Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர்- 24 29

அதிரைநிருபர் பதிப்பகம் | July 20, 2013 | , , ,


தொடர் : இருபத்தி நான்கு
இஸ்லாமிய வங்கிமுறையும் முதலீட்டுத்துறையும்  தோன்றி வளர்ந்த வரலாறு .

இந்தத்தொடரை ஆழ்ந்து படித்துவரும் அன்பர்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். இந்த அத்தியாயத்தில் நான் பகிர இருக்கும்  தகவல்கள் யாவும் இஸ்லாமிய வங்கி முறைகள் பற்றி  நூல்கள் மற்றும் இணையத்தில் திரட்டிய தகவல்களின் மொழி பெயர்ப்பு ஆகும். கூடிய வரை நன்றாகவே மொழிபெயர்த்து எனது வழக்கமான தமிழ்நடையில் தர முயற்சித்து இருக்கிறேன். இஸ்லாமியப் பொருளாதார இயலில் ஆர்வமுள்ள தனிப்பட்டவர்களுக்கும் மாணவர்களுக்கும் இதில் குறிப்பிடப் போகும் தகவல்கள் பயனுள்ளவைகளாக இருக்குமென்று நம்புகிறேன். பெரும் உழைப்பின் பின்னணியில் திரட்டப் பட்ட  இந்தத்தகவல்களை உங்களின் அன்புக் கரங்களில் சமர்ப்பிக்கிறேன்.

நவீன பொருளாதார இயலின்  வளர்ச்சி -மற்றவர்களோடு போட்டி போட்டு வாழவேண்டிய சூழ்நிலை - அதே நேரம்  , அல்லாஹ் வகுத்த வழிகளில் இருந்தும் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழும் வழிகளில் இருந்தும் நெறி பிறழாமல் இந்த சமுதாயத்தை கொண்டு செல்லவேண்டிய நிலை சமூகத்தின் கல்வியாளர்களுக்கும் மார்க்க அறிஞர்களுக்கும்உதித்த எண்ணம்  தந்த உந்து சக்தியின் காரணமாக இஸ்லாமிய வங்கி முறையும் பலவித ஆராய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் பிறகு இம்முறைகள் சமுதாயத்துக்கு அறிமுகப் படுத்தப் பட்டன.

இதை என் இப்படி “பம்மி பம்மி” சொல்ல நேரிடுகிறது என்றால் நமது கை விரல் நகங்களில் வளர்ந்துள்ள நகத்தை வெட்டினாலே இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று வழக்குக் கூண்டில்  நிறுத்தப்படும்  ஒரு யுகத்தில் வாழவேண்டிய சூழ்நிலை. நான் சொன்னால் வழிகேடில்லை அதையே நீ சொன்னால் வழிகேடு என்று வழக்குரைக்கும்  மாந்தர்களின் நடுவே நடுநிலையில் சில நடக்கும் செய்திகளை நெறி பிறழாமல் சொன்னாலும் வடையைப் பார்க்காமல் வடையில் உள்ள துளையைப் பார்ப்பவர்கள் துரதிஷ்டவசமாக நம்மிடையே உலவுவதால் இந்த முன்னுரை தேவைப்படுகிறது.  வாருங்கள் நமது வேலையைப் பார்ப்போம்.  

இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பின் பல முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம்கள்           சிறு பான்மையாக வும்  பெரும்பான்மையாகவும்  வாழ்ந்த நாடுகளும்  சுதந்திரம் பெற்றன. இதைத் தொடர்ந்து மற்ற நவீன கல்விகளைப் போல பொதுவான பொருளியல் கல்வியின் தேவை உணரப்பட்டது. பொதுவான பொருளியலில் போதுமான இஸ்லாமிய அடிப்படையின் சாயல் இல்லாததால் இஸ்லாமியப் பொருளாதாரம் என்கிற கோட்பாடுகள் வரையருத்துத் தேவைப்பட்டன. ஆகவேதான் ஷரியா மற்றும் சுன்னாவின் அடிப்படையில் இஸ்லாமியப்  பொருளியல்எனும் எண்ணக்கரு தோற்றம் பெற்றது.

முஸ்லிம்கள் , ஆங்கிலேயர் , பிரெஞ்ச, போர்த்துகீசியர் போன்ற  பிற மத ஏகாதிபத்தியவாதிகளின் அதிகாரத்திற்குள் இருந்த காலத்தில் தம் பொருளாதார நடவடிக்கைகளை இஸ்லாத்தின் வரையறைக்குள் நின்று மேற்கொள்ள முடியாதிருந்தனர். வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளியல் கோட்பாடு ஏனையோர் போன்று முஸ்லிம்கள் மீதும் திணிக்கப்பட்டிருந்தது. தொழுகை, நோன்பு போன்ற இபாதத்களை ஓரளவேனும் சீராக செய்யக்கிடைத்த முஸ்லிம்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இஸ்லாமிய விதிமுறைகளையும், விழுமியங்களையும் பேணுவது மிகச் சிரமமாக இருந்தது. இதுவே ஏகாதிபத்திய கெடுபிடியிலிருந்து சுதந்திரம் பெற்ற முஸ்லிம்களை தனியான இஸ்லாமிய பொருளியல் பற்றி சிந்திக்கத் தூண்டியது.

குர்ஆனும், ஸுன்னாவும் பொருளியலின் அடிப்படைகளைக் கூறியிருந்தன. அவற்றுக்கு வியாக்கியானம் செய்த இமாம்கள் பல்வேறு பொருளாதார கருத்துக்களை முன்வைத்தார்கள். இஸ்லாமிய சட்டத்துறை (ஃபிக்ஹ்)க்கு பங்களிப்புச் செய்த  இமாம்கள் பல்வேறு பொருளியல் கோட்பாடுகளை தனித்தனிப் பிரிவுகளாக சமூகத்தில் முன்வைத்தனர்.

இபாதாத் (வணக்க வழிபாடுகள்), முஆமலாத் (கொடுக்கல் வாங்கல்கள்), முனாக்கஹாத் (விவாகங்கள்), ஜினாயாத் (குற்றங்கள்) என நாற்பெரும் பிரிவுகளாக ஃபிக்ஹை வகைப்படுத்தி இரண்டாம் இடத்தை இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளுக்கு வழங்கினர்.

வாங்கல், விற்றல், பண்டமாற்று, தவணை அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல், முற்பணம் செலுத்தி வாங்கல், அடகு வைத்தல், இரவல் கொடுத்தல், கடன், பங்குடைமை, முதலீடு, குத்தகை இப்படி பல்வேறு தலைப்புக்களில் இமாம்களின் மார்க்க அடிப்படையிலான  ஆய்வுகளும், கருத்துக்களும், தீர்ப்புக்களும் சட்டத்துறை நூற்களில் இடம் பிடித்துள்ளன. எனினும் இவை தனியொரு கலையாக அல்லது ஒரு அறிவுத்துறையாக இஸ்லாமிய பொருளியல் எனும் பெயரில் அறிமுகம் பெற்றிருக்கவில்லை. அவர்களது காலப்பகுதி இதற்கான தேவையை வேண்டி நிற்கவுமில்லை.

நாளுக்கு நாள் வளர்ந்துவரும்  உலகம்,  நுண்கலை அறிவுத்துறைகளிலும் புதுப்புதுத் தத்துவங்களைக் கண்டுபிடித்ததன் விளைவாக சில வேளைகளில் முற்காலத்தில் ஓர்அறிவுத்துறையின் உட்பிரிவாக இருந்த ஒரு பகுதி தனிப்பெரும் அறிவுத்துறையாக பரிணமித்திருப்பதை நாம் காணலாம். உதாரணமாக பொது மருத்துவம் என்கிற துறை அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் நிபுணர் கல்வியை அதற்கான பட்டங்களை வழங்கத்தொடங்கியது.  அது போன்றே இஸ்லாமிய சட்டத்துறையின் உட்பிரிவாக இருந்த பொருளியல் , காலத்தின் தேவைக்கேற்ப இஸ்லாமிய பொருளியலாக பெயர்  சூட்டப்பட்டு ஒரு தனி அறிவுத்துறையாக உருவம் பெற்றது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பொருளாதார ரீதியில் பெரும்  பாதிப்புக்களை சந்தித்த நாடுகள் தம்மை பாதிப்பிலிருந்து மீட்டுக் கொள்ளும் பொருட்டு   முதலீடுகள் செய்வது பற்றி சிந்திக்கவும் ஆரம்பித்தன. இத்தருணத்தில் இலாப நஷ்டத்தை மூலதனத்தின் விகிதத்திற்கேற்ப முதலீட்டாளர்கள் பகிர்ந்துகொள்ளும் இஸ்லாமிய கூட்டு முதலீட்டு முறையை சுதந்திரம் பெற்ற முஸ்லிம் நாடுகளுக்கு அறிமுகம் செய்து வைப்பதில்  அறிஞர்கள் ஆர்வம் காட்டினர். மிக முக்கியமாக வழிகேடர்களின் வழிமுறைகளை தடுத்து நிறுத்தவும், நமக்கு ஏற்ற முறைகளை நாமே உருவாக்கிக் கொள்ளவும்  வேண்டுமென்ற கருத்தில்  இதன் மூலம் நடைமுறையிலுள்ள வட்டியடிப்படையிலான வங்கிகளின் நடவடிக்கைகளுக்கும் வட்டியடிப்படையற்ற ஒரு கூட்டு முதலீட்டு முறையை அறிமுகம் செய்து வைத்தனர்.

அறிஞர்களான அன்வர்குறைஷி, நயீம் சித்தீக்கீ, மஹ்மூத் அஹ்மத், முஹம்மத் ஹமீதுல்லாஹ் ஆகியோரே 1940இன் பிற்பகுதிகளில் இது பற்றி முதன் முதலில் பேசியோராவர். இவர்களைத் தொடர்ந்து 1950களில் இச்சிந்தனைக்கு மார்க்க அறிஞர்களால் பரவலாக உயிர் கொடுக்கப்பட்டது.  பேரரிஞர்முஹம்மத் ஹமீதுல்லாஹ் அவர்களின் பங்களிப்பு இவ்வகையில் நீண்டதாகும். 1940இலும், 1955இலும், 1957இலும், 1962இலும் இது தொடர்பில் அவர்எழுதினார்.  முதன் முதலில் இது பற்றி ஒரு தனியான நூல் அறிஞர் முஹம்மத் உவைஸ் என்பவரால் 1955இல் எழுதப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்துல்லாஹ் அல்-அரபி, நஜாத்துல்லாஹ் சித்தீக்கி, அல்-நஜ்ஜார், பாக்கிர்அஸ்-ஸத்ர்ஆகியோரின்  நூற்கள் 1960களின் பிற்பகுதியில் 1970களின் ஆரம்பப் பகுதியில் வெளிவந்தன.
  • இது வரை காலமும் அறிஞர்பெருமக்களின் தனிநபர்களின்  சிந்தனையாக விளங்கிய இஸ்லாமிய பொருளியல் 1970களில் நிறுவனமயப்படுத்தப்பட்டது        ( Organized status).
  • இதன் ஓர்அங்கமாக இது பற்றி விவாதிக்க,  கராச்சியில் 1970இல் முஸ்லிம் நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது.
  • 1976இல் இஸ்லாமிய பொருளியல் சம்பந்தமான முதல் சர்வதேச மாநாடு மக்காவில் கூட்டப்பட்டது.  இம்மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட பொருளியல் அறிஞர்கள், சமூகவியலாளர்கள் உலகின் பல பாகங்களிலிருந்தும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. பல வகையிலும் திருப்புமுனையாக அமைந்த இம்மாநாடு இஸ்லாமிய பொருளியல் பற்றி மேலும் பேசவும், எழுதவும், உயர்மட்ட நிலையில் விவாதிக்கவும் வழிகோலியது.
  • பின்னர் 1977இல் சர்வதேச பொருளாதார மாநாடு லண்டனில் நடைபெற்றது.


இம்முயற்சிகள் யாவும் வெறும் எண்ணக்கருவாக இருந்த இஸ்லாமிய பொருளியலுக்கு ஒரு வடிவத்தை கொடுக்க ஆரம்பித்தன. இஸ்லாமிய பொருளியல் கோட்பாடுகளை அனுசரித்து தனித்தியங்கும் வங்கிகள் தோற்றம் பெற்றன.
  • இஸ்லாமிய  வங்கிகளில் முன்னோடி வங்கியாக அமைந்தது 1972இல் எகிப்தில் நிறுவப்பட்ட Nasser Social Bank.
  • பின்னர் 1975இல் Dubai Islamic Bank நிறுவப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் குழுவொன்று இதனை நிறுவியது.
  • பின்னர் 1977இல் Faisal Islamic Bank எகிப்திலும், சூடானிலும் அமையப்பெற்றது.
  • இதே ஆண்டில் குவைத் அரசாங்கம் Kuwait Finance Houseஐ உருவாக்கியது.
  • தற்போது 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொருளாதார கோட்பாடுகளை பேணி நடக்கக்கூடிய இவ்வாறான வங்கிகள் இயங்கிவருகின்றன. பெரும்பாலானவை முஸ்லிம் நாடுகளில் அமைந்துள்ளன. சில மேற்கு ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், லக்ஸம்பேர்க், சுவிஸர்லேன்ட், யுனைடட் கிங்க்டம் ஆகிய நாடுகளிலும் அமையப்பெற்றுள்ளன. இத்தகைய வங்கிகள் தனியார்வங்கிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • 1981ஆம் ஆண்டு பாகிஸ்தானும், ஈரானும் வட்டியில்லா வங்கி முறையை சட்ட ரீதியாக அறிமுகம்  செய்தன.

இஸ்லாமிய பொருளியல் உதயத்தின் மூலம் பல்வேறு முன்னேற்றகர நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அவையாவன:-

1.   சுய அறிவுத்துறை

தனியான இஸ்லாமிய பொருளியல் நூற்களும், சஞ்சிகைகளும் வெளிவரும் அளவுக்கு ஒரு தனிப் பெரும்  அறிவுத்துறையாக இஸ்லாமிய பொருளியல் பரிணமித்துள்ளது. வேறு பல சஞ்சிகைகள் இத்தலைப்பில் கட்டுரைகள் எழுதிவருகின்றன. பாரம்பரிய பொருளியல், முகாமைத்துவம், வர்த்தகம், கணக்கியல் பற்றி எழுதுகின்ற ஆய்வு சஞ்சிகைகள் இத்துறை பற்றி ஆய்வுக் கட்டுரைகளை இடம்பெறச்செய்கின்றன. Palgraves Dictionary of Money and Finance தற்பொழுது இஸ்லாமிய வங்கி முறை பற்றி ஒரு தனிப் பகுதியையே ஒதுக்கியுள்ளது.

2.   அறிவு முயற்சிகள்:-

பல அறிஞர்கள் இத்துறையில் ஆழமான ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டு ஆக்கபூர்வமான ஆக்கங்களை சமூகத்திற்கு நல்கியதன் மூலம் இத்துறைக்கு அபார அறிவு முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இத்யாதி முயற்சிகள் பற்றி முஹம்மத் அன்வர்கான் மூன்று வால்யூம்களில் தொகுத்துள்ளார்.

3.   பல்கலைக்கழக பாட  நெறிகள்:-

பல்வேறு பல்கலைக் கழங்களிலும்  பெரும் கல்லூரிகளிளும் பாடத்திட்டங்களில்   ஒரு முக்கிய இடத்தை இஸ்லாமிய பொருளியல் பெற்றுள்ளது. மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகமும், இஸ்லாமாபாத்திலுள்ள இஸ்லாமிய பொருளியல் சர்வதேச நிறுவனமும் இத்துறையில் தனியான பட்டம் தரும் பாடப்பிரிவுகளை வழங்கிவருகின்றன. பாகிஸ்தான், ஈரான், சூடான், சவூதி அரேபியா இன்னும் பல இஸ்லாமிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களும் பட்டப்படிப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவே இத்துறையை ஆக்கியுள்ளன. யுனைடெட் கிங்க்டத்திலுள்ள Loughborugh University இத்துறையில் தனி நிகழ்ச்சியொன்றை தன் பாடபிரிவில்  உட்புகுத்தியுள்ளது. லன்டனில் அமையப் பெற்றுள்ள International Institute of Islamic Economics and Insurance தொலைக் கல்வி டிப்லோமா நிகழச்சியின் நெறியொன்றை நடத்துகின்றது. (மலேசியாவில் உள்ள பல்கலைக் கழகத்தின் மூலம் பயின்று இஸ்லாமிய வங்கி முறைகளில் பட்டம் பெறும் முயற்சிகளை எனது நண்பர் வரலாற்றுப் பேராசிரியர் A.K.அப்துல் காதர் அவர்கள் நெறிப்படுத்தி வருகிறார்கள்.)

4.   பல்கலைக்கழக ஆய்வுகள் :-

பெரும் எண்ணிக்கையிலான சர்வகலாசாலைகள் Ph.D க்கான ஆய்வுகளை இஸ்லாமிய பொருளியல், அதன் உப பிரிவுகளை தலைப்பாகக் கொண்டு எழுத அனுமதிக்கின்றன. இவ்வாறு நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.

5.   இஸ்லாமிய பொருளியல் ஆய்வு நிலையங்கள்:-

இஸ்லாமிய பொருளியல் ஆய்வு நிலையங்களின் வருகையும், இஸ்லாமிய பொருளியல் துறையின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். ஜித்தா இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் கீழ் இயங்கிவரும் Islamic Research and Training Institute இவற்றுள் முக்கியமானது. நூற்றுக்கணக்கான நூற்களை இது வரை இஸ்லாமிய பொருளியல் பற்றி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் அமைந்துள்ள International Institute of Islamic Thought இத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பு செய்து வரும் மற்றொரு அமைப்பாகும் . அரபிலும், ஆங்கிலத்திலும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டும், கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் நடத்தியும் பணிபுரிந்து வருகின்றது. Association of Muslim Social Scientists உடன் இணைந்து இந்நிலையம் வெளியிட்டு வரும் American Journal of Islamic Social Sciences இன் ஒவ்வொரு இதழும் பெரும்பாலும் இத்துறை சார்ந்த கட்டுரைகளை தாங்கி வருவது கவனிக்கப்படவேண்டியது.

6.   இஸ்லாமிய பொருளியல் தகவல் மையங்கள்:-

இஸ்லாமிய வங்கி முறை, முதலீடு, பொருளியல் தொடர்பான தகவல் மையம் ஒன்றை ஜித்தா இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி ஏற்படுத்தியுள்ளது. இத்தகவல் மையம் இஸ்லாமிய வங்கி தகவல் முறை, இஸ்லாமிய பொருளியல் பற்றிய நூற்கள், முஸ்லிம் நிபுணர்தகவல் முறை, தொடர்புவழி விபரக்கொத்து போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

7.   சட்டத்துறை நூற்கள்:-

இஸ்லாமிய பொருளியல் துறையை மையப்படுத்தி சட்டத்துறை நூற்கள் வெளிவந்துள்ளமை மற்றொரு அம்சமாகும். Fiqh Academy of the Organization of Islamic Countries, Fiqh Academy of India, Islamic Ideology Council of Pakistan, Association of Islamic Banks ஆகிய நிறுவனங்கள் இத்துறை பற்றிய மார்க்கத் தீர்ப்புகள் தழுவிய நூற்களை வெளியிட்டுள்ளன. குவைத்தின் மார்க்க விவகார வக்ஃப் அமைச்சு வெளியிட்டுள்ள ஃபிக்ஹ் கலைக்களஞ்சியம், இஸ்லாமிய பொருளியல் சார்ந்த பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. லன்டனிலுள்ள Institute of Islamic Banking and Insurance இது தொடர்பில் இரு கலைக்களஞ்சியங்களை இது வரை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு கலைக்களஞ்சியத்திலும், இஸ்தன்பூலில் வெளியிடப்பட்டுள்ள கலைக்களஞ்சியத்திலும் இஸ்லாமிய பொருளியல் தொடர்பான விவகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  

8.   கணக்குத் தணிக்கை  அமைப்புகள்:-

இஸ்லாமிய பொருளியல் வளர்ச்சியின் ஓர்அங்கமாக இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து கணக்குப் பரிசோதனை அவை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக Accounting and Auditing Organization for Islamic Financial Institutions உருவாக்கப்பட்டு பஹ்ரைனில் சிறப்பாக இயங்கிவருகின்றது. இந்நிறுவனம் மிகத் திறமைமிக்க துறைசார்ந்தோரைக் கொண்டு கணக்குப் பரிசோதனை அளவீடுகள் இஸ்லாமிய வங்கிகளுக்கும், முதலீட்டு நிறுவனங்களுக்கும் ஏற்றதாய் அமைத்துள்ளது. 1994இல் அது நூல் வடிவம் பெற்று பின்னர் 1997இல் புதிய பல தலைப்புக்களுடன் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.  இதே வேளை லண்டனிலுள்ள Institute of Islamic Banking and Insurance இஸ்லாமிய வங்கிகளுக்கான கணக்குப் பரிசோதனை முறை நூலொன்றை வெளியிட்டுள்ளது.

9.   துறைசார்ந்தோர்அமைப்பு:-

இத்துறையின் ஒரு வளர்ச்சியாக முஸ்லிம் பொருளியலாளர்களைக் கொண்ட ஓர்அமைப்பு International Association of Islamic Economics எனும் பெயரில் அமைக்கப்பட்டு காலத்திற்குக் காலம் கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டு வருவதோடு, ஆய்வு பத்திரிக்கை  ஒன்றையும் வெளியிட்டு வருகின்றது.

10. கருத்தரங்குகள், மாநாடுகள்:-

ஒவ்வொரு வருடமும் இத்துறைசார்கருத்தரங்குகளும், மாநாடுகளும் உலகலாவிய ரீதியில் ஏற்பாடு  செய்யப்பட்டு மேலாய்வுகளுக்கு வாயில்கள் திறந்து விடப்படுகின்றன. பிரச்சினைகளுக்கு முடிவு காணப்படுகின்றது. சந்தேகங்களுக்கு தெளிவு காணப்படுகின்றது.

11. இஸ்லாமிய வங்கி முறையும், முதலீடும்:-

இஸ்லாமிய பொருளியல் எண்ணக்கரு தோற்றம் பெற்றதன் பயனாக இஸ்லாமிய முதலீட்டு முறைகளுடன் கூடிய வங்கி முறைகள் அமுலுக்கு வந்துள்ளன. நூற்றுக்கணக்கான முதலீட்டு நிறுவனங்களும், வங்கிகளும் தோன்றியுள்ளதுடன் நாளுக்கு நாள் உலகின் பல பாகங்களிலும் இத்தகைய நிறுவனங்கள் தோற்றம் பெற்ற வண்ணம் இருக்கின்றன.

இஸ்லாமிய பொருளியலின் எண்ணக்கரு தோற்றம், அதற்கு உரு கொடுக்கப்பட்டமை, இதனால் ஏற்பட்ட பல்வேறு நன்மைகள் பற்றியெல்லாம் இது வரை பார்த்த  அதே வேளை இவை  பற்றிய ஒரு மதிப்பீட்டையும் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகளின் நடவடிக்கைகள் குறித்தும், உலகப் பொருளாதாரத்தின் மீது அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் அறிஞர்கள் மதிப்பீடு செய்தனர். இதன் விளைவாக 1984இல் லண்டனில் ஒரு மாநாடு ஏற்பாடு  செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1986இல் வியன்னாவிலும், தெஹ்ரானிலும், வாஷிங்டனிலும், ஜெனீவாவிலும் இது குறித்த மாநாடுகள் நடைபெற்றன. பின்னர் 1988இல் லண்டனிலும், 1992இல் இஸ்லாமாபாத்திலும் மாநாடுகள் நடைபெற்றன. அதே வேளை இக்காலப்பகுதியில் பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டும், பல்கலைக்கழக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், நூற்கள் வெளியிடப்பட்டும் உள்ளன. இத்தகைய மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்ட அறிஞர்களுள் முஹம்மத் அக்ரம் கான் சிறப்பாக குறிப்பிடத்தக்கவர்.

இத்தகைய மதிப்பீடு இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களிடம் சில குறைகளுக்கான  நீக்கங்களை  வேண்டி நிற்கின்றன. அவையாவன:

1.   குறுகிய பார்வை:-

இது வரையும் இஸ்லாமிய பொருளியல், அதன் அகன்று விரிந்த உட்பிரிவுகள் உள்ளடக்கப்படாமல், முராபஹஹ், முஷாரக்கஹ், முழாரபஹ், இஜாரஹ் போன்ற சிலவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டு எழுதப்பட்டும், பேசப்பட்டும் வருகின்றது. இதனால் இஸ்லாமிய பொருளியல் என்பது வட்டியில்லா வங்கி முறை என அர்த்தம் கொள்ளப்படுகின்றது. பாரம்பரிய வட்டி வங்கிகளுடன் தொடர்பு உடைய முஸ்லிம் செல்வந்தர்களை வட்டியில்லா அமைப்பின் பக்கம் திருப்பும் உடனடி ஆரம்ப முயற்சியாகவே இது அமைந்துள்ளது. இதனால் சில தனவந்தர்கள் மாத்திரம் வட்டி பாவத்திலிருந்து விடுபட்டனரே தவிர நடுத்தர மக்களும், ஏழைகளும் அதிலிருந்து இன்னும் விடுபடவில்லை. எனவே இஸ்லாமிய பொருளியல், அதன் உட்பிரிவுகள் முழுமையாக புரிந்துகொள்ளப்பட்ட நிலையில் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இதற்கான ஆய்வுகள் அறிஞர்களால் தொடர்ந்து  செய்யப்பட வேண்டும். சமூகத்தின் சகல நிலையில்உள்ளவர்களுக்கும் இஸ்லாமிய பொருளியல் ஏற்புடையது, நடைமுறைச் சாத்தியமானது என்பது அப்பொழுது மாத்திரமே நிரூபிக்கப்படும்.

2.   முறை பற்றிய குழப்பம்:-

இஸ்லாமிய பொருளியல் என்பது முற்றிலும் வித்தியாசமான தனிப்பெரும் தத்துவங்களையும், நெறிமுறைகளையும் உள்ளடக்கியதாகும். இது பற்றிய ஆழமான அறிவில்லாதோர்மூலம் இஸ்லாமிய முதலீட்டு அமைப்புக்களைக் கொண்டு நடாத்த முடியாது. பெரும்பாலான இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களில் உயர்மட்டம் முதல் அடி மட்டம் வரையிலான சகல ஊழியர்களும், நிர்வாகிகளின் அமைப்பு  கூட இத்துறையில் போதிய கல்வியற்ற  நிலையிலுள்ளனர். குறிப்பாக முடிவெடுக்கும் அதிகாரமுள்ளோர் வட்டி அடிப்படையிலான பாரம்பரிய வங்கிகளில் வேலை  பார்த்து அந்த சிந்தனைகளுடனும், பயிற்சிகளுடனும் இருப்பவர்கள். எனவே இஸ்லாமிய பொருளியல் பற்றி அறை குறை ஞானத்துடனும் பாரம்பரிய வங்கிகளின் அறிவு, பயிற்சிகளுடனும் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் இயக்கப்படுவதால் பெரும்பாலான கொடுக்கல் வாங்கல்கள் அவர்களுக்கும் தெளிவில்லாமல், வாடிக்கையாளர்களுக்கும் தெளிவில்லாமல் நடந்தேறுகின்றன. உதாரணமாக: இஜாரஹ்வின் அடிப்படையை தெரிந்த நிலையில், அதன் உட்பிரிவுகள் பற்றிய தெளிவு இல்லாமல் நடைபெறும் இஜாரஹ் உடன்படிக்கைகள் பல. இதன் காரணமாக இத்தகைய உடன்படிக்கைகள் பல தவறுகளை  சுமந்த வண்ணம் நடைபெறுகின்றன. இதன் விளைவாக சில பொது நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்குமிடையே பல பிரச்சினைகள் எழுகின்றன. எனவே இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களைச் சார்ந்தோர்இஸ்லாமிய பொருளியல் தொடர்பாக நன்கு அறிவும், பயிற்சியும் முஸ்லிம் மார்க்க  அறிஞர்களால் பெறவேண்டியுள்ளனர்.  இந்த நிறுவனங்களில்  பணியாற்றுவோர் மார்க்க கல்வியைக்  கற்றுத் தேர்வதை கட்டாயமாக்க வேண்டும்.

3.   ஷரீஆ விதிகளைப் பேணுவதில் அசிரத்தை:-

முராபஹஹ், முழாரபஹ், முஷாரக்கஹ், இஜாரஹ் போன்ற உடன்படிக்கைகள் சில பல வேளைகளில் ( பிற மத) ஊழியர்களின் அசிரத்தை காரணமாக அவற்றின் ஷரீஆ விதிகளில் சில பேணப்படாத நிலையில் நடந்தேறுகின்றன. ஆவணங்களில் கையொப்பம் இடுவதன் மூலம் இவ்வுடன்படிக்கைகள் பரிபூரணம் அடைவதில்லை. ஒவ்வோர் உடன்படிக்கையும் அதற்குரிய சகல விதிகளும் முழுமையாக சரியாக பின்பற்றப்பட்ட நிலையில் நடைபெறுவதை நிறுவனங்கள் உறுதி செய்தல் வேண்டும். இல்லையேல் நரகத்தில் இடத்தைப் பதிவு செய்ய நேரிடும்.

4.   அறிவூட்டல் போதாமை:-

இஸ்லாமிய பொருளியல் பற்றி குறிப்பாக முஸ்லிம்களுக்கும், பொதுவாக சகல மதத்தவர்களுக்கும் அறிவூட்டப்பட்டமை போதாத நிலையிலுள்ளது. இதனால் இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் நடைமுறைப் படுத்திவரும் முழாரபஹ், முராபஹஹ், முஷாரக்கஹ் இஜாரஹ் போன்றவை கூட சமூக மட்டத்தில் பிழையாக விமர்சிக்கப்படுகின்றன. பாரம்பரிய வங்கிகளின் வட்டி வீதத்தை விட இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்களின் வட்டி வீதம் அதிகம் என்றெல்லாம் விமர்சிக்கப்படுகின்றது. எனவே மக்களை அறிவூட்டுவதையும் ஒரு முக்கிய பணியாக தமது நிகழ்ச்சி நிரலில் ஆக்கிக்கொள்வது முதலீட்டு நிறுவனங்கள் முன்னுள்ள ஒரு முக்கிய பொறுப்பாகும்.

எந்தவொரு அறிவுத்துறையும் காலத்துக்குக் காலம் வளர்ச்சியடையாமலில்லை. இஸ்லாமிய பொருளியலும் இதில் விதிவிலக்கல்ல.  தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விமர்சனங்கள் செய்யப்பட வேண்டும். இப்பொருளியல் தத்துவங்களில் பலவற்றுக்கு உரு கொடுக்கும் நிறுவனங்களாக இஸ்லாமிய முதலீட்டு நிறுவனங்கள் திகழ வேண்டும். அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புக்களை அவை ஏற்க வேண்டும். ஆக்கபூர்வ விமர்சனங்களை புறந்தள்ளாமல் , அவை தம் வளர்ச்சிக்கு உந்து சக்தியென உள்வாங்கி தம்மை செப்பனிட்டுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வைப் பயந்த நிலையில் ஒவ்வோர் நடவடிக்கையும்  உடன்படிக்கையும் நடைபெற வேண்டும்.

மார்க்கக் கல்வியின் ஒரு அம்சமாக பொருளாதாரப் பாடங்களும் மார்க்க அடிப்படையாளான பொருளாதார கல்விக்கூடங்களும் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய வங்கி மற்றும் முதலீட்டுத்துறையில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் பிரிவுகளும் தொடங்க குரல் எழுப்பவேண்டுமென்பதே இந்த அத்தியாயத்தை நான் நிறைவு செய்யுமுன் வைக்கும் கோரிக்கை.  மேலும் இஸ்லாமிய வங்கி மற்றும் முதலீடுகள் பற்றி விளக்கமான தனித்தொடர் எழுதவேண்டுமென்று சில நண்பர்கள் கேட்டிருப்பதால் விளக்கமான மற்றொரு தொடரைத் தர வல்ல நாயன் உதவிடுவானாக! (தம்பி அபூ இப்ராஹீம் உற்சாகத்தில் குதிப்பது மனக் கண்ணுக்குத் தெரிகிறது)    - இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்.  

அடுத்து புனித  நோன்பில் நாம் விவாதிக்க வேண்டியது ஜகாத் பற்றியே. இன்ஷா அல்லாஹ். 
இன்ஷா அல்லாஹ் தொடரும்…

இபுராஹீம் அன்சாரி

29 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இஸ்லாமிய வங்கி முறை பற்றிய நிறைய அரிய தகவல் தந்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.

இத்தைகைய அரிய தேடல் தொகுப்புக்கு அல்லாஹ் நற்கூலியையை தருவானாக!


இத்தொடர் இஸ்லாமிய வங்கி ஏற்பட மூலமாக அமையட்டும். இன்சா அல்லாஹ்!

sabeer.abushahruk said...

ASSalaamu alaikkum varah...


//பெரும் உழைப்பின் பின்னணியில் திரட்டப் பட்ட  இந்தத்தகவல்களை உங்களின் அன்புக் கரங்களில் சமர்ப்பிக்கிறேன்.//

இவற்றை மிகுந்த நன்றியோடு பெற்றுக்கொண்டு இதற்கான கூலியைத் தங்களுக்கு கூடுதலாக வழங்க வேண்டி வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.

மேலும் இந்தக் கடினமானப் பணியை இலகுவாக நிறைவேற்ற அல்லாஹ் தங்களுக்கு பள்ளிக்கூட பிராயத்தின் சுறுசுறுப்பையும் கல்லூரி காலத்து தேடல் திறனையும், இளமைக்காலத்து ஆரோக்கியத்தையும் கனிந்த வாலிபத்தின் கடின உழைப்பிற்கான வலிமையையும் முதுமைக்கான் ஓய்வையும் மன அமைதியையும் தந்து தங்களின் தலை சிறந்த சிந்தனைகளை எங்களுக்குப் பயிற்றுவிக்குமாறும் து ஆச்செய்கிறேன், ஆமீன்!


Allah aaththik aafiya!

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி எம் ஹெச் ஜே,

இந்த அத்தியாயம் எழுதுவதை விட படிப்போருக்கே பொறுமை அதிகம் தேவைப்படும் அத்தியாயமாகும். விரும்பும் வண்டுகளே இதைத் தேனாக குடிக்க இயலும். அப்படிப்பட்ட நிலையில் தங்களின் முதல் பின்னுட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. ஜசாக் அல்லாஹ் ஹைரன்.




அன்பின் தம்பி சபீர் , அலைக்குமுஸ் ஸலாம் . தங்களின் அன்பான து ஆ வுக்கு அருகதை உடையவனாக இறைவன் என்றென்றும் ஆக்கிவைப்பானாக.

ஜசக் அல்லாஹ் ஹைரன்.

sabeer.abushahruk said...

காக்கா,
ஒரு ச்சின்ன கேள்வி.
வெகு காலத்திற்கு முன்பே விலாவாரியாக விவாதிக்கப்பட்டும் தாங்கள் குறிப்பிடும் நாடுகளில் மாநாடுகள் நடத்தப்பட்டும்கூட, இஸ்லாமிய பொருளாதாரச் சிந்தனை இந்த நூற்றாண்டில்தான் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டோ அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டோ வருகிறது, அல்லாவா?
எனில்,  இதற்கு முன்பான நூற்றாண்டுகளில் நம் மார்க்க அறிஞர்கள் மார்க்கம் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளில் ஆர்வம் செலுத்தியதில்லை போலத் தோன்றுகிறதே, சரியா?
இதற்கான காரணிகளில் தலையாயது நாம் மார்க்கத்தை ஒரு பழக்க வழக்கமாகப் பயின்று வந்திருக்கிறோமேதேயன்றி ஒரு வாழ்க்கை நெறியாகப் பின் பற்றியல்ல என்கிறேன். என் கருத்து சரியா?
 
(அபு இபுவைமட்டும் சந்தோஷத்தில் குதிப்பதாகச் சொல்வது தவறுJ.  இ.பொ.சி. இரண்டாம் பாக அறிவிப்பு எல்லோரையும் விட என்னையே உற்சாகப்படுத்தியிருக்கிறது என்பதைத் தாங்கள் அறியமாட்டீர்களா?)
 

Ebrahim Ansari said...

தம்பி கவிஞர் சபீர் அவர்கள் கேட்பது

//இதற்கு முன்பான நூற்றாண்டுகளில் நம் மார்க்க அறிஞர்கள் மார்க்கம் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளில் ஆர்வம் செலுத்தியதில்லை போலத் தோன்றுகிறதே, சரியா?

இதற்கான காரணிகளில் தலையாயது நாம் மார்க்கத்தை ஒரு பழக்க வழக்கமாகப் பயின்று வந்திருக்கிறோமேதேயன்றி ஒரு வாழ்க்கை நெறியாகப் பின் பற்றியல்ல என்கிறேன். என் கருத்து சரியா?//

தம்பி ! மிகச்சரி.

அதே நேரம் தின்ற மருந்துகள் சரி இல்லை. பொருளாதாரப் பக்க வாதத்தில் கொண்டுபோய் விட்டது என்பதால் எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று தேடப்பட்டபோதே கையில் நெய்யை வைத்துக் கொண்டு வெண்ணெய்க்கு அலைந்த விந்தை வெளிப்பட்டது. மார்க்கம் என்பது ஒரு tradition ஆக்கபட்டுவிட்டிருந்தது. உள்ளுறை Innovations ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இப்போது கூட முயற்சிகளை முடக்கிப் போட ஏகப்பட்ட விவாதங்கள் .

அபூ இபு "தல" என்பதால் குறிப்பிட்டேன். நீங்கள் வரவேற்பீர்கள் என்பது நான் குறிப்பிடாமலே உணரும் உணர்வு.


sabeer.abushahruk said...

//மார்க்கம் என்பது ஒரு tradition ஆக்கபட்டுவிட்டிருந்தது. உள்ளுறை innovations ஏற்றுக் கொள்ளப்படவில்லை//

ஒன்டர்ஃபுல்!

அருமையாகச் சொன்னீர்கள்.

(தமீம் வந்து நம்ம ரெண்டு பேருக்கும் ச்செக் வைக்குமுன் நான் ஜூட்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஏதோ ஒரு வகையில் என் 'தல' உருளுது.... அங்கே பொருளாதராம் பற்றிய சிந்தனை இருப்பதால் நடக்கட்டும் நடக்கட்டும் என்று ஒரு ஓரமாக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்... :)

Amazing research !

இந்த ஆய்வு கட்டுரையை எல்லோரும் மிக கவனமாக வாசித்து வருவதை எண்ணி சந்தோஷமாக இருக்கிறது...

குறிப்பாக நம்மில் நெருங்கிய சகோதரர்களின் சுட்டல்கள் எல்லாமே அதற்கான சாட்சியாக நிற்கின்றன !

Abdul Razik said...

மிகத்துல்லிய தகவல்கள், மாஷா அல்லாஹ், இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் இத்தொடரை பொருளியல் பிரிவில் ஒரு பகுதியா சேர்க்கலாம். இத்தொடரின் அனைத்து பதிவுகளையும் இனைத்து பார்க்கும்போது இதை உருவாக்க அதிக நேரம் செலவிட்டதும் கடுமையான உழைப்பும் தெறிகிறது. பொருளியலில் பல நூல்கள் படித்துள்ளேன், அந்த நூல்களில் உள்ள அனைத்து தகவல்களையும் ஒருங்கே சேகரித்து எடுத்தாற்போல இத்தொடர் விளக்குகிறது. மேலும் தங்களிடம் உள்ள தகவல்களை எதிர்பார்க்கிறேன்.

இந்தப்பதிவில் வரும் மிக முக்கியமான கருத்துக்களை சுருக்கமாக எடுத்து பொருளியல் கொள்கயில் பயன்படுத்தும்போது, Economical Crisis போன்றவைகளில் இருந்து மீழவும் வாய்ப்பு உண்டு என்பதை சம்மந்த்தபட்ட அரசு துறைகள் அறிந்து இஸ்லாமிய வங்கி முறையை கொண்டு வர ஆவன செய்ய வேண்டும்.

high qualified fiscal script, Hope this research will attain to particular government department. And too we are expecting more similar points in this way before full stop your article. Jazaakkallah Hairan kaka.

Abdul Razik
Dubai

KALAM SHAICK ABDUL KADER said...

\\மார்க்கக் கல்வியின் ஒரு அம்சமாக பொருளாதாரப் பாடங்களும் மார்க்க அடிப்படையாளான பொருளாதார கல்விக்கூடங்களும் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய வங்கி மற்றும் முதலீட்டுத்துறையில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் பிரிவுகளும் தொடங்க குரல் எழுப்பவேண்டுமென்பதே இந்த அத்தியாயத்தை நான் நிறைவு செய்யுமுன் வைக்கும் கோரிக்கை. \\

அல்ஹம்துலில்லாஹ்! அப்படியே என் உள்ளத்தின் அடித்தளத்தில் நீண்ட நாட்களாக ஓடி கொண்டிருக்கும் உணர்வலைகளை இவ்வலைத்தளத்தினுள் ஈண்டு உங்களின் விரல்களின் வழியாகப் பதியப்பட்டதைக் கண்டு வியந்தேன்!

தமியேனும் வணிகவியலின் துணைப்பாடமாக புகுமுக மற்றும் பட்டப்படிப்பில் பயின்ற போதில், இப்படிப்பட்ட எண்ணங்கள் என் மனத்தினில் ஊறும் இப்படியாக:

மதரஸாக்கள் என்பது வெறும் அரபி மற்றும் மார்க்க விளக்கம் மற்றும் போதித்து விட்டு வெளியேறி வரும் ஆலிம்களால் சுயமாகத் தொழில் செய்யவோ, அல்லது ஓர் உத்யோகத்தில் இருந்து ஊதியம் பெறவோ முடியாமல் இருப்பதற்குக் காரணங்கள்:
1)இப்படிப்பட்ட வணிகவியலும் பொருளியலும் சார்ந்த மற்றும் கணினியைப் பயன்படுத்தும் அடிப்படை அறிவும் போதிக்கப்படவில்லையோ என்றெல்லாம் ஆதங்கப்பட்டிருக்கின்றேன்.
2) ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளே முடக்கப்பட்டு இருப்பதாற்றான் இற்றைப் பொழுதில் இஸ்லாம் எதிர்கொள்ளும் சவாலான உலகியல் சார்ந்த விடயங்கட்கு உடனுக்குடன் மறுமொழி கொடுக்க முடியாமல் மதறஸாவில் பயின்று வரும் மாண்புமிகு ஆலிம்களால் முடியாமற் போகின்றதோ? (இதில் சகோ. பி.ஜே அவர்கள் மட்டும் விதி விலக்கு; அதற்கான காரணமும் அவர்களுடன் பயின்ற நம்மூர் ஆலிம் சொல்லக் கேட்டிருக்கின்றேன்: பிஜே அவர்கள் மதறஸாவில் பயிலும் காலத்தில் எல்லாவிதமான உலகியல் வார இதழ்களையும் படித்து உலகில் நம்மைச் சுற்றி நடப்பதை ஊன்றி கவனிப்பார்; ஆம், அதனாற்றான், வட்டி பற்றி எல்லாம் கேள்விக் கணைகளால் மாற்றார் கேட்கும் வினாக்கட்கு சகோ, பிஜே அவர்களால் உடனுக்குடன் மறுமொழி கொடுக்க இயலுகின்றதோ?)

குறிப்பு: நான் கேள்விப்பட்டவரை கேரளாவில் உள்ள மதறஸாக்களில் பட்டப்படிப்பும் படிக்கும் அளவுக்குப் பாடத்திட்டம் உள்ளதென்று. மேலும், நமதூரில் றஹ்மானிய்யாவில் பயின்ற ஓர் ஆலிம் யஹ்யா கான் என்பவர் என்னிடம் ஆங்கில இலக்கணம் கற்றுக் கொள்ள வந்தார்கள். அவர்கட்கு நான் ஊரிலிருந்த பொழுது (2014) ஆங்கில இலக்கணம் கற்றுக் கொடுத்தேன். இன்று அவர்கள் M.A. வரைக்கும் படித்தும் அஃப்ஸ்லுல் உலமாவும் படித்தும் சவுதியில் பணியாற்றி கொண்டிருக்கின்றார்கள்; என்ன்னுடன் தொடர்பில் இருப்பதுடன் தமியேன் அவர்கட்குக் கற்று கொடுத்தமைக்கு நன்றி பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள்; இதனை ஈண்டு அடியேன் பதிவதன் நோக்கம்: கேரள ஆலிம்களின் ஆர்வம் நம்மவர்களிடம் வராதது ஏன்?

Shameed said...

//அடுத்து புனித நோன்பில் நாம் விவாதிக்க வேண்டியது ஜகாத் பற்றியே. இன்ஷா அல்லாஹ். //

தங்களின் அடுத்த பதிவை ஆவலோடு எதிர் பார்த்துள்ளேன் காரணம் ஜக்காத் பற்றி நிறைய தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன்

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்
10 நாட்கள் வேலையின் நிமித்தம் ஜித்தா சென்றிருந்தேன் அங்கு சென்றதும் உங்களது தொடரை படிக்க நேரமில்லாமல் போய்விட்டது. நான் இதுவரை உங்களின் இஸ்லாமிய பொருளாதாரச்சிந்தனை ஆக்கத்தின் தொடர் 22, 23, 24 மட்டும்தான் படித்தேன் மற்றது 21 வாரத்தொடர் இன்னும் படிக்கவில்லை.
22, ஆம் தொடரில் என் இஸ்லாமிய பேங்க் பற்றிய பின்னுட்டம் படித்துவிட்டு உடனடியாக இஸ்லாமிய வங்கி சம்பந்தமாக தனிப்பதிவு கண்டு வியந்துபோனேன்
நான் படித்த மூன்று எபிசோடும் என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது . அல் ஹம்துலில்லாஹ். இத்தனை அறிய கருத்துக்களை அறிய பொக்கிஷங்களை தாங்கள் மிகவும் சிறமப்பட்டு தேடித்தந்த இச்செல்வத்தை கண்டிப்பாக பாதுகாத்து வைப்பதோடு அல்லாமல் இன்ஷா அல்லாஹ் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டே இருப்பேன்.
நான் ஆங்கிலத்தில் பட்லர்தான் ஆங்கில புலமை பெற்றவனல்ல நான் படிக்கும் காலத்தில் என்னுடைய படிப்பு 9ஆம் வகுப்புடன் நிறைவுற்ற காரணத்தினால் 33 வருடமாக அரபு நாட்டில் சுய தேவைகளை நிறைவு செய்ய போராடும் சாதாரன மனிதன் நான். உங்களை போன்ற நல் உள்ளம் படைத்தவர்கள் எங்களின் கண்களை திறந்து விடுகின்றீர்கள் நான் பெரிதும் பெரிமிதமடைகின்றேன்.
தாம் பெற்ற இன்பத்தை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் மனபக்குவத்தை தங்களுக்கு அளித்த அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும். என்னைப்போன்றோர் உங்களிடம் கற்றுக்கொள்வதில் பெருமிதமடைகின்றோம் அதை மறுபடியும் பல முறை திரும்ப திரும்ப மக்களுக்கு உறைக்கும் வரை மீல் பதிவு செய்யுமாறு அதிரை நிருபரை கேட்டுக்கொள்கின்றேன் காரணம் மிகவும் முக்கியமான கட்டுரை இது ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் மனதில் ஆனித்தரமாக பதிய வேண்டிய விஷயம். நான் அப்படியே நகல் எடுத்து பாதுகாத்து வைத்துக்கொன்டேன் இன்ஷா அல்லாஹ் பிறகு மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள தேவைப்படும்.

கண்ணியமிகு இபுராஹிம் அன்சாரி காக்காவின் இந்த அற்புத ஆக்கம் பிறகு வளையில் வலைபோட்டாலும் கிடைக்காது நாம் தேடுவது ஒன்று கிடைப்பது ஒன்றாக இருக்கும். இபுராஹிம் அன்சாரி காக்காவை என்ன சொல்லி புகழ வேண்டும் என்று தெரியவில்லை பெரும் அறிவுக்கு சொந்தக்காரர் என்றே புகழாரம் சூட வேண்டும்

உன்மையிலேயே நீங்கள் ஒரு பொருளாதார மேதைதான் என்று அடித்து சொல்லமுடியும்
எனக்குத் தெரிந்து இஸ்லாமிய பேங்க் பற்றி இதுவரையும் யாரும் இவ்வளவு தெளிவாக பொருமையாக எழுதியது கிடையாது
இவ்வளவு கருவூலங்களை தந்தது கிடையாது
இறைவன் உங்களை அழைக்கும் வரை நோயற்றவாழ்க்கையையும் குறைவற்ற செல்வத்தையும் இறைவன் உங்களுக்கு தந்து உங்கள் மூச்சிருக்கும் வரை நீங்கள் பெறும் இன்பத்தை எங்களுக்கும் பகிர்ந்தளித்திட உதவி செய்வானாகவும்
தொடரும் 1/2

adiraimansoor said...

முன் தொடர்
இதுபற்றி சென்ற எபிசோடிலும் இந்த எபிசோடிலும் சகோதரர் சபீர் ரொம்ப தெளிவாக பின்னூட்டமிட்டுள்ளார்
"இஸ்லாமிய வங்கி அமைவதன் சாத்தியக்கூறுகளை இவ்வளவு தெளிவாக நான் வேறு எங்கும் படித்ததில்லை. அத்துடன், அதன் சாதகங்களாகவும் தற்காலிகப் பாதகங்களாகவும் கணித்திருப்பவைத் தங்களின் நடுநிலையான, ஒரு பொருளாதார மேதையின் சிந்தனையை ஒத்து இருப்பது பிரமிக்க வைக்கிறது."
மிகவும் அருமையாக தெளிவுற கூறி உங்களை கவுரவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
சபீர் போன்ற சகோதரர்கள் இளம் கோடிஸ்வரர்களை ஒன்றினைக்கும் முயற்சியில் ஈடுபட்டலே சாத்தியக்கூறுகள் மிகவும் அருகில் இருக்கின்றன.
அதுபோல் அதிரை பைத்துல்மாலுக்கு உலகெங்கும் கிளைகள் இருக்கின்றன
தற்போதுகூட ஒரு கோடி திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள்.
இந்த திட்டத்துடன்
பைத்துல்மால்கூட இஸ்லாமிய வங்கி பற்றி
விதையை தூவலாம்
பாரம்பரிய வட்டி வங்கிகளுடன் தொடர்பு உடைய முஸ்லிம் செல்வந்தர்களை வட்டியில்லா அமைப்பின் பக்கம் திருப்பும் உடனடி ஆரம்ப முயற்சியாகவே இது இருக்கட்டும்
“மார்க்கக் கல்வியின் ஒரு அம்சமாக பொருளாதாரப் பாடங்களும் மார்க்க அடிப்படையாளான பொருளாதார கல்விக்கூடங்களும் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய வங்கி மற்றும் முதலீட்டுத்துறையில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் பிரிவுகளும் தொடங்க குரல் எழுப்பவேண்டுமென்பதே இந்த அத்தியாயத்தை நான் நிறைவு செய்யுமுன் வைக்கும் கோரிக்கை.”
நீங்கள் மேலே கூறி இருப்பவையை நமது இளைய சமுதாய்த்திற்கும் நமது இயக்கங்களுக்கும் ஆனித்தரமான குரல் எழுப்ப வேண்டுமென்று வேண்டுகோளாகவே பதிவு செய்வோம்
இயக்கங்கள் ஆக்கபூர்வ விமர்சனங்களை புறந்தள்ளாமல் , அவை தம் வளர்ச்சிக்கு உந்து சக்தியென உள்வாங்கி தம்மை செப்பனிட்டுக்கொண்டு குரல் கொடுக்க முன் வாருங்கள்

எப்படியாவது அதிரைக்கு ஒரு இஸ்லாமிய வங்கி வரவேண்டும் என்பதில் நம் முயற்சி கனிசமாக இருக்க வேண்டும்

சென்ற எபிசோடில் இருதியாக சபீர் கூறியது போன்று

"இதே வேகத்துடன் தொடர்ந்து சென்று, மேடையேறி, காத்திருக்கும் அரியாசனத்தில் அமரும்வரை உங்களின் பின்னால் வரும் கூட்டத்தில் நானும் இருப்பேன், இன்ஷா அல்லாஹ்."

என்று நானும் உறுதி மொழி கூறுகின்றேன்

அதிரைமன்சூர்
ரியாத்

Anonymous said...

//வடையை பார்க்காமல் வடையில் உள்ள துளையை பார்பவர்கள்.....//

வடையையும் பார்க்காமல் வடையின் வாடையையும் பார்க்காமல் வடையின் துளையை வைய்த்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்ததால்தான் வடையை காக்கா தூக்கிட்டுபோச்சு! இப்போபோய் "வடே போச்சே!. வடே போச்சே"ன்னு கூவிக்கிகின்னு இருந்தா போன வடை திரும்புமா? அது என்ன ரிட்டன் டிக்கெட்டிலா போச்சு? போனது போனதுதான்!.

S.முஹம்மதுபாரூக்'அதிராம்பட்டினம்

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி அதிரை மன்சூர் அவர்களுக்கு,

அலைக்குமுஸ் ஸலாம்.

கடந்த அத்தியாயம் தங்களின் பின்னுட்டம் காணாமல் ஏங்கியது. அதற்கும் சேர்த்து ட்யூ கட்டுவதுபோல் இந்த அத்தியாயத்துக்கு இரண்டு பின்னூட்டத்தை நீண்ட அளவில் போட்டு இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

தங்களைப் போலவும் தம்பி ராசிக் முதலிய மற்றவர்கள் போலவும் வளைகுடாவில் அயராத தொடர்ந்த வேலைகளுக்கிடையில் இந்தத் தொடர்களைப் படித்து ஊக்கமூட்டும் விதத்தில் ஆதரவு தருவது ஒன்றே மிக்க மகிழத்தக்கதாகும்.

ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

Unknown said...

இ.அ காக்கா அவர்களே,
தங்களின் இந்த ஆராய்ச்சி கட்டுரை உண்மையிலேயே இதற்கென்று நேரம் ஒதுக்கி இஸ்லாத்தின் இந்த கால கட்டத்திற்கு தேவையான ஒரு முயற்ச்சியை ஏனோ தானோ என்று எழுதாமல் , ஒரு பாமரனுக்கும் இஸ்லாத்தின் பார்வையில் சேமிப்பு ஒரு இஸ்லாமிய வங்கியின் மூலமா நடத்தாட்டுதலே சிறந்தது என்னும் விஷயத்தை மிக அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்.

இன்றைய நவீன உலகம் வட்டிஎன்னும் கொடிய அரக்கனின் கையில் சிக்கி எத்தனை ஏழை நாடுகள் உலக வங்கி என்னும் வட்டி மூசாவிடம் கையேந்தி கையேந்தி கடன் வாங்கி , வட்டியையும் முதலையும் அடைக்காமல் தத்தளிக்கின்றது என்னும் உண்மை நிதர்சனமானது.

ஆனால் இன்றைய கால கட்டம் இன்ஷா அல்லா மெல்ல மெல்ல இஸ்லாத்தின்
அந்தப்பூஞ்சோலை நிழலில் ,இஸ்லாமிய வங்கி என்னும் மாளிகையில் குடியேற தலைப்படுகின்றது என்னும் செய்தி தித்திப்பானதாகும். பல்கலைக்கழக , பாட நெறிகள், ஆய்வு மையங்கள்.பொருளியல் ஆய்வு நிலையங்கள், தகவல் மையங்கள் இவைகளில் இஸ்லாமிய வங்கியின் சேவையின் தேவையை உணர தலைப்பட்டது, பேரறிவாளனான அல்லாஹ்வின் நாட்டமே.

இதை காலத்தின் கட்டாயமாக உணர தலைப்பட்டு இருக்கின்றது இந்த பூமிப்பந்து.
இன்ஷா அல்லா ஒவ்வரு விஷயமும் தூய இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு , உலகம் முழுதும் அந்த மாநபி (ஸல்) அவர்கள் வழியில் நின்று இந்த பொருளியல் மட்டுமல்ல , வாழ்வின் அனைத்துதுரையும் ஒரு குடையின் கீழ் ( குரான் , ஹதீஸ் ,அடிப்படையில்) வரும் காலம் அன்மித்திருக்கின்றது.

இன்ஷா அல்லா இதை நாம் உயிர் வாழும் காலத்துக்குள் கண்ணாரக்கான
அல்லாஹு பேரருள் புரியட்டும்.

ஆமீன்
அபு ஆசிப்.



Unknown said...

காக்கா, ஒன்றைக்கூரிக்கொள்கின்றேன்

இந்த இஸ்லாமிய வங்கி முறை , ஒரு மதம் சார்ந்த சொல்லாக இருப்பதால் , இதில் உள்ள அனைத்து நன்மையான விஷயங்களையும் பொருளாதாரத்தின் உச்ச நிலையை தொட்டுவிட்ட நாடுகள் கூட தயங்கி, தயங்கி, நடைமுறைப்படுத்த தலைப்பட்டுவிட்டன.

இவர்கள் என்னதான் இதை முடக்க நினைத்தாலும் இதில் உள்ள நன்மையான விஷயங்களும், அழகிய வழி முறைகளும் அரசாங்கம், மற்றும் முதலீட்டார்களை கவர்ந்து இழுத்துக்கொண்டு தான் இருக்கின்றது. ஒரு நாள் இதன் உண்மை தத்துவம் ஊர் அறியும், இதன் பின்னே அணி திரளும்.இப்புவி.

ஆமீன்

அபு ஆசிப்.

adiraimansoor said...


காக்கா ரமலான் முடிந்தவுடன் மீண்டும் நீங்கள் வாக்களித்தபடி இஸ்லாமிய வங்கி மற்றும் முதலீடுகள் பற்றி விளக்கமான தனித்தொடர் எழுதவேண்டுமென்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
அதிலிருந்து இஸ்லாமிய வங்கி ஆரம்பம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆரம்பம் செய்துவிடவேண்டியதுதான்

adiraimansoor said...

என்னால் முடிந்தவரை உங்களின் இஸ்லாமிய பொருளாதாரச்சிந்தனை பற்றிய 23,24ஆவது தொடரின் லின்கை face புக் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன்.

Anonymous said...

//வடையை பார்க்காமல் வடையில் உள்ள துளையை பார்பவர்கள்// துளை வைத்து வடைபோடும் மர்மம் என்ன? துளை இல்லாமல் வடை போட முடியாத? துளை இல்லாமல் வடை போடும் சாத்திய கூறுகள் பற்றி ஒரு ஆய்வு கட்டுரை இப்ராஹிம் அன்ஸாரி அவர்கள் எழுத வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல என் வேண்டுகோளுங்கூட.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

Anonymous said...

ஜனாப் அப்துல் காலம் பின் ஷேக் அப்துல் காதிர் அவர்கள் கூறிய கருத்து no..1&2 மிகச் சரியான கருத்தே!. சராசரி இஸ்லாமியன் ஒருவனுக்கு தெரியாததை ஆலிம்களிடம் கேட்டால் சாந்தமுடன் பதில் சொல்லும் பக்குவம் அவர்களிடம் இல்லை என்பதோடு ''என்னை நீ சோதனை செய்து பார்க்கிறாயா?'' என்று எதிர் கேள்வி கேட்க்கும் ஆலிம்களும் நிறையவே உண்டு.

நாம் தெரிந்து கொள்ள நினைக்கும் விசயத்தின் தண்மை உணராமல் ''இந்த கேள்வி கேட்கும் நீ ஒரு காபீர்'' என்று திட்டி விட்டு போகிறார்கள். இப்படி எனக்கு நிறைய அனுபவம்.. சில நேரங்களில் சில ஆலிம்களுடன் 'கை'கலக்கும் சூசலும் ஏற்பட்டது. அதை ஒரு தொடராக எழுதும் Matterகள் நிறைய உண்டு.

மலேசியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே laptop ஆலிம்கள் மடியில் கொஞ்சி விளையாட ஆரம்பித்து விட்டது. இங்குள்ள ஆலிம்கள் Laptopபுக்கு தொட்டில் கட்டிவிட்டார்களா?

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

KALAM SHAICK ABDUL KADER said...

இன்ஷா அல்லாஹ் பைத்துல்மால் நடத்தி வரும் திருக்குர்-ஆன் மாநாட்டில் “இஸ்லாமும் பொருளாதாரமும்” என்ற தலைப்பில் முனைவர் இ.அ..காக்கா அவர்களை உரைநிகழ்த்த வைக்க வேண்டும் என்பது என் பேரவா! இன்ஷா அல்லாஹ் அப்படியொரு மாநாடு இவ்வாண்டு நடத்துவதாக இருந்தால் முனைவர் இ.அ..காக்கா அவர்களை உரை நிகழ்த்த அனுமதி கேட்டு விண்ணப்பதில் அடியேன் முன் நின்று செய்வேன்.

adiraimansoor said...

என்னுடைய ஆவல் முழுக்க முழுக்க இஸ்லாமிய வங்கி இஸ்லாமிய பொருளாதாரம் சம்பந்தமாக வருடந்தோரும் ஒரு நாள் கருத்தரங்கு நடத்தவேண்டும்.

Unknown said...

//இதற்கான காரணிகளில் தலையாயது நாம் மார்க்கத்தை ஒரு பழக்க வழக்கமாகப் பயின்று வந்திருக்கிறோமேதேயன்றி ஒரு வாழ்க்கை நெறியாகப் பின் பற்றியல்ல என்கிறேன். என் கருத்து சரியா?//

முற்றிலும் சரி .

பொருளாதார விஷயத்தில் மட்டுமல்ல , மார்க்க அடிப்படை விஷயங்களை மக்களுக்கு எத்தி வைக்கும் விஷயத்திலும் நம் முன்னோர்களால், நாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் அல்லது, துரோகமிழைக்கப் பட்டிருக்கின்றோம் என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது. ஏனனில், உதாரணத்திற்கு , இஸ்லாம் தமிழ்நாட்டுக்குள் வந்து கிட்டத்தட்ட ஆயிரம் வருஷம் இருக்கலாம் அல்லது குறைந்தது எண்ணூறு அல்லது ஒரு ஏழு நூறு வருடங்கள் இருக்கலாம்,.அந்தக்காலத்தில் அரபியில் புலமை வாய்ந்த எத்தனையோ ,மார்க்கம் கற்ற, உலமாக்களும், அறிஞர் பெருமக்களும் தமிழ் நாட்டில் இருந்துதான் இருக்கின்றார்கள்.

யாராவது குரானை தமிழில் தர முயற்சி செய்தார்களா,? ஆனால் ஒன்றுக்குமே உதவாத மௌலூது கிதாபை தமிழில் தந்தார்கள், எத்தனையோ, அரபிக்கதைகளை தமிழில் தந்தார்கள்,இஸ்லாத்தின் பெயரால் உள்ளே நுழைந்துவிட்ட கட்டுக்கதைகளுக்கு தந்த முக்கியத்துவத்தை, குரானை தமிழில் தரும் முயற்ச்சியில் ஏன் ஒருவரும் இறங்கவில்லை.

தமிழில் குரானுக்கு மொழிபெயர்ப்பு வந்து எத்தனை வருடங்கள் இருக்கும் ?
மிஞ்சிப்போனால் ஒரு 70 அல்லது 80 வருடங்களுக்கு மேலே இருக்க வாய்ப்பே இல்லை எனும்போது, இதற்க்கு முன்னா வாழ்ந்த நம் முன்னோர்கள் எத்தனைபேர் குர்ஆனில் அல்லாஹ் நம்மிடம் என்ன எதிர் பார்க்கின்றான் என்று எத்தனை பேர் அறிந்து நடந்து இவ்வுலகை விட்ட பிரிந்த்திருப்பார்கள். யோசித்துப்பார்க்கையில் அவர்கள் அனைவரும் அந்த சமகாலத்தில் வாழ்ந்தவர்களால் துரோகம் இழைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றுதான் தெரிய வருகின்றது.

ஏனனில், சபீர் கூறியது போல் அந்த கால கட்டங்களில் இஸ்லாத்தின் அடிப்படையில் நாம் அறிய வேண்டிய அனைத்து விஷயங்களும், ஒரு குறிப்பிட்ட சாரார் கையில் வைத்துக்கொண்டு, மற்றவர்களை யோசிக்க விடாமல் தலையாட்டி பொம்மையாக வைத்து தங்கள் காலங்களை கழித்திருக்கின்றார்கள். அதை வாழ்க்கை நெறியாக பின்பற்ற விடாமல்
ஒரு குறிப்பிட்ட சாராரின் சொத்து உரிமையைப்போல் வைத்து , கேட்பவர்
கேட்டுக்கொண்டுதான் இருக்கவேணும், சொல்வதற்கு தலைப்பட்டு விடக்கூடாது என்ற ரீதியில் வழி நடத்தப்பட்டிருக்கின்றார்கள். இது எவ்வளவு பெரிய துரோகம்.

பொருளியல் சார்ந்த விஷயமட்டுமல்ல , அனைத்து துறைகளிலும், முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் துரோகம் இழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஆனால் , அல்ஹம்துலில்லாஹ், இன்றோ நிலைமை வேறு.

ஏன் , எதற்கு, யார் சொல்லியது, இதற்கு வழிகாட்டுதல் உண்டா ? என்னும் அடுக்கடுக்கான கேள்விகளால் , பொருளாதாரம் மட்டுமல்ல, அனைத்து துறையிலும் இஸ்லாம் கால் பாதிக்கும் நாள் அன்மித்துருக்கின்றது.


அபு ஆசிப்.






ZAKIR HUSSAIN said...

To Brother Ebrahim Ansari,

இஸ்லாமிய வங்கி முறையின் வெற்றி இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கும் தெரிந்து அதில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஏனோ இந்தியாவில் இது பற்றி இன்னும் செய்திகள் போய் சேர்ந்ததாக தெரியவில்லை.

உங்களின் முயற்சியில் அது முழுமையடையும் என்ற
நம்பிக்கை இருக்கிறது.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அப்பப்பா!ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்கிறேன். இந்த மேதை நம் ஊரில் பிறந்தது நம் பாக்கியம் ஆனாலும் அவர்களை இவ்வளவு நாள் நாம் பயன்படுத்தாமல் இருந்தது ஒரு சமூக முன்னேற்ற சறுக்கல். அ. நி.க்கும் அவர்களை இங்கே அழைத்து வந்த சகோ. சாகுல் அவர்களுக்கும் நன்மை உண்டாவதாக ஆமீன்.இந்த மேதையின் நட்பே நான் பெற்ற பெரும் பரிசு என்பதையும் உளமாற கூறுகிறேன்.

Ebrahim Ansari said...

அன்பின் சகோதரர்களுக்கு ,

கருத்திட்ட தம்பிகள் அபூ ஆசிப், முகமது ராசிக், அபூ இப்ராஹீம், ஜாகிர் ஆகியோருக்கும், மரியாதைக்குரிய பெரியவர் மச்சான் எஸ். எம். எப் அவர்களுக்கும் மருமகன் சாகுல் ஹமீதுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. கவித்தீபம் கலாம் அவர்களுக்கும் மிக்க நன்றி.

சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்.

ஆன்மீகத்துறையில் ஏக இறைவன் என்கிற கொள்கையைப் பின்பற்றி வந்த முஸ்லிம்கள் இறைவன் அருளிய வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய துறைகளை குறிப்பாக பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றில் இறைவனின் கட்டளைகளை பின்பற்றுவதில் போடுபோக்காகவே இருந்தனர். யூத கிருத்தவ மார்க்கக் கொள்கைகளைப் புறக்கணித்த நாம் , அவர்களின் ஏனைய கொள்கைகளிலேயும் நடைமுறையிலேயுமே நமது வணிகச் செயல்பாடுகளையும் மேற்கொண்டோம் என்பதை மறுக்க இயலாது. என் வழி தனி வழி என்று நாம் செல்லவில்லை.

அதே நேரம் இப்படி நஸ்ராநிகளின் கொள்கைகளைப் புறக்கணித்து நமது கொள்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்ற கருத்துக்களை விதைக்க வந்த சுல்பிகார் அலி பூட்டோவிலிருந்து, சதாம் ஹுசேனிலிருந்து, கடாபியில் இருந்து, பெனாசிர் போட்டோவில் இருந்து அவர்கள் மீது ஏதாவது சதிவலை பின்னப் பட்டு இந்த முன்னெடுப்புகள் அச்சுறுத்தப்பட்டன என்பதும் வரலாற்றில் சுட்டிக் காட்டப்பட வேண்டியவை.

இன்றும் உலகெங்கும் அமெரிக்க, ஐரோப்பிய யூத வங்கி முறைகளே கோலேச்சுகின்றன. இவற்றையே மிகப் பல அரபு நாடுகளும் பெரும்பான்மையாக பின்பற்றுகின்றன என்பதும் வேதனையான உண்மை.

அரபு நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறையின் இன்றைய அளவு எவ்வளவு இருக்கிறது என்றால் சில திருமணங்களில் பல சகன் சாப்பாடு ஏற்பாடு செய்துவிட்டு கொஞ்சம் பேர் கேட்கிறார்கள் என்பதற்காக சைவ சாப்பாடும் வரவழைத்து இருப்பார்களே அது போல்தான் இருக்கிறது.

என் நாட்டில் என் மதம் என் மொழி என்று சொல்வதுபோல் என் வணிகத்துக்கு என் முறை என்று தனியாக பிரித்து முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.

அண்மையில் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியின் நற்பயனாகவே இஸ்லாமிய ப் பொருளாதாரச் சிந்தனைகளை அமுல்படுத்தும் எண்ணம் அரும்பிட்டு வளரத்தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் இதனை முன்னேடுத்துச்செல்வது இயக்கங்களின் கடமையாகும்.

இன்ஷா அல்லாஹ் துஆச் செய்வோம்.

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Ebrahim Ansari,

The history of Islamic Banking System and Investments is very good stuff giving the real foundation for understanding. Its an evolution of so many initiatives by great Islamic scholars whose chief concerns were to create a system based on the principles of guidance from God Almighty and Prophet Muhammed Sallallahu Alaihi wasallam.

If we view Islam is ultimate solution for all problems faced by humanity, then every aspect of Islam can be followed even by non-muslims to find resolutions to their problems. Adopting Islamic Banking System by non-muslims is one of the examples.

Actually Islam is a complete framework for living in this world with peace. Islam is knowledge based. Realizing God Almighty, gaining and digesting knowledge and improving oneself is an evolutionary as opposed to instantaneous.

Jazakkallah khairan brother, keep on writing more.

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Ebrahim Ansari said...

Alaikkumussalam.

Dear brother Ahmed Ameen, jasak Allah hairan.

அன்பின் தம்பி கிரவுன் அவர்களுக்கு, மகுடமே மகுடம் சூட்டியதாக உணர்கிறேன். மகிழ்ச்சி. நன்றி.

அப்துல்மாலிக் said...

இஸ்லாமிய வங்கிகள் உருவாகிய விதத்தை தொகுத்து வழங்குவதில் உள்ள சிரமம் தெரிகிறது. நற்கூலி நிச்சயம் உண்டு

இஸ்லாமிய பொருளாதாரத்தை ஏற்றுக்கொள்ளம் மனம் பக்குவப்பட கொஞ்ச நாள் ஆகலாம், ஆனால் இதுவெ இறுதியான கொள்கை என்பதை உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு