இப்போது எழுத்தியலை நாம் பயின்று கொண்டிருப்பதால்
எழுத்துப் போலிகளை அறிந்து கொள்வோம்.
ஒரு
சொல்லில் உள்ள ஓர் எழுத்தை மாற்றி எழுதினாலும் பொருள் வேறுபடாமல் அமைந்தால்
அவ்வெழுத்து, போலி எனப்படும். போல வருவது போலி என்றானது.
இயல்பான
சில எழுத்துகளுக்குப் பகரமாகப் போலி எழுத்துகள் இடம் பெறுவது வழக்கில் உள்ளது
என்பதையும் அவ்வாறு எழுதுதல் குற்றமில்லை என்பதையும் தெரிந்து கொள்வதற்குப்
போலிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
(1):11
எழுத்துப் போலிகள்
எழுத்துப்
போலிகள் மூவகைப் படும்.
(1):11:1
முதற்போலி
ஒரு
சொல்லின் இயல்பான முதலெழுத்துக்குப் பகரமாய், வேறு எழுத்துகள்
பயன்படுத்தப் பட்டிருந்தால் அது முதற்போலி எனப்படும்.
(1):11:1:1
'ஐ'காராத்துக்குப் பகரமாய், 'அய்' எனும் இரு எழுத்துகள் போலிகளாக எழுதப் படும். காட்டுகள் :ஐயா=அய்யா; ஐயன்மீர்=அய்யன்மீர்
(1):11:1:2
'ஔ'காரத்துக்குப் பகரமாய், 'அவ்' எனும் இரு எழுத்துகள் போலிகளாக எழுதப் படும். காட்டுகள் : ஔவையார் = அவ்வையார்; ஔடதம் = அவ்டதம்
(1):11:1:3
'ந'கரத்துக்கு 'ஞ'கரம் போலியாக எழுதப் படும்.காட்டுகள் : நயம்பட = ஞயம்பட; நாயிறு=ஞாயிறு
(1):11:2
இடைப்போலி
ஒரு
சொல்லுக்கு இடையில் இயல்பான எழுத்தை விடுத்து வேறு எழுத்தைப் போட்டு எழுதுவது
இடைப்போலி எனப்படும்.
'அ'கரத்துக்கு 'ஐ'காரம் போலியாக எழுதப் படும்.
காட்டுகள்
: அரயன் = அரையன்; பழமை = பழைமை; இளமை = இளைமை
(1):11:3
கடைப்போலி
ஒரு
சொல்லின் கடைசியில் உள்ள இயல்பான எழுத்துக்குப் பகரமாய் வேறோர் எழுத்து இடம்
பெறுவது கடைப்போலி எனப்படும்.
(1):11:3:1
மகர ஒற்றுக்கு னகர ஒற்று, போலியாக வரும்.
காட்டுகள்
: அறம்=அறன்; திறம்=திறன் (அறன் அறிந்து வெஃகா அறிவுடையோர்ச் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு - குறள்) நயம்=நயன் (நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன் இல
சொல்லாமை நன்று - குறள்)
குலம்=குலன் (இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன் உடையான் கண்ணே உள - குறள்) நலம் = நலன்; கலம்=கலன்; நிலம்=நிலன்
(1):11:3:2
லகர ஒற்றுக்கு ரகர ஒற்று, போலியாக வரும்.
காட்டுகள்
: குடல்=குடர்; சுவல்=சுவர்; பந்தல்=பந்தர்; சாம்பல்=சாம்பர்
(1):11:3:3
லகர ஒற்றுக்கு ளகர ஒற்றும் போலியாக வரும்.
காட்டுகள்
: மதில்=மதிள்; செதில்=செதிள்.
எழுத்தியல்
இத்துடன் நிறைவடைகிறது.






 

 
 
 

 

 
 
 
 

2 Responses So Far:
எங்கள் பிரியத்துக்குறிய ஜமீல் நானா அவர்களை நேரில் சந்த்திக்கும் வாய்ப்பு அதிரையில் கிடைத்தது. இத்தனை விசயங்க்களை அழகாக எடுத்துச்சொல்லும் ஜமீல் நானா அவர்கள் தனது சொந்த முயற்சியில் எழுதியது இது. இதில் ஆச்சர்யம் ஜமீல் நானா அவர்கள் தமிழை டிகிரியில் போய்படிக்கவில்லை. ஆர்வத்தில் மட்டும் படித்தவர்கள்.
தந்தூரி அடுப்பிலிருந்து ஜாகீர்ஹுசேன்.
[ அதிராம்பட்டினம் வெயில் இப்படியெல்லாம் எழுதச்சொல்கிறது, ]
நரகத்துக்கு 'சாம்பிள்" பார்க்க விரும்புபவர்கள் அதிராம்பட்டினத்துக்கு வரவேற்கப்படுகிறார்கள்.
இனிமேல் அதிராம்பட்டினம் உங்களை வரவேற்கிறது எனும் போர்டில் யாராவது சானி அடித்திருந்தால்...விட்ருங்க...பாதிக்கப்பட்டிருப்பாப்லெ.
//நரகத்துக்கு 'சாம்பிள்" பார்க்க விரும்புபவர்கள் அதிராம்பட்டினத்துக்கு வரவேற்கப்படுகிறார்கள்./// அப்படியே துபாய்யும் கண்டுகளிக்குமாறு வேண்டப்படுகிறார்கள்
Post a Comment