Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மாயன் இன்னும் சாகவில்லை!! 18

ZAKIR HUSSAIN | February 10, 2013 | , ,


கடந்த வருடக் கடைசியில் உலகம் அழிந்து விடும் என்று கடன் வாங்கியவர்களுக்கும், கல்யாணம் செய்ய திட்டமிட்டு தள்ளிப் போட்டவர்களுக்கும், வீட்டில் செருப்படி வாங்கிக் கொண்டு வெளியில் வெள்ளையும் சொல்லையுமா திரிந்து 'இன்னும் எத்தனை நாளைக்கு' என்று கெத்தாக திரிந்த வெட்டிகளுக்கும். நகையை மற்றவர்களிடம் இரவல் வாங்கும்போதே 'கொடுக்க தேவையிருக்காது" என்று கலர் கலரான கனவில் மிதந்தவர்களுக்கும் இது சமர்ப்பணம்.

டிசம்பர் 21 , 2012 க்கு முன் , பின் என்று முட்டாள்தனங்களை வகைப்படுத்த முடியும். எனக்கு வரும் குப்பை இ-மெயில்களில் மாயன் காலண்டரை ஏதோ நான் வாங்க மறந்து விட்டது மாதிரியும், இ-மெயில் இம்சைக்காரர்கள் [அதான் ஒரே ஸ்பாம் இமெயிலில் மட்டும் தொடர்பு கொள்ளும் அல்லது கொல்லும் நண்பர்கள்] தொடர்ந்து அனுப்பிக் கொண்டெ இருந்தார்கள்.?. இமெயில் இலவசம் என்பதால் தான். ஒரு இமெயிலுக்கு ஒரு ரூபாய் என்று வைத்தால் குறைந்தது இந்த ஸ்பாம் இமெயில் குறையும் ஒரு சமயம் இந்த மாயன் காலண்டர் பிள்ளைகள் படம் , இயற்கை காட்சிகள், நடிகர்கள் படம் போட்டு பிரின்ட் செய்திருந்தார்கள் இவர்கள் எனக்காக காசு கொடுத்து வாங்கி கூட அனுப்பியிருந்தாலும் ஆச்சர்யமில்லை.

முதலில் இந்த மாயன் யார் என்று தெரிந்து கொள்வோம். இவர் யாரோ நம் ஊர் பக்கத்தில் வேலியடைக்கும், மற்றும் குளம் தூர்வாரும் ஒட்ட ஜனங்களை சார்ந்த மனிதர் அல்ல. மற்றபடி ஆஸ்ட்ரோபிசிக்ஸ் படித்த விஞ்ஞானியும் அல்ல. பிறகு ஏன் இப்படி இந்த உலகத்தில் இப்படி ஒரு விளம்பரம்??.   குரங்குக்கு சிரங்கு வந்தால் என்ன செய்யும்... அதே சொரியல்தான் இதுவும்.

மாயன் என்பதை விட 'மாயா' என்பதே சரி , இது ஒரு சிந்து சமவெளி நாகரீகம் மாதிரி இவர்களின் [கொலம்பியாவின் மூத்த குடி] எழுதிய காலண்டர் , எண்கள், மொழி எல்லாவற்றையும் குறிக்கும்.இதை ஏன் நான் வேலை மெனக்கெட்டு எழுதுகிறேன் என்றால் நீங்கள் 'ச்சாய்சில்' விடுகிற கேள்வியல்ல.

மாயன் காலண்டர் எல்லாம் வெளியிடும் அளவுக்கு சென்னையில்,ஆன்டர்சன் தெருவிலோ, மலையபெருமாலள் தெருவிலோ பிரின்டிங் கம்பெனி ஏதும் நடத்தவில்லை. அதே சமயம் இப்படி 2012 ல் அவருடைய காலண்டரை எடுத்துக்கொண்டு இப்படி "நவீன" மடையர்கள் கும்மியடிப்பார்கள் என்றும் எதிர்பார்த்தும் காலண்டர் எழுதவில்லை. 

இதுவெல்லாம் தெரிந்தும் நம் கம்ப்யூட்டர் படித்த மக்கள் ஏதோ வருகின்ற மாயா காலண்டர் உலகம் அழியப்போகிற சமாச்சாரத்தை ஃபார்வேர்டு செய்யாவிட்டால் மாயனிடம் எப்படி பதில் சொல்வது என்பதுபோல் எல்லோருக்கும் மெனக்கட்டு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இப்படி மூட நம்பிக்கையை அவர்கள் உலகத்தில் பதிந்தார்களா என்பது வேறு விசயம். ஆனால் இவர்கள் சொன்ன காலண்டர் என்பது எப்படியிருந்தது என்றால் ஏதோ படம் போட்டு , நல்ல நேரம் கெட்ட நேரம் எழுதி, எந்த ஊர் கோயில் திருவிழா எல்லாம் பிரின்டில் இருந்ததா என்றால் அதுவெல்லாம் இல்லை.

தமிழ்படங்களில் பழசை சிந்திக்கும்போது வட்டம் வட்டமாக வருமே அது மாதிரி வந்த கோட்டில் கடைசியில் ஒரு தேதியை கணக்கிட்டு அதுதான் உலக அழிவுக்காலம் என்று சொன்னால்...  “கேப்பை கேனயன் போன்ற நல்ல தமிழ் எல்லாம் எப்படி மனதுக்குள் தோன்றவில்லை. இருந்தாலும் இந்த மாயன் அல்லது மாயன்கள் இப்போது இல்லை என்று சொன்னாலும் , என்னை பொருத்தவரை இன்னும் இருக்கிறார்கள். மூட நம்பிக்கையை முழுதாக ஒழிக்காமல் கடைபிடிப்பவர்கள் எல்லாம் மாயன்கள் தான்.

நிறைய பேர் இப்போது ஒரு வேலையும் செய்யாமல் டைரக்டா கல்லா கட்டுவது எப்படி என்பதில் கவனம் செலுத்துகிறார்கள், அதனால் எந்த அளவுக்கு மூட நம்பிக்கை வளர்கிறது என்றால் மெளலூது ஓதிய ஆடியோ கேசட்டை கல்லாவில்  போட்டு வைத்திருந்த முதலாளிகளை பார்த்திருக்கிறேன். வலது கால் / வலது கை பழக்கம் மட்டுமே ராசியானது. பொன் கிடைக்காவிட்டாலும் புதன் கிடைத்தது என்று பிதற்றும் மக்கள். வீடு கட்ட கல்லும் மண்ணும் வாங்குவதில் கவனம் செலுத்துவதை விட நிலைக்கதவு வைக்கும்போது சந்தனத்தை ஏத்தினாப்லெ தடவுங்க அப்பதான் ஏத்தம் என்று சொல்லும் பெரியவர்கள்.

கோழி ரத்தம் , ஆட்டு ரத்தம் ஊற்றி செங்கல் வைக்கும் பழக்கம். [ஆனால் இப்படி செய்பவர்கள் 30 வருடமாக வேலை பார்க்கும் வளைகுடா கம்பெனிகள், அபார்ட்மென்ட்டுகள் இப்படி எல்லாம் கட்டாமலும் ஸ்ட்ராங்காகதானே இருக்கிறது என்று ஊருக்கு வந்தவுடன் தனது அறிவுக்கு எட்டாமல்  எகத்தாளம் செய்வதுதான் புரியவில்லை.

வீட்டு வாசலின் நிலைக்கதவில் குதிரை யூஸ் & த்ரோ செய்த லாடம் அடிப்பது.

ரசத்திலும் , சர்பத்திலும் போட வேண்டிய எலுமிச்சையை பந்தலில் கட்டுவது.

இவை எல்லாம் நவீன மாயன்களின் சடங்குகள்.

அந்த மெளலானா கொடுத்த கயிறு , இந்த மெளலான கொடுத்த கயிறு என்று ஒரு ஆட்டுக்குட்டியை கட்டிப்போடும் அளவுக்கு கயிறு கட்டி அலையும் ஆட்களும் மெளலானாவுக்கு பிரச்சினையிருக்கனுமே ஏன் அவர் கயிறு கட்டவில்லை என்று யோசிப்பதில்லை.  

இப்போதைய புதிய ட்ரண்ட் வருமானம் இல்லையா கட்டு ஒரு கப்ருஸ்தான்காசு பார்க்க இதை விட நல்ல சூழ்நிலை இல்லை என்று ஈமானையும் அந்த குழியிலேயே வைத்து புதைத்து விட்டார்கள்.

ஏன் இந்த அவல நிலை. உழைக்க மறுத்ததுதான் காரணம்... இப்போது சொல்லுங்கள் மாயன் இன்னும் சாகவில்லைதானே.

நாம் மற்றவர்களை லாரிக்கு கீழே எலுமிச்சை கட்ரான்யா, பூனை குறுக்கே போனால் தண்ணீர் குடித்து விட்டு போனால் நல்லது என்று பூனைக்கு கொடுக்காமல் தண்ணீர் குடிக்கிறான் என்று கிண்டல் அடிக்கிறோம்.

நம்முடைய நிலை என்ன... மாயனை விட கேவலமானது. அவிங்களாவது காலண்டர் எழுதிதான் கவுத்தானுங்க. நாம் ஒவ்வொரு நாளும் தேதி எழுதி கவுக்கிறோம். இந்த லட்சனத்தில் 1434 வருடமாக நாம் நல்ல வழியை பின்பற்றி நடக்கிறோம் என்ற உண்மை வேறு.

தர்காக்களில் தரும் நார்சா, பூசிய சந்தனத்தை பொட்டளம் கட்டி காசு பார்க்கும் கூட்டம் எல்லாருமே மாயனின் சந்ததியினர்தான்.

வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு சம்பாதித்து வருபவனுக்கு அவன் சம்பாதித்த காசை எப்படி 'தெய்வக்குத்தம்" இல்லாமல் செலவழிப்பது என்று ஒரு குரூப் அட்வைஸ் அளப்பரை கொடுப்பார்கள். சம்பாதிக்க தெரிந்தவனுக்கு செலவு செய்ய தெரியாமல் இப்படி நேந்து விட்ட கோழி மாதிரி முழித்தால்... அவனை என்ன சொல்வது.

மனித இனம் தோன்றியதிலிருந்து அவன் அவன் தன் பங்குக்கு ஏதாவது ஒரு மூட நம்பிக்கையை வளர்த்து கொண்டோ அல்லது உலகில் பதிந்து விட்டுதான் சென்றிருக்கிறான். இந்தியா நவீன விஞ்ஞானத்தில் வளர்ந்து விட்டது என்று வீராப்பு பேசினாலும் இன்னும் மனிதர்கள் மண்டையில் தேங்காய் உடைப்பதும், பிள்ளைகளைப் போட்டு அதன் மீது ஏறி ஓட்டம் எடுத்து அருள் பாலிப்பதும். பிள்ளை இல்லை என்பதற்காக மினியேட்சர் தொட்டி கட்டி தொங்க விடுவதும். மாட்டு மூத்திரத்தை பாட்டில் போட்டு 'புனித கோமியம்" என்று கல்லா கட்டுவதும் [மாடு ராயல்ட்டி எல்லாம் கேட்காது].

இதற்கு மதம் எல்லாம் தேவையில்லை. இப்படி எழுதியதால் இது ஏதோ இஸ்லாமியர்களிடம் இப்படி எல்லாம் இல்லை என்று சொல்லவில்லை [அப்பாடா... இதுவரை  விஸ்வரூபம் படம் வெளிவர இஸ்லாமியர்களை திட்டி தீர்த்த கமென்ட்டர்கள் சந்தோசம் அடைந்தால் சரி]. இது போன்ற மூட நம்பிக்கைகள் எல்லாரிடமும் இருக்கிறது.

அதனால்தான் சொல்கிறேன்.... மாயன் இன்னும் சாகவில்லை. திடீர் என புதிதாக தோன்றப்போகும் அள்ளக்கை அது 2012 இல்லேப்பா... 2022 என்று, மாயன் காலண்டர் பிரின்டிங் மிஸ்டேக்... புரூஃப் பாக்காமெ வெளியிட்டது என்று சொன்னாலும் சொல்லலாம்.

ZAKIR HUSSAIN

18 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

கண்மூடிப் பழக்கங்களை மண்மூடச் செய்யும் அருமையான ஆக்கம். நடையில் நகைச்சுவைக் கூடுதல் சிறப்பு.

Adirai pasanga😎 said...


"மாயன் இன்னும் சாகவில்லை"-

அஸ்ஸலாமு அலைக்கும்

ஏக இறைவனுக்கு இணைவைத்தலையும் அது சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு உடன்பாடான விஸயங்களுக்கு துனைபோவதுமே மாயன் வகையறாக்களின் வேலை என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

சர்வ வல்லமையுள்ள ஓரிறையை அவன் அருளிய அருள் தூதரின் வழிமுறையை தம் லட்சியமாக பின் பற்றி வாழக்கூடிய அவனின் அடியார்களை மட்டுமே மாயன் வகையறாக்கள் நெருங்க முடியாது என்பது நிதர்சமான உண்மை.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//30 வருடமாக வேலை பார்க்கும் வளைகுடா கம்பெனிகள், அபார்ட்மென்ட்டுகள் இப்படி எல்லாம் கட்டாமலும் ஸ்ட்ராங்காகதானே இருக்கிறது என்று ஊருக்கு வந்தவுடன் தனது அறிவுக்கு எட்டாமல் எகத்தாளம் செய்வது//

சூப்பரு.
மாயன் ஆட்களுக்கு மரண அடி!
--------------------------------------------------------------------------------------------------

ரபியுள் அவ்வல் 28 ஹிஜ்ரி 1434

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர்!

இவ்வளவு நாள் இடைவெளிவிட்டதற்கு இரட்டிப்பாக மகிழ்ந்து கை தட்டும் விதத்தில் ஆக்கம் தந்துள்ள உனக்கு ஒரு திருஷ்டி சுத்திப் போடவேண்டும்.

அதற்காக சுண்ணாம்பு தடவிய மூணு பட்டை மிளகாய், கொஞ்சம் உப்பு, அடுத்த வீட்டுக் கூரை,நேற்று வீட்டுக்கு வந்துவிட்டுபோன கொள்ளிக்கண் உடையவளின் காலடி மண் எல்லாம் சேர்த்து ஒரு கந்தல் துணியில் சுத்தி கட்டைக்கண்,குட்டைக்கண்,நெட்டைக்கண், பாத்தவகண் எல்லாக் கண்ணும் அழிஞ்சு போக என்று சொல்லி மூணு சுத்து சுத்தி உனக்கு சுத்திப் போடணும் வாப்பா!

இப்படி சுத்தி அடுப்பில் போட்டதும் பட படவென்று வெடிக்கும். உடனே பாத்தியா புள்ளைக்கு எவ்வளவு பேரோட அவிஞ்சு போன கண்ணு? அதான் இப்படி வெடிக்குது. ( உப்பையும் மிளகாயையும் எரியும் நெருப்பில் போட்டால் வெடிக்கும் என்கிற கெமிஸ்ட்ரி தெரியாத மாயன்கள் மட்டுமல்ல மாயக்காரிகளும் )

இப்னு அப்துல் ரஜாக் said...

மாயாண்டி
பூச்சாண்டி
தர்கா
பூசாரிகளுக்கு
நல்ல அறிவுரை

நன்றி மலேஷிய காக்கா

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நீண்ட நாட்களுக்குப்பின் ஜாஹிர் காக்காவின் நல்லதொரு ஆக்கம்.

"மாயன் காலண்டரில் நடுவுல கொஞ்சம் பக்கத்தெ காணோம்" என்று ஒரு திரைக்கதையே எழுதுமளவுக்கு மக்களிடம் மூட நம்பிக்கைகள் மலிந்து கிடக்கின்றன.

காலண்டரில் (காலை 9 டு 10) நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் என்று குறிக்கிறார்களே இது ஏரியா வைஸா? அல்லது வேர்ல்ட் வைஸா? அது ஒரு குறிப்பிட்ட ஏரியாவிற்காக மட்டுமிருந்தால் அவர்கள் வணங்கும் தெய்வங்களும் ஒரு குறிப்பிட்ட ஏரியாவிற்கு மட்டுமே ஆட்சி அதிகாரம் பெற்றவையா? இது எங்கோ இடிக்கவில்லை மொத்த மூளையையும் கடிக்கிறதே.......

அவர்கள் ஒவ்வொரு இலாக்காவிற்கும் ஒரு கடவுள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மீச்சுவ‌ல் அண்ட‌ர்ஸ்டேன்டிங்க் இருக்குமா? அவ‌ர்க‌ளுக்குள் பெரிய‌ பிர‌ச்சினை வ‌ந்தால் யாரிட‌ம் சென்று ரிப்போர்ட் செய்வார்க‌ள்? அவ‌ர்க‌ள் ஒவ்வொருவ‌ருக்கும் பிள்ளைகுட்டிக‌ள் இருந்தால் அவ‌ர்க‌ளுக்கு என்ன‌,என்ன‌ இலாக்காக்கள் ஒதுக்க‌ப்ப‌டும்? அவ‌ர்க‌ள் க‌லியாண‌,க‌ச்சேரிக‌ள் வெகு விம‌ரிசையாக‌ கொண்டாட‌ப்ப‌டுமா? அத‌ற்கு செல‌வீன‌ங்க‌ள் அர‌சு பொறுப்பேற்குமா? ஒரே ஆள் ப‌ல‌ கைக‌ளில் ப‌ல‌வித‌மான‌ வெப்ப‌ன்ஸ் வைத்திருக்கின்ற‌ன‌வே? அதை வைத்துத்தான் எதிரிக‌ளிட‌மிருந்து அவைக‌ள் த‌ற்காத்துக்கொள்கின்ற‌ன‌வா? ஆளுக்கொரு வ‌கை, வ‌கையான‌ மிருக‌ வாக‌ன‌‍ங்க‌ள் வைத்துள்ள‌ன‌வே? அவைக‌ளை அது எங்கு பார்க் செய்யும்? அவைக‌ள் அங்கு மேய‌ புல்பூண்டுட‌ன், ஆக்ஸிச‌ன் கிடைக்குமா? மேனியில் க‌ண‌மான‌ வைர‌, த‌ங்க‌, ஆப‌ர‌ண‌ங்க‌ளை கிலோக்க‌ண‌க்கில் அணிந்திருக்கின்ற‌ன‌வே? நம்மூரு பொம்புளைய‌ல்வோ போல‌ ந‌கை மேல் அவ்வ‌ள‌வு ஆசையா அதுக‌ளுக்கு? அவைக‌ள் (ஆண்,பெண்) எப்ப‌டி அங்கு ச‌ம்ம‌ந்த‌ம் க‌ல‌ந்துகொள்கின்ற‌ன‌? காஞ்சிபுர‌ம்,ப‌ன‌ராஸ் ப‌ட்டுப்புடவைக‌ளெல்லாம் அவைக‌ளுக்கு அங்கு த‌ருவித்து கொடுத்து ஸ்பான்சர் செய்வது எந்த‌ வியாவாரி?

என‌ ஜாஹிர்காக்காவின் இவ்வாக்க‌ம் ப‌டித்த‌தும் ம‌ன‌தில் வ‌ந்து விழும் கேள்விக்க‌ணைக‌ளாக‌ இருக்கின்ற‌ன‌. இது யாரையும் கேலிகிண்ட‌ல் செய்வ‌த‌ற்காக‌ கேட்க‌ப்ப‌டும் கேள்விக‌ளல்ல‌.....இறைவ‌ன் மானிட‌த்திற்கு அருளியுள்ள‌ ப‌குத்த‌றிவிற்கு விட‌ப்ப‌டும் ச‌வால்......

ZAKIR HUSSAIN said...

To Bro MSM Naina Mohamed,

.//இறைவ‌ன் மானிட‌த்திற்கு அருளியுள்ள‌ ப‌குத்த‌றிவிற்கு விட‌ப்ப‌டும் ச‌வால்......//

- நான் எழுத மறந்த வரிகள்.

இங்கு இன்று சீனப்புத்தாண்டு விடுமுறை. [ sat- Tue holiday for 4 days]

இங்கு சீனர்கள் வியாபாரத்தை காக்கும் கடவுள் என்று வாசலில் சாமுராய் கத்தியுடன் ஒன்றும், வியாபார லாபத்தை பெருக்கும் கடவுள் என்று கையில் லெட்ஜர் புத்தகத்துடன் ஒன்றும் வைத்திருப்பார்கள்.

எனக்கு தெரிந்த சீனனிடம் ஒருமுறை , கம்ப்யூட்டர் எல்லாம் வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டதே இன்னும் ஏன் உங்கள் கடவுளை மேன்வல் அக்கவுன்ட்ஸ் எழுத வைத்து சாவடிக்கிறீர்கள். ஒரு யு.பி.எஸ் / மைன்ட்யுவர் அக்கவுண்ட்ஸ்- டேலி , போன்ற சாஃப்ட் வேர் வாங்கி கொடுத்தால் என்ன என்று கேட்டேன்.

கடுப்பாயிட்டான்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா : அசத்தல் அசத்தல்தான் !

காக்கா சினிமாக் கலாச்சார தீவிரவாதியும் இந்த "மாயா" மாயா என்று ஆடிப்பாடுகிறானாமே...!

//அது 2012 இல்லேப்பா... 2022 என்று, மாயன் காலண்டர் பிரின்டிங் மிஸ்டேக்... புரூஃப் பாக்காமெ வெளியிட்டது என்று சொன்னாலும் சொல்லலாம்.//

கண்டிப்பாக ப்ரூஃப் மிஸ்டேக்தான் காக்கா... வரும் பாருங்க !

sabeer.abushahruk said...

மூடப் பழக்கவழக்கங்களின் மீதான காரசாரமானச் சாடல்.  மாயனின் உலகம் அழிய இருந்த எபிசோடை நம்பாதவர்கள் இஸ்லாமியர் மட்டுமே என்று நினைக்கிறேன்.  ஏனையோர் நம்பினர் என்றே சொல்லவேண்டும். 
 
இதுபோன்ற விழிப்புணர்வு ஆக்கங்கள் அடிக்கடி எழுதப்பட வேண்டும். இத்தகு எண்ணங்களுக்குப் பின்புலமாக நின்று எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். 
 
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, ஜாகிர்.
 

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மூடப்பழக்க,வழக்கங்களால் மூழ்கிக்கிடக்கும் தமிழக கிராமங்களில் மழை குறைந்து போனதால் ஏரி,குளம்,கண்மாய்களெல்லாம் வற்றி கோடைகால வறட்சியில் பிடியில் பரிதவிக்கும் பயிர்க்கும், மனித உயிர்க்கும் வானிலிருந்து நல்ல மழை வேண்டி மக்கள் கழுதைக்கும், கழுதைக்கும் மாலை அணிவித்து திருமணம் செய்து வைக்கின்றனரே அதே மழை அடைமழையாய் கொட்டித்தீர்த்து ஊரே வெள்ளக்காட்டில் மிதக்கும் பொழுது திருமணம் முடித்து வைத்த அக்கழுதைகளுக்கு விவாகரத்து செய்து வைப்பார்களோ???

வட்டம், மாவட்டம் என கட்டம் போட்டு வைத்து கடவுளை கும்பிடும் மக்களே எவ்வித எல்லைக்கோடுகளின்றி UNITED டாய் எல்லாவற்றையும் ஆட்சி செய்து UNIVERSE ஸை பரிபாலிக்கும் அந்த வல்லோன் UNIQUE அல்லாஹ்வை வணங்கிடும் நாள் வெகுவிரைவில் வந்திடட்டுமாக......ஆமீன்.

Unknown said...

Assalamu Alaikkum,

Belief is an ingrained set of thoughts which is very tough to remove from individual's and collective mind of communities(That is the reason for not easy to a non-bliever to become believer(Mu'min)). Beliefs can be positive that uplift the individuals and society or superstituous(negative) that degrade the individuals and society.

Right education will make the self awareness to an individual and society and make them thinking rationally. All human beings are having potential to awakening to the truth with right system of positive beliefs.


B. Ahamed Ameen

Adirai pasanga😎 said...



////அதனால்தான் சொல்கிறேன்.... மாயன் இன்னும் சாகவில்லை. திடீர் என புதிதாக தோன்றப்போகும் அள்ளக்கை அது 2012 இல்லேப்பா... 2022 என்று, மாயன் காலண்டர் பிரின்டிங் மிஸ்டேக்... புரூஃப் பாக்காமெ வெளியிட்டது என்று சொன்னாலும் சொல்லலாம்////

இதனை இவர்க்ள் நம்பினாலும் நம்பலாம்-

'ஏமாறும் பேயன்கள் இருக்கும் வரை
இதுபோன்ற மாயன்கட்கு ஏது குறை'

Unknown said...

Assalamu Alaikkum

In short generic terms

"People are pre programmed by their beliefs
If change is needed to their beliefs
They have to get re programmed in their beliefs
Gradually their behaviour and attitudes
Reflected in their thinking and activities"

- B. Ahamed Ameen

அலாவுதீன்.S. said...

மாயன் - என்னும் மாயமானைத் தேடி மூட நம்பிக்கையில் அலைந்த - அலையும் கூட்டத்திற்கு – நல்ல சவுக்கடி பதிவு!

Yasir said...

மாயன் இந்த ஆர்ட்டிக்கிளை படித்தால் சிரிப்பான் ..நாமே எவ்வளவு தேவல என்று..காக்காவின் இந்த் ஆக்கதைப்படித்துவிட்டு திருந்துக்கப்பா .....காக்கா அந்த சீனன் ஜோக்...ஹாஹாஹா..ரசித்தேன்

Yasir said...

//இறைவ‌ன் மானிட‌த்திற்கு அருளியுள்ள‌ ப‌குத்த‌றிவிற்கு விட‌ப்ப‌டும் ச‌வால்......//
சரியான வரிகள்...சிந்தித்து இருந்தால் இன்று 30 மில்லியன் பேர் தண்ணில குளித்தால் செய்த பாவம் அனைத்தும் போய்விடும் குளித்துகொண்டு இருக்கமாட்டாங்க

ZAKIR HUSSAIN said...

ஊக்கப்படுத்திய சகோதரர்கள் கவியன்பன் , அர அல, அலாவுதீன் MHJ..எல்லோருக்கும் நன்றி.

Bro Ibn Abdwahid, B. Ahamed Ameen, MSM Naina Mohamed நீங்கள் மூவரும் ஆளுக்கு ஒரு ஆக்கம் தரும் அளவுக்கு விசயம் தெரிந்தும் எழுதாமல் இருப்பது தமிழ் வாசகர்களுக்கு த்தான் நஷ்டம். [ உடன் எழுதுங்கள்...உங்களிடமிருந்தும் நாங்கள் படித்துக்கொள்ள பல விசயங்கள் இருக்கிறது]

To bro Ebrahim Ansari, நீங்கள் சொன்னது மாதிரி நிறைய சைன்ஸ் சம்பந்தப்பட்ட விசயங்களை வைத்து பல சாமியார்களும், மெளலானா /ஹஜரத்கள் பல ஆயிரம் கல்லா கட்டிவிட்டார்கள்.

அபு இப்ராஹிம் ..மலேசியாவில் தொப்பி போட்டு படம் பார்த்து நம் மக்கள் கருத்து சொல்லிவிட்டார்கள்.

சபீர்..இதுவெல்லாம் விழிப்புணர்வு அல்ல..இன்னும் இருக்கிறது.


ZAKIR HUSSAIN said...

யாசிர்....உங்கள் தகப்பனாரின் ஜோக்ஸ் கேட்டு [ நிதம் நிதம் ..] வளர்ந்தவர்கள் நானும் என் அண்ணனும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு