Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்ணுக்கு (நித்)திரை ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | May 05, 2012 | , , ,

CATARACT- ஒரு வாரம் ஒரு கண் மட்டும் மூடி

செருப்பு இல்லையே என்று அழுதுகொண்டிருந்தேன் கால் இல்லாதவனை காணும்வரை- என்று ஒரு பழமொழி படித்து இருக்கிறேன்.

இதே போல்தான் இருந்த்து ஒரு வாரம் ஒரு கண் மட்டும் மூடி இருந்த நிலையில் இருந்த எனக்கு.

ஒரு கண் ஒரு வாரம் மூடி இருந்த நிலைகூட தாங்க முடியாத துன்பம் தந்தபோதுதான் - பிறவியிலேயே இரு கண்களும் இழந்தவர்களின் நிலையையும், இடையில் விபத்துகளில் கண்களை பறி கொடுத்தவர்களின் நிலையையும் அனுபவபூர்வமாக உணர முடிந்தது.

இறைவன் தந்ததை வைத்து திருப்தி அடையவேண்டும். இதையாவது தந்தாயே யா அல்லாஹ் என்று இறையை புகழும் மனப்பக்குவம் வேண்டும். நம்மைவிட இல்லாதவர்கள் இருக்கும் நிலைகள் உலகில் இருப்பதை உணர்ந்து நமக்கு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருத வேண்டும். வல்ல இறையோனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒருகண் மூடி ஒருவாரம் ஓய்வில் இருந்தபோதுதான்...

“தம்மின் மெலியாரை நோக்கி தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்கஎன்ற நாலடியார் வரிகளும்-


“உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடுஎன்ற கண்ணதாசன் வரிகளும் நினைவுக்கு வந்தன.

அது என்ன ஒரு வாரம் ஒருகண் மூடி இருந்த நிலை என்று சில அன்பர்கள் கேட்பதாக தெரிகிறது. அதைப்பற்றி ஒரு விழிப்புணர்வுக்காக நீங்கள் எழுதவேண்டும் என்று ஒரு அன்புத்தம்பி கட்டளை இட்டார். ஆகவே இந்தக்கட்டுரையில் அந்த அனுபவங்களைப்பற்றி எழுதப்போகிறேன். எவ்வளவு நாள்தான் நானும் பொருளாதாரம், மத்திய அரசு, மன்மோகன் சிங்க், அலுவாலியா என்று எழுதுவது? கொஞ்சம் மாறுதலுக்காக  மருத்துவம் பற்றி மருத்துவமனைப்பக்கம் ஒரு ரவுண்டு அடித்து வர மனம் நாடுகிறது. அதுவும் வழக்கம் போல அனுபவம்தானே மீண்டும் பேசப்போகிறது?

கடந்த 16/04/2012, அன்று காலை எனக்கு துபாய். N.M.C. SPECIALITY HOSPITALலில். வலது கண்ணில் ஏற்பட்ட பார்வைக் குறைபாடுக்காக அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை செய்தவர் அனுபவமிக்க இந்திய கண் மருத்துவர் டாக்டர். அமித் நாக்பால் என்கிற கர்நாடகத்தை சேர்ந்தவர். மழலை மொழியில் தமிழ் பேசுவார். “ரெண்டு வாருக்கு தலேலே தண்ணீ எண்ணே போடாதீங்கோ என்பது அவர் பேசும் தமிழுக்கு உதாரணம். ரெண்டு வார் = இரண்டு வாரம். இது இருக்கட்டும் சப்ஜெக்டுக்கு வருவோம்.

எனக்கு ஏற்பட்ட குறைபாட்டை CATARACT .என்று கூறுகிறார்கள்.


CATARACT  என்றால் என்ன?


அல்லாஹ்வின் படைப்பின் அற்புதங்களில் ஒன்று மனித விழிகள். இந்த விழிகளில் ஒவ்வொரு  லென்ஸ் அமைக்கப்பட்டு இருக்கிறது. நாம் உணர்கிற வகையில் காட்சிகள் இந்த விழி லென்சில் விழும். அதைத்தான் நாம் இன்னது என்று அறிந்து வருகிறோம். இந்த விழி லென்சின் மீது ஒரு மேகத்தைப்போன்ற அல்லது ஒரு மூடு பனியைப்போன்ற மூட்டம் விழுந்து படிவதும்- அதன் காரணமாக தெளிவற்ற பார்வை எற்படுவதும்தான் CATARACT  காடராக்ட் ஆகும். மழை காலங்களில் – மார்கழி மாதங்களில் எதிரே வரும் வண்டி தெரியாமல் போய்விடுகிறதே அதுமாதிரி நமது கண்களில் படியும் ஒருவகை மூட்டமாகும். இதன் காரணமாக நாம் காண்பதை தெளிவாக காண இயலாது- படிக்க முடியாது.

பொதுவாக மேகம் என்பதை மப்பு என்று வழக்கு மொழியில் கூறுவார்கள். மப்பு என்று வந்துவிட்டாலே அது ஒருவகை ஸ்தம்பிப்புத்தான். இயங்க முடியாது. குழந்தைகளுக்கு வயிற்றில் மப்பு என்று கேட்டிருக்கிறோம். வயிற்றை சுண்டிப்பார்த்தால் வலையப்பட்டி தவில் மாதிரி சத்தம் வரும் குழந்தைகள் எதுவும் சாப்பிட முடியாது. அதே போல் குடிகாரர்கள் பாஷையில் மப்பு எகிறிவிட்டதாக சொல்வார்கள். ஆகவே மப்பு என்பது இயங்காத்தன்மை. இப்படி ஒரு மப்புத்தான்  நமது விழிகளில் ஏற்படும். இது ஒரு நகராத ஆனால் வளர்கிற மேகக்கூட்டம். பார்வைப்படலத்தின் மேல் படுத்து உறங்கும் மேகக்கூட்டம்.

எனது விழிகளை கணிணி மூலம் பெரிதுபடுத்திகாட்டிய மருத்துவர் என்னையே அதைக் காணச் சொல்லிக் காட்டியபோது வீட்டில் கிரைண்டரில் இட்லி மாவு அரைக்கும்போது நாம் அருகில் நின்றால் சில மாவுத் துளிகள் நமது ஆடைகளில் தெறித்து விழுந்து ஒரு வட்டமாக புள்ளிகளாக வெண்மையாகத்  தென்படுமே அதுபோல் இருந்தது.

பெரும்பாலும் காடராக்ட் குறைபாடு நமது வயதோடு தொடர்புடையதாகும். குறிப்பிட்ட வயதைக் கடந்தோருக்கு  கண்களில் இந்த குறைபாடு ஏற்படுவது பொதுவானதாகும். இந்த குறைபாடு இரண்டு கண்களிலுமோ அல்லது ஏதாவது ஒரு கண்ணிலுமோ ஏற்படலாம். ஒரு கண்ணில் ஏற்பட்டால் அடுத்த கண்ணுக்கு இது “ அடுத்த வீட்டில் புளியானம்  தாளிப்பது மணப்பதுபோல் பரவாது. அத்துடன் இக்குறை ஏற்பட்டவர்களுடன் பழகுபவர்களுக்கும் தொற்றாது. ஒட்டுவாரொட்டி அல்ல.

காடராகட் உண்டாகக் காரணங்கள் எவை?
நமது விழிகளில் அமைக்கப்பட்டுள்ள லென்ஸ், நீராலும் புரோட்டினாலும் ஆனது ஆகும். ஒரு அபூர்வ படைப்பாக இந்த புரோட்டினின் வழியாகத்தான் காட்சிகள் லென்சுக்குள் செலுத்தப்படுகின்றன அத்துடன் லென்சுகளை தூய்மைப்படுத்திவைப்பதும் இந்த புரோட்டின்தான். வயதாகிறபோது இந்த புரோட்டின் சுருங்கி அல்லது உருண்டு , திரண்டு லென்சின் ஒரு இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்வதால் நாம் பார்ப்பது மறைக்கிறது. இதை உடனே சரி செய்யாவிட்டால் இந்த உருண்டு திரண்ட புரோட்டின், (இட்லி மாவு என்றே வைத்துக்கொள்ளுங்கள்.) விழி லென்சில் படர்ந்து நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும்.

இது மட்டுமல்லாமல் புகைப்பிடித்தலும், நீரழிவு நோயும் (SMOKING & DIABETES.) கூட இந்த காடராக்ட் தன்மை ஏற்படுவதற்கு காரணங்களாக அமையலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

யாருக்கெல்லாம் காடராக்ட் உண்டாகும்?
1..வயதானவர்களுக்கு – நாற்பது வயதுக்குமேல் உள்ளவர்கள் சோதித்துக்கொள்வது முக்கியம்.
2. இனிப்பு நீர் என்ற இனிமைப்பெயர்கொண்டவர்களுக்கு ஏற்படும்.
3. புகைப்பிடிப்பவர்களுக்கும் மது அருந்துபவர்களுக்கும் நிச்சயம் ஏற்பட்டே தீரும்.
4. தொடர்ந்து வெயிலில் நின்று வேலை செய்ய வேண்டியவர்களுக்கு ஏற்படும்.

எப்படி தடுத்துக்கொள்ள முடியும்?
வயதாவதிலிருந்து தடுத்துக்கொள்ள முடியாது. ( மேக் அப்தான் போடலாம்) ஆனால் வாழ்க்கையின் பழக்கங்களை ஒழுங்கு படுத்தித் தடுக்கலாம். வெயிலில் வேலை செய்ய வேண்டியவர்கள் குளிர் கண்ணாடிகளை அணிந்து கொள்வதுடன், தலையில் தொப்பி போட்டுக்கொள்ளலாம். ( யாரங்கே! தொப்பி போடுவதை எதிர்ப்பவர்கள்? இது மருத்துவம் – இதற்காகவாவது போடக்கூடாதா?) சூரியனின் நுண்கதிர்கள் கண்ணுக்குள் நேரடியாக பாய்வதில் இருந்தும்  , தொப்பி இல்லாத  தலைவழியாக எமிகிறேஷன் இல்லாமல் இலங்கை வழி போவதுபோல் தலையின் வழியாக கண்ணுக்குள்  பிம்பம் அடித்து நுழைவதையும் தடுக்கலாம்.

புகைப்பிடிப்பதைத்தடுத்துக்கொள்ளலாம். வாய்வழியாகவும், மூக்கின் வழியாகவும் விடுகின்ற புகையிலையின் நச்சுப்புகை கண் படிவங்களின் மீது படியாமல் தடுக்க முடியும்.

மது குடிப்பதை தவிர்க்கவும் நிறுத்தவும் வேண்டும். (புதிய மதுபானக்கடைகள் திறப்பதை எதிர்த்து போரிடவேண்டும். பெருநாள் தினங்களில் கூடுதலாக கல்லாக்கட்டுவதாக செய்திகள் வருகின்றன. இவற்றுக்கு நாம் வெட்கப்படவேண்டும்.) உணவுப்பழக்க வழக்கங்களை நோய்தடுப்புக்கு உதவும் வகையில் சீரமைத்துக்கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் ஆட்டிறைச்சி சோறுதான் வேண்டும் என்று அடம்பிடிக்ககூடாது. கறி கிலோ நானூறு அல்ல நாலாயிரம் விற்றாலும் வாங்கித்தான் தீருவேன் என்று கச்சை கட்டக்கூடாது. காய்கறிகளா அவை நமக்காக படைக்கப்பட்டதல்ல இதெல்லாம் யார் சாப்பிடுவது  என்று காரணம் கற்பித்து ஒதுங்கக்கூடாது. புரோட்டவையும் கறி சால்நாவையும் புரட்டி அடிக்கக்கூடாது. தழைத்த கீரைகள், காய்கறி, பயறுவகைகள், பழங்களை காலம் முந்தும் முன்பும்- நோய் முற்றும் முன்பும் சாப்பிடப்பழகிக் கொள்ளவேண்டும்.

காடராகட் நோய் தாக்கியுள்ளதன் அறிகுறிகள் யாவை?
பொதுவாக கீழ்க்கண்டவைகள் அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன.
1. மேகம் அல்லது பணி மூட்டம் போன்ற புலப்படுதல்/கண்மறைத்தல் ( மப்பு )
2. நிறங்களின் வெளிறிய புலப்பாடு,
3. வாகனங்களின் தலைவிளக்குகள், வீட்டின் விளக்குகள், சூரிய வெளிச்சம் ஆகியவை மிகவும் பிரகாசமாக தெரிவதாக தோன்றுவது- கண் கூச்சம், வெற்றிடங்கள் சுற்றியும் விளக்குகள் எறிவதாக தோன்றுவது,
4. இரவுகளில் குறைந்து காணப்படும் காட்சிப் புலப்பாடுகள்
5. ஒரே பொருள் ஒரு கண்ணில் பலவாகத்தோன்றுவது
6. பார்வைக்குறைபாடுகளுக்கான கண்ணாடிக்கான மருத்துவரின் சீட்டுக்களில் அடிக்கடி வித்தியாசமான ஏற்றதாழ்வுகலான பவர்கள்.

இப்படிப்பட்ட பிரச்னைகளை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

காடராகட் இருப்பது மருத்துவ ரீதியில் எப்படி உறுதி செய்யப்படுகிறது?
முக்கியமாக இருவகை மருத்துவ சோதனைகளால் இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

  1.VISUAL ACUITY TEST- இந்த முறையில் உங்களின் கண்களின் பார்வை சக்தியின் அளவு மாறுபட்ட தூரங்களில், எழுத்துக்களின் அளவுகளில் வைத்து கணிக்கப்படும்.

  2. DILATED EYE EXAMINATION. – இந்த முறையில் சொட்டு மருந்துகளை கண்களில் விட்டு கண்களை /விழிகளை அகலப்படுத்த செய்து பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டுள்ள லென்ஸ்களின் மூலம் உறுதி செய்யப்படும். இந்த சொட்டு மருந்துகளை கண்ணில் விட்ட பிறகு இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு உங்களால் சரியாக பார்க்க முடியாது. எனவே இந்த சோதனைக்கு செல்லும் முன்பே துணைக்கு ஆள் அழைத்து செல்லவேண்டும். கார் ஒட்ட இயலாது- கூடாது. இரண்டு மூன்று மணிகளுக்குப் பிறகு சரியாகிவிடும்.

(இந்த மருந்தை என் கண்ணில் ஊற்றிய செவிலியர் சகோதரி சார் வண்டி ஓடிக்குமா என்று கேட்டார்- என் வண்டி என்ன முருங்கைப் போத்தா என்று அதிரைக் குறும்புடன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே இல்லை டிரைவர் வந்திருக்கிறார் என்றேன். )

சிகிச்சை முறைகள்
மிக சிறிய அளவிலோ அல்லது ஆரம்ப நிலையிலையோ இந்நோய் தொடங்குவது கண்டறியப்ப்படும்போது கொஞ்சம் பெரிதுபடுத்திக்காட்டும், பிரதிபலிப்புத் தன்மைகள் குறைந்த மூக்குக் கண்ணாடிகள் அணிந்துகொள்ள பரிந்துரைப்பார்கள். ஆனால் இது ஒரு தற்காலிக ஏற்பாடே.

நிரந்தரமான பரிகாரம் வேண்டுமானால் அறுவை சிகிச்சை ஒன்றே வழியாகும். இந்த அறுவை சிகிச்சை என்பது, ஏற்கனவே மேகம் மூடிய விழி லென்சை  பிறவிக் கண்ணிலிருந்து  அகற்றிவிட்டு ஒரு செயற்கையான லென்சை அந்த இடத்தில்  அமைப்பதாகும்.

உங்களின் இரண்டு கண்ணிலும் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் ஒரே நாளில்  இரண்டு கண்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்படக்கூடாது என்று சட்டம் தடுக்கிறதாம். முதலில் ஒரு கண்ணில் செய்துவிட்டு அதன் பின் குறைந்தது எட்டு வாரங்களுக்குப் பிறகே அடுத்த கண்ணிலும் செய்யப்பட  வேண்டும்.

இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்பாக ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவுகளையும், ரத்தக்கொதிப்பு முதலான அமசங்களையும் சோதித்து அவைகள் ஒரு சீரான நிலையில் இருந்தால் மட்டுமே அறுப்பதற்கு நாள் குறிப்பார்கள். ரத்தத்தில் குளுகோஸ் அதிகமாக இருந்தால் இன்சுலின் ஊசிகளைப்போட்டு அதைக் குறைத்துக்கொண்டே கத்தி வைப்பார்கள். அத்துடன் BIOMETRY  TEST  என்ற சோதனையும்  செய்வார்கள். இந்த சோதனை உங்கள் கண்களிண் லென்சின் அளவுகளையும், கண்களின் வளைவுகளையும் கணக்கிடுவதாகும். (பூனைக்கண், சீனன் கண், சறுகல் கண், ஒன்னரைக்கண் எல்லாவற்றிற்கும் பொருத்தமான லென்சை தேர்ந்தெடுப்பதற்காக இது நடத்தப்படுகிறது.).

அறுவை சிகிச்சை நடப்பதற்கு பனிரெண்டு மணி நேரம் முன்பு முதல் நீங்கள் எதுவும் சாப்பிடவோ பருகவோ கூடாது. பயத்தில் எனக்கு வரண்டதுபோல் தொண்டை வரண்டுபோனால்  ஜூம் ஆவுக்கு போகும்போது ராஜா ஜாஸ்மின் அத்தர் போல் சில துளி நீரை நாக்கில் தடவிக்கொள்ளலாம்.

இந்த அறுவை சிகிச்சைக்கு மருத்துவ மொழியில் PHACOEMULSIFICATION  WITH IOL IMPLANTATION  என்று பெயர். இயற்கையான விழி லென்சை அகற்றிவிட்டு செயற்கையான   INTRAOCULAR LENS (IOL) என்கிற பெயரில் அழைக்கப்படும் லென்சை விழித்திரையில் பொருத்துவார்கள். இந்த பொருத்தப்படும் லென்ஸ் ஒரு உயர்வகை பிளாஸ்டிக் அல்லது  அக்ரிலிக மூலப்பொருள்களால் ஆனது. ( பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலும் ஒழிக்கவேண்டுமானால் சிலரின் கண்களைத்தோண்டவேண்டி வரும்). இந்த மூலப்பொருளுக்குத் தகுந்தபடி இதன் விலை வித்தியாசப்படும். அக்ரிலிக் வகையில் உள்ளதே விலை அதிகம். ( கம்பெனிதான் செலவை ஏற்கிறது என்பதாலும் நண்பர் அஸ்லத்துக்கு பயந்தும் எனக்கு அக்ரிலிக் லென்ஸ்தான் வைக்கச் சொன்னேன். ) இந்த லென்ஸ் பொருத்தப்பட்டதும் அது உங்கள் உடலின் ஒரு அங்கமாகிவிடும். அப்படி ஒரு உறுப்புப் பொருத்தபட்டிருப்பதே தெரியாது உறுத்தாது.

சுன்னத் மாப்பிள்ளையை கொண்டுபோவதுபோல் துணிகளை மாற்றி தள்ளுவண்டியில் கொண்டுபோனார்கள். வழியனுப்பிய மனைவிக்கோ ஏதோ என் கிட்னியை எடுக்கக்கொண்டுபோகிறார்கள் என்ற உணர்வு விம்மலில் தெரிந்தது. உரலில் உட்காருவதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொள்ளவேண்டும். ஆடாமல் அசையாமல் இருக்கும்படி தலைமை மருத்துவர்  கூறுவார். அவரைச் சுற்றி உதவியாளர் கூட்டம் நிற்கும்.

முதலில் கண்களில் விழிகளை அகலப்படுத்தும் சொட்டு மருந்துகளை விட்டார்கள். அதன்பின் ஒரு சிறிய ஊசி போடுகிறேன் என்று சொல்லி கண்ணுக்கும் மூக்குக்கும் இடையில் ஒரு மெல்லிய ஊசியைப் போட்டார்கள்.  அத்துடன் ஏதோ பாராங்கல்லை தலையில் வைத்தது போல் மறத்துவிட்டது. கண் கனத்துவிட்டது. காது  கேட்டது. உடலின் மற்ற பாகங்களில் உணர்வு இருந்தது. சிகிச்சை நடக்கும்போது முகத்தை மூடி , சிகிச்சைக்குரிய கண்ணை மட்டும் திறந்து வைத்து இருந்தார்கள். மூக்கின் துவாரங்களில்  ஆக்சிஜன் குழாயை சொருகிவிட்டர்கள். சிகிச்சை நடக்கும்போது ஏதோ கண்களில் மொசைக் போடுவதுபோல் உணர்ந்தேன். சரிதான் இட்லி மாவை சுரண்டி எடுக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.

ஒரு மணிநேரத்தில் முடிந்துவிட்டது. எல்லாம் முடிந்து பிரியாணியை “தம்  போடுவதுபோல் காற்றுக்கூட புகாமல் கண்ணை மூடி டேப் வைத்து ஒட்டிவிட்டு , ‘ ஓகே மிஸ்டர் அன்சாரி. ‘ என்றார் எனது மருத்துவர். (அதாவது அந்த ஓகே அவரைப் பொருத்தவரை 13470/=  திர்ஹம்).  அதன்பிறகு “கந்தூரியில்  கூடு முடிந்தகாலை கடைகளைப் பிரிப்பதுபோல் முகமூடி, ஆக்சிஜன் முதலிய எல்லாவற்றையும் பிரித்துவிட்டு என்னை மீண்டும் தள்ளுவண்டியில் படுக்கவைத்து முதலில் அரைமணிநேரம் ரெகவரி அறையிலும் பின்னர் எனது அறையிலும் கொண்டுவந்து விட்டுச்சென்றுவிட்டார்கள்.  உடனே லெண்டில் சூப் தந்தார்கள். அதன்பிறகு மதிய உணவு வெஜிடபிள் பிரியாணி, தயிர், வேகவைத்த புரோகோலி ஆகியவை தந்தார்கள். அன்று மாலை ஐந்து மணிக்கே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். “தம் போடப்பட்ட கண்ணை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை திறந்து இரண்டு வகை சொட்டு மருந்துகளை அடுத்தடுத்து விடவேண்டும் அத்துடன் ஐந்து நாளைக்கு ஆண்டிபயாடிக் மற்றும் வலிவந்தால் சாப்பிட ஒரு பெயின் கில்லர். சாப்பாடு ஒன்றும் தடை இல்லை. சுகர் மட்டும் கட்டுப்பாட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த லென்ஸ் பொருத்தப்பட்டு ஒரு வாரம் வரை கண்களில் வெளிச்சம்படாமல் மூடி இருக்க வேண்டும். அதன்பின் கண்திறந்து பார்த்தால் உங்களுக்கே வித்தியாசம் தெரியும். பார்ப்பவை முன்பு தெரிந்ததற்கும் இப்போதும் ‘ பளிச்என்று மின்னலடிக்கும் வெண்மையாகத் தெரியும். ஊசியில் நூலைக் கோர்க்க முடியும். ஆனாலும் இரண்டு வாரங்களுக்கு கணிணி , தொலைக்காட்சிப்பெட்டிகளை காணமல் இருப்பது நல்லது. (யார் விடுகிறார்கள்- ஒரு நாளைக்கு எத்தனை ஈமெயில்கள் – பார்க்காமல் விட்டால் லேப்டாப் பிதுங்கி ஜிப கிழிந்துவிடும் நிலை) . இரண்டு நாட்களிலேயே எந்த பிரச்னையும் இருப்பதாக நான் உணரவில்லை. ஆனாலும் மருத்துவர் கையால் கட்டுப்பிரிக்கும்வரை விட்டுவிட்டேன். ஒருவாரம் கழித்து கட்டுப்பிரித்து திறந்தே விட்டுவிட்டார். சொட்டு மருந்துகள் மட்டுமே இடவேண்டும். இரண்டுவாரம் அலுவலகத்துக்கு மருத்துவ சான்றிதழ். விடுப்பில் , முதலில் செய்தவேலை ஏற்கனவே எழுதிவைத்து இருந்த மாற்றம்! ஏற்றமா? ஏமாற்றமா? கட்டுரையை நெறியாளருக்கு சரிபார்த்து அனுப்பியதுதான்.

சிகிச்சைக்குப் பிறகு?

சிலருக்கு அறுவை சிகிச்சைக்குபிறகு அரிப்புகள் வரக்க்கூடுமாம். அத்துடன் நீர் வடிதல், ஊளை தள்ளுதல் ஆகியவையும் ஏற்படக்கூடுமாம்.  அப்படியானால் உடனே மருத்துவரை அணுகவேண்டும். கீழே குனிந்து எதையும் எடுக்க முயற்சிக்க கூடாது. கனத்த பொருள்களை தூக்கக்கூடாது. தூசிகள் வரும் இடங்களுக்குப் போகவோ வசிக்கவோ கூடாது. அறுவை சிகிச்சை செய்யப்பட கண்ணின் பக்கமான பற்களில் வைத்து வேகாதவைகளை நீண்ட நேரம் மெல்லக்கூடாது. அதிக சத்தம்போட்டுப் பேசக்கூடாது. குலுங்கக் குலுங்க சிரிக்கக்கூடாது. (இதுதானே கஷ்டம்)  மற்றபடி நடக்கலாம், மாடிப்படிகளில் ஏறலாம். வெங்காயம் அல்லாத மற்ற காய்கறிகளை வெட்டிக்கொடுத்து வீட்டுக்கு உதவலாம். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை சொட்டு மருந்துகளை தொடர்ந்து கண்ணில் விட்டுக்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை செய்யப்படாத கண்ணுக்கு சொட்டு மருந்துகளை விடுவது நல்லதல்ல.

ஒருமாதம் கழித்து மருத்துவரிடம் சென்று சோதித்துக்கொண்டு புதிய அலைவரிசையில் தேவைப்பட்டால் மூக்குக்கண்ணாடி அணிந்து கொள்ளலாம். கண்ணாடி அணியாமல்தான் இக்கட்டுரையை எழுதி இருக்கிறேன்.

இந்த பதிவை கூடியவரை எல்லா விவரங்களுடனும் பதிந்து இருப்பதாக கருதுகிறேன். படிப்பவர்களுக்குப்  பயன்படும் என்று கருதுகிறேன். கேட்ட கேள்விகளுக்கு முகம் சுளிக்காமல் பதில் தந்த செவிலியர் சகோதரி ஸ்வப்னா அவர்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். இதைப்பற்றி எழுதவேண்டுமென்று அறுவை சிகிச்சைக்கு செல்ல முடிவு எடுத்த போதே முடிவு எடுத்தேன்.. தம்பி சபீர் அவர்கள் தூண்டினார்கள். அதிரை நிருபர் இருக்க என்ன கவலை.? மாஷா அல்லாஹ்.

-இபுராஹீம் அன்சாரி

21 Responses So Far:

சேக்கனா M. நிஜாம் said...

மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களின் பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்.

இந்த உலகத்தை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள, பார்த்துகொள்ள நமது இருவிழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கண் பாதுகாப்பு மற்றும் அதற்குரிய சிகிச்சை முறைகளை அனுபவத்துடன் விளக்கம் தரப்பட்டுள்ளது.
வாழ்த்துகள் !

இப்னு அப்துல் ரஜாக் said...

உங்களுக்குள்ளும் அத்தாட்சிக்களை வைத்திருக்கிறேன்,சிந்திக்க மாட்டீர்களா?என அல்லாஹ் தன திரு மறையில் கேட்கிறான்.
கண்களை பற்றிய விளக்கம் - சுபானல்லாஹ்,அல்லாஹ்வின் வல்லமை உணர்ந்து,நெஞ்சம் கனிகிறது.ஜனாப் இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் நலம் தேற - ஏக இறைவனை வேண்டுகிறேன்.

Unknown said...

அன்சாரி காக்கா சீக்கிரம் நீங்கள் நலம் பெற எங்கள் துவாக்கள் .
தெளிவான விளக்கமும் படிப்பவர்களை விழிப்படைய செய்யும் .

Noor Mohamed said...

காக்கா, தாங்கள் பூரண நலம் பெற்று, புதியதோர் உலகம் படைக்கும் சிந்தனை மிக்க ஆக்கங்கள் பலவற்றை தர வல்ல இறைவனை வாழ்த்துகிறேன்.

இக்கட்டுரையில் மருத்துவத்தை மையமாகக் கொண்டு தொப்பி போடுவதால் ஏற்படும் நன்மைகளை அனுபவ பூர்வமாக விளக்கியுள்ளீர்கள்.

காடராக்ட் ஏற்படுவதை தடுத்துக் கொள்ள;
//தலையில் தொப்பி போட்டுக்கொள்ளலாம். ( யாரங்கே! தொப்பி போடுவதை எதிர்ப்பவர்கள்? இது மருத்துவம் – இதற்காகவாவது போடக்கூடாதா?) சூரியனின் நுண்கதிர்கள் கண்ணுக்குள் நேரடியாக பாய்வதில் இருந்தும் , தொப்பி இல்லாத தலைவழியாக எமிகிறேஷன் இல்லாமல் இலங்கை வழி போவதுபோல் தலையின் வழியாக கண்ணுக்குள் பிம்பம் அடித்து நுழைவதையும் தடுக்கலாம்.//

எல்லாம் வல்ல அல்லாஹ் நன்மையை ஏவுங்கள் என அல்குர்ஆனில் கட்டளை இடுகிறான். தொப்பி போடுவதால் ஏற்படும் நன்மையையும் அல்லாஹ்வின் கட்டளைகளில் ஒன்று. அதனால்தான் நம் முன்னோர்கள் தொப்பி போடுவதை பின்பற்றினார்கள்! நமக்கும் அதை வலியுறுத்தினார்கள்!! அதை நாமும் பின்பற்றுவதால் நலம் பல பெறுவோம்!!!

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் : 3:104)

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஸுப்ஹானல்லாஹ் அல்லாஹ் தந்த அருள் பாக்கியங்களை நினைத்து கண்களில் நீர் வரவில்லை என்றாலும்.இபுராஹிம் அன்சாரி காக்காவின் ஆர்வத்தின் உணர்ச்சியால் வடிவமைத்து தந்த ஆக்கத்தின் அலசலை பார்த்து உள்ளம் சிலிர்க்கிறது .

கண் இல்லாதோர்க்கு உலகமே இருண்டது என்று சொல்லுவார்கள்.

தனக்கு உள்ள சிரமத்தையும் பொருட்படுத்தாமல் அ.நி.அன்பர்களுக்கு அனுபவத்தை அறியதந்த அன்பின் காக்கா அவர்களுக்கு அல்லாஹ் பூரண சுகத்தை தந்து .அவனுடைய வல்லமையை இன்னும் எடுத்து சொல்வதற்கு கிருபை செய்வானாக ஆமீன் .

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இ.அ.காக்கா:

கண்ணுக்கு (நித்)திரை மட்டுமா ! அனைத்து பதிவுகளும் பதிக்குமே முத்திரை !

புதுசுரபி said...

நமக்கு பார்வை என்ற இந்த வாயிலின் வழியாக, உலகின் அனைத்து அம்சங்களையும் உணர வைத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம், அவனுக்கு புகழனைத்தும்!

Shameed said...

கட்டுரையை படித்ததில் ஆபரேசனில் தங்கள் கூட இருந்ததுபோல் ஒரு உணர்வு

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அன்புச்சகோதரர் இபுராஹீம் அன்சாரி அவர்களுக்கு: நல்லமுறையில் கண் ஆப்ரேஷன் நடந்து தங்களின் பார்வையை தெளிவாக்கித் தந்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!

நமது உடல் பாகங்கள் அனைத்தும் வல்ல அல்லாஹ்வின் அருள் கொடையே! எல்லாவற்றிலும் மிகச் சிறந்த அருட்கொடை கண்பார்வையே!

தங்களின் அனுபவம் மற்றவர்களுக்கு வழிகாட்டும்!
கண் குறைபாடு உடையவர்களின் பயத்தை நீக்கி தைரியமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று தங்களின் கட்டுரை விளக்கமாக வழிகாட்டுகிறது.

வல்ல அல்லாஹ் தங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கி அருள் புரியட்டும்.

sabeer.abushahruk said...

காக்கா,

நமக்கு ஏற்படும் வேதனையையும் வலியையும் சொல்லுகையில் அதில் பிறருக்கு செய்தியையும் சேர்த்துச் சொல்தல் ஒரு சமுதாய அக்கறையேயன்றி வேறில்லை.

அத்துடன் நகைச்சுவையையும் தோய்த்துக் கொடுக்க ஒருவித மனோதிடம் வேண்டும்.

தப்புதான்... இருந்தாலும் உங்கள் வலியை ரசித்ததென்னவோ உண்மை.

KALAM SHAICK ABDUL KADER said...

அல்லாஹ் நமக்களித்துள்ள நிஃமத்களை நம் உடலிலிருந்தே எண்ணிப் பார்த்தால் எண்ணி விட இயலாத அற்புதங்கள் உள! அவற்றுள் கண் மிக முக்கியமானது. இக்கட்டுரையில் அல்லாஹ்வின் அந்த அற்புதமான நிஃமத் பற்றிய “விழி”ப்புணர்வும், கண் சிகிச்சைப் பற்றிய முழு விளக்கமும் “கண்” டோம். அன்புச் சகோதரர் இப்றாஹிம் அன்சாரி அவர்கள் கண் சிகிச்சைக்குப் பின்னர் வீட்டில் இருந்த போதும், கடமை “கண்” போன்றதென கடமையாற்றியதை இன்றும் என் கண் முன் கொண்டு வந்து பார்க்கின்றேன்!

அல்லாஹ்வின் அற்புதத்தையும், மருத்தவத்தின் அற்புதத்தையும், தன் அற்புதமான எழுத்தாற்றலால் இங்கு நமக்கு விளக்கியுள்ள அற்புதமான மனிதரான அன்புச் சகோதரர் அவர்களின் அன்பும் நட்பும் எமக்குக் கிட்டியதற்கு அ.நி தளத்திற்கு நிரம்ப நன்றிக் கடன் பட்டுள்ளோம்;”ஜஸாக்கல்லாஹ் கைரன்”

அதிரை சித்திக் said...

கண்ணை பற்றிய விழிப்புணர்வை ...

அழகாய் விளக்கிய விதம் அற்புதம்

என் மாணவ பருவத்தில் சகோ அன்சாரி போன்ற

ஆசிரியர் கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக

இருந்திருக்கும் ..என்று எண்ணி பார்த்தேன் ..

கண் இழந்தவர் கூட அன்றாடம் பேசும் போது கூட

நான் எண்ணி பார்த்தேன் என்பார் ..,டாக்டரை

போய் பார்க்கணும் என்பார் .ஒவ்வொரு நாளும்

வாழ்க்கையை துவங்குவதும் கண் விழித்துதான்,..

தங்களின் ஆக்கம் கண்ணும் கருத்துமாய் கவனிக்க தக்கது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பார்வைக்கு நல்ல படிப்பினை
படிப்பதற்கு நல்ல வக்கனை
படைத்த (இதை) உங்களுக்கு என் பிரார்த்தனை.

ZAKIR HUSSAIN said...

//வெள்ளிக்கிழமைகளில் ஆட்டிறைச்சி சோறுதான் வேண்டும் என்று அடம்பிடிக்ககூடாது. கறி கிலோ நானூறு அல்ல நாலாயிரம் விற்றாலும் வாங்கித்தான் தீருவேன் என்று கச்சை கட்டக்கூடாது//

To Bro Ebrahim Ansari,

இப்படியெல்லாம் எழுதினால் சங்பரிவார் ஆட்களை விட உங்களை எதிரி மாதிரி பார்ப்பாங்க...பரவாயில்லையா??

Anonymous said...

மாதமோ சித்திரை
மணியோ பத்திரை
உங்களை தலுவதோ நித்திரை
எமக்கு இடுவீர் முத்திரை.

நாம் கண்களை கவனமாக பார்த்துக்கொள்ளவும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// மாதமோ சித்திரை
மணியோ பத்திரை
உங்களை தலுவதோ நித்திரை
எமக்கு இடுவீர் முத்திரை.

அபுபக்கருக்கு இன்னும் ஊர் ஞாபகம் போகவில்லை போலும் .

Yasir said...

பெரும்பாலான வயதானவர்க்கு இக்குறைபாடு வருகிறது...காண்ராக்ட் என்னவென்றால் என்ன ? அதன் தடுப்பு வழிகள் என்னென்ன என்று தன் வலியை பொறுத்துக்கொண்டு மற்றவர்கள் பயனடைய வேண்டி எழுதிய அன்சாரி மாமாவின் நல்லெண்ணம் இக்கட்டுரையில் ”பளிச் “சென்று அவர்களின் கண்பார்வை போல தெரிகின்றது..அல்லாஹ் உங்களுக்கு நிறைய நன்மைகளை தருவானாக ஆமீன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

காக்கா சீக்கிரம் நீங்கள் பரிபூரண நலம் பெற எங்கள் துஆக்கள்...

தெளிவான விளக்கமும் படிப்பவர்களை விழிப்படைய செய்யும் .

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அன்பு நிறை சகோதரர்கள் அனைவருக்கும் நலனுக்காக துஆச் செய்த நல்ல உள்ளங்களுக்கும் ஜசக்கல்லாஹ் ஹைரண்.

தம்பி,ஷேக்கனா நிஜாம், ஹார்மிஸ், அர அல, நூர் முகமது, எல் எம் எஸ் அபூபக்கர், அபு இப்ராஹிம்,புது சுரபி, தாஜுதீன், ஜாபர் சாதிக், அமோஜான் ஆகிய அனைவருக்கும் தங்களின் தொடர்ந்த ஊக்கத்துக்காக கடமைப்பட்டு இருக்கிறேன்.
நண்பர் சித்திக் அவர்கள் முதன் முதலாக எனது பதிவுக்குப் பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

கவிஞர். சபீர் அவர்களே // தப்புதான்... இருந்தாலும் உங்கள் வலியை ரசித்ததென்னவோ உண்மை. // நீங்களே ரசித்தது எனக்கு வலியிலும் இனித்தது.

கவியன்பன் அவர்கள் தினமும் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தமைக்கு மிகவும் கடன்பட்டு இருக்கிறேன்.

அசத்தல் காக்கா? அன்பு இளவளே! பின்னூட்டமும் அசத்தல்தானா?

அன்புக்குரிய நண்பர் அலாவுதீன் அவர்களுக்கும் மிக்க நன்றிகள். ஒரு கண்ணை மூடிக்கொண்டே சகோதரியை நலம் விசாரித்துப் படித்து பின்னூட்டம் இட்டேன். நீங்க நல்லா இருக்கணும்.

மற்றும் அன்பு மருமக்கள் யாசிர், சாவன்னா ஆகியோருக்கும் நல் வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம். இன்ஷா அல்லாஹ். வஸ்ஸலாம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாஷா அல்லாஹ் இபுறாஹிம் அன்சாரி காக்காவின் ஆக்கத்தை இப்பொழுது தான் படிக்க இயன்றது. அல்லாஹ் அவர்களுக்கு ஆயுளை நீளமாக்கி பிரகாசமான கண்ணொளியுடன் வாழ்க்கையையும் அமைத்துத்தர து'ஆச்செய்கின்றேன்.

நிச்சயம், கண் சிகிச்சைக்காக செல்ல இருப்போருக்கு நல்ல பயனுள்ள தகவல்களை தனக்கேயுரிய பாணியில் தந்துள்ளீர்கள்.

ஒரு காலத்தில் கண் ஆப்பரேசன் முடிந்ததும் கண்ணுக்கு முன் பச்சை நிற மறப்பு கட்டி ஒரு மாசம் தொங்க விடுவார்கள். இப்பொழுது அப்படி இல்லை. ஒரு வாரத்திற்குள் கண்ணை திறந்து விட்டு விடுகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

காக்கா, சென்னையில் மண்ணடியில் (லிங்கிச்செட்டி தெரு முனை) பிரபல கண் மருத்துவர் டாக்டர் சசிகாந்த் நல்ல உயர்தர லென்ஸ் வைத்து ரூபாய் 25,000த்திற்குள் நல்லபடி செய்து முடித்து விடுகிறார். ஆனால் அங்கு 13,470/= திர்ஹ‌ம் என்ப‌து ஐந்து ம‌ட‌ங்கு கூடுத‌லாக‌ அல்ல‌வா இருக்கிற‌து?

க‌ம்பெனி டிக்கெட்லேயே சென்னைக்கு வ‌ந்து செஞ்சிட்டு (ஒரு கல், இரண்டு மாங்காய் என்று யாரும் படம் எடுத்து ஆடிவிடாதீர்கள்) போவ‌து ந‌ல்ல‌து அல்ல‌வா?

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்புள்ள சகோதரர் எம். எஸ். எம். நெய்னா அவர்களுக்கு, ஜசக்கல்லாஹ்.

//காக்கா, சென்னையில் மண்ணடியில் (லிங்கிச்செட்டி தெரு முனை) பிரபல கண் மருத்துவர் டாக்டர் சசிகாந்த் நல்ல உயர்தர லென்ஸ் வைத்து ரூபாய் 25,000த்திற்குள் நல்லபடி செய்து முடித்து விடுகிறார். ஆனால் அங்கு 13,470/= திர்ஹ‌ம் என்ப‌து ஐந்து ம‌ட‌ங்கு கூடுத‌லாக‌ அல்ல‌வா இருக்கிற‌து?//

நீங்கள் கூறுவது உண்மைதான். இதே போல் மதுரையிலும் குறைவான செலவில் செய்வதாக சில நண்பர்கள் கூறுகிறார்கள். நமது ஊரில் இருந்து மதுரையில் நிறைய பேர்கள செய்திருக்கிறார்கள். ஆனாலும் இங்கு இன்சூரன்ஸ் கவரேஜ் இருக்கிறது. அத்துடன் ஊரில் பல பேய்கள் உலவுவதால் இந்த நிலையில் ஊர் போக பயம்.

முதல் பேய் மின்சார வெட்டுப்பேய்.இந்தப் பேய்க்கு பயந்து பலர் ஊர் போகாமல் கிடக்கிறார்கள். இவிடம் நமக்கு செலவு இல்லாமல் நல்ல வசதி.

எனக்குத் தந்த லெண்டில் சூப் முதல் வேகவைத்த புரோகோலி வரை இன்சூரன்ஸ் பில் .

அதுமட்டுமல்லாமல் , மதுரைக்கு, அல்லது சென்னைக்கு நாம் போய் சிரமப்பட்டு வைத்தியம் பார்ப்பது ஒரு பக்கம். நம்மை பார்க்க வருகிறோம் பேர்வழி என்று கூட்டம் கூட்டமாய் தேவை இல்லாமல் பலர் நாலு ஆப்பிளையும், சாத்துக்குடியையும், ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலையும் வாங்கிக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு உபசாரம் செய்து வழியனுப்ப வேண்டும். இதற்குள் அடுத்தகண்ணிலும் நோய் வந்துவிடும். இதெல்லாம் கருதியே போகவில்லை.

இங்கே மிகவும் உயர்வான சிகிச்சைதான். பணம் அதிகம்தான் ஆனால் அது நமது என்டைட்டில்மெண்டில் வருகிறது. செய்து கொள்ளாவிட்டாலும் நமக்கோ நாம் வேலை செய்யும் கம்பெனிக்கோ இலாபம் இல்லை. லட்சக்கணக்கில் பிரிமியம் கட்டுகிறோம். ஒன்று இரண்டு இப்படி செய்யட்டுமே என்ற நல்ல எண்ணம்தான். தவறா? சரியா ?

அடுத்து

//க‌ம்பெனி டிக்கெட்லேயே சென்னைக்கு வ‌ந்து செஞ்சிட்டு (ஒரு கல், இரண்டு மாங்காய் என்று யாரும் படம் எடுத்து ஆடிவிடாதீர்கள்) போவ‌து ந‌ல்ல‌து அல்ல‌வா?// நல்லதுதான். ஆனால் கண் சிகிச்சைக்காக விமானப்பயணம் இன்சூரன்ஸ் கவரேஜில் இல்லை. இருந்து இருந்தால் ஒரு கல் இரண்டு மாங்காய் அடித்தே இருக்கலாம்.

உங்களின் அன்புக்கு மீண்டும் நன்றி. வஸ்ஸலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு