Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வேகம் விவேகமா? 36

அதிரைநிருபர் பதிப்பகம் | January 27, 2012 | , , , , ,


தம்பி,

வேகம் குறை…
விரட்டுவது
விதியாகக் கூட இருக்கலாம்

உன் பைக்கில்
உருள்வது சக்கரங்களா ?
சாவின் கரங்களா ?

மழை நனைத்த சாலையும்
மணல் நிறைந்த பாதையும்
திறன் மிகுந்த யாரையும்
புரட்டிவிடும் சருக்கியே

உலகாள்பவன்
உனக்களித்த
உடலுறுப்புகளை
ஊனமாக்காதே

பேணிப் பாதுகாக்கும்
புலண்களை
ஊமையாக்காதே

காதில் கேட்பதற்காக
கைபேசியை
கழுத்தில் வைக்கும்போது
அது
அலைபேசியல்ல அன்பரே
அரிவாளென்று அறி

தீ சுடுமென்றோ
தீயவை கெடுக்குமென்றோ
சொல்லித் தெரிவதோ அறிவு

விபத்தின் விபரீதம்
விளங்காதா உனக்கு

முழங்கை
மூட்டு பிறழ்ந்தவன்
முழுக்கை யுடைந்தவன்
முகத்தில் தழும்பு படைத்தவன்
நடை குலைந்தவன்
நொண்டி நடப்பவன் என
எத்தனை ஆதாரங்கள்

போதாதென்று
அகால மரணங்கள்....

பெற்ற தாயை
பேதலிக்கவிட்டுப்
போய்ச் சேர்ந்தவர்

கட்டிய மனைவியின்
காத்திருப்பை நிரந்தரமாக்கி
கண்மூடியவர்

நண்பர்களை விட்டோ சேர்ந்தோ
நீள்துயில் கொண்டவர்

பேர் வைத்தப் பிள்ளைகளை
பாரில் தவிக்கவிட்டு - இறுதி
ஊர் போய்ச் சேர்ந்தவர்

தொலைதூரப் பயணத்தை
இரு சக்கரத்தில் கடந்தால்
தமிழ்நாட்டுச் சாலைகள்
தண்டுவடத் தட்டுகளை
மென்றுவிடும் தம்பி

வாழ்க்கையில் முந்து
வளைவுகளில் முந்தாதே

தொழிலில் காட்டு தோரணையை
தெருவில் காட்டாதே

விவேகத்தைக் காட்டு
வேகத்தைக் கூட்டாதே

உனக்காகக் காத்திருப்பவைகளை
உணராமல்
நீ காத்திருக்கும் மரணத்தை
எட்டிப் பிடிக்க
ஏன் இந்த வேகம்

வேகம் குறை
விரட்டுவது
விதியாகக் கூட இருக்கலாம்.

-சபீர்

36 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தொலைதூரப் பயணத்தை
இரு சக்கரத்தில் கடந்தால்
தமிழ்நாட்டுச் சாலைகள்
தண்டுவடத் தட்டுகளை
மென்றுவிடும் தம்பி//

சம்மட்டி அடி ! (தமிழக சாலைகளின் சேவைகள் !!?)

யாராக இருந்தாலும் தொலைதூரப் பயணத்திற்கு தனித்தோ அல்லது நண்பர்களுடனோ இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்க்கனும்...

//உனக்காகக் காத்திருப்பவைகளை
உணராமல்
நீ காத்திருக்கும் மரணத்தை
எட்டிப் பிடிக்க
ஏன் இந்த வேகம் //

ஆம் ! இது அறிவுரை மட்டுல்ல எச்சரிக்கையும் கூட... இழப்பது விபத்துக்குள்ளவராக இருந்தாலும் இழந்து நிற்பது குடும்பமே !

//வேகம் குறை
விரட்டுவது
விதியாகக் கூட இருக்கலாம்.//

சேக்கனா M. நிஜாம் said...

நல்லதொரு விழிப்புணர்வுக் கவிதை ………வாழ்த்துக்கள் சகோ. கவி. சபீர்

சகோதரர்களே !

1. முதலில் அவசரமாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
2. உடல் சோர்வுடன் பயணம் செய்வதை தவிர்க்கவும்
3. தூக்கமின்மையுடன் பயணம் செய்வதை தவிர்க்கவும்.
4. தேவையற்ற ரிஸ்க் எடுத்து பயணம் செய்வதை தவிர்க்கவும்.
5. அதிக பயணிகளுடன் பயணம் செய்வதை தவிர்க்கவும்.
6. செல்போன் பேசிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்க்கவும்.
7. வாகனத்தின் தன்மை அறிந்து பயணம் செய்ய வேண்டும்.
8. சாலை விதிமுறைகளை கடை பிடித்து பயணம் செய்யவும்.


இவற்றை கடைபிடித்தால் ஓரளவு விபத்துகளை குறைக்கலாம்.

Yasir said...

என்ன ஒரு அவசியமான / அருமையான அறிவுரை....இது கவிதையல்ல அனைவரும் கற்று,கடைபிடிக்க வேண்டிய பாடம்....

//உருள்வது சக்கரங்களா ?
சாவின் கரங்களா ?// சரியாக சொல்லி இருக்கின்றீகள்

//விபத்தின் விபரீதம்
விளங்காதா உனக்கு// அருமை காக்கா

Yasir said...

உரைநடை பலாச்சுழையென்றால்..கவிதை தேன்..தேன் கலந்த ஹிர்க் இல்லாத,ஹாரம் கலவாத பலாச்சுவைகளை தெவிட்டாமல் சாப்பிடுவோம்... அல்லாஹ் கரீம் இது போன்ற கவிதைகளை ஊக்குவிப்போம் ..அதனுல் இருக்கும் நல்ல கருத்துக்களை வாழ்வில் நடைமுறைபடுத்துவோம்

ZAKIR HUSSAIN said...

Traffic Safety பற்றி இப்போது எழுதியது மிகவும் Timing Reminder.
உலகம் முழுக்க வேகத்தில் இயங்குகிறது என்னவோ உண்மைதான். விபத்தில் பரிதவிக்கும் உறவுகளின் கஷ்டம் மட்டும் முக்கியமல்ல.
எமர்ஜன்சி பிரிவில் பணிபுரியும் டாக்டர்கள் , மருத்துவ உதவியாளர்களின் கஷ்டமும் உலகத்துக்கு தெரிய வேண்டும்.

சில வருடத்துக்கு முன் ஒரு உரையாடல்.
' இன்றைக்கு என்ன தேதி / என்ன நேரம்...? '---ஒரு டாக்டர்.
ஏன் அப்படி கேட்கிறீர்கள்...----இது நான்

'டூட்டிக்கு வந்து எனக்கு தெரிந்து 3 நாட்கலுக்கு மேல் ஆகிவிட்டது என நினைக்கிறேன்...இந்த நாற்காலியில்தான் தூக்கம், அந்த டாய்லட்தான் எல்லாம்...சாப்பாடு யாராவது வாங்கித்தரும் பன்/டீ தான்....தொடர்ந்து விபத்துக்கள்.....இவனுக பொறுமையில்லாமல் செய்யும் தவறுக்கு அதிகம் தண்டிக்கப்படுபவர்கள் நாங்கள்தான் என நினைக்கிறேன்.
சூரிய வெளிச்சம் பார்த்து 3 நாளைக்கு மேல் ஆயிடுச்சி....
இதெல்லாம் வெளியிலெ சொன்னா "கடமைதானே" ந்னு சாதாரணமா சொல்லிடுவானுக.....

இதை சொன்னது அரசு மருத்துவமனை டாக்டர் ..[ சம்பளம் மிக குறைவு...சாதாரண நாட்களில் 20 மணி நேரம் கொத்தடிமை மாதிரி பிழியப்படும் ஜீவன்கள்...எமர்ஜன்சி டூட்டி என்றால் எக்ஸ்ட்ரா கொடுமை நிச்சயம் உண்டு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இதை சொன்னது அரசு மருத்துவமனை டாக்டர் ..[ சம்பளம் மிக குறைவு...சாதாரண நாட்களில் 20 மணி நேரம் கொத்தடிமை மாதிரி பிழியப்படும் ஜீவன்கள்...எமர்ஜன்சி டூட்டி என்றால் எக்ஸ்ட்ரா கொடுமை நிச்சயம் உண்டு.//

அசத்தல் காக்கா, நீங்கள் சொன்ன விஷயம் யாருடைய சிந்தைக்கும் இலகுவில் வராத விஷயம்.

மிகச் சரியே.... !

பல சந்தர்பங்களில் மருத்துவர்களிடமும் கடுமையை காட்டியிருக்கிறோம் அம்மாதிரியான சந்தர்ப்பங்களிலும். அது அவர்களின் அலட்சியமான பதில் அல்லது அவசரத்தின் உணர்வு நாம் செல்லும்போது இல்லாதபோது, ஆனால் அவர்களுக்கு அது பழகி விட்ட விடயமாக போனதாலோ என்னவோ !!!

ZAKIR HUSSAIN said...

//அம்மாதிரியான சந்தர்ப்பங்களிலும். அது அவர்களின் அலட்சியமான பதில் //

இங்கு அப்படி அலட்சியமாக டாக்டர்கள் பேசினால்...கிடாய் தானாக கசாப்புக்கடைக்கு போகிறது என்று அர்த்தம்.

KALAM SHAICK ABDUL KADER said...

வண்டியும் வாழ்க்கையும்
வண்டியைச் சீராக ஓட்ட
வேகக் கட்டுப்பாடு
வாழ்கையைச் சீராக்க
விவேகம்

வண்டியை ஓட்டவும்
வாழ்க்கையை நகர்த்தவும்
வேண்டியது ஒன்றே
திறமை

வண்டிப் பயணமும்
வாழ்க்கைப் பயணமும்
சுகமாக அமையும் குறைவான
சுமைகளால்

வண்டிப் பயணத்திலும்
வாழ்க்கைப் பயணத்திலும்
கண்டிப்பாகத் தேவை
கவனித்து உதவும்
தோழமை

வண்டிக்கு ஊற்றும்
எண்ணையிலும்
வாழும் உடலுக்கான
உண்டியிலும் தேவை
தரம்


வண்டியில் மின்கலன்
வாழ்கையில் உடல்நலன்
கண்டிப்பாக ஏற்றுக
மறுசக்தி

வண்டிப் பயணத்திலும்
வாழ்க்கைப் பயணத்திலும்
எட்டும் இலக்கில் வேண்டும்
திட்டம்

வண்டியின் பராமரிப்பு
வாழ்க்கையின் பாதுகாப்பு
நாடோறும் காட்டும்
சுயசோதனை

Noor Mohamed said...

//உலகாள்பவன்
உனக்களித்த
உடலுறுப்புகளை
ஊனமாக்காதே

பேணிப் பாதுகாக்கும்
புலண்களை
ஊமையாக்காதே//

ஆம்! வாகன வேகத்தின் விபத்தால் உறுப்புக்கள் ஊனமாகிறது.புலன்கள் ஊமையாகிறது.

ஆனால், உண்ணும் உணவின் வேகத்தால் (பாஸ்ட் ஃபுட்) உடல் ஆரோக்கியம் அழிகிறது. அது breakfast ஆகட்டும் lunch break ஆகட்டும் உணவை உண்பதில்லை, மாறாக நாம் அவற்றை கொட்டிக் கொள்கின்றோம். ஏன் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு காலை உணவை (சான்ட்விச்) கடித்துக் கொண்டு வேலை செய்கிறோம்.

நொறுங்க திண்றால் நூறு வயது என்றார்கள் அன்று. இன்று இந்த கம்ப்யூட்டர் காலத்தில் அவ்வாறு உண்ண முயுமா? அதுதான் அவசர உலகம். இதை காலத்தின் கட்டாயம் என்பதா? அல்லது காலத்தின் கோலம் என்பதா?

Anonymous said...

இளைஞர்கள் அனைவரும் படித்து உணரவேண்டிய அறிவுரைக்கவிதை.

உலகத்தில் இருக்கும் ஒரு இடத்துக்கு தாமதமாக போகலாம் – தப்பில்லை
அதற்காக மேல் உலகத்தில் இருக்கும் இடத்துக்கு விரைவாக செல்ல வேண்டியதில்லை.

உற்சாகத்தில் , அடுத்தவர்கள் பாராட்டவேண்டும் என்பதற்காக “ பந்தா” வுக்காக பலர் பறப்பதை பார்க்கிறோம்.

நல்ல அறிவுரை கூறும் ஆக்கம். காலத்தின் தேவை.

இப்ராஹீம் அன்சாரி.

KALAM SHAICK ABDUL KADER said...

கோபத்தீயில் உருகும்
தங்கக் கருவால்
கவிதாபரணம் உருவாகும்

கவிவேந்தர் சபீர் அவர்கட்கும் தெரியும் கவிதை என்பது சிந்தனைக் "காமிராவில்" பளிச்சிடும் ஒரு பொறி;அதனை யாப்புத்தறியிலும் நெய்யலாம்; புதுக் கவிதை மழையாகவும் பெய்யலாம்.நீங்கள் அதிரை நிருபர் வலைத்தளத்தில் இன்று பதிவு செய்துள்ள "விவேகம்- வேகம்"பற்றியக் கவிதையின் பொறித் தட்டியது நீங்கள் வண்டி ஒட்டிய போது அன்று ஏற்பட்ட நிகழ்வின் சமிஞ்சை; இன்று எங்கட்குக் கிட்டியது அற்புதமானக் கவிதை. எனவே, "கவிதையிலே மூழ்குவதில்லை" என்பதை உணரவார்களா?- கவிதைப் பற்றிய மாற்றுக் கருதுள்ளச் சகோதரர்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பயண பாதுகாப்பு பற்றிய
பயனுள்ள கவித்துவ அறிவுரை!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
சபீர் காக்காவின் விழிப்புணர்வு
கவிதைகளால் ஞாபகம் வருதே!

// முழங்கை
மூட்டு பிறழ்ந்தவன்
முழுக்கை யுடைந்தவன்
முகத்தில் தழும்பு படைத்தவன்
நடை குலைந்தவன்
நொண்டி நடப்பவன் என
எத்தனை ஆதாரங்கள் //

இரு சக்கர வாகனத்தில் அதி வேகமாக விரைந்து வந்த ஒருவனால்.சாலையை குறிக்கிட்டு கடக்கும்போது.எனக்கு ஏற்ப்பட்ட விபத்தினால்.இரண்டு மாதம் அனுபவித்த வேதனை ஞாபகம் வருது.

crown said...

தம்பி,

வேகம் குறை…
விரட்டுவது
விதியாகக் கூட இருக்கலாம்

உன் பைக்கில்
உருள்வது சக்கரங்களா ?
சாவின் கரங்களா ?
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
சரியான நேரத்தில் விரைந்து வந்த நிதானமான விவேக சிந்தனை!.வேகம் என்பது இக்கால இளைஞர்களின் சாதனை என்னும் தவறான புரிதல் அதனால் வேகத்தின் மேல் விவேகமற்ற மோகம்! இப்படியே போனால் எங்கே போகும்? சாகும் நீயும் உன்னால் காலமெல்லாம் சாகும் , துன்பத்தில் வேகும் உறவுகளும் தொடரும் சோகம். வேகத்தின் விபரீத பாய்ச்சலில் ஓட்டுபவன் மட்டுமா சாகிறான்? பல நேரம் வீதியில் போகும் அப்பாவிகளும் அல்லாவா சாகின்றனர்!போதும் ,போதும் இந்தியா மக்கள் தொகையில் சீனாவை முந்துவதுபோல் வேகத்தின் விபரீதத்தில் சாவிலும் சீனாவை முந்தி முதல் இடத்தில் இருப்பது துரதிஸ்டம்.

crown said...

மழை நனைத்த சாலையும்
மணல் நிறைந்த பாதையும்
திறன் மிகுந்த யாரையும்
புரட்டிவிடும் சருக்கியே
---------------------------------------------------
சருக்கிவிழாத மொழிப்புலமை! இளமையாய் நடை போடும் அழகே! அழகு! ஒரு விசயத்தை நயமாய் நல்லவிதமாய் சொல்லும் கலை இவருக்கு வாய்திருக்கு! அல்ஹம்துலில்லாஹ்!
சொன்ன வரிகள் எதார்த்தமும் உண்மையும் கூடியது. பலவான் கூட அந்த வான் மழைபொழிந்து புவி நனைந்து சேரானால் சரியான அடியெடுத்து வைக்காவிட்டால் சரியான இடத்துக்கு போய் சேரமுடியாமல் சருக்கித்தான் விழுவர்!எனவே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனம் அவசியம் அது நடப்பதாக இருந்தாலும் சாலையை கடப்பதாக இருந்தாலும் வாழ்வின் செயல் பாட்டியும் கவனம் அவசியம்.

crown said...

உலகாள்பவன்
உனக்களித்த
உடலுறுப்புகளை
ஊனமாக்காதே

பேணிப் பாதுகாக்கும்
புலண்களை
ஊமையாக்காதே
-----------------------------------------------------------
உடல் உறுப்புகளும். உயிரும் வல்ல நாயன் அல்லாஹ் தந்த அருட்கொடை! அதை பேனி காப்பது நம் கடமை! நம் மடமையின் காரணமாய் அதை ஊனமாய், ஊமையாய் மாத்தி உறுப்புகளை உருப்படியாய் இல்லாமல் ஆக்குவதற்கு நமக்கு ஏதும் உரிமை இல்லை!. எல்லா செயலுக்கும் கேள்வி உண்டு. அதை கவனம் கொண்டு சுவனம் எடுத்துச்செல்வோம் இன்சா அல்லாஹ்.

crown said...

விவேகத்தைக் காட்டு
வேகத்தைக் கூட்டாதே

உனக்காகக் காத்திருப்பவைகளை
உணராமல்
நீ காத்திருக்கும் மரணத்தை
எட்டிப் பிடிக்க
ஏன் இந்த வேகம்

வேகம் குறை
விரட்டுவது
விதியாகக் கூட இருக்கலாம்.
--------------------------------------------------
' நச்' எச்சரிக்கை!விழிப்புணர்வு சுற்றரிக்கை!

Shameed said...

விபத்தினை தடுப்பதையும் கவிதையில் சொல்லலாம் என்பதை சொன்ன கவி காகாவிற்கு வாழ்த்துக்கள்.

விபத்தால் நண்பருக்கு ஏற்ப்பட்ட மரணத்தின் தாக்கம் கவிதையில் வெளிப்படுகின்றது இன்னும் அது நம் மனதை விட்டு அகலவில்லை.

இப்னு அப்துல் ரஜாக் said...

அது ஒரு சவூதி அரேபியாவை சேர்ந்த நகரம்.
கட்டிடங்களில் வேலையாட்கள் கன்ஸ்ட்ரக்ஷன் வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.அப்போது ஒரு எகிப்து நாட்டை சேர்ந்த ஒரு வேலையாள் எட்டாவது மாடியிலிருந்து திடீரென தவறி விழுகிறார்.எல்லாருக்கும் பதை பதைப்பு.கீழே வந்து ஓடி போய் பார்க்கிறார்கள்.ஆனால் என்ன அதிசயம்,கீழே விழுந்த அந்த எகிப்து சகோதரன் - துள்ளிக் குதித்து எழுகிறார்,எந்தக் காயமும் இல்லாமல்.அனைவருக்கும் ஆஹ்ச்சரியம்,அவருக்கும்தான்.எல்லாருக்கும் சந்தோஷ தருணம்.

சிறிது நேரம் கழித்து,அந்த எகிப்து சகோதரன் சொல்கிறார்,"கீழே விழுந்து பிழைத்தேன்.அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள உங்கள் அனைவருக்கும் என் செலவில் சான்ட்விச் வாங்கி வருகிறேன்."அனைவருக்கும் மகிழ்வு.

அந்தக் கட்டிடம் எதிர்புறம் உள்ள சாலையை கடந்தால் - அங்கு ஒரு மத் அம் (ரெஸ்டாரென்ட்)உள்ளது,அங்கு சென்றுதான் வாங்க வேண்டும்.எல்லாரிடமும் என்னென்ன வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு சான்ட்விச் வாங்க செல்கிறார்.சாலையை இருபுறமும் நின்று-நிதானித்து கடக்கிறார்.ஆனால் அதே சமயம் எதிரே வந்த ஒரு வாகனம்,..............அவர் மேல்.............மோதி,இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.அந்த இடத்திலேய மரணம்.

ஆக,மலக்குல் மௌத் கட்டிடத்தின் கீழ் இருந்து கொண்டு அவர் உயிரை வாங்க அந்த மலக்கிற்கு ஆர்டர் அல்லாஹ்விடம் கிடைக்கவில்லை.அந்த சாலையில் வைத்துத்தான் அவர் உயிரை பறிக்க அல்லாஹ்வின் நாட்டம்,ஆர்டர் இருந்திருக்கிறது.மரணம் நாம் எங்கிருந்தாலும் நம்மை வந்து அடையும் என்ற குரான் வசனத்தை நாம் நினைவில் கொள்வோமாக.

தலைப்புக்கு சம்பந்தமாக உள்ளது என்பதாலும்,நாம் மரணத்தை அதிகம் நினைவுகொள்ள வேண்டும் என்ற உண்மையினாலும் பதிவிட்டுள்ளேன்.
ஜும்மா பயானில் கேட்டது,
masjid in California

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சபீர் காக்காவின் இவ்வாக்கம் சாவியை வண்டியில் செருகுமுன் செவிமடுத்து ஒவ்வொருவராலும் கேட்கப்பட வேண்டிய நல்லதோர் உபதேசம்.

சென்ற விடுமுறையில் (நவம்பர், 2011) நடுத்தெருவில் நம் கண் முன்னே நடந்த ஒரு விபத்து/விபரீதம் (விபத்திற்கும், விபரீதத்திற்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் விளக்குங்கள்) பற்றி இங்கு மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

ஒரு (கால் ஊனமுற்ற) மாற்றுத்திறனாளி சகோதரர் தன் மனைவியை டி.வி.எஸ் ல் பின்னால் இருக்கையில் அமரச்செய்து நடுத்தெரு வழியே சாதாரன வேகத்தில் வந்து கொண்டிருக்கிறார். அதிரை அஹ்மது சாச்சாவின் வீட்டருகே அதிரை பைத்துல்மாலுக்கு முன் நமதூர் பேரூராட்சியாலோ அல்லது தனிநபரின் முய‌ற்சியாலோ ஒரு வேக‌த்தடை உய‌ர‌மாக‌வே அமைக்கப்பட்டிருக்கிறது. மூக்குக்க‌ண்ணாடி அணிந்திருந்த‌ அந்த‌ ச‌கோத‌ர‌ர் அந்த‌ வேக‌த்த‌டையை கொஞ்ச‌ம் க‌வ‌னிக்க‌ ம‌ற‌ந்து விட்டார். அந்தோ பாவ‌ம்! அந்த‌ வேக‌த்த‌டையை அடைந்த‌தும் க‌ண‌வ‌ன், ம‌னைவி இருவ‌ரும் தூக்கி இரு ப‌க்க‌மாக தரையில் வீச‌ப்ப‌ட்ட‌ன‌ர். ந‌டுவில் வ‌ண்டியும் சாய்ந்து ஓடிக்கொண்டிருந்த‌து.

ச‌கோத‌ர‌ரின் ம‌னைவிக்கு த‌லையில் நல்ல அடிப‌ட்டு தன் தலை முக்காடு (புர்கா) வில‌கி அப்ப‌டியே நிலைகுலைந்து ரோட்டிலேயே உட்கார்ந்து விட்டார் பாவ‌ம் க‌ண்க‌ளில் க‌ண்ணீர் வ‌ழிய‌.

அந்த‌ ச‌கோத‌ர‌ர் ரோட்டிலேயே த‌னக்கிருந்த‌‌ வ‌லியை கூட‌ பொருட்ப‌டுத்தாம‌ல் த‌ன் ம‌னைவிக்கு முக்காடு இட்டு அவ‌ரை ச‌மாதான‌ப்ப‌டுத்துகிறார். உட‌னே அருகிலிருந்த‌ நாம் ஓடிச்சென்று அதிரை அஹ்ம‌து சாச்சா வீட்டிற்கு ச‌கோத‌ரையும், அவ‌ர் ம‌னைவியையும் உள்ளே போக‌ச்சொல்லி கொஞ்ச‌ம் ஆசுவாச‌ப்ப‌டுத்தி த‌ண்ணீர் கொடுத்தும் அந்த‌ ச‌கோத‌ர‌ரிட‌ம் அவ‌ர் ம‌னைவிக்கு த‌லையில் ந‌ல்ல‌ அடிப‌ட்டிருப்ப‌தால் பிறகு ம‌ருத்துவ‌ம‌னை சென்று ஒரு ஸ்கேன் போட்டு பார்த்துக்கொள்வ‌து ந‌ல்ல‌து என‌ சொல்லி அனுப்பினேன்.

ஓரிரு வார‌த்திற்குப்பின் ரோட்டில் ஏதேச்சையாக‌ அந்த‌ ச‌கோத‌ரரை ச‌ந்தித்து ந‌ல‌ம் விசாரித்துக்கொண்டேன். பெரிய‌ பிர‌ச்சினை ஒன்றும் அல்லாஹ் நாட்ட‌த்தில் அவ‌ருக்கும், அவ‌ர் ம‌னைவிக்கும் வ‌ர‌வில்லை.

இங்கு இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தை எத‌ற்கு குறிப்பிடுகிறேன் என்றால் வேக‌த்த‌டை வைக்க‌ முய‌ற்சிப்ப‌வ‌ர்க‌ள் அதை வாகன ஓட்டிகள் அடையும் முன் அவர்களுக்கு முறையே எச்ச‌ரிக்கை அறிவிப்பு ப‌லகை மூலமோ அல்ல‌து ரோட்டில் க‌ருப்பு வெள்ளை வ‌ரிக்குதிரை கோடுகளிட்டோ அல்ல‌து ம‌ஞ்ச‌ள் கோடுகள் மூலமோ எச்ச‌ரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

வேக‌த்த‌டைக‌ளெல்லாம் ந‌ம் வாழ்க்கைக்கு த‌டையாக‌ இருக்க கூடாது என்ப‌தே ந‌ம் வேண்டுகோள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கவி காக்கா,

எல்லோருடைய மனதில் நிலைத்திருக்க வைக்கும் வரிகள். எல்லா வாகன ஓட்டிகளுக்கும் பொருந்தும்.

//பெற்ற தாயை
பேதலிக்கவிட்டுப்
போய்ச் சேர்ந்தவர்

கட்டிய மனைவியின்
காத்திருப்பை நிரந்தரமாக்கி
கண்மூடியவர்

நண்பர்களை விட்டோ சேர்ந்தோ
நீள்துயில் கொண்டவர்

பேர் வைத்தப் பிள்ளைகளை
பாரில் தவிக்கவிட்டு - இறுதி
ஊர் போய்ச் சேர்ந்தவர்//

உண்மை காக்கா..

Anonymous said...

வேகம் இருக்கலாம் விவேகம் இருக்கக்கூடாது அப்படி இருக்கும் பட்ச்சத்தில் அவர்களுடைய உயிருக்கும்,உடலுக்கும் ஆபத்து.
எந்த வாகனத்தில் சென்றாலும் வேகத்தை குறைத்துக் கொள்ளவும்.அப்பொழுதுதான் நம் எல்லாவற்றிக்கும் பாதுகாப்பு .எவ்வளவோ விபத்துக்கள் கண் முன்னாள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.

அதிக வேகத்தில் போறவங்க போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள் அப்படி வேகமாக போய் என்னத்த சாதிக்க போய்கிறார்கள் என்று தெரிய வில்லை. வேகம் விவேகம் ஆகும்,விவேகம் மரணம் ஆகும்.

அப்துல்மாலிக் said...

நல்லதொரு விழிப்புணர்வு ………வாழ்த்துக்கள் சகோ. கவிஞர். சபீர் காக்கா

பைக் ஓட்டுரவங்களிடம் நோட்டீஸ் அடிச்சி கொடுக்கனும்

சேக்கனா M. நிஜாம் said...

தமிழின் பெருமை :

இந்தியாவில் உள்ள 42 மொழிகளில், நமது தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்து பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வள்ளுவன், கம்பன், ஒளவையார், பாரதி, பாரதிதாசன், புலவர் உமர், கலைஞர், கவிக்கோ இப்படி என்னற்ற தமிழ் புலவர்களின் வரிசையில் நமதூரைச்சேர்ந்த புலவர் அண்ணாவியார், புலவர் பஷிர், இணைய அறிஞர் உமர்தம்பி, எழுத்தாளர் அதிரை அஹமது, கவிஞர் தாஹா, ஜமீல், பேராசிரியர் அப்துல் காதர், கவிக்குறள் அபுல் கலாம், கவி. சபீர் இப்படி என்னற்ற தமிழ் ஆர்வலர்களை உருவாக்கியது ஒன்றே. அது தமிழ் !

மேலும் நமதூரில் என்னற்ற புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் என மறைந்து, மறைக்கப்பட்டு உள்ளார்கள் அன்னார்கள் அனைவர்களும் நமதூரின் சிறப்புகளில் பதியப்பட வேண்டும் ( இன்ஷா அல்லாஹ் ! )

நட்புடன் ஜமால் said...

கைத்தொ(ல்)லைபேசி வந்த பின் விபச்சாரம் மட்டுமல்ல சாலை விபத்துகளும் அதிகாகிக்க்கொண்டு தான் வருகின்றன.

அவசரம் என்பது அவசர நேரத்தின் அவசியமாய் மட்டும் இருக்கட்டும், நமது தவறினால் நமக்கு மட்டுமல்ல, நம்மால் விபத்துக்குள்ளாகுபவரின் நிலையிம் மிகந்த வேதனைக்குறியது ...

பொருமையை மேற்கொள்வோம் - இன்ஷா அல்லாஹ்.


நல்ல விழிப்புணர்வு வரிகள் காக்கா, வெறும் கவிதையாக இரசித்துவிட்டு செல்லாமல் கருத்துகளை உள்வாங்கிட்டால் யாவருக்கும் நலம் ...

ZAKIR HUSSAIN said...

//வேக‌த்த‌டைக‌ளெல்லாம் ந‌ம் வாழ்க்கைக்கு த‌டையாக‌ இருக்க கூடாது என்ப‌தே ந‌ம் வேண்டுகோள். //

நம் ஊரில் வேகத்தடை என்ற பெயரில் "மதில்சுவர்" கட்டியிருப்பதைத்தான் நான் பார்த்தேன்.

முன்பு கடற்கரைத்தெரு புளியமரத்துக்கு அருகில் ஒரு மதில்சுவர் [ வேகத்தடை என்று நீங்கள் சொல்வது ]. இரவில் அதில் நிறைய பேர் தடுமாறியதை பார்த்திருக்கிறேன்.

சைக்கிளில் குரங்குபெடலில் கூட ஒட்டிய அனுபவம் இல்லாதவனை வேகத்தடை கட்ட சொன்னால் இப்படித்தான் இருக்கும்.

sabeer.abushahruk said...

அன்பு பெரியோர்களே, அருமை தாய்மார்களே, வாங்கய்யா, வாங்க பழகிப் 'பாப்பையா'ம்...பார்ப்போம்.

வேகம் வேண்டாம்யா. வாகனத்தில் வேகம் வேண்டாம்யா. வாழ்க்கையில் முன்னேற செயல்களில் காட்டுவோம்யா வேகத்தை. வாங்க, வாங்க அபு இபுறாகீம். வந்து சொல்லுங்கையா உங்க கருத்தை:

//இழப்பது விபத்துக்குள்ளவராக இருந்தாலும் இழந்து நிற்பது குடும்பமே !//

அருமை.அருமையா நச்சுன்னு சொல்லிப்பிட்டார்ல. விபத்தில் இறந்தாலும் சரி, அடிபட்டாலும் சரி அவதியும் வலியும் உடன் இருப்பவர்களுக்குத்தான் என்பதை ஒரே வாக்கியத்தில் சொல்லிட்டார்யா.

அடுத்து யார்ப்பா? தம்பி.சேக்கனா நிஜாமா?: சூப்பரா சொன்னீங்கய்யா. நீங்க சொல்ற எட்டு வழிகளையும் அனுசரித்தால் முட்டு சந்தில்கூட தட்டுத்தடுமாறாமல் வண்டி ஓட்டலாம்யா1
யாசிர் தம்பியா? நீங்கள் அடிக்கோடிடும் வரிதான் இதற்கு கருவே யாசிர்.

sabeer.abushahruk said...

ஜாயிரு, டி வி எஸ் ஃபிஃப்ட்டி,, தார் ரோடு, மைனஸ் 10 கிமீ வேகம், தடால், முழங்கால் சிராய்ப்பு, அங்கவையும் சங்கவையும் கீழே விழுந்தீங்களே அப்புறம் அந்த வண்டியை எங்கேவைத்தீஙக?

கவியன்பன்,
//வண்டியும் வாழ்க்கையும்
வண்டியைச் சீராக ஓட்ட
வேகக் கட்டுப்பாடு
வாழ்கையைச் சீராக்க
விவேகம்//
மிகச்சரியே. நன்றி கவியன்பன்.

நூர்முஹமது காக்கா,
//ஏன் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு காலை உணவை (சான்ட்விச்) கடித்துக் கொண்டு வேலை செய்கிறோம்//
நான்கூட ஒரு கையில் சான்விச்சும் (லஞ்ச்).மறு கையில் ஸ்டீயரிங்குமாகத்தான் ஸ்கூலுக்குப் போறேன் பசங்கள பிக்கப் பண்ண. என்ன செய்வது, பொழப்பு அப்படி.

இ.அன்சாரி காக்கா,
//உலகத்தில் இருக்கும் இடத்துக்கு விரைவாக செல்ல வேண்டியதில்லை// கேட்க மாட்டேன்கிறாங்க காக்கா. முகத்தில் தழும்பு வந்த பிறகும்கூட விர்ர்ர்ர்தான்.

.எம் ஹெச் ஜே: //பயண பாதுகாப்பு// வேகம் குறைத்தாலே பயண பாதுகாப்புக்கான பாதி வேலை முடிந்த்துதானே தம்பி?

எல் எம் எஸ்:
//.இரண்டு மாதம் அனுபவித்த வேதனை ஞாபகம் வருது// அவனுக்கென்ன சாரி சொல்லிட்டுப் போய்டுவான்.நாம்தான் அவதிப்படனும். அவனைச் சும்மாவா விட்டீங்க. ஓங்கி ஒன்னுகூடவா கொடுக்கல?

sabeer.abushahruk said...

கிரவுன்:
//சாகும் நீயும் உன்னால் காலமெல்லாம் சாகும் , துன்பத்தில் வேகும் உறவுகளும் தொடரும் சோகம்//
//ஒவ்வொரு அடியும் கவனம் அவசியம் அது நடப்பதாக இருந்தாலும் சாலையை கடப்பதாக இருந்தாலும்//
//அதை கவனம் கொண்டு சுவனம் எடுத்துச்செல்வோம் இன்சா அல்லாஹ்.//
கிரவுன் வந்தாச்சு. நன்றி.

ஹமீது:// விபத்தால் நண்பருக்கு ஏற்ப்பட்ட மரணத்தின் தாக்கம் கவிதையில் வெளிப்படுகின்றது//
தாக்கங்களால் உருவாகும் உணர்வுகள் என்றுமே வீரியமாகத்தான் வெளிவரும்.

அர அல: //மரணம் நாம் எங்கிருந்தாலும் நம்மை வந்து அடையும் என்ற குரான் வசனத்தை நாம் நினைவில் கொள்வோமாக//
கண்டிப்பாக தம்பி.
நீங்கள் பகிர்ந்துகொண்ட நிகழ்ச்சி யாரோ முகம் தெரியாதவரைப்பற்றி என்றாலும் மனசு கனத்த்து.

எம் எஸ் எம்:// வேக‌த்த‌டைக‌ளெல்லாம் ந‌ம் வாழ்க்கைக்கு த‌டையாக‌ இருக்க கூடாது என்ப‌தே ந‌ம் வேண்டுகோள்// அப்படிப்போடுங்க தம்பி.
தம்பி தாஜுதீன்: //எல்லா வாகன ஓட்டிகளுக்கும் பொருந்தும்.// வேகமாகச் செல்லும் எல்லா ஓட்டுநர்களுக்கும் நிச்சயமாகப் பொருந்தும். நாமும் நேரிலும் சொல்வதுண்டு.
அபுபக்கர் அமேஜான்: //அப்படி வேகமாக போய் என்னத்த சாதிக்க போய்கிறார்கள் என்று தெரிய வில்லை// பெருசா ஒன்னுமில்லை சகோ. உப்புச்சப்பு இல்லாத விஷயமா இருக்கும் இல்லேன்னா அப்படியே ஒரு யு டர்ன் பண்ணிட்டு வந்துடுவாய்ங்க.

அப்துல் மாலிக்:// பைக் ஓட்டுரவங்களிடம் நோட்டீஸ் அடிச்சி கொடுக்கனும்//
அதுவும் வேகமாகச் செய்யனும் தம்பி.

நட்புடன் ஜமால்:// வெறும் கவிதையாக இரசித்துவிட்டு செல்லாமல் கருத்துகளை உள்வாங்கிட்டால் யாவருக்கும் நலம் ...
ALL IS WELL !!!

sabeer.abushahruk said...

விபத்து கண்டால்கூட மனசு கண்டிப்பான தீர்மானங்களைத் தீட்டும் ... அப்புறம்?

விபத்துநேர தீர்மானங்கள்!

சட்டென 
வேகம் குறைத்தன
வாகனங்கள்...
நெடுஞ்சாலை
கடக்க 
கடுஞ்சாலையானது!

ஓட்டம் ஓய்ந்து
ஊர்திகளின்
ஊர்தல் துவங்கியது!

மற்றொரு சூவிங்கம்
மெல்லத் துவங்கி
மெல்ல நகர்ந்தேன்...

ஐந்து தடங்களிலும்
அணியணியாய் வாகனங்கள்
சில தடங்கள்
ஊர்வதும்
சில ஸ்தம்பித்தும்...

ஊர்தலினூடே
காரணம் கணிக்கையில்
வாகன சோதனை
சாரதி சோதனை
சாலை சீரமைப்பு
என 
எல்லாம் போக
விபத்தோவென
நினைத்த மட்டில்
வேக 
எல்லை மீறுவோர்மீது
கோபம் வந்தது!

குடுவைக் கழுத்தென
குறுகிய சாலையில்
சாத்தியப்படாத கோணத்தில்
முட்டிநின்ற வாகனங்கள் 
விடுத்து
கீழே 
ரத்தச் சகதியில்
உடல்கள் கண்டு
உலுக்கியது நெஞ்சு!

வேகம் வேண்டாமென
தீர்மானித்தது
விபத்துகண்ட மனது.

மூன்றாம்நாள்...
பள்ளீக்கூடத்தில்
பிள்ளைகளின் 
காத்திருப்பு 
கவலைதர  -

பரிச்சயமான
சாலையின்
வேக 
உளவுக் காமிராக்களின்
ஒளிப்பிடங்கள் தவிர்த்து
அனிச்சையாய்
வேக வரம்பைக்
கடந்து
பறந்த
என் 
வாகனத்துள்
முடங்கிக் கிடந்தன
தீர்மானங்கள்!

thanks: www.thinnai.com

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பரிச்சயமான
சாலையின்
வேக
உளவுக் காமிராக்களின்
ஒளிப்பிடங்கள் தவிர்த்து
அனிச்சையாய்
வேக வரம்பைக்
கடந்து
பறந்த
என்
வாகனத்துள்
முடங்கிக் கிடந்தன
தீர்மானங்கள்!//

அதே அதே ! நடுவர் அவர்களே !

சென்ற அக்டோபர் மற்றும் நவம்பர் இரண்டு மாதங்கங்களில் தலா ஒரு புகைப்படம், எடுத்திருக்காய்ங்க என்னோட காரை... ரொம்ப அநியாயம் நடுவர் அவர்களே!

முன்னாடி முகத்தை பார்த்தமாதிரி எடுத்தாதானே அவய்ங்க கேட்ட காசை கொடுக்கலாம் ஆனால் பின்னாடி ஒளிந்திருந்து கொண்டு எடுத்துட்டு காசு கொடுன்னு கேட்டா எப்புடி காக்கா கொடுக்கிறது... அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டேன்...

இந்த ஜனவரியில வாகனத்திற்கான உரிமைத்தை புதுப்பிக்க சென்றதும் தூட்டை கட்டு இல்லையேல் புதுப்பித்தல் கட்டுன்னுட்டாய்ங்க !

வேற வழி... !

உளவு கேமரா இருக்குமிடம் தெரியும் ஆனால் இப்போவெல்லாம் அவைகள் கண் சிமிட்டுவதில்லை கச்சிதமாக தேவையான நம்பர் பிளேட்டை மட்டும் எடுத்துக்கிறாய்ங்க பக்காவா !

இப்போ ரூட்டை மாத்தியாச்சு !

sabeer.abushahruk said...

//ஆனால் இப்போவெல்லாம் அவைகள் கண் சிமிட்டுவதில்லை கச்சிதமாக தேவையான நம்பர் பிளேட்டை மட்டும் எடுத்துக்கிறாய்ங்க பக்காவா !//

அப்படியா? சொல்லவே இல்லை? நாளைக்கே நம்ம கணக்கையும் ச்செக் பண்ணிட வேண்டியதுதான்.

KALAM SHAICK ABDUL KADER said...

சாலை கடப்பவர்களையும் “எமிரேட்ஸ் ஐடி கார்டு” வழியாகக் காமிராவில் பதிவாகி கட்டணம் கட்டினாத்தான் விமானநிலையம் கடந்து செல்ல முடியும் என்றும்; அவ்வாறு தண்டம் கட்ட முடியாதவர்கள் பயணம் ரத்தாகி விட்டதாகவும் ஒரு செய்தி உலா வருகின்றது, இஃது உண்மையா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சாலை கடப்பவர்களையும் “எமிரேட்ஸ் ஐடி கார்டு” வழியாகக் காமிராவில் பதிவாகி கட்டணம் கட்டினாத்தான் விமானநிலையம் கடந்து செல்ல முடியும் என்றும்; அவ்வாறு தண்டம் கட்ட முடியாதவர்கள் பயணம் ரத்தாகி விட்டதாகவும் ஒரு செய்தி உலா வருகின்றது, இஃது உண்மையா?//

அப்படி ஏதும் நடந்ததாக கேள்விப் படவில்லை !

அபுதாபியில், சாலையை குறுக்கும் நெடுக்குமாக கடக்கும் பாதசாரிகளை உளவு போலீசும், உள்ளூர் கந்தூரக்காரர்களும் பிடித்துக் கொண்டு அபராதம் விதிப்பதாகத்தான் அறிவோம் அதுவும் ஸ்பாட் ஃபைன் கிடையாது அடையாள அட்டையை வாங்கி கொண்டு கொடுக்கும் ரசீதை பின்னர் அலுவலகத்தில் சென்று அடைத்து விட்டு அதனை திரும்பப் பெற வேண்டும் என்பதே...

இந்த கூத்தை ஏன் கேட்கிறீங்க ! எமிரேட்ஸ் ஐடி ன்னு சொல்லி அபராதம் போட்டுத்தள்ளுவதை... இதுவரைக்கும் அங்கிருக்கும் யாருக்கும் ஜெபல் அலி ஃப்ரீஜோனில் இருக்கும் கம்பெனிகள் தனியாரா அல்லது கவெர்மெண்டா அல்லது செமி-கவர்மெண்டான்னு தெரியலை... அதனை நம்மிடமே கேட்கிறார்கள்...

கவனிக்க !

நீங்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவராக இருந்தால் உங்களின் பாஸ்போர்ட்டில் ரெசிடென்ஸ் பர்மிட்டில் ஸ்பான்சர் பெயரில் "Jebel Ali Free Zone Authority" என்று இருந்தால் ஜனவரி 1ம் தேதியிலிருந்து 20திர்ஹம் அபராதம் நாள் ஒன்றுக்கு, இதுவரை புதிய ஐடி எடுக்காமல் இருந்தாலும் அதனை ரினிவல் செய்யாமல் இருந்தாலும்.

அதே நேரத்தில் Sponsor name "நீங்கள் வேலை செய்யும் கம்பெனி" அதோடு - JAFZA என்றிருந்தால் அபராதம் இல்லை மே 31ம் தேதி வரை...

இது துபாய்க் காரர்களுக்கு மட்டுமே பொருந்தும்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அப்படியா? சொல்லவே இல்லை? நாளைக்கே நம்ம கணக்கையும் ச்செக் பண்ணிட வேண்டியதுதான்.//

என்னோட ஃபோட்டோ வந்திருந்தா துபாய் போலீஸ் லிங்கை உங்களுக்கு அனுப்பியிருப்பேன் பாருங்கள்னு அதுவரலையா அதான் சொல்லாமல் இருந்துட்டேன்... :)

ZAKIR HUSSAIN said...

//முன்னாடி முகத்தை பார்த்தமாதிரி எடுத்தாதானே அவய்ங்க கேட்ட காசை கொடுக்கலாம் ஆனால்....//

அவிங்க என்னா நீங்க பொண்ணு பார்க்கவா படம் எடுத்துகுடுக்குறாய்ங்க.....நல்லா கேட்குறாருயா டீட்டெய்லு...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு