Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நட்புக்கு வயது நாற்பத்தி எட்டு... ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | January 26, 2012 | , , , , ,


கடிதங்கள் கூட இலக்கியமாகுமா? எழுதுபவரையும்,  எழுதப்படுபவரையும், எழுதும் விஷயத்தை பொறுத்தும் ஆகலாம். ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திராவுக்கு சிறையில் இருந்து எழுதிய கடிதங்களின் தொகுப்பு “ GLIMPSES OF WORLD HISTORY”  என்று நூலாகி இருக்கிறது. அதேபோல் நெப்போலியன் தனது மனைவி ஜோசபினுக்கு , ஹிட்லர் தனது காதலிக்கு, ஆபிரஹாம் லிங்கன் தனது மகனின் ஆசிரியருக்கு, ரொனால்டு ரீகன் தனது மனைவி ரேனிக்கு, லிபியாவின் கடாபி ஜனாதிபதி ஒபாமா ஆகியோருக்கு இடையில் நடந்த கடிதபோக்குவரத்துக்கள் உலகில் போற்றப்படுகின்றன. அண்ணாதுரை அவர்கள் “அன்புள்ள தம்பிக்கு” என்று எழுதிய கடிதங்கள் இலக்கிய தரம் வாய்ந்தவை. 

இதோ இங்கே ஒரு கடிதம் பிரசுரிக்கப்படுகிறது. இது இரு நண்பர்களுக்கிடையே ஒரு நாற்பத்தி ஐந்து ஆண்டு கால நட்பின் பரிணாமங்களை கூறும் கடிதம்.  ஒரு நண்பரால் இன்னொரு நண்பருக்கு எழுதப்பட்டது. எழுதியவரின் அனுமதி பெற்று இதை அனுப்பி இருக்கிறேன். எழுதப்பட்டவருக்கும் இது வெளியிடப்படுவதில் மகிழ்வே. இதை எழுதியது யார் ? யாருக்கு எழுதப்பட்டது என்பதை நம்மில் சிலர் கண்டு பிடித்துவிடலாம். கண்டு பிடிக்க முடியாவிட்டால் பின்னூட்டத்தில் போட்டு உடைத்துவிடலாம். உடைத்து. பெரிய இலக்கியத்தரம் என்ற வரிசையில் வராவிட்டாலும் கூட நம்மில் எல்லோருக்குமே பொதுவாக அடுத்தவர் கடிதத்தை படிப்பதில் ஒரு சின்ன சபலமும் சந்தோஷமும் இருக்கலாம். அந்த சந்தோஷத்தை தரும் பெறும் நோக்கத்தில் மட்டுமே இது அனுப்பப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல் ஒரே சீரியஸ் ஆன விஷயங்களையே சிந்திக்கும்/படிக்கும் மனதுக்கு ஒரு சின்ன ரிலாக்ஸ். 

இதோ அந்தக்கடிதம் இப்படி தொடங்குகிறது....

யாவினும் இனிய நண்ப!

அஸ்ஸலாமு அலைக்கும்.

தாங்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல் உலகம் முழுதுமிருந்து எத்தனையோ நண்பர்கள் எனது கண் அறுவை சிகிச்சைக்கு பிறகு எனது நலம் கேட்டிருந்தாலும் அவர்களில் பலர் இதுவரை நம்மை போல் ஒன்றாக உண்டு, உறங்கியவர்கள் அல்ல. இணைய தளத்தில் எனது எழுத்துக்களை ரசித்து நட்பு பாராட்டியவர்கள் அவர்களில் பலர்.

“ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன?

வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்” 

என்று பாரதி பாடிய வரிகளுக்கு ஒப்ப, எனக்கு வேராகவும், நீராகவும்  இருந்ததும் இருப்பதும் உங்கள் நட்பே! இதை நான் ஐ.நா சபையில் கூட அறிவிக்க தயார். 

மீண்டும் கூற வேண்டுமானால் எனது வாழ்வில்

“நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்” இருந்தது உங்கள் நட்பே! 

மாணவப்பருவத்தில் நாமும் களித்திருக்கிறோம். ஒரே நாளில் மூன்று படங்கள் பார்த்திருக்கிறோம்.

டில்லிக்கு ராஜாவாக இருந்தாலும் பள்ளிக்கு பிள்ளைதானே. பின்னாளில் பெரிய பேராசிரியராக வந்து புகழ் பெற இறைவன் நாடி இருந்தாலும் சிறு வயதில் எல்லோரும் சேட்டைகள் செய்தவரே. பூக்கின்ற நேரத்தில் பூத்தலும் காய்க்கின்ற காலத்தில் காய்த்தாலும், பழுக்கின்ற நேரத்தில் பழுத்தலும் பழுதல்லவே. 

தஞ்சைமணிக்கூண்டு மங்களம்பிகாவில் நெய் மசால் தோசையும், இந்தோ இலங்கையில் கோலா உருண்டை குழம்புக்கறியும், சென்னை புகாரியில் பீச் மெல்பாவும் ருசித்து இருக்கிறோம். 

தொப்பிக்கடை மாடியில், இரவில் விளக்குகளை அணைத்துவிட்டு உறக்கம் வரும்வரை வெறும் தரையில் படுத்துக்கொண்டே விடிய விடிய விடிய குட்டி காதருடனும், அய்யம்பேட்டை சபீருடனும், அரசனகரி நிஸாருடனும், தோப்புத்துறை ரெஜாக்குடனும், சக்கராப்பள்ளி சாலிகுடனும் அரட்டை அடித்து இருக்கிறோம். அந்த காலத்தில் சிரித்த சிரிப்புகளைக் கொண்டு எத்தனையோ கிலோவாட் மின்சாரம் தயாரிக்கலாம். 

நானும் நீஙகள் ஆடியும் பாடியும் களித்திருக்கிறோம். ஆனாலும் வகுப்பில் முதலாவதாக வந்தும் காட்டியிருக்கிறோம். 

நீங்கள் பதினோராம் வகுப்பு படிக்கும்போது (1965-66) நீங்களும் , நான் பதினோராம் வகுப்பு படிக்கும்போது (1967-68) நானும் வாக்களிக்கப்ப்பட்டு பள்ளியின் மாணவர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தோம்.  (நமக்கு கேள்ஸ் ஓட்டு அதிகம் விழுந்தது- எனக்கு இன்னும் அதிகம் விழுந்தது - காரணம் நான் நாடகத்தில் பெண்வேடமிட்டது முதல் எனக்கு வசந்தி என்று பெயர் சூட்டி கிண்டலடிப்பார்கள், வேறொரு நாடகத்தில் நான் திப்பு சுல்தானாக நடித்ததை வசதியாக மறந்துவிடுவார்கள்.) 

அந்த நேர பள்ளி பாராளுமன்றத்தில் நாம் இருவருமே அடுத்தடுத்த பிரதமர்கள்! அம்மடியோவ். நம்மீது ஊழல் புகார் எதுவும் வரவில்லை. பள்ளி பாராளுமன்றத்தில் மீலாது விழா கணக்கை நீங்கள் சமர்ப்பிக்கும்போது விருந்தினருக்கு “வெண்சுருட்டு” (சிகரெட்தான்) வாங்கியது என்று நீங்கள் கணக்கு படித்தது ஒரு எதிர்கால தமிழ் பேராசிரியராக வருவதற்கு அச்சாரமிட்டது. அன்று உங்களுக்கு எதிராக எதிர்கட்சி தலைவர் நண்பர் அதிரை அன்வர் அவர்கள்.( இன்றைய த.த.ஜ.). 

எனக்கு இரண்டு வருடம் மூத்தவராக நீங்கள் படித்து உங்கள் புத்தகங்களை அப்படியே நான் பெற்றுக்கொள்ள வசதியாக இருந்தது. ஆனாலும் அதற்காக என வீட்டில் பணம் வாங்கி நூர் லாட்ஜிலும், ஆரிய பவனிலும் தின்று செலவு செய்ததும், கொழும்பு ஸ்டோரில் சட்டை துணி எடுத்ததும் வேறு விஷயம்.  நீங்கள் சப்தம் போட்டு அழகு தமிழில் படிப்பதை கேட்டு கேட்டு பதினொன்ராம் வகுப்பு பாடங்கள் எனக்கு ஒன்பதாம் வகுப்பிலேயே மனப்பாடம் ஆனதே அது பெரிய விஷயம். குப்தர் காலம் பொற்காலம்,  இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை, ஒருவிதையிலை இருவிதையிலை தாவரம், வட்டத்தின் பரப்பளவு, பித்தகொராஸ் தேற்றம்,  பறவை பறக்கும் விதத்தை விவரி, தவளையின் இனப்பெருக்கம், போர்மூண்டகாலை மனோன்மணிய நடராசன் வீரர்களை நோக்கிப்பேசியது,  அவன் புல்லையும், நாங்கூழ் புழுவையும் பார்த்து பேசியது, கண்ணகி கால் சிலம்பை ஒடித்தபோது 'தேரா மன்னா' என்று பேசியது உட்பட அனைத்தும் இன்றும் என் நினைவில் பதிந்த காரணம் நீங்கள் சப்தமிட்டு சப்தமிட்டு படித்து அவை எனக்கும் மனப்படமாகி இருந்தது. இன்று கேட்டாலும் சொல்வேன்.  

கட்டுரைப்போட்டியிலும், பேச்சுபோட்டியிலும் பரிசுகளை அள்ளிக்குவித்து இருக்கிறோம். காந்தி நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியில் மாவட்டத்தில் முதல் பரிசு பெற்று வந்தோம். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தஞ்சை மாவட்டத்தின் பிரதிநிதியாக நீங்களும் வட ஆற்காடு மாவட்ட பிரதிநிதியாக வாணியம்பாடியிலிருந்து நானும் கலந்து கொண்டு அன்றைய சட்ட கல்லூரி சார்பில் வந்த சுகி சிவத்திடம் தோற்றுப்போனோம். கோவை பி. எஸ். ஜி. கலைகல்லூரியில் பரிசு பெற்று வந்தோம். வேலூர் ஊர்சு கல்லூரியில் கவிக்கோ அப்துல் ரகுமான் கையால் பரிசுக்கோப்பை வாங்கினோம். பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் சிற்றின்பம் / பேரின்பம் பேச்சுப்போட்டியில் வாகை சூடினோம்.  நம்மிடம் தோற்ற பலர் பின்னாளில் அரசியலில் புகுந்து அமைச்சர்களாகவும் , சபாநாயகரராகவும் வந்தது தனிக்கதை. உள்ளூர் மாணவர்களானாலும் கல்லூரிக்கு நாம் உதாரண மாணவர்களாய் இருந்து இருக்கிறோம். ஆசிரியர்கள் அனைவரின் அன்பையும் பெற்றோம். 

ஒரு முறை கல்லூரியில் காந்தி நூற்றாண்டுவிழா பட்டி மன்றத்தில் நாம் எதிர் எதிர் அணியில் பேசும்போது வட்ட மேசை மாநாட்டுக்கு காந்தியை ஏன் அனுப்பினார்கள்? கோகலேயை , திலகரை ஏன் அனுப்பவில்லை என்று நீங்கள் கேட்க அடுத்து பேச வந்த நான் வட்டமேசை மாநாடு நடக்கும்போது கோகலேயும் திலகரும் உயிரோடு இல்லையே செத்தவர்களை எப்படி அனுப்ப முடியும் என்று கேட்க-

மற்றொரு பட்டி மன்றத்தில் சொந்த விஷயத்தை எடுத்து உதாரணத்துக்கு நான் பேச, பந்து விளையாட்டில் பாலைத்தான் ( BALL) உதைக்க வேண்டும் காலை அல்ல என்று நீங்கள் பேச-

இப்படியெல்லாம் பல உரசல்கள் இருந்தாலும் நாம் அன்று முதல் இன்று வரை நம்மை நாம் அறிந்து கொண்டவர்களாகவும் புரிந்து கொண்டவர்களாகவும் நமது நட்பு நாள்காட்டியில் நாற்பத்தெட்டு ஆண்டுகளை கடந்துவிட்டோம். நீங்கள் ஓயுவூதியம் பெறுகிறீர்கள். நான் இன்னும் ஊதியம் பெறுகிறேன். 

சிற்பிகள் இல்லாமலேயே நம்மை நாமே செதுக்கிக்கொண்ட சிற்பங்களாக வழிகாட்ட ஆள் இல்லாமல் நாமே நமக்கு தேர்ந்தெடுத்த வாழ்வுப்பயணங்கள். அப்பப்பா.....! உங்கள் வாப்பா ஜவுளிக்கடையும், புகையிலை வியாபாரத்தையும் கவனிக்கவே நேரம் இல்லா நிலையில், என் வாப்பாவோ பினாங்கிலிருந்து இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வந்து ஓர் இரு மாதம் தங்கி அரைகுறையாய் கேள்விகேட்டு, விளங்கி ஆயிரம் அறிவுரைகள் மட்டும் சொல்லி செல்வார்கள். நாம் சொல்வதுதான் அவர்களுக்கு உண்மை. நாமே கூடிப்பேசி நமது உயர்கல்வியை தேர்ந்தெடுத்தோம் வழிகாட்ட ஆள் இல்லை. கணக்கு சொல்லித்தர ஆள் இல்லை. ஆங்கில சொல்லுக்கு அர்த்தம் சொல்லித்தர ஆள் இல்லை.  ஆனாலும் நமக்கு நல்ல ஆசிரியர்கள் அமைந்தார்கள். அபிராமம் ரெஜாக் சாரும்,  இளையான்குடி பசல் முகமது சாரும் ( 42 வருடங்களுக்கு பிறகு இன்றும் உறவு வைத்து சென்ற முறை ஊர் சென்றபோது மதுரை போய் பார்த்து வந்தேன்), நம்மை இரும்பாக காய்ச்சி சம்மட்டி கொண்டு அடித்து அடித்து உருவாக்கிய பட்டரைக்காரர்கள். 

நட்புக்கு இலக்கணம் கூடிக்கதைபேசி, கூத்தடித்து, கும்மாளமிட்டு, ஊர்சுற்றுவது மட்டுமே என்று இருந்த, இருக்கும்  நிலைகளை மாற்றி,

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், முகம் புதைக்கும் மடியாகவும், முதுகில் தட்டும் கையாகவும், சாய்ந்து கொள்ளும் தோளாகவும், சாய்த்து கேட்கும் செவியாகவும், வழிந்தோடும் கண்ணீரை வழித்துவிடும் சுட்டு விரலாகவும், உடுக்கை இழந்தவனுக்கு கையாகவும் இருந்தன நமது நட்பு .

வாழ்க்கை புயலில் தடுமாறி கலங்கரை விளக்கு தெரியாமல் தடுமாறி நின்ற எனக்கு நண்பர் தாவூது அவர்கள் மூலம் ஒளிகாட்டி வழிகாட்டிநீர்கள். இரயில பயணம் போல் படித்து முடித்ததும் அவரவர் பாதைகளில் சென்று மறந்து வாழும் எண்ணற்ற நண்பர்கள் நடுவில் ஏறறத்திலும் இறக்கத்திலும் என்றென்றும் துணையாய் இருப்பது உங்கள் நட்பு.  

நான் வீடற்று இருந்த நிலைகண்டு உஙகளில் ஒரு இடத்தை எனக்கு தந்து அதில் ஒரு உப்பரிகையும் கட்டி தந்து கனவில் கண்ட இல்லத்தை நனவில் ஆக்கித்தந்த நட்பு உங்களின் நட்பு. பணத்தால் மட்டுமே இவைகளை சாதிக்க இயலாது. அன்பு இழையோடும் நட்பால் மட்டுமே இவைகளை ஆக்கித்தர இயலும்.  

ஒரு நண்பனின் ஒரு திருமணத்துக்குத்தான் சாட்சி கையெழுத்துப்போடும் நண்பர்களை காணமுடியும் . எனது இரண்டு திருமணத்துக்கும் நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டது மட்டுமல்ல- என் கையெழுத்து இல்லாத என் மகள் திருமணத்தின் பதிவு புத்தகத்தில் கூட கையெழுத்து போட்டுள்ளவர்கள் நீங்கள்.  அதையும்விட மேலாக எனது பேத்தியின் திருமண பதிவு புத்தகத்தில் கூட உங்கள் கை எழுத்து இருக்கிறது என்றால் நமது 48 ஆண்டுகால நட்பு வரலாற்றுக்கு நான் வேறென்ன சான்று கூற முடியும்?

ஊருக்கெல்லாம் கல்விக்கண் திறக்கின்ற தாங்கள் எனக்கு வாணியம்பாடி கல்லூரியில் வணிகவியலில் இடம் வாங்கி தந்தது ஒரு வழக்கமான செயலாக இருக்கலாம். ஆனால் என் பேரனுக்கும் அப்படி ஒரு வழி பிறக்கவும் இன்று அவன் ஒரு பொறியாளராக உருவெடுக்கவும் வித்திட்டீர்களே அதை எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் மறக்க முடியுமா?

“கண்ணை இமை இரண்டும் காப்பதுபோல் என் குடும்பம் வண்ணமுறக்காக்கின்ற” தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நலமும் இன்னும் வளமும் தந்து வாழ வேண்டும் என்பதை சொல்லி – இனியும் ஒரு முறை பிறக்க ஆசைப்படுகிறேன். அப்படி பிறந்தால் உங்களின் நண்பராகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்பதை என் விருப்பமாக எல்லாம் வல்ல அந்த இறைவனிடம் சொல்லி விடைபெறுகிறேன். 

வஸ்ஸலாம். 

என்றும் உங்கள்,

// ----------- //

-இபுராஹீம் அன்சாரி

27 Responses So Far:

sabeer.abushahruk said...

இந்த இனியவை நாற்பதில் இன்னா ஓர் எட்டுகூடவா இல்லை. அல்லது அ.நி. கத்தரி போட்டுவிட்டார்களா? :)

இத்தனை சுவாரஸ்யமாக யார், யாருக்கு எழுதி யிருக்க முடியும்? ம்ம்ம்

சரி,
ஊரு, பொழப்பு, படிப்பு போன்ற குறிப்புகளோடு அருமையான அன்பையும் பாசத்தையும் இழையோட விட்டிருக்கும்

இந்தக் கடிதம்
பால்மாறிய அன்பு எனில்
'காதலர்களாக' இருக்க வாய்ப்புண்டு;
ஒரே பாலாக இருக்கும்பட்சத்தில்
'காதர்களாக' இருக்க வாய்ப்புண்டு.

ஒரு ஃப்ளோக்காக காதர்கள் என்கிறேன். காக்காமார்களைச் சேர்த்து வாசிக்கவும்.

இதில், ஒரு காதர் பொருந்தினாலும் பாதி பரிசு கிடைக்குமா?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நட்புக்கு வயது நாற்பத்தி எட்டு என்றதும்.என் வயது மறந்து விடுமோ என்று பயப்படுகிறேன் .தங்கள் பேனாவின் பேரலை எழுத்து வரிகளால்.
நல்லவைகளை எழுதி நட்புக்கு நங்கூரம் போட்டு இருக்கிறீர் இபுராஹீம் அன்சாரி காக்கா.இன்னும் பயி(ற்)றுடுங்கள் அறுவடை செய்ய காத்திருக்கின்றோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அந்த காலத்தில் சிரித்த சிரிப்புகளைக் கொண்டு எத்தனையோ கிலோவாட் மின்சாரம் தயாரிக்கலாம். ///

செய்திருக்கலாமே காக்கா.... இப்போதைய இன்வெர்டர்களுக்கு ஜூட் விட்டிருக்கலாமே ! :)

//இதில், ஒரு காதர் பொருந்தினாலும் பாதி பரிசு கிடைக்குமா?//

நீங்கள் நினைத்தது நடுவருக்குரிய நாவலரா ?

இது என்னடான்னா நானெல்லாம் பிறக்கிறதுக்கு முன்னாடி ஆரம்பிச்சிருக்கா... இன்னும் பச்சைப் புள்ளையாவே இருக்கேன் காக்கா...

யாரவாது சொன்னா நல்லா இருக்கும், இந்த நட்புக்குரிய நாவலர்களையும் அந்த நல்லவர்களையும் பற்றி !

பொறுத்திருப்போமே... :)

sabeer.abushahruk said...

எல்.எம்.எஸ்:
அப்ப இது அன்சாரி காக்கா எழுதியது என்கிறீர்களா? பரிசு நிச்சயமா உங்களுக்கில்லை. அதெப்படி அன்சாரி காக்கா எழுதிய கடிதம் அவர்களிடமே இருக்கும்? அவர்களேயல்லவா பதிந்திருக்கிறார்கள்?

(ச்சும்மா கல்லாவிலேயே கண்ணிருந்தா இப்படித்தான் கவனக்குறைவு ஏற்படும்:))

Noor Mohamed said...

முதற் தகவல்

இந்த கடிதம் இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்கள் பேராசிரியர் M A அப்துல் காதர் அவர்களுக்கு எழுதிய கடிதம்.

இவண்
நூர் முஹம்மது

KALAM SHAICK ABDUL KADER said...

"இவரின் மீலாதுப் பேச்சுக்களைக்
கேட்காத காதும்
இருக்காது- அவர்கள் தான்
தமிழ்க் காதர்” என்று கவிநயம் நாடி aamf கூட்டத்தில் பாடி அறிமுகப்படுத்தப்பட்ட என் தமிழ்ப்பேராசிரியர் அப்துல் காதிர் சார் தானே?

அன்புச் சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்களை “தம்பி” என்று விளித்தேன் முன்பு; அதற்காக “மன்னிப்பு”க் கேட்டேன் இன்று. அலைபேசியில் அவர்களுடான உரையாடலில் நான் முன்பு எண்ணியிருந்தபடி “இளம் வயதினராக” இப்ராஹிம் அன்சாரி அவர்கள் என் மனக் கண்ணுக்குத் தெரிகின்றார்கள்; முன்பு அவர்களைத் தம்பி என்று விளித்ததன் காரணம்; அவர்களின் எழுத்துக்களின் இளமை; எண்ணங்களும் அப்படியே என்பதால் இளம் வயதினராகவே என் மனக்கண்ணில் தென்பட்டார்கள். இன்று, இக்கடுதாசி படித்தேன்; இளமையை நேசிக்கும் நினவுகளைக் கண்டதும்- இன்று என்னுடனான உரையாடலில் இரசித்துக் கொண்டே இடையிடையே அட்டகாசச் சிரிப்பொலியுடன் கேட்ட பின்பும் இவர்கள் இளம் வயதின் எண்ணம் உள்ள இனிய நணபர் தான் என்று மீண்டும் என் மனம் சொன்னது.

இருப்பினும், வயதுக்காக “காக்கா” என்று அழைக்கின்றேன்; என்றும் உங்களிம் எண்ணம், எழுத்தில் இளமையினை விழைகின்றேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வானியம்பாடியில் படித்திருக்கிறார்கள் சரி, தஞ்சை மாவட்டத்தின் சார்பாக கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டது யார் அப்படின்னா தஞ்சை மாவட்டத்திலிருந்து ஒரு கல்லூரியிலிருந்துதான் சென்றிருக்க வேண்டும் !

அப்படின்னா யார் !?

//எல்.எம்.எஸ்:
(ச்சும்மா கல்லாவிலேயே கண்ணிருந்தா இப்படித்தான் கவனக்குறைவு ஏற்படும்:))//

இல்லே காக்கா... சரியான நேரத்துல ஞாபகப் படுத்திட்டியலே... கூரைய பிச்சுகிட்டுல இறங்குறானுவோலாம் கள்ளப்பயலுவோ...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//முதற் தகவல்

இந்த கடிதம் இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்கள் பேராசிரியர் M A அப்துல் காதர் அவர்களுக்கு எழுதிய கடிதம்.

இவண்
நூர் முஹம்மது//

இந்தக் க்ளுவில்... மாற்றி வாசிப்போம் பேரா.MAK அவர்கள் இ.அ.காக்காவுக்கு எழுதியதாக இருக்கலாம் :) !

சரியா ?

Noor Mohamed said...

//நீங்கள் பதினோராம் வகுப்பு படிக்கும்போது (1965-66) நீங்களும் , நான் பதினோராம் வகுப்பு படிக்கும்போது (1967-68) நானும் வாக்களிக்கப்ப்பட்டு பள்ளியின் மாணவர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தோம்//

பேரா அப்துல் காதர் அவர்கள் பதினோராம் வகுப்பு (1965-66) ல் தான் படித்திருக்க முடியும் என்பது என் அனுமானம். காரணம் 1967 மார்ச் மாதம் நடந்த சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வுக்கு ஆதரவாக அன்று பழஞ் செட்டித்தெருவில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் மேடையில் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் முழங்கியவர். அப்போது பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் புகு முக வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்.

Noor Mohamed

sabeer.abushahruk said...

ஆஹா கருப்பு வெள்ளைப் படம் கலை கட்டுதுப்பா? எப்படியோ எனக்கு பாதி பரிசு உண்டும்

Noor Mohamed said...

//ஆஹா கருப்பு வெள்ளைப் படம் கலை கட்டுதுப்பா?//

தம்பி சபீர் அவர்களுக்கு,

நான் கருப்பு வெள்ளைப் படம் அல்ல. கலர் படம். பேரா அப்துல் காதர் அவர்கள் பதினோராம் வகுப்பு (1965-66). நான் பதினோராம் வகுப்பு படித்தது (1974-75).

நூர் முஹம்மது.

sabeer.abushahruk said...

சர்தான் காக்கா,
போகட்டும் ஒத்துக்கறேன்... ஈஸ்ட்மென்கலர்? :)

Noor Mohamed said...

//காந்தி நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியில் மாவட்டத்தில் முதல் பரிசு பெற்று வந்தோம்//

இபுராஹீம் அன்சாரி காக்கா,

1969 பிப்ரவரி, நம் கல்லூரியின் ஆண்டு நிறைவு விழாவில், தாங்களும் பேரா அப்துல் காதர் அவர்களும் (கோட்டு சூட்டு அணிந்து) இணைந்து ஒரே சுழற் கோப்பையை பரிசாகப் பெற்றீர்கள். அதுதான் காந்தி நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியில் மாவட்டத்தில் முதல் பரிசு பெற்று வந்தோம் என்பதா? அப்படியானால் அன்று தாங்கள் நம் கல்லூரியில் PUC யும் பேரா அப்துல் காதர் அவர்கள் II B.A. (History) படிக்கும் போது எப்படி இருவருக்கும் சேர்த்து ஒரு சுழற் கோப்பை கிடைத்தது.

இங்கு நான் உங்களுக்கு கூறிக் கொள்வது, 1978 ல் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களின் அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டியில் சுழற் கோப்பை எனக்கு கிடைத்து, அது ஓராண்டு நம் கல்லூரியில் இருந்தது.

நூர் முஹம்மது

Shameed said...

இந்த கடிதம் அன்சாரி மாமா அவர்கள் பேரா அப்துல் காதர் அவர்களுக்கு எழுதிய கடிதம்தான் என்பதற்கு இந்த கடிதத்தில் பல அத்தாச்சிகள் உள்ளன

1 உஙகளில் ஒரு இடத்தை எனக்கு தந்து அதில் ஒரு உப்பரிகையும் கட்டி தந்து கனவில் கண்ட இல்லத்தை நனவில் ஆக்கித்தந்த நட்பு

2 . எனது இரண்டு திருமணத்துக்கும் நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டது

3 . என் கையெழுத்து இல்லாத என் மகள் திருமணத்தின் பதிவு புத்தகத்தில் கூட கையெழுத்து போட்டுள்ளவர்கள்

4 .எனது பேத்தியின் திருமண பதிவு புத்தகத்தில் கூட உங்கள் கை எழுத்து இருக்கிறது

5 . இன்று அவன் ஒரு பொறியாளராக உருவெடுக்கவும் வித்திட்டீர்களே அதை எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் மறக்க முடியுமா?

6 . இது எல்லாத்தையும் விட உங்கள் வீட்டில் ( பழைய ) மாட்டி இருந்த கருப்பு வெள்ளை போட்டோவில் நீங்களும் பேரா அப்துல் காதர் சாரும் இருப்பது.

இவை எல்லாம் ஆராய்ந்து பார்த்ததில் பேர காதர் சாருக்கு அன்சாரி மாமா அவர்கள் எழுதிய கடிதமாக இருக்கணும் என்று நினைக்கின்றேன் ஆனால் "டில்லிக்கு ராஜாவாக இருந்தாலும் பள்ளிக்கு பிள்ளைதானே" என்பது என்னை சற்று தடுமாற வைப்பதால் யார் என்பதை மாமா தெளிவு படுத்தினால் தான் சஸ்பென்ஸ் முடிவுக்கு வரும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தெளிவான தமிழ், வரலாறு, பழமொழி, குசும்பு, நட்பு, என துஆவோடு காதரு சாருக்கு கட்டுரையாளர் எழுவுன கடுதாசி ரொம்ப சுவராசியமாயிருக்கு.

இன்னும் இதுமாதிரி படிப்பினை பல கொண்ட உங்க கடுதாசி நிறைய படிக்க தேட்டமாக இருக்கு.

நவீன வளர்ச்சியால் போனு இன்ட்டர்னெட்டு இதுகள் வந்து உங்களைப்போல் இப்பவெல்லாம் எழுதமுடியாதே என்று வருத்தமாகவும் இருக்கு!

ZAKIR HUSSAIN said...

நட்பு = எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பு. என்பதை இவ்வளவு அழகாக நிகழ்வுகளை காலம் தப்பாமல் ஒரு மல்லிகைச்சரம் போல் கோர்த்து தந்தது இன்னும் அழகு [ எப்படி இப்படி வர்ணனனையில் எழுதரே எனக்கேட்க நினைத்தால் " நேற்று கிரவுனிடம் டெலிபோனில் பேசினேன்..ஒட்டிக்கொண்டது அழகுத்தமிழ்.]

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

தம்பி அபூஇபுறாஹிம் அவர்களே! என்ன பரிசு வைத்து இருக்கிறீர்கள்?

எந்த பரிசாக இருந்தாலும் அதை தம்பி நூர் முகமதுக்கும்- மருமகன் ஷாகுல் ஹமீதுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

ஆனால் ஷாகுல் ஹமீது குடும்ப உறுப்பினர் என்ற முறையில் போட்டியில் பங்கு கொள்ள உரிமை இல்லை.

ஆகவே நூர்முகமதுக்கு முழுப்பரிசும் கவி சபீர் அவர்களுக்கு ஆறுதல் பரிசும் அளித்துவிடுங்கள். ( என்ன அது? ஏற்கனவே அறிவிக்கவில்லையா?)

நூர் முகமது, நீங்கள் கண்ட கருப்பு வெள்ளை போட்டோ அப்போது எடுத்ததுதான். நாங்கள் இருவரும் பெற்றதுதான். அணிக்கு கிடைத்த பரிசுதான்.

காரணம் ஒரு தலைப்பை ஒருவர் ஒட்டியும் மற்றவர் வெட்டியும் பேசவேண்டும்.

தரப்பட்ட தலைப்பு :- அன்பு நெறியை அணுகுண்டு நெறி வெல்லுமா?-

பின்னர் வருகிறேன்.

எல்லோரும் வாரக்கடைசியில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

நண்பர் பேரா. அப்துல் காதர் அவர்களுக்கு அவர் திருமணம் முடித்தபோது நான் எழுதிய கடிதமும் , முதல் குழந்தை பிறந்தபோது வாழ்த்தி எழுதிய கடிதமும் , எம். ஏ. பட்டம் பெற்றபோது எழுதிய கடிதமும் ,முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட சமயத்தில் எழுதிய கடிதமும் அடுத்து அடுத்து வரும். இன்ஷா அல்லாஹ்...

தம்பி அபூஇபுறாஹிம் இந்த மாதிரி வலையில் வேறு ஏதாவது மீன்களும் சிக்குமா என்று பாருங்கள்.

வஸ்ஸலாம்.
இபுராஹீம் அன்சாரி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தம்பி அபூஇபுறாஹிம் அவர்களே! என்ன பரிசு வைத்து இருக்கிறீர்கள்?//

காக்கா, அன்பே நிறைந்த எங்களின் சகோதர நேசம் புன்னைகைப் பூக்களால் சுற்றி சுற்றி, என்றும் நன்மையை நாடிய உருக்கமான பிரார்த்தனைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும் இன்ஷா அல்லாஹ்...

வெற்றியாளர்களும் இதனைத்தான் விரும்புவார்கள் :)... தங்களைப் போலவே !

நூர் முஹம்மது காக்கா அவர்களோடு உரையாடும் ஒவ்வொரு தருணமும் ஓர் புத்தகத்தின் அத்தியாயத்தை புரட்டிய பேரானந்தம் கிடைக்கும் அப்படி ஒரு அதிரைக் களஞ்சியம்... :) இளையவன் எனக்கு !

நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த வருடம் அவர்கள் சொல்லும்போது ஆச்சர்யப்பட்டேன், அங்கே கணக்கியல் ஆசிரியருக்கும் (சீரினிவாசன் சார்) எங்களுக்கும் அடிக்கடி ஏற்படும் இனிய போட்டியையும் குறிப்பிட்டது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் ! இது எனக்கே அவர்களின் ஞாபகமூட்டலுக்குப் பின்னர்தான் மலரும்நினைவுகளானது.

//தம்பி அபூஇபுறாஹிம் இந்த மாதிரி வலையில் வேறு ஏதாவது மீன்களும் சிக்குமா என்று பாருங்கள். //

மூத்தோர் தம் முன்னிருக்க வருவார்கள் அடுத்தடுத்த வெற்றியாளர்களும், மனங்களை வென்றவர்களும் இன்ஷா அல்லாஹ்... சொல்லாமலே சொல்லித்தரும் சொல் வித்தகர்களும் இங்கே நிரம்ப உண்டு...

இன்ஷா அல்லாஹ் எதிர்பார்க்கலாம்... சிக்கலில்லாத இவ்வலைக்குள் சீக்கிரமே வருவதற்கும் !

sabeer.abushahruk said...

பஹூத் அச்சா, நம்ம பாய் நம்பல்கி ஆறுதல் பரிசுன்னு சொல்லி நம்பல் மன்ச குஷிப்பட்த்திட்டாங்கப்பா. சபீர் பஹூச் சந்தோஷப்பட்றான்பா. ஷுக்ரியாபா.

வேற யாராவாது ஷைத்தான்கா பச்சா வந்து குழப்பும் முன் என் பரிசை அனுப்பினா சாப் சந்தோஷப்பட்வான்ஹை.

(எங்க கூட கிரவுனா பேசினார் எங்கள் தமிழும் அழகாக? லோக்கல் சேட்டுகள்தானே பேசுறாய்ங்க)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

.// அதெப்படி அன்சாரி காக்கா எழுதிய கடிதம் அவர்களிடமே இருக்கும்? அவர்களேயல்லவா பதிந்திருக்கிறார்கள்?//

//வேற யாராவாது ஷைத்தான்கா பச்சா வந்து குழப்பும் முன் என் பரிசை அனுப்பினா சாப் சந்தோஷப்பட்வான்ஹை.//

கவியரசரிடமே முறண்பட்ட பதில் இருப்பதால் அன்சாரி காக்கா முடிவு அறிவித்ததை நெறியாளர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கவியரசரிடமே முறண்பட்ட பதில் இருப்பதால் அன்சாரி காக்கா முடிவு அறிவித்ததை நெறியாளர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்!//

என்ன அமைச்சரே... இப்படி ஒரு துண்டை எடுத்து போடுகிறீர்கள் !!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//(எங்க கூட கிரவுனா பேசினார் எங்கள் தமிழும் அழகாக? லோக்கல் சேட்டுகள்தானே பேசுறாய்ங்க)//

ஒன்னுமில்லை காக்கா, க்ரவ்(அவ)னுக்கு கழுத்தில ஒரு கட்டு போட்டிருக்கனும் என்ன அது மிஸ்ஸாயிடுச்சு...

அதனால இல்லைன்னு தெரியும் இருந்தாலும் எனக்கு கழுத்து வலிக்கிறதே... திரும்பி திரும்பி பார்த்து வருவானா மாட்டானா என்று !

Yasir said...

A perfect, rare, very deep and a wonderful true friendship narrated in this article …it’s a great example for how one should keep the friendship healthy and alive
I pray Allah to power up this friendship for the years to come

Yasir said...

//பஹூத் அச்சா, நம்ம பாய் நம்பல்கி ஆறுதல் பரிசுன்னு சொல்லி நம்பல் மன்ச குஷிப்பட்த்திட்டாங்கப்பா. சபீர் பஹூச் சந்தோஷப்பட்றான்பா. ஷுக்ரியாபா/// i can't stop laughing after red this comments kavikakka

Anonymous said...

//நூர்முகமதுக்கு முழுப்பரிசும் கவி சபீர் அவர்களுக்கு ஆறுதல் பரிசும் அளித்துவிடுங்கள். ( என்ன அது? ஏற்கனவே அறிவிக்கவில்லையா?)//

நட்புக்கு வயது நாற்பத்தி எட்டு... !, அதற்காக எனக்கு முழுப்பரிசும் தரும் தம்பி அபு இப்ராகிம் அவர்களுக்கு வயது நாற்பத்தி மூன்று. வித்தியாசம் ஐந்து வருடங்கள்.

பரிசு பெரும் எனக்கு வயது ஐம்பத்தி ஐந்து, அதை சிபாரிசு செய்யும் இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் வயது அறுபது என்று எண்ணுகிறேன். வித்தியாசம் ஐந்து வருடங்கள்.

எனக்கு முழுப்பரிசும் சிபாரிசு செய்ததற்கு நன்றி காக்கா.

நூர் முஹம்மது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

முத்தான இந்த‌ நாற்பத்தி எட்டு வயது நட்புக்கு

முன்புள்ள நட்பை முதுகலை நட்பு என்றும்

பின்புள்ள நட்பை இளங்கலை நட்பு என்றும்

பத்து/பன்னிரண்டு வருட நட்பை அரசு பொது நட்பு என்றும்

சமீபத்திய நட்பை ஆரம்ப நட்பு என்றும் அழைக்கலாமா?

அன்று மகாத்மா வட்ட மேசை மாநாட்டில் வசதியாய் பேசிய விடயங்கள் கூட இன்று அதிரை இணைய சதுர மாநாட்டில் என்னமாய் கலைகட்டுகிறது?

இது போன்ற தொய்வற்ற, தேயாத நீண்ட கால நட்புகளெல்லாம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றால் கின்னஸுக்குத்தான் பெருமையே அன்றி விலை மதிப்பிட முடியா இந்நட்புக்கல்ல.

அப்துல்மாலிக் said...

நட்பின் இலக்கணமாக விளங்கு இக்கடிதத்தை படிக்கும்போது கண்கலங்க வைத்தது, இவர்களின் ந்ட்பு தொன்று தொட்டு தொடரட்டும், இக்கடிதம் வரும் இளம் சமூகத்திற்கு ஒரு உதாரணமாகவும் இருக்கும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு