Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மெளனம் பேசியதே.... 23

ZAKIR HUSSAIN | September 11, 2013 | , , , , , ,


இது எல்லோர் மனதிலும் புகுந்திருக்கும் வலி. நிவாரணத்தைலம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் குறுக்கில் படுத்திருக்கும் குழந்தையை தாண்டாத மெளனப்போராட்டம்.

பிறந்து பின் பள்ளி செல்லும் வரை பெற்றோருடைய விலங்கு, பின் பள்ளிப் பருவத்தில் கற்பனையில் வாழும் காலங்களில் கனவுகளின் விலங்கு, பின் மாயம் கலையும் முன் வாழ்க்கையின் அடிவாரத்தில் மனைவியின் விலங்கு... காலம் ஒரு ஓட்டப் பந்தய வேகத்தில் தொடங்க பிள்ளைகள் பின் தொடர உறவுகளின் விலங்கு... என்றாவது ஒருநாள் வானம் வெளுக்குமா, அதன் திசை நோக்கி நடந்து எழுத மை வாங்கும் திராணி வாங்கி   விட்டுப்போன வாழ்க்கையை நிரப்புவோமா?

இத்தனை பயணங்களிலும் காரை நிறுத்தி வேப்பமரக் காற்றில் பாய் விரித்து படுக்கும் தனிமையை எங்கு தொலைத்தோம். 

மலை மீது ஏறி நுனிப்பாறையின் விளிம்பில் நின்று அகன்ற பள்ளத்தாக்கை முகத்துக்கு முன் நிறுத்தி எப்போது கத்தித்தீர்த்தோம்.
 

காற்றின் சீற்றத்தில் ஏரியில் வரும் தொடர் அலைகளை எப்போது கால் நனைக்க கடைசியாக நின்றோம்.

பூமியில் காய்த்த பிரச்சினைகளால் வானத்து மேகங்களும் நம் வாழ்க்கையை விட்டே கண்காணா தூரம் போய் விட்டதா?.

மீண்டும் ஒரு நாள் மறுபடியும் பிறந்து வந்தா கரும்பலகை பார்த்து பள்ளியில் உட்காரப்போகிறோம்.

கொட்டும் அருவியில் குளிக்கும்போது அருவியை மீறி சத்தம் போட்டதுண்டா?

எப்போதாவது ஒரு நாள் கண்ணுக்கு கரை எட்டா தூரம் கடலுக்கு போய் அசையாத படகில் படுத்துக் கொண்டு மாலை நேரத்தில் மங்கும் வெளிச்சத்தில் மின்னல் நடனம் பார்த்து தூரமாய் கொட்டும் மழை பார்த்ததுண்டா?



விளையாத நிலத்துக்காக மழை வேண்டி இறைவனிடம் மண்றாடியது எப்போது?.  

மருந்தை யாசிக்கும் நோயாளிக்கு பணம் தந்து பிணி போக்கி மகிழ்ந்தது எப்போது.?

இரவின் மங்கிய வெளிச்சத்தில் விரும்பி பாடிய பாடல்கள் எப்போது.

வாழ்க்கையின் விசை தொலைபேசியைக்கூட அதன் விருப்பத்துக்கும் அழைப்புக்கும்தான் தொட வைக்கிறது. என் விருப்பம் மெளனிக்க நித்தம் அழைத்து அடிமையாக்கும் தொலைபேசியின் சத்தம் அற்ற நட்ட நடுக்காட்டில் என் கால்கள் மற்றும் கற்பனையில் நடக்க வழக்கம்போல், “வரும்போது பிரட் வாங்கிட்டு வாங்க வில் கற்பனை சுகம் அனைத்தும் சரிந்து விழும் சீட்டுக் கட்டாய்.

எப்போதாவது ஒரு முறை கேட்கும் பழைய பாடலிலும், சின்ன வயதில் பயன்படுத்திய சென்ட்டின் வாசனையில்  தொலைந்து போன இளமையும் , பிள்ளைகளின் கனவை சுமக்க நாம் பொதிகழுதை ஆகிப்போன சூழ்நிலையும் கனவுகளில் மட்டும் வாழசொல்கிறது. விடுமுறையின் விடிகாலை போல் உற்சாகம் தருகிறது. 

உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரன் பார்ப்பது தர்மம் போடும் மக்களின் கால்களைத்தான், முடி வெட்டுபவர் பார்ப்பது என்னவோ நடப்பவர்களின் தலையை மட்டும் தான்...எல்லோருக்கும் ஒரு இலக்கு இருக்கிறது. வாழ்க்கையில் பின்னப்பட்ட வலையில் நாம் மட்டும்தான் வாழ மறந்து நமக்காக வாழ்கிறோமா? இலக்கு இல்லாமல்..
 
தேர்வு முடிந்தும் பள்ளிக்குப்போகும் மாணவனாய் மனிதனை மாற்றியது எது?, பின்னப்பட்டது  எதுவும் பிரியாமல் இருக்கிறது, மனிதன் மட்டும் கலைத்து போடப்பட்டானா?.

இனிமேலாவது நம் மனதுக்கு உணவளிப்போம், வயிற்றை நிரப்பியது நாட்களை நகர்த்தவல்ல.நாம் நகராமல் நங்கூரம் போட்டவர்களை அடையாளம் காண்போம்.

மழையில் ஒருமுறையேனும் மொத்தமாக நனைந்து பார்ப்போம்.

சுதந்திர உணர்வுகளை எதில் எல்லாம் தொலைத்தோம்?...
யாரோ ஒருவன் வானத்திலிருந்து குதிப்பதை வேடிக்கை பார்த்து..
யாரோ ஒருவனின் பயணக்கட்டுரை படித்து
யாரோ ஒருவன் ஆழ்கடல் அமிழ்ந்து பார்த்த வர்ண ஜாலங்களில்
யாரோ ஒருவன் சைக்கிளில் உலகம் சுற்றிய செய்தி படித்து...
யாரோ ஒருவனின் பனிமலை ஏற்றத்தை பார்த்து
யாரோ ஒருவனின் பச்சைக்கம்பள வயல் பார்த்து.
யாரோ ஒருவனின் செயல் பார்த்து சொக்கும் நாம் எப்போது நமக்காக வாழப்போகிறோம்.

இன்றைய பொழுதிலாவது சொந்த சிறையின் சுவற்றில் ஒரு சின்ன ஒட்டை போட்டு சுதந்திரம்  சுவாசிப்போம்...


நாளை இதுவே பூமிப்பரப்பை உயரத்திலிருந்து பார்க்கும் சுகந்த  காலங்களுக்கு ஆரம்பமாய்..

உழைத்து களைத்தவர்களின்  வியர்வை துடைக்க துண்டு எடுத்த தரவும் பழைய லெட்ஜர் பார்த்து சேவை செய்யும் இந்த நவீன உலகில் நாம் ஒரு நாள் வாழ்வோம் என்று காத்திருந்தே காலத்தை போக்கிவிடக் கூடாதென்றே இதை எழுதினேன்.

மனசு முழுக்க டன் கணக்கில் கோபத்தையும், வெறுப்பையும் சுமந்து கொண்டு நாம் வாழ முடியாது.

செத்தவனின் கதையை ஒரு வாரத்துக்கு மேல் பேசினாலே 'அலவு வலிக்குதப்பா' என்று ஆதங்கப்படும் உலகம் இது. இது தெரியாமல் உயிரோடு இருக்கும்போது மட்டும் ஏன் நமக்கு ஒரு நூற்றாண்டு பிடிவாதம்.

உங்கள் நடை பாதையெல்லாம் முள்ளை கொட்டியவர்களை மொத்தமாக மன்னித்து விடுங்கள்.  

உங்கள் முதுகுக்கு பின்னால் மண்வாரி வீசி முகத்துக்கு முன்னால் மலர் தூவியவர்களை புன்னகையோடு கைகுலுக்குங்கள். 

குப்பைகளை நெஞ்சில் சுமந்து புனிதம் போதிக்க முடியாது.

தூங்க முடியாத ஏக்கத்துடன் தொலைதூரம் போக முடியாது.

தனிமையும் மெளனமும் உங்களுக்கு மட்டும் உரிய பங்கு போட முடியாது சொத்து.  

இன்றையிலிருந்து உங்களுக்காக வாழுங்கள்.

ZAKIR HUSSAIN

23 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !

எனக்குள் ஏதோ சொல்கிறது ஒவ்வொரு வரியும் ! மற்றுமொரு பாதையை காட்டியிருக்கிறது… அழகை ஆராதித்தவனை அனுபவிக்கவும் சொல்கிறது !

Classic ONE !

Shameed said...

//மருந்தை யாசிக்கும் நோயாளிக்கு பணம் தந்து பிணி போக்கி மகிழ்ந்தது எப்போது.?//

இதை படித்ததும் என் நினைவுக்கு வந்தது சுமார் 15 வருடங்களுக்கு முன் நாம் இருவரும் உங்கள் வீட்டை விட்டு வெளியோ வரும்போது உங்களின் தூரத்து சொந்தக்கார முதியவர் வந்து உடம்பு சரியில்லை வாப்பா என்றதும் பாக்கெட்டில் இருந்த பணம் அத்தனையையும் எடுத்து கொடுத்து மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தது என் நினைவுக்கு வந்தது

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Jakhir Hussain,

Fantastic and motivating thoughts!!! Rips out the human's self imposed artificial negativities, pushes to live life by realizing self.

Your words above are having phylosophy, aesthetics, poetic, and self relecting elements.

Keep it up.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

sabeer.abushahruk said...

ஜாகிர்,

இது உன் மெளனம் பேசியதைப் பற்றியோ என்று நினைத்துப் படிக்க ஆரம்பித்தேன். அப்படித்துத்தான் துவங்கியும் இருக்கிறாய். ஆனால், முழுவதும் படித்து முடித்தப்பிறகுதான் தெரிகிறது இது எத்தனையோ உள்ளங்களில் உறங்கிக்கிடக்கும் மெளனம் பற்றியது என்று.

உன் கட்டுரையில் நீ சொல்லியிருக்கும் பல ஏக்கமான எதிர்பார்ப்புகளில் சிலவற்றை மொத்தமாக அனுபவித்தது சமீபத்திய கோலாலம்ப்பூர் பயணத்தின்போதுதான்.

நீ எங்களைத் தங்க வைத்திருந்து விடுதியின் கீழே அமைந்துள்ள உணவகத்திற்கு வந்தபோது சட்டென்று ஈரக்காற்றோடு பேய்மழை பெய்யத்துவங்கியது. அந்த மழையில் அனுதினம் நனையும் அந்த உணவகத்தின் ஊழியர்கள் நனையாமல் தம்மைக் காத்துக்கொள்ள நாங்களோ உற்சாகமானோம்.

சாரல் அடிக்கும் வராண்டாவில் நாற்காலி போட்டு அமர்ந்தோம் மழைத்துளிகளை காற்று அள்ளி அள்ளி எங்கள் ஆடைகளின்மீது தெளிக்க, மின்வெட்டு நிகழாத அந்த அந்தி மாலையை மிகவும் பிடித்திருந்தது. சிங்கப்பூர், கத்தார், துபை, கலிஃபோர்னியா என்று கலந்துகட்டிய குழுவான எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

'டேய். சிகரெட் பிடிக்கலாமா?' என்று கேட்டவனுக்கு சிங்கப்பூரான் தவிர நாங்கள் ஒத்துக்கொள்ள, ஆளுக்கு ஒரு பெரிய கிளாஸில் இஞ்சி ட்டீயும் ஒரு பாக்கெட் மால்பரோவும் வாங்கி மூவரும் ஆளுக்கு ஒன்னு மட்டும் பிடித்து, பல ஆண்டுகள் பிடிக்கவில்லையாதலால் இருமி, மொத்த பாக்கெட்டையும் தூக்கி வீசினோம்.

எங்கோ "ச்சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே' ஒலித்துக் கொண்டிருந்தது.

நாங்கள் அந்த 3 மணிநேரம் "வாழ்ந்தோம்"

sabeer.abushahruk said...

//பிறந்து பின் பள்ளி செல்லும் வரை பெற்றோருடைய விலங்கு, பின் பள்ளிப் பருவத்தில் கற்பனையில் வாழும் காலங்களில் கனவுகளின் விலங்கு, பின் மாயம் கலையும் முன் வாழ்க்கையின் அடிவாரத்தில் மனைவியின் விலங்கு... காலம் ஒரு ஓட்டப் பந்தய வேகத்தில் தொடங்க பிள்ளைகள் பின் தொடர உறவுகளின் விலங்கு...//

மேலே சொன்ன விலங்குகள் வாய்க்கப்பெறாதவனே விலங்கு. மனிதனுக்கு மேற்சொன்ன அத்துணை விலங்குகளும் வாய்த்துவிட்டால், அவற்றையும் அவன் அணிந்துகொண்டு துவங்கிய பாதையைக் கடந்துவிட்டால் அதுதான் வெற்றி. அதுதான் சுகம்; அதில்தான் வாழ்ந்த திருப்தி எஞ்சி நிற்கும்.

அந்த பயணத்தின்போது இடைவேளை எடுத்துக் கொண்டு வேண்டுமானால் உன் மெளனம் பேசட்டும். அடிமனதில் இருக்கும் ஆசைகளை அசைபோட்டுப் பார்ப்பதும் அவற்றில் சுகமானவற்றை அனுபவித்துப்பார்க்க நினைப்பதும் தனிமனித விருப்பங்கள். வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்போது ப்ரெட்டும் பாலும் வாங்கிப் போகும் நமக்கு தனிமனித விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள நேரமும் இல்லை; அவ்வளவாக நாட்டமும் இல்லை. அதற்கு, கடந்தமுறை நீ இந்தியா வந்தபோது வேட்டைக்குப் போனோமே அப்படி ஒரு பயணம் அப்பப்ப வாய்த்தாலே போதுமானதுதான் என்கிறேன்.

என்னன்றே?

sabeer.abushahruk said...

ஆனால், சகோ அஹ்மது அமீன் சொல்வதுபோல் இம்முறை உன் தமிழ் அழகாக இருக்கிறது; வாசிப்பிற்கேற்ப அர்த்தங்களை அள்ளித் தருகிறது. ஒவ்வொரு வாக்கியமும் ஒவ்வொரு உணர்வை உட்புகுத்தி நிலைநிறுத்தி வைத்து விடுகிறது.

ஒரு ச்சேஞ்சுக்காக, ஹாஸ்டல் மெஸ் மூடிய காலகட்டத்தில் உன்னோடு உட்கார்ந்து ராயப்பேட்டை உட்லன்ட்ஸில் ஒரு வெஜிட்டேரியன் சாப்பாட்டை நெய் பருப்புப்பொடியெல்லாம் போட்டு சாப்பிட்ட ஒரு திருப்தியும் மாலையில் யாத்கார் லெஸ்ஸியில் பிரத்யேக வாசத்தோடான தேநீரும் பருகிய சுகம் எனக்கு இந்த ஆக்கத்தை வாசிக்கும்போது கிடைத்தது.

ZAEISA said...

இந்த பதிவு சகோ;ஜாகிரின் பதிவுகளில் ஒரு மாறுபட்டது.திரும்ப,திரும்ப,யாருடைய பதிவு என்று பார்க்க வைத்து விட்டது.class .......வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

நான்
என்கிற தனிமை
நாங்கள் என்றானதால் இனிமை

உள்ளக் கிடக்கைகள்
மனத்தின்
உள்ளே கிடக்க
செல்லச் சிணுங்களும்
சில்லறைச் சிக்கலுமாய்
வாழ்க்கை கொடு இறைவா

பூட்டிய விலங்குகளை அகற்றி
அணிந்துகொள்ள
விலங்குகளைக் கொடு இறைவா

மேலும்
துணிந்துசெல்ல விளக்கிக்கொடு இறைவா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா...

உண்மையில் உங்கள் பதிவை வாசித்தாலே ஒரு உற்சாகம். இது நான் எப்போதும் சொல்லுவது. நல்ல அருமையான motivational thoughts. சபீர் காக்கா சொல்லியது போல் இது ஒரு உள்ளத்தில் உள்ள மெளனமல்ல, நிறைய உள்ளங்களில் உள்ள மெளனங்கள்...

//உங்கள் நடை பாதையெல்லாம் முள்ளை கொட்டியவர்களை மொத்தமாக மன்னித்து விடுங்கள். ///

இது தான் நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித்தந்த நற்பண்களில் தலைச்சிறந்த ஒன்று.

ஆனால் இன்றோ பலர் அவனை என்ன செய்கிறேன் பார் என்று கூறி ஃபிர்அவுனின் வாரிசுகளாக வளம்வந்து எப்படியாவது பிறரை கேவலப்படுத்தி பழிவாங்க துடிக்கிறார்கள்.

நம் அனைவருக்கும் இவ்வுளகில் BEST ROLE MODEL, THE ONE AND ONLY நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டுமே. அவர்களின் அறிவாற்றல், நீதி செலுத்துதல், பொருமை, நிதானம், மன்னிக்கும் குணம் என்று ஏராலமானவைகளை கொஞ்சம் கொஞ்ச எடுத்து வாழ்நாளில் கடைப்பிடிக்க ஆரம்பித்தாலே போதும், எந்த ஒரு பிலாஸபியும் தேவையில்லை.

"அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும்" தொடரில் இந்த வாரம் முதல் நபி(ஸல்) அவர்களின் நற்பண்புகளோடு உள்ள சம்பவங்களை தொகுத்தளிக்க ஆரம்பித்துள்ளேன். நிறைய அறியப்படாத தகவல்கள் வரும் வாரங்களில் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்..

ஜஸக்கல்லாஹ் ஹைரா.. காக்கா...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உள்ளக்கிடங்குகளில் உறைந்து கிடக்கும் மெளனம் இவைகள்.
சிறப்பான தமிழால் தட்டி எழுப்பி அதுவே உங்களால் பேசியது போன்ற உணர்வு.

Shameed said...

கட்டுரையை படித்ததும் மனதுக்குள் ஒரு உந்துதல் ஏற்ப்பட்டுள்ளது

Yasir said...

மாஷா அல்லாஹ்....இந்த மெளனங்களை மொவுத்தாக்கிவிடாமல் நேரம் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ளவேண்டும்...மலேசியாவில் நீங்கள் கவிக்காக்கா வாழ்ந்த அந்த 3 மணி நேரத்தைபோல...ஏங்க வைத்துவிட்டீர்கள் ஜாஹிர் காக்கா..வித்தியாசமான கவிதை தொனி கலந்த ஆக்கம்...இந்த மெளனம்தான் எங்கள் எல்லோரின் ஏக்கம்

Abdul Razik said...

// குப்பைகளை நெஞ்சில் சுமந்து புனிதம் போதிக்க முடியாது."// WHAT AN EXCELLENT SENTENCE.

Rubbished heart, how can reveal a holy preach? Even if, how it will receognize by a satisfied heart?? Never, Never.... Excellent Article with a stunning panorama.
Abdul Razik
Dubai

அதிரை தாருத் தவ்ஹீத் said...

இரண்டு தடவை என் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு படித்த பிறகும் எழுதியவர் ZAKIR HUSSAIN என்றுதான் பதிவாகியிருக்கிறது.

Anonymous said...

அஸ்ஸலாமுஅலைக்கும்[வராஹ்]

//மீண்டும் ஒருமுறை கரும் பலகை பார்த்தா பள்ளியில் உட்காரப் போகிறோம்/ /

தொடக்கத்திலேயே கரும்பலகை பார்த்து கற்றதனால் படித்தவனின் மனமும் கருப்பானது! பார்வையும் கருப்பானது! அறிவும் கருப்பானது! ஆதனால் கருப்பு மேகமும் விதவைக் கோலம் பூண்டு வெண்ணிற ஆடையுடுத்தி மல்லிகை தேர் ஏறி வான வீதியில் ஊர் வலம் வருகிறது!. மழை இல்லை;
தேருக்கு வடம் பிடிப்பதோ வரன்ற காற்று!

//கனவு காணமட்டுமே சுதந்திரம்// அதற்கும் ஒரு 'மின்வெட்டு'' கை'க்கு கிட்டாத கடந்த கால 'ஆசைக்கனவுகளின்' அசைபோடல்'! பெற்றதை விட்டதும் நாமே! பெறக் கூடாததை பெற்றதும் நாமே!; நமக்கு நாமே கைவிலங்கு, கால்விலங்கு, மொழிவிலங்கு, விழிவிலங்கு, வழிவிலங்கு, வாய்விலங்கு போட்டோம்!. போடவும் விட்டோம்! நீட்டு என்று சொன்னான். நீட்டினோம்; போட்டான். விலங்கை செய்தவன் அதை போட்டுதானே ஆகவேண்டும்?. நமது சுயத்தை நாமே தானம் கொடுத்தோம்'! பாரிவள்ளல்' என்ற ஒருகனவு!

• மருமகனே ஜாஹிர் !உன்வரிகள் மூடியிருக்கும் விழியினுள் புகுந்து இதயவீணையில் சுரம்மீட்டுகிறது !
• புதியசிந்தனைகளுக்கு ஆற்றோரம் ஊற்று பறிக்கிறது.புதியதலைமுறைகள் குடத்தை நிறப்பிக்கொண்டால் நலம்!
• .புத்தி சாலிகள் மட்டுமே குடத்தை கையில் எடுப்பார்கள்!.

Sமுஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
ம்ம் எப்படி ஆரம்பிப்பது???ஆங்!இப்படி எழுதிவிடலாமா?இல்லை!அப்படி எழுதலாமா? ஒரே குழப்பம். இதற்கு கருத்து சாதாரணமாய் எழுதுவது!சும்மா மயிலிறகால்(தர்காவில் உள்ளதல்ல)மெல்ல வருடிவிட்டதுபோல இருக்குதுங்க!இதை அனுபவிக்க கொடுத்துவைக்கனும்.மேலும் பிறருக்காய் காய்கிறேன்னு இருப்பதை சற்று தள்ளிவைத்து( நிறுத்திவைத்தல்ல)இப்படி இதில் சொல்லப்பட்ட இன்பத்தில் நனையனும்.கவிகாக்காவும் "சகா"க்களும்
கொடுப்பினை உள்ளவர்கள் அந்த "சாகா" அனுபவம் வாய்க்கப்பெற்றதால்.மருத்துவரய்யா !ஆக்கம் மன நல(ம்) வைத்தியத்திற்க்கான வழி சொல்லுது. வாழ்த்துக்கள்.

KALAM SHAICK ABDUL KADER said...

உள்ளங்களில் உள்ளதை உள்ளபடியே வெளிக்கொணர்ந்த உளவியலாரின் ஓர் உன்னத ஆக்கம்!

காலைப்பூ பனிகுளிராய் கதிரவனின் ஒளிக்கீற்றாய்
மாலைப்பூ மணம்வீசும் மல்லிகையாய் மயக்கவரும்
சோலைக்கா வண்டினங்கள் செவிபாயும் மெல்லிசையாய்
பாலைவனச் சோலையென படித்ததுமே உணர்ந்தேனே!

மௌன ராகம்
ஔடத ரகம்
உணர்வும்
உடலும்
உயிருடன்
ஒன்றினைந்து
ஓர் இன்ப வெள்ளம்
உள்ளத்தின் ஆழமானப்
பள்ளத்தில் பாய்ந்தது!

படிக்கட்டுகளோ
வாழ்க்கைப் பாடம்
மௌனம் பேசியதோ
வார்த்தைக் கிரீடம்!


Ebrahim Ansari said...

அன்பான தம்பி ஜாகிர்!

இரண்டு முறை மச்சான் போன் செய்து ஜாகிருடைய பதிவு வந்திருக்கு படித்தாயா என்று கேட்டபோதும்

தம்பி அபூ இப்ராஹீம் அவர்களும் போன் செய்து உணர்ச்சிவசமான இந்தப் பதிவைப் பற்றி சொன்னபோதும் என்னால் படிக்க முடியவில்லை. இணைய தள இணைப்பு பற்றிய சிறு பிரச்னை.

அதனால் முன்னொரு காலத்தில் பட்டுக் கோட்டை ராஜாமணி தியேட்டரில் தாய் சொல்லைத்தட்டாதே படத்துக்கு மேட்னி ஷோவுக்குப் போய் டிக்கெட் கிடைக்காதமல் முதல் ஷோ வரை காத்திருந்து பார்த்து வந்தது போல் காத்திருந்து படிக்கவைத்துவிட்டது இந்த ஆக்கம்.

நான்கு முறை திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்த வேளையில்

" என்னங்க! சோறு போட்டு ஆறுது! என்னத்த அப்படி வச்ச கண் மாறாமல் படிகிரீங்க? என்ற குரல் ஐந்தாவது முறையும் கேட்டது. அதனால் மீண்டும் ஒருமுறை

//இன்றைய பொழுதிலாவது சொந்த சிறையின் சுவற்றில் ஒரு சின்ன ஒட்டை போட்டு சுதந்திரம் சுவாசிப்போம்...//

என்ற வரிகளை படித்துவிட்டு உணவுண்டேன்.

நான் பாராட்டவேண்டுமென்பதற்காகக் கூறவில்லை. எவ்வளவோ எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் படித்து இருக்கிறேன். பாரதியார், பாரதி தாசனின் வசன கவிதைகளையும் மனப பாடம் செய்து இருக்கிறேன்.

இப்போது உனது இந்த வரிகளை நான் நினைவில் நிறுத்த நெட்டுருப் போடப் போகிறேன்.

கல்வி நிலையங்களில் இந்த பதிவைப் படி எடுத்து ஒவ்வொரு மாணவர்களின் கரங்களிலும் தரப்பட வேண்டுமென்று ஆசைப் படுகிறேன். இன்சா அல்லாஹ் இதையும் நானே செய்தால்தான் எனக்கு திருப்தி ஏற்படும்.

ஏற்பாடு செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

அன்பான தம்பி ஜாகிர்!

இரண்டு முறை மச்சான் போன் செய்து ஜாகிருடைய பதிவு வந்திருக்கு படித்தாயா என்று கேட்டபோதும்

தம்பி அபூ இப்ராஹீம் அவர்களும் போன் செய்து உணர்ச்சிவசமான இந்தப் பதிவைப் பற்றி சொன்னபோதும் என்னால் படிக்க முடியவில்லை. இணைய தள இணைப்பு பற்றிய சிறு பிரச்னை.

அதனால் முன்னொரு காலத்தில் பட்டுக் கோட்டை ராஜாமணி தியேட்டரில் தாய் சொல்லைத்தட்டாதே படத்துக்கு மேட்னி ஷோவுக்குப் போய் டிக்கெட் கிடைக்காதமல் முதல் ஷோ வரை காத்திருந்து பார்த்து வந்தது போல் காத்திருந்து படிக்கவைத்துவிட்டது இந்த ஆக்கம்.

நான்கு முறை திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்த வேளையில்

" என்னங்க! சோறு போட்டு ஆறுது! என்னத்த அப்படி வச்ச கண் மாறாமல் படிகிரீங்க? என்ற குரல் ஐந்தாவது முறையும் கேட்டது. அதனால் மீண்டும் ஒருமுறை

//இன்றைய பொழுதிலாவது சொந்த சிறையின் சுவற்றில் ஒரு சின்ன ஒட்டை போட்டு சுதந்திரம் சுவாசிப்போம்...//

என்ற வரிகளை படித்துவிட்டு உணவுண்டேன்.

நான் பாராட்டவேண்டுமென்பதற்காகக் கூறவில்லை. எவ்வளவோ எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் படித்து இருக்கிறேன். பாரதியார், பாரதி தாசனின் வசன கவிதைகளையும் மனப பாடம் செய்து இருக்கிறேன்.

இப்போது உனது இந்த வரிகளை நான் நினைவில் நிறுத்த நெட்டுருப் போடப் போகிறேன்.

கல்வி நிலையங்களில் இந்த பதிவைப் படி எடுத்து ஒவ்வொரு மாணவர்களின் கரங்களிலும் தரப்பட வேண்டுமென்று ஆசைப் படுகிறேன். இன்சா அல்லாஹ் இதையும் நானே செய்தால்தான் எனக்கு திருப்தி ஏற்படும்.

ஏற்பாடு செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

crown said...

/இன்றைய பொழுதிலாவது சொந்த சிறையின் சுவற்றில் ஒரு சின்ன ஒட்டை போட்டு சுதந்திரம் சுவாசிப்போம்...//

என்ற வரிகளை படித்துவிட்டு உணவுண்டேன்.

நான் பாராட்டவேண்டுமென்பதற்காகக் கூறவில்லை. எவ்வளவோ எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் படித்து இருக்கிறேன். பாரதியார், பாரதி தாசனின் வசன கவிதைகளையும் மனப பாடம் செய்து இருக்கிறேன்.

இப்போது உனது இந்த வரிகளை நான் நினைவில் நிறுத்த நெட்டுருப் போடப் போகிறேன்.
Ebrahim Ansari சொன்னது…
கல்வி நிலையங்களில் இந்த பதிவைப் படி எடுத்து ஒவ்வொரு மாணவர்களின் கரங்களிலும் தரப்பட வேண்டுமென்று ஆசைப் படுகிறேன். இன்சா அல்லாஹ் இதையும் நானே செய்தால்தான் எனக்கு திருப்தி ஏற்படும்.

ஏற்பாடு செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
-----------------------------------------------------
ஒரு "அசல்" மேதை அன்சாரி காக்கா "நகலெடுத்து இதை வினியோகிக்க முன் வந்தது ஜாஹிர்காக்கா சாகித்திய அகாடமி'(சாதிச்சிட்டிய) வாங்குவதற்கு சமம்! இதை ஏதோ எழுதனும் நு எழுதல இது கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும். மோதிரகையால் உங்க தலையை அன்பா கோதிவிட்டுருக்காங்க அன்சாரி காக்கா!


ZAKIR HUSSAIN said...

முதலில் தாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும், தொடர்ந்து கார் எஞ்சினை விட நான் அதிகம் ஓடுவதால் உட்கார்ந்து எழுத நேரமில்லை. இரவில் வீட்டுக்கு வரவே நேரமில்லை ஆதலால் என் தலைக்கு உயர்ந்த பிள்ளைகளை பார்க்கும்போது அவர்கள் தலைகோதி "கொஞ்சனும்போல்" ஒரு ஏக்கம் வருகிறது.

அபுஇப்ராஹிம்....என் ஆக்கம் பற்றி உங்களின் தனி இ-மெயிலும் - இப்ராஹிம் அன்சாரி காக்கா எழுதியிருக்கும் உங்கள் டெலிபோன் சிபாரிசும் உங்கள் மனதில் மெளனமாக இருக்கும் இடத்தை எங்களுக்கு தெரிவிக்கிறது.

சாகுல் ...நான் , சபீர் போன்றவர்களின் வயதை விட குறைவாக இருந்தாலும் உங்களுக்கு எங்களைப்போல் 'இயற்கையின் மீது தீராத விருப்பம்" உங்களுக்கும் என்பது உங்கள் படங்களே சொல்லும். 'உந்துதல்' டெவலப் ஆக வாழ்த்துக்கள். இப்போது மலேசியாவில் உள்ள க்ளைமேட்டை அனுபவித்தால் உங்கள் குடும்பம் / வேலை எல்லாம் மறந்து இங்கே தங்கி விடுவீர்கள் என்பதற்கு நான் கியாரன்டி....மலேசியா = "நித்தம் , நித்தம் குற்றாலம்"

சபீர்...நீ எழுதிய அந்த உட்லன்ட்ஸ் / யாத்கார் எல்லாம் போய் மறுபடியும் வாழலனும்

ZAEISA & ஜமீல் நானா நீங்கள் இருவரும் எழுதியிருக்கும் கமென்ட்ஸ் பார்த்து நான் மறுபடியும் என் பெயர் இருக்கிறதா என செக் பன்ன வைத்து விட்டீர்கள்


தாஜூதீன் ..நீங்கள் சொன்ன விசயங்களை பற்றி இன்னும் கொஞ்சம் வித்தியாசமான முறையில் [ உங்கள் வழக்கமான எழுத்து நடையை விட்டு வேறுபட்ட்டு ] எழுதி ஒரு புதிய ஆக்கம் தந்தாலென்ன??

ZAKIR HUSSAIN said...

MHJ...இப்போதெல்லாம் முகநூலில் அதிகம் காண்கிறேன் உங்களை.

யாசிர் சமீபத்திய உங்களின் கவலைக்கு நான் மருந்து போட்டிருப்பதை உணர்கிறேன். Hope your relative is recovered.

Bro Abdul Razik , Ahamaed Ameen & Abdul Malik....Thank you so much for your tonic comments.

கிரவுன் & கவியன்பன் உங்கள் இருவரின் தமிழே இங்கு ஆட்சி செய்கிறது. உன்மையில் கிரவுன் பக்கத்தில் இருந்தால் இப்படி தமிழை கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்தால் அதே கருத்தை கவியன்பனுக்காக கிரவுன் எழியிருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டேன். Succesful Peopl always Think a like!!

அன்புமிக்க எஸ்.முஹம்மது பாரூக் மாமா அவர்களுக்கு...நீங்கள் சொன்னதும் சரிதான் விலங்கை மாட்ட நாம் தான் கையை நீட்டியிருக்கிறோம். ஆனால் விலங்கை மாட்டியது தெரியாமலெ நடமாடியிருக்கிறோம்.

Brother இப்ராஹிம் அன்சாரி ...நீங்கள் என் பதிவில் அப்படியே ஒன்றிப்படித்ததுபோல் நானும் உங்கள் கருத்தை படித்தேன். வீட்டிலும் பிறகு படித்து காண்பித்தேன். உங்கள் கருத்தை படித்த பிறகு ஏதாவது உறுப்படியாக எழுதனும் எனும் கடப்பாடு மனதுக்குள் பேசியது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு