Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 18 134

அதிரைநிருபர் பதிப்பகம் | May 15, 2012 | , ,

‘இனம் இனத்தைச் சேரும்’ என்பார்கள். இதை, ‘இனம் இனத்தை உவக்கும்’ என்றும் கூறலாம். இது போன்று, கவிஞர் இனம் அவ்வினத்தை நன்மைக்காக உவப்பதில் வியப்பில்லை அல்லவா?

شاعر النبي (நபியின் கவிஞர்) என்ற பெயர் பெற்ற நபித்தோழர் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) அவர்களுக்கு ஒரு கவலை;  ஏக்கம்.  தம்மைப் போன்ற கவிஞர்களுள் இன்னும் சிலர் இஸ்லாத்தில் இணையவில்லையே என்பதுவே அவரது கவலையும் ஏக்கமும்.  மதீனாவிலிருந்து மிகத் தொலைவிலுள்ள ‘நஜ்ரான்’ எனும் ஊரில் வசித்த தம் தோழர் இப்னு ஜபஅரீ என்பவருக்கு ஈரடிக் கவிதை ஒன்றை இவ்வாறு எழுதினார்:

لا تعد من رجلا أحلك بغضه،
نجران في عيش أحذ لشيم

                                      அங்கே நஜ்ரான் வாசிகளை
                                                அன்புள் ளோராய்க் கருதாதீர்!
                                      இங்கே வாரீர் விரைவாக
                                                இறையின் தூதர் உவந்திடவே.

அகமுவந்த இந்த அழைப்பை ஏற்றார் இப்னு ஜபஅரீ.  பாலை வெளிகளையும் பாறைத் தடைகளையும் கடந்து, மதீனப் பதியை வந்தடைந்து, நபியவர்களின் கைபற்றி, நல்லறத் தோழர்களுள் ஒருவரானார்.  இதனை அடுத்து, அவர் வாய்மொழியாகக் கீழ்க்காணும் கவிதையடிகள் வெளிவந்தன:

يا رسول المليك إن لساني ، راتق ما فتقت إذ أنا بور
إذ أباري الشيطان في سنن الغي ، ومن مال ميله مشبور
أمن أللحم والعظام لربي ، ثم قلبي الشهيد أنت النذير
إنني عنك زاجر ثم حيا ، من لؤي وكلهم مغرور  

இதன் தமிழ்க் கவியாக்கம்:

                                      அரசர்க் கரசன் அல்லாஹ்வின்
                                                அருமைத் தூதாய் வந்தவரே!
                                      உரசிப் பேசும் என்நாவோ
                                                ஓட்டுப் போட்ட தாயிற்றே!
                                      தரிசுத் தரையாய் வரண்டேபோய்
                                                தண்ணீ ரின்றி வாடியதே!
                                      விரசக் கவிகள் பாடியநான்
                                                வீணில் வாழ்வைப் போக்கினனே!

                                      செந்தீ ஆறாய் ஓடிவர
                                                ‘செய்த்தான்’ நரகப் படுகுழியில்
                                      முந்தி வீழச் செய்தனனே!
                                                முயன்று பாதை மாற்றிடவே
                                      எந்த வழியும் தெரியாமல்
                                                இருந்த என்னைக் கைதூக்க
                                      வந்த கவிதை அழைப்பொன்றை
                                                வரைந்த ளித்தார் ஹஸ்ஸானே.

                                      இப்போ தென்றன் தசைநாரும்
                                                எலும்பு மெல்லாம் இரட்சகனை
                                      எப்போ தெப்போ தென்றேத்தி
                                                இதய வேட்கை கொண்டுளவே!
                                      தப்பாய்ப் பாவப் படுகுழியில்
                                                தடுக்கி வீழ்தல் சிறுமையெனச்
                                      செப்பும் உங்கள் போதனையால்
                                                செம்மை யுற்றேன் நானின்றே!

                                      நும்மைத் திட்டி வசைபாடி
                                                நுழைந்தி ருந்தேன் பாவத்தில்
                                      செம்மைப் பாதை இதுவென்ற
                                                செய்தி என்னை எட்டியதும்
                                      இம்மை வாழ்வைச் சிறிதாக்கி
                                                என்றும் நிலைத்த மறுமைக்கே
                                      எம்மைப் பெரிதாய் உரித்தாக்கி
                                                ஏற்றம் பெற்றேன் நாயகமே!
(சான்று: சீரத்துன் நபி – இப்னு ஹிஷாம்)

‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ எனும் உயர் நோக்கில், சிறிய ஓர் அழைப்புப் பணியைத்தான் செய்தார் கவிஞர் ஹஸ்ஸான்.  இவ்வழைப்புப் பணியின் பின்னணியில்,

لأن يهدي الله بك رجلا خير لك من حمر النعم

“உம்மைக் கொண்டு அல்லாஹ் ஒருவருக்கு நேர்வழியைக் கொடுப்பதானது, உமக்குச் சிவப்பு ஒட்டகம் கிடைப்பதைவிட மேலானது” என்றும்,

لا يومن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه

“தான் உவக்கும் ஒன்றைத் தன் சகோதரனுக்கும் இருக்கவேண்டும் என்று விரும்பாதவரை, உங்களுள் எவரும் உண்மையான இறை நம்பிக்கையாளனாக ஆக முடியாது” (சான்றுகள்: ஸஹீஹுல் புகாரீ / ஸஹீஹ் முஸ்லிம்) என்றும் அறிவுரைகள் கூறி அருள்நெறி பரப்பிய அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழமைதான் ‘நபியின் கவிஞர்’ ஹஸ்ஸான் (ரலி) அவர்களை இவ்வழைப்புப் பணியில் இயக்கிற்று என்பது மிகைக் கூற்றன்று.


(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com

134 Responses So Far:

அன்புடன் புகாரி said...

கருத்து விதைகளே கவிதைகள்! அது துளிர்ப்பதும் வளர்வதும் பெரு விருட்சம் ஆவதும் வாசிப்பவர்களின் உள்ளத்தில். அப்படியான கவிதைகளை மறுக்கும் எவரும் மனிதரில்லை, எதுவும் மதமுமில்லை.

இதை ஆமென்று உரக்கக் கூறும் சான்றுகளோடு எண்ணற்ற நபி நாள் இஸ்லாமியக் கவிதைகளைக் கொண்டுவந்து தமிழாக்கிப் பொழியும் ஆசிரியர் சகோ அதிரை அகமது அவர்களின் திறமை மிகிந்த பாராட்டுக்குரியது.

அன்புடன் புகாரி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//“தான் உவக்கும் ஒன்றைத் தன் சகோதரனுக்கும் இருக்கவேண்டும் என்று விரும்பாதவரை, உங்களுள் எவரும் உண்மையான இறை நம்பிக்கையாளனாக ஆக முடியாது” (சான்றுகள்: ஸஹீஹுல் புகாரீ / ஸஹீஹ் முஸ்லிம்)//

// இங்கே வாரீர் விரைவாக
இறையின் தூதர் உவந்திடவே.//

நாம் யாருக்கு (இறைமறுப்பு என்பதைவிட, இறைவழிபாட்டில் குழப்பத்திலும் இணைவைப்பிலும் இருக்கும் மாற்று சமய சகோதர சகோதரிகளுக்கு) ஒவ்வொரு சந்தர்பத்திலும் எங்களின் எண்ணங்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோமோ அவர்களும் விரைவில் புரிந்து கொள்ளவார்கள் இன்ஷா அல்லாஹ்....

இப்னு அப்துல் ரஜாக் said...

//“தான் உவக்கும் ஒன்றைத் தன் சகோதரனுக்கும் இருக்கவேண்டும் என்று விரும்பாதவரை, உங்களுள் எவரும் உண்மையான இறை நம்பிக்கையாளனாக ஆக முடியாது” (சான்றுகள்: ஸஹீஹுல் புகாரீ / ஸஹீஹ் முஸ்லிம்)//

அல்லாஹ்வின் தூதரின் வாக்கு எவ்வளவு வலிமையானது,சுபானல்லாஹ்.

அதிரை சித்திக் said...

விரச கவிகள் பாடி நான் ....>>>>

வீணாய் வாழ்வை போக்கினேனே>>>>>...,

இந்த வரிகளை தான் நம் கவிஞர்கள்

கவனிக்க வேண்டும் நேர விரயம்

சொல்லும் கவிதையால் மார்க்க பலனோ

சமூக தாக்கமோ இல்லாமல் இருக்கும் பட்சத்தில்

வீணாய் வாழ்வை போகினேனே ..என்று கவிகள்

மறுமையில் புலம்ப நேரிடும்..

ZAKIR HUSSAIN said...

விரச கவிகள் பாடி நான் ....>>>> வீணாய் வாழ்வை போக்கினேனே>>>>>...,
இந்த வரிகளை தான் நம் கவிஞர்கள்
கவனிக்க வேண்டும் நேர விரயம்
சொல்லும் கவிதையால் மார்க்க பலனோ
சமூக தாக்கமோ இல்லாமல் இருக்கும் பட்சத்தில்
வீணாய் வாழ்வை போகினேனே ..என்று கவிகள்
மறுமையில் புலம்ப நேரிடும்..


இந்த புலம்பல் கவிஞர்கள் மட்டுமல்ல....மார்க்க விசயங்களை பேணாத எல்லாருக்கும் பொருந்தும்.

KALAM SHAICK ABDUL KADER said...

விரச கவிகள் பாடுவதால்
***வீணாய்ப் போகும் காலமெலாம்
முரசாய் ஒலிக்கும் நன்னெறிகள்
***முஹம்மத்(ஸல்) அழைக்கும் மார்க்கமதில்
உரசும் உண்மை போதனைகள்
***உணர்ந்து கவியில் பாடிடலாம்
வரிசை யாகக் கோர்த்திடுவோம்
****வார்த்தை எழிலாம் யாப்பதுவே!

KALAM SHAICK ABDUL KADER said...

மா+மா+காய் எனும் வாய்பாட்டின் அமைப்பில் மாண்புடன் காய் நகர்த்தி “வெற்றி” நோக்கி விரைகின்ற ஆசிரியர் அவர்கட்கு மாணவனின் வாழ்த்துகள்.

அன்புடன் புகாரி said...

>>>>>>>>இந்த புலம்பல் கவிஞர்கள் மட்டுமல்ல....மார்க்க விசயங்களை பேணாத எல்லாருக்கும் பொருந்தும்.<<<<<<<

மார்க்க விசயங்களை வெறுமனே பேணாத அல்ல, அலசி ஆய்ந்து சரி என்பதைச் சரியாக உணர்ந்து பேணாத என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

பலரும் எதையோ எங்கோ கேட்டுவிட்டும் அரைகுறையாய் வாசித்துவிட்டும் வம்படிப்பார்கள். அது மார்க்கம் பின்பற்றுவோருக்கு அழகல்ல, அவலம், கேவலம்.

மார்க்கத்தைப் பலரும் தடுப்புச் சுவராகவே நினைக்கிறார்கள். மார்க்கம் என்பது திறந்த பெரும் பாதை என்பதை உணர்வதற்கு அவர்களுக்கு அனுபவமும் போதுமானதாய் இருப்பதில்லை அறிதலும் போதுமானதாய் இருப்பதில்லை.

இந்தத் தொடரையே எத்தனைபேர் எப்படி எப்படியெல்லாம் புரிந்துகொண்டார்கள் என்பது இதற்கான யதார்தமான விளக்கம்.

மதமும் நம்பிக்கையும் எனக்கும் இறைவனுக்குமான நேரடித் தொடர்பு. அதன் இடையே குறுக்கிட எவருக்கும் ஞானமில்லை என்று நினைப்பதே கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியானதாக ஆகும்.

சொல்வதெல்லாம் எவருக்கும் செவி சேரலாம் ஆனல் இதயம் சேருமா? அது இறைவன் போதிய ஞானத்தைத் தந்து முயன்றாலே ஆகும்.

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

//இந்தத் தொடரையே எத்தனைபேர் எப்படி எப்படியெல்லாம் புரிந்துகொண்டார்கள் என்பது இதற்கான யதார்தமான விளக்கம்.

மதமும் நம்பிக்கையும் எனக்கும் இறைவனுக்குமான நேரடித் தொடர்பு. அதன் இடையே குறுக்கிட எவருக்கும் ஞானமில்லை என்று நினைப்பதே கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியானதாக ஆகும்.//

குழப்பிக் கொண்டிருக்கும் ஓர் இயக்கவாதியின் அரைகுறை விளக்கதை அடிப்படையாக வைத்துதான் “கவிதை கூடாது” என்று ஒரு சிலர் புலம்பத் துவங்கியிருக்கலாம் என்று இத்தொடரின் துவக்கத்தில் ஆசிரியர் அவர்கள் கேட்ட வினாவுக்கு, “எந்த இயக்கத்தையும் சார்ந்தவனல்லன்” என்று அறுதியிட்டு உறுதியளித்தவர் என் மின்னஞ்சலுக்கு அந்த இயக்கவாதியை ஆதரித்து மடலிடுவதேன்? எனவே, நீங்கள் மேற்சொன்ன அருமையான விளக்கம் போதும் என்று நம்புவோம்!

அதிரை சித்திக் said...

கவிதை ..மொழியின் அழகு ..

கவிஞர்கள் ..மென்மையானவர்கள் .

ஒவ்வொரு விசயத்தையும் கருணை அன்பு

கூர்ந்து பார்ப்பார்கள் மரியாதை கொடுப்பார்கள்

மரியாதை எதிர்பார்பார்கள் ..மொழி மீது பற்று

அதிகம் உள்ளவர்கள் ,,நம் மார்க்கத்தில் பற்றுக்கு

அளவு உண்டு உதாரணமாக தமிழ் விழாக்களில்

தமிழ் தாய் வாழ்த்து என ஒரு பாடிசைப்பார்கள்

அதற்க்கு விழாவினர் எழுந்து நின்று கண்மூடி

ஆழ்ந்த மரியாதை தருவார்கள் அது நம் மார்கத்திற்கு

உகந்ததா ...? அளவுகோல் தேவை

கவி பணம் தேடாது புகழ் தேடும் நல மனம் தேடும் ...

அதனால் தான் சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்

என்பார்கள் ..,

இப்னு அப்துல் ரஜாக் said...

//சொல்வதெல்லாம் எவருக்கும் செவி சேரலாம் ஆனல் இதயம் சேருமா? அது இறைவன் போதிய ஞானத்தைத் தந்து முயன்றாலே ஆகும்.//

நூத்துல ஒன்னு ஹசன் புஹாரி காக்கா

இப்னு அப்துல் ரஜாக் said...

//குழப்பிக் கொண்டிருக்கும் ஓர் இயக்கவாதியின் அரைகுறை விளக்கதை அடிப்படையாக வைத்துதான் “கவிதை கூடாது” என்று ஒரு சிலர் புலம்பத் துவங்கியிருக்கலாம் என்று இத்தொடரின் துவக்கத்தில் ஆசிரியர் அவர்கள் கேட்ட வினாவுக்கு, “எந்த இயக்கத்தையும் சார்ந்தவனல்லன்” என்று அறுதியிட்டு உறுதியளித்தவர் என் மின்னஞ்சலுக்கு அந்த இயக்கவாதியை ஆதரித்து மடலிடுவதேன்? எனவே, நீங்கள் மேற்சொன்ன அருமையான விளக்கம் போதும் என்று நம்புவோம்!//

அவர் என் இனிய ஆசிரியர் காக்கா.போதுமா? வேறென்ன வேணும்?

உங்களின் மற்ற வினாக்களை நாகரிகம் கருதி,அல்லாஹ்வுக்காக உதாசீனப்படுத்துகிறேன்.

thanks for your research on me.

http://peacetrain1.blogspot.com/2012/05/blog-post_08.html

இப்னு அப்துல் ரஜாக் said...

//,நம் மார்க்கத்தில் பற்றுக்கு

அளவு உண்டு உதாரணமாக தமிழ் விழாக்களில்

தமிழ் தாய் வாழ்த்து என ஒரு பாடிசைப்பார்கள்

அதற்க்கு விழாவினர் எழுந்து நின்று கண்மூடி

ஆழ்ந்த மரியாதை தருவார்கள் அது நம் மார்கத்திற்கு

உகந்ததா ...? அளவுகோல் தேவை //

நல்ல சிந்தனை சித்தீக் காக்கா

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

உசுரா இருக்குற உம்மாவை கடைசி காலத்தில் அவர்கள் கண்கலங்காமல் இருந்து கவனிக்க அலட்சியப்படுத்தி விட்டு ஒரு மொழியை தாய் ஸ்தானத்திற்கு ஆக்கி அவளுக்கு ஒரு பாட்டெழுதி அதை விழாவில் மரியாதையுடன் எல்லோரும் எழுந்து நின்று கண் மூடி பாடுவதால் யாருக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது? என்பது ஒன்றும் புலப்படவில்லை.

நேர‌டியாக‌வே விச‌ய‌த்திற்கு வ‌ருகிறேன். உம்மாவை போடி ஙொப்பான‌.....ழி என்று திட்டி விட்டு எங்கோ ந‌ட‌க்கும் விழாவில் "தாயின் ம‌ணிக்கொடி பாரீர்...அதை தாழ்ந்து ப‌ணிந்து புகழ்ந்திட‌ வாரீர்" என‌ பாடுவ‌தில் ஏதெனும் கான்ச‌ப்ட் இருக்கிற‌தா???

செத்துப்போன‌வ‌ங்க‌ளை ந‌ட்ட‌மாக்கி புக‌ழ்வ‌தை விட‌ உசுரா இருக்குற மிச்ச சொந்தப‌ந்த‌ங்க‌ளுக்கு வேண்டிய‌ உத‌வி, ஒத்தாசைக‌ளை செய்வோம். இறைவ‌னின் பொருத்த‌த்தைப்பெறுவோம்....இன்ஷா அல்லாஹ்....

அதிரை சித்திக் said...

நான் தமிழூற்று பத்திரிகையை அதிரை அன்வர் அவர்களிடம்

காண்பித்து கருத்து கேட்டேன்..தம்பி நாம கடை பிடிக்கும் மார்கத்திற்கு

மொழி ஒரு அடையாளமல்ல என்றார்கள் ..மிக சரி என்பதை போக போக தான்

புரிய முடித்து தமிழ் வாசக அன்பர் களின் அன்பு வெளிப்பாடு சிர்க் என அழைக்கப்படும்

இணை வைத்தலுக்கு சமமாக அழைத்து சென்றதை அறிந்தேன் ,,ஈடுபாடு பற்று

இவைகளுக்கு அளவு கோல் வேண்டும் என்பதில் தான் எனது நிலை பாடு என்றும் இருக்கும்

அகமது காக்கா சுட்டிகாட்டிய கவிதையில் சில வரிகள்

இம்மை வாழ்வை சிறிதாகி ..

என்றும் நிலைத்த மறுமைகே..

எம்மை என்றும் பெரிதாய் உரித்தாக்குவோம்

அன்புடன் புகாரி said...

//தமிழ் தாய் வாழ்த்து என ஒரு பாடிசைப்பார்கள்
அதற்க்கு விழாவினர் எழுந்து நின்று கண்மூடி
ஆழ்ந்த மரியாதை தருவார்கள் அது நம் மார்கத்திற்கு
உகந்ததா ...? //

இதை ஏன் இறைவனுக்கு இணைவைப்பதாக நினைக்கிறார்கள் சிலர்?

தாய் சிறந்தவள், தாய்மொழி மகிழ்வானது, தாய்நாடு நேசம் மிகுந்தது என்று எத்தனையோ விசயங்கள் மனிதனோடு இரண்டறக் கலந்து கிடப்பவைதானே. இதனால் இறைவனை எங்கே வைத்திருக்கிறானோ அதிலிருந்து இறக்கியா விட்டுவிட்டான்?

நெகிழ்வதும், மகிழ்வதும், புகழ்வதும், வாழ்த்துவதும், பாராட்டுவதும், அன்பு செய்வதும், கருணை கொள்வதும், கூடாது என்றால் மனித வாழ்க்கையே கூடாது என்று பொருளாகாதா?

மனித வாழ்க்கையை அனுபவிக்காவிட்டால் பிறகு மனிதன்தான் எதற்கு?

அன்புடன் புகாரி

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். தமிழ் தாய் வாழ்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தலாமா? வேண்டாமா? என போகும் முன் (அதற்கு அஹமது சாட்சா,ஜமில் காக்கா போன்றவர்கள் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்)இதில் உள்ள அர்த்தபடி திலகம் எல்லாம் சரியா அதை விளக்கமாக சகோதரர் கவிஞர் புகாரி அவர்கள் விளக்கினால் என்னை போன்ற சாமானியர்களுக்கும் புரியும் தானே?
---------------------------------------------------------
நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில் தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும் பொருத்தமான. பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற?) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!

இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

அதிரை சித்திக் said...

தமிழ் வாழ்த்துப்பாவின் முடிவில் ..

சிரம் பணிந்து செயல் மறந்து வாழ்த்துதுமே ..

ஏற்புடையதா ..?

crown said...

அதிரை சித்திக் சொன்னது…

தமிழ் வாழ்த்துப்பாவின் முடிவில் ..

சிரம் பணிந்து செயல் மறந்து வாழ்த்துதுமே ..

ஏற்புடையதா ..?
---------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அதானே? பெரிய சிர்க் ஆச்சே! இந்தவரி. பாத்தியலா? இத கேட்க மறந்துட்டேன் இந்த மரமண்டை! சகோ. சீத்தீக் கேட்கும் கேள்விகளுக்கும் சகோ.கவி புகாரி அவர்கள் பதில் சொன்னால் புரிந்து கொள்ள தோதுவாகும். காரணம் சிர்க் என தெரிந்த பின்னும் அதை மதித்து வணங்குவதும், மரியாதை செலுத்துவதும் தவறென என்னை போன்ற அறிவில் சிறியவர்களும் . என்னைவிட அறிவில் பெரிய சகோ.சித்தீக் போன்றவர்களுக்கும் எழும் வினா. இதற்கு விடை சொல்ல வேண்டிய விலையில் சகோ.கவி புகாரி உள்ளார்கள்.

crown said...

சிரம் பணிந்து /
செயல் மறந்து????? வாழ்த்துதுமே ..
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். தன்னிலை மறந்து (வேட்டி அவிழ்தது கூட தெரியாத நிலையோ?)பைத்தியமாகவா? சுயனிலை மறந்தா? கவிஞரே இதற்கும் உங்கள் மதி நுட்பத்தின் திறமையால் பதில் சொல்லுங்கள். நாங்களும் புரிந்து கொள்கிறோம்.( எல்லாம் இந்த பாழாய் போன மொழியின் இலக்கணம் புரியாத கோலத்தால் இப்படியெல்லாம் சந்தேகம் வருகிறது)

அதிரை சித்திக் said...

வாழ்க்கையில் பலவற்றில் சமரசம் செய்து கொள்ளலாம்,ஆனால் அல்லாஹ்,ரசூல் ஸல் அவர்கள்,குரான்-ஹதீஸ்,(இஸ்லாம்)விஷயத்தில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது.உதாரணமாக,நமக்குத் தெரிந்தவர்,வேண்டப்பட்டவர் ஒருவர் ஒரு விஷயத்தை எழுகிறார் அல்லது சொல்கிறார் என வைத்துக் கொள்வோம்.அப்படி சொல்லப்படும்,எழுதப்படும் செய்தியை படிப்பவர்கள் முதலில் அதனை குரான்-ஹதீஸ் கண் கொண்டு நோக்கி,மார்க்க முரண் இல்லாத கருத்தாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்.(அல்லாஹ்,குரானில் கூறப்படும் விஷயங்களாக இருந்தாலும் சிந்தியுங்கள் எனக் கூறுகிறான்).அது சரியான கருத்தாக இருப்பின்,அதை ஊக்கப்படுத்தலாம்,மற்றவர்களிடம் கொண்டு போகலாம்.
ஒரு சமயம்,அது மார்க்கத்திற்கு முரணாக,குரான்,ஹதீஸ் கருத்துக்கு மாற்றாக இருந்தால்,அந்தக் கருத்தை எத்தனை பேர் ஆதரித்தாலும்,நாம் எதிர்த்து வாதிடவேண்டும்,நம்மை திட்டினாலும்,எள்ளி நகையாடினாலும் அல்லாஹ்வுக்காக நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.எழுதினவர் நம்ம சாச்சா,பெரியப்பாதானே,நமக்கு தெரிந்தவர்தானே என்று கொண்டு ,மார்க்க விஷயத்தில் சமரசம் பண்ணிக் கொண்டால் ,அந்த மூடக் கருத்துக்கள் நம் மக்களிடையே பரவி,இதுவும் இஸ்லாத்தில் உள்ளதுதானோ எனும் நிலைக்கு வரும்.அல்லாஹ் பாதுகாப்பானாக.

அதிரை சித்திக் said...

இந்த கருத்து பேனா முனை தளத்திலிருந்து

ஜாஹில்லிய காலத்து எழுத்தும் பேச்சும்..என்ற கட்டுரையிலிருந்து ''

எடுத்து காப்பி பேஸ்ட் செய்துள்ளேன் இது இந்த விவாதத்திற்கு

பொருத்தம் என்பதால் ,,நன்றி ,,அர.அல..,

இப்னு அப்துல் ரஜாக் said...

36:69. (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.THE QURAN

26:224. இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.THE QURAN

சகோ ஹசன் புஹாரி அவர்களே,மார்க்கத்தைவிட - மொழி முக்கியமாகப் போகிவிட்டதா?
கவிதை, ஷிர்க்கையும் தன்னுள்ளே மறைத்துக் கொண்டு,வெளியே தெரியாமல் ஆக்கும் தன்மை கொண்ட விஷம்.

அதிரை சித்திக் said...

முகம்மது நபி (ஸல்)அவர்கள் காலத்தில்

கவிஞர்கள் அங்கீகரிக்கப்பட்டும் ..,சபிக்கப்பட்டும்

இருக்கிறார்கள் ..தற்போதையா காலத்தில் உலவி வரும்

கவிதையின் சாராம்சம் எதை சார்ந்துள்ளது ..எதை அங்கீகரிக்க

வேண்டும் என்பதை வரும் தொடரில் கட்டுரையின் ஆசிரியர்

விளக்கினால் இந்த கருத்து பேதத்திற்கு முடிவு கிடைக்கும்

ஏன் என்றால் கவிதையில் விஷத்தை அமுதென்று வர்ணிக்க முடியும்

வெளியேறுவதை நுழைவதாக கூற முடியும் இறப்பை ..,பிறப்பாக

கூற இயலும் ஏன் என்றால் கவிதைக்கு பொய் அழகு ..

எனவே கவிதை தற்காலத்திற்கு இஸ்லாத்தில் உகந்தது ..

நீங்கள் கூறும் சகாபாக்கள் முதல் நமதூரின் தற்போதைய கவிஞர் தாஹா

அவர்கள் வரை ..அது அல்லாமல் தமிழ் புலமைமிக்க நம் இஸ்லாமிய

கவிஞர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் இலக்கிய வட்டத்தில் உலாவரும்

அவர்களுக்கு கூறும் அறிவுரை என்ன.. அளவுகோல் என்ன என்பதை

வரும் நாட்களில் கட்டுரை ஆசிரியர் விளக்கமளித்தால் பயனுள்ளதாக

அமையும் என நம்புகிறேன் ..ஆசிரியரின் பதிலை அன்புடன் எதிர் பார்கிறேன்

குறிப்பு ..சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களில் உவைஸ் நெய்னா பிள்ளை

என்றொரு கவிஞர் நமதூரில் இருந்தார் அவர் பாடிய கவிதைகளை பெரியோர்

சொல்ல கேட்டிருக்கிறேன் இறைவனை கெஞ்சி பிழை தேடும் பாக்கள்

அதில் சில வரிகள் என் பிழை பொறு (கபூர் ) ஆனே ..

ஏழைக்கு இறங்குவாய் (ரஹ்மானே )

முன்னிலும் முன்னாள் முன்னோனே

கற்பதில் என்னை கிடபாதி...

கருணையுடன் எனக்கு உணவூட்டி ..என நீளும்

பாக்கள் .முன்னோர்கள் வாயிலாக கேட்டிருக்கிறேன்

.அதே போன்று மூதாட்டிகள் அந்த கால

சண்டை கூட கவி யாய் கொட்டுமாம் ..

யாரோ பெண் பிள்ளை பிறந்ததற்கு வசவு கூற

அதற்கு பதிலாக எதிர் வசவு ;;..பெண்ணை பெற்ற வாசலிலே

பொண்ணு வரும் போல வரும் ..வண்ண குதிர வரும்

மாப்பிள்ளையும் தான வரும் ..ஆனா பெத்த வாசலிலே

அடிதடி சண்ட வரும் ..அவுசாரி .பேச்சும் வரும் ,,நீண்ட

வசவு மொழிகள் ..கவி தன்மை இயற்கையாக இறைவன்

கொடுத்த திறமை அதனை எந்த அளவிற்கு பயன் படுத்த

வேண்டும் .அதன் அளவுகோல் மார்க்கத்தின் அடிப்படையில்

விளக்கிட வேண்டுகிறேன்..,

KALAM SHAICK ABDUL KADER said...

"நகர தந்தை” என்றால் நகரத்தைப் பெற்றவர் என்று பொருள் கொள்வோமா?
“தேச தந்தை ” என்றால் தேசத்தைப் பெற்றவர் என்று பொருள் கொள்வோமா?
“பேச்சின் தந்தை” (அபுல்கலாம்) என்றால் பேச்சைப் பெற்றெடுத்தவர் என்று பொருள் கொள்வோமா?

வார்த்தைகளின் நேரடி மொழிபெயர்ப்பு மட்டும் விளக்கம் என்று கொண்டால் விபரீதமும் விவாதமும் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டு கொண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டே போகும் ஒரு விநோதமான ஒருபொருள் போல் ஆகும். இதனைத் தவிர்க்க:

1) சொல்லுபவர்- எழுதுபவர் என்ன உளத்தூய்மையுடன் எண்ணி எழுதினார், பேசினார் என்று அல்லாஹ்வுக்குத் தெரியும் என்று நம்புவோம்.

2) யாரையும் வழிகெடுக்கும் “கெட்ட எண்ணம்” இருக்கும் என்று நாமகவே கற்பனை செய்து கொண்டால் கெட்ட எண்ணம் யாருடையது என்று “தீர்ப்பு நாளின் அதிபதி”க்கே விட்டு விடுவோம்.

3)சொன்ன கருத்தையே மீண்டும் மீண்டும் பிடித்துக் கொண்டு (அதற்கு இவ்வளவு நீண்ட தொடரில் ஆதாரங்களுடன் விளக்கம் ஆய்வளரால் கொடுக்கப்பட்டும்)மீண்டும் மீண்டும் புதிதாக அவ்வசனங்கட்கு விளக்கம் வேண்டி நிற்பது புரியாத புதிரா? இல்லை அது மட்டும் தான் மார்க்க விளக்கமா? என்றெல்லாம் கேட்காமல் இத்துடன் விவாதங்கள் நிற்கட்டும்

KALAM SHAICK ABDUL KADER said...

கவிதை ஒட்டகங்களுடன் நகர்ந்து செல்கின்றது – அரபு இலக்கியங்கள் ஓர் அறிமுகம்

- வெப்பத்தை தணிக்க மறுக்கிற சூரியனின் ஒளிக்கீற்றை முன்னோக்கி நகர்த்திக் கொண்டு ஒட்டகங்கள் அதன் போக்கில் செல்கின்றன. திடீரென சூழ்ந்து கொள்ளும் புகை மாதிரி மணல் துகள்கள் ஒட்டகங்களை சூழ்ந்து கொள்கின்றன. அவை கடந்த தூரம் ஆரவாரமற்ற தெருக்களின் கூட்டுத்தொகையாக இருந்தது. அதன் ஒவ்வொரு அடியும் கவிதைக்கான வார்த்தையை வரைந்து விட்டுச் சென்றது. ஒட்டகம் கோதி விட்ட ஒவ்வொரு மணல் கூட்டமும் கடல் அலையை மறு உருவாக்கம் செய்தது




அரபு இலக்கியம் சுமார் நான்காம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை ஹாசிதா என்ற செய்யுள் முறையாக அறியப்படுகிறது.அம்ருல் கைஸ், அன்தாரா, மற்றும் சுகைர் ஆகியோர் இந்த வகைப்பாட்டிற்குள் வரக்கூடியவர்கள். இவர்களின் படைப்புகள் அக்காலகட்டத்து பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையிலோடு இயைந்திருந்தது.ஒரு சூழலில் இவர்கள் அக்காலத்து வரலாற்றாசிரியர்களாக, தொன்மங்களின் சார்பியலாளர்களாக, மொழியில் புதிய சொற்களை உருவாக்கும் வல்லுநர்களாக இருந்தனர். அதன் பிறகு அரபுச்சூழலில் இஸ்லாம் வந்து விடுகிறது. அது குர் ஆன் வழியாக தூய இலக்கிய இலக்கணத்தரமான மொழி வடிவத்திற்கு வழி திறந்தது.ஏழாம் நூற்றாண்டு குர் ஆனின் வருகையானது அரபு மொழிக்குள் புதிய வடிவத்தை கொடுத்தது; அரபு மொழிப் புலமையுடையோர்கட்கு அன்றும் இன்றும் என்றும் சவாலாக உள்ளது!


சமகால அரபு கவிஞர்களில் மஹ்மூத் தர்வீஸ், அதோனிஸ், ஜுமானா ஹத்தாத், ஹிசாம் ஹத்தாத், நசிக் அல் மலாய்க்கா, சாதி யூசுப், ஹசன் சக்தான், அப்துல் வஹ்ஹாப் அல் பைத்தி ஆகியோர் முக்கியமானவர்கள்.இவர்களில் மஹ்மூத் தர்வீஸ் முன் வரிசையில் வருகிறார். பாலஸ்தீன் கவிஞரான இவரின் மறதிக்கான நினைவுகள், துரதிஷ்டவசமாக இது சொர்க்கம் மற்றும் ஆதாமின் இரு தோட்டங்கள் ஆகியவை பலராலும் கவனம் பெற்ற தொகுப்புகளாகும். மறதிக்கான நினைவுகள் தொகுப்பில் கடந்து செல்லும் வார்த்தைகளுக்கு இடையே பயணிப்பவர்கள் என்ற கவிதை புலம் பெயரும் மனிதர்களின் உணர்வு நிலையை வெளிப்படுத்துவதாகும்.

” ஆகவே கடந்து செல்லும் நிலம்,

கடந்து செல்லும் கடல், அதன் கரை

கோதுமை, உப்பு, நம் காயங்கள்

வார்த்தை நம்மை கடந்து செல்கிறது.”

பாலஸ்தீனியராக இருந்து கொண்டு புலம் பெயர்தலுக்கு உள்ளான இவரின் வாழ்நிலை நெருக்கடிகள் அவருக்கு இம்மாதிரியான படிம உணர்வை வெளிப்படுத்துகிறது. இவரை தொடர்ந்து அதோனிஸ் அரங்கில் வருகிறார். சிரியாவில் பிறந்த அதோனிஸ் நெருக்கடிகள் காரணமாக லெபனானுக்கு புலம் பெயர்ந்தவர். வாழ்வின் நெருக்கடிகள், புலம் பெயர் வாழ்வால் உருவாகும் மன இடைவெளி இவற்றை தன் கவிதைகளில் வெளிப்படுத்தியவர். இரவு மற்றும் பகலின் பக்கங்கள் , கடல் மட்டுமே உறங்க முடிந்திருந்தால், ரோஜாவுக்கும் சாம்பலுக்கும் இடையேயான காலம் ஆகியவை முக்கிய தொகுப்புகள். அடுத்த நிலையில் ஈராக்கிய கவிஞரான நாசிக் அல் மலாய்க்கா முக்கியமானவர். ஈராக்கின் இலக்கிய பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த மலாய்க்காவின் கவிதை வெளி தனித்துவமானது.

--

அதிரை சித்திக் said...

தர்க்கம் .ஆரோக்கியமான தர்க்கம் தனிப்பட்ட

மோதல் இல்லாமல் தனது தரப்புவததை பலமாகிட

பல தகவல்களை அள்ளி தரும் காக்காவின்

அணுகுமுறை ..மிகவும் ஆரோக்கியமான விஷயம்

சொட்டாகிலும் ஞானம் தொட்டவர்கள் மேன்மக்கள்

மேன்மக்களே ..என்ற கவி சொல் என்றோ கேட்ட ஞாபகம் ..,

விவாதங்கள் தொடரட்டும் ..நல்ல பொருள் நாம் தேடுவோம் ..,

அன்புடன் புகாரி said...

>>>>>திலகம் எல்லாம் சரியா அதை விளக்கமாக சகோதரர் கவிஞர் புகாரி அவர்கள் விளக்கினால்...... - கிரீடம் Crown<<<<<

அன்பிற்கினிய அதிரை கிரீடம்,

”நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்” தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருள் இதோ:

அலை கடலே ஆடையான
இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு
பாரத நாடே முகமாம்
தென்திசை அதன் நெற்றியாம்
அதில் திலகமென திகழ்வது திராவிடத் திருநாடாம்
அந்தத் திலகத்தின் வாசனைப் போல்
அனைத்து உலகமும் இன்பம் காண
எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும்
பெருமை மிக்க பெண்ணான தமிழே
என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய
இந்த அழகைக் கண்டு வியந்து,
செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம்

இந்த அழகான பாடலில் இறைவனுக்கு இணைவைப்பது என்று ஏதேனும் உள்ளதா? ஏன் மதம் என்றதும் மனித மனம் கொக்கின் தலையில் வெண்ணை வைக்கப் பார்க்கிறது? ஒரு சிறப்பினைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட சொல்தான் திலகம்.

நடிகர் திலகம், நடிகையர் திலகம், மக்கள் திலகம் என்றெல்லாம் கூறுகிறோம். அதன் பொருள் என்ன? உயர்வானது சிறப்பானது என்பதைத் தவிர வேறு ஏதேனும் உண்டா?

”பாரதத்தின் நெற்றியான தென் திசையின் திலகமாக இருப்பது திராவிடத் திருநாடு” எத்தனை அழகாக இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பாராட்டாமல், வேண்டாததை ஏன் நினைக்கிறது மதமனம்? ஏனெனில் மதமனம் எப்போதும் அச்சத்திலேயே இருக்கிறது. அதிலிருந்து விடுதலை பெற்று வாழ்வைச் சுவைத்தால் எவனும் மகிழ்வான் அந்த இறைவனும் மகிழ்வான்.

*

>>>>தமிழ் வாழ்த்துப்பாவின் முடிவில் .. சிரம் பணிந்து செயல் மறந்து வாழ்த்துதுமே ..ஏற்புடையதா? - சித்திக்<<<<

அன்பின் சித்திக், இப்படியான வரிகளோடு உள்ள முழுப் பாடலையும் இடுங்கள். நான் விளக்கமாக மறுமொழி தருகிறேன்.

*

”மார்க்கத்தைவிட - மொழி முக்கியமாகப் போகிவிட்டதா? கவிதை, ஷிர்க்கையும் தன்னுள்ளே மறைத்துக் கொண்டு,வெளியே தெரியாமல் ஆக்கும் தன்மை கொண்ட விஷம். - அர அல”

அன்பின் அர அல,

மார்க்கம் என்ற சொல்லும் அல்லாஹ் என்ற சொல்லும் குர்-ஆன் வசனங்களும் மொழிதான். மொழியில்லையேல் இப்படி நீங்களும் நானும் உரையாடிக்கொண்டிருக்க முடியாது. காட்டுமிராண்டிகளை மீட்டு மனிதர்களாக்கிய பெருமை மொழிக்கே உரியது. மொழியைச் சாதாரணமாக
நினைத்துவிடாதீர்கள். மொழியில்லையென்றால் இன்று நீங்கள் காணும் நவீன உலகமே இல்லை. இது ஒரு நீண்ட சிந்தனைக்குரிய தலைப்பு. நான் அதனும் அதிகம் செல்லாமல் விசயத்துக்கு வருகிறேன். (மொழி பற்றி ஓர் அற்புதமான முன்னுரையை வைரமுத்து எழுதி நான் வாசித்ததாக ஞாபகம்)

அன்பு பாசம் கருணை ஈகை மனிதம் பண்பு மொழி இலக்கியம் கவிதை கலை என்று மனித நாகரிகத்தின் செயலும் வளர்ச்சியும் ஏராளம் ஏராளம்.

மார்க்கம் என்பது இவற்றை மறுத்தால் அது எப்படி மார்க்கம் ஆகும்.

வழி தராத ஒன்று வழியாகுமா? பாதை தராத ஒன்று பாதையாகுமா? மார்க்கம் தராத ஒன்று மார்க்கம் ஆகுமா?

இணைவைப்பது என்பது கவிதையால் மட்டுமே ஆகக்கூடியதில்லை, வெறுமனே ஒரு அத்துமீறல் செயலாலும் ஆகக்கூடும். ஒரு சொல்லாலும் ஆகக்கூடும். ஒரு சிறுகதையாலும் ஆகக்கூடும். ஒரு கட்டுரையாலும் ஆகக்கூடும். ஒரு நாடகத்தாலும் ஆகக்கூடும். ஒரு சினிமாவாலும் ஆகக்கூடும். ஒரு விமரிசனத்தாலும் ஆகக்கூடும்.

உங்கல் நிலைபாட்டில் நின்று, உறுதியாக இணைவைத்தலை வேண்டாம் என்று கூறுங்கள். அது ஏற்புடையது. ஆனால் கவிதையை வேண்டாம் என்று சொல்லாதீர்கள், அதற்கு உன்மத்த நிலைப்பாட்டைத் தவிர வேறெதையும் சொல்ல வழியில்லை.

அன்புடன் புகாரி

crown said...

Asan Buhari சொன்னது…

>>>>>திலகம் எல்லாம் சரியா அதை விளக்கமாக சகோதரர் கவிஞர் புகாரி அவர்கள் விளக்கினால்...... - கிரீடம் Crown<<<<<

அன்பிற்கினிய அதிரை கிரீடம்,
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.மூத்த கவி சகோதரரே! என்னுள் எழுந்த சந்தேகம் கேட்பது தவறா? ஒரு மாணவன் ஆசிரியரிடம் கேட்பது போல் இது. மேலும் காக்கா(இப்ப இங்கே ஒரு தமாசுக்கு)கொக்கு எல்லாம் எதற்கு? நான் கேட்டது திலகம் அதற்குரிய விளக்கம்.சுனக்கம் என்றாலும் விளக்கம் தந்ததுக்கு நன்றி! மேலும் சகோதரர் சித்திக் கேட்ட வினாவிற்குரிய பாடல் உங்களுக்கு தெரிந்துதானே இருக்கும்? அப்புறம் இங்கே கவிதை கூடாதுன்னு நான் எஙேயாவது சொல்லியிருக்கேனா? அது கையாளப்படும் முறைபற்றித்தான் என் கேள்வி !

அன்புடன் புகாரி said...

அன்பிற்கிய Crown,

>>>அஸ்ஸலாமு அலைக்கும். மூத்த கவி சகோதரரே! என்னுள் எழுந்த சந்தேகம் கேட்பது தவறா? <<<<<

தவறில்லை. கேளுங்கள். கேட்காமல் வாழ்க்கை இல்லை.

>>>>கொக்கு எல்லாம் எதற்கு? நான் கேட்டது திலகம் அதற்குரிய விளக்கம்.சுனக்கம் என்றாலும் விளக்கம் தந்ததுக்கு நன்றி!<<<<<

சகோதரரே, நான் கனடாவில் வாழ்கிறேன். இந்த வாரம் எங்களுக்கு நீண்ட வார இறுதி. அதாவது மூன்று தினங்கள் பணியில்லை. மாதம் ஒருமுறை இப்படி நீண்ட வார இறுதி நாட்களைத் தருவார்கள். அப்போதெல்லாம் எங்கேனும் வெளியில் வெகுதூரம் செல்வது வழக்கம். அதுவும் குறிப்பாக கோடை நாட்களில். இப்போதுதான் கனடாவில் கோடை கொஞ்சமாகத் தலைதூக்குகிறது. ஆகவே நான் கணினி இணையம் பார்க்காமல் இருந்தேன். இன்று பார்த்ததும் நடு இரவில் (இப்போது இரவு மணி 2) உட்கார்ந்து உங்களுக்கு மடல் இடுகிறேன். ஆயினும் தாமதத்திற்கு வருந்துகிறேன்.

கொக்கு பிடிக்கவில்லை என்றால் அதைமட்டும் நீக்கிவிட்டு மீதத்தைச் சுவைக்கலாமே சகோ, ஏன் இத்தனைக் கோபம்?

>>>>சகோதரர் சித்திக் கேட்ட வினாவிற்குரிய பாடல் உங்களுக்கு தெரிந்துதானே இருக்கும்?<<<<

சகோ, எனக்குத் தெரிந்த பாட்டு இதோ கீழே தந்துள்ளேன். இதில் எதற்கு விளக்கம் உங்களுக்கோ அல்லது சித்திக் அவர்களுக்கோ வேண்டும் என்று சொன்னால், நான் கொண்டுகூட்டி குவித்துத்தர முயல்வேன்.

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

>>>>அப்புறம் இங்கே கவிதை கூடாதுன்னு நான் எங்கேயாவது சொல்லியிருக்கேனா? அது கையாளப்படும் முறைபற்றித்தான் என் கேள்வி!<<<

நீங்கள் கவிதை கூடாதென்று சொன்னதாக நான் கூறவில்லையே. அர அல அவர்களுக்கு எழுதிய மறுமொழியை நீங்கள் உங்களுக்கு என்று நினைத்து வாசித்திருக்கக்கூடும்.

கையாளப்படும் முறையில் கவிதை. கட்டுரை, கதை, பேச்சு, நாடகம் இசை, நடனம் என்று அனைத்துக்குமே கேள்வியுண்டு. கவிதைக்கு மட்டுமல்ல என்பதே என் அழுத்தமான கருத்து. இக்கருத்தை ஏற்புடையதென்றேற்பீர்களென நன்புகின்றேன்.

அன்புடன் புகாரி

crown said...

அன்பிற்கிய Crown,

>>>அஸ்ஸலாமு அலைக்கும். மூத்த கவி சகோதரரே! என்னுள் எழுந்த சந்தேகம் கேட்பது தவறா? <<<<<

தவறில்லை. கேளுங்கள். கேட்காமல் வாழ்க்கை இல்லை.
---------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைகும். நீங்கள் எப்படி அதிரைக்கு அருகில் ஒரத்தனாடுவில் இருப்பதுபோல் நானும் தற்பொழுது உங்களின் பக்கத்து நாடு அமெரிக்காவில் கலிபோர்னியா மாகானத்தில் இருக்கிறேன். எனக்கு இன்று சற்று உடல் நிலை சரியில்லை ஆனாலும் நானும் உங்களுக்கு பதில் எழுதுகிறேன். என் வினாவிற்கு இப்படி சிரம்மம் ஏற்று செயல்பட்டதற்கு நன்றி! இன்சா அல்லாஹ் விரைவில் மற்றவைகளை பற்றி கலந்துரையாடலாம்.

அதிரை சித்திக் said...

திறம் மிகுந்து ..என்ற வரி இருக்கிறது

என்பதை சுட்டி காட்டியமைக்கு நன்றி ..

விவாத்தில் மூழ்கி செயல் மறந்து விட்டேன் ..

இத்தொடர் முடிவதற்குள்.., தற்காலத்தில்

எழுதப்படும் கவிதைகள் இஸ்லாத்தின்

வரம்பிற்கு உட்பட்டது ..வரம்பு எதுவரை

என்பதை கட்டுரை ஆசிரியர் அவசியம் விளக்கி

இத்தொடரின் நோக்கம் நிறைவேறிட ஆசை படுகிறேன் ..

நடிகருக்கு விசிறிகள் இருபது போல் கவிஞர்களுக்கும்

விசிறி இருப்பது நடை முறைக்கு சாத்தியம்.., இஸ்லாத்தில் இடம்

உண்டா ..இதனையும் ஆசிரியர் விளக்கிட வேண்டுகிறேன்

வாழ்கையில் ஒவ்வொரு அசைவுகளும் நபி (ஸல்)அவர்களின்

நடை முறைகளையே சான்றாக பகரலாம் கவிதை பற்றி விவாதம்

வரும்போது வைர முத்துவை தான் மேற்கோளிட்டு காண்பிக்க முடிகிறது

எனவே நவீன கால இலக்கிய வட்டத்தில் நமது ஈடுபாடு எந்த வகையில் அமைய

வேண்டும் என்பதையும் ஆசிரியர் விளக்கினால் நலமாக இருக்கும்

தனிப்பட்ட மோதலாக கருதாமல் அறிவு சார் கவி புகாரி அவர்கள்

தந்த விளக்கத்திற்கு நன்றி ..

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய Crown,

உங்கள் அறிமுகத்திற்கு நன்றி. உங்கள் பெயர் அறிந்தால் மகிழ்வேன்.

என் சகோதரர்கள் கலிபோர்னியாவில்தான் இருக்கிறார்கள். நான் 2010ல் ஆறுமாதங்கள் Fremontல் வசித்தேன். கடந்த ஜனவரியிலும் குடும்பத்தோடு மூன்று வாரங்களை சான் பிரான்சிஸ்கோ சலீனாஸ் எல்லே என்று சுற்றிக் கழித்தேன். கலிபோர்னியா எனக்கு மிகவும் பிடித்த மாநிலம்.

அன்புடன் புகாரி

crown said...
This comment has been removed by the author.
crown said...

Asan Buhari சொன்னது…

அன்பிற்கினிய Crown,

உங்கள் அறிமுகத்திற்கு நன்றி. உங்கள் பெயர் அறிந்தால் மகிழ்வேன்.

என் சகோதரர்கள் கலிபோர்னியாவில்தான் இருக்கிறார்கள். நான் 2010ல் ஆறுமாதங்கள் Fremontல் வசித்தேன். கடந்த ஜனவரியிலும் குடும்பத்தோடு மூன்று வாரங்களை சான் பிரான்சிஸ்கோ சலீனாஸ் எல்லே என்று சுற்றிக் கழித்தேன். கலிபோர்னியா எனக்கு மிகவும் பிடித்த மாநிலம்.

அன்புடன் புகாரி
----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். என் பெயர் முஹமது தஸ்தகீர்.உங்கள் சகோதரர்களை அறிவேன்.சகோதரர்கள்.ஹாஜா, சாகாபுதீன்? நீங்கள் யாசின் டிராவல்ஸ் உரிமையாளரின் மைத்துனனா? நானும் 2001ல் ப்ரிமொன்டில் வசித்திருக்கிறேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

//இணைவைப்பது என்பது கவிதையால் மட்டுமே ஆகக்கூடியதில்லை, வெறுமனே ஒரு அத்துமீறல் செயலாலும் ஆகக்கூடும். ஒரு சொல்லாலும் ஆகக்கூடும். ஒரு சிறுகதையாலும் ஆகக்கூடும். ஒரு கட்டுரையாலும் ஆகக்கூடும். ஒரு நாடகத்தாலும் ஆகக்கூடும். ஒரு சினிமாவாலும் ஆகக்கூடும். ஒரு விமரிசனத்தாலும் ஆகக்கூடும்.//

அன்புக்குரிய சகோதரர் ஹசன் புஹாரி அவர்களே,உண்மைதான்.ஆனால் சாமான்யனுக்கும் புரியாத ஒன்று கவிதைதான். .வாழைப்பழத்துக்குள் ஊசி ஏற்றினால் எப்படி ஈசியோ,அதன் உள்ளே ஊசி இருக்கிறது தெரியாதோ,அதோ போலவே கவிதை.உள்ளே இருக்கும் ஷிர்கை கண்டுகொள்ள முடியாது.அதனால் பெரும் ஆபத்து கவிதை மூலம்தான்.

அஹமது சாச்சா அவர்கள் குரான்-சுன்னாவை பின்பற்றும் ஒரு அறிஞர்,கவிஞர் அல்ல.இஸ்லாத்தில் கவிதைக்கு என்ன இடம் இருக்கிறது என்று ஆய்வு செய்து நமக்கு தருகிறார்.ஆனால் நீங்களும் - சகோ கலாம் காதிர் அவர்களும் முழு நேர கவிஞர்கள்.அதனால்தான் உங்கள் எடுத்துக்காட்டுகள் எல்லாமும் ஒன்று வைரமுத்துவாகவோ,அல்லது இன்ன பிற கவிங்கர்கலாகவோ இருக்கிறது.

கீழேயுள்ள சகோ கலாம் காதிர் அவர்களின் மேற்கோளைப் பாருங்கள்,கவிங்கர்களைப் பற்றிய மேற்கோள்கள்தான்.

சமகால அரபு கவிஞர்களில் மஹ்மூத் தர்வீஸ், அதோனிஸ், ஜுமானா ஹத்தாத், ஹிசாம் ஹத்தாத், நசிக் அல் மலாய்க்கா, சாதி யூசுப், ஹசன் சக்தான், அப்துல் வஹ்ஹாப் அல் பைத்தி ஆகியோர் முக்கியமானவர்கள்.இவர்களில் மஹ்மூத் தர்வீஸ் முன் வரிசையில் வருகிறார். பாலஸ்தீன் கவிஞரான இவரின் மறதிக்கான நினைவுகள், துரதிஷ்டவசமாக இது சொர்க்கம் மற்றும் ஆதாமின் இரு தோட்டங்கள் ஆகியவை பலராலும் கவனம் பெற்ற தொகுப்புகளாகும். மறதிக்கான நினைவுகள் தொகுப்பில் கடந்து செல்லும் வார்த்தைகளுக்கு இடையே பயணிப்பவர்கள் என்ற கவிதை புலம் பெயரும் மனிதர்களின் உணர்வு நிலையை வெளிப்படுத்துவதாகும்.

எனவே,நீங்கள் தவறு செய்யும்,நம்மை போன்ற மனிதர்கள் மூலம்,கவிஞர்கல் மூலம் கவிதைக்கு மேற்கோள்கள் காட்டுகிறீர்கள்(சகோ கலாம் காதிர் அவர்கள் உட்பட)ஆனால் உண்மை நிலையோ,குரான்,ஹதீஸ் என்ன சொல்கிறதோ - அதை மேற்கோள் காட்ட வேண்டும். அதை அஹமது சாச்சா அவர்கள் செய்கிறார்கள்.அவர்களுடன் தயவு செய்து முடிச்சு போடா வேண்டாம்,ஷிர்க்கை நுழைக்க வேண்டாம்.பிளீஸ்

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய முகமது தஸ்தகீர்,

நீங்கள் சகோதரர்களை அறிந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. யாசின் டிராவல்ஸ் உரிமையாளரின் பெயரைச் சொன்னால், அவர் எனக்கு என்ன உறவு முறை என்று அறிய நேர்ந்தால் சொல்வேன்.

நான் பட்டுக்கோட்டையில் திருமணம் செய்தவன். நிஷாரிஷா பேப்பர் ஸ்டோர் உரிமையாளர் என் மைத்துனர்.

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

தமிழ்ச்செய்தித்தாள் செய்தி:

கவிதை உறவின் 40 ஆம் ஆண்டுவிழாவில் “மனதில் பதிந்தவர்கள்” 6 ஆம் தொகுதி வெளியீடு. முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டவர்: ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியற் கல்லூரி தாளாளர் சேகு ஜமாலுதீன் அவர்கள்

(நிழற்படத்தில் பார்த்தால் சுத்தமான சுன்னத்தான கோலத்தில் உள்ள ஒரு முஃமீனாகத் தென்படும்) ஜனாப் சேகு ஜமாலுதீன் அவர்களின் கரங்கள் கவிதை நூலைப் பெற்றுக் கொண்டதால் கறை படிந்திருக்காது என்று நம்புவோமாக!

அந்தக் காலத்தில் வாழ்ந்த அண்ணல் நபி(ஸல்) அவர்களின் கவித்தோழர்கள் பற்றி இக்கட்டுரை ஆய்வாளர் ஆசிரியர் அவர்கள் கூறுவது போல், சமகால- நிகழ்கால முஸ்லிம்களில் கவிதை எழுதுபவர்களும், கவிதை நூலை விரும்புகின்றவர்களும் உளர் என்பதற்குக் காட்டுகள் காட்டுவதும் “ஷிர்க்கா”?
“ஷிர்க்” என்ற வார்த்தை ஏன் தான் இப்படிச் ”சுருக்” கென்று “பத்வா” கொடுக்கப்படுகின்றதோ? தீர்ப்பளிப்பவன் அல்லாஹ் என்று தொழுகையில் கூறும் நாமே தீர்ப்பளிக்கப் புறப்பட்டு விட்டோமா?

“முழு நேரமும் கவிதை இயற்றுபவர்கள்” என்றால், கனடாவில் புகாரியும், அபுதபியில் அடியேனும் பிழைப்பில்லாமல் சம்பளம் வாங்க முடியுமா? ஓய்வே இன்றி முதுகெலும்பு முறியும் அளவுக்கு (கணக்கராக)ப் பணியாற்றும் எனக்கு எப்படி “முழுநேரம் கவிதை இயற்ற முடியும்?”
கவிஞர்கள் தான் கற்பனை செய்பவர்கள் என்று கூறுபவரே “கற்பனையாக” யூகத்தின் அடிப்படையில் அவதூறு பரப்புவதும் மார்க்கம் தானா? அவதூறு பரப்பும் ஆசிரியரின் சிஷ்யரிடம் அவதூறுகள் தான் இருக்கும்!
கவிதை எழுதத் தெரியாது என்பதால் கவிதை எழுதுவர் எல்லாம் முழு நேரமும் மூழ்கிக் கிடப்பதாக கருதினால் பூனைக் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்பது போல் தான்.

கவிதா ஞானம் என்பது அல்லாஹ் எங்கட்குக் கொடுத்த அருட்கொடை; அதில் எவர்க்கும் வேண்டாம் பெருந்தடை!

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ அர அல,

உங்கள் முழுப்பெயரையும் அறியத்தாருக்கள் மகிழ்வேன். அதோடு உங்களைப்பற்றிய அறிமுகமும் தாருங்கள்.

என் பெயருக்கான விளக்கம். அசன் என்பது என் தந்தையின் பெயர். புகாரி என்பது எனக்கு என் தந்தை இட்ட பெயர். கனடாவில் அசன் என்பதை முதல் பெயராகவும் புகாரி என்பதைக் குடும்பப் பெயராகவும் குறித்துக்கொண்டார்கள். ஏனெனில் தமிழ்நாட்டில் தந்தையின் பெயரை முன்பாகவும் தனயனின் பெயரை பின்பாக எழுதும் வழக்கம் உண்டு. இதுவே டெல்லி போன்ற இடங்கள் என்றால் முதல் இடை கடை என்று பெயர்கள் உலக வழக்கில் இருக்கும்.

என்னை என் அலுவலகத்தில் ”அசான்” என்று அழைப்பார்கள். சில அன்புடன் குழும அன்பர்கள் சிலர் ஆசான் என்றும் அழைப்பார்கள். என் நண்பர்கள் புகாரி என்று அழைப்பார்கள். என் தந்தையின் பெயர் அசன்பாவா ராவுத்தர்.

சரி, இனி உங்கள் மடலுக்கு மறுமொழி இட வருகிறேன்....

>>>>>>உண்மைதான்.ஆனால் சாமான்யனுக்கும் புரியாத ஒன்று கவிதைதான். .வாழைப்பழத்துக்குள் ஊசி ஏற்றினால் எப்படி ஈசியோ,அதன் உள்ளே ஊசி இருக்கிறது தெரியாதோ,அதோ போலவே கவிதை.உள்ளே இருக்கும் ஷிர்கை கண்டுகொள்ள முடியாது.அதனால் பெரும் ஆபத்து கவிதை மூலம்தான்.<<<<

சாமான்யனுக்குப் புரியாது என்று கவிதையைப் பற்றி உயர்வாகக் கூறியிருக்கிறீர்கள். நன்றி. சாமான்யன் தான் அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்டு அப்படியே நடக்க முயல்வான். அறிவுடையோர் ஆழ்ந்து ஆராய்ந்து தெளிந்து பின் அதன்வழி செல்லலாமா என்று யோசிப்பவர்கள்.

ஆகவே உங்கள் கூற்றுப்படியே, கவிதைகளால் பாமரர்களுக்கு ஏதும் பங்கம் வந்துவிடாது. ஆனால் தவறான கட்டுரை, தவறான கதை, தவறான பேச்சு, தவரான விமரிசனம் எல்லாம் சாமான்யர்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிடும்.

உங்களுக்குக் கவிதை பிடிக்காது என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம். அதில் தலையிட நான் தயாராகமாட்டேன். ஆனால் உங்கள் மூலமே
கவிதையின் உயர்வினைக் கேட்டு அதனால் பங்கம் இல்லை என்பதையும் உறுதி செய்யும்போது எனக்கு மகிழ்வாய் இருக்கிறது.

என்போன்றோருக்கும் மகிழ்வாய் இருக்கும் என்று நம்புகின்றேன்.

>>>>அஹமது சாச்சா அவர்கள் குரான்-சுன்னாவை பின்பற்றும் ஒரு அறிஞர், கவிஞர் அல்ல.<<<<

அற்புதமாக மரபுக் கவிதைகளை எழுதி இந்த தொடர் முழுவதிலும் இட்டிருக்கிறார். தேர்ந்த கவிதை விரல்களால் மட்டுமே இது சாத்தியப் படக்கூடும்.

ஆகவே உங்கள் கூற்றை ஏற்க மறுக்கும் என் உள்ளத்திற்கு உண்மையை அறியத் தர சகோ அறிஞர் கவிஞர் அகமது அவர்களே பதில் கூறட்டும்.

>>>எனவே,நீங்கள் தவறு செய்யும்,நம்மை போன்ற மனிதர்கள் மூலம், கவிஞர்கள் மூலம் கவிதைக்கு மேற்கோள்கள் காட்டுகிறீர்கள்(சகோ கலாம் காதிர் அவர்கள் உட்பட)<<<<

இந்த உலகம் முழுவதையும் நிராகரிக்கச் சொல்லி உங்களுக்கு யார் சொல்லித் தந்தது. மதம் என்று சொல்லிவிடாதீர்கள். அப்படிச் சொன்னால் அது தவறு. இந்த உலகத்தை நிராகரித்தால் இந்த மடலை நம்மால் இந்தத் தமிழில்கூட எழுதமுடியாது. நீங்கள் விமானம் ஏறி வெளிநாடு சென்றிருக்க முடியாது. ஏனெனில் விமானத்தைக் கண்டுபிடித்தது முஸ்லிம் அல்ல. பள்ளியில் சென்று கற்க முடியாது. ஏனெனில் இவற்றிலெல்லாம் முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் பங்குமட்டுமே இல்லை. இந்தக் கணினி இந்த இணையம் இந்த வலைப்பூ இந்த ஊடகம் என்று எதுவுமே உங்களால் பயன்படுத்த முடியாது. உலகிலிருந்து நீங்கள் உங்களைத் துண்டித்துக்கொண்டு பள்ளிவாசலுக்கு உள்ளேயேதான் இருக்க வேண்டும். அந்தப் பள்ளிவாசல் கட்டுவதிலும் முஸ்லிம் அல்லாதோர் அதிகம் இருக்கிறார்கள். சவுதி அரேபியாவில் மெக்கா மெதினா பள்ளிகளைக் கட்டும்போது யாரெல்லாம் பணி செய்தார்கள் என்று விசாரித்துப் பாருங்கள். நீங்கள் முன்னும் பின்னும் யோசிக்க மறுக்கிறீர்கள். உங்களை நீங்களே மிகவும் சுருக்கிக்கொண்டு இதயத்தையும் அறிவையும் விசாலப்படுத்த மறுக்கிறீர்கள். உங்கள் மீது இப்படி விமரிசனம் தரவேண்டிய கட்டாயம் அமைந்ததற்காக நான் மிகவும்
வருந்துகிறேன். என்னை மன்னியுங்கள். நான் யாரையும் நோகடிக்க விரும்புவனே அல்ல.

>>>>>ஆனால் உண்மை நிலையோ, குரான், ஹதீஸ் என்ன சொல்கிறதோ - அதை மேற்கோள் காட்ட வேண்டும். அதை அஹமது சாச்சா அவர்கள்
செய்கிறார்கள்.அவர்களுடன் தயவு செய்து முடிச்சு போடா வேண்டாம், ஷிர்க்கை நுழைக்க வேண்டாம்.பிளீஸ்<<<<

சகோ அகமது அவர்கள் சொல்வதை இதுவரை நீங்கள் ஏற்றதாக நான் அறியேன். இந்தத் தொடர் முடிந்ததும் நீங்கள் உங்கள் எதிர் கருத்துக்களை அள்ளி வீச இருப்பதாகவே நீங்கள் சொன்னதாய் நான் நம்பி இருக்கிறேன். முன்னும் பின்னும் முரணாய்ப் பேசவேண்டாம் ப்ளீஸ் :)

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

சொற்களின் ஒரே விதமான உச்சரிப்பால், சொல்பவர்- எழுதுபவரின் உள்நோக்கம்- “இக்லாஸ்” எனும் உளத்தூய்மையினை அல்லாஹ் அல்லாத எவராலும் விளங்கிக் கொள்ள இயலாது; அப்படி விளங்க முற்பட்டாலும் குழப்பமான முடிவுக்கு வந்து “ஷிர்க்” என்று “ஃபத்வா” கொடுத்து விட்டுத் தான் மட்டும் தான் முஸ்லிம் மற்றவரெல்லாம் “முஷ்ரிக்” என்று விபரீத முடிவுக்குத் தான் வர வேண்டுமா?

காட்டுகள்:
உதவி என்ற தமிழ்ச்சொல்லை அல்லாஹ் உதவி செய்கின்றான் என்பதற்கும்; மனிதர்கள் செய்யும் உதவிகட்கும் பயன்படுத்தினாலும் நேரடியாக இரண்டும் ஒன்று எடுத்துக் கொள்ள மாட்டோம்.

மாலிக் என்ற அரபுச் சொல்லில் அல்லாஹ்வை அதிபதி என்பதாகவும்
மலிக் என்ற அரபுச் சொல்லில் மனிதர்களில் மன்னராக இருப்பவரைக் குறிப்பிடுகின்றனர்; தமிழ் வழக்கில் “எஜமான்” என்று சொன்னாலும் உள்ளத்தில் அல்லாஹ்வுக்கும், மனிதர்க்கும் வேறுபாடு வைத்துதான் சொல்வதை அல்லாஹ் மட்டும் அறிவான் என்பதே நம் நிலைபாடு.

“ஓ மை லார்ட்” என்று நீதிபதியையும் கூறலாம், இறைவனையும் கூறலாம். புரிந்துணர்வில் குறைபாடுடையோர் குழம்பிக் கொண்டால் அதற்குச் சொல்லின் மீது குறைகூற முடியாது!

“இரு ஹரம் ஷரீஃப்களின் பாதுகாவலர்” என்று நாடோறும் சவூதி மன்னரை அந்நாட்டுத் தொலைகாட்சி செய்தியில் சொல்லுவதிலிருந்து, இறைவனுக்கு மட்டும் தான் “பாதுகாவலன்” என்று சொல்ல வேண்டும்; இது ’ஷிர்க்” அல்லவா என்று கூற முடியுமா? இங்குப் பாதுகாவலர் என்று பொருள் கொள்வது எப்படி என்பதும் அதனை உச்சரித்தவர் எந்த எண்ணத்தில் உச்சரித்தார் என்பதும் உள்ளங்களின் உணர்வுகளை அறிந்த அல்லாஹ் அறிவான்!
இப்படியாக நாம் சொற்களைப் பயன்படுத்தும் நோக்கம் உளத்தூய்மை கொண்டே அணுகினால் வம்பும் இல்லை; வேண்டாத விவாதமும் இல்லை!

KALAM SHAICK ABDUL KADER said...

//அஹமது சாச்சா அவர்கள் குரான்-சுன்னாவை பின்பற்றும் ஒரு அறிஞர், கவிஞர் அல்ல.<<<<//
"இற்றைப் பொழுதில் மரபினைப் பற்றிப் பிடித்தால் , கற்றவர்கள்- தமிழறிஞர்களிடம் மதிப்பினைப் பெறுவீர்” என்று அறிவுரை கூறியும் எனக்கு யாப்பிலக்கணத்தின் பால் ஊக்கம் அளித்தும், என் மரபுப்பாக்களில் ஏற்படும் ஒற்றுப்பிழைகள் மற்றும் தளை தட்டுதல்- யாப்பிலக்கணப் பிழைகள் கண்டதும் மடலில் திருத்தம் செய்தும் தரும் ஆசானாக விளங்கும் உங்கள் சாச்சா அவர்கள் கவிஞர் தான் என்பதற்கு சாலச் சிறந்த சான்று!

“மரபுக் கவிதைகள்” எனும் தலைப்பில் நூலொன்று வெளியிட்டவர்கள் கவிஞராகத் தானே இருக்க முடியும்?

மார்க்க அறிவும், அரபு மொழிப் புலமையும், தமிழ் மொழிப் புலமையும் இருப்பதானாற்றானே அரபு மொழிப் பாக்களை அதன் கருவும்- செறிவும் மாறாமலும் தமிழ் மொழியின் யாப்பிலக்கணம் பிறழாது இத்தொடர் முழுதும் ”கவியாக்கம்” என்றே அவர்களால் எழுதப்படுவதைக் கண்டும், அவர்களைக் கவிஞர் என்று சொல்லாமல் இருக்க முடியுமா? (அவர்கள் தன்னடக்கம் காரணமாக இதுகாறும் மறுமொழி இடாமல் அமைதி காப்பதால், உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று கனவு காண வேண்டா.)
நீங்கள் எந்த அளவுக்குப் “பிதற்றல் பேர்வழி” என்பதை முற்கூட்டியே அழகாக கணித்து வைத்துள்ளதனாற்றான், துவக்கமாகவே சொன்னார்கள்,” தவ்ஹீத் மேடைகளில் முழங்கும் ஒருவரின் பேச்சைக் கேட்டு, கவிதை கூடாது என்ற முடிவுக்கு வந்திருப்பார்” என்று, அப்பொழுது ,”இல்லை , நான் எந்த இயக்கத்திலும் இல்லை” என்று அறுதியிட்டு உறுதி சொன்னவர் இன்று “அவர் என் ஆசிரியர்” என்பதும், என் வலைப்பூக்கள் சென்று பார்த்து விட்டு,” உங்கள் கவிதைபோல் இறையுணர்வூட்டும் கவிதைகள் சிறந்தவைகள்” என்றும் மாறி மாறி - முரண்பட்டே வருகின்றதும் எங்களால் எளிதாக கணிக்க முடியும்; கணக்குப் பதிவியல் மட்டுமன்று மனிதர்களின் எண்ணங்கள்- எழுத்துக்களை வைத்தும் கணிக்கும் ஆற்றலை அல்லாஹ் எமக்கு அருளியுள்ளான்; எனவே, வீணாக வேண்டுமென்றே உங்கள் இயக்க ஆசிரியரைப் போல் விவாதத்தில் ஈடுபடுதல் தான் வேலையா?

அதிரை சித்திக் said...

அன்பு சகோ கவி புகாரி அவர்களுக்கு ..

தங்களின் கவி சார்பான விளக்கம்

சமயோசிதமாக எதிர் தரப்பு வேகத்தை

விவேகமாக தணிக்கும் தன்மையும் உள்ளது

விளக்கம் தரும் எழுத்தாளராக இதுவரை காண

முடிகிறது கவிஞராய் காண ஆசை படுகிறேன்

*ஆராதனை *எனும் தலைப்பில் சிறு கவிதை

பின்னூடத்தின் வாயிலாக தாருங்களேன்

அன்புடன் புகாரி said...

>>>>விளக்கம் தரும் எழுத்தாளராக இதுவரை காண முடிகிறது கவிஞராய் காண ஆசை படுகிறேன் *ஆராதனை *எனும் தலைப்பில் சிறு கவிதை பின்னூடத்தின் வாயிலாக தாருங்களேன்<<<<<

அன்பின் சகோ சித்திக்,

இங்கே நான் இப்படி உரைநடை எழுதினாலும் நான் கவிதைக்கு ஆதரவாக எழுதி வருகிறேன். நான் உரைநடை எழுதும்போதே அர அல போன்ற சகோதரர்கள், இறைவனுக்கு இணைவைப்பதை நான் ஆதரிப்பதுபோல் தவறாக எண்ணி இருக்கிறார்கள். நான் கவிதை எழுதினால் என்னாகும்? சற்றே கலக்கமாக இருக்கிறதல்லவா :-)

உரை நடையில் நான் அழுத்தமாகச் சொன்னாலும் அதை சகோ அர அல லேசாக எடுத்துக்கொள்வார். ஆனால் கவிதையில் நான் மென்மையாகச் சொன்னாலும் கடும் கோபம் கொண்டுவிட வாய்ப்பிருக்கிறதல்லவா? அப்படி இருக்க, ஏன் என்னை வம்பில் மாட்டிவிடும் விதமாய் இப்படி ஒரு விருப்பத்தை என்முன் வைக்கிறீர்கள்? சகோ அர அல அவர்களைக் கோபம் கொள்ளச் செய்வதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. அதே சமயம் என் முன் வைக்கப்பட்ட உங்கள் விருப்பத்தை நிராகரிக்கவும் மனம் வரவில்லை. ஆகவே.....

முதலில் கவிதையைப் பற்றி சில வரிகள் சொல்லிவிடுகிறேன். கவிஞனிடம் கவிதைக்கான தலைப்பைக் கொடுத்து கவிதை கேட்கக் கூடாது. ஏனென்றால் கவிதை என்பது செய்வதல்ல. இயல்பாக இதயத்திலிருந்து ஓர் உந்துதலில் தானே வருவது. அந்த உந்துதலுக்குக் காரணம் எதுவோ அந்தத் தலைப்பில்தான் கவிதை அமையும். அதுதான் உண்மையான கவிதை என்ற நம்பிக்கை உள்ளவன் நான். என் கவிதை நூல் ஒன்றுக்கு இப்படி ஒரு முன்னுரை எழுதினேன்:

*

இன்று ஏதாவது கவிதை எழுதினீர்களா?' என்று கேட்கிறார்கள் சிலர்.

என் கவிதைகளை வாசிக்க வேண்டும் என்ற தாகம் அவர்கள் கண்களில் மிதக்கலாம் அல்லது ஒரு கவிஞனை விசாரிக்கும் சம்பிரதாய கேள்வியாகவும் அது இருக்கலாம்.

இந்தக் கேவிக்கு பதிலாக 'இல்லை' என்று ஒரு சொல்லிலும் பதில் கூறலாம் அல்லது எனக்கு எப்பொதெல்லாம் கவிதைச் சிறகுகள் முளைக்கும் என்ற ரகசியத்தை விளக்கியும் கூறலாம். ஆனால் நானோ 'விரைவில் எழுதுவேன் எழுதியதும் முதலில் உங்களுக்குத்தான் அனுப்பிவைப்பேன்' என்று கூறுவதுண்டு.

இந்த பதிலுக்குப் பின்னணியாய் நான் பிறந்த ஒரத்தநாட்டில் எங்கள் தெருவில் நெடுங்காலம் தபால்காரராய் எங்களுக்கு தபால்ப் பால் ஊட்டிய கண்ணையா என்பவரின் உயர்ந்த பண்பு இருக்கிறது. எங்களுக்குக் கடிதம் வராவிட்டால் 'இன்று கடிதம் இல்லை' என்று அவர் சொல்லமாட்டார் 'அவசியம் நாளை தருகிறேன் தம்பி' என்று அன்போடும் கனிவோடும் கூறுவார்.

ஒரு கவிதையாவது எழுதாமல் உறங்கச் செல்லாத நாட்கள் அடர் மழைக் காலத்தைப்போல தொடர்ந்து எனக்குச் சிலகாலம் இருப்பதுண்டு. அதே போல கவிதைகளே எழுதாமல் பலகாலம் அப்படியே மௌனமாயும் மூடிக்கிடப்பேன்.

கவிதைகள் என் உயிரின் கதவுகளைத் தட்டும்போது நடு இரவானாலும் உடனே எழுந்து எழுதுவதும் உண்டு, மூளைக்குள் அப்படியே ஒரு சேமிப்பாய்க் கிடத்திவிட்டு பின்னொருநாள் தட்டி எழுப்பி அதற்கொரு வடிவம் அமைக்கப் பாடுபடுவதும் உண்டு. ஆனால் இன்று ஒரு கவிதை எழுதியே தீரவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு ஒரு நாளும் அமர்ந்ததே இல்லை.

இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.

தலைப்பு தந்து கவியரங்கம் பாட அழைக்கும்போது வலுக்கட்டாயமாக அமர்ந்து கவிதை எழுத வேண்டிய சூழல் அமையும். அப்ப்டி அமையும் போதெல்லாம் கவிதை எழுதிப் பழகிய அனுபவ விரல்கள் வார்த்தை விளையாட்டுகளில் இறங்கிவிடும். சில சமயம், பழைய கவிதைகளை எடுத்துக் கோத்து இடைச் செருகல்களோடு புதிய கவிதைகள் உருவாக்கும் நிலைப்பாடும் அமையும்.

இங்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், கவிதைகள் என்பன உள்ளத்தில் கருக்கொண்டு உணர்வுகளில் உந்திக்கொண்டு உயிரை உரசிக்கொண்டு அறிவின் சீரமைப்போடு தானே வெளிவருபவை. அப்படி வராதவை கவிதைகளாய் இருப்பதில்லை, வார்த்தை விளையாட்டுக்களாய்த்தான் அமையும்.

ஆகையினால்தான் நான் என் இணையக் குழுமமான அன்புடனில் கவிதைப் போட்டிகளை அறிவித்தபோது கவிதை எழுதுவதற்கு எந்த ஒரு தலைப்பினையும் தரவில்லை. அது மட்டுமல்லாமல் கவிதை எழுதுவதற்கான காலத்தையும் அதிகமாக நீட்டிக்கொடுத்தேன்.

தானாய்க் கனிவதுதான் கனி. தடியால் அடித்துக் கனியவைப்பது என்பதே கவிதை உலகில் தனி.

*

சரி ஆராதனை என்ற தலைப்பில் ஒரு கவிதை கேட்டீர்கள் அல்லவா? இந்த மறுமொழி வெகுவாக நீண்டுவிட்டதால், அடுத்தொரு மறுமொழி தொடங்கி அதில் எழுதுகிறேன் என் கவிதையை.

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்புச்சகோ சித்திக் அவர்களுக்கு,

ஆராதனை என்ற தலைப்பில் ஒரு கவிதை கேட்டீர்கள். நான் இருட்டை ஆராதித்த இந்தக் கவிதையை இங்கே இடுகிறேன். நான் எப்படி இருட்டை ஆராதிக்கிறேன் என்று இருட்டே சொல்வதுபோல் அமைந்த இந்தக் கவிதை என் முதல் தொகுப்பான வெளிச்ச அழைப்புகளில் வெளிவந்தது. எத்தனை முரண் பார்த்தீர்களா? வெளிச்ச அழைப்புகளில் இருட்டு பேசுகிறது :)

*

இருட்டு பேசுகிறது

நான் இருட்டு
கொஞ்சம் ஊடுருவிப் பாருங்கள்
நானே நிஜம்

வெளிச்சம் விருந்தாளி
நானே நிரந்தரம்

புலன்கள் ஐந்து
அவற்றுள் ஒற்றைப்புலனே
வெளிச்சத்தின் அடிமை

அந்த விழிகளும் என்னில் மட்டுமே
கனவுகள் காண்கின்றன

கனவுகளே உங்களின்
சத்தியப் பண்புகளைச் சொல்கின்றன

உங்களின் சரியான முகவரி
உங்கள் கனவுகளில்தான்
பொறிக்கப் பட்டிருக்கிறது

வெளிச்சம் உங்களைப் பொய்யுடன்
பிணைத்துக் கட்டுகிறது

வெளிச்சம் பொய்களின் கூடாரம்
இருட்டே உண்மையின் தீர்மானத் தளம்

என்றாவது உங்களை
வெளிச்சத்தில் பார்த்திருக்கிறீர்களா
இருட்டில்தானே நீங்கள் தெரிவீர்கள்

வெளிச்சத்தில் உங்களுக்கு தினம் ஒரு முகம்
இருட்டில் உங்களுக்கு ஒரே முகம்

வெளிச்சத்தில் நாளும் நிறம்மாறுகிறீர்கள்
இருட்டில்தான் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்

வெளிச்சம் பொய்
இருட்டே நிஜம்

வெளிச்சம் துயரம்
இருட்டே சந்தோசம்

வெளிச்சம் அரக்கன்
இருட்டே உங்கள் தாய்

நிறைய அழுகை மனிதனுக்குச் சொந்தம்
அவை அனைத்தும்
வெளிச்சம் உங்களுக்குத் தந்த விசங்கள்

அத்தனைக் கண்ணீரையும் கொட்டித்தீர்க்க
இருட்டே உங்களுக்கு மடி வார்க்கிறது

கரு எங்கே உதிக்கிறது
விதை எங்கே முளைக்கிறது
உயிர்கள் அத்தனைக்கும் மூலம் இருட்டுதானே

வெளிச்சம் வேசம்
வெளிச்சத்தில் சொல்லப்பட்ட
கதைகள்தாம் இருட்டை பயமென்று பிதற்றுகிறது

கருப்பையில் பயந்தீரா
வெளிவந்து அழுதீரா

இருட்டா உங்களுக்குப் பயம் சொல்லித்தந்தது
வெளிச்சம் கவலைகளின் தொழிற்சாலை
இருட்டு உங்களின் சத்தியமான வாழ்க்கை

புறக்கண் என்றேனும் எவரின் நிஜத்தையும்
உங்களுக்குக் காட்டி இருக்கிறதா
சொல்லுங்களேன்
பாசமென்பது பெத்தவளின் முகமா
அவள் அரவணைப்பா
காதல் தந்தது காதலியின் வெளியழகா
அவள் உள்ளழகா
நிம்மதிச் சொத்து உருவங்களாலா
உள்ளங்களாலா

யோசித்துப் பாருங்கள்
இருட்டையே நீங்கள் காதலிக்கிறீர்கள்
வெளிச்சத்தை வெறுக்கிறீர்கள்

வெளிச்சம் இதயத்தை மதிப்பதில்லை
இருட்டு உருவத்தை மதிப்பதில்லை
தினம் தினம் வெளிச்சம் உங்களை
ஏமாற்றுகிறது

தவறாக எண்ணாதீர்கள்
இருட்டு வெளிச்சத்தைக் கண்டு
ஓடி ஒளிவதில்லை
வெளிச்சத்துக்கும் வாழ்க்கை தருகிறது

வெளிச்சம் இல்லாமல் இருட்டு இருக்கும்
இருட்டே இல்லாமல்
வெளிச்சம் எங்கே இருக்கும்

பூமி இருட்டு நிலா இருட்டு
கோள்களெல்லாம் இருட்டு பிரபஞ்சமே இருட்டு
உயிர்கள் அத்தனையும் இருட்டின் துகள்கள்
இருட்டே நிஜம் வெளிச்சம் பொய்

*

அன்புடன் புகாரி

sabeer.abushahruk said...

இருட்டில் இத்துனை வெளிச்சம் பாய்ச்சுதல் எங்ஙனம் சாத்தியம் என எழுதியவர்க்கே சாத்தியம்.

முதன்முதலாக இருட்டைத் தெளிவாகப் பார்க்க வாய்த்தது, எனினும் எனக்கென்னவோ...

வெளிச்சமே இருப்பு எனவும்
இருட்டு இல்லையின் வறையரை எனவும் ஓர் அபிப்ராயம் உண்டு.

நேரம் வாய்க்கும்போது பதிலடி தருகிறேன்,,,வெளிச்சமே வெற்றி என்று.

க்ளாஸ் பீஸ் ஆஃப் ரைட்டிங், சகோ.

அதிரை சித்திக் said...

எதையும் தெளிவாய் சொல்ல கவிஞனால் மட்டுமே முடியும்

கருவுக்குள் இருளில் அமைதியாய் இருந்த குழந்தை வெளிச்சத்தை

கண்டு வீரிடுவதாக கூறும் கவி மனிதனுக்குள் திணிக்க படும்

முதல் விஷயம் வெளிச்சம் ...கவியின் ஆழம் கருத்து கடலின்

ஆழம் ..கவிஞர் சபீர் கருத்து மோதலுக்கு தயாராகிறார்.

நானோ கவிஞரின் கவியில் மயங்கி கருத்தில் ஆழ்ந்து

போனேன் இருளில் துவக்கமும் முடிவும் உள்ளதாகவே

நினைகிறேன் தூக்கத்திற்கும் இருள் தேவை ..இருளின் குணம்

அமைதி .கோழைக்குஇருள் பிடிக்காது பயம் பிடிக்கும்

இருள் ..மீது ஒரு காதலையே கொண்டு வந்து விட்டீர்கள்

கவிஞரால் எதையம் எப்படியும் கூறி மனதில் பதிய வைக்க

முடியும் என்பதற்கு இதுவே சான்று ..,

,கவிஞர்கள் ,,நிறைந்த அ.நி .யில் புகாரி அவர்களின்

கவிதையும் கலக்க வேண்டும் பின்நூட்டமல்லாது .படைப்பாக

வரவேண்டும் ,,பங்களிப்பாளராக வர வேண்டும் அழகிய தர்க்கம்

நடைபெற வேண்டும் முடிவு நல்ல கருத்துக்கள் நம்மவர் நுகரும் விதமாக

அமைய வேண்டும் ..

Yasir said...

//மாலிக் என்ற அரபுச் சொல்லில் அல்லாஹ்வை ............................
“ஓ மை லார்ட்” என்று நீதிபதியையும் கூறலாம்,....................................
“இரு ஹரம் ஷரீஃப்களின் பாதுகாவலர்” ளை அறிந்த அல்லாஹ் அறிவான்!
இப்படியாக....................../// rockets propelled words of explanations.....great Br.Kalam....i don't think someone need more explanations to understand what is "shirk" what is not.....great...ALLAH KAREEM

sabeer.abushahruk said...

நான்… வெளிச்சம்!

விடியல் என்றொரு வினையில்
சற்றுமுன்தான்
உலகின் இருட்டு அழுக்கைத்
துடைத்தெடுத்தத்
தூய்மை நான்.

இருட்டு
இல்லையின் வறையரை
நானோ
இருப்பின் அறிவிப்பு

என்னைக்கொண்டே
நாட்களைக் கணக்கிடுவர்
இருட்டைக் கொன்றே
நானும் வெளிக்கிடுவேன்

உள்ளுக்குள் உறங்கும்
மிருகம்
இருட்டின் தயவிலேயே
குற்றம் புரியும்
இருட்டை உடுத்தியே
எங்கும் உலவும்

நான்
நல்லது கெட்டதை
நானிலத்திற்குக் காட்டும்
நல்லவன்

இருட்டு
கண்கொத்திப் பாம்பு
துரோகத்தின் துணைவன்
எல்லாப் பொருட்களையும்
இல்லையென்றாக்கும்
ஏய்ப்பு இருட்டு.

நான் நிஜம்
இருட்டு நிழல்

வெளிச்சம் விருந்தாளியல்ல
இருட்டு தரிக்கும்
வேடம் திருத்தி
யதார்த்தமாக்க முயலும் அறிவாளி

யாவற்றின்
இயல்புகளையும்
கருமை பூசி
போலியாகக் காட்டும்
முகமூடி இருட்டு

நிஜம்தான்
நிரந்தரம்

இருட்டு
எத்தனை முயன்றாலும்
என்னைக்கொண்டு
விரட்டவே விழையும் உலகு

இருட்டு
காத்திருக்கு மொரு கயமை
நான்தான்
அதைக் கட்டுப்படுத்தும்
காவல்காரன்.

நான் துவக்கம்
இருட்டு இறுதி
என்னில்
வாழ்க்கைத் துவங்கும்
இருட்டில் எல்லாம் இறக்கும்

இருட்டு இருமாப்பு
வெளிச்சமே இறை வார்ப்பு!

Yasir said...

சகோ அன்புடன் புஹாரியின் “ இருட்டு “ அருமையாக மிரட்டுகின்றது.....இருட்டு நிம்மதி----------- கவிகாக்காவின் ”வெளிச்சம்” பளிச் சென்று அடிக்கின்றது.... வெளிச்சம் நம்பிக்கை.....நல்ல கவிஞர்கள் நம் சமுதாயத்தில் இருப்பது கொண்டு மனம் மகிழ்ச்சி கொள்கிறது.....

கல்யாண பிசியுலும் கவிபுனைந்த கவிக்காக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதரர் யாசிர், ஜஸாக்கல்லாஹ் கைரன்!

பள்ளியிறுதி வகுப்புத் தேர்வில் பள்ளியின் முதல் மாணவராய்த் தெரிவு செய்யப்படும் அளவுக்கு உங்களிடம் அறிவு இருப்பதாலும், “புரிந்து கொள்ளும்” மனப்பக்குவம் இருப்பதாலும் உங்களால் எளிதாக உள்வாங்கிக் கொண்டு உடன்பட முடிகின்றது என்று நம்புகிறேன்.
//Br.Kalam....i don't think someone need more explanations........//
Br.Yasir., I don' think so. Because, someone talks through his hat.
There is light at the end of the tunnel.

KALAM SHAICK ABDUL KADER said...

கறுப்பும் வெள்ளையும்:
=====================

கருவறை இருட்டெனும் கறுப்பு;
பயணிக்கும் உயிரணுவோ வெள்ளை!
இருட்டும் வெள்ளையும் கலந்து
பிறப்பது குழந்தை எனும் கவிதை!

கரும்பலகையில்
வெள்ளைக் கட்டியால்
எழுதினாற்றானே
பழுதின்றிப் பாடம் கற்கலாம்!

கருமையையும் வெண்மையையும்
பிரித்துக் காட்டும் வைகறைப்
பொழுதில் எனக்கு ஓர் ஈர்ப்பு!

இருட்டு அறியாமையை
வெளிச்ச அறிவு வென்ற பின்னரும்
அறியாமையும் அறிவும் கலந்து
ஐயமும் தெளிவும்
ஐக்கியமாய் இருப்பதும் கண்கூடு!

கல்லறையெனும் இருட்டறைக்கு
அமல்கள் எனும் வெளிச்சம்
கொண்டு சேர்த்த பின்னரும்
மீண்டும் எழுப்பும் வரை
பயமெனும் இருளும்
நம்பிக்கை எனும் வெளிச்சமும்
கூடவே நிற்கும்!

அன்புடன் புகாரி said...

என் இருட்டு பேசுகிறது கவிதையைப் பாராட்டிய சகோக்களுக்கும் கவிதைக்குக் கவிதை யாத்துப் பெருமை நிறைத்த கவிஞர்களின் கவிமனத்திற்கும் என் நன்றிகள். கவிதைகளே பின்னூட்டமாய் வருவது இந்தக் கவிதைக்குப் புதிதல்ல.

அன்புடன் புகாரி

Unknown said...

//கல்லறையெனும் இருட்டறைக்கு
அமல்கள் எனும் வெளிச்சம்
கொண்டு சேர்த்த பின்னரும்
மீண்டும் எழுப்பும் வரை
பயமெனும் இருளும்
நம்பிக்கை எனும் வெளிச்சமும்
கூடவே நிற்கும்!//

Excellent....!

இப்னு அப்துல் ரஜாக் said...

To bro kalaam kathir,

உங்கள் கேள்விகளுக்கு தனியே பதில் (GMAIL)அனுப்பியுள்ளேன்.உங்கள் ஒரு கவிதையில் வரும் இது ஷிர்க் இல்லையா?இன்னும் கெட்டுப் போவேன்,என்ன பந்தயம் என சொல்வது போல் உள்ளது உங்கள் பதில்.இதுக்கு ஆதரவு தரும் சகோதர்களும் உண்மை நிலை உணரட்டும்.ஷிர்க்கான கவிதைகளில் இருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக.
//மெஞ்ஞானச் சூரியன்; மென்மை குணத்தாலே
அஞ்ஞானம் நீக்கும் அகமிய ஆற்றலால்
எஞ்ஞான்றும் வாப்பாவின் இன்னாசிப் பெற்றவர்ப்
பஞ்சான மெல்லுள்ளம் பார்.//



மேற்கண்ட வாசகம் ஷிர்க் இல்லையா.வாப்பா நாயகமா?????அஞ்ஞானம் போக்குவான்.

அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்.
இது போன்ற புலவர்களுக்கும்,ஷிர்க்கான கவிதைக்கும் ஆதரவு தருவோரே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.இதெல்லாம் உடன்பாடுதானா நண்பர்களே?

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்பு சகோதரர் ஹசன் புஹாரி அவர்களுக்கு,
உங்களின் என் பற்றிய விசாரிப்புக்கு நன்றி
என் தந்தை அப்துல் ரஜாக் அவர்கள்,என் பெயர் அப்துல் லத்தீப்.
பள்ளிப் படிப்பு அதிரை கா மு பள்ளி,(பத்து வரை).
11th and 12th at Boston matriculation school,in Chennai.
College at பச்சையப்பா .
தற்போது கலிபோர்னியா
--------------------------------

இப்னு அப்துல் ரஜாக் said...

கனடா வர ஆசை,முக்கிய இடங்கள் பற்றி சொல்லுங்களேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

குறிப்பிட்ட நபர் “கிளியனூர் இஸ்மத்” என்பார் மெஞ்ஞான சபையில் இருப்பதாக எனக்குக் குறிப்புத் தந்தார்கள்; அதுபோல் நிகிதிதா என்ற பெண்மணி நாட்டியமாடும் பெண் என்றும் குறிப்புத் தந்தார்கள்; என்னைத் தலைமைக் கவிஞனாய் அழைத்தவர் தந்த குறிப்புக்குட்பட்டு எழுதப்பட வேண்டும் என்ற வரம்பினால் எழுதப்பட்டவைகள். துருவி துருவி ஆராயும் உங்கள் போக்கு அல்லாஹ்வுக்கு விருப்பமானது என்றால் மன்னிப்புக் கேட்கவும் தயங்க மாட்டேன்.

Kavianban KALAM, Adirampattinam said...

//Excellent....! //

ஆசிரியர் அவர்களின் ஆசிர்வாதம் (துஆ)பெற்றேன். ஜஸாக்கல்லாஹ் கைரன்

அதிரை சித்திக் said...

இருட்டை துரத்த ,,வெளிச்சம் காட்டிய

வேகம் ...வேகமாக சென்று மறைந்தது

போன்றிருந்தது ..வெளிச்சத்திற்கும் இருளுக்கும்

இடையே கவியன்பன் கவி சமாதானம் செய்தது

போல் இருந்தது ..தொடரட்டும் கவி யுத்தம் ..

அன்புடன் புகாரி said...

அன்புச்சகோ சித்திக்,

உலகம் தட்டையென்று கூறிய காலத்தில் இல்லை அது உருண்டை என்று சொன்னவனைக் கொன்றுபோட்டுவிட்டார்கள். எதையும் புதிதாய்க் கேட்கும்போது அப்படித்தான் இருக்கும், பிறகு அவர்கள் மனதிலேயே ஆணிவேராய் ஓடத் துவங்கிவிடும்.

இந்தப் பிரபஞ்சம், பேரண்டவெளி(space) முழுவதும் இருட்டுதான். கருவறை தொடங்கி கருந்துளை வரை இருட்டுதான்.

இருட்டு தாய். ஐம்பூதங்களில் ஒன்றுதான் நெருப்பு. நான் ஐம்பூதங்கள் என்பதையே உடைத்தவன். நான்கு பூதங்களே என்று உரத்துச் சொன்னவன். நான்கு பூதங்களும் ஆகாயம் என்ற ஒற்றை பிரமாண்டத்தின் கூறுகள் என்று உறுதி செய்தவன்.

ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பின் தன்மையையும் எழுதி இருக்கிறேன். ஏதேனும் தீனி இருந்தால் மட்டுமே அது வாழும். தீனி தீர்ந்தால் அது இல்லாமல் போய்விடும். மேல் நோக்கிமட்டுமே தாவும், நம்மோடு இருக்க அதற்கு ஆகாது, ஆனால் நம்மைத் தின்று செரிக்க விரும்பும். இருள் அப்படியல்ல. நிலைபெற்றது.

உங்கள் ஆர்வம் கருதி, மேலும் ஒரு கவிதையை இங்கே இடுகிறேன்:

ஆகாயம்
===========

ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று
இதுதான் இறுதி என்பதும் இல்லை
ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று
அதுதான் பெரிது என்பதும் இல்லை

அணுவே சிறிது அண்டம் பெரிதென
அடித்துச் சொல்லத் தெளிவும் இல்லை
அறிவுப் பயண எல்லைக் குள்ளே
ஆயிரம் ஐயம் தீர்வோ இல்லை

சிறிதும் பெரிதும் ஒன்றின் உருவே
வானம் தானே மூலக் கருவே
அறியா நெஞ்சம் அறிந்தது கொஞ்சம்
அறியும் முன்னர் ஆறடி மிஞ்சும்

நீரும் நிலமும் காற்றும் நெருப்பும்
வானம் இட்ட தேவ பிச்சை
ஐம்பெரும் பூதம் என்பதும் தவறு
அனைத்தும் ஈன்ற வானம் வேறு

வானம் நிறைத்து விரிந்தே கிடக்கும்
வெற்றுப் பெருவெளி யாவும் இருட்டே
வானம் என்பதும் வையம் என்பதும்
அண்டம் என்பதும் எல்லாம் இருட்டே

விதையும் விதையின் உள்ளும் இருட்டு
வெளிச்சம் வாழும் வெளியும் இருட்டு
நிம்மதி கூட்டும் நித்திரை இருட்டு
ஆறுதல் சொல்லும் அமைதியும் இருட்டு

இயற்கை எல்லாம் இருட்டின் பிள்ளை
இருட்டே இன்றி வாழ்க்கை இல்லை
பிறப்பும் இருட்டு இறப்பும் இருட்டு
உயிர்கள் யாவும் இருட்டின் திரட்டு

கோள்கள் யாவும் இருட்டில் துகள்கள்
விண்மீன் கூட்டம் இருட்டின் கனிகள்
இருட்டில் இருந்தே எல்லாம் பிறப்பு
இருட்டே இன்றி எதுவும் இல்லை

நீண்டு விரிந்த மாபெரும் வெளியில்
பூமிப் பந்தும் ஒற்றைத் தூசு
ஒற்றைத் தூசின் உள்ளுக் குள்ளே
தூசுத் துகளாய் மனிதப் பிறப்பு

மனிதன் வாழும் ஆயுட் காலம்
இருட்டின் வயதில் பொருட்டே இல்லை
இருட்டே நிச்சயம் இருட்டே நிரந்தரம்
இருட்டே சத்தியம் இருட்டே பூரணம்

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அர அல பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி. கனடா என்றால் அது நீரும் மரங்களும் என்று சொல்லலாம். கோடை காலத்தில் வடதிசை செல்வதே எனக்கு விருப்பமானது. இயற்கையை நேசிப்பதும் அதில் கலப்பதும் எனக்குப் பிடித்த விசயம். மற்றபடி எல்லாம் அமெரிக்காவைப் போலத்தான். பெரிய மாற்றம் ஏதும் இல்லை. குளிர் இங்கே உண்டு இல்லை என்று ஒரு கை பார்த்துவிடும். அதற்கும் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன். கனடா வந்து இறங்கியதும் எழுதிய கவிதை அது.

அன்புடன் புகாரி

crown said...

கோள்கள் யாவும் இருட்டில் துகள்கள்
விண்மீன் கூட்டம் இருட்டின் கனிகள்
இருட்டில் இருந்தே எல்லாம் பிறப்பு
இருட்டே இன்றி எதுவும் இல்லை??????????????????................
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஆஹா! நல்ல கற்பனை!வார்த்தை வளம்.(கடைசிவரியைத்தவிர- இது என் கருத்து)
-------------------------------------------------------
இருட்டே நிச்சயம் இருட்டே நிரந்தரம்
இருட்டே சத்தியம் இருட்டே பூரணம் .
----------------------------------------------------------------
இதில் தான் மகாகவி சகோ.ஹசன் புகாரி தோற்கிறார் என நினைக்கிறேன்( இதுதான் என் இறுதியான முடிவும்)இருட்டு நிரந்தரம்????? .
நிரந்தம் என்பது படைத்த அல்லாஹ்வைத்தவிர ஏதும் இல்லை! அந்த அல்லாஹ் இருட்டா? அவன் பிரகாசமான ஒளி! இந்த வரிகளே கவிதையின் பொய்யழகுக்குச் சான்றும். இஸ்லாம் கொள்கைக்கு எதிரும். இறுதியானவன், நிலைத்திருப்பவன் அல்லாஹ்!!! அவன் படைத்த இருள் அல்ல.மேலும் கருவரை இருட்டு அது உண்மைதான் ஏன் வெளிச்சத்தை தேடி வர வேண்டும்? மண்ணறை இருட்டுதான் அதில் வெளிச்சம் வேண்டி தூஆ செய்யனும்? இறைவா !என் மண்ணறையை இருட்டாக ஆக்குவாயாக என தூ செய்வீர்களா? எழுத கருப்பும், இருளும் நன்றாகத்தான் இருக்கும். நடைமுறைக்கு சரியாகாது.(முன்பு திலகத்திற்க்கு உங்கள் விளக்கத்திற்கு நான் பதில் சொல்ல நேரம் இல்லை என்பதால் அதை ஏற்று சமாதானம் ஆகிவிட்டதாக நினைக்க வேண்டாம். திலகம் எல்லாம் நாங்களால் ஏற்று கொள்ளாத எமக்கு எழுந்து மறியாதை செய்ய முடியாது. எங்கள் தெளிவு வெளிச்சமாக இருக்கிறது! நாங்கள் இருட்டில் தேடுபவர்கள் அல்லர். இருட்டை விலக்கி வெளிச்சம் தேடுபவர்கள் . அல்லாஹ் மிகப்பெரியவன் ,அல்லாஹ் எல்லாருக்கும் துணை நிற்பானாக ,ஆமீன்)

அன்புடன் புகாரி said...

>>>அந்த அல்லாஹ் இருட்டா? அவன் பிரகாசமான ஒளி!<<<<

இதைக் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள் க்ரவ்ன்.

இருட்டு என்றால் என்ன?
வெளிச்சம் என்றால் என்ன?
எது எத்தனை அளவு இந்தப் பிரபஞ்சத்தில்?
எது எதற்கான மூலம்?
எது எப்படி உருவானது?
இறைவனை எப்படி உருவமானவனாக்கினீர்கள்?

அனைத்தும் எழுதுங்கள்.
அறிய ஆவலாய் இருக்கிறேன்.

என்னைப்பற்றி வசைபாடுவதை உங்களின் கருத்துச் செரிவான கருத்தாடல்களுக்குப் பிறகு வைத்துக்கொண்டால் உங்களை நான் பண்பாளனாகக் கருதுவேன். இப்போது அவசரக்குடுக்கை என்று அழைக்கலாமா என்று அறிவுடையோர்தான் கூறவேண்டும் :)

அன்புடன் புகாரி

crown said...

என்னைப்பற்றி வசைபாடுவதை உங்களின் கருத்துச் செரிவான கருத்தாடல்களுக்குப் பிறகு வைத்துக்கொண்டால் உங்களை நான் பண்பாளனாகக் கருதுவேன். இப்போது அவசரக்குடுக்கை என்று அழைக்கலாமா என்று அறிவுடையோர்தான் கூறவேண்டும் :)

அன்புடன் புகாரி
-----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். உடல் சுகவீனம் காரணமாக விளக்கமாக எழுத முடிய வில்லை மேலும் விளக்கமா எழுத நான்மார்கம் கற்றவர்களிடம் மேலும் தெளிவு பெற்று எழுதுகிறேன். நான் உங்களை வசைபாடுவதாக ஏன் கொள்கிறேர்கள்? அதற்குரிய அவசியம் இங்கே இல்லை! மேலும் இது கவிதையைப்பற்றிய அலசல் தனி நபர் விமர்சனமல்ல!மேலும் நான் முன்பு உங்களிடம் கேட்டதுற்கு நேரடியாக சொல்லாமால் கொக்கு வெண்ணை என்றெல்லாம் எழுதினீர்கள் நான் பார்த்தவரை( நான் பார்தவரை)கவிஞர்கள் என அழைத்து கொள்பவர்கள் சிறு விசயத்திற்க்குகூட அதிகம் விவாதிப்பவர்கள், அதிகம் எழுதுபவர்கள்.இங்கே என்ன்னை அவசரகுடுக்கை என்றாலும். அறிவில்லாதவன் என்றாலும் எனக்கு எந்த ஈகோவும் கிடையாது. அதே நேரம் ரோசம் உள்ளவந்தான் ஆனாலும் என்னை பிறர் குறைத்து மதிப்பிட்டால் நான் குறைந்து போவது இல்லை என்பது என் திடமான நம்பிக்கை. மேலும் விபரம் தெரியாததை தெரிந்து கொள்ள ஆசைப்படுபவன். எனக்கு நேரம் கிடைத்து, உடல் நிலை சுகம் பெற்றபின் பிறபதிலுக்கு முயற்சிக்கிறேன் ஒருவேளை நான் பதில் இடவில்லை என்றால் என்னை அர வேக்காடாக நினைத்தாலும் அழைத்தாலும் பரவாயில்லை.ஆனாலும் நிரந்தரம் இருட்டா? இறைவனான அல்லாஹுஆ?கழுவுறமீனுல நுழுவுற மீனா இருக்க மாட்டீஙனு நினைக்கிறேன்.( உங்களிடம் வாதத்திறன் இருக்கு என்பதை அறிந்து மகிழ்கிறேன், ஆனாலும் அது சமாளிப்பதாகவே தெரிகிறது சரியான பதிலில் விலகியே செல்கிறது என்பது உங்களைப்பற்றி என்னுடைய கனிப்பு இது என் தனிப்பட்ட கனிப்பு சாடல் அல்ல)

KALAM SHAICK ABDUL KADER said...

//வெளிச்சத்திற்கும் இருளுக்கும்

இடையே கவியன்பன் கவி சமாதானம் செய்தது

போல் இருந்தது .//
ஜஸாக்கல்லாஹ் கைரன் தமிழூற்று அதிரை சித்திக். உங்கட்கு முன்னர் மாண்புமிகு ஆசிரியர் அவர்களின் ஆசிர்வாதம் (துஆ)வாக அவர்களின் பாராட்டுரை “/Excellent....! // யை இன்று காலை கணினியைத் திறந்ததும் கண்டேன்; மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன். இதுகாறும் ஆசிரியர் அவர்கள் மூன்று முறைகள் மட்டுமே என் கவிதைக்குப் பாராட்டுத் தெரிவித்திருக்கின்றார்கள்
1) “உங்கட்கு விருத்தம் நன்றாக வனைய முடிகிறது”
2) “ பயணங்கள்- கவிதை சிறந்த கவிதை; அழகிய ஓசை நயம்
3) “Excellent..!" இன்று வெளியிட்டது

அதிகம் ஆசிரியர் அவர்களின் கூர்மையான பார்வையால் என் ஆக்கங்களில் ஒற்றுப்பிழைகள் மற்றும் தளை தட்டல்- இலக்கணப் பிழைகள் போன்றவைகள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டும், உடன் மடலில் என்பால் உள்ள அன்பாலும், தூய தமிழில் எழுதவும் பேசவும் வேண்டும் என்ற பேரவாவினாலும் திருத்தங்கள் செய்யும் பணியிலும் அக்கறை காட்டுவதும் ஒரு வகையான பாராட்டு என்றே கருதிக் கொள்கிறேன்.
ஆனால், நீண்ட நாட்களுக்குப் பின்னர் என் “புதுக்கவிதை”க்கு அவர்களின் பாராட்டுக் கிடைத்தது நான் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று! இருப்பினும், அவர்களும் மற்றுமுள்ள என் தமிழாசான்களான இலங்கை காப்பியக்கோ ஜின்னா ஷரிஃபுதீன், “சந்த வசந்த” இணையக் குழுமத்தில் உள்ளத் தமிழறிஞர்களின் ஆணைக்கிணங்கி மரபுப்பாக்களைப் பற்றிப் பிடிப்பேன்.
புதுக் கவிதை வேந்தர்கள்: கனடா கவிஞர் புகாரி மற்றும் கவிவேந்தர் சபீர் ஆகியோர் தொடர்ச்சியாக எழுதிய பின்னர் அடியேனும் எழுதாவிடில் உங்களிடமிருந்து அடுத்து ஓர் அவாவுடன் வினாவும் வரும் “கவியன்பன் எங்கே?” என்று! அதனாற்றான், இடையில் புகுந்த அடியேன் இருளுக்கும் ஒளிக்கும் இடைபட்ட நிலைபாட்டை வைத்தே என் பாட்டை வனைந்தேன்!
இதில் “யுத்தம்” என்ற சொல்லை எடுத்து விடுக. அக்கவிவேந்தர்கட்கு முன்னால் அடியேன் ஒரு கவியன்பன் (கவிதையை நேசிப்பவன்) மட்டுமே.
அவர்களிருவருடனும் பேசவும், பழகவும், நட்பு கொள்ளவும் எனக்குப் பேறு கிட்டியது அல்லாஹ் அருளிய அருட்கொடை!அதிலும், கனடா கவிஞர் புகாரி அவர்களுடன் 1981ல் மும்பையில் ஒன்றாக இருந்த தருணம் முதற்கொண்டும் இன்றுவரை அவர்களின் “அன்புடன்” குழுமத்தில் உறுப்பினர் என்பது வரை நெருக்கம் அதிகம் என்பதால் அவர்களின் எண்ணம், எழுத்து யாவும் யான் அறிவேன். கவிவேந்தர் சபீர் அவர்கள் மிகக்குறுகிய காலத்தில் பழகி என் உள்ளத்தில் அமர்ந்து விட்ட குழந்தை எனும் கவிதை! இன்ஷா அல்லாஹ் என்றாவது ஒரு நாள் அவர்களைப் பாடுபொருளாக வைத்துப் “பிள்ளைத் தமிழ்” பாடுவேன்!

அன்புடன் புகாரி said...

அன்புச்சகோ க்ரவுன்,

என் கேள்விகள் எதற்குமே பதில் வரவில்லையே உங்களிடமிருந்து. உங்கள் உடல்நலம் சரியானதும் பதில் தாருங்கள், அவசரமில்லை. நம் மடல்கள் ஆக்கப்பூர்வமான சிந்தனையுடையதாய் புரிந்துணர்வை வளர்ப்பதாய் இருக்க வேண்டும் என்று நான் விழைகிறேன். மற்ற விசயங்களுக்கு என்னிடம் நேரம் இல்லை, மன்னிக்கவும்.

அன்புடன் புகாரி

அதிரை சித்திக் said...

சகோ அன்புள்ளத்துடன் கருத்தை பரிமாறிகொள்வோம்

அப்படியே தொடர் ..19 ..சந்திப்போமே ..

crown said...

Asan Buhari சொன்னது…

>>>அந்த அல்லாஹ் இருட்டா? அவன் பிரகாசமான ஒளி!<<<<

இதைக் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள் க்ரவ்ன்.
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் பின் வருபவைகளில் ஜோதி என்பதின் பொருள் நீங்கள் புரிந்து வைத்துள்ளது என்ன? மேலும் நான் அறிவியலார் கிடையாது ஒளியின் அளவு . நீளம் அளந்து சொல்ல அதுபோல் இருளின் ஆயுள் , நீளம், சுற்றளவு, கொள்ளளவு எனக்கு வேண்டாம்.
அல்லாஹ் திருமறையிலே "நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் ஜோதியை தமது வாய்களால் ஊதி அணைக்கலாம் என்று நினைக்கின்றனர் ஆனால் அல்லாஹ் தனது ஜோதியை முழுமையாக்கியே தீருவான்"(அல் குரான் )

அன்புடன் புகாரி said...

அன்பினிய க்ரவ்ன்,

அன்பும் அமைதியும் அருளும் நிறையட்டும்!

>>>அந்த அல்லாஹ் இருட்டா? அவன் பிரகாசமான ஒளி!<<<<

>>>>>பின் வருபவைகளில் ஜோதி என்பதின் பொருள் நீங்கள் புரிந்து வைத்துள்ளது என்ன? அல்லாஹ் திருமறையிலே "நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் ஜோதியை தமது வாய்களால் ஊதி அணைக்கலாம் என்று நினைக்கின்றனர் ஆனால் அல்லாஹ் தனது ஜோதியை முழுமையாக்கியே தீருவான்"(அல் குரான் )<<<<<<

இங்கே ஜோதி என்பது கவி நயத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியான நயங்களைத்தான் கவிதைக்குப் பொய்யழகு என்று சொல்வார்கள்.

இறைவனின் ஜோதி என்பதை ஏதோ எரியும் ஒரு நெருப்பு என்று நினைத்துவிட்டீர்கள். இறைவன் வெறுமனே எரியும் எந்த நெருப்பும் அல்ல. அவனுக்கு உருவமே கிடையாது. நெருப்புக்கு உருவம் உண்டு.

இந்த வார செய்திகளைப் பார்த்தீர்களென்றால், கமல ஹாசன் பேஸ்புக் ஜோதியில் கலந்தார் என்று இருக்கும். கமல் ஹாசனும் கடவுளும் ஒன்றா அல்லது பேஸ்புக்கும் இறைவனும் ஒன்றா என்று கேட்டால் எப்படி இருக்கும்?

ஜோதி என்பதற்கான பொருளே இங்கு வேறு. இறைவன் என்கிற இருப்பு, இறைவன் என்கிற ஆளுமை, இறைவன் என்கிற நிஜம் என்று வேண்டுமானால் கூற முயலலாம். அதை சரியாக எடுத்துக்கொள்வதே இங்கே முக்கியம்.

ஒன்றுக்கு உருவகமாகவோ உவமையாகவோ கூறுவதை அதுவாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்படி எடுத்துக்கொண்டால் மொழி உங்களை நிறையவே ஏமாற்றிவிடும்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றால் காதில் நிஜமாகவே தேன் பாயுமா?

இன்று மனம் உருகித் தொழுதேன் என்றால் மனம் வெண்ணை என்றும் அது அனல் பட்டு உருகுகிறது என்றும் மனதை ஒரு திடப்பொருளாக எடுத்துக்கொள்ள முடியுமா?

>>>>>>மேலும் நான் அறிவியலார் கிடையாது ஒளியின் அளவு . நீளம் அளந்து சொல்ல அதுபோல் இருளின் ஆயுள் , நீளம், சுற்றளவு, கொள்ளளவு எனக்கு வேண்டாம்.<<<<<<

நான் கேட்டவை எளிமையான கேள்விகள்.

இருட்டு என்றால் என்ன?
வெளிச்சம் என்றால் என்ன?
எது எத்தனை அளவு இந்தப் பிரபஞ்சத்தில்?
எது எதற்கான மூலம்?
எது எப்படி உருவானது?
இறைவனை எப்படி உருவமானவனாக்கினீர்கள்?

இருட்டு அதிகம் வெளிச்சம் மிகக்குறைவு அந்த அளவு போதுமல்லவா?
இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சென்றால் இருட்டு சுமார் 99.99 விழுக்காடு என்றால் அதில் வந்து போகும் வெளிச்சம் .01 விகிதம் கூட இருக்காது. இந்த உண்மையை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிறகு இருட்டு பற்றிய உண்மைகள் விளங்கும்.

மற்ற கேள்விகளுக்கும் பதிலை யோசித்துப் பாருங்கள். தானே யாவும் புரியக்கூடும். வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி

Unknown said...

الله نور السماوات والارض (அல்லாஹு நூருஸ் சமாவாத்தி வல் அர்ழி) - "வானங்கள், பூமியின் ஒளியானவன் அல்லாஹ்" என்ற மறை வாக்கைக் கொண்டு, ஒளிக்கு நிலைத்த தன்மையையும்,ظلمات எனும் இருள்களை 'அறியாமை, இறைமறுப்பு' முதலான negative aspectகளுக்கு இறைவன் உவமைகளாக்குவதையும் ஏற்றுக்கொண்டு, வெளிச்சத்துக்கு முன்னுரிமை கொடுப்போம்! அதனையே நாடி, ஆண்டவனிடம் வேண்டுவோம்!

crown said...

அதிரை அஹ்மது சொன்னது…

الله نور السماوات والارض (அல்லாஹு நூருஸ் சமாவாத்தி வல் அர்ழி) - "வானங்கள், பூமியின் ஒளியானவன் அல்லாஹ்" என்ற மறை வாக்கைக் கொண்டு, ஒளிக்கு நிலைத்த தன்மையையும்,ظلمات எனும் இருள்களை 'அறியாமை, இறைமறுப்பு' முதலான negative aspectகளுக்கு இறைவன் உவமைகளாக்குவதையும் ஏற்றுக்கொண்டு, வெளிச்சத்துக்கு முன்னுரிமை கொடுப்போம்! அதனையே நாடி, ஆண்டவனிடம் வேண்டுவோம்!
---------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அப்பாடா! நல்லா மூச்ச இழுது விட்டுக்கிறேன். சாச்சா உடையான் சச்சரவுக்கு அஞ்சான்.(என் கேள்விகளுக்கு என்ன பதில்? கேட்ட கேள்வியையே சாமர்த்தியமாக திருப்பி விட்ட கவி சகோதரரை கேட்கிறேன்).

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோதரர் ஹசன் புஹாரி அவர்களே,
"இறைவனுக்கு உருவம் உண்டு" இதைத்தான் குரானும்,ஹதீசும் கூறுகிறது."இறைவனுக்கு உருவம் இல்லை"என்பது தவறான வாதம்.

அன்புடன் புகாரி said...

>>>>>அதிரை அஹ்மது சொன்னது…
الله نور السماوات والارض (அல்லாஹு நூருஸ் சமாவாத்தி வல் அர்ழி) - "வானங்கள், பூமியின் ஒளியானவன் அல்லாஹ்" என்ற மறை வாக்கைக் கொண்டு, ஒளிக்கு நிலைத்த தன்மையையும்,ظلمات எனும் இருள்களை 'அறியாமை, இறைமறுப்பு' முதலான negative aspectகளுக்கு இறைவன் உவமைகளாக்குவதையும் ஏற்றுக்கொண்டு, வெளிச்சத்துக்கு முன்னுரிமை கொடுப்போம்! அதனையே நாடி, ஆண்டவனிடம் வேண்டுவோம்!<<<<<

அன்பிற்கினிய மூத்த சகோதரர் கவிஞர் எழுத்தாளர் ஆய்வாளர் அஹ்மது அவர்களுக்கு, உங்கள் கருத்துக்கள் வந்ததுகுறித்து மிகுந்த மகிழ்வடைகிறேன். நன்றி.

இருள் ஒளி பற்றிய உலக வழக்கைச் சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு அதில் மாற்றுக்கருத்தே இல்லை. அப்படியே ஏற்கிறேன்.

இருள் என்பதை அறியாமை, இறைமறுப்பு, கயமை, கள்ளம், சைத்தானியம் என்றும் வெளிச்சம் என்பதை இவற்றை விரட்டுவதற்காகத் தொடுக்கப்படும் சக்தி என்றும்தான் நாம் காலங்காலமாக ***உருவகப்படுத்திக்கொண்டு*** வருகிறோம். அதன் அடிப்படையில் அமைந்தவைதான் அத்தனையும் என்பதையும் நான் அறிவேன், ஏற்கிறேன்.

நான் கொண்டு நிறுத்தும் இருட்டு என்பது எல்லையற்று விரிந்த ஆதியந்தமான இறைநிலை. அது அறியாமை, இறைமறுப்பு, கயமை, கள்ளம் போன்றவையல்ல தாயாய் நிறைந்த இறைமை.

அது தன்னுள் ஒளியையும் கொண்டதாக இருக்கிறது. வாயுவையும் கொண்டதாக இருக்கிறது. நீரையும் கொண்டதாக இருக்கிறது. நிலத்தையும் கொண்டதாக இருக்கிறது. முற்று முழுதாகப் பூரணமாய் நிறைந்திருக்கிறது.

அப்படி முழுமையானதாக இருக்கின்ற ஒன்று உவமைகளால் சொல்லப்பட்ட இருள்களுக்கு முற்றிலும் மாறுபட்டது.

ஒளியைத் தருவது நெருப்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருட்டைத் தருவது எது? இருட்டுதான் இருப்பு என்பதால் அங்கே யோசிக்க வழியில்லை. அந்த நிரந்தர இருப்புக்குள் இருப்பவைதான் மற்ற அனைத்தும்.

சூரியன் என்பது எரியும் வாயு, நெருப்பு. அது அணைந்துபோகக் கூடியது. நட்சத்திரங்கள் யாவும் எரியும் நெருப்புக் கோளங்கள்தாம். யாவும் அணையக்கூடியவையே. பால்வீதி தொட்டு பல விண்மீன் வீதிகள் யாவும் எரியும் நெருப்பு மாத்திரமே. அவை யாவும் இருட்டு என்ற நிரந்தர இருப்புக்குள் இருப்பவைதானே?

எரியும் ஒரு மெழுகுவர்த்தி அணைந்துபோகக்கூடிய சிறிய நெருப்பு என்றால், ஒரு நட்சத்திரமும் அணைந்துபோகக்கூடிய ஒரு பெரிய நெருப்பு அவ்வளவுதான்.

ஆகவே நான் கூறும் இருட்டும், தீய பண்புகளை சுட்டிக்காட்டப் பயன்படும் இருளும் முற்றிலும் வேறானவை.

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

>>>>> "இறைவனுக்கு உருவம் உண்டு" இதைத்தான் குரானும்,ஹதீசும் கூறுகின்றன. "இறைவனுக்கு உருவம் இல்லை" என்பது தவறான வாதம்.<<<<<



அன்பிற்கினிய அர அல,

இதை விளக்கமாகக் கூறுங்கள். நான் அறியத் துடிக்கும் விசயங்களில் இதுவும் முக்கியமான ஒன்று. இதுபற்றி ஏதேனும் கட்டுரைகள் உள்ளனவா. ஆய்வறிக்கைகள் இருக்கின்றனவா. வாசிக்கக் காத்திருக்கிறேன். என் முன் நன்றி உங்களுக்கு.

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

Dark Enery, Dark Matter - What Is Dark Energy?

http://science.nasa.gov/astrophysics/focus-areas/what-is-dark-energy/

It turns out that roughly 70% of the Universe is dark energy. Dark matter makes up about 25%. The rest - everything on Earth, everything ever observed with all of our instruments, all normal matter - adds up to less than 5% of the Universe.

அதிரை சித்திக் said...

புகாரி அவர்களின் கண்ணோட்டம் (பார்வை )

எனக்கு புரிகிறது ..குர் ஆனில் கூறப்படும் விளக்கமளிக்கப்படும்

வெளிச்சம் ,சரியானதே மனிதனுக்கு உள்ளத்திலும் இல்லத்திலும்

வெளிச்சம் தேவை ..வெளிச்சம்தான் சிறந்தது ..ஆனால்

கவிஞன் தான் எடுத்த கருவிற்கு பலம் சேர்க்க எது வரையிலும் செல்வான்

என்பதை புரிந்து கொள்ளுங்கள் அண்டவெளியை தாண்டி அதன் வீரியத்தை

இனம் காட்டி எழுதுகிறார் என்றால் தான் வடித்த கவிக்கு வலு சேர்கதான்

எனவே கவியின் தாக்கம் தற்போது எப்படி உள்ளது என்பதை ஆசிரியர் அறிந்திட

வேண்டுகிறேன்

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சித்திக்,

>>>>>உள்ளத்தில் வெளிச்சம் தேவை<<<< என்ற உங்கள் கருத்தை கொஞ்சம் விளக்கி எழுதினால், உங்கள் மடல் மேலும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன். நன்றி.

>>>>>குர் ஆனில் கூறப்படும் விளக்கமளிக்கப்படும் வெளிச்சம் ,சரியானதே<<<<<

இதில் எனக்கு எந்த வகையான மாற்றுக் கருத்தும் கிடையாது. என் கவிதை இதைப்பற்றிப் பேசவே இல்லை.

>>>>>கவிஞன் தான் எடுத்த கருவிற்கு பலம் சேர்க்க எது வரையிலும் செல்வான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் அண்டவெளியை தாண்டி அதன் வீரியத்தை இனம் காட்டி எழுதுகிறார் என்றால் தான் வடித்த கவிக்கு வலு சேர்கத்தான்<<<<<<

கண்ட உண்மையை அழுத்தமாக எடுத்து வைப்பது கவிஞனின் குணம்தான். எல்லோரும் அடிமை வாழ்வே இனி நமக்கு என்று சோர்ந்து கிடந்தபோது சுதந்திரம் பற்றி உண்மை கண்டு எழுதிய பாரதி அழுத்தமாகத்தானே எழுதினான்? தவறில்லையே?

உலகம் உருண்டை என்று முதன் முதலில் சொன்னவர் அழுத்தமாகத்தானே சொன்னார். தவறில்லையே?

சீர்திருத்தவாதிகளெல்லாம் அப்படியானவர்களாகத்தானே பிறந்திருக்கிறார்கள். தவறில்லையே?

நான் எந்த சீர்திருத்தக் கவிதையையும் எழுதவில்லை. கண்களெலெல்லாம் வெளிச்சத்தின் அடிமையாய்க் கிடக்கும்போது, மௌனமாய் அழுத்தமாய் தாயாய் அப்படியே நிரந்தர இருப்பாய் இருக்கும் இருட்டுக்குக் கொஞ்சம் ***வெளிச்சம்**** பாய்ச்சினேன். அவ்வளவுதான்.

அன்புடன் புகாரி

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு பின்னர் ஏன் இஸ்லாமியர் இறைவனுக்கு உருவம் இல்லை என்கின்றனர் என்பதைக் குறித்து காண்போம்.

"அர்ஷின்(இருக்கை) மீது அவன்(அல்லாஹ்) வீற்றிருக்கிறான்."(திருக்குர்ஆன் 7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4)

"வானவர்கள் அணியணியாய் நிற்க உமது இறைவன் வருவான்."(திருக்குர்ஆன் 89:22)

மேற்கண்ட வசனங்களிலிருந்து தெளிவாக இறைவனுக்கு உருவம் உண்டு என்பதை நாம் அறியலாம்.

இது தவிர, அல்லாஹ்வுக்கு முகம் உண்டு. விரல்களும், கைகளும் கால்களும் உண்டு. அர்ஷின் மீது அமர்தல், முதல் வானத்திற்கு இறங்கி வருதல் போன்ற இறைப்பண்புகளை விவரிக்கும் ஏராளமான நபிமொழிகள் காணக்கிடைக்கின்றன. அவற்றை எல்லாம் உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ளவேண்டுமே தவிர அதற்கு உவமைகள் கூறக்கூடாது. உதாரணங்கள் கூறக்கூடாது. எவருக்கும் நிகரில்லாத எப்பொருளைப் போலும் இல்லாமலும் இருக்கின்றான். அவன் தன்மைகளை உருவகப்படுத்தியோ, கூட்டியோ, குறைத்தோ, மாற்றியோ, மனித கற்பனைக்கு ஏற்ப பொருள் கொள்ளக்கூடாது. மனித கற்பனைக்கு அப்பாற்பட்டவனாக ஏக இறைவன் இருக்கிறான்.

பின்னர் ஏன் இஸ்லாமியர்கள் இறைவனுக்கு உருவமில்லை எனக் கூறுகின்றனர்? என்ற விஷயத்திற்கு வருவோம்.

பார்வைகள் அவனை அடைய முடியாது - குர்ஆன் (6:103)

இங்கு உருவமில்லை எனக் கூறுவதன் கருத்து அந்த உருவம் எப்படி இருக்கும் என்பதை நம்முடைய சிற்றறிவால் ஊகித்து அறிந்து கொள்ள இயலாது; அதாவது படைத்தவனைக் குறித்து அறியும் சக்தி படைப்பினத்துக்கு இல்லை என்பதேயாகும்.

‘பூமியாகிய அதன் மேலுள்ள யாவும் அழிந்து போகக்கூடியதாகும். கண்ணியமும், சங்கையும் உடைய உமது இரட்சகனின் (சங்கையான) முக(ம் மட்டு)மே (அழியாது) நிலைத்திருக்கும்’ என்று குர்ஆன் (55 : 26, 27) கூறுகிறது. (இன்னும் பார்க்க 2:15, 2:272 13:22, 30:38, 39, 76:9, 92:20, 6:52, 18:28, 28:88)

இதனை விளங்குவதற்குப் படைத்தவன், படைப்பினம் என்ற இரு வார்த்தைகளின் முழு சக்தியையும் புரிந்து கொண்டால் விளங்கிக் கொள்ள முடியும்.

ஒரு மனித ரோபோவை எடுத்துக் கொள்வோம். அதனை உருவாக்கியவர் அது எப்படி செயல்பட வேண்டும் என அவர் வடிவமைத்தாரோ அதனை விடுத்து அதற்கு உபரியாக அதனால் ஒன்றும் செய்ய இயலாது.

தெளிவாக கூற வேண்டுமெனில் படைத்தவனை மிஞ்சி படைப்பினத்திற்கு ஒன்றும் செய்ய இயலாது. இந்த உலகமெலாம் கண்காணிக்கும் சக்தியுள்ள இறைவனின் ஞானத்தில் மிகச் சிறிய அளவே மனிதன் பெற்றுள்ளான். நமக்கு தரப்பட்ட இச்சிறிய அறிவினைக் கொண்டு நம்மைப் படைத்தவன் எப்படியிருப்பான் என ஒரு தீர்மானத்திற்கு வருவது இயலாத காரியம்.

இனி ஒவ்வொருவரும் அதற்கு முயற்சிப்போமானால் அவரவருக்கு தரப்பட்டுள்ள சிந்தனா சக்திக்கு உட்பட்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வடிவமான இறைவன் கிடைப்பான். இது உலகில் குழப்பமும் கலகமும் பிரிவினையும் தோன்றுவதற்கும் மனிதர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதற்கும் வழி பிறப்பித்து விடும்.

எனவே தான் இஸ்லாமியர்கள் இறைவனுக்கு உருவம் கற்பிக்கும் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றனர். உருவம் உண்டு எனக்கூறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இறைவனுக்கு உருவம் கொடுத்து பல இறைவனை உருவாக்கும் அபத்தத்தைச் செய்வதை விட ஆரம்பத்திலேயே உருவமில்லா(உருவகப்படுத்த முடியா) இறைவன் எனக் கூறிவிடுவது சிறந்ததல்லவா?

அல்லாஹ் மிக அறிந்தவன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

this article is taken from

http://www.satyamargam.com/146

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புள்ள சகோதர் ஹசன் புஹாரி அவர்களே,மேற்கண்ட செய்தி சத்திய மார்க்கம் தளம் மூலம் பெறப்பட்டது.இது போதும் என எண்ணுகிறேன்,இன்னும் தேவைஎன்றால் இன்ஷா அல்லாஹ்,இது சம்பந்தமான மேலும் கட்டுரைகள்,ஆடியோ-வீடியோ உரைகள் உள்ளன.அவற்றின் லிங்குகளை தேடி எடுத்து தருகிறேன்.மேலும்,இது சம்பந்தமாக எல்லாம் வல்ல அல்லாஹ்,நமக்கு மேலும் அறிவைத் தருவானாக,ஆமீன்.

அதிரை சித்திக் said...

அன்பு கவி புகாரி அவர்களுக்கு ...

உள்ளத்தில் வெளிச்சம் ..விளக்கம் இதோ ..

மனிதர்கள் செய்யும் செயலுக்கு காரணியாக உறுப்புகள்

உள்ளன கண் செயல் படுவதை பார்வை என்கிறோம்

அதே போன்று காது கேட்பது வாய் பேசுவது சுவைப்பது

அதே சமையம் நான்உள்ளதால் நினைத்தேன் .,நான் உள்ளத்தில்

வருடக்கணக்கில் போட்டு வைத்திருந்ததை மறந்து விட்டேன்

என்பதை அன்றாட பேச்சு வழக்கில் உள்ளது ..உள்ளம் என்று

ஒரு உறுப்பு உண்டா ..? இல்லை தானே அதற்கு வெளிச்சம்

என்பது விளக்கம்அடைவது ..அது கவிதையாக பற்றி இருக்கலாம்

இஸ்லாத்தை பற்றியதாக இருக்கலாம் உள்ளத்தின்

வெளிச்சம் என்பது தெளிவு பெற்ற சிந்தை என்று வைத்துக் கொள்ளலாம் ..

இது என் சிந்தைக்கு எட்டிய விளக்கம் (வெளிச்சம் )

Shameed said...

அர அல சொன்னது…
//இங்கு உருவமில்லை எனக் கூறுவதன் கருத்து அந்த உருவம் எப்படி இருக்கும் என்பதை நம்முடைய சிற்றறிவால் ஊகித்து அறிந்து கொள்ள இயலாது; அதாவது படைத்தவனைக் குறித்து அறியும் சக்தி படைப்பினத்துக்கு இல்லை என்பதேயாகும்.//

சவுதி அரசால் நடத்தப்படும் தவா அழைப்பு மையத்தில் நடந்த பயானிலும் தாங்கள் கூறியதுபோல் ஒரு பாயான் சொன்னார்கள் மேலும் இறைவனுக்கு இரண்டு கைகள் உண்டு அது இரண்டும் வளதுகைகலே என்றும் சொன்னார்கள் அதை நாம் அறியும் சக்தி "அதாவது படைத்தவனைக் குறித்து அறியும் சக்தி படைப்பினத்துக்கு இல்லை" என்றும் அங்கு தெளிவு படுத்தினார்கள்

அன்புடன் புகாரி said...

>>>>உள்ளத்தின் வெளிச்சம் என்பது தெளிவு பெற்ற சிந்தை என்று வைத்துக் கொள்ளலாம்<<<<

அன்பினிய நண்பர் சித்திக் அவர்களுக்கு,

ஆகவே இங்கே உங்கள் கூற்றுப்படியும், மூத்தசகோ அஹ்மது அவர்கள் வெளியிட்ட குர்-ஆன் வரிகள் மற்றும் விளக்கம் ஆகியவையாலும் கூறப்படுபவை:

வெளிச்சம் என்பது வெறுமனே வெளிச்சம் அல்ல. அறிவு, தெளிவு, தீர்க்கம், நேர்வழி மனமாற்றம் என்று பல.

இருள் என்பது வெறுமனே இருட்டு அல்ல. மடமை, கயமை, துரோகம், துக்கம் என்று பல.

இனி ஒருமுறை என் ”ஆகாயம்” கவிதையை எவரும் வாசித்தால், சரியான பொருளையே புரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன். மாறாக நினைப்போரிடம் போரிட இனியும் வேறு விசயம் இதுபற்றி என்னிடம் இல்லை. என் கருத்துக்களைப் பதிவு செய்து அமைகிறேன்.

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பின் அர அல,

இணையத்தில் நானும் இதுபற்றி கொஞ்சம் வாசித்திருக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்ப்பது, மூத்தசகோ அஹ்மது அவர்கள் எழுதும் கவிதை ஆய்வுத் தொடர்போல ஏதேனும் உண்டா எவரேனும் செய்துள்ளனரா என்று அறிவதே. ஏனேனில் இதில் எனக்கு நிறைய ஐப்பாடுகள் உள்ளன. ஒரு தொடர் எனில் பலரோடும் உரையாடி தெளிவு பெறலாம் என்று நினைக்கிறேன்.

>>>>அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு பின்னர் ஏன் இஸ்லாமியர் இறைவனுக்கு உருவம் இல்லை என்கின்றனர் என்பதைக் குறித்து காண்போம்.<<<<

இப்படியான இரு நிலைப்பாடு நான் அறிந்து இஸ்லாம் மார்க்கத்தில் இல்லை. சரியான புரிதல் இல்லாமையே இரு நிலைப்பாட்டிற்கான காரணமாக இருக்க முடியும். ஆகவே நம் புரிதலில் எங்கோ தவறிருக்க வேண்டும் என்று அழுத்தமாக நம்புகிறேன்.

ஒரு சிலர் உருவம் இல்லை என்றும் வேறு சிலர் உருவம் உண்டு என்றும் மேலும் சில உருவம் உண்டு ஆனால் இல்லை என்று கொள்ளவேண்டும் என்றுமாய்க் குழப்புகின்றன. தெளிவினை நோக்கிய ஆய்வுக் கட்டுரைகளையே நான் தேடுகிறேன். இந்த் மூன்று பக்கக் கருத்துக்களையும் அலசியபின் வரும் தெளிவினையே எதிர்பார்க்கிறேன்.

*****ஒருவனின் வயிறு கவிதையால் நிறைந்திருப்பதைவிட, சீழ், சலத்தால் நிரம்பியிருப்பது மேல்***** என்று நபிகள் கூறியதாக அற்கிறோம்.

இதை எப்படிப் பொருள் கொள்வது?

--கவிதை என்பது ஒருவகை உணவு
--அது ஒருவனின் வயிற்றில் நிரம்பக்கூடியது
--ஒருவனின் வயிறு சீல் சலத்தால் நிரம்பி இருக்கலாம், அதனால் கேடு ஒன்றும் இல்லை

இப்படியெல்லாம் பொருள் கொண்டால் எப்படி இருக்கும்?

குர்-ஆனும் சரி ஹதீசும் சரி ஒருவகையான கவிதை நடையிலேயே பல உவமைகளையும் உருவகங்களையும் கொண்டதாக இருப்பதையே காண்கிறோம். அவற்றுக்கு நேரடிப் பொருள் கொள்வதைவிட அவை குறிப்பால் உணர்த்துவதைச் சரியாகப் பிடித்துக்கொண்டால், தெளிவு தன்னால் வந்துவிடும். பின் உருவம் உண்டா இல்லையா என்பதில் ஒரே ஒரு கருத்து வந்துவிடும் என்று நம்புகின்றேன்.

எந்த அறிஞர் அந்தக் காரியத்தைச் சிறப்பாகச் செய்வார் என்று காத்திருக்கிறேன்.

இந்த வானவர்கள், சைத்தான் போன்ற இவர்களுக்கெல்லாம் உருவம் உண்டு என்ற குறிப்புகளையும் அறிய விழைகிறேன்.

எங்கும் நிறைந்த இறைவன் என்று சொன்னால், அப்படியான இறைவனை ஓர் உருவத்துக்குள் கொண்டுவருவது எப்படி சாத்தியமாகும் என்று எனக்கு எவராவது விளக்கமாகக் கூறவேண்டும். பின் பிடரி நரம்புக்கும் அருகாமையில் இருக்கிறான் என்றால் எனக்குப் புரிவதில் தகராறு உயர்கிறது. தெளிவு பெற்றவர்கள் தெளிவாக எழுதினால் புரிந்துகொள்வேன்.

பார்வையால் அடைய முடியாதவன் என்று சொல்லும்போது எண்ணத்தால் உள்ளத்தால் மட்டுமே அடைய முடிந்தவன் என்று கொள்ள வேண்டி இருக்கிறது. என்றால் அங்கே Physical இருப்பு கேள்விக்குறியல்லவா? Logical அல்லது அருவ இருப்பொன்றே ஆகக்கூடியது என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

எனக்கு அடிப்படியிலேயெ ஒரு கேள்வியுண்டு. இறைவனை ஏன் ஆண்பாலாக மட்டுமே அவன் இவன் என்று சுட்டுகிறார்கள்? இதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா?

>>>>இறைவனுக்கு இரண்டு கைகள். அவை இரண்டும் வலதுகைகளே<<<<

இதன் வசனத்தையோ ஹதீசையோ எவரேனும் இங்கே இடமுடியுமா?

என் நம்பிக்கை உருவமற்றவன் இறைவன் என்பதில்தான் அழுத்தமாக நிற்கிறது. பார்க்கலாம் இங்கு வரும் தகவல்களைக் கொண்டு, மேலும்!

அன்புடன் புகாரி

Unknown said...

கவிஞர் புகாரி அவர்களே ,அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்களின் இருட்டை ப்பற்றிய பார்வை புதுமையானது ,இருந்தாலும்எனுக்குள் சில கேள்விகள் இருளை பற்றி நீங்கள் புரிந்திருக்கும் விதம் பற்றி
முடிந்தால் விளக்கம் கொடுங்கள் .


இந்த பூமியில் வாழும் நமக்கு வெளிச்சம் என்று ஒன்று இல்ல விட்டால் இருள் எப்படி வரும் ?


சூரிய குடும்பமும் ,நட்சத்திர கிரகங்களும் வெளிச்சத்தின் அடிபடையிலேயே உள்ளதாகும் அப்படி இருக்கையில் இந்த சூரிய ,நட்சத்திர
குடும்பம்களுக்கு ஒளி என்ற வெளிச்சம் இல்லாதிருந்தால் நாம் எப்படி இந்த பிரபஞ்சத்தை அடையாளம் கண்டிருப்போம் ?
அந்த வெளிச்சங்கள் இல்லாமல் எப்படி நாம் வானத்தை பார்க்க முடியும் ?


பகலில் சூரிய ஒளியில் வானத்தை பார்க்கிறோம் ,இரவிலும் நிலா .நட்சத்திரம் ஆகியவற்றின் ஒளியின் மூலம் அடையாளம் காண்கிறோம் ஒரு வேளை இந்த வெளிச்சங்கள் இல்லையென்றால் நம்மால் வானத்தை எப்படி பார்க்க முடியும் ?

அன்புடன் புகாரி said...

இனிய சகோ அப்துல் ரகுமான்,

நல்ல கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். இப்படி அடிப்படையான *இருள்* களுக்கு விளக்கம் கொடுத்துவிட்டால், அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரங்கள் தானே *வெளிச்சத்துக்கு* வந்துவிடும்

>>>>இந்த பூமியில் வாழும் நமக்கு வெளிச்சம் என்று ஒன்று இல்ல விட்டால் இருள் எப்படி வரும்?<<<<

உங்களைப் பொருத்தவரை எப்போதும் உலகமும் அண்டமும் பேரண்டமும் வெளிச்சத்திலேயே இருக்கின்றன. இருள்தான் ஓடி வந்து இரவு என்ற பெயரில் வெளிச்சத்தைக் கவ்விக்கொள்கின்றன என்று நினைக்கிறீர்கள்.

இது பிழையான பார்வை அன்பரே. சூரியன் என்ற எரியும் நெருப்புப் பந்து பூமியின் எந்த இடங்களில் படுகின்றதோ அந்த இடங்களில் மட்டுமே டார்ச் அடித்தாற்போல வெளிச்சம் இருக்கும்.

பூமி சூரியனைச் சுற்றி வருகிறது, தன்னைத்தானேயும் சுற்றிக்கொள்கின்றது என்று பள்ளிகளில் படித்திருப்பீர்கள். அப்படி பூமி சூரியனைச் சுற்றும்போது பூமியின் எந்தப் பகுதி சூரியனின் பக்கம் இருக்கிறது அங்கே வெளிச்சம் பரவுகிறது. அவ்வளவுதான்.

ஆகவே பூமியில் இருட்டுதான் எப்போதும் இருக்கிறது. சூரிய ஒளி படும் சமயங்களில் மட்டுமே வெளிச்சம் வருகிறது. அதாவது இருட்டுதான் வெளிச்சத்திற்கு தன்னை விளக்கிக்கொண்டு இடம் தருகிறது. அல்லது இருட்டுதான் வெளிச்சமாக உருமாறுகிறது என்றுகூடச் சொல்லலாம்.

வெளிச்சம் என்பது குறைவான இருட்டு. அவ்வளவுதான். முழு இருட்டையும் விரட்டும் வலிமை எதற்கும் இல்லை. ஏனெனில், வீடுகளுக்குள், மரத்தின் கீழ், நம் நிழல்களாக என்று இருட்டு எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். இருட்டு என்பது நல்ல விசயம் அது கெட்ட விசயம் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

>>>>சூரிய குடும்பமும் ,நட்சத்திர கிரகங்களும் வெளிச்சத்தின் அடிபடையிலேயே உள்ளதாகும் அப்படி இருக்கையில் இந்த சூரிய ,நட்சத்திர
குடும்பம்களுக்கு ஒளி என்ற வெளிச்சம் இல்லாதிருந்தால் நாம் எப்படி இந்த பிரபஞ்சத்தை அடையாளம் கண்டிருப்போம்?<<<<<

ஆமாம் சூரியன் நட்சத்திரங்கள் எல்லாம் ஓளிதான் வெளிச்சம்தான் நெருப்புதான். சூரியனும் ஒரு நட்சத்திரம்தான் என்பதே உண்மை.

ஆனால் நீங்கள் இரவில் வானத்தைப் பார்த்தீர்கள் என்றால் என்ன தெரிகிறது? அடர்ந்த கருமைக்குள் இங்கும் அங்குமாக நட்சத்திரங்கள் தெரிகின்றன. அவ்வளவுதான். அதாவது இருட்டுக்குள் சில விளக்குகள் எரிகின்றன. அந்த விளக்குகளும் அணையக் கூடியன. கருந்துளைக்குள் இழுத்துக்கொள்ளப்படுபவைகளாகவே இருக்கின்றன என்றும் விஞ்ஞானம் கூறுகிறது. விஞ்ஞானம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும் என்பதால் நான் அதிகம் அதுபற்றிக் கூற விரும்பவில்லை. வானத்தை முழுமையாக அறிந்துகொள்ள மனிதனுக்கு இன்னும் வாய்க்கவில்லை. அதனால்தான் இப்படி பாடல்கள் எழுதிச் செல்லுகிறான்.

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும் -வைரமுத்து

அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா -மதுக்கூர் கண்ணன்

>>>>>அந்த வெளிச்சங்கள் இல்லாமல் எப்படி நாம் வானத்தை பார்க்க முடியும்?<<<<

அன்பரே, உங்களுக்கு ஒரு முக்கியமான விசயம் தெரியணும். நாம் வானத்தைப் பார்க்கவில்லை. தூரத்தில் உள்ள வெளி மண்டலம் நீல நிறமாகத் தெரியும். அதை வானம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். எவ்வளவுதூரம் வெளிச்சம் பரவுமோ அவ்வளவுதூரம்தான் பரவும். அப்படி அது பரவிமுடியும் எல்லை நீல நிறமாகத் தெரியும். இணையத்தில் அறிவியல் கட்டுரைகள் கோடிக்கணக்கில் உள்ளன. அற்புதமான பொக்கிசங்கள் அவை. வாசிக்கத் தொடங்குகள். மிக மிக சுவாரசியமாக இருக்கும். வாழ்த்துக்கள்.

நாம் வெளிச்சத்தின் அடிமைகளாக இருப்பதால்தான் முழு பிரபஞ்சத்தையும் உணர்ந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாமல் தவிக்கிறோம். எதைப் பார்க்கவும் நமக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது.

நமக்கு இருப்பது அய்ந்து புலன்கள். ஆனால் கண் மட்டுமே வெளிச்சத்தை நம்பி இருக்கிறது. மற்ற நான்கு புலன்களும் வெளிச்சத்தை நம்பி இல்லை. அவை இருட்டில்தான் மிகத் தெளிவாக இருக்கும். ஒரு மலரை முகர்ந்து வாசனை பார்க்கக்கூட நாம் கண்களை மூடிக்கொள்வோம். முழு உணர்வுகளையும் சேர்த்து ஒரு முத்தமிடுவதற்குக்கூட நாம் நம் கண்களை மூடிக்கொள்வோம்.

அன்புடன் புகாரி

crown said...

நமக்கு இருப்பது அய்ந்து புலன்கள். ஆனால் கண் மட்டுமே வெளிச்சத்தை நம்பி இருக்கிறது. மற்ற நான்கு புலன்களும் வெளிச்சத்தை நம்பி இல்லை. அவை இருட்டில்தான் மிகத் தெளிவாக இருக்கும். ஒரு மலரை முகர்ந்து வாசனை பார்க்கக்கூட நாம் கண்களை மூடிக்கொள்வோம். முழு உணர்வுகளையும் சேர்த்து ஒரு முத்தமிடுவதற்குக்கூட நாம் நம் கண்களை மூடிக்கொள்வோம்.

அன்புடன் புகாரி
-------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கண்னை மூடி இருப்பது திட்டமிட்ட செயலாக படவில்லை அது ஒரு அனிச்சையாகவே படுகிறது என்பது என் கருத்து. மேலும் மெல்லிய பூவும் சரி, மெல்லிய அதரமும் சரி கண்னை பதம் பாத்துவிடுமோ என்னும் மூளையின் எச்சரிக்கைதான் கண் இமை கதவடைப்பது .

Unknown said...

சூரிய குடும்பமும் ,நட்சத்திர கிரகங்களும் வெளிச்சத்தின் அடிபடையிலேயே உள்ளதாகும் அப்படி இருக்கையில் இந்த சூரிய ,நட்சத்திர
குடும்பம்களுக்கு ஒளி என்ற வெளிச்சம் இல்லாதிருந்தால் நாம் எப்படி இந்த பிரபஞ்சத்தை அடையாளம் கண்டிருப்போம் ?
--------------------------------------------------------
நன்றி சகோதரே !

மேலே உள்ள கேள்விக்கு பதில் உங்கள் பதிலுரையில் இல்லை . விஞ்ஞானம் வளரவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது .

நீங்கள் சொல்வதுப்போல் சூரியனின் வெள்ளிச்சம் எட்டும் தூரம் வரை உள்ள பகுதியைத்தான் வானம் என்கிறோம் இது பற்றி எனக்கு போதிய
தெளிவு இல்லை என்பதால் நீங்கள் சொல்வதையே எடுத்துக்கொண்டாலும் ,நீங்கள் சொன்ன 70 % dark energy யை வெளிச்சம் இல்லாமல் பூமிபந்தின் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் எப்படி அடையாளம் கொள்ளும் ?.

இன்னொரு கேள்வி ...

70 % இருப்பதால் dark energy யை நீங்கள் தாய் என்கிறீர்கள் அப்படிஎன்றால் இந்த பூமி பந்தின் முக்கால் பகுதி கடல் நீரால் சூழப்பட்டுள்ளது அதனால் கடலும் தாய்தான் என்பீர்களா ?.

70 % dark energy உண்மை என்றாலும் அதை தாயாக உருவகப்படுத்துவதை ஏற்க முடியாது

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புள்ள சகோதரர் ஹசன் புஹாரி அவர்களுக்கு,பொதுவாக குரான்,ஹதீஸ் அடிப்படையில் நோக்கும்போது,இறைவனுக்கு உருவம் உண்டு,இன்ஷா அல்லாஹ் மறுமையில் நாம் அவனைக் காணமுடியும் என்றுதான் முடிவுக்கு வர முடியும்.காரணம்,உருவம் இருந்தால் தான் நாம் அவனைக் காணமுடியும்.அது மட்டுமல்ல,அவனுக்கு கை,கால்,முகம் இருப்பதாக குரான்-ஹதீஸ் சொல்கிறது,இரண்டையும் எவ்வித கற்பனையும் இன்றி ஏற்பதே முஸ்லிம்களுக்கு நல்லது,மேலும் இது பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை,ஏனெனில்,நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் தெளிவாக சொல்லிவிட்டான்.அதை விட்டு-விட்டு நாமாக கற்பனை செய்தால்,பாவியாகிவிடுவோம் என அஞ்சுகிறேன்,எனவே அது சம்பந்தமான சில விளக்கங்கள் பார்ப்போம்.வீண் கற்பனை தவிர்ப்போம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன... 5:64

மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். 55:27

உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது, 89:22

கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள். 68:42

மேற்காணும் 68:42 வசனத்திற்கு விளக்கமாக நபி(ஸல்)அவர்களின் ஹதீஸ் அமைந்துள்ளது

...மறுமையில் அல்லாஹ் முஃமின்களுக்குக் காட்சி தர நாடி தன் கணுக்காலின் திரையை விலக்குவான். அப்போது இம்மையில் அவனுக்கு மட்டுமே சிரம் பணிந்தவர் அனைவரும் சிரம் பணிவர், மற்றவர்கள் அனைவரும் சிரம் பணிய முடியாத அளவுக்கு அவர்கள் முதுகெலும்பு வளையாது நின்றுவிடும். அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி): புகாரி.

திருமறை மற்றும் நபிமொழி மூலம் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதை அறிகிறோம். எனினும் திருமறை, நபிமொழியில் உள்ளதை அப்படியே நம்ப வேண்டும். மேல்மிச்சமான கற்பனைக்கோ, நம் சொந்த யூகத்திற்கோ சிறிதும் இடமளிக்கக் கூடாது. அல்லாஹ் தனது திருமறையில் (42:11, 112:4 ஆகிய வசனங்களில்) அவனைப் போன்று எப்பொருளும் இல்லை, அவனுக்கு நிகராக யாருமில்லை என்று கூறுகிறான் ஆகவே நம் அறிவைப் பயன் படுத்தாமல் அப்படியே ஏற்க வேண்டும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும். (75:22,23)

அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது. (50:35)

50:35 வசனத்திற்கு விளக்கமளித்த இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அதிகம் என்பது அல்லாஹ்வை காண்பதையே குறிக்கும் என்று கூறினார்கள்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம் அப்பொழுது நபியவர்கள் முழு நிலவைப் பார்த்தார்கள். பிறகு கூறினார்கள் நிச்சயமாக நீங்கள் இச்சந்திரனைப் பார்ப்பதுபோல உங்கள் இரட்சகனை மறுமையில் பார்ப்பீர்கள். அவனைப் பார்ப்பதில் எந்தத்தடையும் இருக்காது. நீங்கள் சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள (ஃபஜ்ர்) தொழுகையையும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள (அஸர்) தொழுகையையும் பேணி வாருங்கள். ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

தகவல் நன்றி

http://www.islamkalvi.com/basic/believes/001.htm

இப்னு அப்துல் ரஜாக் said...

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.

மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் - இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது - இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறு காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய (பாவச்)செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.

யாதொரு (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: “உங்களை யாராவது பார்த்து விட்டார்களோ?” என்று கேட்டுக் கொண்டே திரும்பி(ப் போய்) விடுகின்றனர்; அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான் - (காரணமென்னவெனில்) அவர்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களாக இருக்கின்றனர்.

அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான்.

(நபியே! அவர்களிடம்;) “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்”; மேலும், கூறும்: “குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!” (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.

உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது அருள்புரிகிறவன் அவனே;

(அவ்வாறே) இருளும் ஒளியும் (சமமாகா).

அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார்;

ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும், நாம் இறக்கி வைத்த (வேதமாகிய) ஒளியின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தே இருக்கின்றான்.
அன்றியும், ஒரு தூதரையும் அவன் (அனுப்பி வைத்தான்); அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக; மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான்.

“இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.

அவன்தான் இரவை இருளடையதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான்.

இப்னு அப்துல் ரஜாக் said...

மேற்கண்ட வசனங்கள் ஒளி மற்றும் இருள் குறித்த சில குரானின் வசனங்கள்.அல்லாஹ் அவைகளை எந்த பொருளில் பயன்படுத்தியுல்லானோ,அந்த வகையில் புரிவோம்,ஏற்போம்,வீண் கற்பனை தவிர்ப்போம்.

அன்புடன் புகாரி said...

>>>>>>சூரிய குடும்பமும் நட்சத்திர கிரகங்களும் வெளிச்சத்தின் அடிபடையிலேயே உள்ளன. அப்படி இருக்கையில் இந்த சூரிய, நட்சத்திர
குடும்பம்களுக்கு ஒளி என்ற வெளிச்சம் இல்லாதிருந்தால் நாம் எப்படி இந்த பிரபஞ்சத்தை அடையாளம் கண்டிருப்போம்? இந்த கேள்விக்கு பதில் உங்கள் பதிலுரையில் இல்லை. விஞ்ஞானம் வளரவில்லை என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.<<<<

சகோ அப்துல் ரகுமான்,

இதுவரை நம் பிரபஞ்சம் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை. அது இன்னமும் மூடுமந்திரமாகத்தான் இருக்கிறது. வெளிச்சம் எங்கெல்லாம் இருக்கிறதோ அதை நோக்கித்தான் மனிதன் பயணப்படுகிறான். இதுவரை அதுதான் அவனுக்கு இயலுமானதாக இருக்கிறது. நாளையும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லமுடியாது. ஒவ்வொன்றுக்கும் கருவிகளையும் அளவுகோல்களையும் கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்கிறான் மனிதன்.

ஒரு காலத்தில் எக்ஸ்-ரே என்ற ஒன்று இல்லை என்று அறிவீர்கள். அப்போது ஒருவனிடம் உன் எலும்பை எல்லாம் அப்படியே நான் பார்க்கப் போகிறேன் என்று ஒருவன் சொன்னால். அதற்கு அவன் என்ன பதில் சொல்லி இருப்பான்? என்ன, என்னை அறுத்து சதையை எல்லாம் கழித்துவிட்டு என் எலும்பைக் காணப்போகிறாயா, என்னைக் கொலை செய்யப் போகிறாயா என்றிருப்பான். ஏனெனில் வெளிச்சம் இருந்தால்தான், கண்பார்வை செல்லும் இடத்தில்தான் எதையும் காணமுடியும் என்ற அறியாமையின் பதில்தானே அது?

விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது என்பதும் உண்மை. விஞ்ஞானம் வளரவில்லை என்பதும் உண்மை. எனெனில் அது அறிவு. அறிவுக்கு எல்லையே கிடையாது. இதுவரை நாம் விஞ்ஞானத்தில் எட்டி இருக்கும் தூரம் மகத்தானதுதான் என்றாலும், அத்தோடு அது நின்றுவிடப் போவதில்லை. நம் சந்ததியர் இன்னும் விளக்கமாகவும் விபரமாகவும் காணுவார்கள். ஆனால் அவர்களோடும் அது நின்றுவிடப்போவதில்லை. தொடரும் தொடரும் தொடரும் எப்போதும்.

வெறுமனே ஒரு எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அறிந்த மிகப்பெரிய எண் எது? நீங்கள் அறிந்த மிகச் சிறிய எண் எது? யோசித்துப் பார்த்தீர்களா?

இதைத்தான் நான் என் ஆகாயம் என்ற கவிதையில் இப்படி எழுதி இருந்தேன்:

ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று
இதுதான் இறுதி என்பதும் இல்லை
ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று
அதுதான் பெரிது என்பதும் இல்லை

அணுவே சிறிது அண்டம் பெரிதென
அடித்துச் சொல்லத் தெளிவும் இல்லை
அறிவுப் பயண எல்லைக் குள்ளே
ஆயிரம் ஐயம் தீர்வோ இல்லை

சிறிதும் பெரிதும் ஒன்றின் உருவே
வானம் தானே மூலக் கருவே
அறியா நெஞ்சம் அறிந்தது கொஞ்சம்
அறியும் முன்னர் ஆறடி மிஞ்சும்

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

>>>>>நீங்கள் சொல்வதுபோல் சூரியனின் வெளிச்சம் எட்டும் தூரம் வரை உள்ள பகுதியைத்தான் வானம் என்கிறோம் இது பற்றி எனக்கு போதிய
தெளிவு இல்லை என்பதால் நீங்கள் சொல்வதையே எடுத்துக்கொண்டாலும், நீங்கள் சொன்ன 70 % dark energy யை வெளிச்சம் இல்லாமல் பூமிப் பந்தின் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் எப்படி அடையாளம் கொள்ளும்? 70 % இருப்பதால் dark energy யை நீங்கள் தாய் என்கிறீர்கள் அப்படி என்றால் இந்த பூமிப் பந்தின் முக்கால் பகுதி கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. அதனால் கடலும் தாய்தான் என்பீர்களா? 70 % dark energy உண்மை என்றாலும் அதை தாயாக உருவகப்படுத்துவதை ஏற்க முடியாது<<<<

அன்பிற்கினிய சகோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு,

முதலில் ஒன்று. உங்கள் எண்னங்கள் எல்லாம் நம் பூமிப் பந்தின் மீதே இருக்கிறது. அதில் தவறில்லை ஆனால் இந்த பூமி என்பது பிரபஞ்சத்தில் ஒரு தூசுத் துகள் அளவுகூட இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?

Now consider that there are at least 10 trillion planetary systems in the known universe. Notice the “at least”. That is 10,000,000,000,000. Earth would be “1″ of those.
http://www.joshuakennon.com/how-big-is-earth-compared-to-the-universe/

இதுபோல பல ஆயிரம் தகவல்கள் இணையம் முழுவதும் கிடைக்கும். வானவியல் பற்றி ஒரு நல்ல புத்தகம் வாசித்தால், ஆச்சரியங்களால் அசந்துபோவோம். அதையெல்லாம் விட்டுவிட்டு பூமி பூமி என்று மட்டுமே எண்ணுவது நம் அறிவின் எல்லையைத்தான் காட்டுகிறது.

70% of the Universe is dark energy.
Dark matter makes up about 25%.
The rest adds up to less than 5% of the Universe.

நான் முன்பு கொடுத்த தகவலை முழுமையாக வாசியுங்கள். வெறும் 70 விழுக்காடு அல்ல. குறைந்தது 95 விழுக்காடு. அது 99 ஆகவும் இருக்கலாம். நம்மிடம் சரியான அளவுகள் இதுவரை இல்லை. அறியும் திசையில் பயணப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

பூமி முக்கால் பங்கு நீரால் சூழப்பட்டிருக்கிறது அதனால் நீரை தாய் என்று கூறுவீர்களா என்று கேட்டிருக்கிறீர்கள். நல்ல கேள்வி.

உண்மையில் நீரும் தாய்போலத்தான். நீரில்தான் உயிரினங்கள் தொடங்கின. நீரில்லாமல் மனிதன் இல்லை. உங்கள் உடலிலும் பெரும் பகுதி நீர் மட்டும்தான். நீர் இல்லாவிட்டால் நீங்கள் மரணமடைந்துவிடுவீர்கள்.

பிரபஞ்சத்தில் எந்த கோளில் நீர் இருக்கிறதோ அந்தக் கோளில் மட்டும் தான் உயிரினங்கள் வாழமுடியும். பூமிக் கோளில் நீர் இருப்பதால்தான் உயிரினங்கள் வாழ்கின்றன. நிலாவில் நீர் இல்லை, எனவே அங்கே உயிர்கள் இல்லை. செய்வாய்க்கோளில் நீர் இருக்க வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறார்கள். அதனால் அங்கே உயிரினங்கள் வாழ வழியிருக்கக்கூடும் என்றும் நினைக்கிறார்கள். கீழுள்ள சுட்டியைப் பாருங்கள்.

http://www.marsdaily.com/reports/Can_People_Live_On_Mars_999.html

இருட்டைத் தாயாக உங்களால் ஏற்க முடியாவிட்டால் ஏற்காதீர்கள். நான் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லையே. இறைவன் தந்த என் சிந்தனையால் நான் அறிவதையும் உணர்வதையும் அப்படியே பதிவு செய்கிறேன். அவ்வளவுதான்.

அன்புடன் புகாரி

அதிரை சித்திக் said...

வான் வெளியில் சூரிய குடும்பம் ..

சிறு குடும்பம்தான் அதற்கு அப்பால்..

அன்பு கவி புகாரி அவர்கள் கூறுவது

போல இருள் சூழ்ந்த பகுதியே கூடுதலாக உள்ளது

ஆனால் நமக்கு தேவையானது ..இருளா ..வெளிச்சமா ..

ஒருநாளின் மூன்றி ஒரு பங்கினை உறங்கு வதற்காக

எடுத்துக் கொள்கிறோம்...அந்த நேரத்தில் மட்டும் இருள் தேவை உறங்கும் நேரத்தில் காணும்

கனவு நீங்கள் கூறும் அண்டவெளி போன்றது

எட்டு மணி நேர உறக்கத்தில் எட்டுவருடத்து செய்தியை

சொல்லி விடும் ..

Unknown said...

அன்பு சகோதரே !

நிச்சயமாக உங்கள் கவிதை மற்றும் வாதங்களிலிருந்து இருட்டை பற்றி ஒரு புதிய பார்வை கிடைத்தது என்பதை மறுப்பதற்கில்லை .அதுவும் அல்லாஹுவின் படைப்பு என்ற ரீதியில் தான் அதை நான் பார்கிறேன். மாறாக இருள் எல்லாவற்றையும் விட சிறந்தந்து என்பது சரியல்ல .

//உண்மையில் நீரும் தாய்போலத்தான். நீரில்தான் உயிரினங்கள் தொடங்கின. நீரில்லாமல் மனிதன் இல்லை. உங்கள் உடலிலும் பெரும் பகுதி நீர் மட்டும்தான். நீர் இல்லாவிட்டால் நீங்கள் மரணமடைந்துவிடுவீர்கள். //
நீர் மட்டுமல்ல காற்று இல்லாமலும் வாழவே முடியாதுதான் .இந்த உலகில் எல்லாம் கலந்துதான் உள்ளது .


///ஆனால் இந்த பூமி என்பது பிரபஞ்சத்தில் ஒரு தூசுத் துகள் அளவுகூட இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? //

இந்த உண்மை என் 15 வயதிலேயே செக்கடிபள்ளி வாசலில் சொல்லுப்படும் பயான்களில் தான் முதன்முதலாக கேட்டு ,பின்னர்தான் பள்ளிபாடதிலும் படித்து ,அதன் பின்னர் குரானை தமிழில் படித்தும் அறிந்து கொண்ட விஷயம் .

இந்த உலகம் பற்றி குர்ஆனில் சொல்லப்பட்ட வசனம்

'' இந்த உலகம் ஒரு கொசுவின் இறக்கைக்கு சமமானது ''

--------------------------------------------------------------------------------------------------

தமிழில் குரானை படித்தால் நிறைய விஷயங்கள் அறியலாம் .நம் கேள்விகளுக்கு பதில் குர்ஆனில் உள்ளது .

இன்னொரு விஷயம் ,குர்ஆனில் உள்ள இன்னும் சில வசனம் மிகவும் ஆழமானது ,சிந்திக்கவேண்டியது .

அந்த வசனம் ,(இந்த வசனத்தை நான் சரியான முறையில் எழுதவில்ல என்றால் தயவுசெய்து சுட்டிகாட்டவும் )

'' மனிதர்களே ,இந்த உலகம் தன் அருகுகளிருந்து குறைந்து வருவதை கவனிக்கவில்லையா ?''

''நாம் எதையும் வீணாக படைக்கவில்லை ''

இதை போல நிறைய உள்ளது .நம்மை விட அறிந்தவர்களான மார்க்க அறிஞர்கள் இதில் பங்கெடுத்து நிறைய நமக்கு அறியத்தரலாம் அல்லது
தரக்கூடும் .

KALAM SHAICK ABDUL KADER said...

//அறியா நெஞ்சம் அறிந்தது கொஞ்சம்
அறியும் முன்னர் ஆறடி மிஞ்சும்//

கனடா கவிஞர் புகாரி அவர்களின் இவ்வரிகள் படித்ததும் கீழே இட்டுள்ள என் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன; “முகநூலில்”(அக்டோபர் 2010ல் ) “மனிதா” என்ற தலைப்பில் வேண்டிய கவிதைப் போட்டியில் மூன்றாமிடம் வென்ற என் கவிதை வரிகளும் உங்களின் மேற்காணும் கவிதை வரிகளும் எண்ணங்களால் ஒன்று பட்டு ஒரே கோட்டிற் செல்வதை அறிந்தேன்; வியந்தேன்


ஓ மனிதா..!!

தேடும் ஐயம் தீருமா மனிதா!
ஓடுதல் நிறைவாய் ஓயுதல் எளிதா?
தேடியும் அலைந்துமே திரவியம் பெறும்நாம்
வாடியே கடத்தும் வாழ்வால் பெற்ற
நன்மை என்ன? நானும் வாழ்வின்
உண்மை தேடி உண்ணவும் உறங்கவும்
மறந்த வண்ணமே மனதிலே குழப்பமாய்த்
திறந்த பூமியில் திரிந்த போழ்தும்
சூழும் ஐயம் தீருமா இனியும்
வாழும் வாழ்க்கை வாடும் முன்பே

அன்புடன் புகாரி said...

>>>>>இருள் எல்லாவற்றையும் விட சிறந்தந்து என்பது சரியல்ல<<<<<<

அன்புச்சகோ அப்துல் ரகுமான்,

பிரபஞ்சத்தில் இருக்கிறது இருட்டு
இருட்டில் இருக்கிறது சூரிய குடும்பம்
சூரிய குடும்பத்தில் இருக்கிறது பூமி
பூமியில் இருக்கிறது கடல்
கடலில் இருக்கிறது சிப்பி
சிப்பிக்குள் இருக்கிறது முத்து
முத்தில் இருக்கிறது அழகு
அழகில் இருக்கிறது ஒளி
ஒளியில் இருக்கிறது இன்பம்

இதில் எது சிறந்தது?

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

>>>>>அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதன்

காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன... 5:64<<<<<<

அன்புச்சகோ அப்துல் லத்தீப்,

அக்கறையாய்ப் பல தகவல்களை வலையெங்கும் தேடி வரிசையாய்த் தந்திருக்கிறீர்கள். நன்றி. முதலில் மேலே உள்ள வசனத்தை எப்படிப் பொருள் கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன என்று யூதர்களைப் பார்த்து இந்த வசனம் வருகிறது. இந்த வசனம் இறங்கியபோது, யூதர்களின் கைகள் கயிற்றால் பிணைத்து கட்டப்பட்டு இருந்தனவா? இல்லையே? பிறகு ஏன் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது?

ஒருவனின் கைகள் கயிற்றால் கட்டப்படாதிருக்கும்போது, என் கைகள் கட்டப்பட்ட நிலையில் நான் நிற்கிறேன் என்று ஒருவன் சொன்னால் அதற்கு என்ன பொருள்? தன்னால் இயன்றதை தன்னால் செய்யமுடியாத இக்கட்டில் நான் நிற்று தவிக்கிறேன் என்று பொருளல்லவா?

யூதர்களின் கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன என்று கூறினால், யூதர்களால்தான் எதையும் செய்யமுடியாது என்று இறைவன் கூறுவதல்லவா? குர்-ஆன் வசனங்களை எப்போதும் நேரடியாப் பொருள் கொள்ளக்கூடாது. அப்படிப் பொருள் கொண்டால் அது அபத்தான நிலைக்கு நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடும். அறிவுடையோனாய் இருப்பவனே இஸ்லாமியன் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது. நம் அறிவை முழுவதும் பயன்படுத்திச் சரியான பொருளை விளங்கிக்கொள்வது தேவையான ஒன்றல்லவா?

அல்லாஹ்வின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன என்று யூதர்கள் சொன்னால் அதன் பொருள் என்ன? அல்லாஹ்வால் எதையும் செய்யமுடியாது என்று ஏளனம் செய்து அதை நம்பவும் வைத்து இஸ்லாமியர்களின் நம்பிக்கையை உடைத்தெறியும் நோக்கமல்லவா? அதற்காகவே தொடுக்கப்பட்ட ஏளனச் சொற்கள் அல்லவா அவை?

இங்கே கைகள் கைகள் என்று கூறுவது, யூதர்களுக்கும் வெறும் கைகள் அல்ல, இறைவனுக்கும் வெறும் கைகள் அல்ல என்பது தெளிவாகிறதா?

இங்கே கை என்பது சக்தி. ஆகவே அந்தக் குர்-ஆன் வசனத்திற்கு என் விளக்கம் இதோ:

அல்லாஹ்வால் எதையும் செய்ய முடியாது அதற்கான சக்தி அவனிடம் இல்லை என்று யூதர்கள் கூறுகிறார்கள். யூதர்களுக்குத்தான் எதையும் செய்யக்கூடிய சக்தி இல்லை. இப்படி யூதர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் இறைவனால் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வோ எதையும் செய்யக்கூடிய வல்லமையை வேண்டும்மட்டும் பெற்று இருக்கிறான்

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

//குர்-ஆன் வசனங்களை எப்போதும் நேரடியாப் பொருள் கொள்ளக்கூடாது. அப்படிப் பொருள் கொண்டால் அது அபத்தான நிலைக்கு நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடும்.//

உண்மையிலும் உண்மை!!

“அல்லாஹ் வெளிரங்கமானவன்; உள்ரங்கமானவன்” என்னும் அவனது தன்மையினைக் குறிப்பிடும் சொல்லை நேரடியாகப் பொருள் கொண்டால் நாம் என்ன விளங்க முடியும்? நானும் ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் உள்ள “தர்ஜமாக்கள்” பார்த்தேன்; விவரமாகச் சொல்லப்படவில்லை;இங்குத் தொழவைக்கும் இமாமிடம் கேட்டேன் அவர்களும் “வெளிரங்கமானவன் என்றால் வெளியில் நம் கண்ணுக்குத் தெரியும் படைப்பினங்கள் மூலம் அவன் ஆற்றலை விளங்கி அவன் வெளிரங்கமானவன் என்றும் உள்ளங்களை நோட்டமிடுபவனாதலால் உள்ரங்கமானவன் என்றும் சொன்னார்கள்” இருப்பினும் இன்னும் தெளிவான விளக்கம் பெற குருவைத் தேடிக் கொண்டிருக்கின்றேன். ஒருவர் எழுதும் “தர்ஜமா” தவறென்று மற்றொருவர் சாடும் இக்குழப்பமான காலத்தில் எப்படித்தான் நாம் முழு குர் ஆனுக்கும் விளக்கம் பெற்று பிறர்க்கும் எத்தி வைப்போமோ? அதற்குள் நம் ஆயுளும் முடிந்தால்... நம் பிள்ளைகட்கு எப்படி புரிய வைப்பது? நான் பிறந்து இன்னும் முழு விளக்கம் அறியாத குழம்பிக் கொண்டிருக்கும் வேளையில் நம் பிள்ளைகட்கும், நம்மைச் சுற்றியிருப்போர்க்கும் எப்படி/ எப்பொழுது புரிய வைப்பது?

Shafi MI said...

இறைவன் ஆணா? பெண்ணா? (ஐயமும்-தெளிவும்/பிற மதத்தினருக்காக)
http://www.satyamargam.com/1853

//Asan Buhari சொன்னது…Saturday, May 26, 2012 9:39:00 PM
எனக்கு அடிப்படியிலேயெ ஒரு கேள்வியுண்டு. இறைவனை ஏன் ஆண்பாலாக மட்டுமே அவன் இவன் என்று சுட்டுகிறார்கள்? இதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா?//

Unknown said...

Asan Buhari சொன்னது…
>>>>>இருள் எல்லாவற்றையும் விட சிறந்தந்து என்பது சரியல்ல<<<<<<

அன்புச்சகோ அப்துல் ரகுமான்,

பிரபஞ்சத்தில் இருக்கிறது இருட்டு
இருட்டில் இருக்கிறது சூரிய குடும்பம்
சூரிய குடும்பத்தில் இருக்கிறது பூமி
பூமியில் இருக்கிறது கடல்
கடலில் இருக்கிறது சிப்பி
சிப்பிக்குள் இருக்கிறது முத்து
முத்தில் இருக்கிறது அழகு
அழகில் இருக்கிறது ஒளி
ஒளியில் இருக்கிறது இன்பம்

இதில் எது சிறந்தது?

அன்புடன் புகாரி
-------------------------------------------------
As a living Human Being in the Earth
இன்பம் முதல் பிரபஞ்சம் வரை சிறந்தது என்பேன் .காரணம் உங்கள் வரிசைப்படி, இந்த பூமியில் வாழும் மனித உயிரினம் இன்பம் வழியாக சென்றுதான் பிரபஞ்சத்தை உணரமுடியும் .
---------------------------------------------------
As a Soul in the Universe
உங்களின் வரிசை முழுமையானது இல்லை என்பேன் .காரணம் இந்த பிரபஞ்சத்திற்கு மேலே என்ன இருக்கிறது என்பதை உங்களின் இந்த வரிசை சொல்லவில்லை .நம் இஸ்லாமிய மார்க்கத்தில் பிரபஞ்சத்தையும் தாண்டின விசயங்களும் உள்ளன .அதை நாம் தான் நம் தேடலில் பெறமுடியும் .அந்த தேடல்களை இந்த விவாதத்தில் பெறமுடியாது .

அன்புடன் புகாரி said...

>>>>As a Soul in the Universe உங்களின் வரிசை முழுமையானது இல்லை என்பேன் .காரணம் இந்த பிரபஞ்சத்திற்கு மேலே என்ன இருக்கிறது என்பதை உங்களின் இந்த வரிசை சொல்லவில்லை .நம் இஸ்லாமிய மார்க்கத்தில் பிரபஞ்சத்தையும் தாண்டின விசயங்களும் உள்ளன .அதை நாம் தான் நம் தேடலில் பெறமுடியும். அந்த தேடல்களை இந்த விவாதத்தில் பெறமுடியாது.<<<<

அன்பிற்கினிய சகோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு,

எந்த ஒரு விசயத்தையும் அடைத்துப் போடக்கூடாது. திறந்துவிட வேண்டும். அதுதான் அறிவு. அறிவைத்தான் இஸ்லாம் நேசிக்கிறது. அறிவில்லாதவனை இஸ்லாமியன் என்று இஸ்லாம் சொல்ல விரும்பவில்லை. அறிவு குறைந்தவர்கள் அறிவுடையோரிடம் சென்று தெளிவுபெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

மனிதனை மகத்தானவனாகப் படைத்தவன் இறைவன் என்பதை நீங்கள் நம்பினால், மகத்தானவனின் மகத்தான அறிவின் ஓட்டத்தை நிச்சயம் தடை செய்யக்கூடாது. ஏனெனில் தடுப்பதற்காக அவன் படைக்கப்படவில்லை. நல்வழி செல்வதற்காக மட்டுமே மனிதன் தடுக்கப்படுவான். நல்ல சிந்தனை நல்ல செயல் யாவும் போற்றுதலுக்குரியன. தடுப்பதற்கானவை அல்ல.

பிரபஞ்சத்திற்கு மேலே நான் எதையும் எழுதவில்லை என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். உண்மைதான். ஏனெனில் அதற்கு என்னிடம் காரணம் இருக்கின்றது. ஆனால் அந்தக் காரணத்தை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை உங்களிடம் இருக்கிறது என்று நான் நம்பவில்லை. ஆகவே நான் கூறாதுவிடுகிறேன்.

கூறும் நாளொன்று வரும் அப்போது நிச்சயமாகக் கூறுவேன். ஏனெனில் அறிவின் ஆழ ஓட்டத்தை இறைவன் விரும்புகிறான். அதற்காகத்தான் மனிதனைப் படைத்தான். இந்தத் தொடரின் அஹ்மது ஆரிப் அவர்கள் உங்களை வணங்குவதற்காகவேயன்றி வேறெதற்கும் படைக்கவில்லை என்று தவறாக சொல்லப்பட்டுவந்த குர்-ஆன் வசனத்திற்கு சரியான விளக்கத்தை அருமையாக அளித்திருந்தார். அவருக்கு என் நன்றி எப்போதும். அவர் இட்ட இடுகையைத் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. எனக்கு அவர் தந்த விளக்கத்தை எவரேனும் தந்துதவினால், மகிழ்வேன்.

அன்புடன் புகாரி

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புள்ள சகோ ஹசன் புஹாரி அவர்களே,

குரானுக்கு விளக்கம் ஹதீஸ்கள் மூலம் பெறலாம்.ஒவ்வொரு குரான் வசனத்துக்கும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எப்படி விளக்கினார்களோ,அருமை சஹாபா பெருமக்கள் எப்படி விளங்கினார்களோ அதை அப்படியே ஏற்பதுதான் நாம் முஸ்லிம் என்பதற்கு முதல் அடையாளம்.

நவீன பிரச்சனைகள் குறித்து ஆராயும்போது,இது சம்பந்தமாக குரான்,ஹதீஸில் நேரடியாக,அல்லது மறைமுகமாக சொல்லப்பட்டிருந்தால் அதை ஏற்கவேண்டும்,அதை வைத்து rulings எடுக்கலாம்.அது குரான்,ஹதீஸ் இரண்டுக்கும் முரண்படாதவாறு இருக்க வேண்டும்.இதை அடிப்படையாக வைத்து மட்டும் தான் சிந்திக்க வேண்டும்.அதுதான் நமக்கு நல்லது.படைத்தவனுக்குத்தான் தெரியும் எல்லாமும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

இஸ்லாம் குறித்த மற்ற சில விளக்கங்கள் பெற
இங்கு சென்று பாருங்களேன்

http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/p_4/

அன்புடன் புகாரி said...

>>>>>>இறைவன் ஆணா? பெண்ணா? (ஐயமும்-தெளிவும்/பிற மதத்தினருக்காக)
http://www.satyamargam.com/1853<<<<<

அன்பிற்கினிய சகோ மு.இ.ஷாஃபி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும். முதன்முறையாக நான் உங்களுக்கு மடல் இடுகிறேன், மகிழ்கிறேன்.

சத்யமார்க்கம் கட்டுரையை வாசித்தேன். குர்-ஆன் வரிகளுக்கு நேரடிப் பொருளையே தரும் சாதாரண கட்டுரையாகவே அது இருந்தது. ஆனால் அங்கே ஒரு பொற்குவியலையே என். சர்ஃபாத் அஹ்மது என்பவர் கொட்டித் தந்திருக்கிறார்.

அதன்படி, இறைவன் என்பவன் ஆண் பெண் என்ற பாலினத்திற்கு அப்பாற்பட்டவன். (இதுவே எனக்கு ஏற்புடைய கருத்து)

அஃறிணை உயர்திணை என்கின்ற திணைகளுக்கும் அப்பாற்பட்டவன். (இதுவே எனக்கு ஏற்புடைய கருத்து)

இறைவனை அவன் என்று அவனே கூறுவது, மரியாதை நிமித்தமாகக் கூறப்படும் கால வழக்குச் சொற்கள் காரணமாகவேயன்றி வேறில்லை.

சில இடங்களில் ’அவன் கூறுகிறான்’ என்பதுபோல ஒருமையிலும் சில இடங்களில் ’நாம் கூறினோம்’ என்பது போல பன்மையிலும் இறைவன் குறிப்பிடப்படுகிறான்.

நாம் கூறினோம் என்பதை நேரடிப் பொருளாக எடுத்துக்கொண்டு, இறைவன் ஒருவன் அல்ல, பலர் என்று கூறுவது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் இறைவன் ஆண்பால் என்று கூறுவதும்.

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

>>>>>இஸ்லாம் குறித்த மற்ற சில விளக்கங்கள் பெற
இங்கு சென்று பாருங்களேன்
http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/p_4/ <<<<<

அன்பிற்கினிய அர அல,

நான் பிஜேவின் கட்டுரைகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். சில நன்றாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்து பாராட்டி இருக்கிறேன். ஆனால் அவர் எழுதிய அனைத்தும் அருமை என்று நான் சொல்லமாட்டேன்.

அவர் அவர் கண்டதையும் அவர் உணர்ந்ததையும் அவருக்குச் சரி என்று பட்டதையுமே எழுதுகிறார். இங்கே நாம் திறந்த மனதுடனும் திறந்த அறிவுடனும் கருத்தாடுகிறோம். கருத்தாடல்கள் நற்பயனையே தரும்.

நான் எழுதி இருக்கும் எவற்றிலேமும் உங்களுக்கு ஐயமோ மாற்றுக்கருத்தோ இருந்தால் தெரிவியுங்கள். நான் மறுமொழி இடுகிறேன்.

அன்புடன் புகாரி

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்பிற்கினிய சகோதரர் ஹசன் புகாரி அவர்களே,

//அதன்படி, இறைவன் என்பவன் ஆண் பெண் என்ற பாலினத்திற்கு அப்பாற்பட்டவன். (இதுவே எனக்கு ஏற்புடைய கருத்து)//

உங்கள் கருத்தில் நானும் உடன் படுகிறேன்.

//அஃறிணை உயர்திணை என்கின்ற திணைகளுக்கும் அப்பாற்பட்டவன். (இதுவே எனக்கு ஏற்புடைய கருத்து)//

உங்கள் கருத்தில் நானும் உடன் படுகிறேன்.


//சில இடங்களில் ’அவன் கூறுகிறான்’ என்பதுபோல ஒருமையிலும் சில இடங்களில் ’நாம் கூறினோம்’ என்பது போல பன்மையிலும் இறைவன் குறிப்பிடப்படுகிறான்.

நாம் கூறினோம் என்பதை நேரடிப் பொருளாக எடுத்துக்கொண்டு, இறைவன் ஒருவன் அல்ல, பலர் என்று கூறுவது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் இறைவன் ஆண்பால் என்று கூறுவதும்.//

சரியான விளக்கம்.எல்லாம் வல்ல அல்லாஹ் - உங்கள் அறிவை இன்னும் விசாலமாக்குவானாக

//ஆனால் அங்கே ஒரு பொற்குவியலையே என். சர்ஃபாத் அஹ்மது என்பவர் கொட்டித் தந்திருக்கிறார்.//

அதை நானும் ரசித்தேன்.

//நான் பிஜேவின் கட்டுரைகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். சில நன்றாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்து பாராட்டி இருக்கிறேன். ஆனால் அவர் எழுதிய அனைத்தும் அருமை என்று நான் சொல்லமாட்டேன்.

அவர் அவர் கண்டதையும் அவர் உணர்ந்ததையும் அவருக்குச் சரி என்று பட்டதையுமே எழுதுகிறார்.//

உங்கள் நிலைப்பாடே என்னுடையதும்.அவர் சிலவற்றை விளக்கும் அருமையை எண்ணி வியந்திருக்கிறேன்,அது போல அவருடைய கருத்தில் சிலவற்றில் எனக்கு முரணும் உண்டு.யாரையும் நாம் சிந்திக்காமல்,அவர் சொல்லுவதெல்லாம் சரி என பின்பாட்டு பாடக்கூடாது என்பதுதானே இஸ்லாம்.

//இங்கே நாம் திறந்த மனதுடனும் திறந்த அறிவுடனும் கருத்தாடுகிறோம். கருத்தாடல்கள் நற்பயனையே தரும்.//

ஆமீன்
//நான் எழுதி இருக்கும் எவற்றிலேமும் உங்களுக்கு ஐயமோ மாற்றுக்கருத்தோ இருந்தால் தெரிவியுங்கள். நான் மறுமொழி இடுகிறேன்.//

இது சிலருக்கு இல்லாத மனப்பக்குவம்,உங்களுக்கு இருக்கிறது,அதற்கு முதலில் நன்றி.

இன்ஷா அல்லாஹ்,ஆரோக்கியமாக தொடர்வோம்

Unknown said...

பிரபஞ்சத்திற்கு மேலே நான் எதையும் எழுதவில்லை என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். உண்மைதான். ஏனெனில் அதற்கு என்னிடம் காரணம் இருக்கின்றது. ஆனால் அந்தக் காரணத்தை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை உங்களிடம் இருக்கிறது என்று நான் நம்பவில்லை. ஆகவே நான் கூறாதுவிடுகிறேன்.
------------------------------------------------------------------
அன்பு சகோதரே !

நாங்கள் உங்களின் காரணத்தை அறிய ஆர்வமாய் உள்ளோம் !

Shafi MI said...

வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹ்...

உடன்பிறப்பு புகாரி - தம்பி லத்தீஃப் இருவருக்கும் சர்பத் ( என். சர்ஃபாத் அஹ்மது) அருந்திய மகிழ்ச்சி போல!

தத்தமது நிலைப்பாட்டிற்கு ஒத்துள்ள கருத்தை மட்டும் இங்கு மேற்கோளிட்டுள்ளீர்கள்!

அவருக்கு பதிலளித்துள்ள முஸ்லிம், சத்தியமார்க்கம் மற்றும் சஃபி ஆகியோருக்கு சர்பத் அளித்தவரும் அருந்திய நீங்களும் தகுந்த விளக்கமளித்ததாகத் தெரியவில்லை.

உண்மையிலேயே மேற்கொண்டு விளக்கமறிய வேண்டி http://www.satyamargam.com/1853 - ல் கருத்திட்டால் குறித்த ஆக்கத்தினைத் தந்த அறிஞர்களின் விளக்கம் பெறலாம், இன்ஷா அல்லாஹ்.

அறிஞர்கள் இங்கு விளக்கமளித்தாலும் கேட்டுக்கொள்வேன்.

அன்புடன் புகாரி said...

>>>>>>அவருக்கு பதிலளித்துள்ள முஸ்லிம், சத்தியமார்க்கம் மற்றும் சஃபி ஆகியோருக்கு சர்பத் அளித்தவரும் அருந்திய நீங்களும் தகுந்த விளக்கமளித்ததாகத் தெரியவில்லை.<<<<<

அன்புச் சகோ மு. இ. ஷாஃபி,

எதற்கான விளக்கம் வேண்டுமோ அதை இங்கே நீங்கள் இட்டால், என்னால் இயன்றால், இன்ஷால்லா விளக்கம் தர முயற்சிப்பேன்.

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

எண்ணங்களால் ஒருங்கிணையும்போது உருவாகும் மகிழ்ச்சி நரம்புகளைப் புதுப்பிக்கக்கூடியது. நன்றி அர அல

இணைவதில் இணைவோம் முரண்படுவதில் முரண்படுவோம் அறிவைத் திறந்துவைப்போம் ஆணவத்தைத் தள்ளிவைப்போம் அதன்பின் நாம் நாமாக இருப்போம்

அன்புடன் புகாரி

இப்னு அப்துல் ரஜாக் said...

வ அலைக்கும் சலாம் ஷாபி காக்கா,
//அவருக்கு பதிலளித்துள்ள முஸ்லிம், சத்தியமார்க்கம் மற்றும் சஃபி ஆகியோருக்கு சர்பத் அளித்தவரும் அருந்திய நீங்களும் தகுந்த விளக்கமளித்ததாகத் தெரியவில்லை.//
சகோ சபாத் அவர்கள் அளித்துள்ள விளக்கம் - குரான் கையாண்டுள்ள முறைக்கு ஒத்திருப்பதாக படுகிறது.அதனால் மேலதிக விளக்கம் தர வேண்டியது இல்லை என எண்ணுகிறேன்,அதை அழகாக அவர் செய்துள்ளார்.இறைவனுக்கு பாலினம் சூட்டுவது சரியல்ல.அல்லாஹ் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவன்.

அது குறித்த சிறு உரையை இங்கு கேளுங்கள்,
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/allavai_anaka_kuripiduvatu_en/

இப்னு அப்துல் ரஜாக் said...

இதையும் பார்வை இடவும்

http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/kadavulai_avan_ena_kooruvathu_en/

இப்னு அப்துல் ரஜாக் said...

//இணைவதில் இணைவோம் முரண்படுவதில் முரண்படுவோம் அறிவைத் திறந்துவைப்போம் ஆணவத்தைத் தள்ளிவைப்போம் அதன்பின் நாம் நாமாக இருப்போம் //

குரான் - ஹதீஸ் அடிப்படையில் ஆராய்ந்து, இணைவதில் இணைவோம் முரண்படுவதில் முரண்படுவோம் அறிவைத் திறந்துவைப்போம் ஆணவத்தைத் தள்ளிவைப்போம் அதன்பின் நாம் நாமாக இருப்போம்,ஆகட்டும் ஹசன் புஹாரி காக்கா

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்கினிய சகோதரர்களுக்கு...

அதிரைநிருபர் தளத்தின் தரம் தூக்கிப் பிடிக்கும் கருத்தாடல்களால் உள்ளங்களை கவரும் உங்கள் அனைவரின் கருத்துக்களை தொடர்ந்து மவுனமாக வாசித்து வரும் எண்ணற்ற வாசகர்களில் அதிரைநிருபர் குழுவினரும் அடக்கமே அது அவர்களின் செயல்களிலும் இருப்பது அதே அடக்கமே :) !

இந்த பதிவின் கருத்தோடு ஒத்துப்போன கருத்தாடல்கள் சற்றே தடம் மாறிச் செல்வதனை எங்களால் உணராமல் இருக்க முடியவில்லை, தன்னடக்கத்துடனும், அழகிய முறையிலும் எடுத்தாளும் கருத்துக் கோர்வைகள் எவரையும் சென்றடையும், இருப்பினும் குர்ஆன் விளக்கங்களை தன்னிலை விளக்கமாகவோ அல்லது நமது சுய கருத்தாடல்களைக் கொண்டோ அலசாமல் தெளிவுகள் பெற்ற மார்க்க அறிஞர்களின் வழிகாட்டலில் அந்த விவாதம் இருப்பதே நன்மை பயக்கும் என்பது நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆகவே, இந்த பதிவுக்கு தொடர்பில்லாத விவாதங்களை இத்துடன் நிறைவுக்குள் கொண்டுவருவோம். அதனாலென்ன, கருத்தாடல்களால் மனம் வென்றவர்களுக்கு இந்த தளம் ஒரு செறிவான களமே ! நிச்சயம் அவைகளுக்கும் வழிவகுப்போம் இனி வரும் காலங்களில்.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

அர அல அவர்களே...

நீங்கள் அல்லாஹ் பற்றிய நம்பிக்கையை அன்னன் பிஜே என்ற முதஜிலா கொள்கை சுமந்தவரிடம் அறிவை பெற்றிர்கள் என்றால்...அல்லாஹ்வின் பன்பை மருக்க வேண்டி வரும்....

மேலும் அவர் சகாப்பாக்கள் விளக்கத்தை விட்டு வேளியே சென்றவர்.

அதிரை சித்திக் said...

மார்க்க விசயத்தில் தர்க்கங்கள் ..

ஒரு ,அளவிற்கு மேல் போகுமானால்

அழையா விருந்தாளியாக நாத்திகம் வந்து

நுழைந்து விடும் ...நமக்கு நல்ல விளக்கம் தேவை

தர்க்கத்தில் நாமேவெல்ல வேண்டும் எண்ணத்துடன்

எதிர்கொள்வதை தவிற்க வேண்டும் .....

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

இமாம் ஆஜுரி ரஹீமஹுல்லாஹ் (ஹி 360 ) அவர்கள் , தங்களுடைய
கிதாப் , கிதாபுஸ் ஷரியா வில் 13 வது பாடத்தில் பின்வருமாறு ஒரு
தலைப்பே இட்டுள்ளார்கள். " மார்க்கத்தில் தர்க்கம் , விவாதம் செய்வதன் இழிவு "
2 . இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் கூற்று :
மார்க்க விடயத்தில் தர்க்கங்களை விட்டு விடுவது ஸுன்னாவின் அடிப்படைகளில் ஒன்றாகும். ஆதாரம் கிதாப் உஸுளுஸ் ஸுன்னா

3 . இமாம் லாலக்காயி ( ஹி 418 ) அவர்கள் தங்களுடைய ஷரஹ் இஃதிகாத்
அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ என்ற கிதாபில் ஒரு பாடத்திற்கு பின்வருமாறு தலைப்பிட்டுள்ளார்கள்.
" தர்க்கமும் வாதமும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது பற்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்த வந்துள்ள அறிவிப்புகள் "

4 . இமாம் இப்னு பத்தால் அல் அக்பரி ( ஹி 387 ) அவர்கள் , அல் இபானதுள் குப்ரா என்ற அவர்களுடைய கிதாபில் பின்வருமாறு தலைப்பிட்டுள்ளார்கள்.
" மார்க்க விடயத்தில் தர்க்கம் , விவாதம் புரிவதின் இழிவும் , தர்க்க வாதிகளில்
இருந்து எச்சரிக்கையும் "

கன்னியம்மிக்க இமாம்ங்களின் வழிமுறையில் மார்க்க விசியத்தில் தர்க்கம் விவாதம் போன்ற வைகளை கைவிட்டு நள்ள மார்க்க அறிஞ்ர்களிடம் பெற்றுக்கொள்வோம்.......இன்ஷா அல்லாஹ்

KALAM SHAICK ABDUL KADER said...

எங்களைச் சூழ மனிதர்கள் மட்டுமல்ல எங்களைச் சூழ ஆகாயமும் இருக்கிறது நான் இருக்கிறேன். நான் இருக்கக்கூடிய இடத்தில் ஆகாயம் இல்லை. என்னுடைய உடல்தான் இருக்கிறது. எங்களைச் சுற்றியிருப்பது எல்லாமே ஆகாயம்தான். நாங்கள் கொஞ்சம் (ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு) மாறிவிட்டோம் என்றால் அந்த இடத்தை ஆகாயம் வந்து பூரணமாக்கிவிடும்.
இன்னொரு இடத்திற்குச் சென்றால் அந்த இடத்தில் குறைந்திருக்கும். ஆக எங்களைச் (நம்மை)சுத்திவரயிருப்பது எல்லாமே ஆகாயம்தான். எங்களின் (நம்)உள்ளுக்குள்ளும் ஆகாயம்தான் உள்ளது. நாங்கள்(நாம்) மூச்சை இழுக்கிறோம் போகிறோம் வருகிறோம் இப்படி எல்லாம் உள்ளது. நாங்கள் (நாம்)தனியாக இருக்கவில்லை.
எல்லாப் பரிபூரணத்திலும் நாங்களும் ஒரு பகுதியாக எங்களுக்கு தெரிகிறது. அதாவது ஒரு விஜ் விஜூ என்றால் ஒரு பகுதி. ஒரு தாள் உள்ளது. அதில் ஒரு துண்டை எடுத்தால் அதுவொரு தாளின் பகுதிதான்.
(அதுபோல்) கண்ணைக் கொண்டு நாங்கள் (நாம்) பார்க்கிறோம்.
எப்போது பார்க்க முடியும்?
வெளிச்சம் இருந்தால்தான் பார்க்க முடியும்.
சரி எதைப் பார்க்க போகிறீர்கள் ?
ஒருபடத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் கண்பார்வையும் சரியாக இருக்க வேண்டும். வெளிச்சமும் இருக்கவேண்டும்.
படம் இல்லாவிட்டால் அதைப்பார்க்க முடியுமா?
வெளிச்சம் இல்லாவிட்டால் பார்க்க முடியுமா ?
கண்பார்வை சரியில்லாமல் பார்க்க முடியுமா?
எல்லாச் சக்திகளும் ஒன்று சேர்ந்து வருகிற சக்தி எங்களுக்குள் (நமக்குள்) உள்ளது.
அது அல்லாஹ்வுடைய சக்தி. இதைக் கொண்டு எங்களுக்குள் (நமக்குள்) அல்லாஹ்வுடைய சக்தி இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
எல்லாமே அல்லாஹ்தாலாவுடைய சக்திதான்.
வெளிச்சமும் அதுதான், அணுக்களும், ஆகாயமும் அதுதான், தண்ணீரும் அதுதான்.
அந்த சக்தியைக் கொண்டுதான் நாங்கள் (நாம்) இன்றைக்கு வாழ்கிறோம். இல்லாவிட்டால் வாழ முடியாது.
அல்லாஹ்தாலாவின் சக்தி எங்களுக்குள் இருக்கிறது என்பதை நாங்கள் (நாம்) உணரவேண்டும். ஆனால் (அது)ஒரு பகுதிதான்.
ஒரு தாள் இருக்கிறது அதில் நிறைய எழுதலாம். ஓரு கடிதமே எழுத முடியும். அதில் ஓரு துண்டை கிழித்து எடுத்தால் அதில் அந்தக் கடிதத்தை எழுத முடியுமா?
ஆக ஒரு தாளின் (துண்டின்)அளவு சக்திதான் எங்களுக்கு (நமக்கு) இருக்கிறது…(என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்).

இப்னு அப்துல் ரஜாக் said...

//நீங்கள் அல்லாஹ் பற்றிய நம்பிக்கையை அன்னன் பிஜே என்ற முதஜிலா கொள்கை சுமந்தவரிடம் அறிவை பெற்றிர்கள் என்றால்...அல்லாஹ்வின் பன்பை மருக்க வேண்டி வரும்....

மேலும் அவர் சகாப்பாக்கள் விளக்கத்தை விட்டு வேளியே சென்றவர்.//

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி காக்கா அவர்களே,

அல்லாஹ்,ரசல் ஸல் தவிர யாரையும் நான் பின் தொடர்ந்து செல்பவன் அல்ல.
யார் கருத்து குரான் - ஹதீசுக்கு ஒத்து இருக்கிறதோ அதை ஏற்பவன்,மற்றதை அல்லாஹ்வுக்குக்காக எதிர்ப்பவன்.அதனால்தான் இங்கு இந்த கருத்தாடல்கள்.மேலும் சாபி,ஹனபி என்று நாம் பிரிந்து கொள்ளக் கூடாதோ,அது போல சலபி என்றும் போடக்கூடாது என்ற எண்ணம் உள்ளவன்,அல்லாஹ் நமக்கு வைத்த பெயர் முஸ்லிம்,எனவே அல்ஹம்துலில்லாஹ் - அது போதும்.

---------------------------------

சித்திக் காக்காவின் கருத்தில் எனக்கு உடன்பாடே,எச்சரிக்கை அவசியம்.எந்நேரமும் குரான்,ஹதீஸ் மட்டும் கொண்ட இதயத்துடன் சிந்திப்பதும்,சொந்த விருப்பு-வெறுப்புக்களை கருத்தில் காட்டாதிருப்பதும் நேர்மையாக எழுதவும் வேண்டும்.எல்லாம் வல்ல அல்லாஹ்,ஷிர்கைவிட்டும்,நாத்திகத்தை விட்டும்,ஹராமை விட்டும்,பிரிவினைகளை விட்டும் நம்மை பாதுகாத்து,முழு முஸ்லிமாக மரணிக்க செய்வானாக,ஆமீன்

Yasir said...

ஆரோக்கியமான விவாதமாக இருந்தாலும் சமுதாய நலனைக்கருத்தில் கொண்டு அதிரைநிருபர் இப்பகுதிக்கு பின்னூட்டங்களை நிறுத்துவது நல்லது....வேண்டுமென்றால் இமெயிலில் அல்லது தனிநபர் தளத்தில் இதனைப்பற்றி தொடராலாம் என்பது என் கருத்து

இப்னு அப்துல் ரஜாக் said...

அதிரை நிருபரின் வேண்டுகோளுக்கு இணங்க
இன்ஷா அல்லாஹ்,இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

அல்லாஹ்,ரசல் ஸல் தவிர யாரையும் நான் பின் தொடர்ந்து செல்பவன் அல்ல

இந்த குர் ஆன் ஆயத்தை எவ்வாறு அமல் செய்விர்கள்......?

இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை நலவுடன் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (9:100)

அன்புடன் புகாரி said...

கவிஞர்களெல்லாம் இங்கே
சாடுதல்களால் கூடுதலாகவே
காயப்படுத்தப்பட்டார்கள்

கவிதை பற்றிய
நிஜ உண்மைகளை எடுத்து
உற்சாகமாய் முன்வைத்தேன்

தமிழ்த்தாய் வாழ்த்தைத்
தடுக்கிவிழச் செய்ய
கற் சொற்களை எறிந்தார்கள்

அன்போடு
விளக்கம் கொடுத்தேன்

மொழி என்பதென்ன
பெரிய கொம்பா என்றார்கள்

அறியாமை போக்க
ஆவன செய்தேன்

இணைவைத்தல் என்றால்
என்னவென்பதில் ஏகப்பட்ட முடிச்சுகளை
இதயங்களில் கொண்டிருந்தனர்

எடுத்துப் பிரித்து
இது இது இதுவென
வகைபிரித்து வரிசைப்படுத்தி
அடுக்கிக்கொடுத்தேன்

ஆராதனை என்ற தலைப்பில்
இங்கொரு கவிதை இடு என்றார்கள்
சங்கடம் மேலிட்டாலும்
விருப்பத்தை எரிக்கும்
நெருப்பானவனாய் இல்லாததால்
இருட்டு பேசுகிறது என்ற
கவிதையை இட்டேன்

இருட்டு பேசுகிறதை
எடுத்து வைத்துக்கொண்டு
ஏராளமானோர்
தாராளமான சந்தேகங்களோடு
எழுந்து நின்று
பேசு பேசென்று பேசினார்கள்

எல்லோரையும்
அமைதியாய் அமர வைக்கும்
இருக்கைகளாய் என் விளக்கங்களை ஈந்தேன்

ஒரு கவிதை
பல கவிதைகளை யாத்தன இங்கே
அள்ளியணைத்து வாழ்த்து மழை பொழிந்தேன்

இறைவன் என்பவன்
ஓளி மட்டுமே என்றார்கள்

அல்ல அல்ல இருட்டும் அவனே
என்று தெளிவுபடுத்தினேன்

அல்லாஹ் உருவமுடையோன் என்றார்கள்
கவிதையைக் கவிதை மனதோடு அனுகி
உண்மை அர்த்தத்தை உள்ளபடி உரைத்தேன்

நானே இங்கே
எதையும் தொடங்கவும் இல்லை
தொடரவும் இல்லை

வந்தவற்றுக்குத்தான்
எனது வழிகளைச் சொன்னேன்
சின்னச் சின்ன விளக்குகள் ஏற்றினேன்

பதிவின் தலைப்போடு
ஒத்துப் போகவில்லை என்று
முற்று முழுதாகக் கூறிவிடமுடியுமா?

கவிதை நடையில் இருக்கும்
குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களை
அனுகுவதில் உள்ள சிக்கல்களை அவிழ்ப்பது
தலைப்போடு இயந்ததென்றே நம்புகின்றேன்

இங்கோ அங்கோ இந்த இழை
எங்கே சென்று தொட்டிருந்தாலும்
அது கவிதை கவிதை கவிதை என்பதிலேயே
வட்டமடித்ததாய்த்தான்
என் சிற்றறிவு எனக்குச் சொன்னது

தெளிவு பெற்ற மார்க்க அறிஞர்கள்தாம்
யார் எவர்?

***தெளிவு*** பெற்றோர் என்றொரு சாரார்
உண்மையிலேயே உண்டோ?

அவர் சொல்வதெலாம் பிழையே என்றாலும்
அவற்றையே அந்த இறைவனும்
செவி சாய்த்துக் கேட்டு
வாய்பொத்தி வணக்கத்தோடு ஏற்கவும் வேண்டுமோ?

இறைவனுக்கும் உயிரினத்திற்கும்
இடைத் தரகர்கள்தாம் உண்டோ?

வளரும் அறிவே தரகரன்றி
ஆடியடங்கும் ஆட்களை எவரும்
சுட்டிக்காட்டிடக் கூடுமோ?

சிந்தனை விரல்களைச்
செயலிழக்கத் தாக்குதல்தான் தகுமோ?

தகுந்த தளமொன்றை
அமைத்துக் கொடுத்துவிட்டுத்
தடுப்புச்சுவர் எழுப்பி இருந்தால்
பாராட்டல்லவா தந்திருப்பேன்

இப்போது நான்
எப்படிப் பாராட்டுவது?

நீங்கள்தான் கூரவேண்டும்
நிருபர்களே

அன்புடன் புகாரி

அதிரை சித்திக் said...

அன்பும் நேசமும் நிறைந்த அன்பு கவி புகாரி அவர்களுக்கு

தங்களின் பின்னுடத்தின் மூலம் கடைசி பதிவில் தங்களின்

வருத்தம் கலந்த கருத்துபார்த்தேன் ..நான் எனது பார்வையில்

கவிதை ..வெறுக்கவில்லை .தற்காலத்தில் கவிதையின் .நடைமுறை

இஸ்லாத்திற்கு எந்த அளவிற்கு பொருந்தும் முழுமையாக கையாள தகுதி

வேண்டுமா என்ற ஐயப்பாடு எனக்குண்டு மார்க்க ஞானம் இல்லாத கவிஞர்கள்

இஸ்லாம் பற்றிய கவி படிக்கும்போது பல சிக்கல் ஏற்படும் ..என்பதை மட்டுமே

பின்னூட்டத்தின் வாயிலாக இது வரை வலியுறுத்தினேன் ..நான் என் வாழ்வில்

பத்திரிகையாளனாய் சில காலம் கழித்திருக்கிறேன் ..,அந்த பத்திரிகையாளனின் புத்திதான்

தங்களை ஆராதனை என்ற தலைப்பில் பாட சொன்னது ..இப்படிப்பட்ட தர்க்கம் வரவைக்கவே

கையாண்டது .. செய்தியாளன் தான் எதிர் பார்க்கும் வார்த்தையை நேர் காணலுக்கு சென்ற இடத்தில

கையாளும் தந்திரம்அதையே தங்களிடம் கையாண்டேன்

தாங்கள் நல்லகவி என்பதுமுன்னரேதெரியும்..,

தங்களின் ஆற்றல் தமிழ் இலக்கிய வட்டாரத்தில் செழித்து ஓங்கட்டும் ..\

,இஸ்லாத்தை பற்றி நாம் ஞானத்தைஅவ்வளவாக பெறவில்லை என்பதால் ..,

..இஸ்லாமிய இலக்கியத்தின் பங்கு தற்காலத்திற்கு எவ்வளவு தேவை என்பதை ஆசிரியரே கூறட்டும்

தங்களின் மேலான நட்பு இவ்வலை தளத்தின் மூலம் தொடரட்டும் ..அஸ்ஸலாமு அல்லைக்கும் ..,

Unknown said...

பின்னூட்டம் வரம்பைக் கடந்துவிட்டது...!
போதும், போதும், போதும், போதும்...!
பதிவு எண் பத்தொன்பது உறங்குகின்றது.
அங்கே கொஞ்சம் போய்ப் பாருங்களேன்...?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு