Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கிற வயசுல எதுக்குங்க இதெல்லாம்..? 9

அதிரைநிருபர் பதிப்பகம் | February 04, 2012 | , , ,


அதிராம்பட்டினத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் co-education-ல் படித்திருக்கிறேன். பின்னர்... காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். இது ஆண்கள் பள்ளி என்றாலும். +1 மற்றும் +2 வகுப்புகள் மட்டும் co-education..! ஆனால் அங்கே 6வது மற்றும் 7வது மட்டும்தான் படித்தேன். பிறகு ஆங்கில வழி கல்வி பயில பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 8வது முதல் +2 வரை பயின்றேன். இதுவும் ஆண்கள் பள்ளி என்றாலும். 6வது முதல் 10வது வரை நான் படித்த English medium மட்டும் co-education..! அப்போது. 

நான் +2 படிக்கும்போது... PG Teachers Association சார்பில் சுமார் இரண்டரை மாதம் வேலைநிறுத்தம் நடைபெற்றது. டியுஷன் உட்பட கல்வி கற்பிப்பதையே முழுதும் நிறுத்தி சம்பள உயர்வுக்காக (1992-93 கல்வியாண்டில்) போராடினார்கள். அதில் அவ்வருடம் நாங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டோம். அதன் விளைவு. எங்கள் பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலில் தெரிந்தது. மற்ற பாடங்கள் ஓரளவு நாங்களே புரிந்து படித்து விட்டாலும் கணக்கு மட்டும் ஆசிரியர் துணை இல்லாமல் சுத்தமாக புரியவே இல்லை. முக்கியமாக அவ்வருடம் மட்டுமே அறிமுகமான differential equations, conics மற்றும் complex numbers. இவற்றை புரியாமல் அப்படியே ஒதுக்கி வைத்து விட்டுத்தான் தேர்வுக்கே சென்றோம். என்னால் 148 தான் எடுக்க முடிந்தது..!

இதனால் அடுத்த வருடம் Improvement எழுதி பொறியியல் கல்லூரியில் புகுந்து விடலாம் என்று (அப்போது... 39 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே தமிழகத்தில் இருந்தன) கணக்கில் centum எடுக்கும் முயற்சியில் தனி டியுஷன் வைத்து படித்து வந்தோம். வருடம் வீணாகாமல்... 'எதற்கும் இருக்கட்டும்' என்று அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரியில் இளம்நிலை அறிவியல் - வேதியியல் சேர்ந்து கொண்டேன். அன்றொரு நாள் என் நண்பனுடன் அவன் வீட்டில் 'complex numbers' problems solve பண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தோம். Group study..!

அப்போதுதான்....

ஒரு பெண், குழந்தையுடன் வந்து என் நண்பனின் தாயாருடன் பேசிவிட்டு வெளியே செல்லும்போது... ஹாலில் என்னை பார்த்துவிட்டு...

"ஹே... ஆஷிக்... எப்படிடா இருக்கே..?" ...என்று வினவியதும்.

"நல்லா இருக்கேன் மாமி" என்றேன்.

(பொதுவாக என் நண்பன் அவனுடைய தாயின் தோழிகளை அப்படித்தான் அழைப்பான்).

ஆனால்... மனதுள்... ""இவர் யார்... நம் தாயாரின் தோழியோ..? இதற்குமுன் பார்த்ததோ பேசியதோ இல்லையே... இவருக்கு மட்டும் நம்மை எப்படி தெரிகிறது..?"" என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே...

அந்த அதிரை கலாச்சார துப்பட்டியுடன் குழந்தையை இடுக்கில் வைத்திருந்த மாமி...

"என்னது மாமியா...? என்னை தெரியலையாடா..?" 

"ஹி.. ஹி.. எங்கேயோ பார்த்துருக்கேன்... ஆனா எங்கேன்னுதான் தெரியலை மாமி...!"

"என்னடா மறுபடியும் 'மாமி'ங்கிறே..? அப்போ... நீ என்னை மறந்துட்டே..!"

"சரி... எனக்குத்தெரியலை மா... அக்கா... ராத்தா... நீங்களே சொல்லிருங்க நீங்க...யாருன்னு..."

"அடப்பாவி... இப்படித்தான் கூட படிச்ச புள்ளையை மறப்பியாடா...?" 

....என்றதும் எனக்கு செம ஷாக்..!

"நீங்க... வந்து உங்க... உன் பேரென்ன..?"

"மொகமே நியாபகம் இல்லன்னா பேரு மட்டும் எப்படி நியாபகம் இருக்குமாம்..? 

நான் ".....!" என்று பெயரைச் சொன்னதும்

அமர்ந்திருந்த நான் 'தடால்' என்று எழுந்து நின்றேன்..! ஐந்தாம் வகுப்பு வரை என் கூட படிச்ச பொண்ணு..! சராசரியை விட உயரமாகவும் அனைவரையும் மிரட்டி அதட்டும் கணீர் குரலும், அப்போதே தாவணி எல்லாம் போட்டுக்கொண்டு பெரிய மனுஷி மாதிரி இருந்ததால் டீச்சருக்கு மிகவும் பிடிச்சுப்போய் கிளாஸ் லீடர் ஆக்கிட்டாங்க. ஆனால், எங்க படிப்பாளி குருப்புக்கே இந்தப் பெண்ணை பிடிக்காது..! காரணம் நல்லா படிக்கிறவங்கதான் கிளாஸ் லீடரா வரணும்னு நாலாவது வரை இருந்த ரூல்ஸை ஒடச்சி அராஜகமாக லீடர் ஆன இந்தப் பெண். டீச்சரின் அடியாள்.

பேசுறவங்க பேரை போர்டில் டீச்சர் எழுதச்சொல்லிட்டு வேற கிளாசுக்கு பாடம் நடத்த சென்றுவிட்டால்... (என்ன செய்ய... துவக்கப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை) இந்த லீடர்... முதல் பெயராக என் பெயரை போர்டில் எழுதி அடி வாங்க வைப்பதில் இந்த பெண் துரிதம் காட்டுவார். 'பேசாமல் இருக்கும் போதே எழுதுவதை கண்டதும்' கடுப்பாகி... 'நான் எங்கே பேசினேன்' என்றால்... என் பேருக்கு பக்கத்தில் X போட்டு 1 , 2 , 3 ... என்று எழுத ஆரம்பித்துவிடுவார். அத்தினிவாட்டி பேசினேனாம்..!

இந்த நம்பர்களை எல்லாம் போர்டில் கண்டபிறகு காலையிலிருந்து தொடர்ந்து ஓய்வின்றி தொண்டை கிழிய பாடம் நடத்த கத்தும் டீச்சரிடம் இருந்து வரும் முதல் அடி ரொம்ப கோபமாகவும் பலமாகவும் இருக்கும். வலியால் துடிப்பது கண்டு அடுத்தடுத்து வருகிறவர்களுக்கு அடியின் வேகம் குறைந்து விடும். இளகிய மனது அவங்களுக்கு..!

இந்த லீடர் என்னை எத்தனை அடி வாங்க வைத்திருக்கிறார். அட... அந்தப் பெண்ணா இவர்..? ச்சே...! இவரையா இவ்வளவு மரியாதையா வாங்க போங்கன்னு... மாமின்னு... எல்லாம் மரியாதை கொடுத்து... ச்சே...!

"ஓ... ஸாரி... உங்களை அடையாளம் தெரியலை. இப்போ நியாபகம் வருது. நீங்க அஞ்சாவதுல கிளாஸ் லீடர். ஆனா... எப்படி... நீங்க... இப்படி... இந்த குழந்தை... உங்களுடையதா?... கல்யாணம் ஆகிருச்சா..?"

"ம்ம்ம்... ஆகிருச்சு... எம்மகன்தான் இவன். ஒரு வயசு ஆகுது. அவுகளுக்கு தஞ்சாவூரிலே மெடிக்கல் ஷாப் இருக்கு. சரி.. சரி.. நீங்க படிங்க.. உங்களுக்கு உங்க குடும்பத்தை காப்பாத்தற கடமை இருக்கு. அதுக்கு சம்பாரிக்கணும். அதுக்கு நல்லா படிக்கணும்... அப்புறம்... சரி... டைம் ஆச்சு... நான் வாறன்..." என்று 'புத்திமதி' சொல்லிவிட்டு (இன்ன்ன்னும் லீடர்னு நினைப்பு போல...) கிளம்பிச்சென்றதும்...

அப்போதுதான் என் நண்பன் முணுமுணுத்தான்... "அதுக்குள்ளே கல்யாணமாகி அம்மாவும் ஆகி !!?" "படிக்கிற வயசுல எப்படி இதெல்லாம்..?" என்று..!

என் காதில் இது விழுந்து விட... "போடா வெண்ணை... நாமதான் கல்யாண வயசுல 'காம்ப்ளக்ஸ் நம்பர்ஸ்' படிச்சிக்கிட்டு இருக்கோம்... அதுகளாவது கரெக்டான வயசுலே கல்யாணம் பண்ணி காம்ப்ளக்ஸ் இல்லாம சந்தோஷமா இருந்தா சரிதான்" என்றேன்.

"எது கரெக்டான வயசு..? தப்பில்லையாடா..! அந்த பொண்ணு ஏறிப்போன ஆட்டோவுக்கு பின்னாடி என்னா எழுதி இருந்துச்சு பார்த்தியில்ல... 'பெண்ணின் திருமண வயது 21'... அரசு ஆணை..! தெர்யும்ல..?"

"அப்படி இருக்காதுடா. ஏன்னா... ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணும் போது 18 வயசு ஆனா மேஜர்னு சொல்லி சட்டப்படி கல்யாணம் பண்ணி வைப்பாங்க..! தெரிஞ்சுக்க..!"


சகோதரர்களே..! 

உங்கள் வட்டாரத்தில் இதுபோல ஏராளமான பெண்மணிகளை பார்த்திருப்பீர்கள். பெண்கல்வி என்பது பெண்ணுரிமை. அது அவர்களுக்கு இலகுவாக கிடைக்கும் பொருட்டு நிலைமை இருக்கிறதா..? இப்போது பல விஷயங்களை நாம் தீர அலசி ஆராய வேண்டியுள்ளது.

முதலாவதாக......

60-களில் கல்லூரியில் வந்த சிலபஸ்... 80-களில் உயர் நிலைப்பள்ளியில்..! அப்போது மேல்நிலைப்பள்ளியில் இருந்த சிலபஸ்... இரண்டாயிரத்தில் துவக்கப்பள்ளியில்..! ஆனால், படிக்கும் வருடங்கள் மட்டும் அன்று போலவே என்றும் குன்றா அதே இளைமையுடன் இருப்பது சரியா..? 

ஒருசில பாடங்கள் தவிர... பன்னிரண்டு வருடமாக பெரும்பாலும் பள்ளிகளில் கீழ் வகுப்புகளில் அரைத்த மாவையேதானே நாம் மேல் வகுப்புகளில் அறைக்கிறோம்..? பள்ளி சிலபஸ் கல்லூரிகளிலும் தொடர்கிறதா இல்லையா..? "இடுக்கண் வருங்கால் நகுக.." ஐந்தாவதில் படித்த அதே திருக்குறள்... கல்லூரியிலும்..! இதேபோல மற்ற பாடங்களிலும் எத்தனை ரிப்பீட்டுகள்..? ஒருவகுப்பில் படித்தது அடுத்த வகுப்பில்..! பள்ளியில் படித்தவை அப்படியே கல்லூரியில்..!

12 வருடம் படிப்பதை, ரிபீட் இல்லாமல் 9 வருடத்திலேயே பள்ளிகளில் சுருக்கி கற்றுத்தர முடியுமா... முடியாதா..? 

அதன்பிறகு, கல்லூரிப்படிப்பு 3 அல்லது 4 வருடம். பிறகு 18 வயதிலேயே சுய சம்பாத்தியம்... வேலை என்று ஒரு சிஸ்டம் நம்மிடம் இருந்திருந்தால்... இந்த ஜஹபர் நாச்சியாக்கள் எல்லாருமே திருமணம் ஆகும் முன்பே பட்டப்படிப்பு முடித்திருப்பார்களே..? 

பிசினஸ் அது இதுன்னு பொருளாதார ரீதியிலே செட்டில் ஆகிவிட்டால், பசங்களுக்கே சற்று சீக்கிரமாக கல்யாணம் ஆகிவிடுகிறதே..? இதற்கு பிரபல உதாரணம்: நம்ம சச்சின் டெண்டுல்கர் தன் 17 வயதிலேயே அதாவது 1990-லேர்ந்தே 'லவ் பண்ணப்பட்டு' விரைவாக கல்யாணம் 'செய்து கொள்ளப்பட்டாரே'..?அதுவும் ஒரு டாக்டரால்..? இந்த டெண்டுல்கரும் ஒருவகையில் 'ஓர் ஆண் நாச்சியா'தானே..?

இதற்கெல்லாம்... தற்போதைய நம் நடப்பு கல்விமுறைதானே காரணம்..? 

இந்த புராதன 'மெக்காலே கல்வி முறையை' நாம் முழுதாக மாற்றி அமைக்க வேண்டும் அல்லவா..!?

'பெண்களுக்கு திருமணம்' என்பது எவ்விதத்திலும் அவர்கள் படிப்பை பாதிக்காமல் இருக்க வேண்டும். அதாவது... மனிதனின் உடல்கூறுக்கு தக்கபடி படிக்கிற காலம் திருத்தப்பட வேண்டும். 

இந்த 10+2+3 சிஸ்டத்தினால், வயசு கூடுதே என்று.. கல்யாணம் முக்கியப்பட்டு, பெண்கல்வி  பின்னுக்கு தள்ளப்பட்டு... பெண்கள் பட்டக்கல்வி கற்பது ரொம்ப குறைவாக போய் விடுகிறது. இதுவே நான் முன்பு சொன்ன 9+3 அல்லது 9+4 சிஸ்டமாக இருந்திருந்தால் 18 வயதுக்குள்ளே நிறைய பெண்கள் ஏதாவது ஒரு வேலைவாய்ப்புக்குறிய பட்டம் பெற்று இருந்திருப்பார்கள். அவர்கள் கல்வியும் திருமண வாழ்வும் ஒன்றுக்காக ஒன்று பாதிக்கப்பட்டு இருந்திருக்காது. பெண்கள் தங்களின் திருமணப்பருவத்தை அடையும் முன்பே... அவர்களின் பட்டக்கல்வி காலங்கள் முடியும் படி நாம் நமது கல்வி கற்பிக்கும் கால அமைப்பை முறைமை படுத்தி இருந்தால்..? பெண்கல்வி குறித்து நாம் சற்று வேறொரு புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டிய நேரமிது சகோ..!

உடற்கூறு மாறுபாட்டால் மாணவர்கள் வயசுக்கோளாறில் தடம் மாறுவதற்கு முன்பே அவர்கள் கல்வி கற்று பள்ளியை & கல்லூரியை விட்டு வெளியேறிட வேண்டும். பசங்களும் பள்ளி & கல்லூரி நாட்களில் மனம் பிறழ்ந்து வழிகேட்டில் வீழ்ந்திட வாய்ப்பில்லை..! 

பெண் தன் கல்வியை திருமணம் முடிந்து வீட்டில் இருந்த படியே அஞ்சல் வழிக்கல்வியில் எல்லா பட்டப்படிப்பையும் அப்படி தொடர வசதியில்லையே..? சிலவற்றை... திருமணம் ஆனபின் ஏகப்பட்ட குடும்ப பொறுப்புச்சுமையுடன் படிக்க ஆரம்பித்தாலும், பள்ளி/ கல்லூரியில் இணைந்து படிக்கும் அதே உத்வேகமோ... சுதந்திர உணர்வோ... படிப்பு வேட்கையோ இப்போது இருக்குமா..?

18 வயதில் நாட்டின் தலைவரை ஒட்டுச்சாவடியிலும், வீட்டின் தலைவரை ரெஜிஸ்டர் ஆபீஸிலும் தேர்ந்தெடுக்க அனுமதியளித்து விட்டு... இனியும், 'திருமண வயது 21' என்றுசொல்லிக்கொண்டு இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகாதா..?

யோசனை சொல்ல நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், போகிறபோக்கை கண்ணுறும்போது... PreKG, LKG, UKG இதெல்லாம் இனி அரசே கட்டாயமாக்கி காசை கரக்கப்பார்ப்பார்கள்... என்றே தோன்றுகிறது. 

முடிந்தால் இன்ஜினியரிங் 5 வருடம், மெடிக்கல் 7 வருடம் என்று ஃபீஸ் புடுங்க கல்வியின் வருடங்கள் நீளுமே ஒழிய குறைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. மாணவர்களை பற்றி இப்போது யாருக்கு கவலை..? 

ஒருவேளை... அப்படி கவலைப்பட்டிருந்தால்... அந்த டீச்சர்ஸ் ஸ்ட்ரைக்கே நடந்திருக்காதே..? அப்புறம் நான் improvement எழுத வேண்டிய அவசியமே வந்திருக்காதே..? நானும் இந்த பதிவையும் எழுதி இருக்க மாட்டேனே..? நீங்களும் இங்கே இதை படித்துக்கொண்டிருக்கவும் மாட்டீர்களே..?

சொட்டு : என் டைரியிலிருந்து : ச்சு... அப்டில்லாம் ஒன்றும் எழுதி வைப்பதில்லை. ஏனெனில்... சில மறக்க முடியா நிகழ்ச்சிகள்... ஒவ்வொருவர் வாழ்விலும் திருப்புமுனையாக... மற்றும் சில புதிய சிந்தனைகளின் ஆரம்ப அடிச்சுவடுகளாக இருந்தால்... அவை முக்கிய உரையாடல்கள் வடிவத்துடனேயே பசுமரத்தாணியாய் மனதின் ஆழத்தில் அப்படியே உறைந்திருக்கக்கூடும். அப்படி ஒன்றுதான் இப்பதிவு.

9 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

அருமையான அலசல்.
திரும்பி பார்த்து
அலசுவதுகூட அழகுதான்.

Noor Mohamed said...

//'மெக்காலே கல்வி முறை'// இதுதான் உலகக் கல்வி மார்க்கக் கல்வி என்று நம்மை கல்வியிலிருந்து பிரித்த கல்வி முறை.

//60-களில் கல்லூரியில் வந்த சிலபஸ்... 80-களில் உயர் நிலைப்பள்ளியில்..! அப்போது மேல்நிலைப்பள்ளியில் இருந்த சிலபஸ்... இரண்டாயிரத்தில் துவக்கப்பள்ளியில்..! ஆனால், படிக்கும் வருடங்கள் மட்டும் அன்று போலவே என்றும் குன்றா அதே இளைமையுடன் இருப்பது சரியா..?//

இப்போது இன்னும் syllabus அதிகமாகி, எதையாவது தேர்ந்தெடுத்து எப்படியாவது படியுங்கள் என்று பலகலைக் கழக பட்டப் படிப்பில் CBCS (CHOICE BASED CREDIT SYSTEM) Regulation அறிமுகப் படுத்தியுள்ளார்கள்.

//18 வயதில் நாட்டின் தலைவரை ஒட்டுச்சாவடியிலும், வீட்டின் தலைவரை ரெஜிஸ்டர் ஆபீஸிலும் தேர்ந்தெடுக்க அனுமதியளித்து விட்டு... //

குடியரசு இந்தியாவில் நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை 21 வயதாகத்தான் இருந்தது. 1989 ல் வயது வரம்பு 18 வயது என மாற்றப் பட்டது.

//முடிந்தால் இன்ஜினியரிங் 5 வருடம், மெடிக்கல் 7 வருடம் என்று ஃபீஸ் புடுங்க கல்வியின் வருடங்கள் நீளுமே ஒழிய குறைய வாய்ப்பில்லை//

1976 காலங்களில் IIT, Annamalai University தவிர தமிழ் நாட்டில் 7 இன்ஜினியரிங் காலேஜ் மட்டுமே இருந்தன. அப்போது இன்ஜினியரிங் படிப்பு காலம் 5 வருடங்கள். பிற்காலத்தில்தான் 4 வருடங்களாக மாற்றப்பட்டது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கல்வி முறையில் மாற்றம் அவசியமே !

நல்ல அலசல், அதற்கு அடித்தளமாக எடுத்து வைத்த காட்டு (நினைவலைகள்) சிந்திக்க வேண்டியது...

அது சரி, 14 வயது பையன் மட்டும் ஐ.ஐ.டி.யில படிப்பதும், யுனிவர்சிட்டியில் முதல் மதிப்பெண் எடுப்பதும் சாதனையாக வருகிறதே நாளிதழ்களில், தொலைக் காட்சிகளில்...

அந்த ஒரு மாணவனுக்கு வலைந்து கொடுக்கும் கல்வி முறை ? ஏன் ஒட்டு மொத்த மக்களுக்கும் சாத்தியப் படாமல் குண்டுச் சட்டிக்குள் குதிரை சவாரி தொடர்கிறது ???

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஆம். அபுஇபுறாஹிம் காக்கா சொல்வது போல் அண்மையில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த பாக்கிஸ்தான் நாட்டு இளம் கணினி விஞ்ஞானி இர்ஃபா கரீம் போல் இன்னும் நம் நாட்டில் அன்றாடம் செய்தித்தாள்களில் படித்து வரும் செய்திகளான:

100 வருடங்களுக்கு பிறகுள்ள ஒரு தேதியை சொன்னால் என்ன கிழமை என்று துல்லியமாக‌ சொல்லும் சிறுமி.

பள்ளிக்கு செல்லாமலேயே கணிதத்தில் எந்த கணக்கையும் எளிதில் செய்து காட்டும் சிறுவன்.

அட்லாண்டிக் பெருங்கடலை விமானம் ஓட்டி கடந்த சிறுவன்.

இது போல் எண்ணற்ற சாதனைகளை செய்து வரும் இளம்/சிறுவயதினருக்கு இறைவன் இயற்கையில் அந்த ஜீனியஸை கொடுத்து விடுகிறான்.

அபுல்கலாம் படித்த பள்ளி, கல்லூரியில் பயின்றவர்களெல்லாம்
நாட்டின் ஜனாதிபதி அந்தஸ்த்தை பெற்றுவிடுவதில்லை. அதே வேளை வாழ்வில் முயற்சி இல்லை எனில் வறுத்த கடலையின் மேல் தோள் உரிப்பதற்கு கூட நமக்கு ஏதேனும் இலகுவான‌ இயந்திரம் தேவைப்படும், சைக்கிள் மிதிப்பது கூட எதோ கடினமான செக்கிழுப்பது போல் ஆகிவிடும்.

நல்லதோர் கட்டுரை வடித்து தந்த சகோ. முஹம்மத் ஆஷிக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அதிரைக்காரன் said...

ஆஷிக்,

பெண்ணுக்கேற்ற மன வயது 21 என்பது அதிரைக்கு பொருந்தாது. இதை அதிரை ஆட்டோக்களில்கூட காணமுடியாது. 30 வயதில் பாட்டியான என் பள்ளித்தோழிகளும் உண்டு. :(

அதுசரி நீங்க 'அந்த' ஆஷிக்கா? கொஞ்ச நஞ்ச சந்தேகம் இருந்ததும்,இப்ப உறுதி ஆயிடுச்சு.1992-93 இல் +2 படித்திருக்கிறீர்கள் என்றால் நமக்கு ஜூனியர். ஊ.ஒ.தொ பள்ளி என்றுவேறு சொல்கிறீர்கள்! ஐயா ஸ்கைப்பில் வாருங்களேன்.

Noor Mohamed said...

//PG Teachers Association சார்பில் சுமார் இரண்டரை மாதம் வேலைநிறுத்தம் நடைபெற்றது. டியுஷன் உட்பட கல்வி கற்பிப்பதையே முழுதும் நிறுத்தி சம்பள உயர்வுக்காக (1992-93 கல்வியாண்டில்) போராடினார்கள்//

ஒரு காலத்தில் "வாக்கெத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கெத்தவனுக்கு போலீஸ் வேலை" என்று சொல்லி வெளியூரில் (அதிரையில் அல்ல) வாத்தியாருக்கும் போலீசுக்கும் பெண் கொடுக்க மாட்டார்கள்.

ஆனால் இன்றோ +2 பாடமெடுக்கும் PG Teachers ரூ 50 ஆயிரத்துக்கு மேலும், கல்லூரி பேராசிரியர்கள் ரூ ஒரு லட்சத்திற்கு மேலும் சம்பளம் பெறுபவர்கள் நம்மூரியலேயே உள்ளனர். அது மட்டுமல்ல, இவர்கள் ஒய்வு பெற்ற பின்பும் ஒய்வு ஊதியமும் பெறுகின்றனர். அதையெல்லாம் விட்டு, வெளிநாட்டு வாழ்க்கையிலேயே காலம் கடத்துபவர்கள்தான் நம்மில் ஏராளம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ. ஆஷிக்,

இந்த பதிவில் கல்வி திட்டத்தில் மாற்றம் தேவை என்று கோரிக்கை இருந்தாலும், பெண்களின் கல்விக்கு திருமணம் ஒரு தடையாக இருப்பது நம் சமுதாய முன்னேற்றத்தின் விழ்ச்சிக்கு ஒரு காரணம் என்று சொல்லுவது ஒரு தொடர் கதையாகயே.

நம்முடன் படித்த சக மாணவி நாம் கல்லூரிக்கு செல்லும் முன் அம்மாணவி தன் மகனை/மகளை LKGயில் சேர்க்கும் நிகழ்வுகளை அநேக அதிரை ஆண்மக்கள் கண்டுள்ளோம் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

முறையான பெண் கல்வி அவசியம்...

கல்வி விழிப்புணர்வு விடயங்களில் அங்கொன்றும் இங்கொன்றும் முயற்சிகள் நடந்தாலும், பூனைக்கு யார் மணிக்கட்டுவது என்ற வார்த்தை தொடரத்தான் செய்கிறது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"மலரும் நினைவுகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்" கல்வி சம்மந்தமான மலரும் நினைவு இது.

வாப்பா, உம்மா ஏழ்மையான‌ குடும்ப‌த்தில் பிற‌ந்து ப‌டிப்பு என்றால் என்ன? வென்று கூட‌ தெரியாத‌ அந்த‌ வீட்டில் பிள்ளைக‌ள் த‌ங்க‌ளுடைய வீட்டு க‌ஷ்ட‌த்தை உண‌ர்ந்து பல இன்னல்களை தாங்கி மின்சாரமில்லா பல இரவுகளில் குத்துவிளக்கு ஒளியில் க‌வ‌ன‌த்துட‌ன் ப‌டித்து முன்னேறி வந்து இன்று வாழ்வில் வ‌ச‌ந்த‌த்தை இறைவ‌ன் நாட்ட‌த்தில் அனுபவித்துக்கொண்டிருப்பவர்களும் ந‌ம்மூரில் இருக்க‌த்தான் செய்கின்ற‌ன‌ர்.

ஆர்வ‌மூட்டுத‌ல் என்ன‌ தான் ப‌ல‌ திசைக‌ளிலிருந்தும், பல வழிகளிலிருந்தும் மாண‌வ‌ர்க‌ளுக்கு வ‌ந்தாலும் த‌ன‌க்கென தானே உருவாகும் அந்த‌ ஆர்வ‌மே அலாதியான‌து அத‌னை வார்த்தைக‌ளால் அள‌ந்து விட‌ முடியாது. அப்ப‌டி தன‌க்குத்தானே ஆர்வத்தை உருவாக்கிய‌ மாண‌வ‌ர்க‌ள் நிச்ச‌ய‌ம் எதிர்கால‌த்தில் வாழ்வில் உய‌ர்ந்த‌ நிலையிலேயே இருப்ப‌ர். அதிலும் போதிய‌ மார்க்க‌ப்ப‌ற்றும், ப‌க்குவ‌மும் வ‌ந்து விட்டால் ஒரே க‌ல்லில் இர‌ண்டு மாங்காய்க‌ள் போல் ஈருல‌க‌ பாக்கிய‌ங்க‌ள் இறைவ‌ன் நாட்ட‌த்தில் அவ‌ர்க‌ளை நாடிச்செல்லும்.

அப்துல்மாலிக் said...

நான் படிக்கும்போது சில பேர் கல்லூரி முதல் வருடத்துலேயே மணமுடிக்கப்பட்டு காலேஜ் வந்தாங்க..

கல்வியில் நிச்சயம் மாற்றம் வேண்டும் என்ற தேவையின் அவசியத்தை வலியுறுத்தியது அருமை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு