Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | February 07, 2013 | ,

தொடர்  : 20
உண்மைக்கு ஒரு சான்று உம்மு ஹராம் பின்த் மில்ஹான்  (ரலி)

உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்கள் மதீனாவின் பனூ நஜ்ஜார் குலத்தைச் சார்ந்த 'உத்தமப் பெண்மணி உம்முசுலைம் (ரலி)' அவர்களின் உடன்பிறந்த சகோதரி ஆவார். மில்ஹான் அவர்களின் பெண்மக்களான இந்த இருவரும் அண்ணல் நபி(ஸல்) அவர்களால் 'நம்பிக்கைக்குரிய சகோதரிகள்' என்ற பெரும் பாராட்டைப் பெறும் அரும்பேறு பெற்றவர்கள் ஆவர்! 

இவர் அண்ணல் நபியின் பாட்டனார் அப்துல் முத்தலிப் உடைய மதீனாவில் வாழ்ந்த  அன்னை சல்மாவின் பேர்த்தியாவார்!  

உம்மு ஹராம் (ரலி) அவர்களின் குடும்பத்தாருடன் பெருமானாருக்கு இயல்பாகவே முக்கியமான நெருக்கம் உண்டாகிடக் காரணம் யாதெனில், உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குப் பால்குடிச் சிற்றன்னை ஆவார்! அதாவது, அண்ணலாரின் அன்னை ஆமினா அவர்களுக்குப் பாலூட்டிய அதே செவிலித் தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர் சிறப்பிற்குரிய ஸஹாபிப் பெண்மணி உம்மு ஹராம் (ரலி) அவர்கள். எனவே, உம்மு ஹராம் (ரலி) அவர்களுடன் நபியவர்களுக்கு தாய்க்குச் சமமான உறவும் உரிமையும் இயல்பாகவே ஒன்றிப் போயிருந்தது. 

அண்ணலின் வாழ்க்கை வெறும் வாழ்வுக்கதையல்ல! மாறாக, அண்ணலாருடன் தொடர்புடைய ஸஹாபிகளுடன் நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவமும் உலக மாந்தருக்கு மாபெரும் எடுத்துக்காட்டும் படிப்பினையுமாகும்! 

வம்பர்களுக்கிடையே போர்க்களத்தில் சளைக்காது போராடும் ஒரு வெற்றிவீரராகத் தோன்றும் அண்ணலார், அதே வேளையில் சாந்தியைப் பெற அழைக்கும் சமாதானச் சுடர்விளக்காய்  எப்படித் திகழ்ந்தார்களோ,

ஒருசாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிய சாதனையாளராகத் திகழும் அதேவேளையில் தம் உம்மத்துகளுக்கு உண்மை வாழ்வு நெறியை விளக்கும் ஓர்  அறிவாலயமாக  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சரித்திரத்தில் மிளிர்ந்தார்களோ,

அசைக்கமுடியாத ஒரு வல்லரசு நாட்டின் அதிபராகக் கோலோச்சும் அதே வேளையில், வெறும்  ஈச்சமர இலைகளால் திணிக்கப்பட்ட ஒரு தோல் பையைத் தலையணையாகக் கொண்டு உறங்கி எழும் ஓர் எளிதினும் எளிய மனிதராக எங்ஙனம் வாழ்ந்து காட்டினார்களோ,

போரில் வென்றெடுத்த வெற்றிப்பொருட்கள் அனைத்தும் மஸ்ஜிதுன் நபவீயின் முற்றத்திலே மலைக் குன்றுபோல் குவிக்கப் பட்டிருக்கும் சூழலிலும்  அல்லாஹ்வின் தூதராகிய தம்   வீட்டின்  தானியமில்லாத  அடுப்பங்கரை  எப்படிப் புழக்கமில்லாமல்  ஒரு  பூனைப் படுத்துறங்கும் இருப்பிடமாய் மாறிப்போயிருந்த ஓர் எளிய குடிலை மட்டும் கொண்டிருந்தார்களோ,

வெற்றியின் விளைவாய்ப் பிடிபட்டுப்போன எதிரிகள், போர்க் கைதிகளாய் மதீனாவாசிகளிடம் அடிமைகளாய் அளிக்கப் பட்டுகொண்டிருந்த அதே நிலையில்,  

மாவரைக்கும் கல் தேய கோதுமையை அரைத்தும் மாண்பான கரம் வலிக்க தண்ணீரை இறைத்தும் கைகளிரண்டும்  கொப்பளித்து நின்ற கண்மணி மகள் ஃபாத்திமா (ரலி) விடம் 

'பொறுமை கொள் கண்மணியே, என் மகளே இவ்வுலகில்! மறுமையில் நீ மங்கையரின் தலைவியன்றோ!' 

என அறிவுரையை மட்டுமே பரிசாய் அளித்த பாசமிகு தந்தையாய் போதனை செய்து உயர்ந்தார்களோ, 

அதுபோலவே

அண்ணலாரின் அன்பான வளர்ப்பு மகன் ஸைத் இப்னு ஹாரிதா (ரலி) வுக்கு எவ்வாறு உயிரினும் மேலான உவப்பான வளர்ப்புத் தந்தையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருந்தார்களோ,  அதே நேரத்தில் தம் பால்குடிச் சிற்றன்னை உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களுக்குச் சிறப்பான, பாசமான 'ஒரு அருள்நிறைந்த அருமை மகனாகவே' முழுவதும் அவர்கள் தோன்றினார்கள்!

முதல் அகபா உடன்படிக்கையில் முக்கியமானவரும் புனித பத்ரு யுத்தத்தில் பங்கு பெற்றவருமாகிய வீரம்  நிறைந்த  நபித் தோழர் உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்களே உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களை மணமுடித்திருந்தார்கள்.

அவர்களின் வீடு குபா நகரில்  ஈச்சமரத் தோப்புகளுக்கிடையே இயற்கையான சூழலில் அமைந்திருந்தது.

சத்தியம் போதித்த சன்மார்க்கத்தூதர்  (ஸல்) அவர்கள் புனித ஹிஜ்ரத் மேற்கொண்டபோது நிர்மாணித்த 'குபா பள்ளி'க்கு வாரந்தோறும் தவறாமல் செல்லும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். குபா பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டுக்கு வருகை தந்து உணவுண்டு, சற்று இளைப்பாறிச்  செல்லும் வழக்கமும் இருந்தது.

அதுபோல ஒருநாள், அண்ணலார் குபா நகர் வந்தபோது, வழக்கம்போல் உம்மு ஹராம் (ரலி) வீட்டில் உணவுண்டு அசதியில் சற்றுக் கண்ணயர்ந்தார்கள். உறங்கிக்கொண்டிருந்த உத்தம நபி (ஸல்) அவர்கள் திடீரென உறக்கம் கலைந்தார்கள். உடனே சிரித்தார்கள்.

உடனிருந்த உம்மு ஹராம் (ரலி), அண்ணல் நபியே! வண்ணச் சுடரே! தாங்கள் சிரிக்கும் காரணம்  நான் அறியலாமா? என்று வினவினார்.

'ஓ உம்மு ஹராம்! என் உம்மத்துகளில் சிலரை நான் சற்றுமுன் கனவில் கண்டேன். மன்னர்கள் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதுபோல அவர்கள் கடலின் மீது கப்பலில் மிதந்து கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் அருளால் கடற்போரில் வாகை சூடினார்கள். அது எனக்கு மனமகிழ்வளித்தது!' என்றுரைத்தார்கள்.

உடனே, உம்மு ஹராம் (ரலி) அவர்கள்,  யா ரசூலல்லாஹ்! அந்தப்  போராளிகளில் நானும் ஒருத்தியாக இணைந்துகொள்ள வேண்டி, தாங்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள்' என்று கோரினார்.

அவரின் கோரிக்கைக்காகப் பிரார்த்தித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'அவர்களில் நீரும் ஒருவராக இருப்பீர்' என்றார்கள்.

மீண்டும் ஒருமுறை அண்ணலார் அவர்கள் சாய்ந்து அமர்ந்தவாறு கண்ணயர்ந்தார்கள். பின், விழித்தெழுந்து சிரித்தார்கள்.

முன்பு வினவியதைப் போலவே,  உம்மு ஹராம் (ரலி), அருள் நிறைந்த அண்ணலே! தாங்கள் இப்பொழுது மீண்டும் ஏன் இப்படி நகைத்தீர்கள்? என்று வினவினார்.

'ஓ  உம்மு ஹராம்! என் சமூக மக்களில் சிலரைக் கனவில் மீண்டும் கண்டேன். அரசர்கள் தங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று அவர்கள் அமர்ந்து கடலின் மீது மிதந்து கொண்டிருந்ததை எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது' என்று நவின்றார்கள்.

'ஓ எங்கள் நபியே! சங்கை நிலவே! நானும் ஒருத்தியாக அவர்களுடன் இணைந்து செல்ல இறைவனிடம் இறைஞ்சுங்கள்' என்று கோரினார்.

'அப்படியல்ல! அவர்களில் நீர் முதலில் செல்லும் அணியினருள் இருப்பீர்' என்று உரைத்தார்கள் இதயங்களைக் கவர்ந்த ஏந்தல் நபி (ஸல்) அவர்கள்.

வருடங்கள் பல உருண்டோடின. சொல்லும் செயலும் சோபிக்க வாழ்ந்த சத்தியத்தூதர்  (ஸல்) அவர்கள் தலைமையில்  போருக்குப் புறப்பட்டுச் செல்வதுபோலவே, அவர்தம் கணவர்  உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் புனிதப் போருக்குப் புறப்படும்போதெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் ஆர்வம் குறையாமல் உம்மு ஹராம் (ரலி) அவர்களும் கூடவே சென்று அந்த நிலையான நன்மையில் பங்கு பெற்றார்.

பணியின் நிமித்தமாக, தம்பதியினர் ஷாம் தேசத்தில்  கலாச்சாரங்களின் கலவையான திமிஷ்க் எனும் டமாஸ்கஸ் நகரில்  குடியேறினர். 

எளிமையில் இனிமை கண்ட இல்லறத்தில் இருந்துகொண்டே மக்களுக்கு நல்லறத்தைத் தங்களால் இயன்றவரைப் போதித்தனர் தம்பதியினர்.

எனினும் எங்கு சென்றபோதும் நபிகளார் கண்ட கனவையும்  கண் விழித்தபின் இவருக்காக சிறப்பாக இறைஞ்சியதையும் அடிக்கடி நினைவு கூர்ந்து கொண்டிருப்பதுவே உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வழக்கமாய்ப் போனது.

திராட்சை ரசத் தீவு 'சைப்ரஸ்' : சிந்துபாத்துக்கு ஒரு கன்னித்தீவு போல, அற்புதமான ஒரு கனவுத்தீவு சைப்ரஸ். நீண்ட நெடிய பாரம்பரிய மிக்க  வரலாற்றுக்குச் சொந்தமானது சைப்ரஸ்.

பைஸாந்தியர்களான, கிரேக்க, ரோமப் பேரரசுகளின் ஆளுமையின்கீழ் பல்லாண்டுகாலம் சீர்கெட்டுப் போயிருந்த சைப்ரஸுக்கு நேர்வழி நின்று ஆட்சி செய்த 'நம்பிக்கையாளர்களின் தலைவர்' உதுமான் இப்னு அஃப்பான்  (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில், ஒரு 'விடியல்' பிறந்தது.

அது ஹிஜ்ரீ 28 ஆம் வருடம். முக்கியமான நபித்தோழர்கள் முஆவியா இப்னு அபுசுஃப்யான் (ரலி), அபூதர் கிஃபாரி (ரலி), ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி), அபூதர்தா (ரலி), கர்ளா இப்னு அப்தி அம்ர் (ரலி) போன்றோர் குடும்பத்தினருடன் உபாதா இப்னு ஸாமித் (ரலி) குடும்பத்தினரும் அந்தப் படையணியில் தம்பதி சமேதராய் இணைந்து கொண்டனர்.

மாசற்ற தெளிவான காற்று கடலில் மெதுவாக அலையாட வைத்தது! அந்த அலை முழங்கும் கடலில் ஒரு கம்பீரமான சிம்மாசனத்தைப்போல் மிதந்த முஸ்லீம்களின் போர்ப்படைக் கப்பல் மெதுவாக அசைந்தாடத் துவங்கியது! வான் மறை கொண்டுவந்த வள்ளல் நபியின் வர்ணனை  அட்சரம் பிசகாமல் உம்மு ஹராமின் கண்ணெதிரே தெள்ளத் தெளிவாய் விரிந்து நின்றது! விவரிக்க முடியாத மனவுணர்வுகள் சிற்றன்னை உம்மு ஹராமின் இதயத்தைக்  கனக்க வைத்தன!

கண்களில் கண்ணீர்  பீறிட்டுத்ததும்ப, பரந்து விரிந்ததாய், விண்ணகத்தையே இணைத்து நின்ற அந்தப் பெருங்கடலை நோக்கி  நின்றவர் இவ்வாறு  கூறினார்:

"இடர்வென்று பவனிவந்த மனம் ஒளிரும் மாநபியே! உண்மையின் ஒளிச்சுடரே! வல்லமையும் உயர்வும் மிக்க அல்லாஹ் (ஜல்)வின் தூதரே! நீங்கள் உண்மையே உரைத்தீர்கள்! நீங்கள் உண்மையே உரைத்தீர்கள்! நீங்கள் உண்மையே உரைத்தீர்கள்!" 

ஆங்கே போர்க் கப்பல்  விளிம்பின்  நிலையில், உண்மைக்கு ஒரு சான்றாக உயர்ந்து நின்றார் அன்னை உம்மு ஹராம் பின்த் மில்ஹான் ரலியல்லாஹூ அன்ஹா.
o o o 0 o o o
புஹாரி 2877: அனஸ் இப்னு மாலிக் (ரலி)

இக்பால் M.ஸாலிஹ்

14 Responses So Far:

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும். அன்புத்தம்பி!

வியாழன் காலை தொழுதபின் எனக்கு இரண்டு முக்கிய வேலைகள். முதலில் உங்கள் தொடர் வந்த்விட்டதா என்று பார்ப்பது - படிப்பது. முடிந்தால் உடனே பின்னுட்டம் இல்லாவிட்டால் பிறகு யோசித்து எழுதுவது.

ஒரு வார தொடரின் இடைவெளி ஆவலை அதிகமாக்கிவிட்டது. சேர்த்தே படைத்து இருக்கிறீர்கள் சிறப்பாக.

(இரண்டாவது வேலை என்ன என்கிறீர்களா? வேண்டாம் ! இன்று முத்துப் பேட்டையில் சந்தை ! காய்கறி வாங்கப் போகாமல் அந்தக் கருப்பு பெட்டியை குடைய ஆரம்பித்துவிட்டீர்களா என்று உங்கள் மச்சி கூறுவது உங்கள் காதில் விழவில்லையா?)

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

இரண்டு வாரங்கள் கழித்து வந்தாலும் எழுத்தின் உணர்ச்சிகள் கண்களில் கசிய வைத்து விட்டது... இதுவே சகோதரர் அவர்களின் எழுத்துக்கு கிடைத்த பரிசு !

// மாவரைக்கும் கல் தேய கோதுமையை அரைத்தும் மாண்பான கரம் வலிக்க தண்ணீரை இறைத்தும் கைகளிரண்டும் கொப்பளித்து நின்ற கண்மணி மகள் ஃபாத்திமா (ரலி) விடம்

'பொறுமை கொள் கண்மணியே, என் மகளே இவ்வுலகில்! மறுமையில் நீ மங்கையரின் தலைவியன்றோ!'

என அறிவுரையை மட்டுமே பரிசாய் அளித்த பாசமிகு தந்தையாய் போதனை செய்து உயர்ந்தார்களோ, ///

//மாசற்ற தெளிவான காற்று கடலில் மெதுவாக அலையாட வைத்தது! அந்த அலை முழங்கும் கடலில் ஒரு கம்பீரமான சிம்மாசனத்தைப்போல் மிதந்த முஸ்லீம்களின் போர்ப்படைக் கப்பல் மெதுவாக அசைந்தாடத் துவங்கியது! வான் மறை கொண்டுவந்த வள்ளல் நபியின் வர்ணனை அட்சரம் பிசகாமல் உம்மு ஹராமின் கண்ணெதிரே தெள்ளத் தெளிவாய் விரிந்து நின்றது! விவரிக்க முடியாத மனவுணர்வுகள் சிற்றன்னை உம்மு ஹராமின் இதயத்தைக் கனக்க வைத்தன!

கண்களில் கண்ணீர் பீறிட்டுத்ததும்ப, பரந்து விரிந்ததாய், விண்ணகத்தையே இணைத்து நின்ற அந்தப் பெருங்கடலை நோக்கி நின்றவர் இவ்வாறு கூறினார்:


"இடர்வென்று பவனிவந்த மனம் ஒளிரும் மாநபியே! உண்மையின் ஒளிச்சுடரே! வல்லமையும் உயர்வும் மிக்க அல்லாஹ் (ஜல்)வின் தூதரே! நீங்கள் உண்மையே உரைத்தீர்கள்! நீங்கள் உண்மையே உரைத்தீர்கள்! நீங்கள் உண்மையே உரைத்தீர்கள்!" //

என்னை அறியாமலே கண்களிலிருந்து சொட்டின !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

விருப்பமான வியாழன் விருந்து இது!
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.
-------------------------------------------------------------

ரபியுள் அவ்வல் 25/1434

sabeer.abushahruk said...

அழகு மொழியில், இலகு நடையில் இஸ்லாத்தின் துவக்ககால நிகழ்வுகள்; தெளிந்த நீரோடைபோன்ற சரளமான வருணனைகள்; ஆதாரபூர்வமான அண்ணலார் (ஸல்) அவர்களின் வாழ்வியல் குறிப்புகள் என அதிரை நிருபரை ஆங்கரித்துப் பார்க்கிறது நபிமணியும் நகைச்சுவையும் தொடர்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, இக்பால்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இலகு நடையில் இஸ்லாமிய இலக்கியம் !

சகோதரி சொல்லியது போன்று...

//என்னை அறியாமலே கண்களிலிருந்து சொட்டின !//

KALAM SHAICK ABDUL KADER said...

இப்படியும் இனிய தமிழில் எழுதிட முடியும்; அதனால் வரலாறு என்றாலே காத தூரம் ஓடும் இளைஞர்களை ஈர்த்திட முடியும் என்பது நிருபிக்கப்பட்டு விட்டது !இத்தொடரின் தூய்மை மிக்கத் தமிழ் நடை; வாய்மையை வர்ணணைகளால் வடிக்கும் எழுத்தாற்றலும், ஆதாரத்துடன் ஹதீஸ்களைக் குறிப்பிடும் நினைவாற்றலும் இச்சகோதரர் அவர்கட்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட்கொடை; இச்சகோதரர் அவர்களின் ஆயுளை நீடித்து- நோயற்ற வாழ்வும்- குறைவற்ற செல்வமும் அல்லாஹ் வழங்குவானாக (ஆமீன்)

ZAKIR HUSSAIN said...

//அசைக்கமுடியாத ஒரு வல்லரசு நாட்டின் அதிபராகக் கோலோச்சும் அதே வேளையில், வெறும் ஈச்சமர இலைகளால் திணிக்கப்பட்ட ஒரு தோல் பையைத் தலையணையாகக் கொண்டு உறங்கி எழும் ஓர் எளிதினும் எளிய மனிதராக எங்ஙனம் வாழ்ந்து காட்டினார்களோ,//


சிறந்த தலைமைத்துவத்தின் எடுத்துக்காட்டு. இப்போதுள்ள தலைவர்கள்: தான் வசதியாக இருந்து நாட்டை ஏழையாக்கிவிடுகிறார்கள்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\சிறந்த தலைமைத்துவத்தின் எடுத்துக்காட்டு. இப்போதுள்ள தலைவர்கள்: தான் வசதியாக இருந்து நாட்டை ஏழையாக்கிவிடுகிறார்கள்.\\

உண்மையை உண்மையாய் உரைத்தீர் உளவியல் மருத்துவரே! அதிலும், உற்ற நண்பரின் கவித்துவ நடையும் இவ்வரிகளில் காண்கிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இக்பால் காக்கா,

நபி (ஸல்) அவர்களின் கனவு நனவாகியதை வரலாற்றில் படிக்கும் போது நமக்கே மகிழ்ச்சியளிக்கிறதே... அந்த கனவு பற்றிய செய்தியை கேட்டு அந்த கனவு நிகழ்வானதை கண்ட அந்த சத்திய தோழர், தோழியர்களுக்கு எப்படி மகிழ்ச்சியிருந்திருக்கும்.

உம்மு சுலைம் (ரழி) அவர்களின் சகோதரி தான் இந்த உம்மு ஹராம் (ரழி) அவர்கள் என்ற வரலாற்று தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி காக்கா.. ஜஸக்கல்லாஹ் ஹைரன்..

இந்த வீரத்தாய் உம்மு ஹராம் முதல் கடல் யுத்தத்திற்கு பிறகு மற்றுமொரு போரில் வீரமரணமடைந்தார்கள் என்று ஒரு ப்யானில் கேட்டிருக்கிறேன்..

உண்மைக்கு ஒரு சான்றாக உயர்ந்து நின்றார் அன்னை உம்மு ஹராம் பின்த் மில்ஹான் ரலியல்லாஹூ அன்ஹா.

இப்னு அப்துல் ரஜாக் said...

அண்ணல் நபிகளின் அமுத வாயால் நம்பிக்கையானவர் என்ற பாராட்டு நம் சஹாபா பெண்மணிக்கு ஒரு கிரீடம் என்றால் மிகையல்ல.

நம் உயிரினும் மேலான நம் அண்ணல் நபிக்காக கோடி முறைகள் சாகலாம்,அப்படி செத்தாலும் அவர்களின் செஞ் சோற்றுக் கடனை நம் எவராலும் அடைக்க முடியாது.

முஸ்லிமாகவும்,அண்ணல் நபியின் உம்மத்தாகவும் நம்மை படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

Unknown said...

வழக்கம் போல படிக்கும் ஆவலை தூண்டும் நபிமணியின் நகைசுவை இஸ்லாமிய வரலாற்றில் கேட்டறியாதே சஹாப பெண்மணிகளை பற்றிய செய்தி ஜஸாக்கல்லாஹ் ஹைர்

Iqbal M. Salih said...

கருத்துப்பதிந்த மதிப்பிற்குரிய சகோதரி ஆமினா அவர்கட்கும் டாக்டர் இ.அ.காக்கா அவர்கட்கும்

அன்புச்சகோதரர்கள் அபுஇப்ராஹீம்,அப்துல்லத்தீஃப், இம்ரான் கரீம், கவியன்பன் அவர்கள், தாஜுத்தீன், ஜஃபர் ஸாதிக் மற்றும் நண்பர்கள் சபீர், ஜாகிர் ஆகியோருக்கும் நன்றிகள்.

அன்புத்தம்பி தாஜுத்தீன் அறிக: இறையருளால், கடற்போரில் வென்றவர்கள் படையெடுப்பிலிருந்து திரும்பியபோது ஷாம் நாட்டுத்திசை நோக்கிச்சென்றார்கள். சைப்ரஸ் தீவின் ஒருபகுதி வழியாகப் புறப்பட்ட உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கு பயண வாகனமாக ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. அப்போது கட்டுப்பாட்டைமீறி வேகமாகப் பாய்ந்து சென்ற குதிரையிலிருந்து அன்னை உம்மு ஹராம் (ரலி) கீழே விழுந்தார்கள்! கழுத்து முறிந்து போனதால் அந்த இடத்திலேயே ஷஹீதானார்கள்! சைப்ரஸிலுள்ள அந்த இடம் இன்று 'கல்ஆத் சுல்தான் தக்யா' என குறிப்பிடப்படுகின்றது.

Yasir said...

மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள்,அதனை அலங்கரித்து சொன்ன முறை..கண்ணீரை பொங்கி வர வைத்துவிட்டது..அல்லாஹ் உங்கள் நீண்ட ஆயுளை தருவானாக ஆமீன்

Iqbal M. Salih said...

மிக்க நன்றி அபுஸாஜித்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு