Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை - 3 11

அதிரைநிருபர் பதிப்பகம் | January 14, 2012 | , , , ,


நல்ல கவிதைகளை, கருத்துப் பிழைகளற்ற கவிதைகளைப் பாராட்டிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமான கவிதைகளை – அவை தம்மைப் பற்றிய புகழ்ப் பாக்களாக இருந்தாலும்கூட, கண்டித்துத் திருத்தியுள்ளார்கள்; நிறுத்தியுள்ளார்கள்.

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தமது மிகச் சரியான நபிமொழித் தொகுப்பில், ‘இறை தியானம், கல்வி, குர்ஆன் முதலியவற்றிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் அளவுக்கு மனிதன் மீது கவிதையின் தாக்கம் இருப்பது வெறுக்கப்பட்டதாகும்’ எனும் தலைப்பில் இரண்டு நபிமொழிகளைப் பதிவு செய்துள்ளார்கள்.  அவற்றின் கருத்தாவது:  ஒருவனின் வயிறு கவிதையால் நிரம்பி இருப்பது, புரையோடும் அளவுக்குச் சீழ், சலம் நிரம்பி இருப்பதைவிட மோசமானதாகும்.  அதாவது, ஒருவரின் உள்ளத்தில் கவிதையைத் தவிர வேறெதுவும் இல்லாதிருப்பது, அவனை இறை தியானத்தை விட்டும் கல்வியை விட்டும் குர்ஆனை விட்டும் மறக்கடித்துவிடும் என்பதாகும்.  ‘வயிறு கவிதையால் நிரம்பியிருப்பது’ என்பது, கவிதை ஒன்று மட்டுமே ஒருவனின் வயிற்றுப் பிழைப்பாக இருக்கும் மோசமான நிலையைக் குறிக்கும்.

அவசர கோலத்தில், அறியாமையால் முற்றிலுமாகக் கவிதையை வெறுப்போர், தமது கருத்தாடளுக்குச் சான்றாக, திருக்குர்ஆனின் 26:224 வசனத்தை மேற்கோள்  காட்டுகின்றனர்.  ஆனால், அதனைத் தொடர்ந்துள்ள மூன்று வசனங்களைப் பற்றிச் சிந்திக்கத் தவறிவிடுகின்றனர்!  அவ்வசனத்திற்கும் அதனையடுத்துள்ள மூன்று வசனங்களுக்கும் விளக்கமளிக்கும் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தமது ‘ஃபத்ஹுல் பாரீ’ எனும் நூலில் குறிப்பிடுவதாவது:

“இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கவிஞர்கள், இணை வைப்போராக இருந்துகொண்டு, நல்லவர்களையும் அறநெறிகளையும் தாக்கிக் கவிதை பாடி வந்தவர்களாவர்.... அப்துல்லாஹ் இப்னு சப்அரீ, ஹுபைரா பின் அபீ வஹப், முஸாபிஉ பின் அப்தி மனாஃப், அம்ர் பின் அப்தில்லாஹ், உமைய்யத் இப்னு அபிஸ்ஸல்த் ஆகியோர் இவர்களில் அடங்குவர்.  அதே நேரத்தில், உண்மைக்காகக் குரல் கொடுத்து, நல்லதே பேசிவந்த கவிஞர்களும் இருந்துள்ளனர்.  இறைவனையும் இறைத்தூதரையும் புகழ்ந்து பாடி, இறை மார்க்கத்துக்கு வலு சேர்த்து வந்தனர்.  அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, ஹஸ்ஸான் இப்னு தாபித், கஅப் இப்னு மாலிக், கஅப் இப்னு சுஹைர் ஆகியோர் இவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள்.  ஆக, பொய்யும் போலிப் புகழ்ச்சியும் வசையும் இல்லாத, நல்ல கருத்துகளைக் கூறும் கவிதைகள் அனுமதிக்கப்பட்டவை ஆகும்.  இத்தகைய கவிதைகளை நபி (ஸல்) அவர்கள் பாராட்டியுள்ளார்கள்.” 
(சஹீஹுல் புகாரீ, பாகம் ஆறு, பக்கம் 646) 

“திண்ணமாக, கவிதையிலும் நுண்ணறிவு (ஹிக்மத்) உண்டு” எனும் நபிமொழிக்கு இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் விளக்கமளிப்பதாவது:  “நல்ல கவிதைகள் மூலம் ஞானம் பிறக்கும்.  அறியாமை அகன்று அறிவு சுரக்கும்.  இங்கு ‘ஞானம்’ என்பதைக் குறிக்க ‘ஹிக்மத்’ எனும் சொல் மூலத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது.  இதற்கு – ‘அறிவு, உண்மை, தத்துவம் ஆகிய பொருள்கள் உள.  நல்ல தத்துவம் ஒன்றைக் கவிதையில் கூறும்போது, கவிதைக்கே உரிய சொற்சிக்கனம், இரத்தினச் சுருக்கம், ஒப்புமை உள்ளிட்ட கூறுகள் படிப்போரின் உள்ளங்களைக் கவர்ந்து, அதை ஆழமாகப் பதியச் செய்துவிடும்; சிந்திக்கத் தூண்டும்.  நபித்தோழர் ஷுரைத் பின் சுவைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:  (கவிஞர்) உமையா இப்னு ஆபிஸ் ஸல்த்தின் கவிதைகளுள் சிலவற்றைக் கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.  ஆகவே அவற்றிலிருந்து நூறு பாடல்கள் வரை நான் அவர்களுக்குப் பாடிக் காட்டினேன்.   
(இமாம் புகாரீ (ரஹ்) அவர்களின் ‘அல் அதபுல் முஃப்ரத்’)

அக்கவிதைகளில் இருந்த பேருண்மைகளை உணர்ந்த பின்னர்தான் பெருமானார் (ஸல்) அவர்கள், “கவிஞர் உமய்யத் இப்னு அபிஸ் ஸல்த்      (தனது கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார்!”  என்று வியப்புடன் கூறியிருப்பார்கள் போலும்.

(இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்)
- அதிரை அஹ்மது
<<பார்வை - 2 |||||||||||||| பார்வை - 3>>

11 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

//கவிதைக்கே உரிய சொற்சிக்கனம், இரத்தினச் சுருக்கம், ஒப்புமை உள்ளிட்ட கூறுகள் படிப்போரின் உள்ளங்களைக் கவர்ந்து, அதை ஆழமாகப் பதியச் செய்துவிடும்; சிந்திக்கத் தூண்டும்.//
சுருங்கக் கூறி விளங்க வைத்தல், என்பதைப் புரிந்துணர்வில் குறைபாடு உடையவர்கட்கு "சொல்வதைத் தெளிவாகச் சொல்லுக" என்றக் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன என்பது என் கணிப்பு.

இப்னு அப்துல் ரஜாக் said...

//இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தமது மிகச் சரியான நபிமொழித் தொகுப்பில், ‘இறை தியானம், கல்வி, குர்ஆன் முதலியவற்றிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் அளவுக்கு மனிதன் மீது கவிதையின் தாக்கம் இருப்பது வெறுக்கப்பட்டதாகும்’ எனும் தலைப்பில் இரண்டு நபிமொழிகளைப் பதிவு செய்துள்ளார்கள். அவற்றின் கருத்தாவது: ஒருவனின் வயிறு கவிதையால் நிரம்பி இருப்பது, புரையோடும் அளவுக்குச் சீழ், சலம் நிரம்பி இருப்பதைவிட மோசமானதாகும். அதாவது, ஒருவரின் உள்ளத்தில் கவிதையைத் தவிர வேறெதுவும் இல்லாதிருப்பது, அவனை இறை தியானத்தை விட்டும் கல்வியை விட்டும் குர்ஆனை விட்டும் மறக்கடித்துவிடும் என்பதாகும். ‘வயிறு கவிதையால் நிரம்பியிருப்பது’ என்பது, கவிதை ஒன்று மட்டுமே ஒருவனின் வயிற்றுப் பிழைப்பாக இருக்கும் மோசமான நிலையைக் குறிக்கும்.//
சரியாக சொல்லியுள்ளீர்கள் சாச்சா.நம் இஸ்லாம் ஒரு எல்லைக்கோடு வைத்துள்ளது கவிதைக்கு.மேற்கண்ட உங்கள் பதில் போதும் கவிதையே சுவாசம் என இருப்போருக்கும்,எப்ப பார்த்தாலும் அதை பத்தியே எழுதிக் கொண்டிருப்போருக்கும்,என்ன அளவுகோல் என தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை நல வாய்ப்பு.ஜசாக்கல்லாஹு கைர்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புக்குரிய சகோதரர் அபுல் கலாம் காக்கா அவர்களே,நித்தம் நித்தம் கவிதை என நீங்கள் எழுதி வருகிறீர்கள்.மேற்கண்ட கருத்தை - மார்க்க போதனையை கவனியுங்கள்.கவிதையின் முக்கியத்துவம் - அதில் மூழ்கி இருப்பது போன்றவற்றிலிருந்து விலகி இருந்து - அதை ஊறுகாய் போல எடுத்துக்கொள்ள பாருங்கள்.அந்தக கருத்தை சொல்லி,உங்களுக்கு உரிமையுடன் எத்தி வைக்கிறேன்.அல்லாஹ் நம் அனைவரையும் அதுபோன்று மூழி இருப்பதில் இருந்து பாதுகாப்பானாக,ஆமீன்.

இஸ்லாத்தின் பார்வையில் கவிதை என்ற சிந்தை ஆக்கம் தரும் சாச்சா அவர்களுக்கு அல்லாஹ்,நீண்ட ஆயுளும்,நல்ல சுகமும் கொடுப்பானாக,ஆமீன்

இப்னு அப்துல் ரஜாக் said...

மூழி இருப்பதில் இருந்து பாதுகாப்பானாக,ஆமீன்.

மூழ்கி என இருக்க வேண்டும்,திருத்தி வாசிக்கவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஹா !

தம்பி

அர

அல...

உங்க பெயரே கவிதையாயிடுச்சே

அழகா சுருக்கிட்டீங்க

sabeer.abushahruk said...

நல்லது அஹ்மது காக்கா,
கட்டுரையின் போக்கு கவிதையாய் இனிக்கிறது,

ப்ளீஸ் கீப் இட் அப்.

இப்னு அப்துல் ரஜாக் said...

நெய்னா தம்பி காக்கா,
ரொம்பவே உசுபெத்துறீங்க,
அப்புறம் நானும்
க விதை தூவும்படி
ஆகிவிடும்...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மாதா ஊட்டாத உணவை மாங்கா ஊட்டுமாம்
அதுபோல
'கல்பு'க்கு எட்டா கடினமொழியை கவி மூலம் எட்டலாமாம்.

என்று அர அல. வும் கவிதைக்கு விதை தூவி இருக்கார்.

ஊறுகாய் போல முதல் விதை எப்போ Mr.அர அல?

இப்னு அப்துல் ரஜாக் said...

//ஊறுகாய் போல முதல் விதை எப்போ Mr.அர அல?//


சகோதரா,
விரைவில் இன்ஷா அல்லாஹ்
இஸ்லாத்தின் மகிமை
பற்றி,
போற்றி

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கட்டுலுக்கு கால் உடைந்து தொங்கி கொண்டிருந்ததை சரி செய்வது போல்.கவிதைக்கு கலங்கம் ஏற்ப்பட்ட வேலையில் நல்ல கவிதைக்கு கை காட்டியுள்ள அஹ்மத் அப்பாவின் நல்லதோர் ஆக்கம்.

// அவசர கோலத்தில், அறியாமையால் முற்றிலுமாகக் கவிதையை வெறுப்போர், தமது கருத்தாடளுக்குச் சான்றாக, திருக்குர்ஆனின் 26:224 வசனத்தை மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால், அதனைத் தொடர்ந்துள்ள மூன்று வசனங்களைப் பற்றிச் சிந்திக்கத் தவறிவிடுகின்றனர்! //

கம்பியூட்டர் உலகமாகி விட்டதே! அறியாதவர்களுக்கு அவசரமாகத்தானே இருக்கும்.

KALAM SHAICK ABDUL KADER said...

வ அலைக்கும் சலாம் அன்புத் தம்பி அர.அல.. தங்களின் தங்கமான ஆலோசனையினை ஏற்கின்றேன். தினமும் எழுதுவதற்கு எனக்கு எங்கே நேரம்; பணிச்சுமையால் படாதபாடு பட்டுக் கொண்டிருப்பதைப் படைத்தோன் அறிவான். ஏற்கனவே என்னால் எழுதப்பட்டு இருந்தவைகளைத் தான் இணைய தளங்களில் மீள்பதிவாக அவ்வலைத்தல நெறியாளர்களின் வேண்டுகோளின்படி அனுப்பிவைக்கின்றேன். அதனால் உங்களின் பார்வையில் நான் மட்டும் ஏதோ மூழ்கிக்கிடப்பது போல் தென்படுகின்றது. ஆனால், என் கவிதைகளை இரசிப்பவர்கள், என் கவிதைகளைத் தங்களின் இணைய தளங்களில் பதியவேண்டும் என்று என்பாலும் என்பாவின் பாலும் அன்பினைக் காட்டும் அனைவரையும் திருப்திபடுத்த வேண்டியது என் பொறுப்பு. மார்க்கம் என்பது என்ன? வாழ்க்கை நெறி தானே. அதனை நான் விட்டு விடவில்லையே; 24 மணி நேரமும் அசைவுகள், செயல்கள், அமல்கள் என்று எல்லாமே இஸ்லாத்தின்படியே ஒரு முஸ்லிம் வாழ்ந்து கொள்வதும் மார்க்கம் என்றுதான் விளங்கியுள்ளோம். மேற்காணும் ஹதீஸ் காணுவதற்கு முன்னரே இயல்பாகவே நான் கல்வியினை விற்பது கூடாது என்ற கொள்கையுடையவன் என்பது என்னிடம் "டியூஷன்" படித்த- படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் கேட்டுத் தெரிக. எனதுக் கவிதைத் தொகுப்பினை நூலாக வெளியிட ஆர்வம் கொன்ட பதிப்பகத்தரிடம் "இன்னூலை" விற்கக்கூடாது என்றுச் சொல்லியுள்ளேன். இதுவும் என்னிடம் இயல்பான ஒரு கொள்கை. அல்ஹம்துலில்லாஹ், எனதுக் கொள்கை ஹதீசுடன் ஒத்துப் போவது இப்பொழுது அறிந்து மிக்க மகிழ்ச்சி;கட்டுரையாளர் அவர்கட்கும் நன்றி. ஜசாக்கல்லாஹ் கைரன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு