Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 9 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 04, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

கண்ணியமான ஸஹாபிய பெண்மணியும், அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பாசம் நிறைந்த மகளாருமான ஃபாத்திமா (ரலி) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களிலிருந்து பெறவேண்டிய படிப்பினைகளை அறிந்தோம். மேலும் அதன் தொடர்ச்சியை காண்போம்.

மக்கா பிரதேசத்தை விட்டு மதீனாவுக்கு தன்னுடைய தந்தை நபி(ஸல்) அவர்களுடன் பருவ வயதில் இருந்த பாத்திமா(ரலி) அவர்களும் சென்றார்கள் என்ற வரலாறு நாம் எல்லோரும் அறிந்தது. தன் தந்தை இஸ்லாத்தை மக்களுக்கு எத்தி வைத்த காரணத்தால் மக்கா குரைசிகளால் சமூக பகிஸ்காரம் செய்யப்பட்டு ஊரைவிட்டு விரட்டப்பட்டார்கள், உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் பல இன்னல்கள் இழைக்கப்பட்டார்கள்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் கஃபாவில் தொழுது கொண்டிருந்தார்கள், அங்கிருந்த குரைசிகள் நபி(ஸல்) அவர்களை அவமதிக்க திட்டம் தீட்டினார்கள். அண்னலார் சூஜூதில் இருக்கும் போது அழுகிய நிலையில் இருந்த ஒட்டகத்தின் குடலை மலத்தோடு அவர்கள் மேல் போட்டு விட்டு ஒருவருக்கு ஒவர் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்கள் அந்த கைசேதப்பட்ட குரைசிக் கூட்டம். இந்த சம்பவம் கேள்விப்பட்ட நபி(ஸல்) அவர்கள் அருமை மகளாரான சிறுவயதுடைய  ஃபாத்திமா(ரலி) அவர்கள் ஓடோடி வந்து தன் தந்தை மேல் இருந்த அந்த அழுகிய ஓட்டக குடல்களை எடுத்துவிட்டு, தண்ணீர் கொண்டு தன் தந்தை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மேல் இருந்த அசுத்தத்தைச் சுத்தம் செய்தார்கள் என்று வரலாற்றில் வாசிக்கும் போது உள்ளம் உருகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 

தன் தந்தை ஓர் இறைத்தூதர், அல்-அமீன் (உண்மையாளர்) என்று அந்த குரைசிகளிடம் அழைக்கப்பட்டவர், நற்பண்பாளர் என்று அழைக்கப்பட்டவர். ஆனால் இந்த இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக இப்படி துன்புறுத்துகிறார்களே இந்த படுபாவிகள் என்ற கோபமான எண்ண ஓட்டம், அந்த மூர்க்கர்களை நாலு வார்த்தைகளைக் கொண்டு கண்டிக்க வேண்டும் என்றெல்லாம் கோபம் கொள்ளாமல் ஃபாத்திமா(ரலி) அவர்கள் அல்லாஹ்வுக்காகவும் தன் தந்தை இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்காகவும் பொறுமை காத்து அந்த இளம் வயதில் தன்னுடைய ஈமானை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

மர்யம்(அலை) அவர்களைப் போன்றவர் என்று நபி(ஸல்) அவர்களால் பாராட்டப்பட்டவர் நபி(ஸல்) அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா(ரலி) அவர்கள்.

ஜாபிர்(ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். எனவே, தம்முடைய துணைவியாரின் வீடுகளுக்குச் சென்று பார்த்தார்கள். அவர்களிடமும் எதுவும் கிடைக்கவில்லை. உடனே (அருமை மகளார்) ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் வந்து, மகளே! நான் பசியோடு இருக்கின்றேன்; சாப்பிடுவதற்கு உன்னிடம் ஏதேனும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு பாத்திமா(ரலி), ''என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! (என்னிடம்) எதுவுமில்லை'' என்று கூறினார்கள். அதனால் நபி(ஸல்)அவர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு பக்கத்து வீட்டுப் பெண்மணி இரு ரொட்டிகளையும் சில இறைச்சி துண்டுகளையும் கொடுத்தனுப்பினார்.

அவற்றை வாங்கிக்கொண்ட ஃபாத்திமா(ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் வைத்து, ''இந்த உணவு விசயத்தில் என்னை விடவும், என்னைச் சேர்ந்தோரை விடவும் நபி(ஸல்) அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப் போகிறேன்'' என்று கூறினார்கள். முன்னதாக அவர்கள் அனைவரும் வயிறார உண்ண வேண்டிய தேவையுடையவர்களாகவே இருந்தனர். 

பின்னர் ஹசன்(ரலி) அல்லது ஹுசைன்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் திரும்ப வந்தார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) ''அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம்! அல்லாஹ் சிறிதளவு உணவுப் பொருளை கொடுத்துள்ளான். அதைத் தங்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள். மகளே! அதைக் கொண்டுவா'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து அன்னை பாத்திமா(ரலி) அவர்கள் கூறினார்கள்; அந்த உணவுத்தட்டை எடுத்து வந்து திறந்து பார்த்தேன். அப்போது தட்டு நிரம்ப ரொட்டியும், இறைச்சியும் இருந்தன. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட நான், அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் அல்லாஹ்வை புகழ்ந்தேன். நபியவர்கள் மீதும் ஸலவாத் கூறினேன்.

பின்னர் நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் அந்த தட்டை கொண்டு வந்து வைத்தேன். அதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு, ''மகளே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், ''என் தந்தையே! இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினேன்.''

உடனே அல்லாஹ்வை புகழ்ந்த நபி(ஸல்) அவர்கள், ''மகளே! இஸ்ரவேல பெண்களுக்குத் தலைவி(யான மர்யமைப்)போன்று உன்னை ஆக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவருக்கு (மர்யம்) அல்லாஹ் ஏதேனும் உணவளித்து, அது குறித்து யாரேனும் அவரிடம் வினவினால், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறுவார்.'' (பார்க்க: அல்-குர்'ஆன் 3:37) என்று கூறினார்கள். ஹதீஸ் சுருக்கம்; நூல் முஸ்னது அபீயஅலா. (நன்றி: sahaabaakkal.blogspot.in/2011/10/blog-post_21.html)

சுவர்க்கம் நிரந்தரமாக்கப்பட்ட ஃபாத்திமா(ரலி) அவர்கள் தான் பசியோடு இருந்த நிலையில் தனக்கு ஒரு உணவு கிடைத்த மாத்திரமே நபி(ஸல்) அவர்களுக்கே முன்னுரிமை என்று சொன்ன அன்னை ஃபாத்திமா(ரலி) அவர்கள், தன் தந்தை நபி(ஸல்) அவர்களின் மீது எந்த அளவுக்கு அளப்பரிய பாசம் கொண்டிருந்தார்கள் என்பதையும் நம்மால் உணரமுடிகிறது. அதோடு இந்த சம்பவத்தில் நாம் பெறவேண்டிய முக்கியமான படிப்பினை என்னவெனில், தன் தந்தை ஒரு இறைத்தூதராக இருந்தும், தனக்கு ஒரு நலன் நடந்தால் இது அவரால் நடந்தது; இவரால் விளைந்தது என்று பெருமையடிக்காமல், இது அல்லாஹ் வழங்கியது அவன் நாடியவர்களுக்கு கணக்கின்றி வழங்குவான் என்ற வார்த்தையை ஃபாத்திமா(ரலி) அவர்கள் எப்படி நம்பினார்களோ அது போல் நாமும் நம்முடைய ஒவ்வொரு செயலிலும் பலனிலும் நம்பவேண்டும். அவ்வாறு நாமும் எல்லாவற்றிலும் அல்லாஹ்வை முன்னிலைப் படுத்தினாலே ஆணவம்-பெருமை அடிபட்டுப் போகும். 

உஹது யுத்தத்தில் நபி(ஸல்) அவர்கள் மேல் அம்பு பட்டு காயமடைந்து விடுகிறார்கள். போர்களத்திலிருந்த அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் மேல் தண்ணீரை ஊற்றுகிறார்கள், இரத்தம் நிற்கவில்லை. அப்போது ஃபாத்திமா(ரலி) அவர்கள் தன்னுடைய புத்தியைக் கொண்டு, கிழிந்த பாயை எரித்து சாம்பலாக்கி, அந்த சாம்பலை தன் தந்தை நபி(ஸல்) அவர்களின் காயத்தில் தடவினார்கள், ஓடும் இரத்தம் நின்றது. போர்களத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியின் அன்பு மகள் தன் தந்தையின் காயத்துக்கு மருந்திட்டு உதவி செய்கிறார்கள் என்றால் உன்மையில் அது ஃபாத்திமா(ரலி) அவர்களால் மட்டுமே முடியும். நபி(ஸல்) அவர்கள் மேல் தான் வைத்திருந்த நேசம் அந்த இளம் பெண்மனியான ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு இப்படி போர்களத்திலும் தன்னுடைய தந்தைக்கு உதவினார்கள்.

ஒரு முறை ஒரு பெரிய குடும்பத்து பெண் திருடிவிட்டாள், அவளுக்கு தண்டனை வழங்க வேண்டும். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு சஹாபி வந்து நபி(ஸல்) அவர்களிடம் பரிந்துரையாக அந்த பெண்ணிற்கு மன்னிப்பு கொடுக்கச் சொல்லி வேண்டினார். ஆனால் நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்திய வார்த்தை தான் இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டியது “ என் மகள் பாத்திமா (ரலி) திருடினாலும் கை வெட்டப்படும்”. இந்த எச்சரிக்கைக்காக ஃபாத்திமா(ரலி) அவர்கள் எந்த ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. தன் தந்தையின் சொல்லை மிகுந்த சிரத்தையுடனே கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மரண வேதனையில் அருமை மகளார் ஃபாத்திமா(ரலி) அவர்கள் கவலை, ஏக்கம், அவர்களின் அடக்கமான துக்கம் இவைகளிலிருந்து நம் எல்லோருக்கும் மிகப்பெரும் படிப்பினை உள்ளது.

நபி(ஸல்) அவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகமானது, அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் “என் தந்தைக்கு ஏற்பட்ட சோதனையே” என்று சொன்னவர்களாக அழுதார்கள். “உன் தந்தைக்கு இனி எந்த வேதனையுமில்லை என் அருமை மகள் பாத்திமாவே” என்று அறுதல் கூறினார்கள் நம் ரஹ்மத்துல் ஆலமீன்.

நபி(ஸல்) அவர்கள் மரணித்து அடக்கம் செய்துவிட்டு வந்த பிறகு அனஸ்(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா (ரலி) அவர்கள். “எப்படி நபி(ஸல்) அவர்களின் மேல் மண் போட உங்களுக்கு மணம் வந்தது அனஸே” என்று தன் தந்தை மரணத்தால் தான் படும் வேதனையின் வெளிப்பாட்டை வார்த்தைகளால் கண்ணியமாக வெளிப்படுத்தினார்கள்.

தன் தந்தை இறைத்தூதராக இருந்தாலும் ஃபாத்திமா(ரலி) அவர்கள் தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையை முடிந்தவரை செய்து அல்லாஹ்வின் நல்லடியாராக வாழ்ந்துள்ளார்களே. இன்று நாம் எத்தனை பேர்கள் நம் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையை செய்திருப்போம்?

போர்களத்திலும் தன் தந்தைக்கு மருத்துவ உதவி புரிந்தார்களே ஃபாத்திமா(ரலி) அவர்கள், எத்தனை பிள்ளைகள் தன் பெற்றோர்களுக்கு மருத்துவமனையில் இருந்து உபகாரம் செய்துள்ளோம்?

தான் பசியோடு இருந்தும், தன் பாசமான தந்தைக்கு முதலில் உணவு கொடுக்க முன் வந்த ஃபாத்திமா(ரலி) அவர்கள் போல் இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் வீட்டில் உள்ள தன் பெற்றோர்களையும், வயதானவர்களையும் ஒவ்வொரு நாளும் நீங்கள் முதலில் சாப்பிட்டீர்களா? என்று கேட்கும் பிள்ளைகள் எத்தனை பேர் உள்ளோம்?

தன் தந்தை மார்க்க விசயத்தால் ஊரில் தெருவில் அவமானப் படுத்தப்படுகிறார், ஃபாத்திமா (ரலி) அவர்கள் போல் பெற்றோரின் அவமானத்தை நீக்கா விட்டாலும் பரவாயில்லை, என்னுடைய தந்தையைப் பற்றி தவறாக பேச உனக்கு என்ன அறுகதை உள்ளது என்று குறைந்த பட்சம் அவர்களுக்காக பொதுவில் குரல் கொடுக்கும் பிள்ளைகள் எத்தனை பேர்? உங்களுக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று கேட்கும் பிள்ளைகளாக அல்லவா நாம் உள்ளோம்.

நபி(ஸல்) அவர்களுக்கு மகள் என்ற அடிப்படையிலும், அவர்களை பின் பற்றும் சஹாபியப் பெண்மணி என்ற அடிப்படையிலும் இறுதிவரை தன் தந்தைக்கு உபகாரம் செய்தார்கள் ஃபாத்திமா(ரலி) அவர்கள். ஆனால் இன்று தம் பெற்றோர்களை இறுதிவரை அக்கறையோடு கண்ணும் கருத்துமாக கவனிக்கும் பிள்ளைகள் எத்தனை பேர் என்பது ஆயிரமாயிரம் கேள்விக்குறிகள்.

அன்னை ஃபாத்திமா(ரலி) அவர்கள் வாழ்விலிருந்து பெறும் படிப்பினை பெண்களுக்கு மட்டுமல்ல எல்லா ஆண்களுக்கும் தான்.

ஃபாத்திமா(ரலி) அவர்கள் தன்னுடைய 25 வது வயதில் இவ்வுலகைவிட்டு பிரிந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜியூன்.

அல்லாஹ் ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கும் அவர்களின் சந்ததிகள் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.
தொடரும்
M தாஜுதீன்

8 Responses So Far:

Unknown said...

இன்றைய நாகரீக சுயநலமிக்க இவ்வுலகில், எதிலுமே என்னுடையது, எனக்காக, நான், என்னால்தான், நான் இல்லாவிட்டால், என்னும் மனப்போக்கு கொண்ட , அல்லாஹ்வை மறந்த உலகைத்தான் நாம் கண்டு கொண்டிருக்கின்றோம்.

பாத்திமா (ரலி) அவர்களைப்போன்ற அன்பும் பாசமும், நேசமும் , தன்னைவிட அடுத்தவர் பசி, உயர்வு, நலன் பேணும் ஒரு பெண்மணி இன்றைய நாகரீக உலகில் காண்பது மிக மிக அரிது.

அல்லாஹ் அந்த சொர்கத்துத்தாயின் மன ஒர்மையை நம் குலப்பென்களுக்கும், நமக்கும் தர இறைவனை இறைஞ்சுவோம்.

அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பெற்றோரைப் பேணும் பாதுகாக்கும், அன்பொழுக அரவணைக்கும் நன்மக்களாக நாம் அனைவரும் இருக்க அல்லாஹ் அருள்புரிவானாக !

தள்ளாத வயதில் பெற்றோரைப் பெற்றிருக்கும் அனைவருக்கும் கிடைத்த பாக்கியம் அவர்கள் அருகிலிருந்து பணிவிடை செய்வதற்கு ! நாளை நாமும் இதே வயதை அடையக் கூடியவர்கள் (இன்ஷா அல்லாஹ்) அப்போது நமது தேடல் பிள்ளைகளின் அரவணைப்பாக இருக்கும்போது ! பயனாளிகளாக இருப்போம் இன்ஷா அல்லாஹ் !

Adirai pasanga😎 said...


படிப்பினை பெறுவதற்க்கான பண்பாட்டுத்தொடர் -

இத்தகைய உண்மை வரலாற்றுச் சம்பவங்களை நம் வருங்கால சந்ததிகளுக்கு சொல்லிக்காட்டி அவர்களை மார்க்கம் சொன்ன வழியில் வளர்க்காததால் இன்று எத்தனையோ குழப்பங்கள் நம்மிலும் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன.
பெற்றோர் சொல் கேளாத பிள்ளைகள், நவீன ஊடகங்களால் சீரழியும் இளைய சமுதாயம் உ.ம் - சினிமா, டி வி . அதனை தங்கள் முன் மாதிரி (ரோல் மாடல் )யாக பின்பற்றி ஓடி போதல் போன்ற கன்றாவிகலெல்லாம் தற்போது நடைபெறுகின்றது. அதன் கஸ்டம் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.
அல்லாஹ் தான் நம்மை உத்தம நபியையும் அவர்தம் சத்திய தோழர்களையும் பின்பற்றி நம் இம்மை மறுமை வாழ்வினை செழிக்கச் செய்வானாகவும்.

sabeer.abushahruk said...

மெய்சிலிர்க்க வைக்கும் தியாகங்களைக் கொண்ட நம் இஸ்லாமிய வரலாற்று ஏடுகளைத் திறம்பட நயமாகச் சொல்லும் தொடர்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட சகோதரர்களுக்கும், வாசித்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நாம் அனைவரும் படிப்பினைபெரும் விதமாக இன்னும் ஏராளமான தகவல்கள் நிறைய உள்ளது.

மிகவும் சிரமம் எடுத்து தொகுத்தளிக்கப்படும் இது போன்ற படிப்பினைபெரும் இஸ்லாமிய மார்க்க வரலாறுகள் இன்னும் நிறையபேர்களுக்கு சென்றடைய வேண்டும். இதை வாசிப்பவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அறுமுகப்படுத்துங்கள். காரணம் இந்த பதிவை வாசித்த என் நண்பர் ஒருவரின் மனைவி பெற்றோருக்கு உதவவில்லையே என்ற குற்றவுணர்வுடன் அழுதுவிட்டதாகவும் எனக்கு அலைப்பேசி மூலம் தெரிவித்தார்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சிரமம் பராது அவர்களின் அரிய அழகிய வரலாறு தொடர்ந்து தருவதை கிரகித்து அதன்படி செயல்படுவோமாக!

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

Anonymous said...

//மகளேஇதுஎங்கிருந்துகிடைத்தது...........//

இதுபோல் ஈஸா நபியின் தயாரைப் புகழ்ந்த மனப்பக்குவம் உடையவர்களாக நபி[ஸல்] இருந்ததாலேயே அல்லாவின் பெயருக்கு அடுத்து அண்ணளாரின் பெயர் 'பாங்கு' என்னும் 'தொழுகைக்கான அழைப்பில் ஊரெங்கும் உலகெங்கும் உச்சரிக்க அல்லாஹ் நாடியிருந்திருக்கிறான். பிற மதத்தாரோடு நாம் நட்பு பாராட்டி இஸ்லாத்தின் சிறப்புக்களை எடுத்துச் சொன்னால் அவர்கள் நம் பக்கம் திரும்பும் வாய்ப்பு உண்டு. ஆனால் நாமோ ஊதிய காதிலேயே ஊதிய சங்கை ஊதிக்கொண்டே இருக்கிறோம். இஸ்லாமிய பிரச்சாரத்தில் புதிய யுக்திகள் புகுத்தப் படவில்லை. நின்ற இடத்திலேயே அது நிற்கிறது!.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு