Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்.... 21

அதிரைநிருபர் பதிப்பகம் | February 01, 2012 | , , , , ,


தனக்கு மகன் பிறந்திருக்கும் செய்தி கேட்டு ஒரு தாய் அடையும் மகிழ்ச்சியைவிட கற்றவர் சபையினில் தனது மகனை சான்றோன் என்று சொல்லப்படும்போது அடையும் மகிழ்ச்சியானது அதிகம் என்பதாக திருக்குறளின் மக்கட்பேறு அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுகிறார். உண்மையில் இதற்கு நிகரான மகிழ்ச்சியை இமாம் ஷாஃபி பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் என் மகள் இரு முதல் பரிசுகள் பெற்ற செய்திகேட்டு நாங்கள் மகிழ்ந்தோம். அல்ஹம்துலில்லாஹ்! (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!)


தன்னடக்கம் கருதி சிலவிசயங்களை வெளிப்படுத்தாமலிருக்க விரும்பினாலும் சிலநேரங்களில் யாரிடமாவது பகிர்ந்து கொண்டாக வேண்டும் என்பதான சந்தர்ப்பங்கள் தவிர்க்க முடியாதவை. அதிரை நிருபர் வலைப்பூவில் வந்துள்ள இன்னொரு பதிவில் "காதிர் முகைதீன் பள்ளி- பேசும் படம்" பள்ளியின் நுழைவாயிலில் வரவேற்கும் அறிவிப்புப் பலகை, மீண்டும் என்னை கடந்த காலத்திற்கே அழைத்துச் சென்றது என்றால் மிகையில்லை. ஆம்! அதில், 1990-91 ஆம் கல்வியாண்டில் நடந்த +2 தேர்வில் அடியேன் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்வு பெற்றதற்கான அங்கீகாரம்! மாஷா அல்லாஹ்!

இன்னொரு பெயரும் அப்பலகையில் இடம்பெற்றிருக்கிறது. SSLC மற்றும் +2 தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் பெயர் அது! ஆம்! பேச்சாளர், கவிஞர் என்று நா(ம்)னறிந்து வைத்துள்ள தம்பி A.ஷஃபாத் அஹமது! வாழ்த்துகள் தம்பி! இதுபோல், யாமறியா பலரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.அவர்களையும் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துவோம்!

முன்னாள் ஜனாதிபதி A.P.J.அப்துல்கலாம் அவர்கள் மாணவர்களைக் கனவு காணச்சொன்னது குறித்து, பலரும் கேலி செய்வதுண்டு. சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையே கனவு என்று சொன்னார். சமீபத்தில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் "நான் சொன்ன கனவு தூக்கத்தில் வரும் கனவல்ல; தூங்கவிடாமல் செய்யும் கனவு" என்று அழகிய விளக்கம் கொடுத்தார்.

நடுத்தெரு ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் நான்காம்/ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது என நினைக்கிறேன். காதிர் முஹைதீன் பள்ளி ஆண்டு விழா முடிவில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் தலைகேட்டான் தம்பி அல்லது திப்பு சுல்தான் நாடகங்கள் வெகுபிரபலம் (நாடக ஆசிரியர். மதிப்பிற்குரிய S.K.M.ஹாஜா முஹைதீன் அவர்கள்), அவ்வருடம் திப்பு சுல்தான்

அதில், பத்தாம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு A.K. முஹம்மது ஷாஃபீ (ஆஸ்பத்திரிதெரு /தற்போதைய AYDA தலைவர் நண்பன் ஷம்சுதீனின் காக்கா!) என்ற பெயரை திரும்ப திரும்ப அழைத்து பரிசுகள் கொடுத்தார்கள். அப்போது இரண்டு பரிசு பெற்றாலே பெரும்பேராகக் கருதப்படும் காலம் அது! தொடர்ச்சியாக ஷாஃபீ காக்கா 4-5 பரிசுகள் பெற்றபோது, பரிசளித்துக்கொண்டிருந்த சிறப்பு விருந்தினர் "என்ன சார்! எல்லா பரிசுகளையும் இவருக்கே கொடுத்துவிடலாமா?" என்று செல்லமாகக் கேலி செய்தது மைக்கில் ஒலித்தது. அப்போது மனதுக்குள் நாமும் இதுபோல் நிறைய பரிசுகளைப் பெறவேண்டும் என்ற மனதுக்குள் எண்ணியதையும் நினைவுகூற விரும்புகிறேன். சுப்ஹானல்லாஹ்!

கல்கண்டு வார இதழில் என்று நினைக்கிறேன். பல தன்னம்பிக்கை கட்டுரைகளைத் தொகுத்து "எண்ணம்போல் வாழ்வு" என்று நூலொன்றை ஒருவர் எழுதியிருந்தார். (நூலாசிரியர் அப்துல் ரஹீம் என்று நினைவு). எண்ணங்களே நம்மை பட்டை தீட்டுகின்றன என்பதாக விளக்கம் கட்டுரைகளின் தொகுப்பு. இதைத்தான் இஸ்லாமும் 'இன்னமல் அஃமால் பிநிய்யத்" - நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் அளவிடப்படுகின்றன" என்று சொல்கிறதோ?

ஆதலினால், மாணவர்களே! தூய எண்ணங்களுடன் சாதிக்கும் கனவுகளை கண்டு,ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் பாக்கியத்தை நீங்களும் உங்கள் பெற்றோருக்கு வழங்குங்கள்!

-N.ஜமாலுதீன் (அதிரைக்காரன்)

21 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகள் சான்றோர்
கையில் பரிசுபெற கண்டதகப்பன்" (என் குர‌ல்)

என‌ உன் உற்சாக‌மிகு இக்க‌ட்டுரையை க‌ண்ட‌தும் மேற்க‌ண்ட‌ வ‌ரிக‌ளை உண்டாக்க‌த்தோன்றிய‌து ஜமாலுத்தீன்...

இள‌ம் வ‌ய‌தில் த‌ன்னை ஈன்றெடுத்த‌ பெற்றோர்க‌ளை ச‌ந்தோச‌ப்ப‌டுத்தும் பிள்ளைக‌ள் அவ‌ர்க‌ள் முதுமைய‌டைந்து வீட்டின் ஒரு மூலையில் கிட‌த்த‌ப்ப‌ட்டு கிட‌க்கும் பொழுதும் த‌ன் ச‌டைவ‌ற்ற‌ ப‌ணிவிடை மூல‌ம் ச‌ந்தோச‌ப்ப‌டுத்த‌ க‌ட‌மைப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

ப‌ரிசு வாங்கி உன் பிள்ளைக்கும், ம‌ற்ற‌ பிள்ளைக‌ளுக்கும் அதை அழ‌குட‌ன் இங்கு விள‌க்கிய‌ உன‌க்கும் என் பாராட்டுக்க‌ளும், வாழ்த்துக்க‌ளும், து'ஆவும் சேர‌ட்டுமாக‌.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

தன் சேட்டையுடன் படிப்பிலும் நல்ல கவனம் செலுத்தி இரு மாடுகள் ஒரு சேர பூட்டப்பட்ட மாட்டு வண்டி போல் சீராக கொண்டு செல்லப்பட்ட உன் +1, +2 வகுப்பு கால நினைவுகள் இங்கு மலரச்செய்யப்படுகின்றன.

சேக்கனா M. நிஜாம் said...

சகோ. ஜமாலுதீன் மற்றும் நண்பர் யாசிர் அவர்கள், கல்வியில் சிறந்து நல்ல மதிப்பெண்களைப் பெற்று 1990-91 மற்றும் 1995-96 ஆம் ஆண்டு களில் நமதூர் காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளியில் +2 வகுப்பில் பள்ளி முதல் மாணவனாக வெற்றி பெற்று, அப்பள்ளியின் சார்பாக, RECORDS’ ல் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இளைய தலைமுறையே ! நீங்களும் சகோ. ஜமாலுதீன், நண்பர் யாசிர் இவர்களைப் போல நன்கு கல்வி கற்று, நல்ல மதிப்பெண்கள் பெற்று RECORDS’ ல் இடம் பெறுங்கள். இது தங்களுக்கும், தங்களின் பெற்றோருக்கும் மற்றும் பள்ளிக்கும் வரலாற்றுப் பெருமையே !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ. ஜமாலுதீன், மாணவ செல்வங்களுக்கு ஊக்கம் தரும் பதிவு.

இது போன்று உண்மை உதாரணங்களை எடுத்துக்காட்டுவதன் மூலம் நாமும் இது போல் வரவேண்டும் என்ற எண்ணம் குறைந்தபட்சம் படிப்பிலும், விளையாட்டிலும் சாதிக்க துடிக்கும் மாணவ மாணவிகளுக்கு நிச்சயம் வரும் என்பதில் சந்தேகமில்லை.

உவமையுடன் மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வதற்கு பதில் இது போன்று கல்வி தொடர்பாக உண்மை சாதனை நிகழ்வுகளை ஞாபகமூட்டி ஊக்கபடுத்துவது நல்ல பலன் தரும் என்ரு நம்புவோம்.

Yasir said...

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றின் தோன்றாமை நன்று

இதனை ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையின் தாரக மந்திரமாக எடுத்துக்கொண்டு...அல்லாஹ் நம்மை சும்மா வீணாக படைக்கவில்லை..எதோ ஒரு குறிக்கோளுடன் தான் படைத்து இருகின்றான் என்பதை மனதில் திருத்தி வாழ்வில் உங்களுக்கு திருப்தி அளிக்க கூடிய செயலை சிறப்பாக செய்யவேண்டும்....சிறந்த கல்வி உங்களுக்கு சாவியாக இருந்து வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஏற்படும் சவால் என்ற பூட்டுக்களை திறப்பதற்க்கு உறுதுணை புரியும்...மார்க்க & உலக கல்வி இரண்டிலும் சிறந்து விளங்கி ஒழுக்கமாக வாழ்ந்து & பெற்றோருக்கும் சமுதாயத்திற்க்கும் நல்ல பெயர் எடுத்துக்கொடுங்கள்....


சகோ.ஜமாலுதீன் அவர்களின் மகிழ்ச்சியை எங்களால் உணரமுடிகிறது...
சகோ.சேக்கனா நிஜாம்...தங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தான் பெற்ற இன்பம் போல் எல்லாரும் பெறச்செய்ய வேண்டுமென்பதற்கான விழிப்புணர்வுப் பதிவு.
பிள்ளைகளின் சாதனை தொடரட்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அனுபவங்கள் சொல்லும் அசாத்திய உண்மை இது !

பள்ளி நாட்களில் முதலிடப் பட்டியல் பலகையை பார்த்து கமெண்ட் அடிக்கும்போது அதன் தாக்கம் தெரியவில்லை, நம் பிள்ளைளும் அந்தப் பட்டியலில் இடம் பெறவேண்டும் என்ற ஏக்கம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

நம் பிள்ளைகளின் வெற்றி அதனைப் பெறும் போது கிட்டும் மகிழ்ச்சி எல்லக்கோட்டை தாண்டி விடுகிறது ! (அல்ஹம்துலில்லாஹ்)

அவர்கள் வெற்றியாளர்களாக நம் / பிறர் முன் வந்து நிற்கும்போது அந்தக் குழந்தைகளின் சந்தோஷமும் அவர்களின் முகத்தில் மிளிரும் பொலிவும் காணும்போதே ஈன்ற கடனுக்கு இது ஒன்று போதுமே என்று நம் உள்ளம் பூரிப்படைய வைக்கும்.

மாஷா அல்லாஹ் !

பள்ளியில் சொல்லித் தராத பாடம் அனுபவப் பாடங்கள் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகள் சான்றோர்
கையில் பரிசுபெற கண்டதகப்பன்" (என் குர‌ல்)//

MSM(n):

சமீபத்தில் "கருணாலொள்ளுவர்" என்ற ஒருவரைப் பற்றி சகோதரர் முஹம்மது ஆஷிக்கின் பதிவு ஒன்றில் "தினமணி" பத்திரிக்கையை விமர்சனமும் விளக்கமும் படித்தேன் அற்புதமான விமர்சனம் அதோடு தகுந்த காட்டுகள் கொடுத்திருந்தார் "ஏகப்பட்ட உருவங்கள் கொடுக்கப்பட்ட" அந்த வள்ளவரே எழுந்து வந்து சொன்னாலும் நம்ப மாட்டாய்ங்க என்று...

ஒரு சொட்டு !

இவ்வ்வ்வ்ளோ சூப்பரான குரல்(வளம்) உங்களுக்கு!

முகப்பில் இட்டிருந்த குறள் தவிர்க்க காரணம் "முன்னுரிமை சொல்லப்பட்ட குறளுக்கு அல்ல - பதிவின் குரலுக்குத்தான், அதன் நோக்கம் மேலோங்கி இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணமே அதோடு இவ்வாறான ஊக்கம் ஒவ்வொரு பெற்றோரின் கனவாக இருப்பதே !

இதனை மாணவச் செல்வங்கள் நன்கறிந்து பெருமை சேர்க்க வேண்டும் பெற்றோர்க்கும் களம் கொடுக்கும் கல்விச்சாலைக்கும்.. (இன்ஷா அல்லாஹ்..)

Unknown said...

முதலில் வெற்றி வாகை சூடிய அந்த செல்ல குழந்தைகளுக்கு பாராட்டுகளும் துஆக்களும்,

தன் திறமை இன்னதுதான் என்று தமக்கே தெரியாமல் பார்வையாளர்களுக்கு இது மிகையானதாக தெரியும்போது கரவொலியும் பாராட்டும் அவ்வளவு பெரிதாய் குழந்தைகளுக்கு தெரியாது, எனினும் அவர்களின் பெற்றோருக்கு இது ஆனந்த தருனம்தான், மெச்சூரிட்டியான மனநிலையில் அவர்கள் பார்க்கும் இதுபோன்ற வெற்றிகளை நெகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த கொண்டாட்டத்தில், ஒரு பொறாமையுடன் என்னையும் சேர்த்துக் கொள்கிறேன்.

காரனம் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லையே என்ற ஏக்கம்தான் ஆனால் ஜமாலுதீன் (உன்)உங்கள் குழந்தைகள் மட்டுமல்ல பரிசில்கள் பெற்ற
குழந்தைகளுக்கும்,அவர்களின் பெற்றோர்களுக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களும் துஆக்களும்.

அதேபோல உங்களுடைய பெயர் பதித்த பள்ளிக்கூட பலகை அதேபோல் வரும் காலங்களில் உங்கள் குழந்தைகளின் பெயரும் இடம் பெற பிரார்த்திக்கிறேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பிள்ளைகளுக்கு பயத்துடன் கூடிய ஒரு உத்வேகமும், உந்து சக்தியும் தானே வருவதற்கு விளையாட்டு மைதானத்தில் ஹாஜி முஹம்மது சார் போன்றவர்கள் நடுவர்களாக நிறுத்தப்பட வேண்டும். பிறகு பாருங்கள் நம்ம புள்ளையலுவொலெ 'என்னா ஓட்டம்?'

Anonymous said...

இப்போ உள்ள பிள்ளைகல்லாம் நம்மளை விட அதிகமாக அறிவுள்ள பிள்ளைகளாகவும்,புத்தியுள்ள பிள்ளைகளாகவும்,விளையாட்டில் ஆர்வமுள்ள பிள்ளைகளாகவும் சிறந்து விளங்குகின்றனர்.

அந்த காலத்தில் கணினி பாடம் என்பது மிக குறைவு இந்த காலத்தில் உள்ள பிள்ளைகள் கணினியிலும்,அறிவியலிலும் சிறந்து விளங்குகின்றனர். நாம் நம் பிள்ளைகளுக்கு படிப்பிலும்,விளையாட்டிலும் ஆர்வத்தையும்,ஊக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்படுத்தும் போது தான் நம் பிள்ளைகள் நன்றாக கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

ZAKIR HUSSAIN said...

தன்னடக்கம் கருதி எழுத யோசிப்பது நல்லதல்ல. நீங்களும் உங்கள் பிள்ளையும் சாதித்ததைத்தானே சொல்கிறீர்கள். அது மற்றவர்களுக்கு உதவியாகத்தான் இருக்கும்.

Wish You All the best for your future achievements...[ please convey my wish to your daughter]

அதிரைக்காரன் said...

நாம் படித்த காலங்களில் நமக்குமுன் படிப்பை முடித்துச் சென்ற சீனியர்கள் "இந்தக்காலத்துப் பசங்க பஞ்சு மாதிரி பற்றிக் கொள்கிறார்கள்" என்பார்கள். இன்றைய 4G குழந்தைகள் நம்மைவிட வேகமாகச் செல்வதைப் பார்க்கும் போது சிலசமயம் மலைப்பாகத்தான் உள்ளது!

என்னைப் பொருத்தவரை எல்லாக் குழந்தைகளுமே திறமையானவர்களே. அவர்களின் ஆர்வத்தையறிந்து,அதன் சாதக/பாதகங்களை தகுந்தமுறையில் விளக்கிச் சொன்னால் எளிதில் புரிந்து கொள்கின்றனர். மாணாக்கர்களின் திறமையறிந்து ஊக்குவிக்கும் ஆசிரியர்களும், மாணவப்பருவத்தில் குடும்ப பாரங்களைச் சுமத்தாத பெற்றோர்களும் அமைந்தாலே தங்கள் பிள்ளைகளை ஏதேனுமொரு துறையில் சாதனையாளராகக் காணலாம்.அவ்வகையில் மேற்சொன்ன இரண்டும் எனக்கு வாய்த்தது. அதை எம் பிள்ளைகளுக்கும் வழங்குவேன். (இன்ஷா அல்லாஹ்.)

எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த,வாழ்த்திய சகோதரர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வஸ்ஸலாம்

sabeer.abushahruk said...

ஜமாலுதீன்,

சந்தோஷமாக இருக்கிறது. தாம் சாதிக்கிறோம் என்ற விவரம்கூடத் தெரியாத வயதில் வெற்றி என்பது பிள்ளைகளுக்கு ஒரு-நாள் மகிழ்ச்சிதான். பெற்றோருக்கோ வாழ்நாள் முழுதம் நினைவில் நிற்கும் நிகழ்வு.

மென்மேலும் வெற்றியைக் குவிக்க தங்கள் மகளுக்கு வாழ்த்துகள்

மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதற்காக நன்றியும் வாழ்த்துகளும்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புத் தம்பி ஜமாலுத்தீன்,
அஸ்ஸலாமு அலைக்கும்
எனக்குள் ஒரு குழப்பம்: என்னை ஈர்த்தவைகள் உன்னுடைய சிரித்த முகமா? சிந்தனையாற்றலா? கணிரென்று ஒலிக்கும் வெண்கலக் குரலா?

உன் உதிரத்தின் மலராய்ப் பிறந்துள்ள உன் மகளின் திறனைப் படிக்கும் பொழுது, ஈண்டு என் வாழ்வினையும் பதிவு செய்யத் தூண்டியது;படிப்போர் ஊக்கம் பெற வேண்டியது. தொடக்கப் பள்ளி முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை “வகுப்பில் முதல் மாணவன்” என்ற தகுதியினைத் தக்க வைத்தேன்; ஆனால், பள்ளி இறுதி வகுப்பில் ஒரு தடுமாற்றம். புகுமுக வகுப்பிலும்- பட்டப்படிப்பிலும் “வணிகவியல்” எடுத்துத் தணிக்கையாளராக ஆக வேண்டும் என்ற தணியாத தாகத்தினால், பள்ளி இறுதி வகுப்பில் விருப்பப்பாடம் “அல்ஜிப்ரா” கணிதத்தில் குறைவான் நாட்டமே இருந்ததால் இரண்டாமிடமேப் பெற்றேன். ஆனாலும் அன்று என்னுடன் தொடக்கப்பள்ளி முதல் படித்த வகுப்புத் தோழர்கள் இன்றும் என்னை அழைப்பது “FIRST RANK KALAM" என்று அடைமொழியுடன்! அல்ஹம்துலில்லாஹ். எனது மகளிடம் இதே நிலை இருந்ததால், அவர்களும் LKG முதல் +2 வரை பள்ளியில் (இமாம் ஷாஃபி) முதல் மாணவியாக அவ்விடத்தைத் தக்க வைத்து பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் 1076 மதிப்பெண் மற்றும் ஆங்கிலத்தில் 189 எடுத்து எனக்கும் மன மகிழ்வைத் தந்தார்கள். இருபாலர் கல்லூரியிலும் படிக்க விரும்பாமலும்; வெளியூர்ச் சென்றுக் கல்லூரியில் படிப்பைத் தொடர விரும்பாமலும் தொலை கல்வி தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக்கழகம் வழியாக் பி.ஏ. ஆங்கில இலக்கியத்தில் முதலாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார்கள். (திருமணம் ஆகி விட்டதால் பெயரைக் குறிப்பிடவில்லை) ஜமாலுத்தீன் சொன்னக் குறளின் விளக்கம் என் வாழ்விலும் உண்டானது.

எனது கல்லூரிப் படிப்பில் முதல் இரண்டாண்டுகள் (திருவாரூர் கலைஞர் கல்லூரி) வணிகவியலில் பலப் போட்டிகளில் வென்றும்; அங்கும் FIRST RANK KALAM என்ற பட்டத்துடன் “கவியன்பன்” என்ற பட்டமும் கிடைக்கப் பெற்றவனாய் இருந்தும், இறுதி ஆண்டில் என் கவனம் சிதறி விட்டது!

காரணங்கள்:
1) அளவுக்கு மீறிய மார்க்க ஈடுபாடு (அதனால் வகுப்பைப் புறக்கணிக்கும் அளவுக்கு “மூளைச்சலவை”ச் செய்யப்பட்டவனாகி விட்டேன்
2)கல்லூரியின் மேல் இருந்த கவனம், எங்கள் வாப்பா அவர்கள் நடத்தி வந்த (திருவாரூரில்) துணி வணிகத்தின் மீது முழு நேர ஈடுபாடு

பின்னர் வறுமை நிலை எட்டியும், விடாப்பிடியாய் பட்டம் படித்து முடித்தேன் (எனது இறுதி வெற்றியின் எல்லாவற்றிற்கும் முழு ஒத்துழைப்பாக இருந்தவன் என் ஆருயிர் நண்பன் முஹம்மத் தமீம் (தலைத்தனயன் -அமெரிக்காவில் இருக்கும் அவனைப் பற்றித் “தோழர்கள்” பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றேன்)

பின்னர் அனுபவம் கற்றுத் தந்த வாய்பாடு; சமன்பாடு

இறைநம்பிக்கை+ தன்னம்பிக்கை= வெற்றி

அதிரைக்காரன் said...

சபீர் காக்கா,

ஒவ்வொரு குழந்தையும் அவர்களால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு சாதனை படைத்தாலே போதும் என்ற மனநிலையில் உள்ளவன் நான். எனினும், அவர்களது சுயமுயற்சியையும் ஆர்வத்தையும் ஊக்குவிக்கவும் தவறுவதில்லை.

ஒருபக்கம் சிறுசிறு வெற்றிகள் மகிழ்ச்சியாக இருந்தாலும்,இன்னொருபக்கம் அதுவே,குழந்தைகளுக்கு அழுத்தமாகி விடுமோ என்ற கவலையும் இல்லாமல் இல்லை.

நீங்களும் பெரிதுவந்த தந்தை என்று சமீபத்தில் சொன்னதாக நினைவு. நாம் பெற்ற வெற்றிகளைவிட பிள்ளைகளின் வெற்றிகளில் அது மிகச்சிறியதாக இருந்தாலும் இரட்டிப்பு மகிழ்ச்சி என்னவோ உண்மையே.

அபுல்கலாம் காக்கா,
சாதாரணமாக தனியாக அழைத்து என்னைப் பாராட்டினாலே வெட்கப்படும் ஆசாமி நான். நீங்களோ பொதுவில் இத்துனை வர்ணனை!என்னைப்பற்றிய உங்களது நல்லெண்ண வார்த்தைகளைப் பார்த்துவிட்டு யாரேனும் "அவன் பெரிய இவனோ" என்று பில்டப் செய்யாமலிருக்கனுமே என்ற கவலைவேறு தொற்றிக்கொண்டுள்ளது. :)

(நீங்களிட்ட பின்னூட்டத்தின் முதலிரு வரிகளைப் படித்துவிட்டு இதுவரை 4-5 தடவை கண்ணாடியைப் பார்த்துவிட்டேன் :)கண்ணாடி சரியில்லை காக்கா! :))

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அட நம்ம ஆளு! ஜாமாலு! என்னடா மாப்புள ஈன்றபொழுதினும் நானும் அல்லவா உந்திறமையைபார்த்துமகிழ்ந்திருக்கிறேன்.மகிழ்கிறேன்.மகிழ்வேன் அது போல்தானடா உன் மகவின் மகத்தான சாதனையையும். எல்லாபுகழும் அல்லாஹுக்கே! உன் தரமிக்க படைப்பு இங்கே தொடர்வதில் பெரும் உவகை இது தொடரவேண்டும் என்பது என் அவா!.

அதிரைக்காரன் said...

வ அலைக்கும் ஸலாம் தாஸ்தாகீர்! (நீ மட்டும் என்பெயருக்கு ஒரு கால் கூடுதலாகப் போடலாமாக்கும்!? :)

அப்துல்மாலிக் said...

ஜமாலுதீன் - தன்னுடைய தனிப்பட்ட திறமையால் பள்ளியின் முதல் ஆளாகவந்து ஆசிரியர்களின் வாயடைத்ததை மறக்க இயலுமா?

இது போல் தாங்களிடையே எத்தனையோ பேர் வெற்றியாளர்களாக வலம்வந்துக்கிட்டிருக்காங்க, அவங்களோட வரலாறுகள் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்குட்டும்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அதிரையின் 'ஹுசைன் போல்ட்' என்று சொல்லுமளவுக்கு நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியில் நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் முதலாவது வந்து கல்லூரியின் 'அதிவேக ஓட்ட வீரன்' என்ற பட்டத்தை தட்டிச்சென்றவன் தான் மர்ஹூம் அப்துல் சமது வாத்தியார் அவர்களின் மகனும், நண்பனுமான அப்துல் மாலிக். வருடம் எனக்கு ஞாபகமில்லை. மாலிக் இங்கு நீயே குறிப்பிடு.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு