்குச் செல்வது. பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்று "வீட்டோடு மாப்பிள்ளை" யாய் சென்றுவிடும் படலமெல்லாம் இங்கில்லை. அது எப்படி தினமும் தாய் மற்றும் மனைவி வீட்டோடு தொடர்பாய் இருக்கமுடியும்? என்கிற கேள்வியும் எழலாம். ஆனால் இது எமதூரில் சாத்தியமே! காரனம் எங்களுடைய திருமன உறவுகளெல்லாம் 1 கி.மீ சுற்று வட்டாரத்திற்குள்ளேயே அமைந்துவிடும். நாங்கள் பெண் கொடுப்பதும் பெண் எடுப்பதும் எங்கள் ஊருக்குள்ளேயே. அதிலும் உறவுகளுக்குள் உறவாடுவதே அதிகம்.
*************************************************************************************
மனைவி கணவன் வீட்டிற்கு செல்வதன் சாதக பாதகங்கள்.

சாதகங்கள்:

திருமணம் முடித்து பெண் கனவன் வீட்டிற்குச் செல்வதால் அவள் மீதான பொருளாதாரச் சுமைகளை கனவனே சுமந்து கொள்வான்.

பிள்ளைகள் தந்தையினுடைய வாரிசுகளாக (தந்தையின் குடும்பப் பெயர் கொன்டு) அடையாளப்படுத்தப்படுவர்.

தவிர வேறு சாதகங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. (அப்படி இருந்தா நீங்க சொல்லுங்க)

பாதகங்கள்:

ஹிஜாப்: ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் முன்கை தவிர்த்து ஏனைய பகுதிகளை ஆடையால் மறைத்துக் கொள்வதாகும். ஒரு பெண் தனக்கு மகரமல்லாதவர்களுக்கு (மனம் முடிக்க ஆகுமாக்கப்பட்டவர்கள்) முன்னால் தோன்றும்போது இறை மார்க்கமான இஸ்லாம் ஹிஜாபை கட்டாயமாக்குகிறது.

சாதாரணமாக பெண்கள் அணியும் ஆடைகள் எதுவும் ஹிஜாபை முழுமைப்படுத்தாது என்பதை யாவரும் அறிவோம். கணவன் வீட்டிற்கு வாழப்போகும் பெண்கள் அங்கே ஹிஜாபைப் பேனுவது அவசியமாகும். ஏனெனில் அங்கே கனவனுடைய சகோதரர்கள் இருப்பார்கள். வீட்டில் இருக்கும்போது பெண்கள் ஹிஜாபைப் பேனுவது சிரமமாகும். காரனம் ஹிஜாபோடு வீட்டு வேலைகளைச் செய்வது அத்தனை எளிதல்ல.

பிழைப்பு: நம் மக்கள் வெளிநாடு அல்லது வெளியூர்களுக்குச் சென்று பொருளிட்டுபவர்களாக இருக்கிறார்கள். எனவே மனைவியை தன் வீட்டில் விட்டுவிட்டு செல்வது அத்தனை ஆரோக்கியமானதல்ல.

பனிச் சுமை: வீட்டிற்கு வரும் மருமகள் ஏதோ பனியமர்த்தப்பட்டது போல் அநேக வேலைகளை ஏவலின் பேரிலோ, தானாகவோ, விரும்பியோ, விரும்பாமலோ செய்ய வேண்டியிருக்கிறது.

பாசப் பிணைப்பு: தாயிடத்திலே உரிமையோடு நடப்பதைப்போல் மாமியாரிடத்தில் பெண்கள் நடந்து கொள்வதில்லை. அதற்கு அச்சம், மரியாதை என்று எதுவும் காரணமாக இருக்கலாம்.

மேலும், எதிர்பாராத விதமாக தன் மகளுடை வாழ்க்கை நிம்மதியற்றதாக இருக்கும் போது தன் மருமகள் நிம்மதியாக இருப்பதை மாமியார்களில் சிலர் விரும்புவதில்லை.

புதுமாப்பிள்ளை மனைவியோடு அதிக நேரம் செலவு செய்தால் வசைகளை சுமப்பவள் மருமகளே.

வயது வந்த பெண்பிள்ளைகள் இருக்கும் வீட்டில் ஒரு மருமகள் தன் கணவோடு இன்புற்று இருபப்து பெரும் குறை கானும் குற்றமாகக் கருதப்படும்.

மணமாகிச் சென்றவள் வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்பதை அவள் சொன்னால் மாத்திரமே அறிந்து கொள்ள முடியும்.

நிம்மதியற்ற வாழ்க்கையாயினும் நிர்பந்திக்கப்படுவர் எளியவர்கள். தங்களின் சகோதரிகளுடைய வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடும் என்பதற்காக.

கணவன் மனைவி வீட்டிற்கு (அதிரைப்பட்டினத்தில் இருப்பது போல) செல்வதன் சாதக பாதகங்கள்.

சாதகங்கள்:

ஹிஜாப் சம்பந்தமான எந்தப் பிரச்சனையும் இல்லை. ஏனெனில் அங்கே இருப்பவர்கள் அப்பெண்ணுக்கு மகரமானவர்களாகவே இருப்பர். அங்கே மனைவியின் சகோதரிகள் இருப்பார்களே! அவர்களுக்கு சகோதரியின் கணவர்கள் மஹரமல்லாதவர்களாக இருக்க பின் ஹிஜாப் பிரச்சனை எப்படி வராமல் இருக்கும்? என்ற கேள்வி எழலாம். ஆனால் அவர்கள் சகோதரியின் கனவர்கள் முன்னால் வர மாட்டார்கள். கனவன் மனைவி வீட்டினுல் நுழைய அனுமதி கேட்கும் போது மனைவியின் சகோதரிகள் மறைந்துகொள்வார்கள்.

நாம் வெளிநாடுகள் சென்று பொருளீட்டுவதால் பெண்களுக்கு அவர்களுடைய தாய் வீடு மிகவும் பாதுகாப்பானதாகவும், அவர்கள் இயலாதவர்களாக இருக்கும்போது தாய் மற்றும் சகோதரிகளின் அரவணைப்பும் கிடைக்கும். தன் தாயினிடத்திலே ஒரு வேலையக் கூட உரிமையோடு ஏவிவிடுவாள்.

கணவன் மனைவியை நன்றாக கவனித்துக் கொள்ளும்போது தாய் பூரித்துப் போவாள். தன் மகளின் மகிழ்சியில் தாயின் உள்ளம் உள்ளபடியே நிறைந்துபோகும்.

அதிரைப்பட்டினத்தில் மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, என்பது அறவே இல்லை.

திருமணமான பெண் தாய் வீட்டில் இருப்பது பெரும்பாலும் சாதகமான சூழ்நிலைகளையே கொண்டுள்ளது.

பாதகங்கள்:

கணவன் பொறுப்பற்றவனாக இருக்கும் போது திருமணத்திற்குப் பிறகும் மகளின் சுமையை தாய்வீடு சுமக்க வேண்டியிருக்கும். சில சமயம் அவளுடை கணவனின் சுமையையும் சேர்த்தே சுமக்க வேண்டியிருக்கும்.

பிள்ளைகள் தாயினுடைய வாரிசுகளாக (தாயின் குடும்பப் பெயர் கொண்டு) அடையாளப்படுத்தப்படுவர்.

தவிர வேறு பாதகங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. (அப்படி இருந்தா நீங்க சொல்லுங்க)

மேற்படி சாதக பாதகங்களை மார்க்க அடிப்படையிலும் சமூக நிலையின் அடிப்படையிலும் வைத்துப் பார்க்கும்போது திருமணமான பெண் கணவன் வீட்டிற்குச் செல்வதைவிட தாய்வீட்டில் இருப்பதே சிறந்தது எனும் கருத்துக்கே என்னால் வர முடிகிறது.

ஆனால் கணவன் மனைவி வீட்டிற்குச் செல்வதை விரும்பாவிடில் தனிவீடே சிறந்தது. ஏனென்றால் வெகு சில வீடுகளில் மாத்திரமே மருகளுக்கு பாதகமில்லாத சூழல் நிலவுகிறது என்பது உள்ளங்கையில் நெல்லிக் கனி.

நான் இங்கே அதிரைப்படினத்து சகோதர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் நமதூரில் இருக்கும் வழக்கம் மணமான பெண் தாய்வீட்டிலிருப்பது) உள்ளபடியே போற்றத்தக்கது. ஆனால் மனைவி வீட்டினர் அவளுக்கு தனி வீடு கட்டித் தர வேண்டும் என்று கணவன் தரப்பிலிருந்து கட்டாயப்படுத்துவதே தவிர்க்கப்பட வேண்டும்.

பெண்களுடைய பொறுப்பை ஆண்கள் சுமக்க வேண்டுமே தவிர ஆண்களுடைய பொறுப்புகளை பெண்கள் மீது சுமத்திவிடக் கூடாது

அவரவர்களுடைய தகுதிக்குத் தகுந்தாற் போலும் பிறருக்கு சிரமம் கொடுக்காமலும் ஒவ்வொருவரும் வாழப் பழகிக்கொன்டால் எல்லோருக்கும் நலமே.

மேலும், நம் நாட்டில் அநேகரும் கணவன் வீட்டிற்குச் சென்று வாழ்வது ஒன்றை தெளிவாகவே உணர்த்துகிறது. அதாவது மனைவி கணவனின் பொறுப்பில் இருப்பவள் என்பதை ஜாதி, மதம், மொழி, இனம் என்று அத்துனையும் கடந்து அனைவரும் ஏற்றுக்கொன்ட ஒன்று. அப்படி இருந்தும் மனைவியிடத்தில் கையேந்தும் கனவர்கள் சமூகம் உருவாகியிருப்பது வேதனைகுறியதே.

இங்கே மேலும் ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அதாவது பெரும்பாலோரால் பின்பற்றப்படுவதுபோல் எப்படி மனைவி கணவன் வீட்டிற்கு சென்று வாழ்வதே சிறந்தது என்ற எண்ணம் நமக்குள்ளும் வேரூண்டியதைப் போல் வேறு ஒரு விசயத்திலும் நாம் தேசிய நீரோடையில் கலந்திருக்கிறோம். அது தான் மணமான பெண்களின் பெயரோடு கனவனின் பெயரை சேர்துக் கொள்வது. இதைப் பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடாகவே என்னால் கருத முடிகிறது. எந்த சகாபியப் பெண்ணும் கனவனுடைய பெயரோடு சேர்த்து அழைக்கப் படவில்லை. முஃமின்களின் தாய் ஆயிஷா ரலி.. ஆய்ஷா பின்த் அபுபக்கர் ரலி.. என்றே அழைக்கப்படுகிறார்கள். ஒரு ஆணுடைய பெயர் திருமனத்திற்கு முன்பும் பின்பும் எவ்வாறு தந்தையின் பெயரைத் தாங்கி நிற்கிறதோ அது போல பெண்களின் பெயரும் திருமனத்திற்கு முன்பும் பின்பும் தந்தையின் பெயரைத் தாங்கி நிற்க வேண்டுமே தவிர கனவனின் பெயரையல்ல.

மனைவிக்கு பாஸ்போர்ட் எடுத்தாலும் அல்லது வேறு எதிலாவது அவர்களுடைய பெயர் எழுதப்பட்டாலும் தந்தையின் பெயரையே சேர்த்து எழுதுங்கள். அதுவே நிரந்தரமானதும் காலத்தால், சூழ்நிலையால் மாற்றப்படாததுமாகும்.

நிறைவுரை:

இக்கட்டுரை மனைவி வீட்டிற்குச் சென்று வாழந்து கொண்டிருக்கிறோமே என்ற குற்ற உணர்வுகளோடு இருக்கின்றவர்களுக்கும், நம் வீட்டிற்கு அழைத்தாலும் வர மறுக்கிறாளே மார்க்கப்படி(?) நம் வீட்டில் தானே இருக்க வேண்டும், என்ன செய்வது? என்று ஏக்கத்தோடு வாழ்ந்து கொன்டிருப்பவர்களுக்கும், வெளியூர் நண்பர்களின் கேளி கின்டல்களில் சிக்கி செய்வதறியாது தவித்துக் கொன்டிருப்பவர்களுக்கும் ஒரு ஆறுதலாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன், அல்ஹம்துலில்லாஹ்!

ரியல் எஸ்டேட் என்ற தலைப்பின் கீழ் நமதூரின் நிலையையும் அதற்கான காரணங்களையும் நான் அறிந்த மாத்திரத்தில் உங்களோடு பகிர்ந்துகொண்டேன். இதோடு இத்தொடரை முடித்துக் கொள்கிறேன்.

இது என் சிந்தனை மாத்திரமே, இஸ்லாத்தின் ஒளியில் இதைவிட மேலான கருத்து மற்றவரால் சொல்லப்பட்டால் அதுவே பின்பற்றப்பட வேண்டும். எனினும் குர் ஆனும், ஹதீஸுமே இறுதியானது.

இன்ஷா அல்லாஹ் வேறு ஒரு சிந்தனையோடு மீண்டும் ச(சி)ந்திப்போம்!

வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வுடைய வார்த்தை, வழிகாட்டுதலில் சிறந்தது அல்லாஹ்வுடைய தூதரின் வழிகாட்டுதல்.

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!

ம அஸ்ஸாலாம்
- அபு ஈசா


37 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அபு ஈசாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இன்றைய பதிவின் கரு பற்றி ஏதாவது ஒருவகையில் பேச்சு எழும் அங்கே அவரின் விளக்கமும் அருமையாக இருக்கும்...

அலசலும் வித்தியாசமே !

தம்பி அபுஈசா அடுத்த தொடராக என்ன இருக்கும் !? என்னை யோசிக்க வைக்க வேண்டாம் :)

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

காக்காவின் கருத்துக்கு நன்றி.

இன்ஷா அல்லாஹ் ஒரு பயனுல்ல பதிவோடு விரைவில் வருகிறேன்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்லதொரு பயனுள்ள தொடரை நிறைவு செய்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி.
மீண்டும் வருக நல்ல ஊர் பற்றிய ஆராய்ச்சி தொடரோடு!

majith safiullah said...

ஆணுக்கும், தவளைக்கும் இரண்டு இடம் என்பத்ற்கு நமதுஊரில் விதி விலக்காக சில தெருக்கள் ஊள்ளது என்பதையும் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

sabeer.abushahruk said...

நன்றாக அலசியிருக்கிறீர்கள் அபு ஈஸா ஆயினும் தீர்மானங்களில் உடன்பாடில்லை!

சாதக பாதகங்களில் பத்தோடு பதினொன்றாக "பொருளாதாரத்தைப்" பட்டியலிடமுடியாது. அது மட்டுமே பிரதானக் காரணி. மற்றவையெல்லாம் மாற்றிக்கொள்ளவும் திருத்திக்கொள்ளவும் முடியும்.

விதிவிலக்குகள் விடுத்து மற்ற அனைவரும் பெண்வீட்டில் 'பிழைப்பு' நடத்துவது நம்மூரின் அவலமே.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ அபு ஈசா தாங்களுடைய விளக்கமான தொடரை நிறைவுக்கு கொண்டு வந்துவிட்டீர்கள். இன்னும் தொடர்ந்தால் மேலும் பல விசயங்களை தெரிந்துக்கொள்வோம்.

//மேற்படி சாதக பாதகங்களை மார்க்க அடிப்படையிலும் சமூக நிலையின் அடிப்படையிலும் வைத்துப் பார்க்கும்போது திருமணமான பெண் கணவன் வீட்டிற்குச் செல்வதைவிட தாய்வீட்டில் இருப்பதே சிறந்தது எனும் கருத்துக்கே என்னால் வர முடிகிறது.//

பெரும்பாலான பெண்களுடைய மன நிலை எப்படி உள்ளது என்றால் ? தன்னுடைய வீடு என்கிற ஆனவத்தோடு கணவன்மார்களுடைய சொல்லுக்கு கட்டுப்படாமல் நான்தான் ராணி என்று குடும்பத்தை ஆட்சி செய்கிறார்கள்.

//பனிச் சுமை: வீட்டிற்கு வரும் மருமகள் ஏதோ பனியமர்த்தப்பட்டது போல் அநேக வேலைகளை ஏவலின் பேரிலோ, தானாகவோ, விரும்பியோ, விரும்பாமலோ செய்ய வேண்டியிருக்கிறது//

அப்படியாவது வேலை பார்க்கிறார்கள் என்றால் வரவேறுக்கதக்கத்து. பாவம் பல சிரமங்களுக்கு மத்தியில் பத்து மாதம் சுமந்து அவளை வளர்த்து ஆளாக்கிய தாயை தன் திமணத்திருக்கு பிறகாவது. தாய்க்கு ஓய்வு கொடுத்து நாம் வேலை பார்க்கலாம் என்று நினைக்கிறார்களா? தன் திருமணத்திற்கு பிறகுதான் தாயை வேலைக்காரி போல் நடத்துகிறார்கள். எத்தனையோ தாய்மார்கள் தன் மகளை விட்டு பிரியமுடியாத சூல்நிளையுளும். மனம் நொந்து வாழ்க்கையை கழித்தது கொண்டு இருக்கிறார்கள்.

லெ.மு.செ.அபுபக்கர்

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//majith safiullah சொன்னது…
ஆணுக்கும், தவளைக்கும் இரண்டு இடம் என்பத்ற்கு நமதுஊரில் விதி விலக்காக சில தெருக்கள் ஊள்ளது என்பதையும் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்//

சகோதரரை அதிரை நிருபர் சார்பாக வரவேற்கிறேன். அந்த தெருக்களின் பெயரையும், நடைமுறையையும் விளக்கினால் நன்றாக இருக்கும்.

இப்படி ஒரு தகவலிருந்தும் இக்கட்டுரையில் இடம் பெறாததை ஒரு குறையாகவே கருதுகிறேன். தாங்களின் விளக்கம் இக்கட்டுரையை முழுமைப்படுத்தட்டும் இன்ஷா அல்லாஹ்.

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//sabeer.abushahruk சொன்னது…
நன்றாக அலசியிருக்கிறீர்கள் அபு ஈஸா ஆயினும் தீர்மானங்களில் உடன்பாடில்லை!

சாதக பாதகங்களில் பத்தோடு பதினொன்றாக "பொருளாதாரத்தைப்" பட்டியலிடமுடியாது. அது மட்டுமே பிரதானக் காரணி. மற்றவையெல்லாம் மாற்றிக்கொள்ளவும் திருத்திக்கொள்ளவும் முடியும்.

விதிவிலக்குகள் விடுத்து மற்ற அனைவரும் பெண்வீட்டில் 'பிழைப்பு' நடத்துவது நம்மூரின் அவலமே//

சபீராக்கா இங்கே நாங்க தீர்மானம் ஒன்னும் நெறவேத்தலையாக்கும், சும்மா வெளங்கியத வெளக்கியீக்கிறோம். அவ்லோவுதான்!

மேலும் பொருளாதாரமே பிரதானமெனினும் நமதூரைப் பொருத்தவரை மனைவி பிள்ளைகள் மீதான பொருளாதாரச் சுமைகளைச் விதிவிலக்குகள் விடுத்து அநேகரும் சுமக்கவே செய்கின்றனர்.

ஒவ்வொறு பெண் பிள்ளைக்கும் வீடு கட்டித்தர வேண்டும் என்கிற நிலையே இன்றைய சுமையாகும். தவிர அனைத்தும் சுகமே.

Yasir said...

சகோ.அபு ஈசா இக்கட்டுரையை நிறைவு செய்து விட்டாலும் மற்றொரு ஆக்கத்தை கூடிய விரைவில் நிரப்பமாக எழுத வாழ்த்துக்கள்

நம்மூரை பொருத்தவரை இந்த விசயத்தில் எது நல்லது கெட்டது என்பதை முடிவு செய்ய ஒரு சிந்துபாத் விவாதத்தைதான் நடத்த வேண்டும்... ஒரு சில உண்மைகளாக

1.கணவன் வீட்டில் இருப்பதனால் பெண் சிறிது பயந்து ஒரு சில விசயங்களை புரிந்து,உணர்ந்து நடக்கிறாள்..ஆனால் உம்மாவீட்டில் அவளது தவறு சுட்டிக்காட்டபடாமல் திருந்துவதற்க்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்...
2.அபூபக்கர் சொன்னதுபோல் செல்லம்கொடுக்கப்பட்டு தாயால் ஊட்டிவளர்க்கபட்ட பெண் மாமியார் வீட்டுக்கு சென்று சிலதையும் வாழ்வின் கஷ்டத்தை பட்டுதெரிந்தால்தான்..தாயின் அருமை தெரியும்....
3.கொழுந்தன்கள் அதிகம் இருந்தால் அந்த வீட்டில் கணவன் இல்லாத சமயத்தில் பெண்கள் அதிக காலம் இருப்பதை தவிர்ப்பது நலம் ( எல்லாரும் அப்படியல்ல ),ஆனால் இலைமறை காயாக நிறைய சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன..சூழ்நிலைகள்தான் சூழ்ச்சி செய்கின்றன ஒரு சிலர்களின் வாழ்வில்

பெண்ணை கட்டுபடுத்தி வைப்பது பெண்ணடிமையாக எனக்கு தெரியவில்லை....ஏன் ஆணுக்கு அந்த அளவிற்க்கு இல்லை என்று கேட்பவர்களுக்கு...பெண்தான் உலகம்,பெண்களை கொண்டே ஒரு குடும்பத்தின்,சமுதாயத்தின்,நாட்டின் பாரம்பரிய பெயர் அறியபடுகிறது,பெண் நடத்தையும்,செயலும் நன்றாக இருந்தால் அந்த குடும்பத்தின் செயல்பாடுகள் நலமாக இருக்கும்,அதுதான் அந்த ஊரின்,நாட்டின் பெருமையை பறை சாற்றும்

நிறைய நிறை குறை எழுதலாம்...எப்படி இருப்பினும் பெண் மாமியா விட்டீல் இருப்பது நலம் பயக்கும் இல்லாத பட்சத்தில் ஈடுபாடு மிக்க இறையச்சம், பாதுகாப்பு,உதவிக்கு பக்கத்து வீட்டு ஆள்கள் என்று இருந்தால் தனிக்குடித்தனம் தலையாயது என்பது என் கருத்து

Abu Easa said...

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

சகோதரர் அபுபக்கருக்கு...

//பெரும்பாலான பெண்களுடைய மன நிலை எப்படி உள்ளது என்றால் ? தன்னுடைய வீடு என்கிற ஆனவத்தோடு கணவன்மார்களுடைய சொல்லுக்கு கட்டுப்படாமல் நான்தான் ராணி என்று குடும்பத்தை ஆட்சி செய்கிறார்கள்//

தாங்கள் சொல்வது விதிவிலக்கே!

//அப்படியாவது வேலை பார்க்கிறார்கள் என்றால் வரவேறுக்கதக்கத்து. பாவம் பல சிரமங்களுக்கு மத்தியில் பத்து மாதம் சுமந்து அவளை வளர்த்து ஆளாக்கிய தாயை தன் திமணத்திருக்கு பிறகாவது. தாய்க்கு ஓய்வு கொடுத்து நாம் வேலை பார்க்கலாம் என்று நினைக்கிறார்களா? தன் திருமணத்திற்கு பிறகுதான் தாயை வேலைக்காரி போல் நடத்துகிறார்கள். எத்தனையோ தாய்மார்கள் தன் மகளை விட்டு பிரியமுடியாத சூல்நிளையுளும். மனம் நொந்து வாழ்க்கையை கழித்தது கொண்டு இருக்கிறார்கள்//

தாங்கள் சொல்வது அதிரையின் நிலையை. நால் அலசியிருப்பது கனவன் வீட்டிற்குச் செல்வதால் நடக்கும்/நடந்துகொன்டிருக்கும் நிகழ்வுகளை.

மேலும் தாயிடம் உறிமையோடு உதவிகேட்கிறார்களே தவிர வேலைக்காரிபோல் என்பதும் மகளைவிட்டு தாய் ஓடிவிடலாம் என நினைப்பதும் விதிவிலக்காக இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருக்கலாம்.

மேலும் சில எதார்த்தங்களை நாம் உள்வாங்க வேன்டியிருக்கிறது. ஒரே விசயம் இருவேறு இடங்களில் இருவேறு பொருளையல்லவா தந்துவிடுகிறது!?

தாய் மகளிடம் வேலை ஏவினால் அது உரிமை!
மாமியார் மருமகளிடம் வேலை ஏவினால் அது கொடுமை!

மகள் தாயிடம் வேலை ஏவினால் சோம்பேரி/ பச்ச புள்ள!
மருமகள் மாமியாரிடம் வேலை ஏவினால் அவள் அகங்காரி!

இதனால் பிரச்சனைகளே மிஞ்சும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அன்பு சகோதரர் அபுஈசா,

சமூக அக்கறையுடன் எழுதிய இது போன்ற தொடர் மேலும் எழுத வேண்டும்.

தலைப்பு என்னவோ ரியல் எஸ்டேடாக இருந்தாலும், நீங்கள் சொல்லியம் விசயம் அனைத்தும் ரியல்.

விதிவிலக்காக சில தெருக்கள் என்று சகோதரர் மாஜித் அவர்கள் சொல்லியதில் சிறிய திருத்தம், மார்க்கத்தை சரியாக விளங்கிய ஒரு சில குடும்பங்களும், ஆண் பிள்ளைகளை மட்டுமே பெற்றவர்களும் விட்டோடு மருமகளாக எடுத்துள்ளார்கள் என்பதை நாம் காணமுடிகிறது.

விதிவிலக்காக தெருக்கள் என்று சகோதரர் மாஜித் அவர்கள் தெளிவாக சொன்னால், அத்தெருக்களின் பெயர்களை பெருமையுடன் உதாரணமாக எடுத்துச்சொல்லி நம்மூரின் பெண்ணுக்கு வீடு என்ற தலைவிதியை மாற்ற முயற்சி செய்யலாம்.

அல்லாஹ் போதுமானவன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அப்படியாவது வேலை பார்க்கிறார்கள் என்றால் வரவேறுக்கதக்கத்து. பாவம் பல சிரமங்களுக்கு மத்தியில் பத்து மாதம் சுமந்து அவளை வளர்த்து ஆளாக்கிய தாயை தன் திமணத்திருக்கு பிறகாவது. தாய்க்கு ஓய்வு கொடுத்து நாம் வேலை பார்க்கலாம் என்று நினைக்கிறார்களா? தன் திருமணத்திற்கு பிறகுதான் தாயை வேலைக்காரி போல் நடத்துகிறார்கள். எத்தனையோ தாய்மார்கள் தன் மகளை விட்டு பிரியமுடியாத சூல்நிளையுளும். மனம் நொந்து வாழ்க்கையை கழித்தது கொண்டு இருக்கிறார்கள்//

சகோதரர் அபுபக்கர் சொல்லுவதும் உண்மை தான் என்றாலும், இதற்கு முழுக்க முழுக்க காரணம் பெற்றோர்களே. சிறுவயதிலிருந்தே தங்களின் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய முறையில் வளர்த்திருக்க வேண்டும்.

பெற்றோரின் சரியான வளர்ப்பு முறையே அந்த பிள்ளைகள் பிற்காலத்தில் அவர்களுக்கு ஹித்மத் செய்ய ஒரு தூண்டும் என்பது அனுபவபூர்வமான உண்மை.

இப்படி அவதியுறும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை சரியாக வளர்த்திருந்தால் வீட்டு வேலைகளை தாங்களாகவே இன்னும் பார்த்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்பது என் கருத்து.

இறைவன் மிகைத்தவன்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
--------------------------------------------

நண்பர்களே,

ஒரு இறுக்கமான சூழலை இங்கே பதிந்து விடுகிறேன்.

என்னுடன் படித்த தோழிகளில் ஒருவர் இப்போது மருமகன்கள் எடுத்து விட்டார், இதுவரை இரண்டு வீடுகளைக் கட்டி மூத்த பொண்ணுக்கும் இரண்டாவது பொண்ணுக்கும் தனித் தனியாக அவர்களின் பெயரிலேயே கொடுத்து விட்டு தற்போது இளைய மகள் வீட்டில் இருக்கிறார் இன்னும் அவரின் கணவர் வெளிநாட்டில்தான் வேலைசெய்கிறார்.

இவைகள் எத்தனை நாட்களுக்குதான் இப்படியே இந்த நிலை தொடரும் ?

Can you explain me friends ?

நட்புடன்,
ஆஷா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ஆஷா Said....இவைகள் எத்தனை நாட்களுக்குதான் இப்படியே இந்த நிலை தொடரும் ?

Can you explain me friends ?//

தங்களின் நண்பர் போல் இன்னும் எத்தனையோ சகோதரிகள் தங்களின் வாழ்க்கையை இப்படித்தான் கழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது மிக வருந்ததக்கது

பெண்ணுக்கு வீடு என்ற பழைய பழக்கத்தால் அதிக பொருளாதார எதிர்ப்பார்ப்புக்கு தள்ளப்பாட்டு வெளிநாட்டில் தங்களின் இளமையை தியாகம் செய்பவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே தான் செல்கிறது.

இன்றைய இளைய சமுதாயம் நல்ல விழிப்புணர்வு பெற்று வருகிறது.

வரதட்சனை இல்லாத திருமணங்கள் நிறைய நடந்து வருகிறது.

விழிப்புணர்வுகள் அதிகரித்துக்கொண்டே உள்ளது, பெண்ணுக்கு வீடு என்ற வழக்கம் நிச்சயம் ஒழியும்.

இன்ஷா அல்லாஹ்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நல்லதொரு அலசல்! விவாதங்கள் தொடரட்டும்! இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற அச்சம் உண்மையில் இருந்தால் : ஆண்கள், பெண்கள், மாமியார் என்று அனைவரிடமும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

பெண்ணை பெற்றவர்களை கட்டாயப்படுத்தி வீடு, நகை, பணம், இன்னும் பிற வரதட்சனை பெயரில் வாங்கும் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும். மாப்பிள்ளை, மாப்பிள்ளையின் தாய், தந்தையிடம் முதல் மாற்றம் வரவேண்டும்.

ஆண் பெண்ணுக்கு மஹர் கொடுத்து பெண்ணிடம் பிச்சையாக வாங்கும் வீடு மற்ற அனைத்தையும் தவிர்த்துக் கொள்ளும் நாள் வராதா? பெண்ணை பெற்றவர்களின் ஏக்கம் எப்பொழுது தீரும்.

தாய் தந்தை மகளுக்கு விரும்பி செய்யும் எதுவும் பிச்சையாகாது. மகளுக்கு அவர்களாக மனம் மகிழ்ந்து கொடுக்கும் சொத்துக்களில் பரக்கத் இருக்கும். கட்டாயப்படுத்தி வாங்கும் எதுவும் நிரந்தரமாக நிலைக்காது.

ZAKIR HUSSAIN said...

You have done wonderful analysis, If the solutions is collectively achievable then we are at right path

அப்துல்மாலிக் said...

//தாய் மகளிடம் வேலை ஏவினால் அது உரிமை!
மாமியார் மருமகளிடம் வேலை ஏவினால் அது கொடுமை//

அப்போ எந்த வேலையும் வாங்கக்கூடாதுனு சொல்ல வாறீங்களா?, தன் தாய் வீட்டில் சொகுசாக இருந்துவிட்டதால் அடுத்த இடம் போகும்போது வெறுப்பாக தோன்றும் அந்த சொகுசு வாழ்வு கிடைக்கலியே என்று, மாமியாரும் ஒரு தாய்தானே, அந்த மனப்பான்மை முதலில் வரவேண்டும்...

அப்துல்மாலிக் said...

கணவன் மனைவி வீட்டில் வாழும் இடங்களில்தானே அதிகம் விவாகரத்து (அல்லாஹ் பாதுகாக்கனும்) நடக்கிறது, அதர்கு முழு முதற்காரணம் தன் அம்மாவீட்டில் இருந்துக்கொண்டு தன் கணவனை ஒரு பொருட்டாகவே மதிக்காததுதானே, இதே மனைவி தன் வீட்டுக்கு வந்தால் இந்த மனப்பாண்மையிலிருந்து வெளிவந்து தன் குடும்பம்போல் தனது கணவன் குடும்பத்தையும் எண்ணினால் இது குறைய வாய்ப்பிருக்கிறது

அப்துல்மாலிக் said...

மனைவி கணவன் வீட்டிற்குப்போய் வாழ ஹிஜாபை காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல, தன் அண்ண/தம்பியின் மனைவியும் தன் நெருங்கிய சொந்தமாகிப்போகும்போது வேற்று மனிதர் என்ற மனப்பான்மை நீங்கும்போது அங்கே ஹிஜாப் என்ற ஒன்று தேவையில்லைதானே.

/பிழைப்பு: நம் மக்கள் வெளிநாடு அல்லது வெளியூர்களுக்குச் சென்று பொருளிட்டுபவர்களாக இருக்கிறார்கள். எனவே மனைவியை தன் வீட்டில் விட்டுவிட்டு செல்வது அத்தனை ஆரோக்கியமானதல்ல. /

அப்போ தன் வீட்டின் மீதே தனக்கு நம்பிக்கையில்லை என்றால் தன் தாய்/தந்தையை நம்பவில்லையென்றால் தன்மனைவிவீட்டின் மேல் நம்பிக்கை வைக்கமுடியுமா?, தன் பெற்றோர்தானே என்ற சுதந்திரம் கிடைக்க பெற்று எதையும் தான் செய்வது தான் சரி என்று எண்ணி இதுவே சில சமயம் தவறான செயல்களூக்கு வழிவகுத்துவிடுகிறது

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------

அருமையான ஆக்கம் தந்த அபு ஈஸாவுக்கு சலாமும், து'ஆவும்.

எல்லா விச‌ய‌த்திலும் மார்க்க‌ம் பேசும், மார்க்க‌ம் பார்க்கும் ந‌ல்ல‌, ந‌ல்ல‌ குடும்ப‌த்தில் பிற‌ந்த‌ பெரிய‌வ‌ர்கள் (ஆண்களும், பெண்களும்) கூட‌ த‌ன் வீட்டு ஆண் ம‌க‌னுக்கு திரும‌ண‌ம் முடிக்கும் ச‌ம‌ய‌த்தில் அவ‌னை திரும‌ண‌ம் முடிக்கும் பெண் வீட்டின‌ரிட‌ம் வீடு, ந‌கை அல்ல‌து ப‌ண‌ம் கேட்டு பிச்சை எடுத்து நிற்ப‌தை நாம் ப‌ர‌வ‌லாக நம்மூரில் எல்லா இட‌த்திலும் பார்க்க‌ முடிகிற‌து.

ஒருவ‌ன் ஓர‌ள‌வு வ‌ச‌தி வாய்ப்பு இருந்து காசு,ப‌ண‌ம் சேர்த்து வைத்திருந்து அவ‌னுக்கு பிற‌ந்த‌ ஒரே ஒரு ம‌க‌ளுக்காக‌ அவ‌னாக‌ முன் வ‌ந்து வழிய‌ முழு வீட்டையும் அப்பெண்ணுக்கு எழுதி வைத்து, கிலோ க‌ண‌க்கில் சேர்த்து வைத்த‌ ந‌கைக‌ளை போட்டு ம‌கிழ்கிறான் என்றால் அதில் நாம் எதுவும் குறைகாண‌ இய‌லாது. அது நாம் கேட்காம‌லேயே அவ‌ன் ம‌க‌ளுக்கு அவ‌னாக‌ இட்ட‌ தான‌ம்.

அதுவே ஒரு வீட்டில் இர‌ண்டு அல்ல‌து அத‌ற்கு மேற்ப‌ட்ட‌ பெண்க‌ள் இருப்பின் மேலே குறிப்பிட்ட‌ ப‌டி ஒரே ஒரு பெண்ணை பெற்றிருப்ப‌வ‌ன் அவ‌ள் ம‌க‌ளுக்கு ம‌ன‌ம‌கிழ்வுட‌ன் கொடுத்த அந்த‌ கொடைக‌ளை நீயும் இர‌ண்டு அல்ல‌து அத‌ற்கு மேற்ப‌ட்ட‌ பெண்க‌ளை பெற்றெடுத்த‌ வீடுக‌ளில் பிச்சை எடுக்க‌ எதிர்பார்த்திருப்ப‌து எவ்வ‌கையில் நியாய‌ம்?

அபு ஈசாவின் மேற்க‌ண்ட‌ க‌ட்டுரையின் விள‌க்க‌ம் பெண் வீட்டில் வாழ்ந்து வ‌ரும் ந‌ம‌தூர் 99% ஆண்க‌ளுக்கு கொஞ்ச‌ம் ஆறுத‌லாக‌ இருக்கலாம் ஆனால் குற்ற‌ உண‌ர்வு ஒரு போதும் நீங்கி விடாது த‌ன‌க்கென‌ ஒரு த‌னி இல்ல‌ம் த‌ன் உழைப்பில் க‌ட்டி அதில் த‌ன் தாய் த‌ந்தைய‌ரையும், ம‌னைவி ம‌க்க‌ளையும் வாழ‌ வ‌ழி வ‌கை செய்யும் வ‌ரை.


பெண் வீட்டில் எல்லாவ‌ற்றையும் வ‌லுக்கட்டாய‌மாக‌ பிடுங்கி விட்டு பிற‌கு நீ அமெரிக்காவில் வாழ்ந்தாலும், ஆஸ்திரேலியாவில் வாழ்ந்தாலும், அண்டார்டிக்காவில் வாழ்ந்தாலும் எம்மைப்பொருத்த‌வ‌ரை வீட்டு வாயிலில் வ‌ந்து த‌ன் தேவையை பரிவுடன் கூறி வேண்டியதை வீட்டிலிருந்து வாங்கிச்செல்லும் பிச்சைக்கார‌னே போற்ற‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ன்.


க‌ண்கூடாக‌த் தெரிந்தே பிச்சை எடுத்து ந‌ம்மை பாழும் கிண‌ற்றில் த‌ள்ளும் இந்த‌ கேடுகெட்ட‌ ப‌ழ‌க்க‌ம் என்று ஒழியுமோ? இல்லை ந‌ம் ஊரிலிருந்து நிர‌ந்த‌ர‌மாக‌ எம்மை அப்புற‌ப்ப‌டுத்தி வேறு எங்காவ‌து ஒரு சிற‌ந்த‌ இட‌த்தில் குடும்ப‌த்துட‌ன் ம‌டியும் வ‌ரை வாழ்ந்து விட்டு செல்ல‌ இறைவா நீயே ந‌ல்ல‌ருள் புரிவாயாக‌!....ஆமீன்...ஆமீன்...ஆமீன்...

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கட்டுரைச் சுருக்கம்

சமூகத்திலே இரண்டு விதமான நடைமுறை உள்ளது.

1) திருமத்திற்குப் பின் பெண் தனது கனவன் வீட்டிற்குச் சென்று வாழ்வது.
2) திருமத்திற்குப் பின் ஆண் தனது மனைவி வீட்டிற்குச் சென்று வருவது.

இவ்விரண்டு முறைக்கும் இஸ்லாமிய மார்க்கத்தில் (நான் அறிந்த வரை) எந்த தடையும் இல்லாததால் இரண்டு முறையுமே ஆகுமாக்கப்பட்டதே. எனவே, நமதூர் சகோதரர்கள் இப்படி ஒரு நடைமுறையைப் பின்பற்றுகிறோமே என்று வருந்தத் தேவையில்லை.

மேலும், மார்க்கத்தின் இன்ன பிற ஏவலின் அடிப்படையிலும், சமூக நிலை மற்றும் மனிதர்களின் மன நிலை அடிப்படையிலும் பல் வேறு காரன காரியங்களை ஆயும் போது இவ்விரண்டு முறைகளிலும் இரண்டாவதாக இருக்கிற "திருமத்திற்குப் பின் ஆண் தனது மனைவி வீட்டிற்குச் சென்று வருவது" என்ற முறையே சிறந்தது என்பதே என் கருத்து. ஏனென்றால் வெகு சில வீடுகளில் மட்டுமே மருமகளுக்கு பாதக மில்லாத சூழல் நிலவுகிறது.

வலியுருத்துவது

1) அனைத்துக் காரியங்களையும் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும்
1) ஆண்களே பெண்களின் சுமைகளை சுமக்க வேண்டும்.
2) பெண் வீட்டாரிடம் வீடுகடிக் கேட்கக் கூடாது.
3) பெண்களின் பெயர்களைப் பதியும் போது அவர்களுடைய தந்தையின் பெயரோடு சேர்த்தே பயன்படுதுங்கள் [கனவனின் பெயரோடு சேர்த்து எழுதுவதை பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடாகவே என்னால் கருத முடிகிறது].

குறிப்பு:

இக்கட்டுரை "திருமத்திற்குப் பின் பெண் தனது கனவன் வீட்டிற்குச் சென்று வாழ்வதை" குறை கான்பதற்காகவோ அல்லது "திருமத்திற்குப் பின் ஆண் தனது மனைவி வீட்டிற்குச் சென்று வருவர வேண்டும்" என்பதை வலியுருத்துவத்ற்காகவோ அல்ல.
**************************************************
இக்கட்டுரையின் கருத்து உங்களுக்குத் தவறாகத் தோன்றினால் மீண்டும் ஒரு முறை நிதானமாக படித்துவிட்டு தவறிருப்பின் சுட்டிக்காடுங்கள்.

சுடிக்காட்டப்படாத தவறுகளே நாளடைவில் சமூக அங்கீகாரம் பெற்றுவிடுகின்றன.

மஅஸ்ஸலாம்
அபு ஈசா

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

படித்த, கருத்துமிட்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி.
நம் சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தித் தர அல்லாஹ்வே போதுமானவன்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சுடிக்காட்டப்படாத தவறுகளே நாளடைவில் சமூக அங்கீகாரம் பெற்றுவிடுகின்றன.///

மிகச் சரியான வரிகள் சுட்டிக்காட்டபடாத தவறுகளே / வழக்கங்களோ பெரும்பாலும் அங்கீகாரம் பெற்று விடுகிறது எல்லா விஷயத்தில் இது பொருந்தும் !

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அப்துல்மாலிக் சொன்னது…
////தாய் மகளிடம் வேலை ஏவினால் அது உரிமை!
மாமியார் மருமகளிடம் வேலை ஏவினால் அது கொடுமை//

அப்போ எந்த வேலையும் வாங்கக்கூடாதுனு சொல்ல வாறீங்களா?//

நான் சொன்னது...

//மேலும் சில எதார்த்தங்களை நாம் உள்வாங்க வேன்டியிருக்கிறது. ஒரே விசயம் இருவேறு இடங்களில் இருவேறு பொருளையல்லவா தந்துவிடுகிறது!?

தாய் மகளிடம் வேலை ஏவினால் அது உரிமை!
மாமியார் மருமகளிடம் வேலை ஏவினால் அது கொடுமை!

மகள் தாயிடம் வேலை ஏவினால் சோம்பேரி/ பச்ச புள்ள!
மருமகள் மாமியாரிடம் வேலை ஏவினால் அவள் அகங்காரி!

இதனால் பிரச்சனைகளே மிஞ்சும்.//

வேலை வாங்கக் கூடாது என்று சொல்லவில்லை சகோதரரே! சமூகம் எவ்வாறு கருத்து கொள்ளும் என்றே சொல்கிறேன்.
பனை மரத்தடியில் குடிக்கும் பாலை சமூகம் கள் எனக் கொள்ளும் என்கிறேன்.

அப்துல்மாலிக் சொன்னது…
//தன் தாய் வீட்டில் சொகுசாக இருந்துவிட்டதால் அடுத்த இடம் போகும்போது வெறுப்பாக தோன்றும் அந்த சொகுசு வாழ்வு கிடைக்கலியே என்று, மாமியாரும் ஒரு தாய்தானே, அந்த மனப்பான்மை முதலில் வரவேண்டும்...//

நான் சொன்னது...
//பனிச் சுமை: வீட்டிற்கு வரும் மருமகள் ஏதோ பனியமர்த்தப்பட்டது போல் அநேக வேலைகளை ஏவலின் பேரிலோ, தானாகவோ, விரும்பியோ, விரும்பாமலோ செய்ய வேண்டியிருக்கிறது//

மாமியார் வீட்டில் மருமகள் அதிகமாகவே வேலை செய்கிறார்கள். மருமகள் மாமியாரைத் தாயாக நினைக்கவில்லை என்பதைவிட மாமியார் மருமகளை மகளாக நினைப்பதில்லை என்பதே எதார்த்தம் (விதிவிலக்குகளை தவிர்த்து).

Abu Easa said...

அப்துல்மாலிக் சொன்னது…

//கணவன் மனைவி வீட்டில் வாழும் இடங்களில்தானே அதிகம் விவாகரத்து (அல்லாஹ் பாதுகாக்கனும்) நடக்கிறது, அதர்கு முழு முதற்காரணம் தன் அம்மாவீட்டில் இருந்துக்கொண்டு தன் கணவனை ஒரு பொருட்டாகவே மதிக்காததுதானே, இதே மனைவி தன் வீட்டுக்கு வந்தால் இந்த மனப்பாண்மையிலிருந்து வெளிவந்து தன் குடும்பம்போல் தனது கணவன் குடும்பத்தையும் எண்ணினால் இது குறைய வாய்ப்பிருக்கிறது//

சகோதரரே! நீங்கள் விதிவிலக்குகளை விடையாக்குகிறீர். சுமார் 50 ஆயிரம் மக்கள் தொகைகொன்ட அதிரைப்பட்டினத்தில் உங்கள் ஆயுலில் ஒரு 100 விவாகரத்துகளைக் கண்டதுண்டா?

Abu Easa said...

//அப்துல்மாலிக் சொன்னது…

மனைவி கணவன் வீட்டிற்குப்போய் வாழ ஹிஜாபை காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல, தன் அண்ண/தம்பியின் மனைவியும் தன் நெருங்கிய சொந்தமாகிப்போகும்போது வேற்று மனிதர் என்ற மனப்பான்மை நீங்கும்போது அங்கே ஹிஜாப் என்ற ஒன்று தேவையில்லைதானே.

/பிழைப்பு: நம் மக்கள் வெளிநாடு அல்லது வெளியூர்களுக்குச் சென்று பொருளிட்டுபவர்களாக இருக்கிறார்கள். எனவே மனைவியை தன் வீட்டில் விட்டுவிட்டு செல்வது அத்தனை ஆரோக்கியமானதல்ல. /

அப்போ தன் வீட்டின் மீதே தனக்கு நம்பிக்கையில்லை என்றால் தன் தாய்/தந்தையை நம்பவில்லையென்றால் தன்மனைவிவீட்டின் மேல் நம்பிக்கை வைக்கமுடியுமா?, தன் பெற்றோர்தானே என்ற சுதந்திரம் கிடைக்க பெற்று எதையும் தான் செய்வது தான் சரி என்று எண்ணி இதுவே சில சமயம் தவறான செயல்களூக்கு வழிவகுத்துவிடுகிறது//

சகோதரரே! இது நம்பிக்கை நம்மந்தமானதல்ல. ஹிஜாபை கனவனின் சகோதரர்களிடத்திலும் பேன வேண்டும் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூரும் இட்ட கட்டளை.
ஒரு பெண்ணுக்கு கனவன் வீட்டில் ஏதேனும் இன்னல் ஏற்பட்டால் அவளுக்கு இருக்கும் ஒரே ஆதரவு கனவனே. அவனும் இல்லையென்றால்?

அப்துல்மாலிக் said...

/Abu Easa சொன்னது… சகோதரரே! இது நம்பிக்கை நம்மந்தமானதல்ல. ஹிஜாபை கனவனின் சகோதரர்களிடத்திலும் பேன வேண்டும் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூரும் இட்ட கட்டளை.
ஒரு பெண்ணுக்கு கனவன் வீட்டில் ஏதேனும் இன்னல் ஏற்பட்டால் அவளுக்கு இருக்கும் ஒரே ஆதரவு கனவனே. அவனும் இல்லையென்றால்? //

வீட்டிற்கு வரும் பெண்ணை தன் குடும்பத்தில் ஒருத்தியாக நினைத்தால் எந்த தவறான எண்ணமும் வர வாய்ப்பில்லைதானே, தாங்கள் கூற்றுப்படி பார்த்தால் சும்மாவேனும் மாமியார் வீட்டுக்குப்போனாக்கூட ஹிஜாபோடுதான் இருக்கனுமா, அப்படி எத்தனை பேர் பேணுகிறார்கள்?

ஒரு பெண் கணவர் இல்லாத போது மாமியார் வீட்டிலும்/ தாய் வீட்டிலும் மாறிமாரி இருப்பாங்க, இன்னல் வந்தால் தற்காலிகமாக தாய்வீட்டில் இருக்கலாம், ஆனால் நம் ஊரில் கணவர் ஊரில் இருந்தாலும் மனைவி வீட்டில் இருப்பதை அதிக ஆர்வம் காட்டி ஆதரிக்கிறீர்கள்

அப்துல்மாலிக் said...

//Abu Easa சொன்னது…

அப்துல்மாலிக் சொன்னது…

//கணவன் மனைவி வீட்டில் வாழும் இடங்களில்தானே அதிகம் விவாகரத்து (அல்லாஹ் பாதுகாக்கனும்) நடக்கிறது, அதர்கு முழு முதற்காரணம் தன் அம்மாவீட்டில் இருந்துக்கொண்டு தன் கணவனை ஒரு பொருட்டாகவே மதிக்காததுதானே, இதே மனைவி தன் வீட்டுக்கு வந்தால் இந்த மனப்பாண்மையிலிருந்து வெளிவந்து தன் குடும்பம்போல் தனது கணவன் குடும்பத்தையும் எண்ணினால் இது குறைய வாய்ப்பிருக்கிறது//

சகோதரரே! நீங்கள் விதிவிலக்குகளை விடையாக்குகிறீர். சுமார் 50 ஆயிரம் மக்கள் தொகைகொன்ட அதிரைப்பட்டினத்தில் உங்கள் ஆயுலில் ஒரு 100 விவாகரத்துகளைக் கண்டதுண்டா?//

விவகாரத்துகள் பெருக கூடாது தடுக்கப்பட வேண்டும் என்று சொல்ல வருகிறேன், தாங்கள் சொலறாமாதிரி பெண் தன் தாய்வீட்டில் இருந்தால் சந்தோஷமாக இருக்காங்கனு சொல்றீங்க அப்போ அங்கே விவாகரத்துகள் அடியோடு இல்லாமல் இருக்கவேண்டுமே அப்படி இருக்கிறதா? அப்போ அங்கேயும் ஏதோ பிரச்சினைகள் இருக்குதானே சகோதரரே என்பதுதான் என் கருத்து.

அப்துல்மாலிக் said...

//Abu Easa சொன்னது… மாமியார் வீட்டில் மருமகள் அதிகமாகவே வேலை செய்கிறார்கள். மருமகள் மாமியாரைத் தாயாக நினைக்கவில்லை என்பதைவிட மாமியார் மருமகளை மகளாக நினைப்பதில்லை என்பதே எதார்த்தம் (விதிவிலக்குகளை தவிர்த்து). //

உங்க கருத்தோடு ஒத்துப்போகிறேன், ஆனால் இதுக்கு மனைவி தன் தாய் வீட்டில் இருப்பதுதான் தவறு என்கிறேன், தன் மகளும் தன்னோடு இல்லாமல் மாமியார் வீட்டில் நல்லா வாழ்ந்தால் மாமியார்களும் தன் மருமகளை தன் மகள் போல் பாவிக்க வாய்ப்புண்டு, அதுக்குதான் நாம வழிவகை செய்யவில்லையே?????, அப்படியே தாங்கள் சொன்னதுபோல் தன் தாய்வீட்டில் இருந்தால் கணவனை மதிப்பது குறைவு, இதுக்கு பெண்ணுக்கு வீடும் கொடுத்ததும் ஒரு காரணம், தான் சொல்வது/செய்வதுதான் சரி என்ற கருத்து வரும், ஆகமொத்தம் கணவர் என்றுமே செல்லாக்காசுதான்...எப்பவும் மதுர ஆட்சிதான்....

அப்துல்மாலிக் said...

சகோரர் அபுஈஸா,
ஆகமொத்தம் பெரும்பாலான கருத்துப்படி பெண்ணிடம் வீடு கேட்டுவாங்குவது (இதனால் இன்று ஊரில் மனை சிட்டியைவிட அதிகம்), மனைவி வீட்டோடு மாப்பிள்ளையாக செல்வது, வரதட்சணை என்ற போர்வையில் பகல் கொள்ளையடிப்பது இப்படி நிறைய அநாகரிகச்செயல்கள் என்று முடிவு செய்தும், ஒரு சிலது சரியே என்று சொல்லுவதுபோல் உங்க பதிவு அமைந்திருக்கு......

அல்லாஹ் இனி வரும் சமுதாயத்தை தக்வா (தக்வா பள்ளியல்ல)பாதையில் வழிநடத்தி மறுமையில் உயர்ந்த அந்தஸ்தை கொடுப்பானாகவும், ஆமீன்

நட்புடன் ஜமால் said...

ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் நாம் பார்க்க வேண்டியது, இவ்விசயத்தில் இஸ்லாம் என்ன சொல்கிறது? அதன் நிலைபாடு என்ன? என்பதையே.]]

நமக்கு முன்மாதிரியான நபியவர்கள் திருமணத்திற்கு பின் எப்படி/எங்கே வாழ்ந்தார்கள் ?

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ...

Abu Easa said...

//அப்துல்மாலிக் சொன்னது… வீட்டிற்கு வரும் பெண்ணை தன் குடும்பத்தில் ஒருத்தியாக நினைத்தால் எந்த தவறான எண்ணமும் வர வாய்ப்பில்லைதானே//

சகோதரரே! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒன்றை சொன்ன பிறகு அதில் மாற்றுக் கருத்து கொள்ள எந்த முஃமினான ஆணுக்கும், பெண்ணுக்கும் அதிகார மில்லை. அது நாம் அல்லாஹ்வை விடவும் அவனுடைய தூதரை விடவும் அறிந்தவர்கள் என்ற பேராபத்தை ஏற்படுத்திவிடும்; அல்லாஹ் பாதுகாப்பானாக!

//தாங்கள் கூற்றுப்படி பார்த்தால் சும்மாவேனும் மாமியார் வீட்டுக்குப்போனாக்கூட ஹிஜாபோடுதான் இருக்கனுமா, அப்படி எத்தனை பேர் பேணுகிறார்கள்?//

ஆம், எங்கு சென்றாலும் அங்கே திருமனத்திற்கு ஆகுமாக்கப்பட்டவர்கள் இருந்தால் ஹிஜாபோடுதான் இருக்க வேண்டும். அதுவே இஸ்லாத்தின் வழிமுறை. தாங்கள் சொல்வது போல் மாமியார் வீட்டுக்குச் செல்லும் பெண்கள் அநேகரும் பேனுவதில்லை என்பது உண்மையே.

நட்புடன் ஜமால் said...

தவிர வேறு சாதகங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. (அப்படி இருந்தா நீங்க சொல்லுங்க)

தவிர வேறு பாதகங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. (அப்படி இருந்தா நீங்க சொல்லுங்க)

எவ்வளவு தெளிவா இருக்கீங்க நீங்க‌

நீங்க எடுத்து வைக்கும் வாதத்தில் ரொம்ப கான்ஃபிடன்ட்டா இருக்கீங்க‌

தங்கச்சி உடைய அண்ணன்கள் எல்லோரும் சம்பாதித்து ஒரு வீட்டையும் கட்டி கொடுத்துட்டு மெதுவா திருமணம் செஞ்சிகிடட்டும்

நட்புடன் ஜமால் said...

மாமியார் வீட்டுக்குச் செல்லும் பெண்கள் அநேகரும் பேனுவதில்லை என்பது உண்மையே. ]]

மாமியார் வீட்டுக்கு செல்லும் ஆண்களிடம் மனைவியின் சகோதரிகள் பேசுவதேயில்லையா, முன்னே வருவதே இல்லையா ( விதிவிலக்கு உண்டு என்று சப்பைகட்டு வேண்டாமே ). இஸ்லாம் சொன்னால் சொன்னது தான், கொஞ்சம் பேரு தப்பு செஞ்சா பரவாயில்லை, அநேகம் பேர் செஞ்சாதான் தப்புன்னு கிடையாது. ஒரே ஒரு உதாரணம் கிடைத்தாலும் அதும் தவறுதானே

Abu Easa said...

//நட்புடன் ஜமால் சொன்னது…
மாமியார் வீட்டுக்குச் செல்லும் பெண்கள் அநேகரும் பேனுவதில்லை என்பது உண்மையே. ]]

மாமியார் வீட்டுக்கு செல்லும் ஆண்களிடம் மனைவியின் சகோதரிகள் பேசுவதேயில்லையா, முன்னே வருவதே இல்லையா ( விதிவிலக்கு உண்டு என்று சப்பைகட்டு வேண்டாமே ). இஸ்லாம் சொன்னால் சொன்னது தான், கொஞ்சம் பேரு தப்பு செஞ்சா பரவாயில்லை, அநேகம் பேர் செஞ்சாதான் தப்புன்னு கிடையாது. ஒரே ஒரு உதாரணம் கிடைத்தாலும் அதும் தவறுதானே//

சகோதரரே! தன் சகோதரியின் கனவனோடு பெண்கள் பேசுவது ஹிஜாபை பாதிக்காது குலைந்து பேசாத வரை. மேலும், சகோதரியின் கனவன் முன் தோன்றினால் நிச்சயமாக அவர்கள் ஹிஜாபை பேன வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திலை.

மேலும், கொஞ்சம் பேரு தப்பு செஞ்சா பரவாயில்லை(?) என்ற கருத்து கட்டுரை நெடுகிலும் எங்கும் பதியப்படவில்லயே?

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

"ரியல் எஸ்டேட்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த தொடர் கட்டுரையின் முக்கிய நோக்கமே, ஊரில் இஸ்லாத்தில் இல்லாத "பெண்ணுக்கு வீடு" என்ற கட்டாய சம்பிரதாயம் ஒழிய வேண்டும் என்பதே. நல்ல ஆரோக்கியமான கருத்துக்கள் பரிமாறபட்டுள்ளது.

விவாதம் என்ற பெயரில் மேலும் கருத்துப்பரிமாற்றம் வளருமானால், இந்த கட்டுரையின் நோக்கம் பாதிக்கப்பட்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் மேலும் இந்த பதிவு தொடர்பாக விவாதிப்பதை நிறுத்திவிடலாமே. அன்பு நேசங்களே..

எல்லாவற்றையும் மிகைத்தவன் அல்லாஹ் ஒருவனே.

யா அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் உன் தூய மார்க்கத்தை நன்கு விளங்கி அதன்படி நாங்கள் இவ்வுலகில் வாழ்ந்து மரணிக்க செய்வாயாக.

தொடர்ந்து இணைந்திருங்கள்..

அப்துல்மாலிக் said...

//முக்கிய நோக்கமே, ஊரில் இஸ்லாத்தில் இல்லாத "பெண்ணுக்கு வீடு" என்ற கட்டாய சம்பிரதாயம் ஒழிய வேண்டும் என்பதே.//

சென்ற தொடர்3 ஐ நோட்டீஸாக வெளியிடவேண்டும் என்று கருத்து சொன்னவன், இது நிச்சயம் இஸ்லாத்துக்கு மாறானதே என்பதை இங்கு பதிகிறேன். நிச்சயம் இதை எந்த ஒரு பெற்றோரும் விரும்பவில்லை, இதன் பிறகாவது 2-5 பேராவது திருந்தினால் இந்த கட்டுரையின் நோக்கம் வெற்றியடைந்ததாகவே கருதப்படும்.

கருத்துப்பரிமாற்றங்கள் எவ்வளவு வேணும்னாலும் ஆரோக்கியமாக பண்ணலாம், தான் சொல்வதுதான் சரி என்று சப்பக்கட்டு கட்டாதவரை

அதிரை நிருபரின் வேண்டுகோளுக்கிணங்க இங்கே முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது, வேறு ஒரு களத்தில் சந்திப்போம் சகோதரரே, அல்லாஹ் நன்கறிந்தவன்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு