Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் தோல்விக்காக கலங்காதீர்கள்... 6

அதிரைநிருபர் | May 15, 2011 | , ,

அன்பிற்குரிய நண்பர்களே, சகோதரர்களே...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தமிழகமே விழாக்கோலத்தில் இருக்கும்போது, பண்டிகை தினத்தில் குழந்தையைக் காணடித்த ஒரு தந்தையின் மனநிலையில் நான் இருக்கிறேன் என்பதை மறைக்க விரும்பவில்லை.

எத்தனையோ பேரின் வெற்றிக்காக பாடுபட்டு மகிழ்ந்த நான், என் முதல் தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்திருக்கிறேன். எனது தோல்வி சென்னையில் அரசியல் வட்டாரத்தையும், பொதுமக்களையும் உலுக்கியிருக்கிறது. தமிழகத்தையும் தாண்டி உலகமெங்கும் வாழும் தமிழக சகோதரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை உணர்கிறேன். சமுதாயம் கவலைப்படுவதை அறிகிறேன்.

தங்களாலேயே வெற்றிபெற முடியாது என அதிமுகவினர் ஒதுங்கிய சவால்மிக்க ஒரு தொகுதி சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி என்பது தமிழகம் அறிந்த உண்மை.

சென்னையை மிரட்டும் ரவுடிகளின் துணையோடு, மிகப்பெரிய சினிமா பணக்காரரான ஜெ.அன்பழகன் திமுக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட போதே அங்கு பரபரப்பு தொற்றியது. கலைஞரின் தொகுதி மட்டுமல்ல... தயாநிதி மாறனின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குப்பட்ட பகுதி வேறு. கலைஞர் அன்பழகனை வேட்பாளராக நிறுத்திய போது, இங்கு நானே நிற்பதாக கருதுங்கள் என்று அறிமுகப்படுத்தினார்.

அங்கு திமுகவுக்கு ஏற்படும் தோல்வி, கலைஞரின் குடும்பத்திற்கு ஏற்படும் தோல்வி என கருதப்பட்டதால் தயாநிதி மாறனும், கலைஞரின் மகன் மு.க.தமிழரசும் நேரடியாக எனக்கு எதிராக களப்பணியாற்றினார்கள்.

தினந்தோறும் ரவுடிகளின் பிரச்சனையை சந்தித்தேன். தினந்தோறும் வாக்களர்களுக்கு பணம் வினியோகித்த அநீதிக்கு எதிராக போராடினேன். ஒரு கட்டத்தில் தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன் குமாரை இரண்டு முறை நேரில் சந்தித்து பண வினியோகத்தை தடுத்து நிறுத்துமாறு முறையிட்டேன். அவரை நேரில் இருமுறை சந்தித்த ஒரே வேட்பாளர் நான் மட்டுமே. ஆயினும் பண விநியோகத்தை தடுக்க முடியவில்லை.

எனினும் மனம் தளராமல் போராடினேன். நமக்கு பலஹீனமாக இருந்த ஒரு தொகுதி, 15 நாள் உழைப்பில் தமிழமே பேசப்படக்கூடிய ஒரு நட்சத்திர தொகுதியாக மாற்றினோம். நம் உழைப்பையும், பிரச்சாரத்தையும் மீடியாக்கள் வியந்து போற்றின. ரவுடிகளையும், பணக்கார சக்திகளையும் எதிர்த்து போராடுவதாக பாராட்டின. நவீன வடிவிலான பிரச்சாரங்களை முன்னெடுத்தேன்.

தேர்தல் களத்தில் நான் ஒரு கதாநாயகன் போல் மக்களால் வர்ணிக்கப்பட்டேன். செல்வி. ஜெயலலிதா அம்மையார் அவர்களே நேரில் அழைத்து பாராட்டினார்கள்.

ஆனாலும், கடைசி இரண்டு நாட்களில் கடுமையாக வினியோகிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளும், தங்கக் காசுகளும், குடிசை மக்களையும், மீனவ மக்களையும் விலைக்கு வாங்கிவிட்டது என்பதை வாக்குகள் எண்ணப்படும் போது அறிந்தேன்; அதிர்ந்தேன். எந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டேனோ அந்த மக்கள் என்னை கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டார்கள்.

குடிக்காதீர்கள்; பொருளாதாரத்தை சேமியுங்கள்; பின்ளைகளைப் படிக்க வையுங்கள் என்றெல்லாம் தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கொள்கை பிரச்சாரத்தை எந்த மக்களிடம் அக்கறையுடன் செய்தேனோ, அந்த மக்கள் தங்களுக்கும், தங்கள் தொகுதிக்கும் பேரிழப்பை ஏற்படுத்திக் கொண்டுவிட்டார்கள் என்பதை நினைத்து வருந்துகிறேன்.

கூட்டணிக் கட்சியொன்றைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலரும் தயாநிதி மாறனிடம் விலை போனதை அறிந்து வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.

சென்னையில் நானும், கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட சைதை துரைசாமியும்தான் அனல் பறக்கும் பிரச்சாரத்தை கடும் வெயிலில் தீவிரமாக மேற்கொண்டோம். வீடு வீடாக, வீதி வீதியாக ஏறி இறங்கினோம்.

நாங்கள் இருவருமே மீடியாக்களால் பாராட்டப் பெற்றோம். ஆனாலும் எங்கள் இருவரையும் அலைகளையும் தாண்டி பணம் ஜெயித்து விட்டது.

இன்று அறிவார்ந்த மக்களிடமும், மனசாட்சிமிக்க வாக்காளர்களிடமும் நாங்கள் இரக்கத்திற்குரிய நபர்களாக அனுதாப அலையில் நின்று கொண்டிருக்கிறோம். வெற்றியால் கிடைத்திருக்கும் ஆதரவை விட, தோல்விக்குப் பிறகு கிடைத்திருக்கும் ஆதரவு பன்மடங்குகளாக இருக்கிறது.

என் தோல்வியால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பதை ஃபேஸ்புக் தகவல் பரிமாற்றங்களில் பார்க்க முடிகிறது. என்னை சந்தித்து அழும் சகோதரர்களிடமும், அலைபேசி வழியாக பதறும் சகோதரர்களிடமும் அந்த உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. என் மீது பற்றுக்கொண்ட மக்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து மனம் நெகிழ்கிறேன்.

போரில் வெற்றி பெறும்போது எதிர்பாராவிதமாக முக்கிய தளபதி கொல்லப்படுவது யுத்தங்களில் சகஜமானது. அதுபோல்தான் இதுவும்! நான் சட்டமன்றத்திற்குப் போனால் பாராளுமன்றத்தில் வைகோ முழங்கியது போல், சட்டமன்றங்களில் ரஹ்மான் கான், பரிதி இளம்வழுதி முழங்கியது போல் செயல்பட்டிருக்க முடியுமே... அது முடியாமல் போய்விட்டதே என ஒரு சகோதரர் குமுறினார். கவலை வேண்டாம்.

அருமை தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், அருமை நண்பர் அஸ்லம் பாஷாவும் பெற்ற வெற்றி நமக்கு புதுத்தெம்பை அளித்திருக்கிறது. சமுதாயத்திற்குப் புது நம்பிக்கையை தந்திருக்கிறது. அதை நினைக்கும் போது ஆறுதலாக இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறதை நினைக்கும் போது, மனம் மகிழ்கிறது.

என் தொகுதி மக்களில் சிலர் செய்த வரலாற்றுத் தவறுக்காக யாரும் கலங்க வேண்டாம். எத்தனையோ களங்கள் நமக்காக காத்திருக்கிறது. இதைவிட சிறப்பான இன்னொன்றை இறைவன் நமக்கு வழங்குவான். 15 கோடிகளை செலவு செய்த எதிர்தரப்புக்கு முன்னால் சில லட்சங்களை செலவு செய்து சில ஆயிரம் ஓட்டுகளில் மட்டுமே தோற்றிருக்கிறோம்.

ஆனால், வல்ல இறைவனின் நாட்டம் இதுதான் எனும்போது இதற்குமேல் இதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

என் வாழ்க்கை முழுவதும் போராட்டங்களால் சூழப்பட்டிருக்கிறது. எனது பொது வாழ்வு பயணங்களில் நான் பல காயங்களைப் பட்டிருக்கிறேன். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் நான் பல அதிர்வுகளை சந்தித்து மெல்ல மீண்டும் வந்திருக்கும்போது, எதிர்பாராத இத்தோல்வியால் நான் அதிர்ச்சியடைந்திருக்கிறேன் என்பதை மறைக்க முடியவில்லை. ஊரே விழாக்கோலத்தில் இருக்கும்போது, அந்த மகிழ்ச்சியில் நாமும் பங்கெடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தையும் மறைக்க விரும்பவில்லை.

அன்று இரவு பத்திரிக்கையாளர்கள் என்னை தொடர்புகொண்டு, இத்தொகுதியில் ‘‘இவர்களை’’ எதிர்த்து உங்களைத் தவிர வேறு யார் நின்றிருந்தாலும், தயாநிதி மாறன் டெபாசிட் வாங்க விட்டிருக்க மாட்டார் என்று கூறினார்கள்.

நமது உழைப்பு அங்கு குறுக்கு வழியில் முறியடிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் அதையும் மீறி எனக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களித்த 54,988 வாக்காளர்களுக்கும் என் சார்பிலும், கட்சியின் சார்பிலும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னோடு உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும், சொந்தக் காசை செலவு செய்து, பசியோடும் & பட்டினியோடும் அலைந்து திரிந்து பிரச்சாரம் செய்த என் உயிருக்கினிய மனிதநேய சொந்தங்களுக்கும், தாய்க்கழக உறவுகளுக்கும் என் மனப்பூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்குப் பின்னணியில் உழைத்த அறிவுஜீவிகள், மாணவர்கள், இளைஞர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், உலகமெங்கும் எனக்காக துவா செய்த நல்லுள்ளங்களுக்கும், என் அதிர்ச்சித் தோல்விக்குப் பின்னாலும் எனக்காக துடித்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் வெற்றி பெற்றிருந்தால் கிடைக்கும் ஆதரவை விட, நான் தோற்ற பிறகு எனக்கு கிடைத்திருக்கும் ஆதுரவும், அனுதாபமும் அளவிட முடியாததாக இருக்கிறது. வயதில் இளையவனாகிய என் மீது சமுதாய மக்கள் வைத்திருக்கும் அன்பை எண்ணி உண்மையில் கண் கலங்குகிறேன்.

என் உரையில் உந்தப்பட்ட மாணவர் தம்பிகள் தமிழகமெங்கும் அழுகின்ற செய்திகள் என்னை உறைய வைக்கிறது. நமது இயக்க குடும்பங்களில் பெண்களெல்லாம் கூட எனக்காக பதறும் செய்திகள் என்னை விசும்ப வைக்கிறது. பல சகோதரர்கள் என்னை நேரில் சந்திக்க பல ஊர்களிலிருந்து வந்தவண்ணம் உள்ளனர்.

மீண்டும் கூறுகிறேன். கவலைகள் இருந்தாலும், அடுத்த களத்துக்கு நம்மை தயார்படுத்துவோம். அமெரிக்காவுக்கு விடுதலை வாங்கித்தந்த ஜார்ஜ் வாஷிங்டனையே அதே மக்கள் தேர்தலில் தோல்வியடைய செய்தார்கள். இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக் கொடுத்த வின்ஸ்டன் சர்ச்சிலை அடுத்த தேர்தலில் அதே மக்கள் தோல்வியைச் செய்தார்கள்.

காமராஜர், அண்ணா போன்றவர்களே தோற்றிருக்கும்போது எனது தோல்வி சாதாரணமானது. நாம் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோமே தவிர நேரிய வழியில் அல்ல.

குறுக்கு வழியில் வெல்வதை விட, நேர்மையான வழியில் தோற்பது உயர்வானது.

வெளிநாடுகளில் வாழும் நண்பர்களும், சகோதரர்களும் இதை எளிதாக எடுத்துக் கொண்டு இயல்பு நிலைக்கு திரும்புமாறு வேண்டுகிறேன்.

உங்களின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் நிறைவேற்றும் வேறொரு சிறந்த வாய்ப்பை இறைவன் எனக்கு நல்குவான். தற்போது மன அமைதியும், சிறிய ஓய்வும் எனக்கு தேவைப்படுகிறது.

ஆயினும் எந்தவிதத்திலும் சமுதாயப் பணி தடைபடாது. முன்னிலும் அதிகமாக உழைப்பேன். நமது கட்சி வெற்றி பெற்ற ஒரு போரில் காயம்பட்ட ஒரு வீரனாக இருக்கிறேனே தவிர, ஓடி ஒளிந்தவனாக இருக்க மாட்டேன்.

எனக்கு ஒரே ஆறுதல், நம் சமுதாய மக்கள் வாழுமிடங்களில் 99 சதவீத ஆதரவு கிடைத்ததுதான். இது மமகவுக்கான அற்புதமான களம் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.

கலைஞர் குடும்பத்தையும், ரவுடிகளையும், அதிரவைத்த ஒரு தமுமுக தொண்டன், மமக ஊழியன் என்ற பெருமிதத்தோடு என் அடுத்தகட்டப் பயணம் தொடரும். இன்ஷாஅல்லாஹ்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே! இறுதி வெற்றி நமது அணிக்கே!

அல்லாஹ் நமக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் எங்களை அணுகாது (அல்குர்ஆன் 9:51)

மூமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 3:200)

அன்புடன்

எம். தமிமுன் அன்சாரி


Email by: MSM Naina Mohamed

6 Responses So Far:

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்கள் நம் அதிரைநிருபருக்கு அளித்த போட்டியை இந்த சுட்டிக்கு சென்று பாருங்கள் http://adirainirubar.blogspot.com/2011/03/blog-post_13.html

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரரே : இதுதான் இறைவனின் நாட்டம் !

எங்களுக்கு ஆறுதல் சொல்வதை விட ! இனிமேல் வரயிருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் எப்படி காலூன்றலாம் என்ற செயல்திட்டத்தோடு மீண்டும் மக்களை சந்திக்க தயாராகுங்கள் !

உங்களின் களப்பனி சேவை அவசியம் அறிந்தே இந்த வெற்றி நழுவல் என்று எடுத்துக் கொண்டு மீண்டும் சுழன்றிட எழுந்திருங்கள்...

அவசரப்பட்டு அன்றாட அரசியல் கட்சிகள் போன்று எதிலும் முந்திக் கொண்டு வாய் விட்டு விடாதீர்கள் ! (எ.க.: ஹசாரே ! விடுதலைப் புலிகள் மன்னிப்பு.. இப்படியாக சில.. ) இவைகள் என் தனிப் பட்ட கருத்தே !

NAGAIPUYAL said...

தம்பி அன்சாரி!. தோற்ற திமுக/காங்கிரஸ் எல்லாம் கம்முன்னு கிடக்கும் போது, உனக்கும் மட்டும் ஏன் இம்மாம்பெரிய கடிதாசு!. ரொம்ப ஓவர் பில்டப் பண்ணி அறிக்கை எல்லாம் விடாத அப்பு!. அப்புறம் அரசியலில் புட்டுக்குவே!.

ஏற்கனவே திருச்சியில் நீ பேசியபோது, என் இனத்து சகோதரனை, புனிதமிக்க ரமலான் மதத்தில், சிறப்பு இரவு தொழுகை மூலம், படைத்த இறைவனை வணங்கிகொண்டு இருக்கும் போது, புறமுதுகுப்பக்கம் சுட்டுத்தள்ளிய அயோக்கிய விடுதலைபுலி பயலுகளை நீ மன்னிச்சியே!. (நேருக்கு நேர் நின்று சுட, துப்பு இல்லாத ராஸ்கலை எல்லாம் விடுதலை புலி, போர் வீரன் என்றெல்லாம் நம்மால் ஒத்துகொள்ள முடியாது!. அன்று என் சகோதரன் கூட, நேருக்கு நேர் நின்று நெஞ்சை நோக்கி இந்த விடுதலை புலி நாய்கள் சுட்டு இருந்தால், குறைந்த பட்சம் பத்து புலிகளையாவது துவசம் செய்து விட்டுதான் என் சகோதரன் இறந்திருப்பான்!.) அப்போ இதுபோல நீ உன் திமிர்பிடிச்ச பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கையை கொடுத்திருந்தால், இன்று நீயும் சட்டமன்றத்திற்கு சென்று இருப்பாய்!.
அன்று தங்களின் குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கதறி அழுதிருப்பார்களே!, அவர்கள், மன்னிக்க வேண்டிய விடுதலை புலிகளை, சிறிதும் உரிமை இல்லாத நீ மன்னிச்சியே! அதனால் தான் உன்னை திருவிழாவில் குழந்தையை பறிகொடுத்த தந்தையின் மனநிலையில் உள்ளதாக அந்த வல்ல இறைவனே உன் மூலமே இதுபோல் அறிக்கையை விட வைத்து இருக்கின்றான்!. உன் தோல்வியை என்னி ஈமான் உள்ள எந்த முஸ்லிமும் கவலைபட மாட்டான். அதனால் நீ கலங்காமல் இரு அப்பு!!..
அப்பறமா, நீ உன்னை நீயே தேற்றிக் கொள்வதற்காகவே, கடந்த தேர்தல்களில் தோற்றுப் போனவர்கள் என்று சுட்டிக் காட்டியுள்ள, அண்ணா, காமராஜ், ஜார்ஜ் வாஷிங்டண், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் கூட இப்படி ஒரு கடிதாச எழுதலையப்பா!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தனிப்பட்ட முறையில் சிறு தோல்விதான் என்றாலும்(ம.ம.க)தலைமையின் வெற்றியை நினைத்து சந்தோசப் படவேண்டியது தான்.
பாரம்பரிய தி.மு.க. வென்றது வெறும் 19% மட்டுமே.ஆனால் நேற்றைய ம.ம.க வென்றதோ 67% இதை ஒப்பிட்டால் தோல்வி என்பதை ஒரு பொருட்டாக எடுக்க வேண்டியதில்லை.
மிகமிக நெருக்கடியான கட்டத்தில் 55000 வாக்காளர்களின் பெருந்தன்மையை பாராட்டியே ஆகனும்.

Meerashah Rafia said...

படிக்க படிக்க கண்கள் கலங்கின. இதயம் சிறிது கனத்தது..

என்னை பொறுத்தவரையில், நாம் பெற்ற இரு தொகுதி வெற்றி இமாலய வெற்றி எனலாம். சகோ.தமீம் அன்சாரி +வ்வாக எண்ணி திருப்தி அடைந்து மேலோங்கி செல்வதே சிறந்தது என்பது என் கருத்து.நிதானம் வெல்லும்.

crown said...

நம்மால் முடியும்!
இதை நம்ப ஆரம்பித்துவிடாலே-
நம்மால் முடியும்.
எல்லைதாண்டி வளர முடியும்.
எல்லை இல்லை யெனும் நிலமை கொண்டுவரமுடியும்.
தொல்லைகளில்லா தேசம் கான முடியும்.
கண்ணீர் இல்லா கண் பெற முடியும்.
முடியும்- நம்மால் முடியும்-
ஒற்றுமை யெனும் வீட்டுக்குள் ஒன்றாய் வசிக்க பழகிவிட்டால்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு